வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

 



வயிற்றுப் பசிக்கு உணவு

அறிவுப் பசிக்கு கேள்வி

----

உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என்றார் திருமூல நாயனார். எனவே, உடம்பை வளர்ப்பது, உயிர் உணர்வு வளர்வதன் பொருட்டே என்பதை அறிதல் வேண்டும். உயிர் உணர்வு வளர்தல் என்பது, உயிருக்கு இயல்பாகவே அமைந்துள்ள அஞ்ஞான உணர்வு நீங்கி மெய்யுணர்வு பெறுதல்.

உடம்பிலே உயிர் நிலைபெற்றுள்ளது என்பதை உணர்ந்து, உயிரை வளர்ப்பதற்கு, உடம்பை வளர்க்கவேண்டும். அதற்கு உடம்பும் உயிரும் ஒருங்கே செழித்து வளர்வதற்கு உரிய உணவைக் கொள்ளவேண்டும். உடம்பு பொய், நிலையற்றது. உயிர் மெய், நிலையானது. நிலையற்ற உடம்பைக் கொண்டு, நிலையான உயிரானது, நிலையான ஞானத்தைப் பெற்று, நிலையற்ற உடம்பால் உண்டாகும் பிறவியை ஒழித்து, நிலையான பரம்பொருளோடு கூடவேண்டும்.

தேகாத்மவாதி கொள்கைப்படி, உடம்பே உயிர் என்று கருதி, உடம்பைப் பேணுவதையே பெரிதாக மதித்து இருத்தல் உலக மக்கள் இயல்பு. அஞ்ஞானம் மிகுந்து இருப்பதால், உடம்பை ஏன் பேணவேண்டும், எப்படிப் பேணவேண்டும் என்னும் அறிவு இல்லாமல், நாக்கு ருசி ஒன்றையே கருதி, விரும்புகின்ற உணவை எல்லாம் மிகுதியாக உண்டு, உடம்பைப் பெருக்குவதோடு, நோயையும், காம உணர்வையும் பெருக்கி, உயிருக்கு ஆக்கத்தைத் தேடிக் கொள்ளாமல் இருப்பதும் மனித இயல்பு. அறிவின்மையால் இந்தக் கேட்டினைத் தேடிகொள்வதைத் தவிர்த்து, அறிவைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்பதால், அறிவைப் பெருக்கிக் கொள்ளத் தக்க நூல்களைப் படிக்கவேண்டும். நூல்களைப் படிப்பதாலேயே அறிவு விளங்கிவிடாது. கற்று, அதன் வழி நின்றவரிடத்தல் கேட்டு அறிதல் வேண்டும்.

கல்லைமையால் உண்டாகும் கேடு பற்றி, "கல்லாமை" என்னும் அதிராகத்தில் உணர்த்திய நாயனார், "கேள்வி" என்னும் அகிதாரத்தில், கேட்கவேண்டிய நூல்களைக் கற்று அறிந்தவரிடத்தே கேட்டல் வேண்டும் என்பதை  வலியுறுத்துகின்றார். 

இந்தக் கேள்வியானது, கேட்கின்ற ஒருவன் கற்றவனாக இருப்பானாயின், அது அவனுடைய கல்வியை மேன்மேலும் வளரச் செய்யும். கேட்கின்றவன் கல்லாதவனாக இருந்தால், அவனுக்குக் கல்வி அறிவை உண்டாக்கும்.

எனவே, கேள்வி என்பது கற்றார்க்கும் கல்லாதார்க்கும் இன்றியமையாதது. பல நூல்களையும் முயன்று கல்லாமல், கற்று வல்லவரிடத்திலே கேட்டு அறிதலால், "செவிச் செல்வம்" என்பது பெரும் செல்வம் ஆயிற்று. பிற செல்வங்கள் நிலையில்லாதன. துன்பத்தைத் தருவன.

திருக்குறளில் கேள்வி என்னும் அதிகாரத்தில் வரும் இரண்டாம் திருக்குறளில், "காதுக்கு உணவாகிய கேள்வி இல்லாதபோது, வயிற்றினுக்கும் சிறிது உணவு இடப்படும்" என்கின்றார் நாயனார்.

வயிற்றுக்கு உணவு பெரிதெனத் தோன்றும்போது, உணவைத் தேடுதல் துன்பம். உணவிற்காகப் பொருள்களைத் தேடுதல் துன்பம். உணவின் மிகுதியால் உண்டாகும் உடல் பருமனால் துன்பம். உணவின் செறிவினால் உண்டாகும் காம உணர்வினால் துன்பம். 

கேள்வியால் மிகுந்த சுவை உண்டாவதையும், பின்னே மிகுந்த பயன் விளைவதையும் கருதி உணவு வெறுக்கப்படும். காதால் ஒருவன் கேட்டுக் கொண்டே இருப்பின், ஏனைய புலன் இன்பங்கள் மறக்கப்படும். அது இல்லாதபோது, உடலின் நலம் கருதி சிறிது உணவு கொடுத்தால் போதும். உணவு மிகுந்தால், மனமானது கேள்வியில் பொருந்தாது. காமத்திலேயே பொருந்தும்.

வயிற்றைப் பேணுதல் உயிர் பொருட்டே அன்றி, உடம்பின் பொருட்டு அல்ல என்பது தோன்ற "வயிற்றுக்கும்" என்றார்.

"இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்" என்றும், "கழிபேர் இரையான்கண் நோய்" என்றும் நாயனார் காட்டி உள்ளதும் அறிக.

"செவிக்கு உணவு இல்லாத போழ்து, சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சுந்தரமூர்த்தி நாயனார் வரலாற்றை வைத்து, குமார பாரதி என்பார், "திருத்தொண்டர் மாலை" என்னும் நூலில் பாடி உள்ள பாடல்...

"பொருள்துறைஉன் பாட்டேநல் பூசைஎன்றார் ஊரர்க்கு

அருள்துறையார் அன்புசெய்வார் ஆனார்; --- மருள்தேர்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்."

இதன் பொருள் ---

சுந்தரமூர்த்தி சுவாமிகளை அடிமை ஓலை காட்டி ஆட்கொண்டு திருவெண்ணெய்நல்லூரிலே திருவருட்டுறையிலே சென்று அற்புதக் காட்சி அளித்தருளினார் சிவபிரான். "நீ நம்மோடு வன்சொற்களைச் சொல்லி வன்தொண்டன் என்கிற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினோடு செய்யத்தக்க அருச்சனையாவது பாடலே ஆகும். ஆதலால், நம் மேலே தமிழ்ப் பாட்டுக்களைப் பாடு" என்று மேலும் அருளிச் செய்தார். சுந்தரர் வணங்கி, "அருட்பெருங் கடவுளே! தேவரீருடைய அனந்த குணங்களில் சிறியேன் எதை அறிவேன்? என்ன சொல்லிப் பாடுவேன்?" என்றார். அதற்குக் கடவுள், "நீ முன்னே என்னைப் பித்தன் என்று சொன்னாய். ஆகையால் என் பெயர் பித்தன் என்றே பாடு" என்று சொல்லி அருளினார். உடனே சுந்தரர் "பித்தா பிறைசூடி" என்னும் சொற்றொடரை முதலாகக் கொண்ட திருப்பதிகத்தைப் பாடி அருளினார். சிவபிரான் மகிழ்ந்து, "தொண்டனே!  நீ இன்னும் நம்முடைய புகழைக் குறித்துப் பலவகையாகப் பாடு" என்று அருளினார். அக் கட்டளையின்படியே சுந்தரர் பல திருத்தலங்கட்கும் சென்று திருப்பதிகம் அருளிச் செய்தார். பற்பல அற்புதங்களையும் நிகழ்த்தினார். இறைவனே மிகவும் விரும்புவது அவன் திருச்செவியில் சாத்தப்படும் பாமாலைகளே. பூமாலைகள் வாடிவிடும். பாமாலை என்றும் வாடாது. பாமாலையானது இறைவனது உள்ளத்தைக் குளிரவைக்கும். கேட்போர் உள்ளத்தையும் குளிரவைக்கும். அன்போடு இறைவனைப் பாடி வழிபடவேண்டும். இறைவன் பெரிதும் விரும்புவது நிவேதனப் பொருள்களை அல்ல என்பதை இதன் வாயிலாக அறிதல் வேண்டும். 

செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாதபொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும் என்றருளினார் திருவள்ளுவ நாயனார்.

பொருள் என்றது அகப்பொருள் புறப்பொருள்களை. அருட்டுறை என்பது திருவெண்ணெய்நல்லூர்ச் சிவாலயத்தின் பெயர். மருள்தேர் --- மயக்கத்தினின்றும் தெளிந்த. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் மண்மேல் நம்மை சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்" என்பது பெரியபுராணத் திருப்பாடல் பகுதி.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்று திருவள்ளுவ நாயனார் பாடியதற்கு ஏற்ப, பின்வரும் பாடல்கள் அமைந்துள்ளதை அறிக.

"மற உரையும், காமத்து உரையும், மயங்கிய

பிறவுரையும் மல்கிய ஞாலத்து, --- அறவுரை

கேட்கும் திருவுடையாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

பாவத்தினை வளர்க்கும் சொற்களும், ஆசையினை வளர்க்கும் வார்த்தைகளும், சோம்பல் முதலியனவற்றை வளர்க்கும் சொற்களும் நிறைந்து காணும் இந்த உலகத்தில், அறத்தினை வளர்க்கும் சொற்களைக் கேட்டுத் தெளியும் நற்பேறு உடையவர்களே, பிறவியினை நீக்குவதற்கு உரிய வீட்டுலகினை உடையவர் ஆவார்.

"செந்தமிழ் நாடு என்னும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்றார் அமரகவி. காதுகளில் இன்பத் தேன் வந்து பாயும்போது, வாயானது உணவை விரும்பாது. செவிச் சுவையால் உயிரானது பேரின்பத்தை அடையும்.

இராமன் முடிசூடப் போகின்றான் என்பதைக் கேட்ட மக்கள் யாவரும், தெய்வத் தன்மை பொருந்திய தேனைத் தமது காதுகளால் நுகர்ந்தார்கள், மற்ற புலன் இன்பங்களை மறந்தார்கள் என்கின்றார் கம்பநாட்டாழ்வார்.

"அவித்த ஐம் புலத்தவர் ஆதியாய் உள

புவித்தலை உயிர் எலாம், ‘இராமன் பொன் முடி

கவிக்கும்’என்று உரைக்கவே, களித்ததால், அது

செவிப் புலம் நுகர்வது ஓர் தெய்வத் தேன்கொலாம்?" --- கம்பராமாயணம், ஆறுசெல் படலம்.

இதன் பொருள் ---

ஐம்புலன்களை அடக்கியவர்களாகிய முனிவர்கள் முதலாக உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம், இராமன் பொன்மயமான மகுடம் சூடப் போகிறான் என்று சத்துருக்கனன் அறிவித்த முரசொலி மூலம் கேட்டுப்  பெருமகிழ்ச்சி அடைந்தன.  இராமன் மூடி சூடப் போகின்றான் என்னும் அந்தச் சொல், செவி என்னும் பொறியால், கேள்வி என்னும் அறிவைப் பெற்று அனுபவிக்கும்படியான ஒப்பற்ற தெய்வத்தன்மை வாய்ந்த தேனோ?

     உயிர்களின் மகிழ்ச்சிக்குக் காரணமாகிய சொல்லைச் செவிநுகர் தேனாகக் கற்பனை செய்தார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

எனவே, வயிற்றுப் பசிக்கு நல்ல உணவை அளவாக உண்டால் உடல் வளம் பெறும். உயிர் அறிவும் வளம் பெறும். உடம்பையே பொருட்டாக மதித்து, சுவையான உணவை மிகுதியாக உண்டால், உடல் பருப்பதோடு, நோய்தான் பெருகும். எனவே, 

"செவியின் சுவை உணரா வாய்உணர்வின் மாக்கள்,

அவியினும் வாழினும் என்?"

என்றார் திருவள்ளுவ நாயனார். "காதுகளால் அனுபவிக்கப்படும் கேள்விச் சுவையை உணராமல், வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையை அறியும் அறிவினை உடைய மனிதர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் இந்த உலகிற்கு வருவது என்ன?" என்கின்றார் நாயனார். மேன்மக்கள் போல், காதுகளால் அனுபவிக்கும் சுவையை அறியாது, வாயினால் உண்ணப்படும் உணவுகளின் சுவையையே அறிகின்ற கீழ்நிலை மாக்கள் இந்த உலகத்தில் இருந்தால் என்ன நன்மை? இறந்தால் என்ன தீமை? இரண்டும் ஒன்றே ஆகும்.

"மாக்கள்" என்றது மன உணர்ச்சி இல்லாதாரை. "மாவும் மாக்களும் ஐயறிவினவே, மக்கள் தாமே ஆறறிவுயிரே" என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தின்படிக்கு இதனை உணராலம். விலங்குகள் தனது வயிற்றுப்பாட்டுக்கே உழலும். மனித வடிவில் இருந்தாலும் விலங்கு உணர்வோடு இருப்பவரை "மாக்கள்" என்றார்.

காதுகளால் அனுபவிக்கப்படும் சுவைகள், சொல்சுவை, பொருள்சுவை என இருவகைப்படும். சொற்சுவை என்பது குணம், அலங்காரம் என இருவகைப்படும். 

குணம் என்பது பலவடிவுகளிலாவது, பல சீர்களிலாவது எழுத்துக்கள் ஒன்றி வருவது. அது செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி எனப் பத்து வகைப்படும். கைகால் முதலிய உறுப்புக்கள் இருந்தும் உயிர் இன்மையால் மனிதன் எனக் கொள்ளப்படாதது போல, இந்தக் குணங்கள் இல்லாதவை செய்யுள் எனப்படமாட்டா.

அலங்காரம் எனப்படுவது, சொல்லையும் பொருளையும் பற்றி நின்று அழகு செய்வது. இது சொல் அலங்காரம், பொருள் அலங்காரம் என இருவகைப்படும். 

மக்களுக்கு அலங்காரம் செய்வனவாகிய அணிகலன்களைப் போல், காப்பியத்திற்கு அலங்காரம் செய்வன இவை இரண்டும்.

பொருட்சுவை என்பது, காமம் என்னும் ஒரு பொருளின்மீது உண்டாகும் விருப்பு. ஒரு பொருளின் மீது விருப்புத் தோன்றுவதால் உண்டாகும் களிப்பு. உயிர்களின் மீது உண்டாகும் கருணை. எல்லா உயிர்களின் மீதும் செல்கின்ற ஆசையும், வீரமும். தம்மோடு பொருந்தாத பகைவரை அழிக்கின்ற உருத்திரம். தெய்வம், விலங்கு, கள்வர் முதலானவர்களால் உண்டாகும் அச்சம். மூப்பு, பிணி, வருத்தம் முதலியவற்றால் உண்டாகும் இளிவரல், அருவருப்பு.  புதியவற்றையும், பெரியவனவற்றையும் அறிதலால் உண்டாகும் வியப்பு. பற்று அற்று இருக்கும் சமநிலை என்னும் சாந்தம் என்று சொல்லப்படும்.

வாயினால் உண்ணப்படும் உணவின் சுவையானது, கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, இனிப்பு என்னும் ஆறுவகையான சுவைகளைக் குறிக்கும். நன்று, தீது என்பவற்றை அறிந்து ஒழுகும் மன உணர்ச்சி இல்லாது, இந்த சுவைகளையே பெரிதும் விரும்பி வாழ்கின்ற மனிதர்களை "மாக்கள்" என்றார். இவர்கள் இருப்பதால் உலகத்துக்கு யாதொரு பயனும் இல்லை. இறப்பதால் யாதொரு இழப்பும் இல்லை என்றார்.

வயிற்றுக்கு ஈயப்படும் உணவால் விளைந்த வாயுணர்வும், உயிர் நிலைக்க, உடல் வளம்பெற்றுத் திகழ்ந்து, நூற்பொருள்களைக் கேட்டுத் தெளிந்த அறிவினைப் பெறுவதற்கே. எனவே, அப்பயனை இழந்த மாக்கள் மடிந்தால் என்ன, வாழ்ந்தால் என்ன என்றார் நாயனார்.

வயிற்றுப் பசிக்கே உணவு அவசியம். சுவைக்கு அல்ல. அறிவுப் பசிக்கு நல்ல கேள்வி அவசியம். அறிவு நலம் தரும் கேள்விகளையே எப்போதும் கற்றும் கேட்டும் வருதல் வேண்டும். நூல்கள் இரு வகைப்படும். அவை உலகநூல்கள், மெய்ந்நூல்கள் என்பன. உலகியல் பற்றி எழுந்தவை உலகநூல்கள். வீட்டு நெறியை உணர்த்துவன மெய்ந்நூல்கள். உலகநூல்களை யாரும் கற்கலாம். பல துறைகளைச் சார்ந்த உலகநூல்களை அவ்வத் துறையில் வல்ல ஆசிரியரை அடுத்துக் கேட்டு விளங்கிக் கொள்ளலாம். 

ஆனால், மெய்ந்நூல்கள் அத்தகையன அல்ல. அவற்றைக் கற்பதற்குப் பக்குவம் வேண்டும். பக்குவமில்லார் அவற்றைக் கற்க விரும்பார்.  கற்க முன்வரமாட்டார். ஒருவேளை முன்வந்த போதிலும் அவற்றின் பொருளை உள்ளவாறு விளங்கிக் கொள்ளமாட்டார். ஏனெனில் ஆசை, வெகுளி முதலிய மாசுகள் மனத்தில் இருக்கின்ற வரையில், அம் மனத்தில் ஞானநூற் பொருள்கள் சென்று பதியா. மனம் மொழி மெய்களினால் இறைவனை உண்மையாக வழிபட்டு வருவோர்க்கு மனமாசுகள் அகலும்; உள்ளத்தூய்மை உண்டாகும். அவரே பக்குவம் உடையவர். அவரே மெய்ந்நூலறிவைப் பெறுதற்கு உரியவர்.

பொது --- 1085. கொடியன பிணிகொடு

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

கொடியன பிணி (பொது)


முருகா! 

திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


தனதன தனதன தத்தத் தத்தத்

     தாந்தாந் ...... தனதான


கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந் ...... தசடாகுங்


குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்

     கோண்பூண் ...... டமையாதே


பொடிவன பரசம யத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே


பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்

     பூண்டாண் ...... டருள்வாயே


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்தாங் ...... குடனாடத்


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோந்தாந் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை யொத்தச் சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனிலாடும்


பழயவர் குமரகு றத்தத் தைக்குப்

     பாங்காம் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்



கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்

     கூன்போந்து, ...... அசடு ஆகும்


குடில்உற வரும்ஒரு மிக்கச் சித்ரக்

     கோண் பூண்டு ...... அமையாதே,


பொடிவன பரசமயத்துத் தப்பிப்

     போந்தேன் ...... தலைமேலே,


பொருள்அது பெற,அடி நட்புச் சற்றுப்

     பூண்டுஆண்டு ...... அருள்வாயே.


