ஐந்தில் வளையாதது




"தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றபடி, இளமையில் நல்ல பழக்கங்களை உருவாக்கிக் கொண்டால், அது பிறவி உள்ள வரை தொடரும் என்பது மட்டும் அல்லாமல், பிறவிகள் தோறும் வரும்.

பெருத்த செல்வம் உடையவராய்ப் பிறந்தவர்கள், அழகு உடையவராய், நல்ல குடியில் பிறந்தவர்கள் யாரையும் "கருவிலே திரு உடையார்" என்று கூறுவதில்லை. நற்சிந்தனையும், நல்லொழுக்கமும், இறைச் சிந்தனையும் உடையவரையே அவ்வாறு கூறுவதையும் காணலாம்.

ஆனால், விளையாட்டுப் பருவம், எதையும் ஆய்ந்து அறியமுடியாத பருவம் ஆகிய இளவயதில், நல்லொழுக்கத்தில் நாட்டம் செல்வது மிகவும் அருமை. உடல் வளமை உள்ள இளவயதில், நல்லவற்றைப் பழகினால், அது முதுமையில் எளிதாகும்.

இந்தக் கருத்தில்தான், "ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா" என்ற வழக்குச் சொல் உருவாகி இருக்கவேண்டும் என்பதை, "நீதிவெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல் மூலம் அறியலாம்.

பாடலைக் காண்போம்....

வருந்தவளை வேய்,அரசர் மாமுடியின் மேல்ஆம்,
வருந்த வளையாத மூங்கில் - தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினி எல்லாம் திரிந்து
தாழும்அவர் தம்அடிக்கீழ்த் தான்.


இதன் பொருள் ---

         தன்னை மக்கள் வளைத்து வருத்தப்படுத்த வளைந்து கொடுத்த மூங்கில் கொம்பு, பெருமை வாய்ந்த அரசரின் தலைமுடியின்மேல் பல்லக்கு ஆகச் சிறப்புப் பெறும். வளையாத மூங்கில் கம்பானது, தாழ்வுபெற்று கழைக் கூத்தாடிகளின் கையில் அகப்பட்டு அவருடைய காலின்கீழ் கிடந்து உலகமெல்லாம் அலைந்து இழிவுபடும்.

         இதன் கருத்து, இளமையில் பெற்றோரும் ஆசிரியரும் வற்புறுத்திக் கல்வி கற்க வைக்க,   பெற்றோரும் ஆசிரியரும் காட்டிய வழியில் வருந்திக் கல்வியறிவைப் பெற்ற பிள்ளைகள், பிற்காலத்தில் பெரியோர் பலரும் பாராட்டும்படி சிறப்பைப் பெறுவார்கள். இளமையில் உடம்பை வருத்தி, கல்வியறிவைப் பெற எண்ணாமல் சோம்பி இருந்து ஊர் சுற்றிய பிள்ளைகள், பிழைக்க வழியில்லாமல், ஊர்தோறும் திரிந்து, கீழ்மக்களிடத்திலே அவர்களை இட்ட வேலைகளைச் செய்து சிறுமைப் பட்டுக் கிடப்பார்கள்.

நல்ல சுற்றம், நட்பு அமைந்தால், நலம் பல சிறக்கும்





நல்ல சுற்றம், நட்பு அமைந்தால் நலம் பல சிறக்கும்

---------------

     அன்பு நீங்காத சுற்றமானது ஒருவனுக்கு அமையப் பெற்றால், அந்த சுற்றமானது கிளைத்தல் குறையாத செல்வங்கள் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும் என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

     சுற்றம் என்பதற்கு, சுற்றி இருப்பது என்று பொருள் கொண்டு, நம்மைச் சுற்றி இருக்கும் உறவையும், நட்பையும் கொள்ளலாம்.

"விருப்பு அறாச் சுற்றம் இயையின், அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்"                --- திருக்குறள்.    


     உள்ளத்தில் பகைமை உணர்வைக் கொண்டிருந்து, புறத்தில் அன்பு உள்ளவரக்ளைப் போல் காட்டிக் கொள்ளுதல் இல்லாத சுற்றத்தாரைக் குறித்து இவ்வாறு சொன்னார்.

     "புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை வேறு ஆதல் வேண்டும்" என்றார் குமரகுருமர அடிகள். "முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா, வஞ்சகரை அஞ்சப்படும்" என்றார் நாயனார் பிறிதொரு திருக்குறளில். முகத்தினால் இனிமையாகப் பழகி, உள்ளத்தில் கொடுமையை வைத்திருக்கும் வஞ்சகர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும் என்பது இத் திருக்குறளின் பொருள்.

     ஒருவன் வளமாக வாழ்கின்றபோது, வந்து சேருகின்ற உறவினர்கள், வானத்து விண்மீன்கள் போலப் பலராக இருப்பர். ஆனால், இயலாமை, வறுமைத் துன்பம் வந்து விடுகிறபோது, சொந்தம் என்று சொல்லிக் கொண்டு, நட்பு என்று சொல்லிக் கொண்டு வருபவர்கள் மிகச் சிலராகவே இருப்பார்கள். இது தான் உலகியல் என்கின்றது பின்வரும் "நாலடியார்" பாடல்...

காலாடு போழ்தில் கழிகிளைஞர், வானத்து
மேலாடு மீனின் பலர் ஆவர், --- ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற நாட!
தொடர்பு உடையேம் என்பார் சிலர்.      --- நாலடியார்.


     நீர் நிறைந்து இருந்தபோது குளத்தில் மகிழ்ந்து இருந்து, நீர் வறண்டபோது, குளத்தை விட்டு நீங்குகின்ற நீர்ப்பறவை போல, செல்வம் மிகுந்து இருந்த காலத்தில் கூடி இருந்து, வறுமை வந்தபோது, விட்டு சொல்லாமல் நீங்குவோர் உறவினர் ஆகார்.

     அந்தக் குளத்தில் உள்ள கொட்டியும், அல்லியும், நெய்தலும்போல, நீர் உள்ள காலத்து நன்கு வளர்ந்து, நீர் அற்ற காலத்தில் சேர்ந்து அழிவதைப் போல, வறுமை வந்தபோதும், துன்பம் வந்தபோதும், நீங்காது சேர்ந்து இருந்து, நம்மோடு கூடித் துன்பத்தை அனுபவிப்பவரே சிறந்த உறவினர் ஆவார்.

     இக் கருத்தை, "மூதுரை" என்னும் நூலில் ஒரு பாடலாக வடித்துக் காட்டுகின்றார் ஔவைப் பிராட்டியார்.
        
"அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவுஅல்லர்-அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார் உறவு".                --- மூதுரை.


     திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்வதற்கு எழுந்த நூல்கள் சில. அவற்றுள்,  இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடலைக் காண்போம்....


"வில்லுக்கு அதிபன் விரகினால் ஐவர்அரக்கு
இல்உற்றும் உய்ந்தார், இரங்கேசா! - நல்ல
விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்".              

இதன் பொருள் ---

     இரங்கேசா --- திருவரங்கநாதக் கடவுளே! வில்லுக்கு அதிபன் --- வில்வித்தையில் தன்னை ஒப்பார் இல்லாத விதுரனுடைய, விரகினால் --- முன் புத்தியினால், ஐவர் --- பஞ்சபாண்டவர், அரக்கு இல் உற்றும் --- (துரியோதனன் கட்டின வஞ்சக) அரக்கு மாளிகைக்குள் இருந்தும், உய்ந்தார் --- பிழைத்துப் போனார்கள்,  (ஆகையால், இது) நல்ல விருப்பு அறா சுற்றம் இயையின் --- என்றும் ஒருபடித்தான அன்பு அகலாத சுற்றம் ஒருவனுக்குப் பொருந்தி இருக்குமானால், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் --- (அது) வளர்ந்துகொண்டே இருக்கும் பலவித செல்வங்களையும் கொடுக்கும் (என்பதை விளக்குகின்றது).

         கருத்துரை --- அன்புடைய சுற்றத்தால் ஆக்கம் பலவும் வளரும்.

        விளக்கவுரை --- திருதராட்டிரனும் துரியோதனனும் புரோசனன் என்னும் மந்திரியுடன் தனி இடத்திலிருந்து, பாண்டவர் ஐவரையும் கொல்லும் வழியை ஆலோசித்தபோது, வாரணாவத நகரத்திற்குப் பாண்டவரை அனுப்புமாறு தனது தந்தையைத் துரியோதனன் வேண்டுகின்றான். அமைச்சன் புரோசனனை விட்டு வாரணாவதத்தை அலங்கரிக்கச் சொல்லுகின்றான். திருதராட்டிரன் பாண்டவரை வாரணாவதம் சென்று வாழப் பணித்து, புரோசனனையும் அவனுக்கு மந்திரியாக உடன் அனுப்புகின்றான். பாண்டவர்கள் இதை உண்மையான உபசரிப்பு என்று நம்புகின்றனர்.  புரோசனன் பாண்டவர்களை வாரணாவதத்திற்கு அழைத்துப் போகின்றான். பாண்டவர்களுடன் விதுரர் நெடுந்தூரம் சென்று, துரியோதனின் நோக்கத்தை மறைமுகமாக உணர்த்துகின்றார். "காடு தீப் பற்றி எரியும் போது, எலிகள் பூமிக்குள் உள்ள வளையில் புகுந்து தப்பிவிடும்" என்றார். இந்த எச்சரிக்கையை பாண்டவர்கள் புரிந்துக் கொண்டனர். பின் விதுரர் அத்தினாபுரம் திரும்பிவிட்டார்.

