மனமே! இப்படி இருந்தால் எப்படி?

 


மனமே! இப்படி இருந்தால் எப்படி?

-----

பல படிகளில் ஏறிய பிறகே  உயர்ந்த மாடியை அடைய முடியும். முயற்சி மெல்ல மெல்ல அதிகமாக ஆக, அதனால் ஏற்படும் பலனும் மெல்ல மெல்ல வளர்ந்து வரும். திடீரென்று ஒருவருக்கு உயர்ந்த நிலை வந்ததானால், அது இந்தப் பிறவியின் முயற்சியினால் வந்த பயன் என்று சொல்ல முடியாது. முற்பிறவிகளில் செய்த முயற்சிகளின் பயன் அது. முயற்சியின் அளவுக்கு ஏற்றபடி அனுபவங்களும் உண்டாகும். 

பசியின் காரணமாக, உணவு கொள்ளத் தலைப்பட்ட ஒருவனுடைய பசியானது, பாயசத்திலிருந்து தயிர்ச் சோறு வரையில் முழுமையாக உண்ட  பிறகுதான் அடங்கும் என்று சொல்ல முடியாது.  ஒவ்வொன்றாகச் சாப்பிடச் சாப்பிட அவனுக்கு உண்டாகி இருந்த  பசி மெல்ல மெல்லக் குறைந்து வரும். 

சாதகம் செய்யும்போது எந்த எந்தப் பக்குவத்தில் இருக்கிறோமோ அந்த அந்தப் பக்குவத்திற்கு ஏற்ப அனுபவம் ஏற்படும். அதனால்தான் குருநாதரைச் சரண் அடைந்து, அவர் சொன்ன வழிப்படி மெல்ல மெல்லப் பயின்று வரவேண்டும் என்கிறார்கள். குருவின் உபதேசம் பெற்றவுடனே முடிந்த முடிவாகிய பயன் கிடைத்து விடாது.  உழைப்பு இல்லாமல் ஊதியம் இல்லை. 'பல நூல்களைப் பலர் எழுதியிருக்கிறார்கள்.  விரிவான விளக்கமும் தந்து இருக்கின்றார்கள். அவற்றையே நாம் குரு உபதேசமாகக் கொள்ளக் கூடாதா, குருவை நேரிலே அடைந்து உபதேசம் பெற வேண்டும் என்பது அவசியமா? என்று ஐயம் தோன்றலாம்.  ஒருவர் மண்டிக் கடை வைத்திருக்கிறார். அவர் உயர்ந்த சீரகசம்பா அரிசி வியாபாரம் பண்ணுகிறார். ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் அந்தக் கடையில்தான்  அரிசி வாங்குகிறார்கள். விலை உயர்ந்த அரிசி என்பதற்காக, அதை அப்படியே சாப்பிட முடியாது.  வீட்டிற்கு எடுத்துச் சென்று,  தங்கள் தேவைக்கு ஏற்ப அரிசியைக் கொஞ்சம் எடுத்துச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஒருவர்  கடைக்காரர் வீட்டுக்கு விருந்தினராகப் போகிறார். கடைக்காரர் தமது கடையில் இருக்கும் அரிசியை எடுத்தும் தமது வீட்டிலேயே சமைத்து, விருந்தினருக்கு வேண்டிய அமுது படைக்கிறார்.  ஊருக்கு எல்லாம் அரிசி வியாபாரம் செய்யும் ஒருவர் தம் வீட்டிற்கு வரும்  விருந்தாளிக்கும் அதே அரிசியைக் கொண்டுதான் அன்னம் படைக்கிறார். 