துடிபட அலகைகள் கைக்கொட் டிட்டுச்

     சூழ்ந்து ஆங்கு ...... உடன் ஆட,


தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்

     தோம்தாம் ...... தரிதாளம்


படிதரு பதிவ்ரதை ஒத்த, சுத்தப்

     பாழ்ங்கான் ...... தனில் ஆடும்


பழயவர் குமர! குறத் தத்தைக்குப்

     பாங்கு ஆம் ...... பெருமாளே.

பதவுரை

துடிபட அலகைகள் கைக் கொட்டிட்டுச் சூழ்ந்து ஆங்கு உடன் ஆட --- உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, 

தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி தாளம் படிதரு பதிவ்ரதை ஒத்த --- தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, 

சுத்தப் பாழ்ங் கான் தனில் ஆடும் பழயவர் குமர --- தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறத் தத்தைக்குப் பாங்கு ஆம் பெருமாளே --- குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடியன பிணி கொடு --- கொடிதான நோய்களை அடைந்து,

விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் --- விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, 

குடில் உற வரும் ஒரு மிக்கச் சித்ரக் கோண் பூண்டு அமையாதே --- உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, 

பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் தலைமேலே --- நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல்,

பொருள் அது பெற அடி நட்புச் சற்றுப் பூண்டு ஆண்டு அருள்வாயே --- மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

உடுக்கை ஒலிக்க, பேய்கள் கைகளைக் கொட்டிச் சூழ்ந்து அவ்விடத்தில் தம்முடன் கூத்தாட, தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத் தோம் தாம் தரி என்ற தாளத்தை பதிவிரதை ஆகிய உமையம்மையார் போட, அதற்குத் தகுந்தபடி, தூய சுடுகாட்டில் ஆடுகின்ற பழையவராகிய சிவபரம்பொருளின் திருக்குமாரரே!

குறமகள் ஆகிய வள்ளிநாயகிக்குத் துணைவரான பெருமையில் மிக்கவரே!

கொடிதான நோய்களை அடைந்து, விக்கல் எடுத்தும், வாந்தி எடுத்தும், கூன் விழுந்தும், அறிவு கலங்கப் பெற்று, உடலில் பொருந்தி வரும் ஒரு பெரும் விநோதமான நிலையை அடையாதபடி, நிலைத்து நிற்காது அழிவுறுகின்ற பரசமயங்களில் இருந்து பிழைத்து வந்துள்ள அடியவனது தலையின்மேல், மெய்ப்பொருளை உணருமாறு,  திருவடியில் அன்பு வைக்க ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

கொடியன பிணி கொடு, விக்கிக் கக்கிக் கூன் போந்து அசடு ஆகும் குடில் ---

குடில் - குடிசை.

"கால்கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து

தோல்மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்

ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,

மால்கொடுத்து, ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே."    --- அப்பர் தேவாரம்.

இதன் பொருள் ---

மாமறைக்காடு என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் சிவபிரான், கால்களைக் கொடுத்து, கைகளை ஏற்றி, எலும்புக் கழிகளை நிரைத்து, மேலே புலாலை வேய்ந்து, குருதி நீரைக் கலந்து, தோலை தட்டிச் சுவரை வைத்து, இரண்டு வாயில்களையும், ஏழு சன்னல்களையும் அமைத்து உயிர்க்கு ஒரு வீடுகட்டி, அதனுக்கு மால் என்ற பெயர் குறிக்கும் மயக்கம், காற்று, வேட்கை என்பனவற்றைச் செல்வங்களாகக் கொடுத்து குடியேற்றி வைத்துள்ளார்.

இந்த உடம்பு எப்படிப் பார்த்தாலும் புழுக்கள் நெளிகின்றதும் நோய்கள் மலிந்து உள்ளதும் ஆகும்.

"எல்லாப் படியாலும் எண்ணினால், இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலிநோய்ப் புன்குரம்பை-நல்லார்

அறிந்து இருப்பார், ஆதலினால், ஆங்கமல நீர்போல்

பிறிந்து இருப்பார் பேசார் பிறர்க்கு." --- ஔவையார்.

இதன் பொருள் ---

எல்லா வகையாலும் எண்ணிப் பார்க்கும்போது இந்த உடம்பு பொல்லாத புழுக்கள், அவற்றால் மிகும் நோய் அகியவற்றைக் கொண்ட அற்பமான ஒரு கூடு. (உயிர்க் குருவி போய்விட்டால் அதனால் என்ன பயன்) இந்த உண்மையை நல்லவர்கள் அறிந்திருக்கின்றனர். அதனால் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போல உடல் இன்பத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர்.

"பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந்து உளுத்து அசும்பு ஒழுகிய பொய்க்கூரை" என்பார் மணிவாசகப் பெருமான்.

இந்த உடம்பானது மாயையால் ஆனது. பிறவிகள் தோறும் ஈட்டிய நல்வினை என்னும் புண்ணியம், தீவினை என்னும் பாவம் ஆகிய இருவினைகளின் பயனாக இந்த உடம்பானது இறைவனால் படைத்தளிக்கப்படுகின்றது. இருவினைகளை அனுபவித்துக் கழித்து, மேலும் வினைகள் சாராமல் வாழ்ந்து, இறைவன் திருவடியைச் சார்வதற்காக வந்த இந்த அருமையான உடம்பு நிலையில்லாதது. மாற்றத்திற்கு உரியது. "வேற்று விகார விடக்கு உடம்பு" என்றார் மணிவாசகப் பெருமான். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் ஆனது. 

    "ஐந்து வகை ஆகின்ற பூதபேதத்தினால் ஆகின்ற யாக்கை நீர்மேல் அமர்கின்ற குமிழி என நிற்கின்றது என்ன நான் அறியாத காலம் எல்லாம், புந்தி மகிழ்வுற உண்டு உடுத்து இன்பம் ஆவதே போந்த நெறி என்று இருந்தேன்" என்றார் தாயுமானார்.

இந்த உடம்பே நன்மை தீமைகளை அறியத் துணை நிற்பது. உய்யும் நெறியில் நின்று, வினைகள் சாவியாகிப் போகுமாறு வாழ்ந்து ஈடேற வேண்டும். ஆவி சாவியாகிப் போக விடுதல் திருவருட்கு உடம்பாடானது அல்ல. உடம்பை உண்மை என்று கருதுகின்ற அறியாமை நீங்கவேண்டும். குரங்கின் கையில் அகப்பட்ட மாலை போல இந்த உடலின் அருமை அறியாது, இதனை வீணாக்கக் கூடாது.


"பஞ்சுஇட்ட அணைமிசை

கொஞ்சி, பலபல விஞ்சைச் சரசமொடு

          அணைத்து, மலர் இதழ் கடித்து, இருகரம்

          அடர்த்த குவிமுலை அழுத்தி, உரம் மிடர்

சங்குத் தொனியொடு பொங்க, குழல்மலர்

     சிந்த, கொடிஇடை தங்கிச் சுழல்இட,

          சரத் தொடிகள் வெயில் ஏறிப்ப, மதிநுதல்

          வியர்ப்ப, பரிபுரம் ஒலிப்ப, எழுமத

சம்பத்து இது செயல் இன்பத்து இருள்கொடு,

     வம்பில் பொருள்கள் வழங்கிற்று, இது பினை

          சலித்து, வெகு துயர் இளைப்பொடு உடல்பிணி

          பிடித்திட, அனைவரும் நகைப்ப, கருமயிர் ......நரைமேவி, 


தன் கைத் தடிகொடு, குந்தி கவி என,

உந்திக்கு அசனமும் மறந்திட்டு, உளமிக

          சலித்து, உடல் சலம் மிகுத்து, மதிசெவி

          விழிப்பு மறைபட, கிடத்தி, மனையவள்

சம்பத்து உறைமுறை அண்டைக் கொளுகையில்,

     சண்டக் கரு நமன் அண்டி, கொளு கயிறு

          எடுத்து, விசைகொடு பிடித்து, உயிர்தனை

          பதைப்ப, தனிவழி அடித்து கொடு செல,

சந்தித்து அவர் அவர் பங்குக்கு அழுது,

இரங்க, பிணம் எடும் என்றிட்டு, அறை பறை

          தடிப்ப, சுடலையில் இறக்கி, விறகொடு

          கொளுத்தி, ஒருபிடி பொடிக்கும் இலை எனும்.....உடல் ஆமோ?"

என்கின்றார் திருவண்ணாமலைத் திருப்புகழில் அடிகளார்.


தாயுமான அடிகளார் புலம்புவது காண்க.

ஐம்பூதத்தாலே அலக்கு அழிந்த தோடம் அற

    எம்பூத நாதன் அருள் எய்தும் நாள் எந்நாளோ? 

சத்த முதலாம் புலனில் சஞ்சரித்த கள்வர் எனும்

    பித்தர் பயம் தீர்ந்து பிழைக்கும் நாள் எந்நாளோ?

 நாளும் பொறிவழியை நாடாத வண்ணம் எமை

    ஆளும் பொறியால் அருள் வருவது எந்நாளோ?

வாக்கு ஆதி ஆன கன்ம மாயை தம்பால் வீண்காலம்

    போக்காமல் உண்மை பொருந்தும் நாள் எந்நாளோ?

மனம் ஆன வானரக் கைம் மாலை ஆக்காமல்

    எனை ஆள் அடிகள் அடி எய்துநாள் எந்நாளோ?

வேட்டைப் புலப்புலையர் மேவாத வண்ணம், மனக்

    காட்டைத் திருத்திக் கரை காண்பமது எந்நாளோ?

உந்து பிறப்பு இறப்பை உற்றுவிடாது, எந்தை அருள்

    வந்து பிறக்க மனம் இறப்பது எந்நாளோ?

புத்தி எனும் துத்திப் பொறி அரவின் வாய்த்தேரை

    ஒத்துவிடாது எந்தை அருள் ஓங்கும் நாள் எந்நாளோ?

ஆங்காரம் என்னும் மத யானை வாயிமல் கரும்பாய்

    ஏங்காமல், எந்தை அருள் எய்தும்நாள் எந்நாளோ?

சித்தம் எனும் பௌவத் திரைக்கடலில் வாழ் துரும்பாய்

    நித்தம் அலையாது அருளில் நிற்கும்நாள் எந்நாளோ?

வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டு ஓடச்

    சுத்தபர போகத்தைத் துய்க்கும் நாள் எந்நாளோ?

 சுத்தவித்தையே முதலாத் தோன்றும் ஓர் ஐந்துவகைத்

    தத்துவத்தை நீங்கி, அருள் சாரும் நாள் எந்நாளோ?

பொல்லாத காமப் புலைத்தொழிலில் என் அறிவு

    செல்லாமல், நன்னெறியில் சேரும் நாள் எந்நாளோ?

அடிகள் அடிக் கீழ்க்குடியாய் யாம்வாழா வண்ணம்

    குடிகெடுக்கும் பாழ் மடிமைக் கூறு ஒழிவது எந்நாளோ?

ஆன புறவிக்கருவி ஆறுபத்தும் மற்று உளவும்

    போன வழியும் கூடப் புல் முளைப்பது எந்நாளோ?

அந்தகனுக்கு எங்கும் இருள் ஆனவாறு, அறிவில்

    வந்தஇருள் வேலை வடியும் நாள் எந்நாளோ?

புன்மலத்தைச் சேர்ந்து, மலபோதம் பொருந்துதல் போய்,

    நின்மலத்தைச் சேர்ந்து, மலம் நீங்கும் நாள் எந்நாளோ?

கண்டுகண்டும் தேறாக் கலக்கம் எல்லாந் தீர்வண்ணம்

    பண்டைவினை வேரைப் பறிக்கும் நாள் எந்நாளோ?

பைங்கூழ் வினைதான் படுசாவியாக, எமக்கு

    எம் கோன் கிரண வெயில் எய்தும்நாள் எந்நாளோ?

குறித்தவிதம் ஆதியால் கூடும்வினை எல்லாம்

    வறுத்த வித்து ஆம் வண்ணம்அருள் வந்திடும்நாள் எந்நாளோ?

சஞ்சிதமே ஆதி சரக்கு ஆன முச்சேறும்

    வெந்த பொரியாக அருள் மேவும் நாள் எந்நாளோ?

தேகம் முதல் நான்காத் திரண்டு ஒன்றாய் நின்று இலகும்

    மோகம் மிகு மாயை முடியும் நாள் எந்நாளோ?

சத்த முதலாத் தழைத்து இங்கு எமக்கு உணர்த்தும்

    சுத்தமா மாயை தொடக்கு அறுவது எந்நாளோ?

எம்மை வினையை இறையை எம்பால் காட்டாத

    அம்மை திரோதை அகலும் நாள் எந்நாளோ?

நித்திரையாய் வந்து நினைவு அழிக்கும் கேவலமாம்

    சத்துருவை வெல்லும் சமர்த்து அறிவது எந்நாளோ?

சன்னல் பின்னல் ஆன சகலம் எனும் குப்பை இடை

    முன்னவன் ஞானக்கனலை மூட்டும் நாள் எந்நாளோ?

மாயா விகார மலம் ஒழி சுத்த அவத்தை

    தோயா அருளைத் தொடரும் நாள் எந்நாளோ?

உடம்பு அறியும் என்னும் அந்த ஊழல் எல்லாம் தீரத்

    திடம்பெறவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

செம்மை அறிவால் அறிந்து தேக ஆதிக்கு உள் இசைந்த

    எம்மைப் புலப்படவே யாம் அறிவது எந்நாளோ?

தத்துவமாம் பாழ்த்த சட உருவைத் தான் சுமந்த

    சித்து உருவாம் எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

பஞ்சப் பொறியை, உயிர் என்னும் அந்தப் பஞ்சம் அறச்

    செஞ்செவே எம்மைத் தெரிசிப்பது எந்நாளோ?

அந்தக் கரணம் உயிராம் என்ற அந்தரங்க

    சிந்தைக் கணத்தில் எம்மைத் தேர்ந்து அறிவது எந்நாளோ?

முக்குணத்தைச் சீவன்ரென்னும் மூடத்தை விட்டு, அருளால்

    அக்கணமே எம்மை அறிந்து கொள்வது எந்நாளோ?

காலைஉயிர் என்னும் கலாதிகள் சொற் கேளாமல்

    சீலமுடன் எம்மைத் தெளிந்துகொள்வது எந்நாளோ?

  வான்கெடுத்துத் தேடும் மதிகேடர் போல, எமை

    நான்கெடுத்துத் தேடாமல் நன்கு அறிவது எந்நாளோ?

மாயையால் ஆன இந்த உடம்பு இறையருளால் நமக்கு வாய்த்தது. அதிலும் உயர்ந்த இந்த மனிதப் பெறிவி வாய்த்தது. இதன் அருமையை எண்ணி, இந்த உடம்பைப் போற்றிப் பாதுகாத்து, நல்வழியில் வாழ்ந்து, நற்கதியை அடைதல் வேண்டும். பிறவி அற்ற பெருநிலையை அடையவதற்கு உபாயமாகவே இந்த உடம்பு நமக்கு அருளப் பெற்று உள்ளது. இன்னொரு பிறவி எடுப்பதற்கு ஏதுவாக கருவழியில் புகுதல் கூடாது. பெருவழியில் புகுதல் வேண்டும்.

முருகன் பவரோக வைத்தியநாதன். அவருடைய அடியவர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்க்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

"முருகா எனவுனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்

அருகாத செல்வம் அடைவர், வியாதி அடைந்து நையார்,

ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,

பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே"      --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை


பொடிவன பரசமயத்துத் தப்பிப் போந்தேன் ---

பொடிதல் - நிலைத்து நிற்காது அழிதல். 

பர சமயம் - அயல் சமயம். 

"பரசமய கலை ஆரவாரம் அற" என்பார் சீர்பாத வகுப்பில் அடிகளார். தத்தமது சமயமே உயர்ந்தது என்று ஆரவாரிப்பது பரசமயங்களின் ஆரவாரங்களில் இருந்து தப்பிப் பிழைத்தல் வேண்டும். "சமயவாதிகள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்பார் மணிவாசகப் பெருமான்.


"வம்பு அறாச் சில கன்னம் இடும், சம-

     யத்துக் கத்துத் ...... திரையாளர்,

வன் கலாத்திரள் தன்னை அகன்று,

     மனத்தில் பற்றுஅற்று, ...... அருளாலே,


தம் பராக்கு அற, நின்னை உணர்ந்து, உரு-

     கிப் பொன் பத்மக் ...... கழல்சேர்வார்,

தம் குழாத்தினில் என்னையும் அன்பொடு

     வைக்கச் சற்றுக் ...... கருதாதோ?"              --- கச்சித் திருப்புகழ்.


"கலகல கலெனக் கண்ட பேரொடு

சிலுகிடு சமயப் பங்க வாதிகள்

கதறிய வெகுசொல் பங்கம் ஆகிய ...... பொங்களாவுங்


கலைகளும் ஒழியப் பஞ்ச பூதமும்

ஒழியுற மொழியில் துஞ்சு றாதன

கரணமும் ஒழியத் தந்த ஞானம் ...... இருந்தவாறென்."       ---  (அலகில்) திருப்புகழ்.


 "நிகரில் பஞ்ச பூதமும் நினையும் நெஞ்சும் ஆவியும்

   நெகிழ வந்து நேர்படும்                   அவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர

   நிருப அங்கு மாரவெள்                   எனவேதம்

சகர சங்க சாகரம் என முழங்கு வாதிகள்

   சமய பஞ்ச பாதகர்                       அறியாத

தனிமை கண்டது ஆனகிண் கிணிய தண்டை சூழ்வன

   சரண புண்ட ரீகம்அது                   அருள்வாயே. "    ---  திருப்புகழ்.

இத்தகைய வன்மைக் குணமுடைய சமய வாதிகளான கலைக் கூட்டத்தினின்று விலகிவிட வேண்டும். அவ்வாறு விலகியவர்கள் உத்தம அடியார்கள்.


கருத்துரை

முருகா! திருவடியில் அன்பு வைக்க அருள்வாய்.


நன்றி மறத்தல் பெரும்பாவம்


நன்றி மறத்தல் பெரும்பாவம் 

-----

பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசத்தைக் கழித்து, கரந்துறை வாசத்திற்கு (அஞ்ஞாத வாசம்) விராட தேசமே தகுந்தது என எண்ணி, பாண்டவர்கள் விராடனுடைய நாட்டின் எல்லையில், மயான பூமியில் உள்ள காளி கோயிலின் எதிரில் உள்ள வன்னி மரத்தில் தமது படைக்கலங்களை ஒளித்து வைத்து, தமது உருவை ஒருவரும் காணாவண்ணம் மாற்றிக் கொண்டு, விராட நாட்டில் புகுகின்றனர்.