     வாரணாவதம் சென்ற பாண்டவர்கள் சிவதரிசனம் செய்து, அவர்கள் தங்குவதற்கு என அமைக்கப்பட்டுள்ள மாளிகைக்குச் செல்லுகின்றனர். மாளிகையின் அழகை வியந்தவாறே கவனித்து,  புரோசனன் மீது பாண்டவர்கள் சந்தேகம் கொள்ளுகின்றனர். மாளிகையில் பாண்டவர்கள் தங்கி இருக்கும் காலத்து, சிற்பி ஒருவன் பீமனிடம் வந்து, மாளிகையில் நிலவறை அமைத்துள்ளது பற்றிக் கூறி, 'தீங்கு நிகழ்ந்தபோது அதன் வழித் தப்புக!' என்று சொல்லி, பின்வருமாறு நடந்ததை விவரிக்கின்றான்.

     "உமது பெரிய தந்தையாகிய திருதராட்டிரனது கட்டளையினால், சிற்பிகள் புதுமையாக, பெரிய இந்த வாரணாவத நகரத்திலே அழகிய இந்த மாளிகையைச் செய்த பொழுது,  தரும சொரூபியாகிய, உமது சிறிய தந்தையான விதுரர், மாளிகை கட்டுவதற்கு வந்த புரோசனன் என்னும் மந்திரியினது வஞ்சனையை அறிந்து, என் மீது நம்பிக்கை வைத்து, இம் மாளிகையை அமைக்கும் சிற்பிகளுள் ஒருவனாய் இருந்து தொழில் செய்யும்படி கட்டளையிட்டு அனுப்பினார்.

     உங்களுக்கு அடியவனான நானும், மற்றைய சிற்பிகளுடன் இருந்து,  அரக்கினால் ஒரு மாளிகையை இவ்வாறு செய்து அமைத்து, இனி நிகழும் பயன்களை எல்லாம் ஆலோசித்து, விதுரர் அறிவுரையின்படிக்கு, நீண்ட நிலவறையின் (சுரங்க வழி) வழியானது மலைக்குகை போலச் சென்று நீண்ட காட்டினைச் சேரும் வகையில் முடியும்படி, இந்த மாளிகையில் ஒரு மண்டபத்தைச் செய்துள்ளேன்.

     வேறு ஒருவரும் அறியாத உபாயத்தால், அந்த மண்டபத்தில் ஒரு தூணை, பீமா! நீ உனது வலிமைகொண்டு பெயர்த்தெடுத்து விடும்படி,  அந் நிலவறைக்குச் செல்ல வழியை அமைத்து வைத்துள்ளேன். இச் செய்தி நம்பத்தக்கது என்று உள்ளத்திலே கொண்டு, தீங்கு நிகழ்ந்தபொழுது அவ்வழியாகத் தப்பித்துச் சென்று விடுங்கள்". பணிவுடன் சொன்னான்.

     இவ்வாறு பணிவுடன் சொன்ன சிற்பிக்குப் பரிசு அளித்து, பாண்டவர் பகலில் வேட்டையாடி, இரவில் தூக்கம் இன்றி விழிப்புடன் வாழ்ந்து வருகின்றனர். புரோசனனுடன் நெருங்கிப் பழகிய பாண்டவர், ஒரு நாள் இரவில், அவனையும் தம் மாளிகையில் துயிலச் செய்கின்றார்கள். அவன் அயர்ந்து தூங்கும் நேரம் பார்த்து, அரக்கு மாளிகைக்கு பீமன் தீ வைத்து, தாயுடனும் சகோதரர்களுடனும் சுரங்க வழியாகத் தப்பி, வனத்தை அடைகின்றார்கள்.

     வளமாக வாழும்போது கூடி இருந்து மகிழ்வது உறவு அல்ல. வாழ்விலே தாழ்வு வந்தபோது, உடன் இருந்து பரிவு காட்டுவதே உறவு ஆகும். இது, நட்புக்கும் பொருந்தும். சிரித்துப் பேசி மகிழ்வது நட்பு அல்ல. துன்பம் வந்தபோது, உடனிருந்து துடைக்கத் துணை புரிவதே நட்பு ஆகும்.

     விருப்பறாச் சுற்றமாகிய விதுரர் ஒருவர் இருந்ததனால், ஐவருக்கும் ஆபத்தில் இருந்து நீக்கி, அருப்பு அறா ஆக்கம் தந்தது.

     பாட்டுப் பாடுவது என்றால் இனிமையான குரலில் கணீர் என்று பாடவேண்டும். குரல் தழுதழுத்துப் பாடுவதை வி, மௌனமாய் இருப்பதுதான் நல்லது. தெளிவில்லாத கல்வி, கேள்வியை விட, கல்வி கற்காமல் இருப்பதே நல்லது. எப்போதும் மனத் தெளிவு இல்லாமல் இருக்கும் நண்பனை விட, நீண்ட நாள் பகைவனே நல்லவன் ஆவான். இந்தக் கருத்து அமைந்த பாடல் ஒன்று பழமொழி விளக்கம் என்னும் "தண்டலையார் சதகம்" என்னும் நூலில் வருகின்றது. பாடலைப் பார்ப்போம்.


"இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
     வளநாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
     இருப்பதுவே தக்க தாகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
     கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவதனின் வயிரம்பற்
     றியபகையே வண்மை யாமே".

இதன் பொருள் ---

     இழை பொறுத்த முலைபாகர் தண்டலையார் வளநாட்டில் --- அணிகலன்கள் தாங்கிய முலைகளை உடைய உமையம்மையாரை இடப்பாகத்தில் கொண்ட தண்டலையாரின் வளம்பொருந்திய நாட்டிலே, எடுத்த ராகம் தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய் இருப்பதுவே  தக்கது ஆகும் --- பாடத் தொடங்கிய இசையைத் தடுமாற்றத்துடன் பாடுவதைக் காட்டினும் பாடாமல் இருப்பதே நலம் தரும். குழை குழைத்த கல்வியினும்  கேள்வியினும் கல்லாமை குணமே --- தெளிவற்ற  கல்வி கேள்விகளைவிடக் கல்லாமையே நன்றாகும்.  நாளும் வழுவழுத்த உறவு அதனின் வயிரம் பற்றிய பகையே வண்மை ஆம் --- எப்போதும் மனத் தெளிவற்ற நட்பைக் காட்டினும், நீங்காத பகைமை உணர்வு பொருந்திய பகையே வளமுடையதாகும்.

பகைவன் என்றால் பாதுகாப்பாக இருக்கலாம். தெளிவில்லாத உறவும், நட்பும் உடன் இருந்தே கெடுப்பவை. எப்போது, எப்படிக் கெடுக்கும் என்பதுதான் தெரியாது.


கும்பகோணம் --- 0872. கரியகுழல் சரிய






அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

கரியகுழல் சரிய (சோமீச்சரம் - கும்பகோணம்)

முருகா!
எப்போதும் இடையறாது உம்மைச் சிந்திக்கவும்
வந்திக்கவும் அருள் புரிவீர்.


தனனதன தனனதன தானான தானதன
     தனனதன தனனதன தானான தானதன
     தனனதன தனனதன தானான தானதன ...... தனதான



கரியகுழல் சரியமுகம் வேர்வாட வாசமுறு
     களபமுலை புளகமெழ நேரான வேல்விழிகள்
     கயல்பொருது செயலதென நீள்பூச லாடநல ...... கனிவாயின்

கமழ்குமுத அதரவிதழ் தேனூறல் பாயமிகு
     கடலமுத முதவியிரு தோள்மாலை தாழவளை
     கலகலென மொழிபதற மாமோக காதலது ...... கரைகாணா

தெரியணுகு மெழுகுபத மாய்மேவி மேவியிணை
     யிருவருட லொருவரென நாணாது பாயல்மிசை
     யிளமகளிர் கலவிதனி லேமூழ்கி யாழுகினு .....மிமையாதே

இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
     இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
     இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை......யருள்வாயே

உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
     ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
     னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு.....னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
     உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
     உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு......முயர்வாக

வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
     மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
     வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட ......மதில்சூழும்

மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
     மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
     மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள் ......பெருமாளே.


பதம் பிரித்தல்


கரியகுழல் சரிய,முகம் வேர்வு ஆட, வாசம்உறு
     களபமுலை புளகம்எழ, நேரான வேல்விழிகள்
     கயல்பொருது செயல் அது என நீள் பூசல்ஆட,நல......கனிவாயின்

கமழ் குமுத அதர இதழ் தேன்ஊறல் பாய, மிகு
     கடல் அமுதம் உதவி, இரு தோள்மாலை தாழ, வளை
     கலகல என, மொழி பதற, மாமோக காதல்அது ......கரைகாணாது,

எரி அணுகு மெழுகு பதமாய் மேவி மேவி,இணை
     இருவர் உடல் ஒருவர்என, நாணாது, பாயல்மிசை
     இளமகளிர் கலவி தனிலே மூழ்கி ஆழுகினும், ...... இமையாதே

இரவினிடை துயில் உகினும், யாரோடு பேசுகினும்,
     இளமையும், உன் அழகுபுனை ஈராறு தோள்நிரையும்,
     இருபதமும், றுமுகமும், யான்ஓத ஞானம்அதை ......அருள்வாயே.

உரியதவ நெறியில் நம நாராயணாய என,
     ஒருமதலை மொழி அளவில் ஓராத கோபமுடன்,
     உனது இறைவன் எதனில்உளன் ஓதாய்,  அடா, எனுமுன் ...... உறுதூணில்

உரம் உடைய அரி வடிவதாய், மோதி வீழ, விரல்
     உகிர்புதைய, இரணியனை மார் பீறி, வாகைபுனை
     உவணபதி, நெடியவனும், வேதாவும், நான்மறையும் ......உயர்வாக

வரி அளிகள் இசைமுரல, வாகான தோகை இள
     மயில் இடையில் நடனம்இட, ஆகாசம் ஊடுஉருவ
     வளர் கமுகின் விரிகுலைகள் பூண்ஆரம் ஆகியிட ......மதில்சூழும்

மருது அரசர் படைவிடுதி வீடாக நாடி,மிக
     மழவிடையின் மிசை இவரும் சோமீசர் கோயில்தனில்
          மகிழ்வுபெற உறை முருகனே! பேணு வானவர்கள் ......பெருமாளே.