எல்லோருக்கும் அரிசி தருவது பொதுவான வேலை.  தம் வீட்டிற்கு வருபவருக்கு அமுது படைப்பது சிறப்பான செயல். பொதுவான அனுபவத்தையும், சிறப்பான அனுபவத்தையும் தருபவர் ஒருவர்தான். அதுபோலத்தான், பெரியவர்கள் எழுதி வைத்திருக்கும் நூல்களில் உள்ளவை பொதுவான உபதேசம். ஆனால், அவற்றை விளக்குகின்றவர்களிடமே நேரில் சென்றால் அவர்கள் செய்வது சிறப்பான உபதேசம். வந்திருப்பவர் இன்ன பக்குவம் உடையவர் என்பதை உணர்ந்து, அதற்கு ஏற்றபடி செய்யும் உபதேசம் சிறப்பான உபதேசம். அந்த  உபதேசத்தின்படி நடப்பவர்களுக்கு வெவ்வேறு அனுபவம் விளையும். ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவன் அவனுடைய நிலைக்கு ஏற்றபடி அனுபவம் உண்டாகும். 

மாம்பழத்தை ஒருவன் நறுக்கிச் சாப்பிடுகிறான். மற்றொருவன். அப்படியே கடித்துச் சாப்பிடுகிறான். இன்னொருவன் சாற்றைப்  பிழித்து சாப்பிடுகிறான். இப்படிச் சுவைக்கும் முறை வேறுபட்டாலும் சுவைத்த பின் கிடைக்கின்ற இனிப்பாகிய அனுபவம் ஒன்றாகவே இருக்கும். உலகியல் சம்பந்தமான இந்திரியங்களின் அனுபவத்திலேயே இத்தகைய வேறுபாடுகள்  இருக்கின்றன. அறதுபோலத்தான் இறைவன் அருள்நெறியில் செல்கின்றபோது வேறுபட்ட பல அனுபவங்கள் உண்டு. ஒவ்வொருவரும் பின்பற்றும் சாதனம் வேறு வேறாக இருக்கும்.  ஒருவர் இறைவன் திருவுருவத்தை உள்ளத்திலே பதித்துக் கொண்டு எப்போதும் தியானத்தில் மூழ்கி இருப்பார். மற்றொருவரோ  இறைவன் பொருள்சேர் புகழைக் கூறும் அருட்பாடல்களைப் பாடிப் பரவசமாய் இருப்பார். வேறு ஒருவர் இறைவன் திருவுருவத்திற்கு வண்ண வண்ண மலர்களால் அருச்சனை செய்து கொண்டே இருப்பார்.  இவ்வாறு பலபடியாக இறைவனை நினைந்து, வாழ்த்தி, வணங்கி அவன் திருவருளைப்  பெற்றவர்கள் எத்தனையோ பேர். அகண்டமான இறைவனைக் கண்டமான உருவத்தில்  வழிபடுகிறோம். அந்த உருவங்கள் பலவாக இருக்கின்றன. அதைப் போலவே அவனை அடைவதற்குரிய வழிகளும் பலவாகவே உள்ளன. இது ஒன்றுதான் வழி என அறுதியிட்டுக் கூற முடியாது. அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்ப வழிகள் மாறுபடும். 

பலர் ஒரே குருநாதரிடம் சென்றாலும், அவர் அத்தனை மாணவர்களுக்கும்  ஒரே மாதிரியாக உபதேசம் செய்வது இல்லை. ஏனென்றால், அவர்கள் எல்லோருடைய  மனமும் ஒரே விதமான பக்குவத்தில் இருக்காது. அவரவர்களுடைய பக்குவத்தை உணர்ந்து, மனத்தின் திண்மையை உணர்ந்து, அவர்கள் எல்லோரும் பயனடைய வேண்டும் என்ற கருணையினால் அவரவர்களுக்கு ஏற்றபடி உபதேசம் செய்வார் குருநாதர். தம்மை வந்து அடைகின்ற மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை முதலில் உணர்ந்து,  அவர்கள் மேலே ஏறும் அடுத்த நிலை இன்னது என்பதைக் கண்டு, அதற்கு  ஏற்ப உபதேசம் செய்வார். இறைவன் திருவருளைப் பெறுகிற முயற்சி உடையவர்களுக்குக் குருநாதரின் அருள் இருந்தால் அனுபவம் வரவர, உயர்ந்து வரும்.  அனுபவம் ஏற ஏற, அதனால் பெறும் இன்பமும் ஏறிக் கொண்டே இருக்கும். ஒரு பிடி சாப்பிட்ட உடனே அதற்கு ஏற்ற அளவு பசி தணிவது போல, அனுபவம் கொஞ்சம் பெற்ற உடனே  இன்பம் தலைப்பட ஆரம்பித்துவிடும். தொடங்கும்போதே முடிந்த முடிபாகிய முத்தியின்பம் கிடைக்கும் என்பது இல்லை. ஆனால் செய்யும் முயற்சி உண்மையானால்க, அதற்கேற்ற அனுபவம் நிச்சயமாக உண்டாகும். ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதில் பயன் இல்லை. சிறிது செய்தாலும் மெய்வருத்தக் கூலி உண்டு. "முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்" என்றார் திருவள்ளுவ நாயனார். முயன்று வந்தால், இந்தப் பிறவியிலேயே முடிந்த முடிபாகிய இன்பத்தைப் பெற முடியாமலும் போகலாம். ஆனால் முயற்சிக்கு ஏற்ற பலன் நிச்சயமாக உண்டு. அடுத்த பிறவிகளிலாவது கிடைக்கும் என்பது உறுதி. 