தருமன், கங்கன் என்னும் துறவி ஆகின்றான். அவனை விராட மன்னன் தனது துணையாக ஏற்றுக் கொள்கின்றான். வீரத்தில் வல்லவனான பீமன், பலாயனன் என்னும் பெயருடன் தலைமைச் சமையல்காரனாக விராடன் அரண்மனையில் புகுகின்றான். ஊர்வசி தனக்கு முன்னரே அளித்திருந்த சாபத்தின் பலனாக, பேடி உருவத்தைத் தாங்கி, வில்லில் மிகுந்தவனாகிய அருச்சுனன், பிருகன்னளை என்னும் பெயரோடு, விராட மன்னனின் மகளாகிய உத்தரைக்குப் பாங்கியும் ஆசிரியரும் ஆகின்றான். நகுலன், தாமக்கிரந்தி என்னும் பெரயோடு, விராட மன்னனின் குதிரைப் படைகளைக் காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். கண்ணனே வியக்கும்படி ஞானசாத்திரங்களில் வல்லவனாகிய சகாதேவன், தந்திரிபாலன் என்னும் பெயர் தாங்கி, விராட மன்னனின் ஆநிரை (ஆ - பசு. நிரை - கூட்டம்) காக்கும் தொழிலை மேற்கொள்கின்றான். பாஞ்சாலி, விரதசாரிணி என்னும் பெயரோடு, விராட மன்னன் தேவிக்கு வண்ணமகளாகப் பணியில் அமர்கின்றாள்.

இத்தனை உபகாரமும் விராட மன்னனின் கருணையினால் நடந்தது.  தேவமைந்தர்களான பாண்டவர்களும்,  அயோனிஜையாக வேள்வியில் அவதரித்த பாஞ்சாலியும் வாழ்ந்திருந்த காலத்தில் விராடநாடு எல்லா வளங்களும் நிறைந்ததாக விளங்கியது. நல்லவர்கள் வாழுகின்ற இடம் சிறக்கும். "இச்சை இல்லார் இட்ட மலம் பட்ட இடம் பொன் ஆகும்" என்பது வள்ளல்பெருமான் அருள்வாக்கு. கீழோரது பாதம் பட்டால், அந்த இடம் விளங்காது. நல்லவர்கள் பாதம் பட்ட இடம் விளங்கும். எனவே, பாண்டவர்கள் இருந்ததால் விராடநாடு செழிப்பாக இருந்ததில் ஐயம் இல்லை.

விராட நாட்டுக்கு வந்த வாசவன் என்னும் மற்போர் வீரனை வெல்லுதற்கு உரியவன், தலைமைச் சமையல்காரனான பலாயனனே என்று கங்கன் சொல்ல, விராட மன்னனின் ஆணைக்கு இணங்க, பலாயனனால் வாசவன் தோற்கடிக்கப்பட்டான்.

கீசகன் தனது தமக்கையும், விராட மன்னனின் தேவியும் ஆன சுதேட்டிணையைக் காண வந்தபோது, அவளுடன் இருந்த விரதசாரிணியைக் கண்டு அவளைக் காமுற்றான். பின்னர், அவனை, பலாயனன் கொன்று வீழ்த்தினான். அது கண்டு வெகுண்டு எழுந்த உபகீசகர்களையும் பலாயனன் கொன்று அழித்தான்.

  துரியோதனன் தனது ஒற்றர்களை நாலாபக்கமும் ஏவி, பாண்டவர்கள் வாழும் இடத்தை வெளிப்படுத்த முயன்றுகொண்டு இருந்தான். ஒற்றர்களில் ஒருவன் விராடனது நாட்டின் வளமிக்க வாழ்வையும், கீசகன் ஒரு வண்ணமகள் காரணத்தால் மடிந்ததையும் துரியோதனனுக்கு அறிவிக்கின்றான்.

துரியோதனன் ஆணைக்கு இணங்கி, விராட மன்னனது ஆநிரையைக் கவர, திரிகர்த்தன் என்பவன் படை எடுத்து வருகின்றான். திரிகர்த்தனை வென்று, அவனால் சிறைபிடிக்கப்பட்ட விராட மன்னனை பலாயனன் மீட்கின்றான். தமக்கிரந்தி பகைவர்களது குதிரைகளைக் கவர, தந்திரிபாலன் ஆநிரையை மீட்டு வருகின்றான்.

இதை அறிந்த துரியோதனன் பெரும் படைகளுடன் விராட நாட்டின் மீது போர்த் தொடுக்கின்றான். அவனை எதிர்கொள்ள, விராட மன்னின் மகன் உத்தரன், தக்க சாரதியைத் தேடுகின்றான். விரதசாரிணி சொல்ல, பிருகன்னளை சாரதி ஆகின்றான். போரில் தோற்று ஒடிய உத்தரனைத் தேரினை ஓட்டும்படி பணித்து, பிருகன்னளை போர் புரிகின்றான். 

போர் முகத்தில் தனக்கு எதிர் வந்த பேடியைக் கண்டு துரோணர் ஐயுறுகின்றார். நான்கு நாழிகையில், பிருகன்னளை ஆக இருந்த அருச்சுனன், ஊர்வசியின் சாபம் தீர்ந்தபடியால், தனது பழைய உருவைப் பெறுகின்றான். போரில் அனைவரையும் வென்று, உத்தரனோடு விராடநாடு திரும்புகின்றான். அருச்சுனன் மீண்டு வந்து, வன்னிமரப் பொந்தில் முன்புபோல ஆயுதங்களை வைத்து, பேடி வடிவம் கொண்டு, உத்தரனுடன் விராடனது தலைநகர்க்கு மீளுகின்றான்.

தன் மகனது வெற்றி அது என்று எண்ணிய விராட மன்னன், அவனை வரவேற்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்யப் பணித்து, அவன் நாடு திரும்பும் வரையில், கங்கனோடு பகடை ஆடுகின்றான். தன் மகனது வெற்றியைப் பேசிய விராட மன்னனுக்கு, "அது பேடியின் வெற்றி" என்கின்றான். மனம் வெகுண்ட விராட மன்னன் தனது கையில் இருந்த பகடைக் காயை, கங்கன் மேல் வீச, அது கங்கனது நெற்றியில் பட்டு குருதி வழிய, விரதசாரிணி ஓடிவந்து, குருதியைத் தனது ஆடையால் மாற்றுகின்றாள். கங்கனது குருதி நிலத்தில் விழுந்தால், விராட நாட்டுக்குக் கேடு என்று சொல்லுகின்றாள் விரதசாரிணி. (நல்லவர்கள் இரத்தம் சிந்தக் கூடாது) விராடன் வருந்துகின்றான். அரண்மனை புகுந்த உத்தரன் கங்கனை வணங்கி, நெற்றி வடுவைக் கண்டு, தந்தையால் நிகழ்ந்தமை அறிந்து, பொறுக்குமாறு வேண்டுகின்றான். விராட தேசத்தில் உருமாறி இருப்பவர்கள் பஞ்சபாண்டவர்களும் பாஞ்சாலியுமே என உத்தரன் அறிவிக்கின்றான்.

பாண்டவர்களும் பாஞ்சாலியும் தமது உண்மை உருவை வெளிப்படுத்துகின்றனர். தருமனது நெற்றியில் உண்டான வடுவின் காரணத்தை, பாஞ்சாலி கூற, பீமன் சினம் கொள்ள, அருச்சுனன் வில்லை எடுக்கின்றான். தருமன் தனது தம்பியரின் சினத்தை மாற்றப் பின்வருமாறு அறிவுரை கூறுகின்றான். 

"பற்றி எரியும் தன்மையினை உடைய பெரும் காட்டில் வாழும் காலம் முடிந்து, அஞ்ஞாத வாசத்திற்குத் தக்க நாடு என எண்ணி, இந்த விராடநாட்டுக்கு வந்தோம். விராட மன்னனின் தயவால், நம்முடைய எண்ணம் ஈடேற இங்கு பாதுகாப்பாகத் தங்கி இருந்தோம். விராட மன்னனால் பல நன்மைகளை அடைந்த நாம் அவற்றைக் கருத்தில் கொள்ளாது, சினம் மிகுதியால் எனது நெற்றியில் வடுவினை உண்டாக்கிய ஒரு சிறு தவற்றினை விராட மன்னன் செய்தான் என்பதை மட்டும் பெரிதாக எண்ணி, அவன் மீது கோபத்தை வெளிப்படுத்த எண்ணுவது தவறு."

"ஒருத்தர் ஓர் உதவி செய்தாலும், காலத்தினால் செய்த அந்த உதவியை மறவாமல்,  பிறகு, அந்த உதவியைச் செய்தவர், செய்கின்ற பல குற்றங்களையும் பொறுப்பது பெரியோர் செய்கை. ஆனால், கீழ்மக்களோ, ஒருவர் தமக்குப் பல உதவிகளைச் செய்து இருந்தாலும், அவரது ஒரு செயல் தீமையைத் தருவதாய் முடிந்தால், அவர் முன்பு செய்த பல உதவிகளையும் மறந்து அவர் மீது சினம் கொள்ளாமல், அமைதியாய் இருக்கமாட்டார்".

"எனவே, நீங்கள் கயவர் தன்மையை மேற்கொள்வது நல்லதல்ல. பெரியோர் தன்மையை மேற்கொண்டு விராடன் செய்த பல நன்மைகளை எண்ணி, என் நெற்றியில் வடுச்செய்த இந்த ஒரு தீமையை மறந்துவிட வேண்டும்."

குந்திதேவியின் கட்டளை தனது மகன்கள் ஐவரும் எந்நாளும் ஒற்றுமை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது. தாயின் கட்டளையை மனம் கொண்ட பீமார்ச்சுனர், அண்ணனது சொல்லுக்கு மாறாது சினம் தணிந்தனர்.

இந்த நிகழ்வை வில்லிபுத்தூரார், பின்வரும் பாடல்களில் அமைத்துக் காட்டினார்.

"ஒன்று உதவி செய்யினும் அவ் உதவி மறவாமல்

பின்றை அவர் செய் பிழை பொறுத்திடுவர் பெரியோர்;

நன்றி பலவாக, ஒரு நவை புரிவரேனும்

கன்றிடுவது அன்றி முது கயவர் நினையாரே."

 

"அனலும் முதுகானகம் அகன்று, நெடுநாள் நம்

நினைவு வழுவாமல் இவன் நீழலில் இருந்தோம்;

சினம் மிகுதலில் தவறு செய்தனன் எனப்போய்

முனிதல் பழுது ஆகும் என முன்னவன் மொழிந்தான்".

 

நாலடியார் இந்த உண்மையைப் பின்வருமாறு அறிவிக்கின்றது.

"ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த

பிழைநூறும் சான்றோர் பொறுப்பர்: --- கயவர்க்கு

எழுநூறு நன்றிசெய்து ஒன்று தீது ஆயின்,

எழுநூறும் தீதாய் விடும்."

இதன் பொருள் ---

ஓர் உதவியைச் செய்தவர், பின்னர் தமக்குப் பலநூறு தீமைகளைச் செய்திருந்தாலும், பெரியோர் அதைப் பொருட்படுத்த மாட்டார். ஆனால், கீழ்மக்களுக்கு எழுநூறு நன்மைகள் செய்திருந்து, தவறிப் போய் ஒரு தீமை செய்ய நேர்ந்து விட்டால், அந்த ஒரு தீமையையே மனத்தில் கொண்டு, முன்னர் செய்த எழுநூறு நன்மைகளையும் தீமையாகவே எண்ணுவர்.

கயவர்களின் அறிவு, நன்மைகளில் அழுந்தி நில்லாமல் தீமைகளையே முனைந்து எண்ணி நிற்கும் என்பது கருத்து.

"நிலம்புடை பெயர்வது ஆயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்" என்கின்றது புறநானூறு.  உலகமே தலைகீழாகப் போய்விடும் என்ற போதும், ஒருவன் செய்த உதவியை அழிக்க முயன்றவர்க்கு உய்வு இல்லை. "நன்றி செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும் குன்றா வாய்மை" என்கின்றது கல்லாடம்.

வேதங்களை எல்லோராலும் படித்து அறிந்துகொள்ள முடியாது. எனவே, அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளை நீதிநூல்களாக வடித்துப் பெரியோர் தந்தனர். நீதிநூல்களில் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விளக்கமாகவே புராணங்கள் எழுந்தன என்பதை அறிதல் வேண்டும்.

எனவே, ஒருவர் தனக்குச் செய்த நன்மையானது சிறியதே ஆனாலும், அதனை நன்றி உணர்வுடன் நினைவில் கொள்ள வேண்டும். மறந்து விடுதல் ஆகாது. "நன்றி மறப்பது நன்று அன்று" என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்தியது கொண்டு,  "நன்றி மறவேல்" என்பதைப் பற்றி வாழ்தல் நன்மையைத் தரும்.


நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை

 


நன்றி அறிதல் - நன்றி கொல்லாமை.

-----

மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குப் பெற்றிருக்க வேண்டிய பண்புகள் பல ஆகும். அப்பண்புகள் அனைத்திலும் தலையாயது, "செய்ந்நன்றி அறிதல்" என்னும் பண்பு ஆகும்.

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம், உய்வுஇல்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு"

என்று அறவுறுத்தினார் திருவள்ளுவ நாயனார். எந்த நன்மைகளையும் மறந்து அழித்தவருக்கு மன்னிப்பு உண்டு. செய்த உதவியை மறந்தவருக்கு மன்னிப்பே இல்லை.

கொள்வதும் கொடுப்பதும் ஆக அமைவதே வாழ்க்கை ஆகும். முட்டுப்படாமல் யாரும் வாழ்ந்துவிட முடியாது. சமுதாயம் என்பது மனிதர்களின் கூட்டு வாழ்வாக விளங்குகின்றது. ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வதன் மூலமே சமுதாயமானது உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றது. ஒருவர் ஒரு காலத்தில் தமக்குச் செய்த நன்மையை மறவாமல் போற்றுவது மனிதப் பண்பின் சிகரமாக உள்ளது என்பதை மறுப்பதற்கு இல்லை.

செய்ந்நன்றி அறிதல் என்னும் அதிகாரத் தலைப்பிற்கு உரை வகுத்த பரிமேலழகர், "தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை" என்பார். மணக்குடவர், மேலும் ஒரு படி கடந்து, "பிறர் செய்த தீமையையும் மறந்து நன்மையை மறவாமை" என்றார். "நன்றி எனப்படுவது இதயத்தின் நிறைவு" (Gratitude is the memory of the heart) என்று மேசியூ என்னும் மேல்நாட்டு அறிஞர் குறிப்பிடுவார். சர் ராபர்ட் வால்போல் எனும் அறிஞர், "எதிர்கால நன்மைக்கு நிகழ் காலத்தில் நன்றி என்னும் உணர்வு நின்று நிலைத்து இருக்கவேண்டும்" (Gratitude is a lively sense of future favours) என்பார்.

ஔவைப் பிராட்டியார் அருளிய அருந்தமிழ் நூல்களுள் "மூதுரை" என்பதும் ஒன்று. மூதுரை என்பதற்கு மூத்த உரை அல்லது அறிவுரை என்று பொருள். மூதுரை என்று வழங்கப்பட்டு வந்த இந்த அருமையான நூல் பிற்காலத்தில், "வாக்குண்டாம்" என்ற பெயராலும் வழங்கப்படுகின்றது. "வாக்குண்டாம்" என்று இந்த நூலின் கடவுள் வாழ்த்துச் செய்யுள் தொடங்குவதால், முதலில் வந்த சொல்லே நூலின் பெயராக அமைந்து விட்டது.  நன்றியுடைமையின் இன்றியமையாமையை நாள்தோறும் தாம் காணும் காட்சியினை வைத்தே அது அறிவுறுத்துகின்றது.

தென்னங்கன்றுக்கு மனிதன் அதன் வேரில் நீரை ஊற்றுகின்றான். தென்னங்கன்று வளர்கின்றது. எருவை இடுகின்றான். மேலும் நன்றாக வளர்கின்றது. நீண்ட மரமாக உயர்ந்து குலை தள்ளியது. மனிதன் தென்னையின் இளங்காயைப் பறித்து, அதன் உள்ளிருக்கும் நீரைப் பருகுகின்றான். அது இனிக்கின்றது. இவன் ஊற்றிய தண்ணீர் போல், அவன் குடித்த இளநீர் இல்லை.

"நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால், அந்நன்றி

என்று தரும்கொல் என வேண்டா --- நின்று

தளரா வளர் தெங்கு, தாள் உண்ட நீரைத்

தலையாலே தான் தருதலால்"

என்று காட்டினார் ஔவைப் பிராட்டியார்.

இதன் பொருள் ---

நின்று தளரா வளர் தெங்கு - ஒரே இடத்தில் நிலைபெற்று, சோராமல் வளர்கின்ற தென்னை மரமானது, தாள் உண்ட நீரை - தன் அடியால் (வேரின் மூலமாக) உண்ட தண்ணீரை, தலையாலே தான் தருதலால் - தனது முடியாலே, சுவையுள்ள இளநீராக்கித் தருதலால், ஒருவற்கு நன்றி செய்தக்கால் - நல்ல குணமுடைய ஒருவனுக்கு ஓர் உதவியை ஒரு காலத்தில் செய்தால், அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா - அந்த உதவியை அவன் எப்பொழுது செய்வானோ என்று ஐயம் கொள்ள வேண்டுவதில்லை.

நற்குணம் உடையவனுக்கு உதவி செய்தால், அவனும் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பது கருத்து.

தாள் உண்ட நீர் --- தென்னை மரத்திற்குப் பாய்ச்சிய நீர், அது தருகின்ற இளநீரைப் போலத் தூய்மையானதும், இன்சுவை உடையதும், மருத்துவக் குணம் வாய்ந்ததும் அல்ல. தான் வளர்வதற்குப் பாய்ச்சிய எந்த நீரையும் உண்டு, அதற்கு கைம்மாற்றாக (பிரதி உபகாரமாக) அற்புதமானதொரு இளநீரைத் தென்னை மரமானது அது உள்ள காலம் வரை தருகின்றது. ஒரு தேங்காயை வைத்து உருவாக்கி வளர்க்கப்பட்ட தென்னை மரமானது, தான் உள்ளவரையில் எல்லோருக்கும் இளநீர்க் காய்களை அளவில்லாமல் வழங்கி வருகின்றது. தன்னை வைத்தவனுக்கு மட்டுமல்லாமல், அவனது சந்ததிக்கும் மட்டுமல்லாது, தன்னை வந்து சார்ந்தோர்க்கும், இன்னார் இனியார் என்று பாராமல், வழங்கி வருகின்றது.

அதுபோலவே,  ஒருவன் ஒருவனுக்குச் செய்த உபகாரமானது, அவனாலோ, அல்லது யாராலோ, எவ்விதத்திலாவது, பலவிதமாக வந்து பயன் தரும் என்பதை அறியலாம். செய்த அறச் செயலானது நிலைத்து நின்று, தக்க காலத்தில், உரிய பயனைத் தரும். எனவே, இயன்ற வழிகளில் எல்லாம், அறச் செயல்களை எப்போதும் ஒழியாது செய்து வருதல் வேண்டும் என்பதும் இப் பாடலின் கருத்து. 

அறத்தை நாளும் செய்யவேண்டும் என்பது வாழ்வியல் நெறி ஆகும். அறங்களைச் சிதைத்தல் மறம் (பாவம்) ஆகும். அது மன்னிக்க முடியாத பெரும் குற்றமும் ஆகும். ஒருவன் பெரிய அறங்களைச் சிதைத்தால் கூட, பாவம் என்னும் பாழ்நரகில் இருந்து மீண்டு விடலாம். ஆனால், ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தவனுக்கு, எப்படிப் பார்த்தாலும் அந்தப் பாவத்தில் இருந்து விடுதலை இல்லை.

"ஆன்முலை அறுத்த அறன் இலோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,

வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என,

நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் 

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என

அறம் பாடிற்றே, ஆயிழை கணவ!"         --- புறநானூறு.