பதவுரை

         ஒரு மதலை --- ஒப்பற்ற மகவாகிய பிரகலாதர்,

         உரிய தவ நெறியில் --- அன்புக்கு உரியதாகிய தவநெறியில் நின்று,

       நம நாராயணாய என மொழி அளவில் ---  "ஓம் நமோ நாராயணாய" என்று கூறியவுடன், (அவருடைய தந்தை ஆகிய இரணியன்)

         ஓராத கோபமுடன் --- ஆராயாமல் படிக்குப் பெரிதும் சினம் கொண்டு,

         உனது இறைவன் எதனில் உளன் --- உன்னுடைய கடவுளாகிய திருமால் எங்கே, எப்பொருளில் இருக்கின்றான்,

        ஓதாய் அடா எனும் முன் --- அடா! விரைவில் கூறு என்று வினாவுவதற்கு முன்

         உறு தூணில் உரம் உடைய அரி வடிவதாய் --- அங்கு ஒருபுறம் இருந்த தூணில் இருந்து, வலிமை மிகுந்த நரசிங்கத்தின் வடிவமாய் வந்து,

         மோதி விழ --- இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து,

        விரல் உகிர் புதைய --- திருக்கரங்களில் உள்ள நகங்களைப் புதைத்து

        இரணியனை மார் பீறி --- இரணியனுடைய மார்பைக் கிழித்துப் பிளந்து,

         வாகை புனை --- வெற்றி மாலை தரித்த

        உவணபதி நெடியவனும் --- கருடன் மீது எழுந்தருளி வரும் தலைவராகிய நெடிய திருமாலும்,

         வேதாவும் நான்மறையும் உயர்வாக --- பிரமதேவரும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக,

         வரி அளிகள் இசை முரல --- வரிகளுடன் கூடிய வண்டுகள் இனிய ஒலியை முழக்க,

        வாகு ஆன தோகை --- அழகுள்ள தோகையை உடைய

       இள மயில் இடையில் நடனம் இட --- இளமையான மயில்கள் நடுவில் நடனம் செய்ய,

         ஆகாசம் ஊடு உருவ --- ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு

       வளர் கமுகின் விரி குலைகள் --- வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் விரிந்த குலைகள்

        பூண் ஆரமாகி இட --- பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க,

         மதில் சூழும் மருத அரசர் படை விடுதி வீடாக --- திருமதில்கள் சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும் விளங்க

         நாடி மிக --- மிகவும் விரும்பி

        மழவிடையின் மிசை இவரும் --- இளமை வாய்ந்த விடையின் மீது எழுந்தருளி வருகின்ற

       சோமீசர் கோயில்தனில் --- சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் திருக்கோயிலில்

         மகிழ்வு பெற உறை முருகனே --- உயிர்கள் யாவும் மகிழ்ச்சி பெற வாழுகின்ற முருகக் கடவுளே!

         பேணு வானவர்கள் பெருமாளே --- தேவர்கள் விரும்பி நிற்கும் பெருமையின் மிக்கவரே!

         கரிய குழல் சரிய --- கரு நிறம் உள்ள கூந்தல் சரிந்து விழவும்,

      முகம் வேர்வு ஆட --- முகம் வியர்வை கொள்ளவும்,

         வாசம் உறு களப முலை புளகம் எழ --- நறுமணம் உள்ள கலவைச் சாந்து அணிந்த மார்பகங்கள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழவும்,

         நேரான வேல் விழிகள் --- செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய

       கயல் பொருது செயல் அது என நீள் பூசல் ஆட --- கயல் மீன்கள் காதுகளோடு சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்யவும்,

         நல கனிவாயின் கமழ் குமுத அதர இதழ் --- நறுமணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் வாய் இதழினின்றும்

      தேன் ஊறல் பாய --- தேனைப் போன்ற ஊறல் பாயவும்,

         மிகு கடல் அமுதம் உதவ --- அது நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ,

      இருதோள் மாலை தாழ --- இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள,

         வளை கலகல என --- கையில் உள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க,

       மொழி பதற --- வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர,

         மா மோக காதல் அது கரை காணாது --- மிக்க காம ஆசை கரை கடந்து பெருகி வரவும்,

         எரி அணுகு மெழுகு பதமாய் மேவி மேவி --- தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து

        இணை இருவர் உடல் ஒருவர் என --- இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல் இணைந்து,

         நாணாது --- கூச்சமின்றி

     பாயல் மிசை --- படுக்கையில்

     இளமகளிர் கலவிதனிலே மூழ்கி ஆழுகினும் --- இளம் பெண்களுடன் புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும்,

         இமையாதே --- கண் இமை கொட்டுதல் இன்றி

      இரவின் இடை துயில் உகினும் --- இரவில் தூங்கினாலும்,

      யாரோடு பேசுகினும் --- யாரோடு பேசினாலும்,

         இளமையும் உன் அழகு புனை ஈராறு தோள் நிரையும் --- இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு புயங்களின் வரிசையையும்,

         இருபதமும் அறுமுகமும் யான் ஓத --- இரண்டு திருவடிகளையும், ஆறு திருமுகங்களையும் நான் ஓதும்படியான

     ஞானம் அதை அருள்வாயே --- மெய்ஞ்ஞானத்தைத் தந்து அருளுவீராக.

பொழிப்புரை

         ஒப்பற்ற மகவாகிய பிரகலாதர், அன்புக்கு உரியதாகிய தவநெறியில் நின்று,  ஓம் நமோ நாராயணாய என்று கூறியவுடன், (அவருடைய பிதாவாகிய இரணியன்) ஆராயாமல் படிக்குப் பெரிதும் சினம் கொண்டு, உன்னுடைய கடவுளாகிய திருமால் எங்கே, எப்பொருளில் இருக்கின்றான், அடா விரைவில் கூறு என்று வினாவி, அவரால் சுட்டப்பெற்ற கல் தூணை அறைதலும், அதிலிருந்து வலிமை மிகுந்த நரசிங்கத்தின் வடிவமாய் வந்து, இரணியன் மேல் மோதி அவனை வீழச் செய்து, திருக்கரங்களில் உள்ள நகங்களைப் புதைத்து இரணியனுடைய மார்பைக் கிழித்துப் பிளந்து, வெற்றி மாலை தரித்த கருடன் மீது எழுந்தருளி வரும் தலைவராகிய நெடிய திருமாலும், பிரமதேவரும், நான்கு வேதங்களும் மேன்மை பெறும்படியாக, வரிகளுடன் கூடிய வண்டுகள் இனிய ஒலியை முழக்க, அழகுள்ள தோகையை உடைய இளமையான மயில்கள் நடுவில் நடனம் செய்ய, ஆகாயம் வரை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள பாக்கு மரங்களின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய மாலைபோல ஆபரணமாக விளங்க, திருமதில்கள் சூழ்ந்ததும், மருத நிலத்து மன்னர்கள் பாசறையிடத்துக்குத் தக்க தலமாகவும் விளங்க, மிகவும் விரும்பி இளமை வாய்ந்த விடையின் மீது எழுந்தருளி வருகின்ற சோமீசர் என்ற நாமம் படைத்த சிவபிரானின் திருக்கோயிலில், உயிர்கள் யாவும் மகிழ்ச்சி பெற வாழுகின்ற முருகக் கடவுளே!

         தேவர்கள் விரும்பி நிற்கும் பெருமையின் மிக்கவரே!

         கரு நிறம் உள்ள கூந்தல் சரிந்து விழவும், முகம் வியர்வை கொள்ளவும், நறு மணம் உள்ள கலவைச் சாந்து அணிந்த மார்பகங்கள் புளகாங்கிதம் கொண்டு விம்மி எழவும், செவ்வையான வேலை ஒத்த கண்களாகிய கயல் மீன்கள் காதுகளோடு சண்டையிடும் செயலை ஒக்க பெரிய போர் செய்யவும், நறுமணம் உள்ள குமுத மலரை ஒத்த அதரம் எனப்படும் வாய் இதழினின்றும் தேனைப் போன்ற ஊறல் பாயவும், அது நிரம்பிக் கடல் போன்ற அமுதத்தை உதவ, இரண்டு தோள்களிலும் மாலை தாழ்ந்து புரள, கையில் உள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, வாய்ப் பேச்சு பதற்றமுடன் வெளிவர, மிக்க காம ஆசை கரை கடந்து பெருகி வரவும், தீயில் பட்ட மெழுகின் நிலையை அடைந்து இணையாக ஒன்றுபட்டு, இருவர் உடலும் ஒருவர் உடல் போல் இணைந்து,
கூச்சமின்றி படுக்கையில் இளம் பெண்களுடன் புணர்ச்சி இன்பத்தில் நான் மூழ்கி ஆழ்ந்து இருந்தாலும், கண் இமை கொட்டுதல் இன்றி இரவில் தூங்கினாலும், யாரோடு பேசினாலும், இளமையும் அழகும் பூண்டுள்ள உனது பன்னிரண்டு புயங்களின் வரிசையையும், இரண்டு திருவடிகளையும், ஆறு திருமுகங்களையும் நான் ஓதும்படியான மெய்ஞ்ஞானத்தைத் தந்து அருளுவீராக.

விரிவுரை

கரிய குழல் சரிய, முகம் வேர் வாட …. கரை காணாது ---

கரைகாணாத காதலுடன் கணவனும் மனைவியும் மகிழும்போது  மனைவிபால் நிகழும் மெய்ப்பாட்டை இந்த ஆறு வரிகளில் சுவாமிகள் கூறுகின்றனர்.

