பொது --- 1081. இசைந்த ஏறும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இசைந்த ஏறும் (பொது)


முருகா! 

அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும்.


தனந்த தானந் தனதன தானன ...... தனதான


இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும்

இலங்கு நூலும் புலியத ளாடையு ...... மழுமானும்

அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா

உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே

உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே

அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்

அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே.


                                 பதம் பிரித்தல்


இசைந்த ஏறும், கரி உரி போர்வையும், ...... எழில்நீறும்,

இலங்கு நூலும், புலிஅதள் ஆடையும்,...... மழுமானும்,

அசைந்த தோடும், சிரம் அணி மாலையும், ...... முடிமீதே

அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா!

உசந்த சூரன் கிளையுடன் வேர்அற ...... முனிவோனே!

உகந்த பாசம் கயிறொடு தூதுவர் ...... நலியாதே,

அசந்த போது என் துயர் கெட மாமயில் ...... வரவேணும்,

அமைந்த வேலும் புயம் மிசை மேவிய ...... பெருமாளே.


பதவுரை


இசைந்த ஏறும் --- விருப்பமுடன் ஏறுகின்ற காளை வாகனமும், 

கரி உரி போர்வையும் --- யானையின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும், 

எழில் நீறும் --- அழகிய திருநீறும், 

இலங்கு நூலும் --- விளங்குகின்ற பூணூலும், 

புலி அதள் ஆடையும் --- புலித்தோல் ஆடையும், 

மழு மானும் --- மழுவாயுதமும், மானும், 

அசைந்த தோடும் --- திருச்செவிகளில் அசைந்தாடும் தோடுகளும், 

சிரமணி மாலையும் --- தலைமாலையையும்,

முடிமீதே அணிந்த ஈசன் --- திருமுடியில் அணிந்துள்ள சிவபெருமான்

பரிவுடன் மேவிய குருநாதா --- அன்போடு விரும்பிய குருநாதரே! 

உசந்த சூரன் கிளையுடன் வேர் அற முனிவோனே --- ஆணவம் மிக்கு இருந்த சூரபதுமன் தனது சுற்றத்தாருடன் அடியோடு அழிந்துபடுமாறு சிறந்தவரே!

அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே --- அழகிய வேலாயுதத்தைத் திருத்தோளில் விருப்பமொடு தாங்கிய பெருமையில் மிக்கவரே!

உகந்த பாசம் கயிறொடு தூதுவர் நலியாதே --- விருப்போடு பாசக்கயிற்றோடு வந்த எமதூதர்கள் அடியேனை நலியாமல்படிக்கு, 

அசந்த போது என் துயர்கெட மாமயில் வரவேணும் --- அடியேன் அயரும்போது எனது துயர் தீருமாறு சிறந்த மயில் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.

பொழிப்புரை

விரும்பி ஏறுகின்ற காளை வாகனமும்,  யானையின் தோலை உரித்துப் போர்த்திய போர்வையும்,  திருமேனியில் விளங்கும் அழகிய திருநீறும்,  விளங்குகின்ற பூணூலும்,  புலித்தோல் ஆடையும்,  திருக்கையில் தரித்துள்ள மழுவாயுதமும், மானும்,  திருச்செவிகளில் அசைந்தாடும் தோடுகளும் ஆகிய இவைகளோடு, தலைமாலையையும் திருமுடியில் அணிந்துள்ள சிவபெருமான் அன்போடு விரும்பிய குருநாதரே! 

ஆணவம் மிக்கு இருந்த சூரபதுமன் தனது சுற்றத்தாருடன் அடியோடு அழிந்துபடுமாறு சிறந்தவரே!

அழகிய வேலாயுதத்தைத் திருத்தோளில் விருப்பமொடு தாங்கிய பெருமையில் மிக்கவரே!

விருப்போடு கையில் பிடித்துள்ள பாசக்கயிற்றோடு வந்த எமதூதர்கள் அடியேனை நலியாமல்படிக்கு, அடியேன் அயரும்போது எனது துயர் தீருமாறு சிறந்த மயில் மேல் தேவரீர் வந்து அருள வேண்டும்.

விரிவுரை


இசைந்த ஏறும் --- 

இசைந்த, இசைவு - விருப்பம்.

"அயிராவணம் ஏறாதே, ஆனை ஏறு ஏறி" வென்று அப்பர் பெருமானு பாடி இருப்பது காண்க.

ஏறு என்னும் சொல், ஆண் விலங்கினைக் குறிக்கும். இங்கே காளையாகிய எருதினைக் குறிக்கும். 

"இடபம் உகந்து ஏறியவாறு" என்று மணிவாசகப் பெருமானும், "விடை உகந்து ஏறுதிர்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும் பாடி அருளினமை காண்க. 


கரி உரி போர்வையும் --- 

கரி - யானை. உரி - தோல். யானையில் தோலை உரித்துப் போர்த்தியவர் சிவபெருமான். 

கயாசுரன் எனும் அசுரன் காளமேகம் போன்றதொரு யானை உருவம் பெற்றவன். அவன் மேருமலையில் நான்முகனை நினைத்துக் கடும்தவம் மேற்கொண்டான். நான்முகன் தோன்றினான். கயாசுரன் யாராலும் அழிவில்லா நிலையும் எதிலும் வெற்றி கிடைக்கவும் வரம் கேட்டான். உடன் கிடைத்தது. ஆனால் சிவனை மட்டும் எதிர்ப்பாயானால் நீ இறப்பாய் என்ற கடுமையான நிபந்தனையும் கிடைத்தது. அவன் தனது வேலைகளைக் காட்டத் தொடங்கினான். சிவபெருமானை விடுத்து அனைவரிடத்திலும் தன் தொல்லைகளையும், கொடுமைகளையும் தொடர்ந்தான்.

இந்திரனும் அவனிடம் போரிட முடியாமல் தோற்றான். உடன் அவனது வாகனமான அயிராவதத்தின் வாலைப் பிடித்வத்து இழுத்து தூர எறிந்தான். பின் அமராவதி நகரை அழித்தான். அதோடு தன் குலத்தாரையும், இராட்சதக் கூட்டத்தினரையும் உலகமக்கள் அனைவரையும் கொடுமைப் படுத்தினான். பாதிக்கப்பட்டோர் சிவபெருமானிடம் சரணடைந்தனர். 

வந்தவர்கள் அனைவரும் சிவபெருமான் முன், "இறைவா! எங்களைக் காக்க வேண்டும். நான்முகனிடம் அழியாவரம் பெற் கயாசுரன் இங்கு வந்து கொண்டுள்ளான். அவனை அழித்து எங்களைக் காக்க வேண்டும்" என்று மன்றாடினர். பின்னாலேயே வந்த கயாசுரன் தான் எதிர்க்கக் கூடாதவர் சிவபரம்பொருள் என்பதை அக்கணத்தில் மறந்தான். ஆலயவாசல் முன் நின்று அனைவரும் பயப்படும் படியாக கர்ண கொடூரமாக சத்தமிட்டான். இதனைக் கேட்டோர் சிவபெருமானைத் தழுவிக் கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் கூறியபடியே தேவகணத்தினரே பயப்படும் படியாகப் பெரிய வடிவம் எடுத்தார்.

அனைவரும் பயப்படும் படி கண்களின் வழியே தீயின் சுவாலைகள் தெரித்தது. கயாசுரனைத் தனது திருவடியால் உதைக்க, அவன் கழிந்த கோலத்தில் உலகின் மீது விழுந்தான். மற்றொரு திருவடியால் அவனது தலையை மிதித்து தொடையில் ஊன்றியவாறே தனது நகங்களால் பிளந்து அவனது தோலை கதறக் கதற உரித்திழுத்தார். அச் சமயத்தில் பார்வதி தேவியே அஞ்சினார். அவரது தோற்றத்தைக் கண்டோர் கண்ணொளி இழந்தனர். கயாசுரனின் தோலை தன் மீது போர்த்தி சாந்தம் அடைந்தார். 


"புரத்தையும் எரித்து, அம் கயத்தையும்உரித்து, ஒண்

     பொடிப்பணி என் அப்பன் ...... குருநாதா."      ---  திருத்தணிகைத் திருப்புகழ்.


"தலத் தனுவைக் குனித்து, ஒரு முப்-

     புரத்தை விழக் கொளுத்தி, மழுத்

     தரித்து, புலி, கரி, துகிலைப் ...... பரமாகத் 

தரித்து, தவச் சுரர்க்கள் முதல்

     பிழைக்க, மிடற்று அடக்கு விடச்

     சடைக் கடவுள் சிறக்க பொருள் ...... பகர்வோனே!" ---  திருத்தணிகைத் திருப்புகழ்.

                                                               

எழில் நீறும் --- 

அணிபவருக்கு அழகினைத் தருவது என்பதால் எழில் நீறு என்றார் அடிகளார். "கவினைத் தருவது நீறு" என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். 


இலங்கு நூலும் --- 

சிவபரம்பொருள் திருமார்பில் பூணூலைத் தரித்தவர்.  "வேதம் ஓதி, வெண்ணூல் பூண்டு" என்று திருஞானசம்பந்த்ப் பெருமான் அருளியது அறிக.


புலி அதள் ஆடையுமெ மழு மானும் --- 

அதள் - தோல்.

தாருகவனத்து முனிவர்கள் பூர்வ மீமாம்சக் கொள்கை உடையவர்கள். கர்மாவே பயனைத் தரும். பயனைத் தரத் தனியே கடவுள் வேண்டியதில்லை என்று கூறும் கொள்கையர்.

“விரதமே பரம் ஆக வேதியரும்

   சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்” --- திருவாசகம்.

தாருகா வனத்தில் வசித்து வந்த முனிவர்களுக்கு, கடவுளை விடவும் தாங்களே உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் வந்து விட்டது. தவத்தில் தாங்களே சிறந்தவர்களென்றும், தங்கள் மனைவியாகிய பத்தினி பெண்களின் கற்பே உயர்ந்ததென்றும் அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர். அந்த கர்வத்தின் காரணமாக, அவர்கள் கடவுளை நினைக்க மறந்து போனார்கள்; மதிக்க மறந்து போனார்கள்.

முனிவர்களின் கர்வத்தை அகற்ற எண்ணினார் சிவபெருமான். எனவே, அவர் திருமாலை மோகினி அவதாரம் எடுக்கச் செய்து, முனிவர்கள் தவம் செய்யும் தாருகா வனத்திற்கு அனுப்பி வைத்தார். அதேபோல் சிவபெருமானும் பிச்சாடனர் வடிவம் கொண்டு, முனிவர்களின் இல்லங்களுக்குச் சென்றார்.

மோகினி வடிவம் கொண்ட திருமால், தாருகா வனத்து முனிவர்கள் தவம் செய்யும் இடத்திற்கு சென்று முனிவர்களின் தவத்தையும், அவர்களின் உயர்வையும் கெடுத்தார். மோகினியின் அழகில் மயங்கிய முனிவர்கள் தன்னிலை மறந்தனர். இதே வண்ணம் முனிவர்களின் குடில்களுக்குச் சென்ற பிச்சாடனர், அங்குள்ள பெண்களிடம் யாசகம் கேட்டு நின்றார். இசை பாடி பிச்சை எடுக்கச் சென்ற சிவனது அழகைக் கண்டு முனிபத்தினிகள் அவர் மீது மோகம் கொள்ள, தமது நாணம், கைவளை, மேகலை மூன்றையும் இழந்தனர். அவரது அழகில் மயங்கிய முனிவர்களின் மனைவிகள், சிவபெருமானின் பின்னாலேயே செல்லத் தொடங்கினார்கள். தாங்கள் வந்த வேலை முடிந்ததும், சிவபெருமானும், திருமாலும் தங்கள் இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றனர்.

இந்த நிலையில் மயக்கம் தெளிந்த முனிவர்கள், தங்கள் மனைவிமார் அந்தணர் ஒருவரைப் பார்த்து மனம் மயங்கியதை எண்ணி கடும் கோபம் கொண்டனர். நடந்த செயல்கள் அனைத்துக்கும் சிவபெருமானே காரணம் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள். 

சிவபெருமானைக் கொல்லும் பொருட்டு அபிசார வேள்வி செய்த புலி, மான், பாம்புகள், துடி, முயலகன், பூதங்கள் இவைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவினார்கள். புலியை உரித்து அதன் தோலை உடுத்திக்கொண்டார். மழுவையும் மானையும் திருக்கரத்தில் தரித்துக் கொண்டார். பூதங்களைச் சேனையாகவும், முயலகனை மிதித்தும், பாம்புகளை அணிகலமாகவும் கொண்டு அருள் புரிந்தார்.


அசைந்த தோடும் --- 

உமையம்மையத் தனது திருமேனியின் இடப்பபாகத்தில் கொண்டு இருப்பதால், சிவபரம்பொருளின் இடது திருச்செவியில் தோடு அசைந்தாடுகின்றது. "தோடு உடைய செவியன்" ஆனார். 


சிரமணி மாலையும் முடிமீதே அணிந்த ஈசன் --- 

தலையில் அணிந்த மாலை, நூறுகோடி பிரமர்களும் ஆறு கோடி நாராயணரும் ஏறு கங்கை மணல் எண்ணின் அளவுடைய இந்திரரும் ஆகிய முத்திறத்தர் தலைகளைக் கோத்தவை. "தலைக்குத் தலைமாலை அணிந்த்து என்னே" என்று சுந்தரமூர்த்தி சுவாமிகளும், "வெண்தலைமாலை விரவிப் பூண்ட மெய் உடையார்" என்று திருஞானசம்பந்தப் பெருமானும், "தலைமாலை தலைக்கு அணிந்து தலையாலே பலி தேரும் தலைவன்" என்று அப்பர் பெருமானும் பாடியருளியது காண்க.


ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா --- 

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப்பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணிவிளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

“அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர். 

கேட்டு "செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்" என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.

"எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்."     --- தணிகைப் புராணம்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே”.  --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே"  --- (கொடியனைய) திருப்புகழ்.


"மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா...." --- (விறல்மாரன்) திருப்புகழ்.


"சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா..." --- திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.

"அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே."  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.

தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.

"தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான்." ---  தணிகைப் புராணம்.


"மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!"

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியப்படுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,

"தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே."

என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.

"வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. " --- திருமந்திரம்.


"கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்...." --- குமரகுருபரர்.


"பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே." --- அபிராமி அந்தாதி.


"தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே." --- அபிராமி அந்தாதி.


"சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே."    --- சிவஞான சித்தியார்.


அசந்த போது என் துயர்கெட மாமயில் வரவேணும் --- 

அயர்ந்த என்னும் சொல் அசந்த என்று வந்தது. 

அயர்தல் - மறத்தல். அசதியில் மறதி உண்டாவது இயல்பு.

"அயர்ந்தேன் அடியேன் அதிகைக் கெடில வீரட்டானத்து உறை அம்மானே" என அப்பர் பெருமானும், "நம்பர் திருவுள்ளம் அறியாதே அயர்த்தேன்" என தெய்வச் சேக்கிழார் பெருமானும் கூறி அருளியது காண்க.

"மயில் வரவேனும்" என்றது, மயிலின் மீது முருகப் பெருமான் வந்து அருள வேண்டும் என்றதை உணர்த்தியது.

கருத்துரை

முருகா! அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும்.











பொது --- 1080. கலந்த மாதும்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கலந்த மாதும் (பொது)


தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான


கலந்த மாதுங் கண்களி யுறவரு ...... புதல்வோருங்

கலங்கி டாரென் றின்பமு றுலகிடை ...... கலிமேவி

உலந்த காயங் கொண்டுள முறுதுய ...... ருடன்மேவா

உகந்த பாதந் தந்துனை யுரைசெய ...... அருள்வாயே

மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே

மறஞ்செய் வார்தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா

சிலம்பி னோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்

சிவந்த காலுந் தண்டையு மழகிய ...... பெருமாளே.


                                   பதம் பிரித்தல்


கலந்த மாதும், கண் களி உற வரு ...... புதல்வோரும்

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகு இடை ...... கலிமேவி

உலந்த காயம் கொண்டு, உளம் உறு துயர் ...... உடன்மேவா.

உகந்த பாதம் தந்து உனை உரைசெய ...... அருள்வாயே.

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி ...... மருகோனே!

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா!

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீச,

சிவந்த காலும் தண்டையும் அழகிய ...... பெருமாளே.

பதவுரை

மலர்ந்த பூவின் மங்கையை மருவு அரி மருகோனே --- மலர்ந்த தாமரையில் உறையும் இலக்குமியை அணைந்த திருமாலின் திருமருகரே!

மறம் செய்வார் தம் வஞ்சியை மருவிய மணவாளா ---(விலங்குகளைக்) கொல்லும் தொழிலை உடைய வேடர்களிடத்தில் வஞ்சிக் கொடிபோன்று விளங்கிய வள்ளிநாயகியை மணம் புரிந்தவரே!