இதன் பொருள் ---- 

அழகிய அணிகலன்களை அணிந்துள்ள மங்கையின் மணவாளனே! பசுவின் மடியை அறுத்த பெரும்பாவத்தைப் புரிந்தோர்க்கும், பெண்ணின் தாய்மைப் பேற்றை அழித்த கொடுமையைப் புரிந்தோர்க்கும், இருமுது குரவர்களாகிய தாய், தந்தை, குரு முதலானோரைப் பழித்த கொடுமையாளர்க்கும், அவர்கள் செய்த தீமைகளுக்குப் பரிகாரம் உண்டு. ஆனால், இந்த மண்ணுலகமே கீழ்மேலாகப் புரளும் ஊழிக் காலம் வந்தாலும், செய்த நன்றியைக் கொன்றவர்களுக்கு அந்தப் பாவத்தில் இருந்து விடுபட வழியே இல்லை என்று அறநூல்கள் கூறுகின்றன.

துன்பப்பட்ட காலத்தில் உதவிய ஒருவனுக்கு, அவன் துன்பப்படும் காலத்தில் உதவவில்லை என்றால், அது அவன் பரம்பரைக்கும் ஆகாது என்கின்றது "கலித்தொகை" என்னும் சங்கநூல்.

"ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன்

எச்சத்துள் ஆயினும் தெறியாது விடாதே காண்"..

இதன் பொருள் ---

வறுமைக் காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.


"இசையா ஒருபொருள் இல்என்றால் யார்க்கும்

வசைஅன்று, வையத்து இயற்கை –--  நசைஅழுங்க

நின்றுஓடிப் பொய்த்தல் நிரைதொடீஇ செய்ந்நன்றி

கொன்றாரின் குற்றம் உடைத்து".

என்கிறது நாலடியார்.

தம்மிடம் கொடுக்க இயலாத ஒரு பொருளை வந்து கேட்பவரிடம் இல்லை என்பது ஒன்றும் குற்றம் இல்லை. இது உலக இயல்புதான். ஆனால், ஒன்றைத் தருவதாக வாக்களித்து விட்டு, பின் அந்த நம்பிக்கை கெட, இல்லை என்று பொய் கூறுவது, செய்த நன்றியை மறப்பதற்கு ஒப்பான குற்றம் ஆகும்.

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம் வாக்களித்து விட்டு சென்றான் சுக்கிரீவன். மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான். அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான்...."நீயுமா செய்நன்றி மறந்தாய்" என்று. அப்போது அனுமன் கூறுவான் "பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய்நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன். எனவே, நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

"சிதைவு அகல் காதல் தாயை, 

தந்தையை, குருவை, தெய்வப்

பதவி அந்தணரை, ஆவை, 

பாலரை, பாவைமாரை

வதை புரிகுநர்க்கும் உண்டாம் 

மாற்றலாம் ஆற்றல், மாயா

உதவி கொன்றார்க்கு என்றேனும் 

ஒழிக்கலாம் உபயம் உண்டோ?"    --- கம்பராமாயணம்.

தாய், தந்தை, குரு, அந்தணர், பசு, குழந்தை, பெண் ஆகியவர்களைக் கொல்லுதல் கொடும் பாதகச் செயலாகும். இருப்பினும் அப்பாவங்களைப் போக்குவதற்கு உரிய கழுவாய் உண்டு. ஆனால், செய்ந்நன்றி மறத்தலுக்கோ எத்தகைய கழுவாயும் இல்லை.

தனது அண்ணனான இராமனுக்கு அணுவளவேனும் துரோகம் எண்ணியிருந்தால், இன்னின்ன பாவங்களைப் புரிந்த பாவிகள் அடையும் கொடிய நரகத்தை நான் உறுவேனாக என்று பரதன் கூறுகின்றான். இதில் தலைமையாக அவன் சொல்லி இருப்பது சிந்தனைக்கு உரியது.

"கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,

மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்,

நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,

என்று இவர் உறு நரகு என்னது ஆகவே".    --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

தனக்கும், தனது கன்றுக்கும் பயன்படும்படி பசுவினிடத்தில் நிறையப் பாலை இறைவன் அளித்திருக்கின்றான். கன்றுக்குச் சிறிதும் பால் விடாமல், தானே கறந்து அநுபவித்தல் பாதகம் ஆகும். பலர் கூடியுள்ள இடத்தில் பிறர் பொருளை மறைத்து, அதைக் கைப்பற்றல் அறம் அல்லாத செயல் ஆகும். தனக்கு நன்மை செய்தவர்களைத் தூற்றுகின்றவன் நாகரிகம் அற்ற நாவினை உடையவன். இவர்கள் அடைவது நரகமே ஆகும்.

தாய்ப்பாலை இழந்து இறந்து போன கன்றின் தோலை உரித்து அதனுள் வைக்கோலைப் பொதிந்து உயிருள்ள கன்று போல் காட்டிப் பகக்களிடம் வஞ்சமாய்க் கறக்கும் பாவச் செயல்கள் மலிந்து உள்ளன. இது பெரும்பாவம் என்கின்றது கம்பராமாயணமும், பின்வரும் சிறுபஞ்சமூலம் பாடலும்..


"தோற்கன்று காட்டிக் கறவார், கறந்தபால்

பாற்பட்டார் உண்ணார், பழிபாவம் - பாற்பட்டார்

ஏற்றவா தின்புற்று வாழ்வன ஈடு அழியக்

கூற்று உவப்பச் செய்யார் கொணர்ந்து."   --- சிறுபஞ்சமூலம்.

"சுக்கிரீவன் பெறுதற்கு அரிய அரசை நம்மால் பெற்றான். அவனுக்கு நாம் செய்த உதவியை அவன் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு உதவியவர்க்குத் திரும்ப உதவி செய்யவேண்டும் என்னும் அறத்தை அவன் மறந்தான். நம்மால் பெற்ற அரசியல் வாழ்வில் இப்போது அவன் மயங்கிக் கிடக்கின்றான். செய்த நன்றிக்குத் திரும்ப உதவி செய்யாது, நன்றியைக் கொன்றுவிட்டான். அருமையான நட்பு என்னும் கயிற்றையும் அறுத்து விட்டான். இத்தகையவனைக் கொன்று அழித்தல் குற்றம் ஆகாது. நீ சென்று அவன் எண்ணம் என்ன என்று அறிந்து வருவாய்" என்று இராமபிரான் இலக்குவனுக்குக் கூறுகின்றார்.

"நன்றி கொன்று, அரு நட்பினை நார் அறுத்து,

ஒன்றும் மெய்ம்மை சிதைத்து, உரை பொய்த்துளார்க்

கொன்று நீக்குதல் குற்றத்தில் தங்குமோ?

சென்று, மற்று அவன் சிந்தையைத் தேர்குவாய்."     --- கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

இப்படி ஒருவன் தனக்குச் செய்த நன்றியைச் சிதைத்து,  பெறுவதற்கு அருமையான நட்பாகிய அன்புக் கயிறு அற அழித்து, எல்லோர்க்கும் ஏற்றதாகப் பொருந்தி நிற்கும் வாய்மையைக் குலைத்துவிட்டு, வாக்குத் தவறியவனைக்  கொன்று ஒழிப்பது, பழிபாவங்களிலிருந்து நீங்கிய செயலே ஆகும். ஆகவே, நீ அங்கே சென்று அச்சுக்கிரீவனது மன நிலையை ஆராய்ந்து அறிந்து வருவாய்;                                                                                               

"நன்றி, செய்குநர்ப் பிழைத்தோர்க்கு உய்வு இல என்னும்

குன்றா வாய்மை நின்று நிலை காட்டித்

தங்குவன கண்டும் வலிமனங் கூடி

ஏகவும் துணிந்தனம் எம்பெரும் படிறு

சிறிதுநின்று இயம்ப உழையினம் கேண்மின்ம்... 

என்று கல்லாடம் அறிவுறுத்தும்.


நன்றி அறிதல் --- புண்ணியம். நல்வினை.

நன்றி கொல்லுதல் --- பாவம். தீவினை.

பிற பாவங்களுக்குக் கழுவாய் உண்டு. நன்றி கொன்ற பாவத்திற்கு மட்டும் கழுவாய் என்பதே இல்லை.

ஒருவர் தனக்குச் செய்த நன்மையை எக்காலத்தும் மறவாது இருத்தல் வேண்டும். அதன் அறிகுறியாகத்  தன்னால் முடிந்த உதவியைக் கைம்மாற்றாகச்  செய்யலாம். மணக்குடவர்  காட்டியபடி, ஒருவர்  தனக்குச் செய்த தீமையை  மறந்துவிட வேண்டும். அவர் செய்த உதவியை மறவாது  இருக்க வேண்டும். செய்த உதவியை மறந்து , பழித்துப் பேசுதலும், தீமை செய்தலும் பாவம் ஆகும்.  யார்க்கும் முட்டுப்பாடு வரும். தனக்கு உதவிய ஒருவருக்கு முட்டுப்பாடு வந்தத் என்பதை அறிந்தாலோ, கேள்விப்பட்டாலோ, முடிந்த வகையில் உதவுதல் வேண்டும். மேலே கலித்தொகை கூறியது போல, துன்பப்பட்டுக் கொண்டு இருந்த காலத்தில் உதவியவனுக்குத் திரும்ப உதவாதவன் தானே அழிந்துபோவான். அவனை அது தாக்காவிட்டாலும் அவன் எச்சமாகிய அவன் பிள்ளைகளையாவது தாக்கியே தீரும்.



பொது --- 1084. முழுமதி அனைய

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

முழுமதி அனைய (பொது)


முருகா! 

திருவடி அருள்வாய்.


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தந்ததான


முழுமதி யனைய முகமிரு குழையில்

     முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா


முதலறி வதனை வளைபவர் கலவி

     முழுகிய வினையை ...... மொண்டுநாயேன்


வழிவழி யடிமை யெனுமறி வகல

     மனமுறு துயர்கள் ...... வெந்துவாட


மதிதரு மதிக கதிபெறு மடிகள்

     மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய்


எழுதிட அரிய எழில்மற மகளின்

     இருதன கிரிகள் ...... தங்குமார்பா


எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி

     இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய்


அழகிய குமர எழுதல மகிழ

     அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே


அமருல கிறைவ உமைதரு புதல்வ

     அரியர பிரமர் ...... தம்பிரானே.


                     பதம் பிரித்தல்


முழுமதி அனைய முகம், இரு குழையில்

     முனிவிழி முனைகள் ...... கொண்டு, மூவா


முதல் அறிவு அதனை வளைபவர், கலவி

     முழுகிய வினையை ...... மொண்டு, நாயேன்


வழிவழி அடிமை எனும் அறிவு அகல,

     மனம்உறு துயர்கள் ...... வெந்து வாட,


மதிதரும் அதிக கதிபெறும் அடிகள்

     மகிழ்வொடு புகழும் ...... அன்பு தாராய்.


எழுதிட அரிய எழில்மற மகளின்

     இருதன கிரிகள் ...... தங்குமார்பா!


எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி

     இமையவர் சிறையை ...... அன்று மீள்வாய்!


அழகிய குமர! எழுதலம் மகிழ

     அறுவர்கள் முலையை ...... உண்ட வாழ்வே!


அமர் உலகு இறைவ! உமை தரு புதல்வ!

     அரிஅர பிரமர் ...... தம்பிரானே.

பதவுரை

எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் தங்கும் மார்பா --- ஓவியமாகத் தீட்டுதற்கு அருமையான அழகினை உடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற இரு மார்பகங்கள் தங்கி உள்ள திருமார்பினரே!

எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை அன்று மீள்வாய் --- எதிர் வந்து போர் புரிந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியுமாறு செய்து, தேவர்களைச் சிறையில் இருந்து மீள விட்டவரே!

அழகிய குமர --- அழகு மிக்க குமாரக் கடவுளே!

  எழுதலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே --- ஏழுலகங்களும் மகிழும்படியாக கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு அருளிய செல்வமே!

அமர் உலகு இறைவ --- தேவலோகத்துக்குத் தலைவரே!

  உமை தரு புதல்வ --- உமையம்மையின் திருப்புதல்வரே!

அரிஅர பிரமர்தம் பிரானே --- திருமால், அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளின் தனிப்பெருந்தலைவரே!

முழுமதி அனைய முகம் --- முழுமதியை ஒத்த முகத்தையும், 

இரு குழையில் முனிவிழி முனைகள் கொண்டு --- காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்களையும் கொண்டு,

மூவா முதல் அறிவு அதனை வளைபவர் --- முற்றாத அறிவு உடையவர்களைத் தம் வசப்படுத்துகின்ற பொதுமகளிரின்,

கலவி முழுகிய வினையை மொண்டு --- கலவி இன்பத்தில் முழுகிக் கிடக்கும் செயலை உடைய,

நாயேன் --- நாயினும் கடையான நான்,

வழிவழி அடிமை எனும் அறிவு அகல --- தேவரீருக்கு வழிவழி அடிமைப்பட்டவன் என்னும் அறிவு விசாலப்படவும்,

மனம்உறு துயர்கள் வெந்து வாட --- மனத்தில் உண்டான துயரங்கள் வெந்து ஒழியவும்,

மதிதரும் --- நல்லறிவைத் தருவதும், 

அதிக கதிபெறும் அடிகள் --- உயிர்கள் மேலான கதியைப் பெற உதவுவதும் ஆகிய தேவரீரது திருவடிகளை,

மகிழ்வொடு புகழும் அன்பு தாராய் --- உள்ள மகிழ்வோடு புகழ்ந்து வழிபடும் அன்பினைத் தந்து அருள்வீராக.

பொழிப்புரை

ஓவியமாகத் தீட்டுதற்கு அருமையான அழகினை உடைய வேடர் மகளாகிய வள்ளிநாயகியின் மலைபோன்ற இரு மார்பகங்கள் தங்கி உள்ள திருமார்பினரே!

எதிர் வந்து போர் புரிந்த அரக்கர்கள் பொடிபட்டு அழியுமாறு செய்து, தேவர்களைச் சிறையில் இருந்து மீள விட்டவரே!

அழகு மிக்க குமாரக் கடவுளே!

ஏழுலகங்களும் மகிழும்படியாக கார்த்திகைப் பெண்கள் அறுவரின் திருமுலைப்பாலை உண்டு அருளிய செல்வமே!

தேவலோகத்துக்குத் தலைவரே!

  உமையம்மையின் திருப்புதல்வரே!

திருமால், அரன், பிரமன் ஆகிய மும்மூர்த்திகளின் தனிப்பெருந்தலைவரே!

முழுமதியை ஒத்த முகத்தையும், காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்களையும் கொண்டு, முற்றாத அறிவு உடையவர்களைத் தம் வசப்படுத்துகின்ற பொதுமகளிரின், கலவி இன்பத்தில் முழுகிக் கிடக்கும் செயலை உடைய, நாயினும் கடையான நான் தேவரீருக்கு வழிவழி அடிமைப்பட்டவன் என்னும் அறிவு விசாலப்படவும், மனத்தில் உண்டான துயரங்கள் வெந்து ஒழியவும் நல்லறிவைத் தருவதும், உயிர்கள் மேலான கதியைப் பெற உதவுவதும் ஆகிய தேவரீரது திருவடிகளை உள்ள மகிழ்வோடு புகழ்ந்து வழிபடும் அன்பினைத் தந்து அருள்வீராக.


விரிவுரை


இரு குழையில் முனிவிழி முனைகள்  --- 

காதில் உள்ள இரண்டு குழைகளையும் கோபிக்கின்ற கண்கள். காது அளவு ஓடிய கண்கள். நீண்ட கண்கள்.


மூவா முதல் அறிவு அதனை வளைபவர் --- 


மூவா -- முற்றாத, நிரம்பாத.

முதல் அறிவு - தொடக்க அறிவு, அறிவின் ஆரம்ப நிலை.


வழிவழி அடிமை எனும் அறிவு அகல --- 


உயிர்கள் இறைவனுக்கு அடிமைகள் என்பது நூல்களின் துணிபு. சிற்றறிவு காரணமாக, உலகியல் நிலைகளில் ஈடுபடும்போது அந்த அறிவு சுருங்கிவிடும். தீவினையின் காரணமாக நிகழ்வது இது. அந்த அறிவு இறைவன் திருவருளால் விசாலப்பட வேண்டும். அதற்கு நல்வினை வாய்க்க வேண்டும். "ஆறிவு அகற்றும் ஆகல் ஊழ் உள்ளக் கடை" என்றார் திருவள்ளுவ நாயனார்.


எழுதிட அரிய எழில்மற மகளின் இருதன கிரிகள் தங்கும்  மார்பா --- 


"எழுத அரியவள், குறமகள் இருதன கிரியில் முழுகின இளையவன்" எனத் திருவாரூர்த் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளமை காண்க.


எழுதலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட வாழ்வே --- 


"கார்த்திகை முலை நுகர் பார்த்திப" எனப் பிறிதொரு திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க.


"மகளிர் அறுவர் முலை நுகரும் அறுமுக" --- சீர்பாத வகுப்பு.


"அறுமீன் முலைஉண்டு, அழுது, விளையாடி" --- கந்தர் கலிவெண்பா.


"வனிதையர் அறுவரும்

எனது மகவு என உமைதரும் இமையவர் ...... பெருமாளே."  --- நெடியவட (திருப்புகழ்).


கருத்துரை

முருகா! திருவடி அருள்வாய்.




பொது --- 1083. புழுககில் களபம்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

புழுககில் களபம் (பொது)


முருகா! 

மாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்வாய்.


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தனதான


புழுககில் களப மொளிவிடு தரள

     மணிபல செறிய ...... வடமேருப்


பொருமிரு கலச முலையினை யரிவை

     புனையிடு பொதுவின் ...... மடமாதர்


அழகிய குவளை விழியினு மமுத

     மொழியினு மவச ...... வநுராக


அமளியின் மிசையி லவர்வச முருகி

     அழியுநி னடிமை ...... தனையாள்வாய்


குழலிசை யதுகொ டறவெருள் சுரபி

     குறுநிரை யருளி ...... யலைமோதுங்


குரைசெறி யுததி வரைதனில் விறுசு

     குமுகுமு குமென ...... வுலகோடு


முழுமதி சுழல வரைநெறு நெறென

     முடுகிய முகிலின் ...... மருகோனே


மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு

     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


புழுகு, அகில், களபம், ஒளிவிடு தரளம்,

     மணிபல செறிய, ...... வடமேருப்


பொரும் இருகலச முலையினை அரிவை,

     புனைஇடு பொதுவின் ...... மடமாதர்,


அழகிய குவளை விழியினும், அமுத

     மொழியினும், அவச, ...... அநுராக


அமளியின் மிசையில் அவர்வசம் உருகி,

     அழியும்நின் அடிமை ...... தனை ஆள்வாய்.


குழல் சை அதுகொடு அற வெருள் சுரபி

     குறுநிரை அருளி, ...... அலைமோதும்


குரைசெறி உததி, வரைதனில் விறுசு

     குமுகுமு குமுஎன, ...... உலகோடு


முழுமதி சுழல, வரைநெறு நெறுஎன

     முடுகிய முகிலின் ...... மருகோனே!