கலவி தனிலே மூழ்கி ஆழுகினும் ---

மனைவியை மருவி இன்பக் கடலில் முழுகி அந்த மகிழ்ச்சியிலேயே அழுந்தி விட்டாலும், இறைவனை மறத்தல் கூடாது. அப்போதும் ஆண்டவனுடைய சிந்தனை இருத்தல் வேண்டும்.

கண்டுஉண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுஉண்டு அயர்கினும் வேல்மறவேன், முதுகூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண்டு எனக்கொட்டி ஆட,வெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.
                                                     
என்பார் கந்தர் அலங்காரத்திலே.

காடே திரிந்துஎன்ன, காற்றே புசித்துஎன்ன, கந்தைசுற்றி
ஓடே எடுத்துஎன்ன, உள்ளன்பு இலாதவர் ஓங்குவிண்ணோர்
நாடே இடைமருது ஈசர்க்கு மெய்யன்பர், நாரியர்பால்
வீடே இருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டுஇன்பம் மேவுவரே.

என்று மிகவும் அழகாகக் கூறுகின்றனர் பட்டினத்தடிகள்.

இமையாதே இரவினிடை துயிலுகினும் ---

இரவில் இமைத்தல் இன்றி துயில் புரியினும், அத் துயிலும் இறைவனுடைய சிந்தனை மயமாக இருத்தல் வேண்டும்.

யாரோடு பேசுகினும் ---

ஒருவரோடு பேசுகின்ற போதும் இறைவனுடைய அருள்மயமான உள்ளத்துடன் பேசுதல் வேண்டும்.

இளமையும் ---

முருகனுடைய இள நலத்தைப் பற்றி இனிது பேசுதல் வேண்டும்.  முருகன் இளம் பூரணன். "என்றும் அகலாத இளமைக்காரன்”.  "என்றும் இளையாய்" என்பார் நக்கீரர். இளமையானது எல்லோராலும் விரும்பப்படும் பொருள். உள்ளத்தை மகிழ்விக்கும் நலம் உடையது. மாசற்ற குழந்தை உள்ளத்தில் ஈடுபடாதார் யாரும் இல்லை. கவலையற்ற பருவம் குழந்தைப் பருவம். காம க்ரோத முதலியவை யாவும் இல்லாத பால் போன்ற தன்மை வாய்ந்தது இளமைப் பருவமே. அந்த இளமை முழுவதும் நிலைக்களமாக அமைந்த தெய்வம் முருகன்.

அழகு புனை ஈராறு தோள் நிரையும் ---

அழகு நிறைந்து நிலைக்களமாக அமைந்தது முருகவேளுடைய பன்னிரு திருத்தோள்கள். பன்னிரு தோள்களிலும் அழகே அன்றி கொற்றவை குடி இருப்பள்.

சீராடு வீர மாது மருவிய
     ஈராறு தோளு நீளும் வரியளி
     சீராக மோது நீப பரிமள ...... இருதாளும்....---  (சீரான)  திருப்புகழ்.

இரு பதமும் ---

கிரியையும் ஞானமும் இறைவனுக்கு இரண்டு திருவடிகளாகும்.  அந்தத் திருவடிகள் தாம் உலகங்கள் அனைத்துக்கும் தோற்ற ஒடுக்கத்திற்கும் காரணமானவை. அத் திருவடிகளே உயிர்கட்கு இன்பத்தை அருளுபவை. சிவபோகத்தைத் தந்து சிவானந்தப் பெருவாழ்வை நல்குவதும் அத் திருவடிகளே ஆம்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராட ஏல்ஓர் எம்பாவாய்.  --- திருவாசகம்.

பிறவி நோய்க்குக் காரணாமாக இருப்பது பற்று ஒன்றே.  "அற்றது பற்று எனில் உற்றது வீடு" என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழி. பற்று என்பது இருவகை. ஒன்று அகப்பற்று. மற்றொன்று புறப்பற்று.  அகப்பற்று நான். புறப்பற்று எனது.  இதனை அகங்காரம் மமகாரம் என்பர் வடநூலார்.  "பற்றுநான் மற்று இலேன் கண்டாய்" என்பது மணிவாசகம். "மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன், பெற்றலும் பிறந்தேன், இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்" என்பது நம்பியாரூர் அருள்வாக்கு. இந்தச் சிறந்த கருத்தையே குமரகுருபர சுவாமிகள், கந்தர் கலிவெண்பாவில், "யான் எனது என்று அற்ற இடமே திருவடியா" என்று அருளிச் செய்தனர்.  பற்றை விடுவதே வீடுபேறாகும்.  அதுதான் திருவடிப் பேறும் ஆகும்.

யான் ஓத, ஞானம் அதை அருள்வாயே ---

துயின்றாலும், அயின்றாலும், நடந்தாலும், கிடந்தாலும், எழுந்தாலும், விழுந்தாலும், மகிழ்ந்தாலும், கவன்றாலும் எப்போதும் இறைவனை மறவாது சிந்தித்து உய்தல் வேண்டும்.

எழும்போதும் வேலுமயிலும் என்பேன்
         எழுந்தே மகிழ்ந்து,
தொழும்போதும் வேலுமயிலும் என்பேன்,
         தொழுதே உருகி,
அழும்போதும் வேலுமயிலும் என்பேன்,
         அடியேன் உடலம்
விழும்போதும் வேலுமயிலும் என்பேன்
         செந்தில் வேலவனே.

இறைவனைப் பற்றிப் பேசுதற்கும் நினைப்பதற்கும் இறைவன் திருவருளே வேண்டி இருப்பதனால், இறைவனையே வேண்டுகின்றனர்.

தாள் சதங்கை கொலுசும் குல சிலம்பும் அணி,
     ஆடல் கொண்ட மட மங்கையருடன், கலவி
     தாகம் உண்டு, ழல்கினும், கழல் உறும் கழல் ......மறந்திடேனே.

என்று திருநாகைத் திருப்புகழிலும்,

வரிபரந்து, ரண்டு நயனமும் சிவந்து,
     வதன மண்டலங்கள் ...... குறு வேர்வாய்,
மணி சிலம்பு அலம்ப, அளகமும் குலைந்து,
     வசம் அழிந்து, ழிந்து ...... மயல்கூர,

இருதனம் குலுங்க, இடைதுவண்டு அனுங்க,
     இனியதொண்டை உண்டு, ...... மடவார்தோள்
இதம் உடன் புணர்ந்து, மதி மயங்கினும், பொன்
     இலகு நின் பதங்கள் ...... மறவேனே.

என்று பிறிதொரு திருப்புகழிலும் அடிகளார், இக் கருத்தில் பாடி இருப்பது காண்க.


உரிய தவநெறியில் ---

பரகதியை விரும்புவோர் செல்லும் வழி தவநெறியே ஆகும்.  சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்துறையூரில் தவநெறியை இறைவன்பால் வேண்டிப் பெற்றனர். "தவநெறிதனை விடு தாண்டு காலியை" என்றார் பிறிதொரு திருப்புகழில். பிரகலாதர் சிறப்பாக அந் நெறியைப் பின்பற்றியதனால், உரிய தவநெறி என்றார்.


நம நாராயணாய ---

பிரகலாதரை அருணகிரிநாதர், ஞானக் குருந்தர் என்று மிகவும் அருமையாகப் பாராட்டிப் புகழ்கின்றனர்.

எழுதரு வேதத்தும் அன்றி முழுதினு மாய்நிற்கும் எந்தை
     எனஒரு ஞானக் குருந்தர் ...... உளமேவும்
இருவுரு வாகித் துலங்கி ஒருகன தூணிற் பிறந்து
     இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை
பொழுதிசை யாவிக்ர மன்தன் மருக.......         --- (பழுதற) திருப்புகழ்.

அன்பும் அசையாத உறுதியும் படைத்தவர் பிரகலாதர்.  அவர் தவநெறியில் நின்று உச்சரித்தது அஷ்டாக்ஷரமாகிய திருமந்திரம்.

முமுக்ஷுக்கள் அறிய வேண்டிய முக்கியமான ரகசியங்கள் மூன்றனுள் ஒன்று இந்த அஷ்டாக்ஷரம் என்னும் எட்டெழுத்து மந்திரம். இதுவே முதல் ரகசியம். இத் திருமந்திரத்தைக நாராயணமூர்த்தியே பதரிகாசிரமத்தில் ஆசாரியனாயும், சீடனாயும், நரநாராயணராய் அவதரித்து, ஆசாரிய சீடமுறைமையை உலகிற்குத் தாமே உணர்த்த வேண்டி, நரனாகிய சீடனுக்கு, உபதேசித்து அருளினார். பயபக்தியுடன் ஜபிக்கின்றவர்களுடைய அநிஷ்டங்களைப் போக்கி, (அநிஷ்டம் - இஷ்டம் இல்லாதது) இஷ்டங்களைப் பூர்த்தி செய்யும் பேராற்றல் வாய்ந்தது இத் திருமந்திரமாகும். இம் மந்திரம் பிரணவத்திற்குப் பொருளாய் உள்ளது. வேதசாரமானது.

இது எட்டு இழையாய், மூன்று சரடாய் விளங்கும் ஒரு மங்கள சூத்திரம் போல், எட்டு அக்ஷரமாயும், மூன்று பதமாயும் விளங்குவது.

எட்டு அக்ஷரங்களாவன ---  ஓம் நம: நாராயாணாய
மூன்று பதங்களாவன ---  ஓம், நம:, நாராயாணாய

"ஓம்" என்ற பிரணவத்தை முதலாவதாகவும், "நம" என்ற பதத்தை இரண்டாவதாகவும், "நாராயணாய" என்ற பதத்தை அதற்குப் பின்னாகவும் உச்சரிக்க வேண்டியது. இத் திருமந்திரம் பிரணவத்தோடு சேர்ந்து எட்டு அக்கரங்கள் ஆம். பிரணவத்தை நீக்கி உபதேசிக்கக் கூடாது.