சிலம்பினோடும் கிண்கிணி திசைதொறும் ஒலி வீசச் சிவந்த காலும் தண்டையும் --- சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்கும்படி செம்மையான திருவடிகளும், அவற்றில் அணிந்துள்ள தண்டை என்னும் அணிகலனும்,

அழகிய பெருமாளே --- அழகாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

கலந்த மாதும் --- அடியேன் கலந்து மகிழ்கின்ற எனது மனைவியும்,

கண் களி உற வரு(ம்) புதல்வோரும் --- அடியேன் கண்ணாரக் கண்டு மகிழும்படி வருகின்ற குழந்தைகளும்,

கலங்கிடார் என்று இன்பம் உறு உலகிடை --- கலக்கம் இன்றி வாழ்வார்கள் என்று இன்புற்று வாழுகின்ற இந்த உலகத்தில்,

கலி மேவி --- வறுமைத் துன்பத்தை அடைந்து,

உலந்த காயம் கொண்டு --- வாடிய மேனியுடன்,

உளம் துயருடன் மேவா --- உள்ளத் துயருடன் அடியேன் வாழாமல்,

உகந்த பாதம் தந்து உனை உரைசெய அருள்வாயே --- விரும்பித் தியானிக்கும் திருவடிகளைத் தந்து, தேவரீரைத் துதித்து வழிபட அருள் புரிவீராக.

பொழிப்புரை

மலர்ந்த தாமரையில் உறையும் இலக்குமியை அணைந்த திருமாலின் திருமருகரே!

விலங்குகளைக் கொல்லும் தொழிலை உடைய வேடர்களிடத்தில் வஞ்சிக் கொடிபோன்று விளங்கிய வள்ளிநாயகியை மணம் புரிந்தவரே!

சிலம்புடன் கிண்கிணியும் எல்லா திசைகளிலும் ஒலி முழங்கும்படி செம்மையான திருவடிகளும், அவற்றில் அணிந்துள்ள தண்டை என்னும் அணிகலனும் அழகாக விளங்கும் பெருமையில் மிக்கவரே!

அடியேன் கலந்து மகிழ்கின்ற எனது மனைவியும், அடியேன் கண்ணாரக் கண்டு மகிழும்படி வருகின்ற குழந்தைகளும், கலக்கம் இன்றி வாழ்வார்கள் என்று இன்புற்று வாழுகின்ற இந்த உலகத்தில்,வறுமைத் துன்பத்தை அடைந்து, புறத்தில் வாடிய மேனியுடனும், அகத்தில் உள்ளத் துயருடன் அடியேன் வாழாமல், மெய்யடியார்கள் விரும்பித் தியானிக்கும் திருவடிகளைத் தந்து, தேவரீரைத் துதித்து வழிபட அருள் புரிவீராக.

விரிவுரை

மலர்ந்த பூவின் மங்கை ---

பூ என்று சொன்னாலே, தாமரையைத் தான் குறிக்கும்.  பூவின் மங்கை - மலர்மகள் என்னும் திருமகள்.

"பூ எனப்படுவது பொறி வாழ் பூவே" என்று "நால்வர் நான்மணி மாலை"யில் கூறப்பட்டு உள்ளது காண்க. பொறி - திருமகள்.


மறம் செய்வார் ---

மறம் - கொலைத் தொழில். அத் தொழிலைச் செய்பவர் மறவர் எனபட்டனர். வேடர் என்றும் சொல்லப்படுவர்.


கலி --- 

துன்பம், வறுமை.


கருத்துரை


முருகா! மெய்யடியார்கள் துதித்துப் போற்றும் திருவடி இன்பத்தை அடியேனுக்கும் தந்து அருளவேண்டும்.





நிலையான பெருந்தவம்

நிலையான பெருந்தவம்

-----

அறம் எல்லோரும் செய்வதற்கு உரியது. அறத்தைச் செய்வதற்குப் பொருள் கருவியாக இருக்கிறது. அறத்தின் வழியாக வந்த பொருளே, மீட்டும் அறத்தைச் செய்வதற்குரிய கருவியாக அமையும். அறவழியில் சேராத பொருள் பொருளாகாது. இன்பமும் அறத்தோடு பொருந்தியதாக இருக்கவேண்டும். அறத்தைச் செய்வதற்கு ஏற்ற வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியோடு பெறும் இன்பமே இன்பம். அறத்தின் வழுவிய இன்பம் இன்பமாகாது. ஆகவே, அறம் பொருள் இன்பம் என்ற மூன்றிலும் அறம் உயிர்நாடியாக இருப்பது. அறம் என்பது, நாம் செய்ய வேண்டியவை இன்ன, செய்யக் கூடாதவை இன்ன என்று தெரிவிப்பது. செய்யக் கூடியவை விதி. செய்யக் கூடாதவை  விலக்கு என்று சொல்வார்கள். 

"அறு" என்னும் சொல்லை அடியாக உண்டானது அறம். இன்ன இன்னது செய்ய வேண்டுமென்று வரையறுப்பது அறம். இது செய்யக் கூடாதென்று வரையறுப்பதும் அதுவே. அப்படி வரையறுத்த நெறியே, அறநெறி என்று சொல்லப்பெறும். ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. செய்ய வேண்டியவையும், செய்யக் கூடாதனவுமாகிய அறத்தின் பகுதிகளைத் திருவள்ளுவர் "அறத்துப்பால்" என்ற தலைப்பில் முப்பத்தேழு அதிகாரங்களில் முறையாகச் சொல்கிறார். எல்லாவற்றுக்கும் நாடியாக இருப்பது ஈகை. எல்லா அறங்களிலும் தலையாயது ஈகை. "பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்றார் திருவள்ளுவ நாயனார். 

நூல்கள் யாவும் தருமம் (அறம்) அர்த்தம் (பொருள்) காமம் (இன்பம்) மோட்சம் (வீடு) என்ற புருஷார்த்தங்கள் நான்கைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றன. அந்த நூல்களை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு வாழ்நாள் போதாது. ஔவைப் பாட்டி சுருக்கமாக எதையும் சொல்வதில் வல்லவர். பெருக்கமாகவும் சொல்வார். பெருக்கமாகச் சொல்வதற்கு அறிவு நுட்பமாக இருக்கவேண்டும் என்பது இல்லை. சுருக்கிச் சொல்லத்தான் நுட்பம் வேண்டும். பெரிய அம்மிக் கல்லைப் பொளிபவனைக் காட்டிலும் வைரக் கல்லில் வேலை செய்பவனுக்கு நல்ல திறமை வேண்டும்.  

சுருக்கமாகப் பாடுகிற ஆற்றலலைத் திருவருளால் பெற்ற ஔவைப் பாட்டி மனிதனுக்கு உரிய உறுதிப் பொருள்கள் நான்கையும் சுருக்கமாக ஒரு பாட்டில் காட்டினார். "ஈதல் அறம்" என்றார். அறம் செய்ய வேண்டுமானால் பொருள் வேண்டும். பொருளை எவ்வாறு ஈட்டுவது?  "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்றார். பணம் ஈட்டுவதற்கு இக் காலத்தில் எத்தனையோ தந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாளுகின்றார்கள். எப்படியாவது பொருள் கிடைத்தால் போதும் என்ற ஒரே நோக்கத்தோடு இப்போது பொருளை ஈட்டுகிறார்கள். ஆனால், நமது முன்னோர் இப்படி ஈட்டுவதைப் பொருளாகக் கொள்ளவில்லை. நல்ல வழியில் ஈட்டிய பொருளையே பொருள் என்று சொன்னார்கள். நல்ல வழியாவது அறநெறி. அறநெறியில் ஈட்டிய பொருளே பின்னும் அறம் செய்வதற்குத் தகுதியானது. இந்தப் பண்பை நினைவு கொண்டு ஒளவை பொருளைப் பற்றிச் சொன்ன பிறகு காதலைப் பற்றிச் "காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு பட்டதே இன்பம்" என்றார்.

எல்லாப் புலவர்களுமே காதல் இன்பத்தைப் பற்றிப் பாடி இருக்கிறார்கள். இந்த உலகத்தில் ஒருவனும் ஒருத்தியும் ஒன்றுபட்டுப் பழகுவதே இன்பம் என்று யாவரும் அறிவார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கையில் உடம்பு இணைவது மட்டுமே அல்ல.  உள்ளமும் இணைய வேண்டும். கருத்து ஒருமித்து ஆதரவுபடும் இன்பத்தை எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள். காதலைப் பற்றிச் சொல்கிற நுட்பம் ஒன்று உண்டு. உடல் இணைவது, உள்ளம் இணைவது போலவே உயிரோடு ஒன்றுபட்டு அமைவது காதல். பிறவிதோறும் காதல் தொடர்ந்து வரும்.  எனவே,, ஒளவைப் பாட்டி, "காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்"  என்று சொன்னார். பல பிறவிகளிலே ஒன்றுபட்டுக் காதல் உடையவர்கள், இந்தப் பிறவியிலும் காதல் கொண்டு கருத்து ஒருமித்து அன்பு செய்வதே இன்பம் என்று பொருள் கொள்ளவேண்டும். இந்த மூன்றிலும் பற்றற்று இறைவனுடைய திருவருளைப் பெறுவது வீடு என்று முடித்தாள். "பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு."

இந்தப் பாட்டில் அறத்தின் இலக்கணத்தை, மிகச் சுருக்கமாக "ஈதல் அறம்" பாட்டி என்று சொல்லிவிட்டார். ஈதல் - கொடுப்பது. ஆடை கொடுத்தாலும், ஆபரணம் கொடுத்தாலும் உண்டி கொடுத்தாலும், உறங்கும் இடம் கொடுத்தாலும், யார் யாருக்கு எது எது வேண்டுமோ அதைக் கொடுத்தாலும் எல்லாம் ஈகைதான். அறச்செயல்கள் பலவகையானாலும் அவற்றுள் ஈகை சிறந்தது. அதுபோலவே பலவகையான ஈகைகளிலும் சிறந்ததாக ஓர் ஈகை இருக்கிறது. அறங்கள் முப்பத்திரண்டு வகை என்று சொல்வார்கள். அவை எல்லாவற்றுள்ளும் சிறந்தது அன்னதானம். அறத்தின் பகுதிகளில் சிறந்தது ஈகை என்றால், ஈகைப் பகுதிகளில் சிறந்தது பிறருடைய பசியைப் போக்க உண்டி அளிக்கும் ஈகையாகும். 

எல்லா வகையான ஒழுக்கங்களுக்கும் மூலகாரணமாக இருப்பது உயிரும் உடம்பும் சேர்ந்த இந்த வாழ்க்கை. உயிரும் உடம்பும் சேர்ந்து அமைந்து இருப்பதனால்தான் உலகமே வாழ் கிறது. உயிர் தனித்து நில்லாது; உடம்போடு சேர்ந்தே நிற்கும். "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்பார் திருமூல நாயனார். இந்த உடம்பு சோற்றுப் பிண்டம். சோறு இல்லாவிட்டால் சோர்ந்துவிடும். 

உயிர் வாழ, உடம்பு வேண்டும். உடம்பை உணவால் ஓம்புதல் வேண்டும். சோறு இல்லா விட்டால் பசிநோய் உண்டாகும். எல்லா நோய்களையும் விடக் கொடியது பசிநோய். அது வந்துவிட்டால் எல்லா வகையான அறங்களும், ஆசாரங்களும் அழிந்து போகின்றன. துறவிகளையும் பசித் துன்பம் விடுவது இல்லை. பசி வந்துவிட்டால் அவர்களுக்கும் அறிவு மங்கிவிடும். எத்தனையோ மக்கள் பசியினால் பிள்ளையை விற்றும் பிழைக்கிறார்கள். 

தானம், தவம் ஆகிய இரண்டும் உலகத்தில் நிற்க வேண்டும். இல்லறத்தார் தானத்தினால் சிறப்பு அடைகிறார்கள். துறவறத்தார் தவத்தினால் சிறப்பு அடைகிறார்கள். இந்த இரண்டும் நிற்க வேண்டுமானால் பசிப்பிணி போகவேண்டும். பசிப்பிணியைப் போக்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது மழை. அதனால், "தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம் வானம் வழங்காது எனின்" என்று பாடினார் திருவள்ளுவ நாயனார். மணிமேகலைக் காப்பியம், பசியை, "பசிப்பிணி என்னும் பாவி" என்று பசியின் கொடுமையைச் சொல்வது மட்டும் அல்லாமல், "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்றும் அன்னதானத்தின் சிறப்பையும் சொல்கிறது.

மணிமேகலை என்னும் துறவி பிறருக்கு உபதேசம் செய்வதை மேற்கொள்ளவில்லை. எல்லோருக்கும் பயன்படுகிற ஒரு காரியத்தை அவள் மேற்கொண்டாள். அவளுக்கு "அமுதசுரபி" ஒன்று கிடைத்தது. பசித்தோர் எல்லோருக்கும் சோறு கொடுத்தார். அமுதசுரபியில் சோறு அளித்த, ஆதிரை என்பாளும், "பாரகம் முழுவதும் பசிப்பிணி அறுக" என்று சொல்லி இட்டாள் என்கின்றது காப்பியம். ஆதிரைக்கு எவ்வளவு பேராசை பாருங்கள். உலகம் முழுவதும் பசி இல்லாமல் வாழவேண்டுமாம்.

நமது நாட்டில் எந்த நிகழ்வாக இருந்தாலும், அன்னதானம் இல்லாமல் இருக்காது. பசித்து வந்தவர்க்கு அன்னம் அளிப்பது சிறந்த தானம். ஒருவன் ஈட்டிய பொருளைப் பாதுகாப்பாக வைக்கின்ற இடமே பசித்தவர் வயிறுதான் என்கின்றார் திருவள்ளுவ நாயனார். "அற்றார் அழிபசி தீர்த்தல், அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி" என்றார். தவம் செய்கிறவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. ஆனால், அன்னதானம் செய்கிறவர்களுடைய ஆற்றலுக்கும் பின்தான் அதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் சொல்கிறார். “ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்"  என்பது திருக்குறள். தவம் செய்கிறவனுடைய ஆற்றல் பெரிதுதான். அவன் தன்னுடைய ஊனை உருக்கி உண்ணாவிரதம் இருக்கிறான். உடம்பை வருத்தித் தவம் செய்கிறான். இந்திரிய நிக்கிரகம் செய்கிறான். அந்த உண்ணா நோன்பிற்கும் ஓர் எல்லை உண்டு. பசி மிகுந்துவிட்டால் தவம் செய்வாருடைய தவம் அழிந்துவிடும். இவர்கள் தாம் பட்டினி கிடப்பார்கள். இவர்கள் பிறர் பட்டினியைப் போக்கும் ஆற்றல் இல்லாதவர்கள். அன்னதானம் செய்கிறவனோ தன்னுடைய பசியைப் போக்கிக் கொள்வதோடு, பசித்து வருகிற மற்றவர்களுடைய பசியையும் போக்கி விடுகிறான். 

'இடம்பட வீடு எடேல்' என்று ஔவைப் பாட்டி சொல்லியிருக்கிறாள். வீட்டை இடம் அழியும்படி பெரியதாகக் கட்டாதே என்று பொருள். ஒரு பக்கத்தில் விளைச்சலை அதிகப் படுத்துங்கள் என்று சொல்லிக்கொண்டு, மற்றொரு பக்கத்தில் நெல் விளைகிற வயல்களை அழித்துக் கட்டிடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறோம். விளைநிலம் அழிந்து போகிறது. உடம்பை வளர்த்தற்கு உரிய அன்னத்திற்கு உரிய நெல் விளையாமல் போகின்றது. இது கூடாது. சிறுகக் கட்டிப் பெருக வாழவேண்டும் என்று அந்தக் காலத்தில் பெரியவர்கள் நினைத்தார்கள். நிறைய நெல் விளைந்தால்தான் அறம் செய்ய முடியும். பழைய காலத்தில் எல்லா மக்களும் சோம்பல் இல்லாமல் வேளாண்மை செய்தார்கள். பிச்சை கேட்கிறவன் ஒரே ஒருவன்தான். அவன் துறவி.  இரவலர் என்ற பெயர் கலைஞர்களுக்கு உரியதாக இருந்தது. பாணர். புலவர், கூத்தர் ஆகிய இவர்கள் அங்கங்கே சென்று தமது கலைத் திறத்தைக் காட்டி வள்ளல்களிடம் பரிசு பெற்றார்கள். அவர்களை அன்றிப் பிறரிடம் பிச்சை என்று இரப்பவர்கள் மிக அரிது. நாளடைவில் அந்த நிலை மாறிப் பலரும் பிச்சை எடுக்கும் நிலை வந்துவிட்டது. 