மொகுமொகு மொகு என ஞிமிறு இசை பரவு

     முளரியின் முதல்வர் ...... பெருமாளே.


பதவுரை

குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறு நிரை அருளி --- மிகவும் வெருண்டு திரிகின்ற வெள்ளைப்பசு முதலிய பசுக்கூட்டங்களுக்குத் தனது புல்லாங்குழல் இசையால் அருள் புரிந்து, 

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமுகுமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே --- அலைகள் மோதுகின்றதும், ஒலி எழுப்புகின்றதும் ஆகிய திருப்பாற்கடலில், மேரு மலையை மத்தாக நிறுவி, குமுகுமு என உலகங்களோடு, முழுமதியும் சுழற்சி அடையவும், மலைகள் நெறுநெறு என்று பொடியாகவும் முடுகிக் கடைந்த திருமாலின் திருமருகரே!

மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே --- மொகுமொகு மொகு என வண்டுகள் மொய்த்து ரீங்காரம் புரிகின்ற தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

புழுகு அகில் களபம் ஒளி விடு தரளம் மணி பல செறிய --- புழுகு, அகில், சந்தனம், ஒளிமிக்க முத்துக்கள், நவமணிகள் பலவும் பொருந்தி இருந்து,

வடமேருப் பொரும் இரு கலச முலையினை --- வடதிசையில் உள்ள மேருமலையை நிகர்த்து உள்ள இரு குடம் போன்ற முலைகளை உடைய,

அரிவை புனை இடு பொதுவின் மடமாதர் --- பெண்கள் ஒப்பனை புரிகின்ற பொதுமகளிரின்,

அழகிய குவளை விழியினும் அமுத மொழியினும் --- அழகிய குவளைமலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும்,

அவச அநுராக அமளியின் மிசையில் --- தன்வசம் அழிந்து, காமப் பற்றுக் கொண்டு படுக்கையின் மீது இருந்து,

அவர் வசம் உருகி அழியு(ம்) நின் அடிமை தனை ஆள்வாய் ---  விலைமாதர் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய அடியேனை ஆண்டு அருள்வாயாக.

பொழிப்புரை

மிகவும் வெருண்டு திரிகின்ற வெள்ளைப்பசு முதலிய பசுக்கூட்டங்களுக்குத் தனது புல்லாங்குழல் இசையால் அருள் புரிந்தவரும்,  அலைகள் மோதுகின்றதும், ஒலி எழுப்புகின்றதும் ஆகிய திருப்பாற்கடலில், மேரு மலையை மத்தாக நிறுவி, குமுகுமு என உலகங்களோடு, முழுமதியும் சுழற்சி அடையவும், மலைகள் நெறுநெறு என்று பொடியாகவும் முடுகிக் கடைந்தவரும் ஆகிய திருமாலின் திருமருகரே!

மொகுமொகு மொகு என வண்டுகள் மொய்த்து ரீங்காரம் புரிகின்ற தாமரையில் வீற்றிருக்கும் பிரமதேவன் போற்றும் பெருமையில் மிக்கவரே!

புழுகு, அகில், சந்தனம், ஒளிமிக்க முத்துக்கள், நவமணிகள் பலவும் பொருந்தி இருந்து, வடதிசையில் உள்ள மேருமலையை நிகர்த்து, இரு குடம் போன்ற முலைகளை உடைய, பெண்கள் ஒப்பனை புரிகின்ற பொதுமகளிரின், அழகிய குவளைமலர் போன்ற கண்களிலும், அமுதம் போன்ற பேச்சிலும், தன்வசம் அழிந்து, காமப் பற்றுக் கொண்டு படுக்கையின் மீது இருந்து, விலைமாதர் வசப்பட்டு மனம் உருகி அழிந்து போகும் அடிமையாகிய அடியேனை ஆண்டு அருள்வாயாக.

விரிவுரை

அரிவை புனை இடு பொதுவின் மடமாதர் --- 

விலைமகளிரின் வீட்டில் பெண்கள் பலரும் இருப்பார்கள் என்பது 

"வாரும் இங்கே வீடு இதோ, பணம் பாஷாணம்,

     மால் கடந்தே போம் ...... என்இயல் ஊடே,

வாடி பெண்காள், பாயை போடும் என்று ஆசார

     வாசகம் போல் கூறி, ...... அணை மீதே

சேரும் முன், காசு ஆடை வாவியும் போதாமை,

     தீமை கொண்டே போம் ...... என் அட மாதர்

சேர் இடம் போகாமல், ஆசுவந்து ஏறாமல்,

     சீதளம் பாதாரம் ...... அருள்வாயே."

என்னும் திருப்புகழ்ப் பாடலால் அறியப்படும்.


குழல் இசை அது கொடு அற வெருள் சுரபி குறுநிரை அருளி --- 

சுரபி - காமதேனு, வெள்ளைப்பசு.

குறு நிரை - சிறிய பசுக்கூட்டம்.

பசுக் கூட்டங்களை வளைத்து மேய்த்து மகிழ்ந்தவன் கண்ணபிரான். அவன் நல்ல மேய்ப்பன்.

கண்ணன் ஆயர்பாடியில் வளர்ந்தவன். ஆயர்கள் என்பவர் இறைவனை ஆய்பவர். இடையர்கள் என்றால், இறைவனாகிய கண்ணனுக்கும், அவனை அடைய விரும்பும் மனிதர்களுக்கும் இடையில் இருந்து, அவனை எப்படி அடைவது என்று காட்டும் ஞானிகள். ஆயர்கள் எப்போதும் கண்ணனையே தங்கள் மனத்தில் தரித்து, "உண்ணும் சோறும், தின்னும் வெற்றிலையும், பருகும் நீரும் கண்ணனே" என்று இருந்த ஞானிகள். அந்த ஞானிகள் இடத்தில் வளர்ந்த பசுக்கள், பக்குவப்பட்ட ஆன்மாக்கள் ஆகும்.

எனவே, பசுக்கூட்டங்கள் என்பது பக்குவப்பட்ட ஆன்மாக்களைக் குறிக்கும். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு யாதொரு நீங்கும் நேராவண்ணம், அவைகளுக்கு உண்ணத் தேவையான புல் முதலியன இருக்கும் இடத்தைத் தெரிந்து உய்த்து, பருகுவதற்கு நல்ல தண்ணீர் இருக்கும் இடத்தையும் காட்டி, தக்க நிழல் உள்ள இடத்தில் ஓய்வு கொள்ள வைத்து, அவைகளைக் காத்து அருளியவன் கண்ணபிரான்.

பக்குவப்பட்ட ஆன்மாக்கள் யாருக்கும் தீங்கு செய்யமாட்டா.  நன்மையே செய்வன. அதுபோல், கண்ணனால் நன்கு மேய்க்கப்பட்ட பசுக்கள், ஆயர்பாடியிலே இருந்து மக்களுக்கு என்றும் நீங்காத செல்வமாகத் திகழ்ந்தன.

"தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்க, குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள், நீங்காத செல்வம்" என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் அருளிச் செய்த அற்புதம் காண்க.

தமிழ்நாட்டில் திருச்சேய்ஞ்ஞலூர் என்று ஒரு சிவத் திருத்தலம் உண்டு. அத் திருத்தலத்தில் எச்சதத்தன் என்ற வேதியருக்கும் பவித்திரைக்கும் மகனாக அவதரித்தவர் விசாரசருமர். விசார சருமருக்கு முற்பிறவி உணர்ச்சி உண்டு. அதனால் அவர் ஐந்து வயதிலேயே வேதாகமங்களின் உணர்வை இயல்பாகப் பெற்றார். ஏழாம் ஆண்டில் அவருக்கு உபநயனச் சடங்கு நடைபெற்றது.  உலகியல் முறைப்படி ஆசிரியர்கள் அவருக்கு வேதம் முதலிய கலைகளைக் கற்பிக்கத் தொடங்கினார்கள். அவைகளைத் தாங்கள் கற்பிப்பதற்கு முன்னரே, அவைகளின் பொருள்களை விசாரசருமர் உணர்ந்து இருந்ததைக் கண்டு ஆசிரியர்கள் அதிசயித்தார்கள். 

வேதாகமங்களின் பயன் ஆண்டவன் திருவடிக்கு அன்பு செய்தல் என்பது துணிந்து, அவ் அன்பில் விசாரசருமர் நிற்பாராயினார். இந்த விசாரசருமர் தான், பின்னாளில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, சண்டீச நாயனார் ஆனார்.

ஒருநாள் விசாரசருமர் ஒருசாலை மாணாக்கர்களுடன் வெளியே புறப்பட்டார். அவ் வேளையில் அவருடன் அவ்வூர் பசுக்களும் போந்தன. அந்தப் பசுக் கூட்டத்தில் உள்ள ஓர் இளம் கன்று, மேய்ப்பவனை முட்டப் போயிற்று. அவன், அதைக் கோலால் அடிக்கலானான். அதைக் கண்ட விசாரசருமரின் நெஞ்சம் பதைத்தது. அவர், மேய்ப்பன் அருகே சென்று அடிப்பதைத் தடுத்தார். பசுக்களின் மாண்பை நினைந்தார். "'பசுக்களின் உறுப்புகளில் தேவர்களும் முனிவர்களும் இருக்கிறார்கள். புண்ணிய தீர்த்தங்கள் இருக்கின்றன. சிவபிரான் அபிடேகத்திற்குப் பஞ்சகவ்வியம் அளிக்கும் பெருமையைப் பசுக்கள் பெற்றிருக்கின்றன. அவைகளின் சாணம் திருநீற்றிற்கே மூலம். ஆண்டவன் ஊர்தியாகிய இடபம் பசுக்கள் இனத்தைச் சேர்ந்தது"  என்று எண்ணி எண்ணி நின்றார். மேலும் பசுக்களின் மாண்பை எண்ணி, "இப் பசுக்களை மேய்த்துக் காப்பதை விடச்சிறந்த தொண்டு ஒன்று உண்டோ? இதுவே சிவபிரானுக்குரிய சிறந்த வழிபாடாகும்" என்று உறுதிகொண்டார்.  ஆயனைப் பார்த்து, "இந்தப் பசுக்களை இனி நீ மேய்த்தல் வேண்டாம். அதனை நானே செய்கின்றேன்" என்றார். ஆயன் நடுநடுங்கிக் கை கூப்பிக் கொண்டே ஓடிப்போனான்.  விசாரசருமர் அந்தணர்களின் சம்மதம் பெற்று, அன்று முதல் பசுக்களை மேய்க்கும் திருத்தொண்டை ஏற்றார். 

வேதம் ஓதுவதன் பலன், எந்த உயிர்க்கும் தீங்கு நேராமல் ஒழுகவேண்டும். உலக நன்மைக்காக வாழவேண்டும். அந்தணர் குலத்தில் அவதரித்த ஒருவர் பசுக்களை மேய்த்த அற்பதம் இந்தப் புண்ணிய பூமியில் நிகழ்ந்தது. 

விசாரசருமர் பசுக்களை மண்ணியாற்றங்கரையிலும் வேறு இடங்களிலும் மேய்ப்பார். பசும்புற்களைப் பறித்து பசுக்களுக்கு ஊட்டுவார். நல்ல துறைகளில் தண்ணீர் அருந்த விடுவார்.  அச்சத்தைத் தாமே முன் நின்று நீக்குவார். காலங்களில் பசுக்களை வீடுபோகச் செய்வார். அவர் பார்வையில் பசுக்கள் முன்னிலும் அழகு ஒழுகச் செழித்தன. அந்த ஊரில் இருந்த வேதியர்களும் மற்றவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

பசுக்கள் தங்களின் கன்றுகளைப் பார்க்கிலும், வேதக் கன்று ஆகிய விசாரசருமரை அதிகம் நேசித்து வந்தன. கன்றுகள் தங்களைப் பிரிந்தாலும் தளர்வது இல்லை. விசாரசருமர் பிரிந்தால் அவை தளர்ச்சி அடையும். பசுக்கள் அவர் அருகே செல்லும். தாமே பால் சொரியும். அன்பு, அன்பு, அன்பு.

அலை மோதும் குரை செறி உததி வரை தனில் விறுசு குமுகுமு குமு என உலகோடு முழு மதி சுழல வரை நெறுநெறு என முடுகிய முகிலின் மருகோனே --- 

அமுதம் வேண்டிப் பாற்கடலை கடைய தேவர்களும், தேவர்களின் அரசனான இந்திரனும் முடிவு செய்தார்கள். அதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பினை கயிறாகவும் கொண்டு கடைய முடிவெடுத்தார்கள். அதற்கு தேவர்கள் மட்டும் போதாதென அரக்கர்களுக்கும் சமபங்கு தருவதாகக் கூறி அவர்களையும் அழைத்தார்கள். வாசுகி பாம்பின் ஒரு புறம் தேவர்களும், மறுபுறம் அரக்கர்களும் இணைந்து பாற்கடலைக் கடையத் தொடங்கினார்கள்.

மந்தர மலையானது பாற்கடலினுள் மூழ்கத் தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, மந்தார மலையைத் தாங்கினார். தேவர்களும் அரக்கர்களும் மீண்டும் பாற்கடலைக் கடைந்தனர்.


மொகு மொகு மொகு என ஞிமிறு இசை பரவு முளரியின் முதல்வர் பெருமாளே --- 

ஞிமிறு - வண்டு, தேனீ.

முளரி - தாமரை. தாமரையைத் தனது ஆதனமாகக் கொண்டு உள்ளவர் பிரமதேவர்.

பிரமனுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்த முதல்வர் முருகப் பெருமான்.


கருத்துரை


முருகா! மாதர் வசமாகி அழியாமல் ஆண்டு அருள்வாய்.


பொது --- 1082. திரிபுரம் அதனை

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

திரிபுர மதனை (பொது)


தனதன தனன தனதன தனன

     தனதன தனன ...... தனதான


திரிபுர மதனை யொருநொடி யதனி

     லெரிசெய்த ருளிய ...... சிவன்வாழ்வே


சினமுடை யசுரர் மனமது வெருவ

     மயிலது முடுகி ...... விடுவோனே


பருவரை யதனை யுருவிட எறியு

     மறுமுக முடைய ...... வடிவேலா


பசலையொ டணையு மிளமுலை மகளை

     மதன்விடு பகழி ...... தொடலாமோ


கரிதிரு முகமு மிடமுடை வயிறு

     முடையவர் பிறகு ...... வருவோனே


கனதன முடைய குறவர்த மகளை

     கருணையொ டணையு ...... மணிமார்பா


அரவணை துயிலு மரிதிரு மருக

     அவனியு முழுது ...... முடையோனே


அடியவர் வினையு மமரர்கள் துயரு

     மறஅரு ளுதவு ...... பெருமாளே.


                  பதம் பிரித்தல்


திரிபுரம் மதனை ஒருநொடி அதனில்

     எரிசெய்து அருளிய ...... சிவன்வாழ்வே!


சினம் உடை அசுரர் மனம் அது வெருவ

     மயில் அது முடுகி ...... விடுவோனே!


பருவரை அதனை உருவிட எறியும்

     அறுமுகம் உடைய ...... வடிவேலா!


பசலையொடு அணையும் இளமுலை மகளை

     மதன்விடு பகழி ...... தொடல் ஆமோ?


கரிதிரு முகமும் இடம் உடை வயிறும்

     உடையவர் பிறகு ...... வருவோனே!


கனதனம் உடைய குறவர் தம் மகளை

     கருணையொடு அணையும் ...... மணிமார்பா!


அரவு அணை துயிலும் அரிதிரு மருக!

     அவனியும் முழுதும் ...... உடையோனே!


அடியவர் வினையும் அமரர்கள் துயரும்

     அற அருள் உதவு ...... பெருமாளே.


பதவுரை

கரிதிரு முகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே ---  யானையின் அழகிய திருமுகமும் பெருத்த வயிறும் உடையவராகிய மூத்த பிள்ளையார் பின்பு அவதரித்தவரே!

கனதனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணிமார்பா --- பெருத்த மார்பகங்களை உடைய குறவர் மகள் வள்ளிநாயகியை கருணையோடு தழுவும் அழகிய திருமார்பை உடையவரே!

அரவு அணை துயிலும் அரிதிரு மருக --- பாம்பு அணையில் துயில் கொள்ளும் திருமாலின் திருமருமகரே!

அவனியும் முழுதும் உடையோனே --- உலகையும், உலகப் பொருள்களையும் உடைமையாக உடையவரே!

அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே --- அடியவர்கள் வினையும் அசுரர்கள் துயரமும் அற்றுப்போகத் திருவருளைத் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!

திரிபுரம் மதனை ஒருநொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே --- முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளிய சிவபெருமான் பெற்ற செல்வமே!

சினம் உடை அசுரர் மனம் அது வெருவ மயில் அது முடுகி விடுவோனே --- சினத்தோடு வந்து போர் புரிந்த அசுரர்களின் மனத்தில் அச்சம் உண்டாகும்படியாக மயில்மீது விரைவாக வந்து அருளியவரே!

பருவரை அதனை உருவிட எறியும் அறுமுகம் உடைய வடிவேலா --- பெருத்த கிரவுஞ்சமலையினை ஊடுருவும்படியாக எறிந்த வேலை உடைய ஆறுமுகப் பரம்பொருளே!

பசலையொடு அணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ --- விரக தாபத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இளமையான முலைகளை உடைய எனது மகளை மன்மதன் விடும் மலர்க்கணைகள் துன்புறுத்தலாமா?

பொழிப்புரை

        யானையின் அழகிய திருமுகமும் பெருத்த வயிறும் உடையவராகிய மூத்த பிள்ளையார் பின்பு அவதரித்தவரே!

பெருத்த மார்பகங்களை உடைய குறவர் மகள் வள்ளிநாயகியை கருணையோடு தழுவும் அழகிய திருமார்பை உடையவரே!

பாம்பு அணையில் துயில் கொள்ளும் திருமாலின் திருமருமகரே!

உலகையும், உலகப் பொருள்களையும் உடைமையாக உடையவரே!

அடியவர்கள் வினையும் அசுரர்கள் துயரமும் அற்றுப்போகத் திருவருளைத் தந்து அருளும் பெருமையில் மிக்கவரே!

முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளிய சிவபெருமான் பெற்ற செல்வமே!

சினத்தோடு வந்து போர் புரிந்த அசுரர்களின் மனத்தில் அச்சம் உண்டாகும்படியாக மயில்மீது விரைவாக வந்து அருளியவரே!

பெருத்த கிரவுஞ்சமலையினை ஊடுருவும்படியாக எறிந்த வேலை உடைய ஆறுமுகப் பரம்பொருளே!

விரக தாபத்தினால் பசலை நோய் வந்து தவிக்கும் இளமையான முலைகளை உடைய எனது மகளை மன்மதன் விடும் மலர்க்கணைகள் துன்புறுத்தலாமா?


விரிவுரை


கரி திருமுகமும் இடமுடை வயிறும் உடையவர் பிறகு வருவோனே ---

கரி - யானை. யானையின் முகத்தை உடையவர் மூத்த பிள்ளையார். 

இடம் உடை வயிறு - பெருத்த வயிறு. 


கனதனம் உடைய குறவர்தம் மகளை கருணையொடு அணையும் மணிமார்பா --- 

கனதனம் --- பருத்த மார்பகங்கள்.