முதற்பதமாவது --- ஓம்

இப் பிரணவம் அ-உ-ம என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையால் உண்டானது.

இதில் முதல் எழுத்தாகிய அகாரம் --- எல்லா உலகங்களுக்கும் காரணமான நாராயணரையே குறிக்கும்.

இரண்டாம் எழுத்தாகிய உகாரம் --- ஏவகாரப் பொருளையே குறிக்கும். அதாவது நாராயணனுக்கே பரதந்திரனாய் இருக்கை அடிமையாக வாழ்தல் தனக்கென ஓர் உரிமையும் சுதந்திரமும் இல்லாதிருத்தல். எனவே, அந்நிய சேஷத்வ நிவிர்த்தியும், பகவதநந்ய சேஷத்வமும் அதற்குப் பொருள் என்பர். "மறந்தும் புறம் தொழா மாந்தர்" என்கையாலே பகவத் சேஷத்வத்திலும், அந்நிய சேஷத்வம் கழிகையே பிரதானம் என்கிறார் பிள்ளைலோகாச்சாரியார்..

மூன்றாவதான எழுத்து மகாரம் --- ஜீவாத்மாவைக் குறிக்கும்.  ஜீவாத்மா ஞானத்தையே வடிவமாகவும் குணமாகவும் உடையவன். இருபத்தைந்தாம் அக்ஷரமாயும் உள்ளவன்.

இங்ஙனம் கூறியவாற்றால், அ-உ-ம என்னும் அக்ஷரத்ரயங்களின் பொருளால் உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் எல்லா உலகங்களுக்கும் உற்பத்திக் காரணனும், ரக்ஷகனும் ஆன நாராயணனுக்கே அடிமையாக உள்ளார்கள் என்பது பெறப்பட்டது.

இரண்டாவது பதமாவது ---  நம

இரு இரண்டு அக்ஷரம். இது பிரணவத்தில் உள்ள சேஷத்துவத்தையே எஞ்சியதை விரித்துக் கூறுகின்றது.

ம --- எனக்கு நானே சுதந்தரன்.
ந --- அப்படியன்று அதாவது எனக்கு உரியவன் அல்லன் என்ற நீக்கத்தை உணர்த்துகின்றது.

இவ்விரண்டும் சேர்ந்த "நம" என்ற சொல்லுக்கு நான் சுதந்தரன் அன்று. நாராயணனுக்கே அடிமையானவன். நான் அடைய வேண்டிய பயன்கள் அனைத்திற்கும் அவனே காரணம்.  என்னுடைய அநிஷ்டங்களைப் போக்கி, இஷ்டங்களைப் பூர்த்தி செய்து ரக்ஷிக்கின்றவனும் அவனே என்பது பொருள்.

இதனால் அகங்கார மமகார நீக்கமும், சுவதந்திர ஹீனமும், பாரதந்திர சொரூபமும் விளங்கா நின்றது.

மூன்றாவது பதமாவது ---  நாராயணாய

நார-அயன-ஆய என்று பிரியும். "நார" என்ற சொல்லுக்குப் பொருள் --- "ர" என்றால் அழியும் பொருள். அது அநித்தமான பொருள்.  "ந" என்றால் இல்லை என்று பொருள். இவ்விரண்டும் சேர்ந்த "நர" என்ற சொல்லுக்கு அழியாத பொருள் நித்தியமான பொருள் என்று அர்த்தம். இப் பொருள்களின் கூட்டமே "நார" என்று சொல்லப்படும்.  இக்கூட்டங்கள் பலவாதலின், "நாரா" என்று படிக்கப்பட்டது. 

அக்கூட்டங்களாவன ---

ஞானானந்த அமலத்வாதிகள், ஞானசக்தியாதிகள், வாத்சல்ய சௌசீல்யாதிகள், மங்களத் திருமேனி, காந்தி, சௌகுமார்யாதிகள், திவ்ய பூஷணங்கள், திவ்யாயுதங்கள், பெரிய பிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்கள், நித்யசூரிகள், சத்ரசாமராதிகள், திருவாசல் காக்கும் முதலிகள், கணாதிபர்கள், முக்தர்கள், பரமாகாசம், ப்ரகிருதி, பத்தாத்மாக்கள், காலம், மஹாதிதத்வங்கள், அண்டங்கள், அண்டத்துக்கு உட்பட்ட தேவாதிபதார்த்தங்களாம்.

"அயன" என்ற சொல்லுக்குப் பொருள் --- மேற்கூறிய கூட்டங்கள் எல்லாவற்றையும் ஆச்ரயமாக உடையவன். அதாவது, அவைகளைத் தன்னுள்ளே வைத்துக் கொண்டு, அவற்றிற்குத் தான் ஆதாரமாக இருந்து காப்பவன். அன்றியும் எல்லாப் பொருள்களைக் காட்டிலும் தான் பெரியவன் என்று அர்த்தம்.  அதுதான் பிரம்மம்.

"ஆய" என்ற சொல்லுக்குப் பொருள் --- எல்லாவிதமான கைங்கரியங்களையும் செய்ய வேண்டும் என்பதாம். இது திருமந்திரத்திற்கு சுருக்கமான பொருள்.

ஓம் ---  அகாரவாச்சியனான நாராயணனுக்கே உரியவனான அடியேன்.

நம ---   எனக்கு உரியன் அன்றி,

நாரா --- சகல சேதன அசேதனப் பொருள்களுக்கும்,

அயன – ஆச்ரயனான நாராயணனுக்கே

ஆய --- எல்லாவித தொண்டுகளையும் எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும்,    எல்லா அவஸ்தைகளிலும் செய்யக் கடவன் ஆகின்றேன்.

அன்றியும் பிபீலிகாதி (எறும்பு முதல்) பிரமன் வரை உள்ள எல்லா உயிர்களுக்கும் நாராயணனே தாரகமாய் இருப்பதால், மேட்சத்துக்கு உபாயமும் அவனே என்று உணருதல் வேண்டும்.

இந்த எட்டெழுத்துத் திருமந்திரத்தைப் பிரகலாதர் இடையறாது ஜெபித்து உய்வு பெற்றனர். பிரகலாதரைப் பற்றி அருணகிரிநாதர் பல இடங்களில் கூறியுள்ளனர்.

அருமறை நூல்ஓதும் வேதியன்
     இரணிய ரூபாந மோஎன
          அரிகரி நாராய ணாஎன ......     ஒருபாலன்
அவன்எவன் ஆதாரம் ஏதுஎன
     இதன்உள னோஓது நீஎன
          அகிலமும் வாழ்வான நாயகன் .....எனஏகி

ஒருகணை தூணோடு மோதிட
     விசைகொடு தோள்போறு வாள்அரி
          உகிர்கொடு வாராநி சாசரன் ......     உடல்பீறும்
உலகுஒரு தாளான மாமனும்
     உமைஒரு கூறான தாதையும்
          உரைதரு தேவாசு ராதிபர் ......   பெருமாளே. ---  (இருகுழை) திருப்புகழ்.

பிரகலாதர் வரலாறு

பிரமதேவருடைய புதல்வர் மரீசி. மரீசியின் மைந்தர் காசிபர்.  காசிப முனிவர் தக்கனுடைய புதல்வியர் பதின்மூவரை மணந்து தவமே தனமாகக் கொண்டு புகையில்லாத அக்கினியைப் போல் ஒளி செய்தனர். அந்தக் காசிப முனிவருக்குத் திதி வயிற்றில் பொன்மயமான உடம்புடன் இரணியனும், பொன்மயமான கண்ணுடன் இரணியாக்கனும் பிறந்தனர். இருவரும் சிறந்த வலிமை பெற்று ஒப்பாரும் மிக்காரும் இன்றி வாழ்ந்தனர்.  இளையவனீகிய இரணியாக்கன் பூமியை எடுத்துக் கடலில் எறிய முயன்றபோது, திருமால் வராக அவதாரம் எடுத்து அவனை மாய்த்தனர்.

இரணியன் தன் தம்பியை நாராயணர் கொன்றதைக் கேட்டு உள்ளம் வருந்தினான். தவவலிமை இல்லாமையால் தன் தம்பி மாண்டான் எனவும் உணர்ந்தனன். தன்னையும் ஒருகால் அந்த மாயவன் மாய்ப்பான் என்று மருண்டான். மனம் வெருண்டான்.  பெரும் தவம் புரிந்து பேராற்றல் படைக்கவேண்டும் என்று உள்ளம் தெருண்டான். அப்போது அவன் மனைவி லீலாவதி பால் ஹிலாதன், சம்ஹிலாதன், அநுஹிலாதன் என்று மூன்று புதல்வர் பிறந்தனர். நான்காவதாக, லீலாவதி உலகம் உய்ய, பிரகலாதரை சிப்பி முத்தைக் கருவுற்றது போல், கருக் கொண்டு இருந்தனள்.

தானவேந்திரனாகிய இரணியன் கானகம் புக்கு, கனல் நடுவே நின்று, ஊசியின் மேல் ஒரு காலை ஊன்றி, புலன்களை அடக்கி, மூலக்கனலை மூட்டி, நீரையும் வாயுவையும் புசித்துக் கொண்டு நெடிது காலம் கடும் தவம் புரிந்தனன். இரணியன் தவத்தால், தங்களுக்குக் கேடு வரும் என்று அஞ்சிய இந்திரன், சேனையுடன் வந்து அவனுடைய மனைவி லீலாவதியைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றனன். இடையில் நாரதர் தடுத்து, லீலாவதியை சிறை மீட்டு, தனது தவச் சாலைக்குக் கொண்டுபோய் கருப்பவதியும் கற்புநெறி கடவாதவளும் ஆகிய லீலாவதிக்கு நாராயணமூர்த்தியின் பெருமைகளை எடுத்து உபதேசித்து வந்தனர். கணவன் வரும் வரை கருவளராமல் இருக்குமாறு லீலாவதி தன் கற்பின் திறத்தால் செய்து கொண்டாள். கருவில் உருப்பெற்று உணர்வு பெற்று இருந்த, பிரகலாதர் நாரதமுனிவர் நாள்தோறும் கூறிவரும் அரியின் மகிமையை அன்புடன் கேட்டு உறுதியும் அன்பும் ஞானமும் ஒருங்கே அடைந்தனர்.