உயிர் வாழ்வதற்கு உடம்பு வாழவேண்டும். உடம்பு அன்னத்தால் ஆனது என்ற உண்மை யாவருக்கும் தெரிந்தது. இந்த நாட்டில் தொழில் துறையில் மிகுதியான கவனம் செலுத்தவில்லை என்று குறை கூறுகிறோம். எத்தனை தொழில்கள் வளர்ந்தாலும் மனிதனுடைய மூலத் தேவையாகிய சோறு கிடைக்கவில்லை என்றால் மற்றத் தொழில்களினால் பலன் இல்லை. "உழந்தும் உழவே தலை" என்றார் நாயனார்.

சடையப்ப வள்ளல் பலருக்கு உண்டி கொடுத்து உயிர் கொடுத்திருக்கிறார். ஒருநாள் அவரிடம் பரிசு பெற்றுப் போக ஒரு புலவர் வந்தார். அப்போது சடையப்ப வள்ளல் நெல் மூட்டைகளைத் தம் முடைய வீட்டுக்குள் கொண்டுபோய் அடுக்கிக் கொண்டிருந்தார். வரும் வழியில் வண்டியில் இருந்து நெல்மணிகள் சிந்தி இருந்தது. வள்ளல் அந்த நெல்லைப் பொறுக்கித் தம் மேல்துண்டில் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த புலவர் ஒருவர்,  "வீதியில் சிந்திக் கிடக்கிற நெல்லைப் பொறுக்கும் கருமியாக இருக்கிறாரே! இவர் நமக்கு எங்கே பரிசு கொடுக்கப் போகிறார்?" என்று எண்ணினார். புலவருடைய முகத்தைப் பார்த்தபோது சடையப்ப வள்ளலுக்கு அவருடைய எண்ணம் விளங்கியது. சடையப்பர் அந்தப் புலவரைத் தம் வீட்டுக்குள் அழைத்துச் சென்று இனிமையாகப் பேசிச் சாப்பிட்டுப் போக வேண்டுமென்று சொல்லி இலையைப் போட்டு உட்கார வைத்தார். ஆனால் இலையில் சோற்றை வைப்பதற்குப் பதிலாகக் கைநிறையப் பொன்னைக் கொண்டு வந்து வைத்தார். அதைப் பார்த்த புலவர் முகத்தைச் சுளித்தார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவிதமாகப் பார்த்தார். நெல்லை விடப் பொன் உயர்ந்தது அல்ல என்று காட்டவே,  பொன்னைக் கொண்டுவந்து இலையில் இட்டார். புலவருக்கு உண்மை விளங்கியது. "பொன்னால் உடம்பு வளராது. அரிசி உடம்பை வளர்க்கும் என்பதை உணர்ந்தேன்” என்றார் புலவர்.

தமக்குச் சோறு அளித்த சடையப்பரைக் கம்பர் இராமாயணத்தில் பல இடங்களில் பாடியிருக்கிறார். மிகவும் முக்கியமான இடத்தில் அந்த வள்ளலைப் பற்றிய புகழை அமைத்திருக்கிறார். இராமாயணத்தை இந்த நாட்டில் சொற்பொழிவு செய்கிறவர்கள் இராம பட்டாபிடேகத்தைச் சொல்லாமல் விடமாட்டார்கள். யார் இராமாயணம் சொன்னாலும் இராமனுடைய புகழோடு சடையப்பர் புகழும் வரவேண்டும் என்று கம்பர் கருதினார். இராம பட்டாபிடேகத்தைச் சொல்லும் பாட்டில் சடையப்பர் புகழைப் புதைத்து வைத்தார். இராம பட்டாபிடேகத்தன்று விசுவாமித்திரர், வசிட்டர், அநுமன், சீதாதேவி முதலிய எல்லோரும் சபையில் இருந்ததாகச் சொல்லலாம். சடையப்ப வள்ளலுக்கு அங்கே இடமே இல்லை. ஆனால், இடத்தை உண்டாக்கி, சடையப்பர் புகழை அந்தப் பாட்டில் மிகவும் நயமாகப் புகுத்தி விட்டார். 

"அரியணை அனுமன் தாங்க,

    அங்கதன் உடைவாள் ஏந்த,

பரதன் வெண்குடை கவிக்க,

    இருவரும் கவரி வீச

விரைசெறி குழலி ஓங்க,

    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்

மரபுஉ(ள்)ளார் கொடுக்க வாங்கி,

    வசிட்டனே புனைந்தான் மௌலி". --- கம்பராமாயணம்.

சிங்காதனத்தை அனுமன் தாங்கினான். அங்கதன் உடைவாளை ஏந்திக் கொண்டிருந்தான். பரதன் வெண்கொற்றக் குடை பிடித்தான். இலக்குவனும் சத்துருக்கனனும் கவரி வீசினார்கள். சீதாபிராட்டி மிக்க பொலிவோடு இராமபிரான் அருகில் அமர்ந்திருந்தாள். அப்போது வசிட்டன் மகுடத்தைச் சூட்டினான் - இப்படிச் சொன்னாலே போதும். ஆனால் அங்கே சடையப்பர் புகழைக் கொண்டு வந்து இணைக்கிறார் கம்பர். "வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபு உள்ளோர் கொடுக்க வாங்கி" இராமபிரானுக்கு வசிட்டர் திருமுடியைச் சூட்டினார் என்கிறார். இராமபிரானுக்குச் சூட்டிய மகுடத்தை சடையப்பருக்கு முன்னோர்கள் ஆகிய வேளாளர் மரபில் வந்தவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள் என்று பாடியிருக்கிறார்.  கம்பருடைய அன்புக்கு மூலகாரணம் சடையப்ப வள்ளலின் சோறே ஆகும். அன்னதானம் சடையப்பரை இராமனுக்குச் சமமாக நிமர்த்தி விட்டது. 

என்னிடம் பொருள் சேர்ந்தால் நானும் அன்னதானம் செய்யலாம். அதற்கு வழி இல்லை. எப்படி அன்னதானம் செய்ய முடியும்?' என்று சிலர் நினைக்கலாம். அத்தகைய எண்ணம் உடையவர்களுக்கு வாழ்க்கையில் அனுபவ பூர்வமான முறையில் ஒரு தந்திரத்தை அருள்கிறார் அருணகிரிநாதப் பெருமான். 

நீங்கள் கொஞ்சம் சோறு கொடுத்தாலும் அது பெரிய சோறு ஆகிவிடும். ஒரு பிடி சோறு கொடுத்தால் மலையளவு சோறாகி விடும். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நீங்கள் போக வேண்டிய தொலையா வழி ஒன்று இருக்கிறது. அந்த வழியில் இப்போது நீங்கள் கொடுக்கும் பிடி சோறு, கட்டுச் சோறாகி, வந்து சேரும் என்று அவர் சொல்கிறார். அரிசியில் பிளவு பட்டால் உண்டாவது நொய் அரிசி. அந்த நொய் அரிசியில் ஒரு பாதியையாவது பிறருக்குக் கொடுத்து உண்ணுங்கள் என்று சொன்னார்.

பலவித பண்டங்களோடுதான் விருந்து படைக்க வேண்டும் என்று அவர் சொல்லவில்லை. வறுமை நிலையில் இருந்தவர்கள் கீரையைக் கறி ஆக்கி உண்டார்கள். தம்மிடம் இருந்த பொருள் அனைத்தும் வற்றிய நிலையில், தன்னை நாடி வந்த அடியவர்க்கு அமுது படைக்க, இளையான்குடி மாற நாயானார் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த கீரையைத் தான் தேர்ந்து எடுத்தார். வறியவர்கள் உப்பும் இல்லாமல் கீரையைச் சுண்டிச் சாப்பிட்டார்கள். மக்கள் எதையாவது வேகவைத்துச் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறார்கள். அப்படி வெந்தது எதுவோ அதைக் கொடுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். பசி என்று வந்து கேட்கிற வறியவர்களுக்குக் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்து நீங்களும் சாப்பிடுங்கள்  என்று சொல்கிறார். பகிர்தலாவது தனக்கு உரியதில் ஒரு பகுதியைப் பிரித்துக் கொடுத்தல். பசி என்று தெருவில் வந்து நிற்பவனைப் பார்த்து,  நாளைக்கு வா. பாயசத்தோடு அமுது படைக்கிறேன் என்று சொல்வதைக் காட்டிலும் நொய்யாக இருந்தாலும், வெறும் கீரையாக இருந்தாலும் இருக்கிறதை இருக்கிறபோதே முதலில் அவனுக்கு ஒரு பிடி கொடுத்துவிட்டு உண்ணுவதே உயர்வு.

பணக்காரர்களுக்குத்தான் அறம் உண்டு. மற்றவருக்கு இல்லை என்று சொல்ல இயலாது. பசி என வந்தவனுக்கு ஒரு பிடி அன்னம் இட்டாலும் போதும். ஒரு பிடிதான் கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ள மனிதனுக்கு அதுவே பெரும் பயனைத் தரும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் நமது கருமூலம் அறுக்கவந்த திருமூல நாயனார். அருணகிரிநாதர் வெந்தது எல்லாவற்றையும் தானம் செய்து விடு என்று சொல்லவில்லை. இரண்டு பேரும் கலந்து பகிர்ந்து உண்ணுங்கள்  என்றே சொல்கிறார். 

இப்படிச் செய்கிற தானமே தவமாகும் என்று அருணகிரிநாதர் கூறுகின்றார். அதை "அன்பின் நிலையான மாதவம்" என்கின்றார். புலன்களை அடக்கிச் செய்வதுதான் தவம் என்று எண்ணவேண்டாம். தவம் செய்கிறவனுடைய ஆற்றலைவிடப் பிறருடைய பசியைப் போக்குகிறவன் ஆற்றல் பெரிது என்னும் திருவள்ளுவர் கருத்தை மேலே கண்டோம். ஆகவே பசியைப் போக்கும் தவத்தை அன்போடு செய்து வந்தால், அதுவே "நிலையான மாதவம்" என்கின்றார் அருணை வள்ளலார்.

பசித்து வந்தவருக்கு இலையாவது, வெந்தது ஏதாவது அன்போடு கொடுத்தால், அது பின்னால் பின்பு பொதி சோறாக விளையும்  என்கின்றார். மரணம் வந்தபோது, உயிரானது தான் இருக்கும் உடலை விட்டுப் போகின்றது. இனிக் கவலை இல்லை என்று நினைக்க முடியாது. மற்றோர் உடம்புக்குப் போகிற பிறவி என்னும் வாசல் அடுத்து நிற்கிறது. மரணத்திற்குப் பின் உண்டாகிற நெடிய பயணத்திற்கு முடிவே இல்லை. இப்போது செய்கிற "நிலையான மாதவம்" அந்தப் பயணத்தில் பொதி சோறாகவும், உற்ற துணையாகவும் வந்து சேரும்.

அறிவை மழுங்க அடிக்கிற, இந்திரியங்களைச் செயலற்றுப் போகும்படியாகச் செய்கிற பசியைப் போக்குவது சிறந்த தானம். இறைவனை எண்ணி அதைச் செய்தால், அதுவே தவமாகிவிடும். பலர் அன்னதானம் செய்கிறார்கள். அவர்களுடைய செயல் எல்லாம் தவம் ஆகிவிடும் என்று சொல்வதற்கில்லை. அவர்களுடைய மனத்தில் அவ்வாறு தானம் செய்வதற்குக் காரணமான உணர்ச்சி வேறாக இருக்கிறது. சிலர் பேருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அன்னதானம் செய்கிறார்கள். அவன் செய்கிறானே நாம் ஏன் செய்யக்கூடாது? என்ற பொறாமையினால் சிலர் செய்கிறார்கள். சிலரோ, அப்படிச் செய்யாவிட்டால் ஊரிலுள்ளவர்கள் ஏசுவார்களே என்று எண்ணிச் செய்கிறார்கள். இவை எல்லாம் தானம் ஆவதில்லை; தவமும் ஆவதில்லை. "அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்" என்றும், "மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன், ஆகுல நீர பிற" என்றும் சொன்னார் திருவள்ளுவ நாயனார்.

அறத்தின்வழி ஈட்டிய பொருள் இறைவன் தந்தது என்று, மறவாமல் கருத்தில் இருத்தி, அப்பொருளை அடியார்கட்கும் வறியார்கட்கும் இறை திருப்பணிகட்கும் வழங்குதல் வேண்டும். வழங்காத வன்னெஞ்சர்கள்ப் பூமி தாங்குதற்குக் கூசும். அவர்களை ஏன் படைத்தாய் என்று கூறி இறைவனை நோக்கி வினவுகின்றார் பட்டினத்தடிகள்.

"நாயாய்ப் பிறக்கினும் நல்வேட்டைஆடி நயம்புரியும்,

தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து,பின் சம்பன்னராய்,

காயா மரமும், வறளாம் குளமும், கல்ஆவும் என்ன

ஈயா மனிதரை ஏன் படைத்தாய், கச்சிஏகம்பனே".  ---  பட்டினத்தார்.

    இறைவனுடைய நினைவோடு செய்கிற அறந்தான் "நிலையான மாதவம்" ஆகிறது. தர்மங்கள் செய்கிறபோது, நம்மை நினைத்தால் ஆசை வளரும். அதுவே வெறும் கர்மம் ஆகிறது. இறைவனை நினைந்து செய்தால் அதுவே "கர்மயோகம்" ஆகிறது. கர்மயோகமும் ஒருவகைத் தவம்தான்.  ஆகவே, நாம் பிறருடைய பசியைத் தீர்க்கும்போது இறைவனை நினைத்துக்கொண்டு அந்தச் செயலைச் செய்தால் வேறு எந்தவிதமான உணர்ச்சியும் வந்து தடைப்படுத்தாது. அதுவே தவமாக முடியும். அன்பு இருந்தால் ஏழையைக் கண்டு ஏளனம் செய்யத் தோன்றாது. இறைவன் நினைவு உண்டாகும். மரணம் அடைந்த பிறகு செல்லும் வழிக்குத் துணையாக இருப்பது இந்தத் தவம் என்றார் அருணகிரிநாதர். மற்ற ஒன்றும் பற்றித் தொடராது. "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே” என்று பட்டினத்தார் சொன்னார். 

நமக்கு வழித் துணையாகிய அறங்களில் சிறந்த அறம் ஈகை. ஈகையில் சிறந்தது அன்னதானம். அன்னதானத்தை இறைவன் நினைவோடு செய்யவேண்டும். செய்வது ஒரு பிடியாக இருந்தாலும் அதனால் உண்டாகிற புண்ணியம் மலையாக இருக்கும். இப்போது செய்கிற அறம் சிறிதாகத் தோற்றினாலும் அது பயனாக விளையும்போது பெரிதாக இருக்கும். மூடி வைத்திருக்கும் குடை சிறிதாகத் தோன்றலாம். வெயிலில் விரிக்கும் போது பெரிதாகத் தோன்றுகிறது. 

"மலைஆறு கூறுஎழ வேல் வாங்கினானை வணங்கி, அன்பின் 

நிலையான மாதவம் செய்குமினோ, நும்மை நேடிவரும்

தொலையா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையும் கண்டீர்; 

இலை.ஆயினும் வெந்தது ஏதாயினும் பகிர்ந்நு ஏற்றவர்க்கே". 

என்று அருணகிரிநாதப் பெருமான் நமக்கு அருள் உபதேசம் புரிந்து நல்வழியைக் காட்டுகின்றார்.

இதன் பொருள் --- 

உலகத்தவர்களே! பசியோடு வந்தவர்க்கு நீங்கள் வழங்கியது நீங்கள் இறுதியில் தொலையாத வழியில் செல்லும் நெடிய பயணத்துக்கு, உங்களைத் தேடிக்கொண்டு வருகின்ற கட்டுச் சோறும், பொருந்திய உதவியும் ஆகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலால், உம்மிடத்தில் வந்து யாசித்தவர்க்கு இலைக் கறியையாவது, வெந்தது வேறு எதையாவது பங்கிட்டுக் கொடுத்து, கிரவுஞ்ச மலையானது வழிகாணப் பிளக்குமாறு வேலை விட்டு அருளிய முருகப்பெருமானை அன்புடன் பணிந்து, நிலைபெற்ற பெருந்தவத்தைச் செய்து வருவீர்களாக.


திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி

 

திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி

-----

உலகில் நாள்தோறும் எண்ணற்ற உயிரினங்கள் பிறக்கின்றன; இறக்கின்றன. உலகின் நியதி பிறப்பும் இறப்புமாய் அமைந்துள்ளது. பிறக்கும் உயிர்கள் அனைத்தும் உண்டு வாழ்ந்து இறுதியில் முடிகின்றன. பிறப்பதும் இறப்பதுமேதான் வாழ்க்கையா? இதில் என்ன பெருமை உள்ளது? என்ற ஐயம் எழுதல் இயல்பு. "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு" என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார். வான வீதியில் வலம் வரும் சந்திரனும் இதனை மக்களுக்கு உணர்த்தி வருகிறான். மாதத்தில் பதினான்கு நாட்கள் வளர்வதும் பின் பதினான்கு நாட்கள் தேய்வதும் சந்திரனின் நியதியாக அமைகிறது என்பதனை, "தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகம்" என்கிறது புறநானூறு. இதுதான் நிலையாமை ஆகும். இந்த நிலையாமையை வற்புறுத்தும் நாலடியார் பாடல் ஒன்று "இன் இனியே நின்றான், இருந்தான், கிடந்தான், தன் கேள் அலறச் சென்றான்" என்று கூறும். அருணகிரிநாதப் பெருமான், "பெரும் காரியம் போல் வரும் கேடு உடம்பால், ப்ரியம் கூர வந்து கரு ஊறி, பிறந்தார், கிடந்தார், இருந்தார், தவழ்ந்தார், நடந்தார், தளர்ந்து பிணம் ஆனார்" என்றி நிலையாமையை அறிவுறுத்துகின்றார்.

திருவள்ளுவ நாயனாரும், நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்பதே இவ்வுலகிற்குப் பெருமையாக அமைகிறது என்ற கருத்தில், "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் வுலகு" என்று அருளினார். "இன்று உளார் நாளை இல்லை என்னும் பொருள் ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள்" என்கிறார் அப்பர் பெருமான். "நேற்று உள்ளார் இன்று மாளா நின்றனர், அதனைக் கண்டும் போற்றிலேன் நின்னை, அந்தோ! போக்கினேன் வீணே காலம்" என்று புலம்புகின்றார் தாயுமான அடிகளார்.

இந்த நிலையாமையினை உணர்ந்து கொள்கிற பொழுதுதான், இவ்வுலகில் நம்மால் நிலைத்த சில செயல்களைச் செய்ய முடியும். நிலையில்லாத இந்த உலகத்தில் தமது பருவுடல் அழிந்த பின்னும் புகழுடல் நிலைத்து இருக்குமாறு வாழ்ந்து பிற்காலச் சந்ததியினருக்கு வழி காட்டிச் சென்றவர்கள் நமது முன்னோர் என்பதை "மன்னா உலகில் மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்னும் புறநானூற்றுப் பாடல் வரிகளால் அறியலாம்.

நிலையாமை என்னும் நிலைத்த உண்மையை மக்கள் மனதில் நன்கு பதியும் வண்ணம் உணர்த்தியவர் நமது கருமூலம் அறுக்கவந்து அவதரித்த திருமூல நாயனார் ஆவார். அன்றாட வாழ்க்கையில் நிகழும் எளியதொரு நிகழ்ச்சியைக் கொண்டே உலகில் பிறந்த எவரும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையாமைக் கோட்பாட்டினை உணர்த்தி உள்ளார்.  மனிதர் ஓயாமல் எப்போதும் உழைத்துக் கொண்டிருப்பது வயிற்றுப் பாட்டுக்கே என்பது எளிதில் புலப்படும். 

"உண்பது நாழி, உடுப்பது நான்குமுழம்,

எண்பது கோடிநினைந்து எண்ணுவன,-கண்புதைந்த

மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச்

சாந்துணையும் சஞ்சலமே தான்."

என்கிறார் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

உண்பது ஒரு நாழி அரிசி அன்னமே ஆகும். உடுப்பது நான்கு முழ உடையே ஆகும். இப்படியாகவும், நினைத்து எண்ணும் காரியங்களோ எண்பது கோடியாகின்றன. எனவே, அகக்கண் குருடாய் இருக்கிற மக்களின் குடிவாழ்க்கையானது மட்கலம்போல இறக்கும் அளவும். அவர்க்குத் துன்பமாகவே இருக்கிறது.

தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில்  செல்லமாக வளர்ந்தவள். அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. சாப்பிட்டுத்தான் பழக்கம். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் குடித்தனம் போய்விட்டாள். ”அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?” என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் (தலைவியை வளர்த்தவள்) தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்து வருவதாகத் தலைவியின் தாயிடம் சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்கு போகிறாள். அங்கு, தலைவி மோர்க்குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் அதைப் பரிமாறும் காட்சியையும்,  ”நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறது” என்று சொல்லி,  மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித்தாய், அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் வந்து கூறுகிறாள் என்று "குறுந்தொகை" என்னும் நூல் கூறுகிறது.

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்

குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்

தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்

இனிது எனக் கணவன் உண்டலின்,

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே." 

கோசலை நாடு உடைய வள்ளல் இராமபிரானைப் பிரிந்து,  அசோகவனத்தில் இருக்கும் சீதையும் தன் வருத்தத்தினை அனுமனுக்குப் புலப்படுத்தும் நிலையினைக் கம்பநாட்டாழ்வார் பின் வருமாறு காட்டுவார்.

"அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்? என்று அழுங்கும்;

விருந்து கண்டபோது என் உறுமோ? என்று விம்மும்;

மருந்தும் உண்டுகொல் யான்கொண்ட நோய்க்கு? என்று மயங்கும்;

இருந்த மாநிலம் செல் அரித்து எழவும் ஆண்டு எழாதாள்."     --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

தான் அமர்ந்துள்ள இடப் பரப்பானது  கரையானால் அரிக்கப் பெற்றுப் புற்று தோன்றினும், அவ்விடத்திருந்து பெயர்ந்து போகாத பிராட்டி,  உண்ணும் மெல்லிய இலைக்கறி உணவை இராமபிரான் எவர் பரிமாற உண்பார் என்று கூறி  இரங்கித் துன்புறுவாள். பரிமாறும் நான் பக்கத்தில் இல்லாமையால். விருந்தினரைப் பார்க்கும் சமயத்தில் என்ன துன்பம் அடைவாரோ என்று நினைந்து ஏக்கம் உறுவாள். இப்படி நானே வரவழைத்துக் கொண்ட பிணிக்கு மருந்தும் உள்ளதோ என்று கூறி சோர்வு அடைவாள். 

திருமூல நாயனார் நிலையாமையினை உணர்த்துவதற்குத் தேர்ந்தெடுத்த காட்சியும் இந்த இல்லறக் காட்சியே ஆகும். பொருள் ஈட்டி வந்த கணவன் மனைவியிடம் அவற்றைத் தந்து சிறந்த முறையில் அன்று உணவு அமைய வேண்டும் என்று குறிப்பிட்டான். அவளும் தன் கைத்திறன் எல்லாம் காட்டி அருமையான, அறுசுவை மிக்க உணவைச் சமைத்திருந்தாள். கணவனும் மிக விரும்பி உண்டான். உண்டவுடன் கணவனும் மனைவியும் மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள். கணவனுக்கு மனைவி வெற்றிலை மடித்துச் சுவைக்கக் கொடுத்துக் கொண்டிருந்தாள். இவ்வாறான நிலை சற்று நேரமே நீடித்தது. திடீரென்று கணவன் தன் இடப்பக்க மார்பு சிறிது வலிக்கிறது என்றான். கீழே சாய்ந்து படுத்தான். அவ்வளவில் அவன் உயிர் உடற்கூட்டை விட்டுப் பறந்து சென்றது. 

"அடப் பண்ணி வைத்தார், அடிசிலை உண்டார்,

மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்,

இடப்பக்கமே இறை நொந்தது இங்கு என்றார்,

கிடக்கப் படுத்தார், கிடந்து ஒழிந்தாரே."  ---  திருமந்திரம்.

இத்தோடு விட்டாரா என்றால், அதுதான் இல்லை. இறந்தவனைச் சுற்றி உற்றாரும் உறவினரும் ஊராரும் போரொலி எழுப்பி அழுகின்றனர். இதுவரை பெற்றோரிட்ட பெயரும், மற்றோரிட்ட பெயரும், பெற்ற பட்டப் பெயர்களும் ஒருங்கே நீக்கப் பெற்று, பிணம் என்றே எல்லோரும் அழைக்கும் நிலை வந்து விடுகின்றது. அதுமட்டுமா! சுடுகாட்டிற்குச் சுமந்து சென்று அங்கே சுடலையில் வைத்து இதுகாறும் அரிதின் முயன்று அழகுபடுத்தப் பட்டுக் காக்கப்பட்டு வந்த உடலைத் தீக்கு இரையாக்குகிறார்கள். அவ்வாறு தீ மூட்டிய பின்,  உறவினரும் மற்றோரும் தீட்டுப் போக நீரில் மூழ்கிக் குளித்து இறந்தவனைப் பற்றிய நினைப்பையும் ஒழித்து விடுகிறார்கள் என்கிறார் திருமூலர்.

"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு,

பேரினை நீக்கி, பிணம்என்று பேரிட்டு,

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு,

நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே."    --- திருமந்திரம்.

பாவும் உண்டையுமாக மாறி மாறிக் கூடும் இழைகளை நன்கு செப்பப் படுத்தி, விலை வரம்பு செய்யப்பட்ட பட்டாடை என்றும் அவ்வாறே இருப்பது இல்லை. நாளடைவில் நைந்து கிழிந்து போவதைப் பார்த்திருக்கிறோம். பட்டு ஆடையை உடுத்தி மகிழாமல், மடித்து வைத்துப் பாதுகாப்பது இயல்பு ஆகும். அதுபோலவே, இந்த உடம்பை அறச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் பாதுகாத்து, வாழ்நாளைக் கழித்து வீணாக்குகின்றோம். அது மட்டும் அல்லாமல், பிறந்த நாள் என்று குறித்துக் கொண்டாடப்படுகின்ற ஒரு நாளானது ஓர் ஆண்டின் முடிவாகவும், அடுத்த நாளானது அடுத்த ஆண்டின் தொடக்கமாகவும் கழிகின்ற போதே, கறுத்த தலைமுடியானது நரைத்து வெளுத்துப் போகும் என்பதை அறிவிப்பதாக உள்ளதைக் காண்கிறோம். இருந்தும் மக்கள் எல்லோரும் தமது அறிவும் ஆற்றலும் இன்று உள்ளது போலவே என்றும் இருக்கும் என்று மகிழ்ந்து இருப்பது அறியாமை ஆகும் என்கிறார் திருமூல நாயனார்.

"மாறு திருத்தி வரம்பு இட்ட பட்டிகை

பீறும், அதனைப் பெரிது உணர்ந்தார் இ(ல்)லை;

கூறும் கருமயிர் வெண்மயிர் ஆவதும்

ஈறும் பிறப்பும் ஓர் ஆண்டு எ(ன்)னும் நீரே."  --- திருமந்திரம்.

எனவே, நிலையாமையே நிலைபெற்றிருக்கின்ற இவ்வுலகத்தில் மக்கள் செய்ய வேண்டிய செயல்களைப் புலப்படுத்தி, அவர்கள் வாழ வேண்டிய நெறியினை வகையுற எடுத்துக் காட்டுகின்றார் திருமூல நாயனார்.   உள்ளத்தை ஒருமுகப்படுத்தி, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி, இறைவனை வணங்குவதும், இல்லை என்று வந்தோர்க்கு இல்லை என்னாது தம்மிடத்தில் உள்ளதைக் கொடுத்து உதவுவதும், யாவரிடத்தும் அன்போடு உசாவுவதும் வாழ்வியில் நெறி என்பதனை அறிவுறுத்துகின்றார்.

"படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே."    --- திருமந்திரம்.

படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலில் உள்ள இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.

"யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை;

யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை;

யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;

யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே."  --- திருமந்திரம்.

இறைவனுக்குப் படையல் போட்டுத்தான் வணங்க வேண்டும் என்பதில்லை. எளிமையாகப் பச்சிலை கொடுத்து வணங்கினாலே போதும். பசுவுக்குப் பூசை செய்ய வேண்டும் என்பதில்லை. பூசை செய்வோர்க்குப் பசுவைத் தானமாக வழங்கவேண்டும் என்பதில்லை. பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். பசித்து இருப்பவர்க்கு அறுசுவை உணவு கொடுக்க வேண்டும் என்பதில்லை. உண்ணும்போது தான் உண்கிற உணவில் ஒரு கைப்பிடி கொடுத்தாலும் போதும். புகழ்ந்துரை செய்து யாருடைய முதுகையும் சொறிய வேண்டும் என்பதில்லை.  யாவரிடத்தும் அன்போடு சொல்லாடினாலே போதும்.

எனவேதான், மேலோர் வகுத்துச் சென்ற அறங்களில் எல்லாம் மேலானது,  தமக்குக் கிடைத்த உணவினைப் பிறருக்கும் பகிர்ந்து கொடுத்து வாழ வேண்டும் என்பதே என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."

தமக்குக் கிடைத்த உணவின் ஒரு பகுதியைப் பிறர்க்கென வழங்கும் நல்ல மனம் வேண்டும்; அது எல்லோராலும் இயல்வது என்பதால், "யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒருகைப்பிடி" என்றார் திருமூல நாயனார்.

இனிய சொற்கள் இருக்க, கடும் சொற்களைப் பேசுவது, உண்ணுவதற்கு இனிய கனி இருப்ப, காயினை விரும்பி உண்ணுவதனை ஒக்கும் என்பாராய், "இனிய உள ஆக, இன்னாத கூறல்  கனி இருப்பக்  காய் கவர்ந்த அற்று" என்றார் திருவள்ளுவ நாயனார்.  பிறர் மனம் வருந்தப் பேசாமல், அவர் மனம் உவக்கப் பேசும் திறத்தில் வல்லவராகத் திகழ வேண்டும், இதுவும் எல்லோராலும் கடைப்பிடிக்கக் கூடியதுதான் எனக் காட்ட "யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரை தானே" என்றார் திருமூல நாயனார்.

எனவே, உடம்பின் நிலையாமையை உணர்ந்து, அதனால் பெறவேண்டிய பயனை, அது உள்ளபோதே பெற்றுக் கொள்ளுதல் அறிவுடைமை ஆகும். மணப் பிள்ளையே உயிர் கழிந்த பிணமாகவும், மண வாத்தியமே சாவுக்கு அடிக்கின்ற பறையாகவும், அணியப்பட்ட கலன்களையுடைய மங்கல மகளிரின் வாழ்த்தொலியே அழுகை ஒலியாகவும் மாறி முடிய, கணப்பொழுதில் தோன்றி மறையும் இவ்வுடலினால் ஆன பயனை அறிவுடையார் பெறுவர். அறிவு சிறிதும் இல்லாதவர்க்கு அப்பயன் எய்துதல் சிறிதும் இல்லை என்று கூறுகிறது திருவிளையாடல் புராணம்.

"மணமகனே பிணமகனாய்,

         மணப்பறையே பிணப்பறையாய்,

அணியிழையார் வாழ்த்தொலி போய்,

         அழுகை ஒலியாய்க் கழியக்

கணம் அதனிற் பிறந்து இறும் இக்

         காயத்தின் வரும்பயனை

உணர்வு உடையார் பெறுவர், உணர்வு

         ஒன்றும் இலார்க்கு ஒன்றும் இலை."

உடம்பின் நிலையாமை குறித்து, "குமரேச சதகம்" என்னும் நூல் கூறுமாறு காண்க...

"மனு, நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும்

     மண்மேல் இருந்து வாழ்ந்து

மடியாது இருந்தபேர் இல்லை; அவர் தேடியதை

     வாரி வைத்தவரும் இல்லை;

பனி அதனை நம்பியே ஏர்பூட்டு கதையெனப்

     பாழான உடலைநம்பிப்

பார்மீதில் இன்னும்வெகு நாளிருப்போம் என்று

     பல்கோடி நினைவை எண்ணி

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல்,

     அன்பாக நின்பதத்தை

அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள்;

     ஆசை வலையில் சுழலுவார்;

வனிதையர்கள் காம விகாரமே பகையாகும்,

     மற்றும்ஒரு பகையும்உண்டோ?

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.

இதன் பொருள் ---

மயல்மீது இவர்ந்து அருட்திருவிளையாடல் புரியும் குகப் பெருமானே! திருப்புல்வழல் என்னும் திருத்தலத்தில் மலை மீது கோயில் கொண்டு அருளிய குமாரக் கடவுளே! மனு என்னும் அரசனும், நற்குணமுடைய மாந்தாதா முதலானவர்கள் எல்லாரும்,  மண்ணுலகில் நீண்டநாள் இருந்து வாழ்ந்தாலும் இறவாமல் இருந்தவர்கள் எவரும் இல்லை; சிறிது சிறிதாக சேர்த்த பொருளைத் தம்முடன் எடுத்துச் செல்ல அள்ளி வைத்தவர்களும் இல்லை; பனி பெய்ததால் ஈரமிருக்கும் என்று நம்பிக்கை வைத்து ஏரைப் பூட்டும் அறிவின்மைபோல, அழியும் உடலை நிலையானது என்று நம்பிக்கை கொண்டு, உலகிலே மேலும் நீண்டகாலம் வாழ்வோம் என, பல கோடிக்கணக்கான நினைவுகொண்டு, நெறிகெட்டு வீணில் இறப்பதே அன்றி, அன்புடன் உன் திருவடியில் மலரிட்டு வணங்கி, வீடுபேற்றை அடையவேண்டும் என நினையார்கள்; ஆசையாகிய வலையில் அகப்பட்டுத் திகைப்பார்கள்; அவர்களுக்குப்) பெண்களைக் காமநோக்குடன் பார்ப்பதே கெடுதி தரும்; வேறொரு பகை இல்லை.