உயிர் உடம்போடு வாழும் வாழ்க்கையில் இந்த உடம்போடு இருப்பது ஒர் அத்தியாயம். ஒரு நல்ல சாதனத்தைத் தொடங்கினால் அது எப்படியும் சிறந்த பயனைப் பெறும்படி செய்துவிடும். இப்போது நாம் செய்கின்ற முயற்சியின் பயன், வரும் பிறவியாகிய அடுத்த அத்தியாயத்தில் உயிரோடு ஒட்டி வரும். "ஒருமைக் கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து" என்று திருவள்ளுவ நாயனார் சொல்கிறார். எனவே இந்தப் பிறவியில் செய்கின்ற முயற்சி கைகூடுமோ கூடாதோ என்று நினைக்க வேண்டாம். இப்பொழுது கை கூடாவிட்டாலும் இந்த முயற்சியின் பயன் வரும் பிறவிகளிலும் தொடரும். ஆதலால், ஏதாவது ஒரு வகையில் ஈடுபட்டு இறைவன் அருள் பெறுவதற்குரிய சாதனத்தைத் தளர்ச்சியின்றிச் செய்து வர வேண்டும். அதற்கு குருவின் அருள் பெற வேண்டும்.  மனிதனுடைய வளர்ச்சி அவன் உடம்பைப் பற்றியது அல்ல. மனத்தைப் பற்றியது ஆகும். மனப் பண்பு வளர வளர, மனிதன் வளருகிறான். மனத்தின் இயல்பு ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுவதுதான். அப்படிப் பற்றுகிற மனம் எவ்வளவுக்கு எவ்வளவு உயர்ந்த பண்புடைய ஒன்றைப் பற்றுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு அது உயரும். 

சாதாரண மனிதன் ஒருவன் தன் முயற்சியினால் மக்கள் தொண்டனாகி,  நகரமன்ற உறுப்பினர் ஆகி, நகரமன்றத் தலைவர் ஆகி, சட்டமன்ற உறுப்பினர் ஆகி, அமைச்சர் ஆகவும் வந்துவிடுகிறான். இது போன்ற வளர்ச்சிமுறை மனப் பண்பாட்டினால் உண்டாக  வேண்டும். சமூகத்தாரின் கண்ணில் கீழ்ச்சாதியில் பிறந்தவர் நந்தனார். ஆனால், அவரைக் காட்டிலும் உயர்ந்த வேதியர் யாரும் இல்லை.   "நந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த நானிலத்தில் கண்டது இல்லை" என்றுதானே பாரதியார் அவரைப் போற்றினார்.  கண்ணப்பர் வேட்டுவ  குலத்தைச் சேர்ந்தவர்தான். ஆனால், ஆறு நாட்களில் அவரைக் காட்டிலும் உயர்ந்தவர் யாரும் இல்லை.  அவர்களுடைய மனநலம் வளர்ச்சி பெற்றது.  "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்"  என்பது திருக்குறள்.  புறக் கண்களால் பார்க்கும் உருவத்தைக் கண்டு மயங்காதே.  தேர் பெரியது. அச்சாணி எவ்வளவு சிறியது? அதுபோன்ற மனிதர்கள்  இருக்கிறார்கள்'  என்று கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். அதனால், "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்றார். 