இரணியனுடைய சலியாத கடும் தவத்திற்கு இரக்கமுற்று அன்ன வாகனத்தில் நான்முகக் கடவுள் தோன்றினர். அவர்பால் இரணியன் மண்ணிலும், விண்ணிலும், அல்லிலும், பகலிலும், வீட்டிலும், வெளியிலும், இருளிலும், ஒளியிலும், அத்திரத்தாலும், சத்திரத்தாலும், நரராலும், சுரராலும், நாகங்களினாலும், விலங்குகளினாலும் மரணம் அடையாத தன்மையையும், மூன்று உலகங்களையும் வெல்லும் வன்மையையும், முவுலக ஆட்சியையும், எவரினும் சிறந்த மாட்சியும் வரமாகப் பெற்று, இரணியபுரம் சேர்ந்தனன். நாரதர் லீலாவதியைக் கொணர்ந்து, உற்றதை உரைத்து, ஆறுதல் கூறி, அவன்பால் சேர்த்தனர்.  பின்னர் லீலாவதி, அன்பு மயமான பிரகலாதரைப் பெற்றனள்.  மைந்தனது எழில் நலத்தைக் கண்டு இரணியன் இன்புற்றான்.

பின்னர் ஒருநாள், தானவன் தன் தம்பியைக் கொன்ற திருமாலைக் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என்று எண்ணினான். தன் பரிசனங்களை திருமாலைக் கட்டி ஈர்த்து வருமாறு பணித்து அனுப்பினான். காலனிலும் கொடிய அக் கொடியர் வைகுந்தத்திலும், திருப்பாற்கடலிலும் தேடி திருமாலைக் காணாது திகைத்து மீண்டனர். "அசுரேந்திரா, அரியைக் காண முடியவில்லை" என்றனர். இரணியன் சினந்து, மூவுலகிலும் தேடுமாறு பல்லாயிரம் பதகரை அனுப்பினான்.  எங்குமுள்ள இறைவனை அவர்கள் எங்கும் காணாது அயர்ந்து மீண்டு தமது மன்னனிடம் வந்து "மாயனைக் காண்கிலோம்" என்றனர். இரணியன் சிரித்து, "அரியானவன் நமக்கு அஞ்சி எங்ஙனமோ ஒளிந்து கொண்டான் போலும். பயங்கொள்ளி. அத் திருமால் சாதுக்கள் உள்ளத்திலும், ஞானிகள் சிந்தையிலும், அடியார்கள் இதயத்திலும் இருப்பன். கட்டையைக் கடைந்தால் அக் கட்டைக்குள் இருக்கும் கனல் வெளிப்படுவது போலும், பாலைக் கடைந்தால், பாலுக்குள் உள்ள நெய் வெளிப்படுவது போலும், அடியார்களையும், ஞானிகளையும், முனிவர்களையும் பிடித்துத் துன்புறுத்தினால், அவர்களுக்குள் மறைந்திருக்கும் அம் மாயவன் வெளிப்படுவன். ஆதலினால், ஆயிரம் கோடி அவுணர்கள் மூன்று உலகங்களிலும் சென்று தேவர்களையும், முனிவர்களையும், அடியார்களையும் துன்புறுத்துங்கள்" என்று கட்டளை இட்டனன். காலதூதரினும் கொடிய அப் பாதகர்கள், பூமரங்களை ஒடித்தும், முனிவர்களை அடித்தும், கோயில்களை இடித்தும், வேதாகமங்களைப் பொடித்தும், ஞானிகளைத் துன்புறுத்தியும், "இரணியாய நம" என்று எல்லோரையும் சொல்லச் சொல்லியும், அதனை எங்கும் எழுதியும், வேறு தெய்வத்தைத் தொழாவண்ணம் தடுத்தும், எங்கும் பெரும் தீமையைப் புரிந்தனர்.

தேவர்களும், முனிவர்களும், ஞானிகளும், அடியார்களும் பெரிதும் வருந்து திருமாலைத் தியானித்துத் துதித்தனர். திருமால் அவர்களுக்கு அசரீரியாக நின்று, "காலம் வரும் வரை காகம் கூகைக்கு அஞ்சி இருக்கும். ஆதலினால் நீவிர் சிறிது காலம் தாழ்த்திருங்கள். யாம் உரிய காலத்தில் வெளிப்பட்டு இரணியணை மாய்ப்போம்" என்று அருளிச் செய்தனர்.

பிரகலாதர், இடையறாது மனத்தில் திருமாலையே சிந்தித்து, தியானபரராக இருந்தனர். ஆடும்போதும், ஓடும்போதும், பாடும்போதும், வாடும்போதும், உண்ணும்போதும், உறங்கும்போதும், எழும்போதும், அழும்போதும், விழும்போதும், தொழும்போதும், இவ்வாறு எப்போதும், தைலதாரை போல் இறாவாத இன்ப அன்புடன் மறவாது கருமால் அறத் திருமாலை நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பு நிறைந்து, நிறைந்து, ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து பக்தி புரிந்து வந்தனர்.

பிரகலாதருக்கு வயது ஐந்து எய்தியபோது, இவருடைய தன்மையைக் கண்ட சுக்கிரர் தீர்த்த யாத்திரை சென்றனர். அதனால் அவருடைய புதல்வர் சண்டாமார்க்கரிடம் தன் மகனை இரணியன் ஓதுமாறு வைத்தனன். சண்டாமார்க்கர் பிரகலாதரை நோக்கி, "இரண்யாய நம" என்று கூறுமாறு கற்பிக்கலானார்.  பிரகலாதர் செங்கரத்தால் செவியை மூடி, "முதியவரே! பிழைபடக் கூறலுற்றனை. இன்றிருந்து நாளை அழியும் ஒரு உயிரினை இறை எனக் கூறுதல் நலமன்று" என மொழிந்து, "ஓம் நமோ நாராயணாய" என்று கூறினர்.

"ஓதப் புக்கவன் உந்தைபேர் உரைஎன லோடும்,
போதத்தன் செவித் தொளைஇரு கைகளால் பொத்தி,
மூதக்கோய், இது நல்தவம் அன்று என மொழியா
வேதத்து உச்சியின் மெய்ப்பொருள் பெயரினை விரித்தான்".

பிரகலாதர் கரமலர்களைச் சிரமலர் மேல் கூப்பி, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, உரோமங்கள் சிலிர்த்து, திருமந்திரத்தைக் கூறிய வண்ணமாக இருப்பதைக் கண்ட வேதியர் நடுங்கி, "அடா, பாலகனே! அந்தோ, இந்த மந்திரத்தைக் கூறாதே. உன் தந்தை கேட்டால் எம்மையும் உன்னையும் தண்டிப்பன். இதனை இமையவரும் சொல்ல அஞ்சுவர். சிறுபிள்ளைத் தனமாக இதனை நீ கூறினை. இனி இதனைக் கூறாதே. கூறி எம்மைக் கெடுக்காதே. உன்னையும் கெடுத்துக் கொள்ளாதே" என்றனர்.

"கெடுத்து ஒழிந்தனை என்னையும், உன்னையும் கெடுவாய்
படுத்து ஒழிந்தனை, பாவி அத்தேவரும் பகர்தற்கு
அடுத்தது அன்றியே அயல்ஒன்று பகர நின் அறிவின்
எடுத்தது என்இது, என்செய்த வண்ணம் நீ என்றான்".

பிரகலாதர் குறுமுறுவல் செய்து, "ஐயனே!  இத் திருமந்திரத்தைக் கூறுவதனால், என்னையும் உய்வித்தேன். எனது பிதாவையும் உய்வித்தேன். உம்மையும் உய்வித்தேன். இந்த உலகையும் உய்வித்தேன். வேதத்தின் முதலில் மொழியும் மந்திரத்தை அடியேன் மொழிந்தேன். அப்படிக்கு இருக்க, நான் சொன்னதில் என்ன குற்றம்?” என்றார்.

"என்னை உய்வித்தேன், எந்தையை உய்வித்தேன், இனைய
உன்னை உய்வித்தேன், உலகையும் உய்விப்பான் அமைந்து,
முன்னை வேதத்தின் முதல்பெயர் வொழிவது மொழிந்தேன்
என்னை குற்றம்நான் இயம்பியது இயம்புதி என்றான்".

ஆசிரியர், "அப்பா! குழந்தாய்! நாங்கள் கூறுவதைக் கேள். இது உனது சிற்றப்பனைக் கொன்ற மாயவனது மந்திரம். இதை ஒருவரும் கூறலாகாதென உன் தந்தையின் கட்டளை. நீ கூறுவதனால் என்னை உன் பிதா தண்டிப்பன்" என்றனர்.  பிரகலாதர், "ஐயா! இம் மந்திரமே வேதத்தின் விழுமியது. எனது இதயத்தில் எழுந்தருளி இருக்கும் எம்பிரானுடைய திருநாமத்தைக் கூறுவதிலும் சிறந்த பேறு எனக்கு இல்லை" என்றார்.