கனம்+தனம் --- சிறந்த செல்வம். சிறந்த செல்வத்தை உடைய வேடர்களின் திருமகளாக வளர்ந்தவர் வள்ளிநாயகியார் என்றும் பொருள் கொள்ளலாம்.  


அவனியும் முழுதும் உடையோனே --- 

உலகையும், உலகப் பொருள்களையும் தனக்கு உடைமையாக உடையவர் இறைவன். எல்லாப் பொருள்களும் ஆனவன். எல்லாப் பொருள்களையும் உடையவன். "எல்லாம் ஆம் எம்பெருமான்" எனத் திருஞானசம்பந்தப் பெருமானும், "எல்லா உலகமும் ஆனாய் நீயே" என அப்பர் பெருமானும், "எல்லாம் உடையான் என்று ஊதுஊது சங்கே - எல்லாமும் ஆனான் என்று ஊதுஊது சங்கே" சென்று வள்ளல்பெருமானும் பாடியுள்ளது காண்க.


அடியவர் வினையும் அமரர்கள் துயரும் அற அருள் உதவு பெருமாளே --- 

"நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய நீடுதனி வேல்விடும் மடங்கல் வேலா" எனப் பழனித் திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளது காண்க. நீசர்கள் ஆகிய அரக்கர்கள் அழியவும், அடியவர்களின் வினைத்துயர் ஒழியவும் முருகப் பெருமான் வேலை விடுத்து அருளினார்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட

தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு. "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.


திரிபுரம் மதனை ஒருநொடி அதனில் எரிசெய்து அருளிய சிவன்வாழ்வே --- 

திரிபுரம் அதனை என்று கொண்டால், முப்புர தகனத்தைக் குறிக்கும்.

திரிபுரம் மதனை என்றும் பொருள் கொள்ள இடம் உண்டு. அவ்வாறு கொண்டால், முப்புரங்களையும், மன்மதனையும் ஒரு நொடிப் பொழுதில் எரித்து அருளியவர் சிவபெருமான் என்று கொள்ள வேண்டும்.

திரிபுரங்களை நொடிப் பொழுதில் எரித்த வரலாறு

கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

திரிபுரவாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள்.  தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.

அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்

மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.


"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்

எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப

வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே”. ---  திருஞானசம்பந்தர்.


"வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக

எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்

பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்

கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே." ---  திருஞானசம்பந்தர்.


"குன்ற வார்சிலை நாண் அராஅரி

வாளி கூர்எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே

தென்ற லார்மணி மாட மாளிகை

சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே."    ---  திருஞானசம்பந்தர்.


"கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்

கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்

பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்

பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்

கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே."  ---  அப்பர்.


"நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்

வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே

கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்

கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே." ---  சுந்தரர்.


மன்மதனை நொடிப் பொழுதில் எரித்த வரலாறு


இந்திரன் முதலிய தேவர்கள் பின்தொடர்ந்து வர, பிரமதேவர் வைகுந்தம் சென்று, திருமாலின் திருப்பாத கமலங்களை வணங்கி நின்றார். திருமால், நான்முகனிடம், "உனது படைப்புத் தொழில் இடையூறு இல்லாமல் நடைபெறுகின்றதா" என வினவினார். 

"எந்தாய்! அறிவில் சிறந்த அருந்தவர்களாகிய சனகாதி முனிவர்கள் என் மனத்தில் தோன்றினார்கள். அவர்களை யான் நோக்கி, மைந்தர்களே! இந்த படைப்புத் தொழிலைச் செய்துகொண்டு இங்கே இருங்கள் என்றேன். அவர்கள் அது கேட்டு, நாங்கள் பாசமாகிய சிறையில் இருந்து கொண்டு நாங்கள் படைப்புத் தொழிலைப் புரிய விரும்பவில்லை. சிவபெருமான் திருவடியைப் பணிந்து இன்புற்று இருக்கவே விரும்புகின்றோம் என்று கூறி, பெருந்தவத்தைச் செய்தனர். அவர்களுடைய தவத்திற்கு இரங்கி, ஆலமுண்ட அண்ணல் தோன்றி, 'உங்கள் விருப்பம் என்ன' என்று கேட்க, வேத உண்மையை விளக்கி அருளுமாறு வேண்டினார்கள்.

சிவபெருமான் திருக்கயிலாயத்தின் தென்பால், ஓர் ஆலமரத்தின் கீழ் அமர்ந்து, நால்வர்க்கும் நான்கு வேதங்களின் பொருளை அருளினார். அதனால் சனகாதி நால்வர்க்கும் மனம் ஒருமை அடையாமையால், மீண்டும் அவர்கள் கடுமையான தவத்தினை மேற்கொண்டு, திருக்கயிலையை அடைந்து, மனம் அடங்குமாறு உபதேசிக்க வேண்டினர். அவர்களது பரிபக்குவத்தை உணர்ந்த பரம்பொருள், ஆகமத்தின் உட்கருத்துக்கள் ஆகிய சரியை, கிரியை, யோகம் என்னும் முத்திறத்தையும் உபதேசித்து, ஞானபாதத்தை விளக்க சின்முத்திரையைக் காட்டி, மோன நிலையை உணர்த்தி, தானும் மோன நிலையில் இருப்பார் ஆயினார். அதுகண்ட அருந்தவரும் செயலற்று சிவயோகத்தில் அமர்ந்தனர். சிவபெருமான் ஒரு கணம் யோகத்தில் அமர்ந்துள்ள காலம் எமக்கும் ஏனையோருக்கும் பலப்பல யுகங்கள் ஆயின. உயிர்கள் இச்சை இன்றி, ஆண்பெண் சேர்க்கை இன்றி வருந்துகின்றன. அதனால் அடியேனுடைய படைப்புத் தொழில் அழிந்தது. இதுவும் அல்லாமல், சிவபரம்பொருளிடம் பலப்பல வரங்களைப் பெற்றுத் தருக்கிய சூராதி அவுணர்கள் நாளும் ஏவலைத் தந்து பொன்னுலகத்திற்கும் துன்பத்தை விளைவித்தனர். இந்திரன் மகனையும், பிற தேவர்களையும், தேவமாதர்களையும் சிறையிட்டுத் துன்புறுத்துகின்றனர். சூரபன்மன் தேவர்களை ஏவல் கொண்டு ஒப்பாரும் மிக்காரும் இன்றி அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் ஆளுகின்றான். இவைகளை எல்லாம் அறிந்தும் அறியாதவர் போல், சிவபரம்பொருள், சிவயோகத்தில் அமர்ந்துள்ளார்.  இனிச் செய்ய வேண்டியதொரு உபாயத்தை எமக்கு நீர் தான் அருள வேண்டும்" என்று கூறி நின்றார்.

இதைக் கேட்ட திருமகள் நாயகன், "பிரமனே! எல்லா உயிர்களுக்கும் உயிர்க்கு உயிராய், அருவமும், உருவமும், உருவருவமும் ஆகிய எல்லா உயிர்கட்கும், எல்லா உலகங்கட்கும் மூலகாரணமாய் நின்ற, மூவர் முதல்வன் ஆகிய முக்கண்பெருமான் மோன நிலையைக் காட்டி இருந்தார் என்றார், உலகில் எவர்தான் இச்சையுற்று மாதர் தோள்களைத் தழுவுவர்?"

"ஆவிகள் அனைத்தும் ஆகி, அருவமாய் உருவமாகி

மூவகை இயற்கைத்து ஆன மூலகாரணம் ஆது ஆகும்

தேவர்கள் தேவன் யோகின் செயல்முறை காட்டும் என்னில்,

ஏவர்கள் காமம் கன்றித் தொன்மை போல் இருக்கும்நீரார்."

"சிவமூர்த்தியின்பால் பலப்பல நலன்களைப் பெற்ற தக்கன், ஊழ்வினை வயப்பட்டு, செய்ந்நன்றி மறந்து, சிவமூர்த்தியை நிந்தித்து ஒரு பெரும் வேள்வி செய்ய, அந்தச் சிவ அபராதி ஆகிய தக்கனிடம் சேர்ந்து இருந்ததால் நமக்கு ஏற்பட்ட தீவினையைத் தீர்த்து, இன்பத்தை நல்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டார். சூரபன்மனுக்கு அளவில்லாத ஆற்றலை அளித்ததும், தேவர்கள் அணுகமுடியாத அரிய நிலையில் சனகாதி முனிவர்களுக்கு சிவயோக நிலையைக் காட்டி, உயிர்களுக்கு இன்னலை விளைவித்ததும் ஏன் என்று ஆராய்ந்து பார்த்தால், சிவபெருமானுடைய பேரருள் பெருக்கு விளங்கும். வேறு ஏதும் இல்லை. சிவபெருமான் முனிவருக்கு உணர்வு காட்டும் மோனத்தில் இருந்து நீங்கி, எம்பெருமாட்டியை மணந்து கொண்டால், படைத்தல் தொழில் இனிது நடைபெறும். உமாமகேசுவரன்பால் ஓரு குமரன் தோன்றினால், சூராதி அவுணர்கள் அழிந்து இன்பம் உண்டாக்கும். உலகம் எல்லாம் தொன்மை போல் நன்மை பெற்று உய்யும். பிரமதேவரே! இவைகள் எல்லாம் நிகழ வேண்டும் என்றால், உலகத்தில் யாராக இருந்தாலும் காம வயப்படுமாறு மலர்க்கணைகளை ஏவும் மன்மதனை விட்டு, ஈசன்மேல் மலர் அம்புகளைப் பொழியச் செய்தால், சிவபெருமான் யோக நிலையில் இருந்து நீங்கி, அகிலாண்ட நாயகியை மணந்து, சூராதி அவுணர்களை அழிக்க ஒரு புத்திரனைத் தந்து அருள்வார்.  இதுவே செய்யத்தக்கது" என்றார்.

அது கேட்ட பிரமதேவர், "அண்ணலே! நன்று நன்று. இது செய்தால் நாம் எண்ணிய கருமம் கைகூடும். சமயத்திற்குத் தக்க உதவியைக் கூறினீர்" என்றார்.

திருமால், "பிரமதேவரே! நீர் உடனே மன்மதனை அழைத்து, சிவபெருமானிடம் அனுப்பு" என்றார். பிரமதேவர் மீண்டு, தமது மனோவதி நகரை அடைந்து, மன்மதனை வருமாறு நினைந்தார்.

மாயவானகிய திருமாலின் மகனாகிய மன்மதன் உடனே தனது பரிவாரங்களுடன் வந்து பிரமதேவரை வணங்கி, "அடியேனை நினைத்த காரணம் என்ன. அருள் புரிவீர்" என்று வேண்டி

நின்றான். "மன்மதா! சிவயோகத்தில் இருந்து நீங்கி, சிவபெருமான் மகேசுவரியை உணந்து கொள்ளுமாறு, உனது மலர்க்கணைகளை அவர் மீது ஏவுவாய். எமது பொருட்டாக இந்தக் காரியத்தை நீ தாமதியாது செய்தல் வேண்டும்" என்றார்.

"கங்கையை மிலைச்சிய கண்ணுதல், வெற்பின்

மங்கையை மேவ, நின் வாளிகள் தூவி,

அங்கு உறை மோனம் அகற்றினை, இன்னே

எங்கள் பொருட்டினால் ஏகுதி என்றான்."

பிரமதேவர் கூறிய கொடுமையானதும், நஞ்சுக்கு நிகரானதும் ஆகிய தீச்சொல் மன்மதனுடைய செவிகள் வழிச் சென்று அவனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது. சிவபெருனாது யோக நிலையை அகற்றவேண்டும் என்ற சொல்லே மன்மதனுடைய உள்ளத்தைச் சுட்டுவிட்டது என்றால், பெருமான் அவனுடைய உடம்பை எரிப்பது ஓர் அற்புதமா?

மன்மதன் தனது இருசெவிகளையும் தனது இருகைகளால் பொத்தி, திருவைந்தெழுத்தை மனத்தில் நினைந்து, வாடிய முகத்துடன் பின்வருமாறு கூறுவானானான்.

"அண்ணலே! தீயவர்கள் ஆயினும் தம்மிடம் வந்து அடுத்தால், பெரியோர்கள் உய்யும் வகையாகிய நன்மையைப் புகல்வார்கள். அறிவிலே மிக்க உம்மை வந்து அடுத்த என்னிடம் எக்காரணத்தாலும் உய்ய முடியாத இந்தத் தீய சொற்களைச் சொன்னீர். என்னிடம் உமக்கு அருள் சிறிதும் இல்லையா? என்னுடைய மலர்க்கணைகளுக்கு மயங்காதவர் உலகில் ஒருவரும் இல்லை. பூதேவியையும், பூவில் வைகும் சீதேவியையும், ஏனைய மாதர்களையும் புணர்ந்து போகத்தில் அழுந்துமாறு என்னுடைய தந்தையாகிய நாராயணரையே மலர்க்கணைகளால் மயங்கச் செய்தேன். வெண்தாமரையில் வீற்றிருக்கும் நாமகளைப் புணருமாறும், திலோத்தமையைக் கண்டு உள்ளத்தால் புணருமாறும், உம்மை எனது மலர்க்கணைகளால் வென்றேன். திருமகளை நாராயணர் தமது திருமார்பில் வைக்கவும், கலைமகளைத் தங்கள் நாவில் வைக்கவும் செய்தேன். அகலிகையைக் கண்டு காமுறச்செய்து, இந்திரனுடைய உடல் முழுவதும் கண்களாகச் செய்தது என்னுடைய மலர்க்கணைகளின் வல்லபமே. தனது பாகனாகிய அருணன் பெண்ணுருவத்தை அடைந்த போது, அவளைக் கண்டு மயங்கச் செய்து, சூரியனைப் புணருமாறு செய்ததும் எனது மலர்க்கணைகளே. சந்திரன் குருவின் பத்தினியாகிய தாரையைப் புணர்ந்து, புதன் என்னும் புதல்வனைப் பெறுமாறு செய்தேன். வேதங்களின் நுட்பங்களை உணர்ந்த நல்லறிவுடைய தேவர்கள் யாவரையும் எனது அம்புகளால் மயக்கி, மாதர்களுக்குக் குற்றேவல் புரியுமாறு செய்தேன். மறை முழுது உணர்ந்த அகத்தியர், அத்திரி, கோதமன், அறிவில் சிறந்த காசிபர், வசிட்டர், மரீசி முதலிய முனிவர்களின் தவ வலியை, இமைப்பொழுதில் நீக்கி, என் வசப்பட்டுத் தவிக்கச் செய்தேன். நால்வகை வருணத்தாராகிய மனிதர்களைப் பெண்மயல் கொள்ளுமாறு செய்தேன். என் மலர்க்கணைகளை வென்றவர் மூவுலகில் யாரும் இல்லை. ஆயினும், சிவபெருமானை வெல்லும் ஆற்றல் எனக்கு இல்லை. மாற்றம் மனம் கழிய நின்ற மகேசுவரனை மயக்கவேண்டும் என்று மனத்தால் நினைதாலும் உய்ய முடியாது. பெருமானுடைய திருக்கரத்தில் அக்கினி. சிரிப்பில் அக்கினி. கண்ணில் அக்கினி. நடையில் அக்கினி. அனல் பிழம்பு ஆகிய அமலனிடம் நான் சென்றால் எப்படி ஈடேறுவேன்? அவரை மயக்க யாராலும் முடியாது. பிற தேவர்களைப் போல அவரையும் எண்ணுவது கூடாது".

"சண்ட மாருதத்தை எதிர்த்து ஒரு பூளைப்பூ வெற்றி பெறுமே ஆகில், வெண்ணீறு அணிந்த விடையூர்தியை நான் வெல்லுதல் கூடும். சிவபரம்பொருளை எதிர்த்து அழியாமல், உய்ந்தவர் யாரும் இல்லை".

"திரிபுர சங்கார காலத்தில், திருமால் முதலிய தேவர்கள் யாவரும் குற்றேவல் புரிய, முக்கண்பெருமான் தனது புன்னகையாலேயே முப்புரங்களையும் ஒரு கணப் பொழுதில் எரித்ததை மறந்தீரோ?"

"தன்னையே துதித்து வழிபாடு செய்த மார்க்கண்டேயரைப் பற்ற வந்த கூற்றுவனை, பெருமான் தனது இடது திருவடியால் உதைத்து, மார்க்கண்டேயரைக் காத்ததைத் தாங்கள் அறியவில்லையா?"

"முன் ஒரு நாள், தாங்களும், நாராயணமூர்த்தியும் 'பரம்பொருள் நானே' என்று வாதிட்ட போது, அங்கு வந்த சிவபரம்பொருளைத் தாங்கள் மதியாது இருக்க, உமது ஐந்து தலைகளில் ஒன்றைத் தமது திருவிரல் நகத்தால் சிவபெருமான் கிள்ளி எறிந்தது மறந்து போயிற்றா?"

"சலந்தரன் ஆதி அரக்கர்கள் சங்கரனைப் பகைத்து மாண்டதை அறியாதவர் யார்?"

"உமது மகனாகிய தக்கன் புரிந்த வேள்விச் சாலையில் இருந்த யாவரும், பெருமான்பால் தோன்றிய வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டு வருந்தியதை நீர் பார்க்கவில்லையா?"

"திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை உண்டு, நம்மை எல்லாம் காத்து அருளியதும் மறந்து போயிற்றா?"

"உலகத்தை எல்லாம் அழிக்குமாறு பாய்ந்த கங்காதேவியைத் தனது திருச்சடையில் பெருமான் தாங்கியது சிவபெருமான் தானே!"

"தாருகா வனத்தில், இருடிகள் அபிசார வேள்வியைப் புரிந்து அனுப்பிய யனை, புலி, மான்,முயலகன், பாம்பு முதலியவைகளைக் கண்ணுதல் கடவுள் உரியாகவும், போர்வையாகவும், ஆபரணமாகவும் அணிந்து உள்ளதை நீர் பார்க்கவில்லையா?"

"சர்வ சங்கார காலத்தில், சிவனார் தமது நெற்றிக்கண்ணில் இருந்து விழும் ஒரு சிறு பொறியால் உலகங்கள் எல்லாம் சாம்பலாகி அழிவதை நீர் அறிந்திருந்தும் மறந்தீரோ? இத்தகைய பேராற்றலை உடைய பெருமானை, நாயினும் கடைப்பட்ட அடியேன் எனது கரும்பு வில்லைக் கொண்டு, மலர்க்கணை ஏவி ஒருபோதும் போர் புரிய மாட்டேன்."