சிவபிரான் திருமணத்தின் போது வானவர்களும், பூவுலகத்தினரும் திருமணக் கோலம் கண்டுகளிக்க இமயமலையில் வந்து கூடிவிட்டார்கள். வடநாடு தாழ்ந்ததால்  தென்னாடு உயர்ந்துவிட்டது. இதைச் சமன்படுத்த உருவத்தால் சிறுத்த அகத்திய முனிவரை எம்பெருமான் தென்னாடு அனுப்பினார்.  சின்னஞ்சிறு குறுமுனிவர், தமிழ் நூலை நமக்குத் தந்த குருமுனிவர்,  "உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்பதற்குச் சான்றாக நிற்கிறார். அகத்திய முனிவர் தென்னாடு வந்தார். நிலம் சமன்பட்டு விட்டது. அது அவரது உடம்பின் வல்லமையால் அல்ல.  அவர் உள்ளம் பெரியது. மனத்தின் வன்மை அதிகமாக, திடம் அதிகமாக, பண்பு செறிந்து  வளர்ந்து நிற்கும்.  

நம்முடைய முயற்சிகள் தொடர்ந்து வந்தால், பண்பு வளர்ந்து வரும். மனத்தில் உறுதி தோன்றும். இறையருள் நமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை தோன்றும். இறைவன் இருக்கிறான் என்று பிறர் சொல்லக் கேட்கிறோம்.  நமக்கு அதில் முழு நம்பிக்கை இல்லை. சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது. அந்தச் சந்தேகம் நீங்க வேண்டும். இறைவன் நிச்சயம் இருக்கிறான். அவனைக் காணாத குறை  நம்முடையதே. அவன் எங்கே, எங்கே, எங்கே என்ற கேள்வி தொடங்கும்போது, நம்பிக்கை உதயமாகும். கேள்விக் குறியைப் போட்டுக் கொண்டே போனால் பயன் இல்லை.  கேள்விக்குப் பதிலை அளிக்கும் குருநாதரை அண்டி, அவர் காட்டும் நெறியிலே,  சீலத்திலே ஒழுகி நின்றால் பயன் உண்டு. மனத் திட்பம் என்பது ஒரு நாளில் வந்துவிடாது. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடல்  வலிமை ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. பயிற்சியை விடாமல் செய்யச் செய்யப்  படிப்படியாகத்தான்  உடல் வலுப்பெறுகிறது. அதைப் போலவே மனம் திட்பம் உண்டாக, படிப்படியாக விடாமல் சாதனம் செய்ய வேண்டும். இறைவன் திருவருளை நம்பியிருந்தால் இடையில் தடை ஏற்படாது. 

பல காலமாக உலக மாயையில் சிக்கிச் சுழன்ற மனத்தில் படிந்துள்ள பழைய வாசனை மறைய வேண்டுமென்றால், பல கால உழைப்பு வேண்டும். அந்த உழைப்பினால் பழைய வாசனை அற்றுப் போகச் செய்து, மனத்தையே நாசம் செய்பவர்கள் சீவன்முத்தர்கள்.  இறைவனிடத்தில் கொள்ளும் நம்பிக்கையினால் திடம் வரும். ஒன்றை ஒன்றாகப் பார்த்து மயங்குகின்ற தன்மை ஒழியும். அந்தத் திடம் உண்மையாக இருந்தால், அதையே புணையாகக் கொண்டு பிறவிப் பெருங் கடலை நீந்தி விடலாம். 