ஆசிரியர் மனம் மறுகி, இரணியன்பால் ஓடி, "எந்தையே!  உமது சிறுவன், நாங்கள் கூறிய வேத மந்திரத்தை மறுத்து, சொல்லத் தகாத சொல்லைச் சொல்லுகின்றனன்" என்றார். இரணியன், "என்ன கூறினான் கூறும்" என்று வினவினான். ஆசிரியர், "வேந்தே, அவன் கூறிய சொல்லை நாங்கள் கூறினால், எமக்கு நரகம் எய்தும். நாவும் வெந்து அழியும்" என்று நடுங்கி நவின்றனர்.

இரணியன் தன் மகனை அழைப்பித்தான். பிரகலாதர் பிதாவைத் தொழுது நின்றனர். மகனை எடுத்து உச்சி மோந்து முத்தமிட்டு, மடித்தலத்தில் வைத்து, "மகனே!  நீ என்ன கூறினாய்" என்று வினவினான் தந்தை. அறிவின் மிக்க அப் புதல்வர், "தந்தையே, எதைச் சொன்னால் உயிர்க்கு உறுதி பயக்குமோ, ஞானிகள் எதை இடைவிடாது சிந்தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ, எதனை வேதம் வியந்து ஓதுகின்றதோ, எது நம்மை வாழ்விக்கின்றதோ, அதனையே அடியேன் கூறினேன்" என்றார். இரணியன் உள்ளம் உவந்து, "பேஷ்! புலிக்குப் பூனையா பிறக்கும். என் கண்ணே! அது என்ன? எனக்கு எடுத்துச் சொல்" என்று கேட்டான்.

"காமம் யாவையும் தருவதும், அப்பதம் கடந்தால்
சேம வீடுஉறச் செய்வதும், செந்தழல் முகந்த
ஓம வேள்வியின் உறுபதம் உய்ப்பதும் ஒருவன்
நாமம் அன்னது கேள் நமோ நாராயணாய".

"அப்பா! ஓம் நமோ நாராயணாய என்ற இந்த எட்டெழுத்தே பரகதியை எட்டு எழுத்தாம்" என்றார். தானவன் விழியில் தழல் எழுந்தது. கோபத்தால் கொதிப்புற்றான். "மகனே! முனிவரும் தேவரும் நரர்களும் அனைவரும் எங்கும் எக்காலத்தும் என்னுடைய நாமமாகிய இரணியாய நம என்றே கூறுகின்றனர்".

"யாரடா உனக்கு இந்த கொடிய நாமத்தைச் சொல்லிக் கொடுத்தவன்?  அந்த நாராயணன் நமது குல வைரி. எலி தன் உயிர்க்குத் தீங்கு செய்த பாம்பின் நாமத்தைக் கூறுதல் நன்மையோ? அந்தப் பாவி உன் சிறிய பிதாவைக் கொன்றவன்.  அவனை நெடுங்காலமாகத் தேடுகின்றேன். எனக்குப் பயந்து எங்கோ ஒளிந்துக் கொண்டு இருக்கின்றான். கண்ணே! நீ சிறு குழந்தை. யாரோ உன்னை இப்படி மயக்கி மாறுபடக் கூறி உள்ளனர். இனி அதைக் கூறாதே. மூவுலகமும் போற்றும் என் பெயரைக் கூறு" என்று பலவும் கூறினான்.

தவசீலராகிய பிரகலாதர் தந்தையைப் பணிந்து, "ஐயனே! சிறிது அமைதியாக இருந்து கேளும். உலகங்களை எல்லாம் உண்டு உமிழ்ந்தவர் அத் திருமால். எள்ளுக்குள் எண்ணெய் போல் எங்குமாய் நிறைந்தவர். மாதவர்களுடைய மாதவப் பயனாய் விளங்குபவர். அவருடைய பெருமையை அளக்க வல்லவர் யாரும் இல்லை. கடும் சுரம் உடையானுக்குக் கற்கண்டு கசப்பது போல், விரைவில் அழியும் விநாசகாலம் உற்றாரே அந்த விமலனை வெறுப்பர். நமது குலமும் நீயும் பிறரும் ஈடேற வேண்டும் என்றால், அவரை வணங்கு. வாயார வாழ்த்து.  நெஞ்சார நினை" என்றார்.

அதனைக் கேட்ட அரக்கர் வேந்தன் ஆலகால விடம் போல் சீறினான். அண்டங்கள் வெடிபட ஆர்த்தான். "இவன் என்னையும் என் குலத்தையும் கெடுக்கப் பிறந்தவன். இனி இவனைத் தாமதியாமல் ஆயுதங்களால் கொல்லுங்கள்" என்று கருணை இன்றிக் கட்டளை இட்டனன். கூற்றினும் கொடிய அரக்கர்கள், துணையிலானைத் துணையாக உடைய சிறுவரைப் பற்றிக் கொண்டு போய், வாள், வேல், மழு, தண்டு, கோடாலி, ஈட்டி முதலிய பலவேறு விஷத்தில் நனைத்த ஆயுதங்களினால் எறிந்தனர். பலகாலும் எறிந்து பிரகலாதருடைய உடம்பில் ஒரு சிறிதும் ஊனம் ஏற்படவில்லை. அவர் கண்களை மூடி, "நமோ நாராயணாய" என்று சிந்தித்தவண்ணாகவே இருந்தார்.  ஆயுதங்கள் பொடிபட்டன. அது கண்ட தீயவர்கள் ஓடி, இரணியன்பால் உற்றது உரைத்தனர்.

நிருதன் வியந்து, நெருப்பில் இடுமாறு பணித்தனன்.  விண்ணளவாக எண்ணினாலும் சுடுகின்ற பெரும் தீயை வளர்த்து, விண்ணவர் புகழும் புண்ணியரை எடுத்து தீயில் இட்டனர். தியானபரர் ஆகிய அவருக்கு அத் தீ, தண்ணிலா எனக் குளிர்ந்தது. தாமரைத் தடாகத்தில் விளையாடும் அன்னம் போல், கனலுக்கு இடையே அவர் மகிழ்ந்து இருந்தார். காவலர் ஓடி காவலன்பால் கழறினர்.

அவுணன் வெகுண்டு, அவனைச் சிறையிட்டு, "அட்ட நாகங்களை விட்டுக் கடிக்கச் செய்யுங்கள்" என்றான். அனந்தன் கார்க்கோடகன் முதலிய எட்டுப் பாம்புகளும் இரணியன் ஏவலைச் சிரமேல் கொண்டு, பிரகலாதரைக் கொடிய நச்சுப் பற்களால் பலகாலும் கடித்தன. திருமந்திரத்தை மறவாத அவர் அசைவற்று இருந்தனர். பாம்புகளின் பற்கள் ஒடிந்து, பணாமகுடம் உடைந்து, உள்ளம் மடிந்து மீண்டு சென்றன.

இதனைப் பணியாளர் கூறக் கேட்ட இரணியன் சீறி திக்கு யானைகளை அழைத்துக் கொல்லுமாறு ஏவினான். வேழங்கள் வெகுண்டு வருவதைக் கண்ட வித்தகர், முதலை வாய்ப்பட்ட கஜேந்திரனைக் காத்த கருணைத் திறத்தைச் சிந்தித்து, 'கஜேந்திர வரதா' என்று கூறினார். யானைகள் பிரகலாதரை வணங்கி நின்றன. தூதர் ஓடி, இதனை மன்னன்பால் புகன்றனர். அவன் யானைகளைக் கொல்லுமாறு பணித்தனன். அதைக் கண்ட யானைகள் அஞ்சி, தங்கள் வெண்கோட்டால் பிரகலாதரைக் குத்தின. வாழைத்தண்டு பட்டது போல், அவருக்கு மென்மையாக இருந்தது. தந்தங்கள் ஒடிந்தன. யானைகள் அயர்வுற்று அகன்றன.

ஏவலர் ஓடி, இதனைக் காவலன்பால் இயம்பினர். கனகன் சிரித்து, "அவனைக் கட்டி மலையின் உச்சியில் வைத்து உருட்டுங்கள்" என்றான். பிரகலாதரைக் கட்டமுது போல் கட்டி, ஒரு பெருமலையின் உச்சியில் இருந்து உருட்டினர். அவர் 'ஓம் நமோ நாராயணாய' என்று உருண்டார். பூமிதேவி பெண்வடிவம் தாங்கி, அக் குழந்தையைத் தன் கரமலரால் தாங்கி, உச்சி மோந்து, முத்தமிட்டு ஆதரித்தனள். பிரகலாதர் பூமி தேவியைப் போற்றி நின்றார். பூதேவி, "கண்ணே! குழந்தாய்! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று அருள் புரிந்தனள். ஞானக்குருந்தர் பகிய பிரகலாதர், "அம்மா! இளம் பருவத்தில் தவழும்போதும் நடக்கும்போதும் தவறி விழுந்தால், உலகில் உள்ள குழந்தைகள் அனைவரையும் இன்று என்னைத் தாங்கிக் காத்தது போல் காத்து அருளல் வேண்டும்" என்று வரம் கேட்டனர். அவ் வரத்தைப் பெற்ற தன்னலம் கருதாத தயாசீலர் தனித்து இருந்தனர்.

இரணியன் பிரகலாதரை சூரிய வெப்பத்தில் வெதுப்பினான்.  மழையையும் இடியையும் ஏவினான். நிலவறைக்குள் அடைப்பித்தான். விஷத்தை உண்பித்தான். பெருங்கல்லிலே கட்டி கடலில் வீழ்த்தினான். சாந்த சீலராகிய அவர், சாகர சயனா என்று துதித்தனர். கல் தெப்பமாகிக் கடலில் மிதந்து கரை சேர்ந்தனர். இரணியன் இவ்வாறு பலப்பல தண்டனைகளை விதித்தான். ஒன்றாலும் பிரகலாதருக்கு, ஒரு சிறிதும் தீங்கு உண்டாகவில்லை. இவற்றால் அவருடைய உள்ளமும் சிறிதும் மாறுபடவில்லை. மேலும் மேலும் உறுதியாகப் பக்தி புரிந்தனர்.