நிலையாமைக்கு இடமான உடம்பைக் கொண்டு, பெறவேண்டிய நிலையான பயன் குறித்து, "அறப்பளீசுர சதகம்" என்னும் வாழ்வியல் வழிபாட்டு நூல் கூறுவது காணலாம்.

"காயம்ஒரு புற்புதம்! வாழ்வு மலை சூழ்தரும்

      காட்டில் ஆற்றின் பெருக்காம்!

  கருணைதரு புதல்வர்கிளை மனை மனைவி இவை எலாம்

      கானல் காட்டும் ப்ரவாகம்!

மேயபுய பலவலிமை இளமைஅழகு இவை எலாம்

      வெயில்மஞ்சள்! உயிர் தானுமே,

  வெட்டவெளி தனில்வைத்த தீபம் எனவே கருதி,

      வீண்பொழுது போக்காமலே.

நேயம் உடனே தெளிந்து அன்பொடு உன் பாதத்தில்

      நினைவு வைத்து, இருபோதினும்

  நீர்கொண்டு மலர்கொண்டு பரிவுகொண்டு அர்ச்சிக்க

      நிமலனே! அருள்புரி குவாய்

ஆயும் அறி வாளர்பணி பாதனே! போதனே!

      அண்ணல்எம தருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

      அறப்பளீ சுரதே வனே!         

 இதன் பொருள் ---

      தூயவனே! ஆராய்ந்த அறிவினை உடையவர்கள் பணிந்து வணங்கும் திருவடிகளை உடையவனே!  அறிவு வடிவானவனே!  தலைவனே! எமது அரிய மதவேள் என்பான், எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற,  சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

இந்த உடம்பு ஒரு நீர்க்குமிழியைப் போன்றது. இந்த வாழ்க்கையானது மலையைச் சுற்றியுள்ள காட்டிலே ஓடுகின்ற ஆற்று வெள்ளம் ஆகும். அன்புக்கு உரிய மக்கள்,  உறவினர்,  தேடிய வீடு,   மனைவி ஆகிய இவைகளெல்லாம் கானல் நீர் காட்டுகின்ற வெள்ளம். பொருந்திய தோள் வலிமை, இளமை,  அழகு, ஆகிய இவை எல்லாம் காலையிலும் மாலையிலும் காணப்படும்  மஞ்சள் நிறமுள்ள இளவெயில். இந்த உடலில் தங்கி உள்ள உயிரும் திறந்த வெளியில் ஏற்றப்பட்ட விளக்கு என்றே நினைத்து,  வாழ்நாளை வீணே கழிக்காமல்,  அறிவுத் தெளிவை அடைந்து,  உன் திருவடிகளில் அன்பு பூண்டு, காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் நீரையும் பூவையும் கொண்டு அன்புடன் வழிபட அருள் புரிவாய்.

          நீரிலே தோன்றுகின்ற குமிழானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால், எப்போது அது அழியும், எப்படி அழியும் என்று தெரியாது. அதுபோலவே, இந்த உடம்பானது தொடக்கத்தில் மிகமிக வனப்பாகவே இருக்கும். ஆனால், நாளாக நாளாக, நம்மை அறியாமலே முதுமை வந்துகொண்டே இருக்கும். அது எப்போது அழியும் என்பதும் தெரியாது.  எப்போதும் இருக்கும் என்று கருதியே, அதை அழகு செய்வதும், உண்டி முதலியவற்றால் அதை வலிமை பெறச் செய்வதுமாகவே இருக்கின்றோம். 

இவ்வாறாகத் திருமூல நாயனார் இவ்வுலக வாழ்வின் நிலையாமையினை மனத்தில் பதியும் வண்ணம் தெள்ளத் தெளிய உணர்த்திப் பின் வையத்துள் வாழ்வாங்கு வாழும் நெறியினை வகையுற அறிவுறுத்துகின்றார். இதுவே திருமூலர் காட்டும் வாழ்வியல் நெறி ஆகும்.

வாழும் நெறி

 

வாழும் நெறி

-----


"அரிது அரிது, மானிடர் ஆதல் அரிது;

மானிடர் ஆயினும், கூன்குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது;

பேடு நீங்கிப் பிறந்த காலையும்,

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்,

தானமும் தவமும் தான்செயல் அரிது;

தானமும் தவமும் தான்செய்வர் ஆயின்,

வானவர் நாடு வழிதிறந் திடுமே."

என்று ஔவைப் பிராட்டியார் அருளினார். உயர்ந்த மானிடப் பிறவியின் நோக்கம், ஞானமும் கல்வியும் நயத்தில் என்றும், தானமும் தவமும் புரிதல் என்றும் உணர்த்தி அருளினார். தானம் என்பது பிறருக்காகச் செய்வது. தவம் என்பது தனக்காகச் செய்வது. தானம் "எனது" என்னும் புறப்பற்று ஆகிய மமகாரத்தை அறுக்கும். தவம் என்பது "நான்" என்னும் அகப்பற்று ஆகிய அகங்காரத்தை அறுக்கும். அகப்பற்றும் புறப்பற்றும் அறுதலே மானிடப் பிறவியின் நோக்கம். மானிடப் பிறவியே பெறுதற்கு அரியது என்பதால், "பெறுதற்கு அரிய பிறவி" என்றார் திருமூல நாயனார். "பெறுதற்கு அரிய பிறவியைப் பெற்றும்" என்பார் அருணகிரிநாதர்.

பெறுதற்கு அரியது மானிடப் பிறவியை எடுத்து வந்த மக்கள், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, நல்ல கதியை அடைதல் வேண்டும். அதற்குச் சில நெறிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். 'எப்படியாவது வாழலாம்'  என்பதை விடுத்து, 'இப்படித்தான் வாழ வேண்டும்'  என்று உள்ளத்தில் உறுதி பூண்டு, வாழ்ந்து காட்ட வேண்டும். அதுவே மானிடத்தின் குறிக்கோள் ஆகும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை கெட்டுப் போகும். "குறிக்கோள் இல்லாது கெட்டேன்"  என்பார் அப்பர் பெருமான். உயர்ந்த தொண்டு நெறியைத் தமது குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த அப்பர் பெருமானே இவ்வாறு சொல்லிக் கொள்வாரானால், நமது வாழ்க்கை எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது சொல்லமாலே விளங்கும். 

நில்லாமை என்பதே நிலையாக இருக்கின்ற இந்த உலகில் நிலைபெற்று வாழவேண்டும் என்று எண்ணியவர்கள், தமது புகழ் நிலைக்கக் கூடிய வகையில் சில சிறந்த செயல்களைச் செய்துவிட்டு மாண்டு போனார்கள். "மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே" என்கிறது புறநானூறு. நிலையில்லாத இந்த உலகத்தில், தமது புகழ் நிலைத்து இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தம்முடைய புகழை நிலைநிறுத்தத் தமது உயிரையும் விட்டிருக்கின்றனர். அதே நேரத்தில், "துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர், இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின், தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே" என்றும் கூறுகிறது புறநானூறு. நெருங்க முடியாத பெரும் செல்வச் சிறப்பை உடைய செல்வர்கள், பசி என்று யாசித்து வருபவர்களுக்குத் தமது பொருளைத் தந்து உதவாத காரணத்தால், புகழுக்காகத் தமது உயிரையும் கொடுக்கும் பெருமை மிக்க சான்றோர் காட்டிய வழியில் செல்லத் தெரியாதவர்களும் இருக்கின்றார்கள.

முதலாவதாக, நமக்கு வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு உயர்ந்த குறிக்கோள்களை அடையப் பாடுபடும் பொழுது, அவ்வுயர்ந்த குறிக்கோள்களை அடைய முடியாமல் போனாலும் கவலையில்லை. முயல் வேட்டையாடி மனம் சோர்ந்து போவதைவிட, யானை வேட்டையாடித் தோற்றுப் போவது மேல் என்பார் திருவள்ளுவ நாயனார்.

"கான முயல் எய்த அம்பினில், யானை 

பிழைத்த வேல் ஏந்தல் இனிது" --- திருக்குறள்.

எனவே, உயர்ந்த குறிக்கோள்கள் நமது வாழ்க்கையின் இலக்காக அமைய வேண்டும். அப்பொழுதுதான் சில அரிய செயல்களை நமக்காகவும் சமுதாயத்திற்காகவும் ஆற்ற முடியும்.

"மனிதர்க்கு வயது நூறு அல்லது இல்லை;

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்;

ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்;

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்;

எழுபதும் போக நீக்கி இருப்பது முப்பதே;

அவற்றுள்

இன்புறு நாளும் சிலவே, அதாஅன்று

துன்புறு நாளும் சிலவே, ஆதலால்

பெருக்கு ஆறு ஒத்தது செல்வம், பெருக்கு ஆற்று

இடிகரை ஒத்தது இளமை,

இடிகரை வாழ் மரம் ஒத்தது வாழ்நாள், ஆதலால்

ஒன்றே செய்யவும் வேண்டும், அவ்வொன்றும்

நன்றே செய்யவும் வேண்டும், அந் நன்றும்

இன்றே செய்யவும் வேண்டும், அவ்வின்றும்

இன்னே செய்யவும் வேண்டும், அவ்வின்னும்

நாளை நாளை என்பீர் ஆகில், நாளை

நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்!

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்!".    --- கபிலர் அகவல்.

இதன் பொருள் ---

பிறந்த மனிதர்க்கு வாழ்நாள் என்பது நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லை. அவ்வாறு விதிக்கப்பட்ட வாழ்நாளில், ஐம்பது ஆண்டுகள் உறக்கத்தில் கழியும். பொருந்தி வந்த குழந்தைப் பருவத்தில் ஐந்து ஆண்டுகள் கழிந்து போகும். இளமைப் பருவமாகப் பதினைந்து ஆண்டுகள் கழியும். ஆக, இவ்வாறு எழுபது ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சி இருப்பவை முப்பது ஆண்டுகளே, அவ்வாறு எஞ்சி நின்ற அந்த முப்பது ஆண்டுகளுள்ளும், மகிழ்ச்சியோடு வாழ்வதும் சில நாள்களே. அதுவும் அல்லாமல், துன்பத்தை அடைகின்றதும் சில நாள்களே. தோன்றிச் சில நாள்களிலே குறைந்து போகின்ற நீர்ப் பெருக்கினை ஒத்தது செல்வம் ஆகும். நீர்ப் பெருக்கால் அழிந்து போகின்ற வலிமை அற்ற கரையைப் போன்றது, தேடிய செல்வத்தை அனுபவித்தற்கு உரிய இளமை என்னும் செழுமை, செல்வத்தோடு இருந்து வாழுகின்ற நாள்கள், இடிந்து போகின்ற வலிமை அற்ற கரையின் மேல் உள்ள மரங்களைப் போன்றது ஆகும், ஆதலினாலே, நீங்கள் ஒரு செயலைச் செய்ய வேண்டும். அந்த ஒரு செயலும் அறச் செயலாகவே செய்ய வேண்டும். அந்த அறச் செயலையும் இன்றைய நாளிலேயே செய்யவேண்டும். அதையும் இந்தப் பொழுதிலேயே செய்ய வேண்டும். அந்தப் பொழுதையும் விடுத்து, நாளைய பொழுது செய்வோம் என்று, இருக்கின்ற காலத்தை வீணாகக் கழிப்பீர்களானால், நாளைப் பொழுது என்பது நம்முடைய உயிர் நிலைத்திருக்கும் நாள்தானா என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. நாளை என்கின்ற அந்த நாள், நமது உயிரைக் கொண்டு போக வருகின்ற இயமனுடைய நாளாக இருக்கலாம் என்பதும் உங்களால் அறிந்து கொள்ள முடியாது.

வாழ்நாளைப் பயனுடையதாக ஆக்கிக் கொள்ளும் முயற்சி வேண்டும். ‘புகழும் இன்பமும் அறமும் ஆகிய இம்மூன்றும் சோம்பல் உடையாரிடம் தவறிக்கூட உண்டாவதில்லை’ என்று  முன்னோர் கூறினர்.

"இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்

அசைவுடன் இருந்தோர்க்கு அரும்புணர்வு இன்ம்" --- நற்றிணை.

"இம்மையிலே சிறந்ததாகிய புகழும், இல்லறத்தை ஆற்றுதலாகிய இன்ப வாழ்வும், மறுமைக்கு இன்பம் தருதலாகிய கொடையும் என்னும் மூன்றும், ஒருவனுக்கு இன்றியமையாதன ஆகும். செயல் அற்றவராகச் சோம்பி இருந்தோர்க்கு இம்மூன்று பயன்களும் அரிதாகக் கூட வந்து அடைவதில்லை”

எனவே, வாழ்வியல் நெறிகளைச் செம்மையாக வைத்துக் கொள்ள விரும்புவோர், சோம்பியிருத்தல் தகாது என்பது முதலாவதாக ஒருவர் கற்க வேண்டிய பாடமாகும். இந்த உலகில் ஒருவர் உயிர் வாழ உறுதுணையாய் அமைவது உணவு. எந்த ஒருவருடைய முயற்சியும் உணவைத் தேடுவதிலேயே அமைவதனைக் காணலாம். வறுமை காரணமாக உண்ண உணவின்றி வருவோர்க்கு ஒரு பிடி உணவாவது கொடுத்து உதவுதல் வேண்டும். "யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி" என்றார் திருமூல நாயனார். பிறந்த நாள்முதல் தூராத குழியாகிய இந்த அவல வயிற்றை வளர்ப்பதற்கு அல்லும் பகலும் உணவு தேடி வாழுகின்றோம். வாழ வழியற்றவர்க்கு, நம்மிடத்து உள்ள உணவில் ஒரு பிடியையாவது கொடுத்து உண்ணுதல் வேண்டும். "பிடி சோறு கொண்டு இட்டு உண்டு இரு" என்றார் அருணகிரிநாதர்.

"பகுத்து உண்டு, பல்உயிர் ஓம்புதல், நூலோர்\

தொகுத்துவற்றுள் எல்லாம் தலை"              --- திருக்குறள். 

நம்மிடத்து உள்ளதைப் பகிர்ந்து கொடுத்து உண்டு பல உயிர்களையும் இறவாதபடி காத்தல் என்பது, அறநூலோர் தொகுத்துக் கூறிய நற்செயல்கள் எல்லாவற்றிலும் தலையானது ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

எனவே, கிடைத்ததைப் பலருக்கும் பகிர்ந்து உண்னக் கொடுத்து வாழ வேண்டும். சோம்பல் கூடாது.  எவரையும் வெறுக்கக்கூடாது; சான்றோர் அஞ்சும் அறம் சாராத செயல்களைச் செய்யக் கூடாது. நாளும் தல்ல செயல்களையே நாடிச் செய்ய வேண்டும். எவ்வளவுதான் இலாபம் கிடைப்பதாயினும் பழிச் செயல்களைச் செய்யக்கூடாது. அத்தகைய மனவுறுதி அமைதல் வேண்டும். தன்னலம் பாராமல் பிறர் நலம் பேணும் பெற்றியராகத் துலங்க வேண்டும்’ என்பது புறநானூறு காட்டும் வாழ்வியல் நெறி ஆகும். இந்த வாழ்வியல் நெறியை அடிப்படையாகக் கொண்டே இந்த உலகம் இன்னமும் ஆழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

"உண்டால் அம்ம! இவ்வுலகம், இந்திரர்

அமிழ்தம் இயைவது ஆயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகு உடன் பெறினும் கொள்ளலர்; அயர்வு இலர்;

அன்ன மாட்சி அனையர் ஆகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கு என முயலுநர் உண்மை யானே.". --- புறநானூறு.

இதன் பொருள் ---

இந்த உலகம் எவ்வளவோ காலமாக அழியாமல் இயங்கிக் கொண்டு இருக்கிறதே! இதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்றால், தேவர்களுக்கும், தேவர்கள் தலைவன் ஆகிய இந்திரனுக்குமே கிடைக்கக் கூடிய அமுதமே கிடைத்தாலும், அதைத் தாமே உண்டு பயன் அடைந்துகொள்ளலாம் என்று எண்ணும் மனம் இல்லாதவர்கள்; பிறரிடம் சினம் கொள்ளாதவர்கள்; சோம்பல் இல்லாதவர்கள்; பிறர் கண்டு அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சி வாழ்பவர்கள்; புகழுக்கு உரிய செயல் என்றால், அதற்காகத் தமது உயிரையும் கொடுப்பவர்கள்; அதேசமயம் பழிக்கு இடமாகிய செயல் என்றால், அதற்குப் பரிசாக இந்த உலகமே கிடைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத உயர்ந்த பண்பினை உடையவர்கள்; எந்நேரமும் மனத் தளர்வு இல்லாதவர்கள். இத்தகைய குணநலன்கள் எல்லாம் நிரம்பப் பெற்று, தனக்கு என வாழும் தன்னலம் இல்லாத, பிறர் வாழ்வதற்காகத் தான் வாழும் பொதுநலம் பேணுபவர்கள் இன்னமும் இந்த உலகில் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது.