மனம் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யவில்லை. எதைச் செய்யக் கூடாதோ அதைச் செய்கிறது. கண் பார்க்கிறது: நான் பார்த்தேன்  என்று சொல்கிறோம். காது கேட்கிறது;  நான் கேட்டேன் என்று சொல்கிறோம். கண்ணையும் காதையும் கருவியாகக் கொண்டு 'நான்' என்பது பார்க்கிறது; கேட்கிறது. எதையோ ஒன்றை நினைத்துக் கொண்டு ஒருவன் போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கு எதிரிலே போகின்ற நம்மை அவன் பார்ப்பது இல்லை. நம் மேல் அவனுடைய கண் படாமல் இல்லை. ஆனால், அவன் மனம் கண்ணோடு ஒன்றி நம்மைப் பார்க்கவில்லை. கண்ணை வாயிலாகக் கொண்டு மனம் இயங்கவில்லை. மனம் எதையோ நினைத்துக் கொண்டு இருக்கிறது. மனம் ஆகிய ஒன்று, கண் காது ஆகிய இந்திரியங்களை வாயிலாகக் கொண்டு இயங்கும்போதுதான் பார்க்கிறேன், கேட்கிறேன் என்றெல்லாம் சொல்கிறோம். அதனால் எல்லாவற்றுக்கும் மூலமாக இருக்கும் மனம் ஒரு காரியத்தைச் செய்கிறது; மற்றொரு காரியம் செய்யவில்லை. 

நமது மனமானது, பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் சேல் என்பதாக எப்போதும் திரிந்து கொண்டே இருக்கிறது. ஒன்றை நினைக்காமல், பலபல பொருள்களைப் பற்றி நினைந்து திரிகின்றது. மனத்திற்கு அதுதான் வேலை. மனம் வாயுவின் கூறு உடையது.  ஆகையால், அது சலித்துக் கொண்டே இருக்கிறது. ஒரு கணமும் ஒரு நிலையில் நிற்பதில்லை. மனத்தை நிறுத்துவது எளிய காரியம் அல்ல. ஒன்றையும் பேசாமல், நினையாமல் மனம் ஒய்வாக ஒருகணம் கூட இருக்காது. "சினம் இறக்கக் கற்றாலும், சித்தி எல்லாம் பெற்றாலும், மனம் இறக்கக் கல்லார்க்கு வாய் ஏன் பராபரமே?” என்று தாயுமானவர் பாடுகிறார். 

பலவற்றையும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் மனத்தை, "எதைப் பற்றியும் சிந்திக்காதே"  என்று எவ்வளவு பலமான கூட்டில் வைத்து அடைத்தாலும் அது நில்லாது. சிந்திக்காதே எனச் சொல்வதைவிட,  'நல்லவற்றைச் சிந்தி'  என்று சொல்வது நலம். "இறைவன் சம்பந்தமானவற்றைச் சிந்தி' என்று சொல்லி, அதன் போக்கிலே விட்டு மடைமாற்றி விட வேண்டும். இறைவனோடு தொடர்புடையவற்றை நினைந்து, மற்ற நினைப்புகள் மெல்ல மெல்லக் குறைய,  இறைவனையே நினைக்கின்ற நினைப்பு வரும்போது மனம் நிற்கும். அதை "மனோலயம்" என்பர். 

ஒரு குளத்தில் தாமரை மலர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் போகிற ஒரு பிள்ளை அதைப் பார்க்கிறான்; பறிக்கிறான்; இதழ் இதழாகக் கிள்ளிக் கசக்கி எறிந்துவிட்டுப் போகிறான். ஓர் ஒவியன் வருகிறான். அதன் வண்ணத்தையும் மலர்ச்சியையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து அப்படியே ஓவியம் தீட்ட முனைகிறான். ஒரு கவிஞன் பார்க்கிறான். 'இந்தத் தாமரையைப் போல் அழகு மிக்கதாகப் பெண்களின் முகங்கள் இருக்கின்றன' என்று வருணிக்கிறான். அதையே ஒரு அடியவர் பார்க்கிறார். 'இன்பத் தேனைச் சொரிந்து, அடியவர்களைத் தன்பால் அழைக்கின்ற இறைனுடைய திருவடிகளைப் போலவே, வண்டுகளை அழைக்கும் தாமரை உள்ளது’ என்று பரவசப்படுகிறார். நினைக்கின்ற நினைப்பை நல்லதாக்கிக் கொண்டவர் அடியவர். ஆதலால், தாமரையைப் பார்க்கும்போது  பெருமானுடைய திருவடி மலர்களை அவர் நினைக்கிறார்.  எங்கெங்கோ போகின்ற மனத்தை மடைமாற்றி இறைவனைப் பற்றி நினைக்கப் பழகினால், கடைசியில் நேரே இறைவனை நினைக்கிற நிலைக்கு மனம் வந்து விடும். 