ஒன்றாலும் ஊறுபடாமலும் மாறுபடாமலும் உள்ள அவருடைய பெருமையை இரணியன்பால் தூதர் கூறினர். இரணியன் அவரை அழைத்து, சிறிதும் இரக்கமின்றி வாளை ஒங்கி தானே கொல்ல ஓடினான். அவர் சிறிதும் அச்சமின்றி "ஓம் நமோ நாராயணாய" என்று சிந்தித்த வண்ணமாக நின்றார். இரணியன் அவருடைய உறுதியைக் கண்டு, இறும்பூதுற்றான். "மதிநலம் படைத்த அமைச்சர்களே! என் மகனுடைய மனக் கருத்து அறியாமல் நான் இதுகாறும் கெட்டேன். இப்போதுதான் உள்ளக் குறிப்பை உணர்ந்து உவகை உறுகின்றேன். என் தம்பியைக் கொன்ற நாராயணணை நாடி நாடி அயர்த்துப் போனேன். நமது சிறிய பிதாவைக் கொன்ற நாராயணனை எப்படியும் நாம் கண்டுபிடித்து அப்பாவிடம் காட்டிக் கொல்விக்க வேண்டும் என்று மகன் கருதினான் போலும். பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்க வேண்டும். அந்த உபாயத்தை என் மகன் மேற்கொண்டு இதுகாறும் அந்த அரியை பத்தி பண்ணுவது போல் பாசாங்கு செய்து அவனை வசப்படுத்தினான். என்னிடம் காட்டிக் கொல்விக்கவே அவன் இவ்வாறு செய்தான்" என்று சொல்லி, "கண்ணே! பிரகலாதா! உனது அறிவின் திட்பத்தை மெச்சினேன். இப்படி வா, மகனே! அந்த மாயவன் எங்குளன் கூறு" என்று வினவினான்.

அன்பு வடிவாய அருந்தவச் செல்வர், "ஐயனே! மலரில் மணம்போல், எள்ளுக்குள் எண்ணெய்போல், என் ஐயன் இங்கும் அங்கும் எங்கும் உள்ளான். உன்னிலும் உள்ளான். என்னிலும் உள்ளான். அவன் இல்லாத இடமில்லை" என்றார். இரணியன், "மைந்தா! என்னிலும் உளன் என்றால் என்னைப் பிளந்து பார்ப்பது எப்படி? உன்னிலும் உளன் என்றால் உன்னைப் பிளக்க முடியவில்லை. இதோ, இந்தத் தூணில் உள்ளானோ? உரை" என்று கேட்டான்.

"சாணிலும் உளன், ஓர்தன்மை
     அணுவினைச் சதகூறு இட்ட
கோணிலும் உளன், மாமேருக்
     குன்றிலும் உளன், இந்நின்ற
தூணிலும் உளன், முன்சொன்ன
     சொல்லிலும் உளன், இத்தன்மை
காணுதி விரைவின் என்றார்,
     நன்றுஎனக் கனகன் சொன்னான்".

பிரகலாதர், "தந்தையே!  அப் பரமன் சாணிலும் உளன். அணுவை நூறு கூறு இட்ட பரமாணுவிலும் உளன். மேருவிலும் உளன். இத் தூணிலும் உளன். உளன் என்னும் சொல்லிலும் உளன்.  காணுதி" என்று அருளிச் செய்தார்.

இரணியன் சீற்றமிக்கு, "பேதாய்!  நீ கூறியபடி இத் தூணில் அந்த அரி இல்லையானால், சிங்கம் யானையைக் கொன்று தின்பதுபோல் உன்னை யான் கொன்று தின்பேன்" என்றான்.  பிரகலாதர், "அப்பா என்னை உம்மால் கொல்ல முடியாது. என் ஐயன் யான் கூறிய இடங்களில் தோன்றானாயின், என் உயிரை யானே விடுவன். நான் அவன் அடியனும் அல்லன்" என்றார்.

"என்உயிர் நின்னால் கோறற்கு
     எளியதுஒன்று அன்று, யான்முன்
சொன்னவன் தொட்ட தொட்ட
     இடம்தொறும் தோன்றானாயின்.
என்உயிர் யானே மாய்ப்பன்,
     பின்னும் வாழ்வுஉகப்பல் என்னின்,
அன்னவற்கு அடியேன் அல்லேன்
     என்றனன் அறிவின் மிக்கான்".

கனகன் உடனே தனது கரத்தினால் அத் தூணை அறைந்தான்.  அத் தூணுக்குள் நரசிங்கமாக நாதன் சிரித்தனன். பிரகலாதர் சிரமேல் கரம் கூப்பி சிந்தித்து வந்தித்து நின்றார். இரணியன், "ஆரடா சிரித்தாய், சொன்ன அரிகொலோ? அஞ்சிப் புக்க நீரடா போதாதென்று நெடுந்தறி நேடினாயோ போரடா பொருதியாயில் புறப்படு புறப்படு" என்றான். பிளந்ததது தூண். நரசிங்கத்தின் திருமேனி வளர்ந்தது அண்டமட்டும். ஆயிரம் ஆயிரம் சிரங்களும், அதற்கு இரட்டியான கரங்களும் கொண்டு, ஆயிரம் கோடி வெள்ளம் அவுணர்களையும் கரங்களால் அடித்தும், பிடித்தும், கொன்றும், தின்றும், மென்றும், எற்றியும், உதைத்தும், வதைத்து அழித்தனர்.

அதுகண்ட கனகன், அஞ்சாது வாளினை எடுத்து எதிர்த்து நின்றான். பிரகலாதர், பிதாவை வணங்கி, "தந்தையே! இப்போதாவது மாதவனை வணங்கு. உன் பிழையைப் பொறுப்பன்" என்றார். இரணியன், "பேதாய்! உன் கண் காண இந்த நரசிங்கத்தையும், உன்னையும் கொன்று, என் வீரவாளை வணங்குவன்" என்றான்.

"கேள்இது நீயும்காணக்
     கிளர்ந்த கோள்அரியின் கேழல்
தோளொடு தாளும் நீக்கி,
     நின்னையும் துணித்துப் பின்என்
வாளினைத் தொழுவது அல்லால்
     வணங்குதல் மகளீரூடல்
நாளினும் உளதோ என்னா
     அண்டங்கள் நடுங்க ஆர்த்தான்".

அஞ்சாது எதிர்த்துப் போராடிய இரணியனை நரசிங்கமூர்த்தி பற்றிச் சுற்றி, பகலிலும் இல்லாமல், இரவிலும் இல்லாமல், அந்தி வேளையிலே, வீட்டிலும் ல்லாமல் வெளியிலும் அல்லாமல், அவன் அரண்மனை வாசற்படியிலே, விண்ணிலும் அல்லாமல், மண்ணிலும் அல்லாமல், மடித்தலத்தில் வைத்து, எந்த ஆயுதத்திலும் அல்லாமல், தமது திருவிரல் நகத்தால் மார்பினைக் கீறி, அவனுடைய குடலை மாலையாகத் தரித்து, அண்டங்கள் நடுங்க ஆர்த்தனர். திருமகளை வேண்ட, அத் தாயார் நரசிங்கத்தை அணுகினர். நரசிங்கப் பெருமான் கருணை பூத்தனர்.  பிரகலாதர் சென்று தொழுது துதித்தனர். நரசிங்கர் பிரகலாதரை எடுத்து, உச்சிமோந்து, சிரமேல் கரமலரை வைத்து, "குழந்தாய்! உனது உறுதியான பத்தியைக் கண்டு மகிழ்கின்றேன். என்ன வரம் வேண்டும்" என்று கேட்டருளினர்.

"உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என்மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது? ‘‘ என்றான்"

பிரகலாதர், "பெருமானே, என் தந்தை உயிருக்கு நன்மையும், உன் திருவடியில் மறவாத அன்பும் வேண்டும்" என்றார்.

"முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் என்றான்.     

நரசிங்கமூர்த்தி மகிழ்ந்து, வானவர்க்கும் தானவர்க்கும் அரசாகி, சிரஞ்சீவியாக என்றும் என்போல் நின்று ஆரசாளுதி என்று வரமளித்து முடிசூட்டினார்.

அன்னானை நோக்கி அருள் சுரந்த நெஞ்சினன் ஆய்
"என் ஆனை வல்லன்"  என மகிழ்ந்த பேர் ஈசன்
"முன் ஆன பூதங்கள் யாவையும் முற்றிடினும்
உன் நாள் உலவாய் நீ என்போல் உளை" என்றான்.


என்று வரம் அருளி எவ் உலகும் கை கூப்ப

முன்றில் முரசம் முழங்க முடி சூட்ட

நின்ற அமரர் அனைவீரும் நேர்ந்து இவனுக்கு

ஒன்று பெருமை உரிமை புரிக என்றான்.


உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையும் உயர்வாக ---

உவணம் - கருடன். நரசிங்கமாக வந்து இரணியனை மாய்த்துப் பிரகலாதரை ஆண்ட திருமாலும், பிரமதேவனும், நான்கு வேதங்களும் உயர்வு பெறுமாறு, முருகவேள் சோமீச்சரத்தில் எழுந்தருளி உள்ளனர்.

சோமீசர் கோயில் என்பது கும்பகோணத்தில் உள்ள ஒரு சிறந்த தேவாலயம்.

ஏழாவது அடி மதிலின் வருணனை. எட்டாவது அடி கோயிலின் வருணனை.

இத் திருப்பகழின் நான்காவது அடியை அன்பர்கள் படுக்கப் போகும்போது, ஒருமுறை கூறிவிட்டு, குமரனைக் கும்பிட்டுத் துயிலுதல் வேண்டும்.

கருத்துரை


முருகா! எப்போதும் இடையறாது உம்மைச் சிந்திக்கவும் வந்திக்கவும் அருள் புரிவீர்.



வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...