இதைத்தான், "புண்பு உடையார்ப் பட்டு உண்டு உலகம், அது இன்றேல் மண் புக்கு மாய்வதுமன்" என்றார் திருவள்ளுவ நாயனார். பண்பு உடையவர்கள் இருப்பதால் இந்த உலக இயக்கம் இருந்துகொண்டு இருக்கிறது. இல்லையானால், மண்குழியில் அமிழ்ந்து முற்றும் அழிந்துபோகும்.

சாதி, சமயம் ஆகிய வேறுபாட்டு உணர்வுகளால் மனித இனத்தை வேறுபடுத்திப் பார்க்காமல், மனிதகுலம் ஒன்றேதான் குலம், மனிதகுலம் முழுமைக்கும் ஒன்றேதான் கடவுள் என்னும் பொதுமைப் பண்பு உருவாக வேண்டும். அப்போது, அன்பு என்ற ஒப்பு உயர்வற்ற பண்பே மனிதகுலத்தை ஆட்கொள்ளும். எனவேதான்,  "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்று முழங்கினார் திருமூல நாயனார்.

"அல்லா என்பார் சிலபேர்கள்;

அரன் அரி என்பார் சிலபேர்கள்;

வல்லான் அவன்பர மண்டலத்தில்

வாழும் தந்தை என்பார்கள்;

சொல்லால் விளங்கா  நிர்வாணம்

என்றும் சிலபேர் சொல்வார்கள்;

எல்லாம் இப்படிப் பலபேசும்

ஏதோ ஒருபொருள் இருக்கிறதே!

"எந்தப் படியாய் எவர் அதனை

எப்படித் தொழுதால் நமக்கென்ன?

நிந்தை பிறரைப் பேசாமல்,

நினைவிலும் கெடுதல் செய்யாமல்,

வந்திப்போம்; அதனை வணங்கிடுவோம்;

வாழ்வோம்; சுகமாய் வாழ்ந்திடுவோம்;"

என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.

இவ்வாறு இறை நம்பிக்கையுடன் வாழத் தலைப்படும் நேரத்தில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய வாழ்வியல் கெறி எதுவெனச் சிக்திக்கும் பொழுது ஈட்டும் செல்வத்தினைப் பிறர்க்குப் பகிர்ந்து வாழும் தன்மையை மேற்கொள்ள வேண்டும் என்பது தெளிவாகின்றது.

ஏனெனில், கடல் சூழ்ந்த இவ்வுலகை ஒரு வெண்கொற்றக் குடையின்கீழ் ஆளும் பேரரசனாயினும், இரவும் பகலும் கண்ணுறங்காமல் விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி அறிவற்ற ஒருவனாயினும், இருவரும் உண்பது நாழி அரிசிச் சோறுதான். உடுப்பவை இடுப்பில் ஒன்று, தோளில் ஒன்று ஆக இரண்டேதான். மற்ற பிற வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களும் இவ்வாறேதான். எனவே செல்வத்தை ஈட்டுவதன் பயன், இல்லாதவர்க்கு ஈந்து உதவுவதே ஆகும். அப்படி இல்லாமல் நாம் மட்டும் அனுபவித்து வாழ்வோம் என்று இருந்தால் அதனால் வரும் கேடுகள் பல உண்டு என்றும் நவில்கிறது புறநானூறு.

"தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்குங் கல்லா ஒருவற்கும்

உண்பது நாழி, உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே;

செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே தப்புந பலவே."  --- புறநானூறு.

நம் வாழ்க்கையின் குறிக்கோள் பிறருக்கு உதவுவதாகவே அமைய வேண்டும். பொருளால்தான் உதவவேண்டும் என்பது இல்லை. மனம், மொழி, மெய் என்னும் முக்கரணத்தாலும் நலத்தை நினைக்கலாம், நல்லதைப் பேசலாம். நல்லதைச் செய்யலாம். இந்த எண்ணம் உண்டாகிவிட்டால், பிறருக்கு எவ்வுகையாலும் உதவ வேண்டும் என்ற எண்ணம் தன்னாலேயே வந்துவிடும். அதுதான் சான்றோர் கண்ட வாழ்வியல் நெறி.  அவ்வாறு ஒருவேளை உதவ முடியாமல் போனாலும், பிறருக்குத் தீங்காவது செய்யாமல் இருத்தலே சிறப்பாகும். அதுவே எல்லோராலும் விரும்பப்படுவது ஆகும். அதுவே நல்ல கதிக்கு அழைத்துச் செல்லும் பாங்கு உடையதாகும். 

"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் 

அல்லது செய்தல் ஒம்புமின், அதுதான் 

எல்லோரும் உவப்பது அன்றியும் 

நல்லாற்றுப் படுஉம் நெறியும் ஆர் அதுவே."   --- புறநானூறு.

இத்தகைய மனத் தெளிவைப் பெற்றவுடன் மனிதன் விரைந்து மேற்கொள்ள வேண்டிய செயல்கள் பலவாகும். உலகியல் உரிமையை உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படுவது அவற்றுள் ஒன்றாகும்.

சேற்றிலே பிறந்து வளர்ந்து வந்திருக்கும் தாமரை மலரில், ஒளி பொருந்திய நூற்றுக்கணக்கான இதழ்கள் ஒரே மாதிரியாகக் காணப்படும். அதுபோல ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியிலே பிறந்து வாழ்ந்தவர்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தால், அவர்களிலே பிறரால் புகழப் பெற்றவர்கள் ஒரு சிலராகத்தான் அமைவார்கள். தாமரையிலை போலப் புகழ் இன்றி மாண்டவர்களே பலராக இருப்பர். புலவர்களின் பாடல்களைப் பெற்ற புகழுடையவர்கள் தாம் ஆற்றும் கடமைளைச் குறைவறச் செய்து முடிப்பர். அதன் பயனாக வானத்திலே ஒட்டுவான் இல்லாத வானவூர்தியிலே ஊர்ந்து இன்புறும் பெரும் பொருளைப் பெற்று இன்புறுவர்.

இவ்வுலகிலே சந்திரன் ஒர் உண்மையை விளக்கிக் காட்டிக் கொண்டே திரிகின்றது. ஒருவனுக்குச் செல்வம் தேய்ந்து போவது உண்டு; பெருகுவதும் உண்டு; அடியோடு அழிந்து போவதும் உண்டு; மீண்டும் பிறப்பதும் உண்டு என்ற உண்மையைச் சந்திரன், கல்வி அறிவு இல்லாதோரையும் உணர்த்மு கொள்ளுமாறு தன் செய்கையால் வெளிப்படுத்துகின்றது. 

ஆதலால், இந்த உலகிலே ஒன்றைச் செய்ய வல்லவராயினும் சரி; வல்லமை அற்றவராயினும் சரி; வறுமையால் வாடி வருந்தி வந்தோர் யாராயினும், அவர்கள் துன்பத்தைக் கண்டு இரங்க வேண்டும்; அவர்களுடைய வயிற்றுப் பசியைப் பார்த்து. அவர்களிடம் இரக்கம் காட்டி, அவர்களுக்கு உதவி செய்யும் தன்மையுடையவர்கள் ஆக வேண்டும். இதுதான் வாழ்வியல் நெறி என்கிறது புறநானூறு.

"சேற்றுவளர் தாமரைப் பயந்த ஒண்கேழ்

நூற்றிதழ் அலரின் நிரைகண்டு அன்ன

வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து

வீற்றிருந் தோரை எண்ணுங் காலை,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே,

மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே,

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்

வலவன் ஏவா வான வூர்தி

எய்துப என்ப தம்செய்வினை முடித்து எனக்

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி!

தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்

மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்

அறியா தோரையும் அறியக் காட்டித்

திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,

வல்லார் ஆயினும் வல்லுநரு ஆயினும்

வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி

அருள வல்லை ஆகுமதி, அருளுஇலர்

கொடாமை வல்லர் ஆகுக,

கெடாத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே."   --- புறநானூறு.

மேலும், வாழ்வியல் நெறியாகப் பின்வரும் நற்பண்பு ஒன்றும் முன்நாளில் பாராட்டப் பெற்றது. “தம்மால் கொடுக்க முடிந்த பொருளை முடியும் என்று சொல்லிக் கொடுப்பதும், தம்மால் கொடுக்க முடியாத பொருளை முடியாது என்று மறுத்து விடுவதும் ஆகிய இரண்டு பண்புகளும் நற்பண்புகள்தாம். உதவி செய்யும் தன்மையோடு கூடிய நட்பின் தன்மைதான். இதுபோன்றே தன்னால் முடியாததை முடியும் என்று சொல்லுதலும், தன்னால் செய்யக் கூடியதை முடியாது என்று மறுத்தலும் ஆகிய இந்த இரண்டு பண்புகளும் தீயபண்புகள் தாம். இந்தத் தீயபண்பு, தன்னிடம் உதவி நாடி விரைந்து வந்த இரவலர்களைத் துன்புறுத்துவதாகும். அது மட்டுமல்லாமல் ஈவோரின் புகழ் தேய்ந்து போவதற்கான வழியும் ஆகும்" என்றும் வாழ்வியல் நெறியினை வற்புறுத்துகிறது புறநானூறு.

"ஒல்லுவது ஒல்லும் என்றாலும், யாவர்க்கும் 

ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும் 

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே; 

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ் குறை படுஉம் வாயில்." --- புறநானூறு

இதுவரை கூறியவற்றைக் கொண்டு பார்த்தால், வாழ்வியல் நெறிகள் என்று சிலவற்றை நமது முன்னோர் நமக்கு வகுத்து வைத்துச் சென்றிருக்கின்றனர் என்பது புலப்படும். அவற்றைக் கடைப்பிடித்து, வாழ்வாங்கு வாழ்ந்து ஈடேறுவதும், நமது சந்ததியினருக்கும் வாழும் வழியைக் காட்டி அவர்களையும் ஈடேற வைப்பதும் நமது கடமை ஆகும்.



கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே

 கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே

-----

மதம் என்னும் சொல்லுக்கு, கருத்து, கொள்கை, அறிவு, போதனை, பெற்றதைப் பெரிதாக மதிப்பது என்ற பொருள்கள் உண்டு. கருதுவது கருத்து, கொள்ளுவது கொள்கை, அறிவது அறிவு, போதிப்பது போதனை ஆகும்.

உலகில் பலவகையான மதங்கள் உண்டு. நமது தமிழகத்திலும் பலவகையான மதங்கள் இருந்தன. அவைகளின் கொள்கை வேறு வேறாக இருந்தது. கொள்கைகளால் பிணங்குவது மதவாதிகளின் இயல்பு. எனவேதானே, "சமயவாதகிள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த சமயவாதிகளைப் பார்த்து, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூல நாயனார். சமயகோடிக் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது" என்று தாயுமான அடிகளாரும், "பேர் உற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம் பேய்ப்பிடிப்பு உற்ற, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது, உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போர் உற்று இறந்து வீண் போயினார்" என்று வள்ளல்பெருமானும் கூறி அருளினர்.

எனவே, வாதம் புரிந்து, உண்மைப் பொருஉளை உணராமல், வாழ்நாளை வீணாக்குதல் கூடாது. சமயங்களின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அப்பர் பெருமானுக்கு அவ்வாறு உணர்ந்து கொள்ளத் திருவருள் வாய்க்காமையால், சைவத்தை விடுத்து சமணத்தைச் சார்ந்தார். "சமயங்கள் ஆனவற்றின் நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால், கொல்லாமை மறைந்து உறையும் அமண் ணமயம் குறுகினார்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். மணிமேகலை மாதவன் வடிவத்தில் வஞ்சி நகரில் இருந்து, பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர் கடைப்பிடியாகக் கொண்டு உள்ள சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி, அவரிடத்தில் சென்று, அளவைவாதி முதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரையும் கேட்க, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை உரைத்தனர் என்று மணிமேகலைக் காப்பியத்தில் "சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை" மூலமாக அறியக் கிடக்கிறது. சமயச்சார்பு உடையவர்களிடத்தில் இந்த மனப்பாங்கு அமையாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ளும் வேட்கை உடையோர்க்கே இந்த நிலை வாய்க்கும்.

"பூதவாதம்" என்னும் சமயம் "பொருள்முதல் வாதம்" என்றும் "உலகாயதம்" என்றும் சொல்லப்படும். இந்த நாத்திகவாதம் என்பதும் ஒரு மதமாகவே இருந்தது. அது இப்போது உருவானது அல்ல என்பதை அறிதல் வேண்டும்.

பூதவாதி தமது கருத்தைச் சொன்னதாக "மணிமேலை" என்னும் காப்பியத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது

"தாதகிப் பூவும் கட்டியும் இட்டு

மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு,

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்

அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின்

வெவ்வேறு பிரியும், பறை ஓசையில்கெடும்"

இதன் பொருள் ---

ஆத்திப் பூவையும் கருப்புக் (வெல்லக்) கட்டியையும் கூட்டி, வேறு பிற பொருள்களையும் கலந்தபோது, களிப்பினை உண்டாக்குகின்ற கள் உண்டானது போல, பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும். அவ்வாறு தோன்றிய உணர்வும், அந்த அந்தப் பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து,  வேறுவேறாகப் பிரிந்து, பறையில் எழுந்த ஒசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் பூதமுதலொடு ஒன்றிவிடும்.

ஆத்திப் பூவினோடு பிற பொருள்களைக் கலந்தால், கள் உண்டாகும், அதனால் களிப்பு உண்டாகும் என்றது, பூதங்களின் கூட்டுறவால் உணர்வு பிறக்கும் என்பது உலகாயதர் கொள்கை. மேலும் காண்க.

"உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்,

உயிர் இல்லாத உணர்வுஇல் பூதமும்,

அவ்வப் பூத வழி அவை பிறக்கும்,

மெய்வகை இதுவே; வேறுஉரை விகற்பமும்

உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே;

கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்,

இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே,

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்"

இதன் பொருள் ---

உயிர்த் தோற்றத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதக் கூறும், உடம்பின் ஆக்கத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத அப்பூதக் கூறுகள், அவ்வப் பூதங்களின் வழியாகவே தோன்றும். உண்மைநெறி இதுவே ஆகும்.  இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவே ஆகும். காட்சி அளவை அல்லது, வேறே கருத்து முதலியன நிலைபெறாமையின் அவற்றைக் கொள்ளவில்லை. இவ்வாழ்வும் இவ்வாழ்வில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிந்து போவன. மறுபிறப்பு உண்டு என்றும், இப்பிறப்பில் செய்யப்படும் வினைப் பயனை மறுபிறப்பில் அனுபவித்தல் வேண்டும் என்றும் கூறுவது பொய் (என்று பூதவாதி கூறினானாக).

எனவே, கடவுள் இல்லை என்று சொல்வதும் ஒருவகைச் சமயமே ஆகும். இதற்கு "சார்வாகம்" என்று ஒரு பெயரும் உண்டு. இது நாத்திக வாதம் ஆகும். கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து போவது என்பது. 

உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை. 

இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடுவிடம்" என்றார் மணிவாசகப் பெருமான். 

மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதவர்கள்,  மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும், தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பும் உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.

ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.  

இன்னும் பிற வாதங்களும் உண்டு. நான் என்னும் புத்திக்கு விடயமாய் இருப்பது ஆன்மா. நான் மனிதன்,  நான் பார்ப்பான்,  நான் பருத்தேன், நான் இளைத்தேன் என்னும் அனுபவத்தினால், தேகத்திலேயே நான் என்னும் புத்தி உண்டாவதால், தேகமே ஆன்மா. ஆபத்து நேர்ந்த போது தேகத்திலேயே அபிமானம் உண்டாவதால், அதைவிடப் பிரியமான பொருள் வேறு இல்லை. தேகத்தில் உள்ள விருப்பத்தின் பொருட்டே, பிறரிடத்து விருப்பம் உண்டாகின்றது. எனவே, உடம்பைக் காப்பாற்றுதல், அலங்கரித்தல் முதலியனவே புருஷார்த்தங்கள். ஆகாயம், ஊழ், கடவுள், பிறவி என்பது இல்லை. பூதங்களில் கூட்டுறவால் உண்டாவது உடம்பு. இதன் மரணமே மோட்சம். இது தேகான்மவாதியின் மதம்.  காணப்படும் இந்த உடம்பு இந்திரியங்கள் இருந்தால் இருக்கின்றது. இல்லாவிட்டால் செத்துப் போகின்றது. எனவே, உடலுக்கு வேறாக உள்ள, இந்திரியமே ஆன்மா என்பது இந்திரியான்மவாதியின் மதம். பிராணவாயு இருந்தால் இந்த உடம்பு இருக்கின்றது. அது நீங்கிப் போனால் அழிகின்றது. எனவே, உடம்பு நிலைத்து இருக்கக் காரணமான பிராணனே ஆன்மா என்பது பிராணான்மவாதியின் மதம். பிராணனுக்கு உணர்ச்சி இல்லை. மனமே ஆன்மா என்பது மனவான்மவாதியின் மதம். மனமானது புத்தியின் வசமாய் இருக்கின்றது. புத்தியின் ஆகாரமே மனம். ஆதலால், புத்தியே ஆன்மா என்பது புத்தியான்மவாதி மதம்.