இவ்வாறு மன்மதன் மறுத்துக் கூறியதும், நான்முகன் உள்ளம் வருந்தி, சிறிது நேரம் ஆராய்ந்து, பெருமூச்சு விட்டு, மன்மதனைப் பார்த்து, "மன்மதனே! ஒருவராலும் வெல்லுதற்கு அரிய சிவபெருமானது அருட்குணங்களை வெள்ளறிவு உடையவரிடம் விளம்புவதைப் போல் என்னிடம் விளம்பினை. நீ உரைத்தது எல்லாம் உண்மையே. தனக்கு உவமை இல்லாத திருக்கயிலை நாயகனை வெல்லுதல் யாருக்கும் எளியது அல்ல. ஆயினும் தன்னை அடைந்தோர் தாபத்தைத் தீர்க்கும் தயாநிதியாகிய சிவபெருமானின் நல்லருளால் இது முடிவு பெறும். அவனருளைப் பெறாதாரால் இது முடியாது. உன்னால் மட்டுமே முடியும். எல்லாருடைய செயலும் அவன் செயலே. நீ இப்போது கண்ணுதலை மயக்கச் செல்வதும் அவன் அருட்செயலே ஆகும். ஆதலால், நீ கரும்பு வில்லை வளைத்து, பூங்கணைகளை ஏவுவாயாக. இதுவும் அவன் அருளே. இது உண்மை. இதுவும் அல்லாமல், ஆற்ற ஒணாத் துயரம் கொண்டு

யாராவது  ஒருவர் உதவி செய் என்று வேண்டினால் அவருடைய துன்பத்திற்கு இரங்கி, அவருடைய துன்பத்தைக் களையாது, தன் உயிரைப் பெரிது என்று எண்ணி உயிருடன் இருத்தல் தருமமோ? ஒருவனுக்குத் துன்பம் நேர்ந்தால், அத் துன்பத்தைத் தன்னால் நீக்க முடியுமானால், அவன் சொல்லா முன்னம் தானே வலிய வந்து துன்பத்தை நீக்குதல் உத்தமம். சொன்ன பின் நீக்குதல் மத்திமம். பல நாள் வேண்டிக் கொள்ள மறுத்து, பின்னர் நீக்குதல் அதமம். யாராவது இடர் உற்றால், அவரது இடரை அகற்றுதல் பொருட்டு தன் உயிரை விடுதலும் தருமமே. அவ்வாறு செய்யாமல் இருந்தால், பாவம் மட்டும் அல்ல, அகலாத பழியும் வந்து சேரும்.

"ஏவர் எனினும் இடர் உற்றனர் ஆகில்,

ஓவில் குறை ஒன்று அளரேல், அது முடித்தற்கு

ஆவி விடினும் அறனே, மறுத்து உளரேல்

பாவம் அலது பழியும் ஒழியாதே."

பிறர்க்கு உதவி செய்யாது கழித்தோன் வாழ்நாள் வீணாகும். திருமாலிடம் வாது புரிந்த ததீசி முனிவரை இந்திரன் குறை இரப்ப, விருத்தாசுரனை வதைக்கும் பொருட்டு, தனது முதுகெலும்பைத் தந்து ததீசி முனிவன் உயிர் இழந்ததை நீ கேட்டது இல்லையோ? பாற்கடலில் எழுந்த வடவாமுக அக்கினியை ஒத்த விடத்தினைக் கண்டு நாம் பயந்தபோது, திருமால் நம்மைக் காத்தல் பொருட்டு அஞ்சேல் எனக் கூறி, அவ்விடத்தின் எதிரில் ஒரு கணப் பொழுது நின்று, தமது வெண்ணிறம் பொருந்திய திருமேனி கருமை நிறம் அடைந்ததை நீ பார்த்தது இல்லையோ? பிறர் பொருட்டுத் தம் உயிரை மிகச் சிறிய பொருளாக எண்ணுவோர் உலகில் பெரும் புகழ் பெற்று வாழ்வார்கள். நாம் சூரபன்மனால் மிகவும் வருந்தினோம். அந்த வருத்தம் தீரும்படி கண்ணுதல் பெருமான் ஒரு புதல்வனைத் தோற்றுவிக்கும் பொருட்டு, நீ பஞ்ச பாணங்களுடன் செல்ல வேண்டும். எமது வேண்டுகோளை மறுத்தல் தகுதி அல்ல" என்று பலவாக பிரமதேவர் கூறினார்.

அது கேட்ட மன்மதன் உள்ளம் மிக வருந்தி, "ஆதிநாயகன் ஆன சிவபெருமானிடம் மாறுகொண்டு எதிர்த்துப் போர் புரியேன். இது தவிர வேறு எந்தச் செயலைக் கட்டளை இட்டாலும் இமைப் பொழுதில் செய்வேன்" என்றான்.

பிரமதேவர் அது கேட்டு வெகுண்டு, "அறிவிலியே! என்னுடைய இன்னுரைகளை நீ மறுத்தாய். நான் சொன்னபடி செய்தால் நீ பிழைத்தாய். இல்லையானால் உனக்குச் சாபம் தருவேன். இரண்டில் எது உனக்கு உடன்பாடு.  ஆராய்ந்து சொல்" என்றார்.

மன்மதன் அது கேட்டு உள்ளம் மிக வருந்தி, என்ன செய்யலாம் என்று சிந்தித்து, ஒருவாறு தெளிந்து, பிரமதேவரைப் பார்த்து, "நாமகள் நாயகனே! சிவமூர்த்தியினை எதிர்த்துச் சென்றால், அந்தப் பரம்பொருளின் நெற்றி விழியால் அழிந்தாலும், பின்னர் நான் உய்தி பெறுவேன். உனது சாபத்தால் எனக்கு உய்தி இல்லை. எனவே, நீர் சொல்லியபடியே செய்வேன், சினம் கொள்ள வேண்டாம்" என்றான்.

பிரமதேவர் மனம் மகிழ்ந்து, "நல்லது. நல்லது. மகாதேவனிடத்தில் உன்னைத் தனியாக அனுப்பு மாட்டோம்.  யாமும் பின்தொடர்ந்து வருவோம்" என்று அறுப்பினார்.

மன்மதன், பிரமதேவரிடம் விடைபெற்றுச் சென்று, நிகழ்ந்தவற்றைத் தனது பத்தினியாகிய இரதிதேவியிடம் கூற, அவள் போகவேண்டாம் என்று தடுக்க, மன்மதன் அவளைத் தேற்றி, மலர்க்கணைகள் நிறைந்த அம்புக் கூட்டினை தோள் புறத்தே கட்டி, கரும்பு வில்லை எடுத்து, குளிர்ந்த மாந்தளிர் ஆகிய வாளை இடையில் கட்டி, குயில், கடல் முதலியவை முரசு வாத்தியங்களாய் முழங்க, மீனக் கொடியுடன் கூடியதும், கிளிகளைப் பூட்டியதும், சந்திரனைக் குடையாக உடையதும் ஆகிய தென்றல் தேரின்மேல் ஊர்ந்து இரதி தேவியுடன் புறப்பட்டு, எம்பெருமான் எழுந்தருளி இருக்கும் திருக்கயிலை மலையைக் கண்டு, கரம் கூப்பித் தொழுது, தேரை விட்டு இறங்கி, தன்னுடன் வந்த பரிசனங்களை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு, இரதிதேவியுடன் வில்லும் அம்பும் கொண்டு, பெரும் புலியை நித்திரை விட்டு எழுப்ப ஒரு சிறுமான் வந்தது போல் திருக்கயிலை மேல் ஏறினான். கரும்பு வில்லை வளைத்து, மலர்கணைகளைப் பூட்டி அங்குள்ள பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் காம இச்சை உண்டாகுமாறு செலுத்தினான். கோபுர முகப்பில் இருந்த நந்தியம்பெருமான் அது கண்டு பெரும் சினம் கொண்டு, இது மன்மதனுடைய செய்கை என்று தெளிந்து, 'உம்' என்று நீங்காரம் செய்தனர். அவ்வொலியைக் கேட்ட மன்மதனுடைய பாணங்கள் பறவைகள் மீதும், விலங்குகள் மீதும் செல்லாது ஆகாயத்தில் நின்றன. அதனைக் கண்ட மதனன் உள்ளம் வருந்தி, திருநந்தி தேவர் முன் சென்று பலமுறை வாழ்த்தி வணங்கி நின்றான். மன்மதன் வந்த காரணத்தைக் கேட்ட நந்தியம்பெருமான், 'பிரமாதி தேவர்கள் தமது துன்பத்தை நீக்க இவனை இங்கு விடுத்துள்ளார்கள். சிவபெருமான் மோன நிலையில் அமரும்பொழுது, யார் வந்தாலும் உள்ளே விடவேண்டாம். மன்மதன் ஒருவனை மட்டும் விடுவாய் என்று அருளினார். மந்திர சத்தியால் பசுவைத் தடிந்து, வேள்வி புரிந்து, மீளவும் அப்பசுவை எழுப்புதல் போல், மன்மதனை எரித்து, மலைமகளை மணந்து, பின்னர் இவனை எழுப்புமாறு திருவுள்ளம் கொண்டார் போலும்' என்று நினைத்து, "மாரனே! சிவபெருமான்பால் செல்லுதல் வேண்டுமோ?" என்று கேட்க, மன்மதன், "எந்தையே! என் உயிர்க்கு இறுதி வந்தாலும் சிவபெருமானிடம் சேர எண்ணி வந்தேன். அந்த எண்ணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றான். மேலைக் கோபுர வாயில் வழியாகச் செல்லுமாறு திருநந்தி தேவர் விடை கொடுத்தார்.

மன்மதன் திருநந்திதேவரை வணங்கி, மேலை வாயிலின் உள் சென்று, சோதிமாமலை போல் வீற்றிருக்கும் சூலபாணி முன் சென்று, ஒப்பற்ற சரபத்தைக் கண்ட சிங்கக்குட்டி போல் வெருவுற்று, உள் நடுங்கி, உடம்பு வியர்த்து, கையில் பற்றிய வில்லுடன் மயங்கி விழுந்தான். உடனே இரதிதேவி தேற்றினாள். மன்மதன் மயக்கம் தெளிந்து எழுந்து, "ஐயோ! என்ன காரியம் செய்யத் துணிந்தேன். நகையால் முப்புரம் எரித்த நம்பனை நோக்கிப் போர் புரியுமாறு பிரமதேவர் என்னை இங்கு அனுப்பினார். இன்றே எனக்கு அழிவு வந்துவிட்டது என்பதில் சிறிதும் ஐயமில்லை. பெருமானைப் பார்த்த உடனேயே இப்படி ஆயினேனே, எதிர்த்துப் போர் புரிந்தால் என்ன ஆவேன்? இன்னும் சிறிது நேரத்தில் அழியப் போகின்றேன். விதியை யாரால் கடக்க முடியும். இதுவும் பெருமான் பெருங்கருணை போலும். இறைவன் திருவருள் வழியே ஆகட்டும்.  இனி நான் வந்த காரியத்தை முடிப்பேன்" என்று பலவாறு நினைந்து, கரும்பு வில்லை வளைத்து, சுரும்பு நாண் ஏற்றி, அரும்புக் கணைகளைப் பூட்டி, சிவபெருமான் முன்பு சென்று நின்றான்.

இது நிற்க, மனோவதி நகரில் பிரமதேவரை இந்திரன் இறைஞ்சி, "மன்மதனுடைய போர்த் திறத்தினைக் காண நாமும் போவோம்" என்று வேண்டினான். எல்லோரும் திருக்கயிலை சென்று, சிவபெருமானை மனத்தால் துதித்து நின்றனர். மன்மதன் விடுத்த மலர்க்கணைகள் சிவபெருமான்மேல் படுதலும், பெருமான் தனது நெற்றிக் கண்ணைச் சிறிது திறந்து மன்மதனை நோக்க, நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய சிறு தீப்பொறியானது மன்மதனை எரித்தது. அதனால் உண்டாகிய புகை திருக்கயிலை முழுதும் சூழ்ந்தது.  


பருவரை அதனை உருவிட எறியும் அறுமுகம் உடைய வடிவேலா --- 

பருவரை - பெருத்த மலை, கிரவுஞ்ச மலையைக் குறித்தது. பொன் மயமாக இருந்து அனைவரையும் மயக்கியது கிரவுஞ்ச மலை.

இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக் கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார்.

"மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறையிட முனியும் வடிவேலன்" என்றார் அடிகளார் சீர்பாத வகுப்பில்.


பசலையொடு அணையும் இளமுலை மகளை மதன்விடு பகழி தொடலாமோ --- 

தலைவியின் துயரைக் கண்டு அவளுடைய தாய் இரங்குவதாக அகத்துறையில் அமைந்த பாடல் இது.

பசலை --- தலைவனைப் பிரிந்த துயரால் தலைவியின் உடலில் உண்டாகும் நிறமாற்றம்.

மன்மதன் விடுக்கின்ற மலர்க்கணைகள் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவியின் துயரத்தை மிகுக்கும் என்று சொல்லுவர்.

மன்மதனுடைய மலர்க்கணைகள். அது பரிமளம் மிக்க மா, அசோகு, தாமரை, முல்லை, நீலோற்பலம். மன்மதனுடைய கணைகளைப் பற்றியும், அவனுக்குத் துணை செய்யும் பொருள்களைப் பற்றியும் வரும் பாடல்களைக் காண்க.

"வனசம், செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,

     மலர்நீலம் இவைஐந் துமே

  மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி

     மனதில் ஆசையை எழுப்பும்;


வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;

     மிகஅசோ கம்து யர்செயும்;

  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;

     மேவும்இவை செயும்அ வத்தை;


நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,

     நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,

  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்

     நேர்தல், மௌனம் புரிகுதல்,


அனையவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!

     அத்தனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


      தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும்,

இவை உயிர்களுக்கு ஊட்டும் பண்புகள் --- தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும். சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும். அசோக மலர் மிகவும் துன்பத்தைத் கொடுக்கும். குளிர்ந்த முல்லைமலர் (படுக்கையில்) விழச்செய்யும்.  நீலமலர் உயிரை ஒழிக்கும்,

இவை உண்டாக்கும் நிலைகளாவன: எண்ணத்தில் அதுவே கருதுதல், மற்றொன்றில் ஆசை நீங்கல், பெருமூச்சுடன் பிதற்றுதல், உள்ளம் திடுக்கிடல், உணவில் வெறுப்பு, உடல் வெதும்புதல், மெலிதல், பேசாதிருத்தல், ஆசையுற்ற உயிர் உண்டோ இல்லையோ என்னும் நிலையடைதல் ஆகிய இவை பத்தும் ஆகும்.

மன்மதனுக்குத் துணை செய்யும் கருவிகள்......

"வெஞ்சிலை செழுங்கழை;வில் நாரிகரு வண்டினம்;

     மேல்விடும் கணைகள் அலராம்;

  வீசிடும் தென்றல்தேர்; பைங்கிள்ளை யேபரிகள்;

     வேழம்கெ டாதஇருள் ஆம்;


வஞ்சியர் பெருஞ்சேனை; கைதைஉடை வாள்; நெடிய

    வண்மைபெறு கடல்மு ரசம்ஆம்;

  மகரம்ப தாகை;வரு கோகிலம் காகளம்;

    மனதேபெ ரும்போர்க் களம்;


சஞ்சரிக இசைபாடல்; குமுதநே யன்கவிகை;

    சார்இரதி யேம னைவிஆம்;

  தறுகண்மட மாதர்இள முலைமகுடம் ஆம்;அல்குல்

    தவறாதி ருக்கும் இடம்ஆம்;


அஞ்சுகணை மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்

    அமுதமே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

    அறப்பளீ சுரதே வனே!"


ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு......


--- கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும்.

--- அம்பு கரிய வண்டின் கூட்டம் ஆகும்.

--- உயிர்களின் மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும்.

--- தேர் உலவும் தென்றற் காற்று ஆகும்.

--- குதிரைகள் பச்சைக் கிளிகளே ஆகும்.

--- யானை அழியாத இருளாகும்.

--- மிகுபடை பெண்கள் ஆவர்.

--- உடைவாள் தாழை மடல் ஆகும்.

--- போர் முரசு நீண்ட கொடைத்தன்மை பொருந்திய கடலாகும், 

--- கொடி மகர மீன் ஆகும்.

--- சின்னம் வேனிலில் வரும் குயிலோசைகும்.

--- பெரிய போர்க்களம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

--- பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும்.

--- குடை சந்திரன் ஆவான்.

--- காதலி அழகு பொருந்திய இரதியே ஆவாள்.

--- அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள் முடி ஆகும்.

--- எப்போதும் விடாமல் வீற்றிருக்கும் இடம் பெண்களின் அல்குல் ஆகும்.

மன்மதனுடைய கணைகளினால் அறிவாற்றல் அழியும். அவன் கணையினால் மாதவம் இழந்தோர் பலர்.








பற்றற்ற பெருநிலை

 


பற்றற்ற பெருநிலை.

-----

மனிதன் மனிதனாக வாழ்வதற்கு மூன்று நன்றாக இருக்கவேண்டும். அவையாவன உள்ளம், உடம்பு, சூழல். உள்ளம் நன்றாக இருப்பதற்காகவே அறநெறியும் கடவுள் வழிபாடும் அமைந்தன. உடம்பு நன்றாக இருப்பதற்கு நல்ல உணவும் உடையும் தொழிலும் மருந்தும் வேண்டும். சூழல் அல்லது சுற்றுப்புறம் நன்றாக இருப்பதற்கு முன்னோர்கள் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இன்று சுற்றுப்புறமும் நன்றாக இல்லாத காரணத்தால்தான், பொதுவாக வாழ்க்கையில் அமைதியும் இன்பமும் இல்லை. நல்ல கல்வி அமைந்தால் நல்லறிவு சிறக்கும். நல்லறிவு வாழ்த்தால் நற்பண்புகள் நிறைந்து இருக்கும். கல்வி கற்கவில்லை என்றாலும், கற்ற பெரியவரிடத்திலாவது கூடி இருந்து கழகவேண்டும். "கற்ற மேலவரோடும் கூடி நில்லேன், கல்வி கற்கும் நெறி தேர்ந்து கல்லேன்" என்பார் வடலூர் வள்ளல்பெருமான். 

"கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்து ஒழுகின்

நல்லறிவு நாளும் தலைப்படுவர் - தொல்சிறப்பின்

ஒள்நிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு

தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு." --- நாலடியார்.

சிறந்த அழகும் மணமும் நிறைந்த பாதிரிப் பூ வைக்கப்பட்டு இருந்த மண்மாண்டத்தில் உள்ள தண்ணீருக்கும் அதன் மணம் கிடைக்கும். அதுபோல, கல்வி அறிவு இல்லாதவர்கள் என்றாலும், கற்றறிந்த பெரியோர்ளுடன் கூடிப் பழகினால், அவர்களுக்கும், அப் பெரியோரின் சேர்க்ககையால் நாளாக நாளாக நல்ல அறிவு வாய்க்கப் பெறும் என்கிறது நாலடியார்.

தனிமனிதன் இன்பற்று வாழவேண்டுமானால், சமுதாயம் நன்றாக அமைந்திருக்க வேண்டும். சமுதாயம் என்ற சொல்லே ஆறறிவு படைத்த மக்களினத்தைக் குறிக்கும். "மக்கள் தாமே ஆறு அறிவினவே" என்பது தொல்காப்பியம். அறிவு எனப்படுவது நல்லதன் நன்மையும், தீயதன் தீமையும் அறிந்து அதற்கு ஏற்ப, நன்மையை நாடி, தீயதே விலக்கி ஒழுகுதல் ஆகும். ஆறு அறிவு படைத்தவர்களே மக்கள் எனப்படுவர்.  இன்று நம் கண்முன்னால் நடைபெறுகிற வாழ்க்கை முழுதும், நல்லறிவும் நற்பண்பும் நிறைந்த நமது முன்னோர்களின் உள்ளங்களில் பிறந்த எண்ணங்களின் விளைவுதான்.