விளையாட்டுப் புத்தியுள்ள சிறு குழந்தை  எப்போதும் வீதியிலே  விளையாடிக் கொண்டிருக்கிறது. சாப்பிடுகிற வேளையில் கூட உள்ளே வராமல்  விளையாடுகிறது. தாய் கிண்ணத்தில் உணவைப் பிசைந்து எடுத்துச் சென்று  குழந்தையை இழுத்து வந்து ஊட்டுகிறாள். ஒரு வாய் சாப்பிடுகிறது;  மறுபடியும் ஒடிவிடுகிறது. திரும்பவும் இழுத்து வந்து ஊட்டுகிறாள். விளையாட்டுத் தோழர்கள் போய் விடுவார்களே என அந்தப் பிடிசோற்றை வாயில் வாங்கிக் கொண்டு ஒடப்  பார்க்கிறது. ஒர் அடி அடித்துத் தாய் அதட்டுகிறாள். தாய்க்குப் பயந்துகொண்டு உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல் வாயைத் திறக்கிறது. ஆனால், அதன் கண் வீதியிலேயே இருக்கிறது. அந்தக் குழந்தை உணவின் சுவையை ரசித்துச் சாப்பிடப் பழகிவிட்டால்,  அப்புறம் மிக்க பசி வந்தவுடன் வீட்டுக்கு ஓடி வரும்.

அதைப் போலப் பலபலவற்றை நினைத்துத் தாவித் தாவி ஒடிக்கொண்டிருக்கும்  மனத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மடைமாற்றி விட்டு இறைவன் சம்பந்தமான பொருளை நினைக்கச் செய்தால், பிறகு இறைவனையே நினைக்கப் பழகிவிடும். பார்க்கின்ற பார்வையில், கேட்கின்ற மொழியில், செய்கின்ற செய்கையில் எப்படி இறைவன் நினைவு வரும். எந்தக் காரியத்தைச் செய்தாலும், எந்த இடத்திலே இருந்தாலும் நினைப்பு  நமக்கு எதில் ஊன்றி இருக்கிறதோ, அதுவே முந்திக்கொண்டு நிற்கும்.  "எத் தொழிலைச் செய்தாலும், ஏது அவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்றார் பட்டினத்து அடிகளார்.

செருப்பு இல்லாமல் வருந்திய வைணவர் ஒருவர், நல்ல செருப்பு ஒன்று வாங்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். வறுமையினால் வாங்க இயலவில்லை. ஒருவழியாக வாங்கிவிட்டார்.  அதைப் போட்டுக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு வந்தார். பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. காலிலே போட்டிருக்கும் புதுச் செருப்பைக் கழற்றி வெளியே வைத்துவிட்டு உள்ளே போனார். விரைவில் கோயிலை விட்டு வரமுடியவில்லை. அவர் நினைவோ செருப்பு மேலேயே உள்ளது. தீபாராதனை ஆயிற்று. சடகோபம் சாதிக்க நாழிகை ஆயிற்று. 'சீக்கிரம் செருப்புச் சாதிக்க வேணும்'  என்றார். பெருமாள் சந்நிதியில் இருந்தாலும் அவருக்குச்  செருப்புமேல் ஆசை 'செருப்பு வைத்துச் சேவடி தொழுமாப் போலே" என்று வைணவ  நூல்களில் வியாக்கியானத்தில் இந்த உதாரணம் வருகிறது. 