      அவை எல்லாம் உண்மை அல்ல. மனத் தூய்மைக்கு அவை வழி வகுக்காது. கயமைத் தனத்திற்கே காரணம் ஆகும் என்பதால், கடவுள் இல்லை  என்று  கூறுபவர்களின்  கூட்டுறவு  உண்டாகாதபடி காத்து அருள் புரியுமாறு, தருமமிகு  சென்னையில்  கந்தகோட்டத்தில்  எழுந்தருளி உள்ள  முருகப் பெருமான்  மீது வள்ளல்பெருமான்  பின்வருமாறு பாடினார்.

"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

பசுஏது, பாசம்ஏது,

பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,

மனம்விரும்பு உணவு உண்டு, நல்

வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

கலந்து மகிழ்கின்ற சுகமே

கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!"

இதன் பொருள் ---

மேன்மை பொருந்திய சென்னைக் கந்தகோட்டத்தில் எழுந்தருளும் கந்தவேளே! தூய மணிகளுள் சைவமணியாம் சண்முகத் தெய்வ மணியே!  பரம் என்பது யாது?  வினையாவது யாது? வினையின் பயன் என்பது யாது? பதி, பசு, பாசம் என்பன யாவை? பத்தி ஆவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது? அருள் என்பது யாது? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைப்படுகின்ற உணவை உண்டு, நல்ல ஆடை உடுத்து, இளமகளிரை நாடி அடைந்து, மணம் வீசும் பூக்களைச் சூடிப் பல்வகையாக விளையாடி, கைகளை அம்மகளிர் மேல் செலுத்தி அவர்களுடைய முலைகளைப் பற்றி, உடம்போடு உடம்பு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம். இதுவே வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதவாறு அருள் புரிவாயாக.

உலோகாயதன் சமய நடை எப்படிப்பட்டது என்பதை தாயுமான அடிகளார் கூறுமாறு காண்க. நடை என்பதன் பொருள் ஒழுக்கம் ஆகும்.

"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு

        விழிகொண்டு மையல்பூட்டும்

      மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட

        மேல்வீடு சொர்க்கம் என்றும்,

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்

        பொய்வேடம் மிகுதிகாட்டி,

      பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்

        போக்கிலே போகவிட்டு,

தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,

        தரணிமிசை உலோகாயதன்

      சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த

        சமரச சிவாநுபூதி

மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்

        வாழ்வித்த ஞானகுருவே!

      மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்

        மரபில்வரு மௌனகுருவே."

இதன் பொருள் ---

தோன்றி நெடிது நிற்பதுபோலக் காட்டி விரைய மறையும் தன்மை வாய்ந்த மின்னலுக்கு ஒப்பான, நிலையில்லாத பொய்யுடலை அழியாது என்றும், நிலைநிற்பது என்று மைதீ ட்டப்பட்ட கண்களைக் கொண்டு காமுகர்களை மயக்கவலையில் விழும்படி செய்யும் பெண்ணியலார் இன்பமே நிலையான பேரின்பம் என்றும், அப் பெண்களோடு கூடிப் பகட்டாய் வாழ்வதற்கு அமைக்கப்பட்ட மாடமாளிகை, மேல்வீடு நிலாமுற்றம் முதலிய பல டமைந்த வளமையான மனையே கிடைத்தற்கரிய இன்ப ஒளியுலகம் என்றும், இன்பத்திற்கு ஏதுவாகிய பொன்னையும், அப் பொன்னால் தேடப்படும் பண்டங்களாகிய பொருள்களையும் அழியாது வளர்ந்து பெருகும் நிலைப்பொருள் என்றும் மிகவிரும்பி, தமது புன்மையான பொய்க்கோலத்தின் மிகுதிப்பாட்டை மேற்கொள்ள வெளிப்படுத்தி, காம மயக்கில் விட்டில் பூச்சி என வீழ்ந்த ஆடவர் தங்கட்கு இன்றியமையாத பொறுமையும், சிறந்த அறிவும்ன, செருக்கு அற்று நான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்குதலாகிய துறவும், வாழ்வில் பெறத்தக்க ஊதியமாகிய ஈகை முதலிய நற்பண்புகளும் சிறிதும் வந்து பொருந்த இடங்கொடாது மனம்போன போக்கிலே போகவிட்டு, தனக்குத் தானே இணையான உலோபத் தன்மை எனப்படும் பொருட்பற்று ஆகிய பாழான பேய் பிடித்யது ஆட்ட ஆடிட்ட, இவ்வுலகில் உலகாயதனுடைய சமயக் கட்டில் சாராமல் மறை முடிபும் என்னும் வேதாந்தம், திருமுறை முடிபு என்னும் சித்தாந்தம் ஆகியவற்றின் ஒருங்கியைந்த சிவனடிப் பேரின்பத் துய்ப்பு என்னும் நிலைபெற, ஒப்பில்லாத உபதேசம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு அடியேனைத் தடுத்தாட்கொணடு இறவா இன்ப) அன்பினால் ஆட்கொண்டு நிலையான வாழ்வில் வாழ்வித்தருளிய குருநாதரே! (வேதாந்தம் - மறை முடிபு. சித்தாந்தம் - முறை முடிபு. சமரசம் - இயைபு.)

உலகாயதர் கொள்கை பற்றிப் பின்னும் அறியலாம்.

"மதிநிலா நுதலாரோடு மணிநிலா முன்றில் ஏறி

முதிர்நிலா எறிப்ப, செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப, மொய்த்த

கதிர்நிலா வடங்கொள் கொங்கை, கண்கள், மார்பு அகல மூழ்கும்

புது நிலாவிய நன்போகம் விடுவர் புன்சமயத்தோரே."  --- சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொருள் ---

பூரண நிலவு போல விளங்கும் நெற்றியினை உடைய மாதரோடும் கூடி, ஒளியை உடைய முற்றத்தில் சென்று ஏறி, பூரணச் சந்திரன் ஒளிவிட்டு விளங்க, அவரது சிவந்த வாயில் புன்சிரிப்புத் தோன்ற, செறிந்த ஒளிமிக்க முத்துவடத்தைத் தாங்கிய முலைக்கண்கள் தமது மார்பகலத்தே மூழ்கும்படி அழுந்தி அனுபவித்துல, நாள்தோறும் புதுமை தங்கிய நல்ல அனுபோகத்தைக் கைவிடுவர் புன்மையான சமயநெறியினைச் சார்ந்தோர்.

"ஊடுவது, உணர்வது, உற்ற கலவி மங்கையரை உள்கி

வாடுவது, அடியில் வீழ்ந்து வருந்துவது, அருந்தவம்; பின்

கூடுவது உணர்வு கெட்டுக் குணம் எ(ல்)லாம் வேட்கையே ஆய்

நீடுவது இன்ப முத்தி; இத்தில் நின்றார்கள் முத்தர்." --- சிவஞானசித்தியார், பரபக்கம்

இதன் பொருள் ---

புதிதாகக் கூடிக் கலவியில் மாதரை நினைத்து அவர்கள் தம்முடன் ஊடுவதானால் அவரை ஊடல் தீர்ப்பது பொருட்டாக உள்ளம் தளர்தலும், அவர்கள் காலடிகளில் வீழ்ந்து வருந்துதலுமே அரிதாகச் செய்யுலம் தவம் ஆகும். அப்படித் தவத்தில் நின்றபின், அம்மகளிரோடு தன் அறிவு கெட்டுக் கூடுவது முத்தி ஆகும். இந்திரியங்கள் எல்லாம் ஒருமைப்பட விருப்பம் நிலைப் பெறுவது முத்தி இன்பம் ஆகும். இவ்வழியில் நின்றவர்களே முத்தராவர்.        

உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் இத் திருப்புகழில் அறிவுறுத்துமாறு காண்க.

"விழு தாது எனவே கருதாது, உடலை

     வினை சேர்வதுவே ...... புரி தாக,

விருதாவினிலே உலகாயதம் மேல்

     இடவே, மடவார் ...... மயலாலே,

அழுது ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்

     அடைவே கழியாது, ...... உனை ஓதி

அலர் தாள் அடியேன் உறவாய் மருவ,

     ஓர் அழியா வரமே ...... தருவாயே."

இதன் பொருள் ---

     விழுகின்ற தாது (சுக்கிலம்) தான் இந்த உடல் என்று கருதாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விருப்பம் கொண்டு, வீணாக (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் அறிவு மேலிட, பெண்களின் மேல் ஆசைமயக்கத்தால் அவநிலையை அடைந்து கெட்டுப் போகும்படியாக, வாழ்நாள் முழுவதும் கழிந்து போகாமல்,  தேவரீரது திருப்புகழை ஓதித் துதித்து, அன்றலர்ந்த தாமரை போன்ற உமது திருவடிகளே எனக்கு உறவாகக் கலந்து இருக்க, ஒப்பற்ற அழியா வரத்தினைத் தந்து அருள்வாயாக.

    உலோகாயதன் நிலை குறித்து அருணகிரிநாதர் மேலும் ஒரு திருப்புகழில் கூறுவதும் காண்க.

"இலகிய வேலோ? சேலோ? ஒளிவிடு வாளோ? போதோ?

     எமன்விடு தூதோ? மானோ? ...... விடம் ஈதோ?

என விழி கூறா வாரா அரிவையர், தோள் ஊடு ஆடா

     இறுதியில் வேறாய், மாறா ...... நினைவாலே,

பலபல கோளாய், மாலாய் உழலும் அதானால், வீணே

     படிறு சொல் ஆகா, உலோகா ...... யதன் ஆகி,

பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே,

     பணி தியில் மூழ்கா, மாயா ...... விடுவேனோ?"

இதன் பொருள் ---

விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக் கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி யாருக்கும் ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? 

மணிவாசகப் பெருமானும் இதனைத் தமது திருவாசகத்தில் பின்வருமாறு காட்டினார்...

"மிண்டிய மாய வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து

உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்

கலாபே தத்த கடுவிடம் எய்தி,"

முன்னர்க் குறிப்பிட்டது போல, உலோகாயதம் என்பது, காட்சியே அளவை என்றும், பூதங்கள் நான்கே என்றும், உடம்பே ஆன்மா என்றும், மறுபிறவியும் கடவுளும் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும் சொல்லும் மதம். பாம்பு ஒளி உடையது. ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி உடையது. ஆனால், தீமையுடையது. விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப் "பாம்பு" என்றும், அதன் பயனைக் "கடுவிடம்" என்றும் கூறினார்.

எனவே, நாத்திக வாதமும் ஒரு மதமாகவே இயங்கி வந்தது, இயங்கி வருகிறது. இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கின்றான், புறத்திலும் இருக்கின்றான் என்று கொள்வோருக்கு அவரவர் உள்ளத்திலும், புறத்திலும் இருக்கின்றான். உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்பாருக்கும் அப்படியே இல்லாத பொருளாகே மறைந்து பின்னர் விளங்குவான். 

இல்லை என்பதன் உண்மைப் பொருள், உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனால் பெறக்கூடிய நன்மை ஏதும் இல்லை என்பதே.

"உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே."  --- திருமூலர்.

இல்லை என்று ஆகிவிட்ட ஒரு பொருளை இல்லை என்று நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. உள்ளது என்று சொல்லுகின்ற பொருளைத் தான் இல்லை என்று மறுக்கின்ற வாதம் எழும். "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது சற்காரிய வாதம். நாத்திகவாதம் என்னும் மதச் சார்பும் ஒருவகை மதச்சார்பே ஆகும். மதச்சார்பு இன்மை என்பது, தாம் கொண்ட கொள்கையைப் பிறர் மீது திணிக்காமல் இருப்பதும், பிறரையும் தம்மைப் போல மனிதர்தாம் என மதித்து அன்பு செய்து, அவரது கொள்கைக்கும் மதிப்புத் தருவதும் ஆகும்.




சமயப் பொதுமை

 


சமயப் பொதுமை

-----

மனிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டுகிறான். துன்பத்தை வேண்டுவது இல்லை. ஆனால் எல்லோரும் இன்பம் அடைகிறார்களா என்றால், அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தையின் கண்ணுக்கு கண்ணாடித் துண்டு அழகாகத் தெரிகிறது. அதைக் கையில் எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக் கொண்டு இரத்தம் வந்து கத்துகிறது. முதலில் எடுக்கும்போது அதனால் துன்பம் உண்டாகும் என்று குழந்தைக்குத் தெரியாது. முன் அனுபவமும் அறிவும் இல்லாமையினால் உடைந்த கண்ணாடியை எடுத்துக் கீறிக்கொண்டு துன்பம் அடைகிறது. துன்பம் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் இல்லை. துன்பம் அடையும் வகையில் அதன் அறியாமை அதனைச் செலுத்துகிறது. அதுபோலவே மனிதன் துன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இல்லை. அவன் எப்போதும் இன்பமே வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அது எங்கே கிடைக்குமென்று அறியாமையினால் துன்புறுகின்றான். இன்பம் கிடைக்குமென்று எதை எதையோ நினைந்து எண்ணி ஏமாந்து, தான் நினைத்தபடி முடியாமல் துன்பம் உண்டாவதைக் காண்கிறான். 

சில பண்டங்கள் நாவுக்கு இன்பமாக இருக்கின்றன. ஆனால், உடம்புக்குக் கேடு விளைக்கும். ஐந்து இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பம் எல்லாம் அப்போதைக்கு இன்பம் என்று தோன்றினாலும் அவற்றால் விளைகின்ற துன்பம் மிகப் பெரிது. மனிதன் இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பத்தை உண்மை இன்பம் என்று கருதி ஏமாந்து போகிறான். அப்போதைக்கு இன்பமாகத் தோன்றுவனவற்றைச் சிற்றின்பம் என்று சொல்வார்கள். ஐந்து பொறிகளின் வாயிலாகக் கிடைக்கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின்பந்தான். சிற்றின்பம் என்ற பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. 

இனிப்பு என்று ஒன்றைச் சொன்னால், மற்றவை கசக்குமோ என்ற எண்ணம் தோன்றும். அதுபோலவே, சிற்றின்பம் என்ற பெயரே, பேரின்பம் என்று மற்றொன்று இருப்பதை உணர்த்தும். விளையாடிக் கொண்டு இருப்பவன் சிறிய பையன்  என்றால், பெரிய பையன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவினாலும் ஆற்றலினாலும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிறார்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சிகளே. நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சிகளைச் செய்தும் இந்த இன்பத்தை அடைகிறோம்.  இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்? என்று தோன்றும். நெடுநாளைக்கு இந்த இன்பம் நில்லாமல், பின்னாலே துன்பம் தரும் வகையில் அமைந்திருப்பதனால் இது சிற்றின்பம் ஆகிறது. இந்த இன்பம் பொய்யான இன்பம்; போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாறாமல், குறையாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் உண்மையில் இன்பம் ஆகும்.

அந்த இன்பத்தை அடைவது எப்படி என்பதுதான் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொல்வதைக் காதாலே கேட்கிறோம். மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாவமையால் ஐயம் பிறக்கிறது. "இறைவன் இருக்கிறான். அவன் திருவருள் செய்வான். அந்தத் திருவருளால் நிலையான இன்பத்தைப் பெறலாம்"  என்று ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான பேர்கள் பலகாலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். நாம் நேரிலும் கேட்கிறோம். இப்படிச் சொன்ன பெரியவர்கள் சாதி,  சமயம், மொழி, நாடு என்ற வரையறைகளைக் கடந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் தோன்றுவார்கள். பலகாலமாகப் பல பெருமக்கள் பேரின்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாலும் நமக்கு நம்பிக்கை உண்டாவது இல்லை. பிறர் மதிக்கவேண்டுமே என்று கருதி பேச்சளவில் நாம் நம்புவதாகக் காட்டுகிறோம். பேரின்பம் என்று ஒன்று இருக்குமா? அது  நமக்குக் கிடைக்குமா?" என்ற ஐய அலை ஓய்ந்தபாடு இல்லை. இதற்கு முதற்காரணம், மாயை என்றும் திரோதம் என்றும் மறைப்பாற்றல் என்றும் சொல்வார்கள்.