நம்முடைய அரசியல் நெறிகள், சமுதாய ஒழுக்கக் கோட்பாடுகள், பொருளாதார அமைப்புகள், நம் பண்பாடுகள், நாம் உண்ணும் உணவு, உடுக்கும் உடை, அணியும் அணிகலன்கள் என யாவுமே பன்னெடுங்காலமாக முன்னோர் வகுத்துத் தந்து சென்றவைதான். ஒவ்வொரு காலத்திலும் அவற்றில் சிற்சில மாறுதல்களை நாம் செய்து வருகிறோம்.

மனித குலத்தின் ஒப்பற்ற பெரியோர்களின் பூதவுடல் மட்டுமே மறைந்தது. அவர்கள் சொல்லிச் சென்ற கருத்துகள், நடை உடை பாவனைகளால் அவர்கள் உயிர்த்தன்மை பெற்று நம்முடனேயே நிலவுகிறார்கள். அவர்களின் நிறைவேறாத கனவுகளையும், முழுமை பெறாத முயற்சிகளையும், அருமையான நூல்களின் வழியாக விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்கள் வித்தகர்கள். "நத்தம்போல் கேடும், உளது ஆகும் சாக்காடும் வித்தகர்க்கு அல்லால் அரிது" என்றார் திருவள்ளுவ நாயனார். புகழ் செழிக்கும் அளவுக்கு வறுமையை அடைதலும், புகழ் நிலைக்கும் அளவுக்கு சாக்காடு அடைதலும் இந்த வித்தகர்களிடத்தே உண்டு. 

நம்முள் ஒவ்வொருவருக்கும் ஒரு துறையில் ஈடுபாடும் ஆர்வமும் இருக்கின்றது. அந்தத் துறையில் ஆழ்ந்த கல்வியும் பயிற்சியும் பெற்று வல்லுநர் ஆகலாம். துறையறிவோடு, உலகியல் அறிவு முழுமை பெற வேண்டுமானால், கற்க வேண்டிய அறிவு நூல்களைக் கற்றுத் தெளிய வேண்டும். கற்ற பெரியோர்களோடு கூடிக் கலந்து உள்ளம் மகிழவும் பழகிக்கொள்ள வேண்டும். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதுமே அறிவுடைமை ஆகாது. அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. 

கல்வியின் பயன் அறிவு மிகுவதாக இருக்கவேண்டும். அறிவின் பயன் அன்பு நிறைவதாக அமைய வேண்டும். உள்ளத்தில் அன்பு என்னும் உயிர்ப் பண்பு இல்லாமல், வெறும் அறிவால் மட்டும் எந்தப் பயனும் இல்லை. ("அறிவினால் ஆகுவது உண்டோ? பிறிதன் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை" - திருக்குறள்.) பிற உயிர்படும் துன்பத்தைத் தான்படும் துன்பத்தைப் போல மதித்து நடந்து கொள்ளாதபோது, தான் பெற்ற அறிவினால் பயன் விளைவது உண்டோ? என்று நாயனார் வினவுவதில் இருந்தே அறிவின் பயன் உயிர்களிடத்தில் அன்பு வைப்பதுதான் என்பது விளங்கும். அறிவு என்பது என்னவென்று கேட்டால், "போகின்ற இடங்களில் எல்லாம் மனத்தைச் செலுத்தாமல், தீமையை நீக்கி, நன்மையை நோக்கிச் செலுத்துவதே அறிவு ஆகும் என்கிறார் திருவள்ளுவ நாயனார். ("சென்ற இடத்தால் செ(ல்)ல விடாது, நன்றின்பால் உய்ப்பது அறிவு" - திருக்குறள்.) "மெய்ப்பொருள் காண்பது அறிவு" என்றும் "நுண்பொருள் காண்பது அறிவு" என்றும் அறிவுறுத்துகிறார்.

"புத்தகப் பிதற்றை விட்டு, வித்தகத்து உனைத் துதிக்க, புத்தியில் கலக்கம் அற்று நினையாதே" என்பார் அருணகிரிநாதப் பெருமான். புத்தகங்களைப் படித்து விட்டு, அவற்றில் உள்ளதைப் பிதற்றிக் கொண்டு இருப்பது கூடாது. நான் மெத்தப் படித்தவன் என்னும் செருக்கு இருக்கக் கூடாது. புத்தியில் கலக்கம் இருத்தல் கூடாது. "கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்” என்பார் மணிவாசகப் பெருமான். உண்பதற்கு வாழை இலை உதவுகின்றது. உண்டபின் வாழை இலையை எடுத்து எறிந்து விடுகிறோம். அதுபோல், உயிர்கள்பால் அன்பு செலுத்துவதற்கும், அதன் பயனாக இறைவனை அடைவதற்கும் கல்வி துணை செய்யவேண்டும். அந்தப் பயனை அடைந்தவுடன், எச்சில் இலையைத் தூக்கி எறிவதுபோல், 'நான் படித்தேன்' என்னும் அகந்தையை விட்டு ஒழிக்கவேண்டும். அடைந்த பின் கல்வியை விட்டுவிட வேண்டும். "கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகப் பெருமான் அருளியதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நூல்களை வீடு முழுமையும் நிறைத்து வைப்பதாலேயே ஒருவருக்கு நல்லறிவு நிறைந்துவிடாது. நூல்களின் கருத்தினை அறிந்து அவற்றால் நலம் பெறுதல் வேண்டும். தானும் தெளிந்து பிறரையும் தெளிவித்தல் வேண்டும்.

"புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார்

உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் - மற்று அவற்றைப்

போற்றும் புலவரும் வேறே, பொருள்தெரிந்து

தேற்றும் புலவரும் வேறு."             --- நாலடியார்.

இதன் பொருள் ---

புத்தகங்களை எல்லாம் சிலர் சேகரித்து, அவற்றை வீடு முழுதும் நிறைத்து வைத்து, அவற்றின் பொருளை உணராமலேயே அழகு பார்த்துக் கொண்டு இருப்பவர் சிலர். ஆனால், சிலர் புத்தகங்களைப் பொருள் அறிந்து படித்துப் பயன் அடையும் புலவர்கள் சிலர். அந்தச் சிலருள்ளும் தாம் படித்து அறிந்த கருத்துக்களை மற்றவர் மனம் கொள்ளுமாறு எடுத்து விளக்கிப் புரிய வைப்பவர்கள் மிகச் சிலரே.

இந்த நல்லறிவைப் பெறாதவர்களுக்கு, இந்தப் பெரிய உலகம், பட்டப்பகலிலும் ஒரே இருட்டாகத் தோன்றும் என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவ நாயனார்.

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டு அன்று இருள்" --- திருக்குறள்.

இதன் பொருள் ---

பண்புடன் கூடி கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இவ்வுலகத்தின் ஒளி உள்ள பகல்பொழுதும் இருளின்பால் பட்டது ஆகும்.

'இந்த நல்லறிவு விளக்கம் பெறாமையால், சமுதாய நல்லொழுக்கம் சீர் குலைந்துவிட்டது, நடுவுநிலைமை, நியாய உணர்வு, நீதிநெறி, நாவடக்கம் எல்லாம் தேய்ந்து மாய்ந்துக் கிடக்கின்றன' என்று திரும்பத் திரும்ப வாய்கிழியப் பேசுவதாலோ, எழுதுவதாலோ பயன் பெரிதும் விளைந்து விடாது. நடக்கும் சாலையிலே ஒருவருக்கு விபத்து நடந்து வீழ்ந்து கிடக்கும்போது எரிகிற வீட்டில் அகப்பட்டது இலாபம் எனச் சுருட்டிக் கொண்டு ஒடும் பான்மையில், அருகே சிதறிக் கிடப்பதைக் கவர்ந்துகொண்டு நடக்க முயலும் விட்டேற்றி மனப்பான்மை மாற வேண்டும். இது சமுதாயச் சீர்குலைவு, மனிதநேயச் சிதைவு. இவைகளைக் கண்டும் காணாமல் போகின்ற போக்கு எல்லா நிலைகளிலும் உள்ளது.

மனிதனை உண்மையான மனிதனாக வாழக் கற்றுக் கொடுப்பது கல்வி. கல்விப் பயிற்சியே மனிதனை நிமிர்ந்து நிற்கச் செய்யும். ஒரு தனி மனிதனுக்குக் கல்வியறிவு மிகப் பயன்படும். அவன் வழிச் சமுதாய மறுமலர்ச்சி தழைக்கும். உலகப் பேரறிஞர்கள் மனித நேயத்தை அறிவியல் கண்கொண்டு பேசி, அதுவே வழி என்று காட்டி, வாழ்ந்து உள்ளனர். மனித நேயம் மிக்க பண்பாளர்கள் நம்மிடையே இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்களை இனம் கண்டு பின்பற்றியே ஆகவேண்டும். மனித நேயத்தை வளர்ப்பதற்குக் கற்கும் கல்வி மிகவும் பயன்படும். இலக்கியத்தின் இலக்கும், இசையின் குறிக்கோளும் மனித நேயம் அன்றி வேறு இல்லை. ஆகவே, கல்வி மூலம் மனித நேயத்தை பரவச் செய்வது அவசியம் ஆகின்றது.

வளரும் இளம் செடிக்கு உரம் இட்டு, களை களைந்து, நீர்பாய்ச்சி காவல் செய்தால், கதிரவன் ஒளியின் துணையுடன் அப்பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, வாழ்க்கையின் அருமையை உணரவைக்க வேண்டும்.

நாள் என்பது ஒரு காலவரையறை போல் தோன்றுகின்றது. அதனால் ஒவ்வொரு நாளும் கழிவதைக் கண்டு பலரும் மகிழ்கின்றார்கள். நாள் என்பது ஒரு காலவரையறை போல் காட்டினாலும், அந்த வரையறை முடிவதற்குள் செய்யத்தக்க நல்வினை எல்லாம் விரைந்து செய்ய வேண்டும். வாழ்நாள் உள்ளபோதே பயனுள்ளவற்றை எண்ணி அறத்தைப் போற்ற வேண்டும். உயிர் உடம்பில் வாழும் இயல்பை உணர்ந்தால் இந்த அறநினைவு மாறாது. விழிப்பு உள்ளபோது கடமைகளைச் செய்து முடிப்பதுபோல், வாழ்வு உள்ளபோதே அறத்தைப் போற்றி உயரவேண்டும்.

அருளுணர்வு மிகுந்து தன்னலம் தேய்ந்து அழிந்த பின், வாழ்க்கையில் பற்று எல்லாம் அற்றுப் போகும்.  இல்லறத்தில் இருந்து கொண்டு அகத் துறவோடு வாழுதல் வேண்டும். பிறரால் பழிக்கப்பபடாத புறத்துறவும் நன்றுதான். 

"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று"

என்று நாயனார் அருளிய திருக்குறளைக் கருத்தில் இருத்துதல் வேண்டும். 

"இல்லறம் துறவறம் என்று சொல்லப்பட்ட இருவகை அறத்தினும் நூல்களால் அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே. ஏனைத் துறவறமோ எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது இல்லையாயின், அவ் இல்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று" என்று பரிமேலழகர் வகுத்து உரையைக் காண்க. அல்லாமல், அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது எல்லாம் இல்வாழ்க்கைதான். அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் எவனும் பழிப்பதற்கு இடம் இல்லாது இருக்குமானால்தான் சிறந்த அறம் ஆகும் என்றும் பொருள் கொள்ளலாம்.

துறவு என்றாலே பற்று அற்று இருத்தல் என்பதுதான் பொருள். துறத்தல் என்று சொன்னாலே, துறப்பதற்கு இடமாக ஒன்று இருக்கு வேண்டும். பற்றுக்களைத் துறப்பதற்கான பக்குவத்தை உண்டாக்கிக் கொடுப்பதே இல்லறம்தான் என்பதை மறத்தல் ஆகாது. ஒருவன் எதனிடம் பற்றுக்கொண்டு வாழ்கின்றானோ, அதனால் துன்பத்தை அடைவான். எதிலிருந்து எதிலிருந்து பற்று நீங்கி வாழ்கின்றானோ அதனால் அதனால் அவனுக்குத் துன்பம் இல்லை, ஆகையால் துன்பம் அற்ற இன்ப வாழ்வை விரும்பினால், எல்லாம் உள்ளபோதே, இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்ற துறவு வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். துறந்த வாழ்க்கையில் கைகூடும் இன்பங்கள் பல உண்டு.

"யாதனின் யாதனின் நீங்கியான், நோதல்

அதனின் அதனின் இலன்"

என்பது நாயனார் அருளிய திருக்குறள்.

உள்ளத்தில் அன்பு உள்ளோரிடத்திலேயே உண்மைத் துறவு மிகுந்து இருக்கும். மனித நேயமே உண்மைத் துறவுக்கு இருப்பிடம் ஆகும். காவி ஆடையை உடுத்துக் கொண்டு காடுகளில் சென்று உழல்வது அவசியம் இல்லை. அதில் விழுமிய பயனும் இல்லை.

"காவி உடுத்தும், தாழ்சடை வைத்தும்

     காடுகள் புக்கும் ...... தடுமாறி;

காய்கனி துய்த்தும், காயம் ஒறுத்தும்,

     காசினி முற்றும் ...... திரியாதே;


சீவன் ஒடுக்கம், பூத ஒடுக்கம்

     தேற உதிக்கும் ...... பரஞான

தீப விளக்கம் காண, எனக்கு உன்

     சீதள பத்மம் ...... தருவாயே."     

என்பது அருணகிரிதாநர் அருளிய திருப்புகழ்.

இறைவன் செம்மேனி எம்மான் ஆதலினாலும், செம் பொருளைக் குறிப்பதற்குரிய முயற்சியை உடையார் என்று குறிப்பைக் காட்டுதல் பொருட்டும் துறவிகள் கல்லாடையைப் புனைவது மரபு. நீண்ட சடையை வைத்துக் கொள்ளுதலும் துறவிகட்கு ஒரு அங்கம். அன்றி முண்டிதம் செய்து கொள்வதும் உண்டு. காம குரோதம் முதலிய குற்றங்களைக் கடிந்து விட்டவர்க்கு தலைமயிரை நீட்டினாலும் குறைத்தாலும் ஒன்று தான்.  நல்லொழுக்கம் உடையார்க்கு சடை இன்றியமையாதது அல்ல.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம்

பழித்தது ஒழித்து விடின்."                     ---  திருக்குறள்.

நாட்டை விட்டு காடு போய்,  மழைக் காலத்திலும், பனிக் காலத்திலும், தண்ணீரில் நின்றும், வெய்யில் காலத்தில் நெருப்பில் நின்றும் தவம் இயற்றுதல் துறவு என்று சொல்லப்படுவது மரபு. காட்டுக்குச் சென்று தவ வாழ்வை மேற்கொள்ள விரும்புகின்றவன், தன் துணையோடுதான் செல்லவேண்டும். உள்ளன்பு இல்லையானால் இம் முயற்சி பெரும்பலனை அளிக்காது.

"காடே திரிந்து என்ன, காற்றே புசித்து என்ன, கந்தை சுற்றி

ஓடே எடுத்து என்ன, உள்ளன்பு இலாதவர்ய; ஓங்கு விண்ணோர்

நாடே, இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர் பால்

வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே!"   

என்பது ஓட்டுடன் பற்று இன்றி உலகைத் துறந்த அருட்பெரும் செல்வராகிய பட்டினத்து அடிகளாரின் அருள்வாக்கு.  

இதன் பொருள் ---

உள்ளத்தின் அன்பு இல்லாதவர்கள் காட்டிலே திரிவதால் என்ன பயன்? காற்றையே புசிப்பதால் என்ன பயன்? கந்தைத் துணியை அரையிலே சுற்றிக் கொண்டு, திருவோட்டைக் கையில் ஏந்தித் திரிவதால் என்ன பயன்? உயர்ந்த தேவர் உலகத்தை நிகர்த்த திருவிடைமருதூரில் எழுந்தருளி உள்ள பெருமானுக்கு உண்மை அன்பராக உள்ளவர்கள், மாதரோடு கூடி இல்வாழ்க்கையில் ஈடுபட்டு இருந்தாலும், உண்மை ஞானத்தால் அடைதற்கு உரிய வீடுபேற்றுப் பேரின்பத்தைப் பொருந்தியவர்களாக இருப்பார்கள்.

அன்பு இல்லாத வைராக்கியம் பயன்படாது. அது  உயிர் இல்லாத உடம்பு போல் ஆகும். அன்பு உடைய சாக்கிய நாயனார் கல்லை விட்டு எறிந்தாலும் இறைவன் ஏற்று அருள் புரிந்தான். அன்பு இல்லாதவர் மலர் விட்டு அருச்சனை புரிவதாகப் பாவகம் புரிந்தாலும், இறைவன் ஏற்றுக் கொள்ள மாட்டான்.  இதற்குச் சான்று சாக்கிய நாயனாரும் மன்மதனும். 

"மனத்து அகத்து அழுக்கு அறாத மவுனஞான யோகிகாள்

வனத்து அகத்து இருக்கினும் மனத்து அகத்து அழுக்கு அறார்;

மனத்து அகத்து அழுக்கு அறுத்த மவுனஞான யோகிகள்

முலைத்தடத்து இருக்கினும் பிறப்பு அறுத்து இருப்பரே."

என்பது சிவவாக்கியர் காட்டிய அருள்நெறி.

இதன் பொருள் ---

உள்ளத்திலே முற்பிறப்பு வாசனையாகப் படிந்து உள்ள அகங்கார மமகாரங்களால் உண்டான மாயாபாசங்களை அறுத்து ஒழிக்காமல், மவுனஞானத்தை உடையவர் போலக் காட்டிக் கொள்ளும் யோகிகள் காட்டில் இருந்தாலும், உள்ளத்திலே பொருந்தி உள்ள அழுக்கினை அறுத்து ஒழித்தவர் ஆகமாட்டார்கள். உள்ளத்திலே உள்ள மாயாபாசங்களை அறவே ஒழித்த மவுனஞானத்தை உண்மையாகவே உடைய யோகிகள் பெண்களுடைய முலைத்தடத்தில் முழுகி இருந்தாலும் (சிற்றின்ப நிலையில் இருந்தாலும்) பிறப்பு அற்ற பெருநிலையை அடைந்து பேரின்பத்தில் திளைத்து இருப்பவர் ஆவார்.

உள்ளத்தில் அழுக்கை அறுக்காமல் யோகிகள் போல வாழ்பவர்களைக் காட்டிலும், உள்ளத்தில் அழுக்கை அறுத்து, போகிகளாக வாழ்பவர்களே சிறந்தவர்கள். 

ஒருவனுக்கு நல்லறிவு வளர நல்ல கல்வி அவசியம். கல்வி கற்கவில்லையானாலும், கற்ற பெரியோருடன் கூடி இருந்தால் நல்லறிவு நாளும் வளரும். நல்லறிவு நல்லொழுக்கத்திற்குத் துணை புரியும். நல்லொழுக்கமே பற்றற்ற நிலையை உண்டாக்கும். அதற்கு நிலைக்களன் இல்லறமே.


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...