மனத்திலே எந்த நினைப்பு இருக்கின்றதோ அதுவே முந்திக்கொண்டு வரும் என்பதற்கு  இது சிறந்த உதாரணம்.  இறக்கும் தருவாயிலும் இறைவன் நினைப்பு வரவேண்டுமானால் காலையும் மாலையும் அவனை  நினைத்துப் பழக வேண்டும். பார்க்கின்ற பொருள்களை எல்லாம் இறைவனோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கவேண்டும். அவன் உருவத்தைக் கண்டு கண்டு அதை உள். வாங்கிக்கொண்டு அகக் கண்ணால் பார்க்க வேண்டும்.  இறைவனது திருவுருவத்தைத் தியானம் பண்ண வேண்டுமென்ற ஆசை இருக்கிறவர்கள் அது நழுவாது இருக்கத் திரும்பத் திரும்ப ஓடிப்போய் அத்திருவுருவத்தைப் பார்க்க வேண்டும். "உயிராணம் இருந்து. உற்று நோக்கி, உள்ளக் கிழியில் உருவு எழுதி" என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.  அந்தத் தியானத்திற்கு எது தடையாக இருக்கிறதோ, அதை நீக்குவது எளிது அல்ல. ஒன்றை  நினைக்கின்ற மனத்தை எதையும் நினைக்காதே என்று சொல்வதற்குப் பதிலாக,  'இதை நினை' என்று சொல்ல வேண்டும்.  "நெஞ்சே! நீ நினையாய், நிமிர் புன்சடை நின்மலனை" என்று தமது நெஞ்சுக்கு அறிவுறுத்தி, நிலை நிறுத்தினார் அப்பர் பெருமான். "நீ நாளும் நினை கண்டாய்" என்றும், "நன்னெஞ்சே! உன்னை இரந்தேன், நம்பெருமான் திருவடியே உன்னம் செய்து இரு கண்டாய், உய்வதனை வேண்டுதியேல்" என்றும் பாடினார் திருஞானசம்பந்தப்  பெருமான். 

மக்களுக்குத் தாம் அனுபவிக்கும் பொருளைப் பற்றிச் சிறப்பித்துப் பேச ஆசை உண்டாவது இயல்பு. மகளிரை எத்தனையோ வகையில் வருணனை செய்யத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.  'பாவையர்கள் பேசுகின்ற மொழியைக் கேட்டுப் பால் என்றும்,  அவர்களது ஒயிலான நடையைப் பார்த்து அவர்கள் பாதம் பஞ்சு என்றும், அவர்களது  கண்களைப் பார்த்துச் சேல் போல் இருக்கின்றன என்றும் நினைப்பதும், சொல்லித் திரிவதும் இயல்பு. இந்த மூன்றுக்கும்  மூன்று முறிவு சொல்லித் தருகிறார் அருணகிரிதாநர். அவர் சொல்லுவன கற்புடைய மகளிரைப் பற்றி அல்ல. அற வழியில் இன்பம் நுகர்பவர்களைப் பற்றி  அவர் சொல்லவில்லை. கண்ணாலும், மேனி மினுக்காலும்  உலகோரின் மனத்தை மயக்கும் பாவையர்களைப் பற்றியே பேசுகின்றார்.  இத்தகைய பாவையர்கள் எல்லாக் காலத்தும், எல்லா இடத்தும் இருந்துகொண்டுதான்  இருக்கிறார்கள். உலகத்தில் பிறந்து வாழ்கின்ற மனிதர்கள் யாரும் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க முடியும் எனச் சொல்ல முடியாது. 

நமக்கு நஞ்சாக இருப்பதை, நாம் செய்யக் கூடாததை முதலில் சொல்லி, நமக்கு நன்மை அளிப்பதை, நாம் செய்ய வேண்டியதைப் பின்னே அடிகளார் சொல்கிறார். எல்லாப் பெண்களைப் பார்க்கும்போதும் காம உணர்ச்சி உண்டாவதில்லை. தாயாகப்  பார்க்கும்போதும் சகோதரியாகப் பார்க்கும்போதும் உள்ளத்தில் தீய எண்ணம் உண்டாகாது. ஆகையால் பெண்களைப் பார்ப்பதில் தீமை இல்லை. பார்க்கின்றபோது  நினைக்கின்ற நினைப்புக்கு ஏற்ப நன்மை, தீமை ஆகிய விளைவுகள் இருக்கின்றன. காம ஊற்றைத் திறக்கின்ற அதே கண்தான் பக்தி ஊற்றையும் பொங்கச் செய்கிறது. 