நாம் விரும்புகின்ற சிற்றின்றபத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம். பல சமயங்களில் அது கைகூடுவது இல்லை. ஒருவேளை கைகூடினாலும், நாம் கருதியது போல இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிறோம். இந்த ஏமாற்றத்தால், பேரின்பம் என்ற ஒன்று நமது முயற்சியினால் கைகூடும் என்பது ஐயமே என்ற எண்ணம் உண்டாகிறது. படித்தவர்களில் சிலர் பேரின்பம் என்பது வெறும் கற்பனையே என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பேரின்பத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிறருக்கு விரிவாக மேடைகளில் முழங்குகின்ற பலரின் வாழ்க்கை, சொல்வது ஒன்று,  செய்வது ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள் எழுதிய நூலை எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்பதில்லை. மெத்தப் படித்தவர்களே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானால், அவர்களை அப்படி ஆக்கும் மாயாசத்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்கலாம். 

தம்முடைய முயற்சியினாலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், "இறைவன் திருவருளால் பெற்றேன்" என்று சொன்ன பெருமக்களே பலர். நம்மைப் போல வாழும் காலத்தில் அவர்கள் கண்டு அறியாத தனி இன்பத்தை, இறைவன் திருவருளைப் பெற்ற பிறகு அடைகிறார்கள். அப்போது அவர்களுக்கு உண்டாகும் வியப்பு அளவிட முடியாது. "கண்டறியாதன கண்டேன்"  என்றும், "'தேடிக் கண்டுகொண்டேன்" என்றும் பெருமகிழ்ச்சியோடு அப்பர் பெருமான் கூறுகிறார். "ஆர் பெறுவார் அச்சோவே" என்கிறார் மணிவாசகப் பெருமான். இறைவனுடைய திருவருளைப் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அனுபவத்தை விம்மிதத்தோடு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகையில் சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயமும் நமக்கு உண்டாகி விடுகிறது. 

எல்லோரும் ஒன்றே சொன்னால் அது நிச்சயம் என்று தெளிந்து கொள்ளலாம். அவர்கள் வெவ்வேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்றாலும், அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவான ஒன்றே. விரத நாள் என்பதற்காகப் பலரும் இனிப்பான பண்டத்தைச் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் செய்த பண்டம் மற்றொருவர் வீட்டில் இல்லை. வெவ்வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண்டாலும், அறிகின்ற சுவை இனிப்பு என்ற ஒன்றுதான். அதுபோலவே, இறைவனுடைய திருவருளைப் பெறும் வழி வெவ்வேறாக இருந்தாலும், இறைவனைச் சந்தித்த முறை வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் திருவருளை உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசனை முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர்களுக்கு அனுபவம் வருகிறது. எத்தகைய உணவை உண்டாலும் பசி தீருகிற அனுபவம் ஒன்று. அதுபோலவே எந்த வகையில் வழிபட்டாலும் இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்பம் ஒன்றுதான். இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக எல்லோரும் சொன்னார்கள். குறித்தார்கள். 

ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பலவகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்ந்தாலும், எல்லோரும் பெறுகின்ற சிற்றின்பம் பொதுவகையில் ஒன்றுதான். உருவமும் அழகும் வெவ்வேறு விதமாக இருந்தாலும், ஆண் பெண் உறவில் உண்டாகின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை. அதுபோலத்தான், வெவ்வேறு உருவத்தில் கடவுளை வழிபட்டு, வெவ்வேறு மந்திரங்களை உருவேற்றி, வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்து, வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்பமும் ஒன்றே. 

எந்த வழியானாலும் முன்னாலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்க வேண்டும். நாலுபேர் போன வழியில் போகவேண்டும் என்பது வழக்குச் சொல்லாக உள்ளது. இதைத்தான் மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ்வேறு பெயராலே சொல்கிறார்கள். எந்த வழியில் சென்றாலும் இறைவனுடைய திருவருளைப் பெறலாம். இந்த வழியில் சென்றால் திருவருளைப் பெறலாம் என்பது ஒரு சமயம். இன்னொரு சமயம் இன்னொரு வழியைக் காட்டும். சமய பேதங்கள் இருந்தாலும், அவற்றால் அடைகின்ற இன்பம் ஒன்றுதான்.

இந்தப் பொதுமையை உணர்ந்து கொள்ளமால், சமயங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குவது பேதைமை ஆகும். மறைப்பு ஆற்றல் அல்லது திரோதானம், முள்ளை முள்ளால் அகற்றுவது போல, அறியாமையை உண்டாக்கி, அறிவை விளக்குகிறது. உலகிலே மக்கள் ஒருவரை ஒருவர் இன்னார் இனியார் என்று தெளிவாக அறியாது மயங்குகின்றார்கள். உடன் பிறந்தவன்தான் அருச்சுனன் என்பதை அறியாத கர்ணன் அவனைப் பகைவன் என்று கருதிப் பகைத்தான். இதம் சொன்ன வீடணனை, இராவணன் வெறுத்தான். கெடுமதி கூறிய மகோதரனை மதித்தான். ஒரு மதத்தினர் கூறும் திறத்தினை மற்றொரு மதத்தினர் தெளிவாக அறியாது, அவர்களுடன் தர்க்கமிட்டுக் கலகம் புரிகின்றார்கள். பசுக்கள் பல நிறமாயினும் பால் ஒரு நிறம்தானே? நதிகள் வளைந்து வளைந்து பல்வேறு வழிகளில் சென்றாலும் முடிவில் கூடுகின்ற இடம் கடல்தானே?

அதுபோல் சமயங்கள் முடிகின்ற இடம் ஒன்றுதான், ஆகவே சமயவாதம் புரிதல் கூடாது. இறையருளை நாடி ஒன்றுபட வேண்டும். சமயவாதம் புரிவோர் நரகிலே ஒற்றுமைப்பட்டு வாழ்வார்கள் என்பதை, "காதிமோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்..... மாறு இலாத மாகாலன் ஊர் புக்கு அலைவாரே" என்றார் அருணகிரிதாப் பெருமான். 

கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் இந்த மனப் பக்குவத்தைத் தரும். கடவுள் உணர்ச்சி இல்லாதவர் எதனையும் செய்யத் தலைப்படுவர். புண்ணிய பாவங்களையும் உண்டு என்று உடன்படாது, நினைத்தவற்றை எல்லாம் பேசி, நினைத்தவற்றை எல்லாம் செய்து நரகக் குழியில் சென்று வீழ்வர். ஆகவே, கடவுள் அன்பு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதனைக் கடைப்பிடிக்க. மனிதவாழ்க்கைக்கு மூச்சுக் காற்று எத்துணை அவசியமோ, அத்துணை அவசியம் கடவுளன்பு.

எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளத்தில் உறைகின்றார் என்று மறவாது நினைப்பவர், மனத்தினாலும் பிற உயிர்க்குத் தீமை செய்யமாட்டார். கடவுள் எல்லாவற்றையும் அறிகின்றார் இருக்கின்றார் என்று எண்ணுவோமானால், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது.  ஆகவே,  இறைவனை ஒரு கணமேனும் மறவாது சிந்தை செய்து உய்வு பெறவேண்டும். கடவுள் உணர்ச்சி மனிதனைத் தூய்மையாக்குகின்றது. வாய்மை நெறியில் வளப்படுத்துகின்றது. ஆகவே, அறிவு நூல்களைக் கற்கவேண்டும். அவ்வறிவு நூல்களைக் கற்றாரே கற்றார் ஆவார். அல்லாதார் கற்றார் எனினும் கல்லாதாரே ஆவார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்றும், "கற்றவர்கள் உண்ணும் கனி" என்றும் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்றும் வரும் அமுத வசனங்களால் அறிக.

கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே என்று திருவள்ளுவ நாயனார் வகுத்து உரைத்த வாய்மையாலும் அறிக.

"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நள்ளார் தொழாஅர் எனின்". --- திருக்குறள்.

"கற்பவை கற்க" என்று திருவள்ளுவர் கூறியபடியால், கற்கத் தக்க நூல்களையே கற்கவேண்டும். கற்கத்தக்க நூல்கள் எவை அவை ஞானநூல்களாகும். "அறிவுநூல் க(ல்)லா மூடர்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான் ஒரு திருப்புகழில்.

தமிழ் நூல்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று தோத்திர நூல்கள். மற்றொன்று சாத்திர நூல்கள். தோத்திரங்கள் பன்னிரு திருமுறைகள். சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சைவ நூல்கள். அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் அருளிய நூல்கள் அவைகளின் வழி வந்தவைகள். எனவே, இத்தகைய முத்திநெறிக்கு உரிய சத்திய நூல்களையே கற்றல்வேண்டும், கற்றவண்ணம் நிற்றல் வேண்டும்.

கற்பது என்பது உள்ளத்தில் உள்ள கசடு அறுவதற்காகவே. "கற்க கசடு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். ஓதுவது என்பதை நன்னெறியில் நிற்பதற்காக. "ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். ஒதுவது என்பது உணர்தலில் முடிய வேண்டும். "ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, அருள்நூல்களையும், சாத்திரங்களையும், கசடு அறக் கற்று, ஓதி உணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும். 

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிது இல்லை; - அப்பிறப்பில்

கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மக்கள் பிறப்பில் படிப்பதற்கு உரியவற்றைப் படித்தலும், படித்தவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிவடைதலும், அவ்வாறு கற்றும் கேட்டும் தெளிந்த வழியிலே நிற்றலும் பொருந்தப் பெற்றால், வேறு எந்த வகைப் பிறப்பாக இருந்தாலும், மனிதனாகப் பிறப்பதைப் போல ஒருவனுக்கு இன்பம் தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததன் சிறந்த பயன் ஆகும்.

     காரணம், அப்போதுதான், மனதில் தீய எண்ணங்கள் தோன்றாதிருக்கும்.

"கற்றதுவும் கற்று, ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்,

மற்று ஒருபால் போக மறித்திட்டுத்-தெற்றென

நெஞ்சத்துள் தீமை எழுதருமேல், இன்னாதே

கஞ்சத்துள் கல்பட்டால் போன்று. "             --- அறநெறிச்சாரம்.

     படிக்க வேண்டிய நூல்களைப் படித்து, அதனால் பெற்ற அறிவு ஒழுக்கம் ஆகியவற்றோடு பொருந்த வேண்டும். அவ்வாறு பொருந்தாமல் ஒரு பெறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவும், படித்த நூல்களின் கருத்தில் இருந்து மாறுபட்டு, மற்றொருபுறம் செல்லவும், நல்லொழுக்கத்தில் நடப்பதை விடுத்து, மனத்திலைவிரைந்து கெட்ட எண்ணம் உண்டாகுமானால், அது, தின்னும் உணவில் கலந்து இருக்கும் கல்லைப் போல, மிக்க துன்பத்தைத் தருவதாகும்.

"கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை

சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி

நிற்றல் வேண்டும், நிருவிகற பச்சுகம்

பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே." ---  தாயுமானார்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கற்ற நெறியில் நில்லாமல், வெறும் இலக்கண இலக்கியங்களாகிய கருவி நூல்களை மட்டும் கற்று, அதனால் வந்த பொது அறிவினால், நம்மினும் உயர்ந்தவர் எவர் என்று செருக்குக் கொண்டு, பல புலவர் நிமிர்ந்து நிற்பர். அவர்கள் உள்ளத்தில் குழைவு இராது. சிந்தையில் தணிவும், செய்கையில் பணிவும் இரா. இத்தகையோர் ஒருவரையொருவர் காணும்போது தாம்தாம் கற்ற வித்தைகளைக் கொட்டிக் கலகமிடுவர்.

பிறவித் துன்பத்தை நினைந்து உள்ளம் குழைந்து உருகி, "ஈசனே! எண்ணில்லாத பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டேனே! இனி இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ? இனி எளியேனைப் பிறவா வண்ணம் ஏன்றுகொள்" என்று உள்ளத்தால் உரைத்து, வெள்ளம்போல் விழிநீர் பெருக நின்று, நெய்யிலே இட்ட அப்பத்தில் தண்ணீர்ப் பசை அற்றவுடன், அந்த அப்பம் அமைதி உறுவதுபோல் சாந்தியுடன் நிற்பர்.

இத்தகைய பெருந்தன்மையும் நன்மையும் அறியாத பலர், மரப் பெட்டியில் உள்ள நூல்களை மாமிசப் பெட்டியில் ஏற்றி, அகந்தை கொண்டு, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இன்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து அதிர்ந்து பேசி, பற்கள் உதிர்ந்து, கண்கள் பிதிர்ந்து, பேதுறுவர்.  இம்மையிலே இகழும் மறுமையிலே நரகமும் அடைவர்.

சமயப் பொதுமை உணர்வு இல்லாதவர்கள் எப்போதும் தாம் கற்றதை வைத்துக் கொண்டு குரைத்துக் கொண்டு திரிவார்கள் என்கிறார் திருமூல நாயனார்.

"ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,

என்றது போலும் இருமுச் சமயமும்,

நன்று இது தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே."      ---  திருமந்திரம்.

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்,கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. நான் சொல்லும் இந்த வழியே நல்லது, பிறர் கூறும் வழிகள் எல்லாம் தீயனவே என்று (உண்மை அறிவு விளங்காமல், தாம் உணர்ந்த்ததையே சொல்லிப்)  பிணங்குகின்ற சமயவாதிகள் எல்லாம்,மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

     எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று வாழ்வதன் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று, பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பதை விளக்க, "ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள" என்றார்.

     சமய நெறியில் நம்பிக்கை இல்லாதவர்கள் அப்படியே இருக்கவேண்டும். சமயப் பற்றாளர்களைப் பார்த்து எப்போதும் குரைத்துக் கொண்டு இருத்தல் கூடாது. இல்லை என்பது ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம் என்றால், உண்டு என்பதும் ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம். அதைப் பரிகசிப்பது தன்னைத் தானே ஒருவன் தாழ்த்திக் கொள்வது போல ஆகும். சபயப் பற்றாளர்களும் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். ஒழுங்காகக் கற்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத் தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார் திருமூல நாயனார்.. மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன? குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன? தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்."

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், இனியும் பூசலிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது இதன் பொருள். சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதுகொண்டே,"பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் எல்லாம் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

பைத்தியம் பிடித்தவனுக்குத் தன் செய்கை அல்லாது பிறரைப் புரிந்து கொள்ள வராது. அவனது செயல் ஒருகால் அறிவு உள்ளது போலவும், இன்னொருகால் அறிவில்லாதது போலவும் தோன்றும். அதுபோல, அறிவு விளங்கியது போல, அறிவின்றிப் பேசுகின்ற சமயவாதிகளின் பேச்சில் அறிவு மயங்கிக் கட்டுண்டவர்கள், மேருமலையை அடைய எண்ணிப் போய், அதை அடையாமல் கடலில் விழுந்ததைப் போல் ஆவார்கள். 

"அறநிலையத் துறையில் முழுமையாக நான் ஈடுபட்டட பிறகு ஒரு உண்மை விளங்கியது. அறுபது ஆண்டு காலத்திற்கு மேல் எங்களுடைய திராவிட இயக்கம் சமுதாய உயர்வுக்காகப் பல எதிர்ப்பு இயக்கங்களை மேற்கொண்டதால், சமய இலக்கியங்களைக் குறித்து தமிழ் மக்களுக்குச் சரியான பாதையைக் காட்டாமல், எங்கோ பிழை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் முழு நாத்திகராக விளங்கிய தந்தை பெரியாருடைய மாணவர். தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் என்றாலும், தந்தை பெரியாரோடு முரண்பட்டு, 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது, தந்தை பெரியாருடைய இலட்சியத்திற்கு மாறாக, நாத்திகக் கொள்கைக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சொற்றொடரைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், இது சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக இடம் பெற்றிருக்கிற திருமூலர் திருமந்திரத்தில் உள்ள தத்துவமாகும்" என்று 08.05.2021 அன்று வெளியான தினமணி  நாளிதழில் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் இரு இராம. வீரப்பன் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

எனவே, இறையருளால் உண்மை இன்பத்தைப் பெற்று மகிழலாம். அதற்குத் துணை செய்வது சமய உணர்வு. சமய உண்மையை அறிந்து கொள்ளாமல், சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குதல் நன்மையைத் தராது. குலம் என்றால் அது மனிதகுலம் ஒன்றுதான். இறைவனும் ஒருவனே ஆவான்.  


பொது --- 1081. இசைந்த ஏறும்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் இசைந்த ஏறும் (பொது) முருகா!  அடியேன் அயர்ந்தபோது வந்து அருள வேண்டும். தனந்த தானந் தனதன தானன ...... தனதான...