"பெண்களின் கண்ணைப் பார்த்துச் சேல் எனச் சொல்வதற்குப் பதிலாகச் செந்தில் ஆண்டவன் திருக்கரத்தில் உள்ள வேல் என்று சொல்"  என்பது அருணகிரிநாதர் செய்யும் அருள்  உபதேசம். நமது நினைப்பு,  பேரின்பத்திற்கு  வழிகோலுவதாக இருக்கவேண்டும். பாவையர்களைப் பார்க்கின்ற பார்வை தவறானது அல்ல. ஆனால் எண்ணம் தவறானதாக  இருக்கக் கூடாது.  'சேல்விழி' என்று சொல்லாமல், 'வேல்விழி' என்று சொல்லும்போது, முருகப் பெருமானுடைய வேல் நினைவுக்கு வரும். பாவையர் பாதம் மென்மையாகப் பஞ்சு போல் இருக்கிறது என்கிறாயே. பெண்களின் நடை மயிலின் நடை என்றும் சொல்வார்களே. 'பதம் பஞ்சு' என்று நினைப்பதை விடுத்து, 'கொற்ற  மாயூரம்' என்று நினை. பாவையரின் பேச்சு பாலைப் போல் இருக்கிறது என்று, காமப் பாலை நினைப்பதை விடுத்து, இறைவன் அருட்பாலை நினைக்க வேண்டும்.  

காணும் பொருளிலே இறைவன் நினைவை வருவித்துக் கொள்ள வேண்டும். பாவையர் கண்ணைப் பார்த்துச் 'சேல்' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் 'செந்திலோன் திருக்கை வேல்' என நினைத்து உருகினால், பாவையர் பதங்களைப் பார்த்துப் 'பஞ்சு' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்து, 'கொற்ற மாயூரம்' என எண்ணி வியந்தால், பாவையர் மொழியைக் கேட்டுப் 'பால்' எனச் சொல்லித் திரிகின்றதை ஒழித்துச் செந்திலோன் கால் வெட்சித் தண்டை எழுப்பும் ஒலி எனக் கேட்டு நின்றால் அந்த நினைவு நம்மை மேலே ஏற்றிவிடும். அதனால் இந்திரியங்கள் அடங்கி, மலம் ஒழிந்து, இன்ப துன்பமில்லாப் பெருவாழ்வாகிய முத்தி கிடைக்கும். அப்படிச் செய்யாமல் மனம் திரிகிறது. "மனமே, இப்படி இருந்தால் மனமே, உனக்கு எவ்வாறு முத்தி கிட்டும்?" என்று கேட்கிறார் அருணகிரிநாதர். 


"பால் என்பது மொழி, பஞ்சு என்பது பதம், பாவையர் கண் 

சேல்,என்பதாகத் திரிகின்ற நீ, செந்திலோன் திருக்கை 

வேல் என்கிலை;கொற்ற மாயூரம் என்கிலை; வெட்சித்தண்டைக் 

கால் என்கிலை; மனமே! எங்ஙனே முத்தி காண்பதுவே?"

என்பது அருணகிரிநாதர் அருளிய உபதேசம்.


இதன் பொருள் ---

ஏ மனமே! பெண்களின் சொல்லானது பாலை ஒத்தது எனவும், பாதமானது பஞ்சை ஒத்தது எனவும், கண்கள் சேல் மீனை ஒத்ததாகவும் எண்ணி மயங்கித் திரிகின்ற நீ, திருச்செந்தூரில் எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளின் திருக்கரத்திலே விளங்கும் வேல் என்று சொல்லுகின்றாயில்லை. வெற்றி பொருந்திய மயில் என்று சொல்லுகின்றாயில்லை. வெட்சி மலரையும் தண்டையையும் அணிந்த திருவடி என்று சொல்லுகின்றாயில்லை. முத்தியை நீ எப்படி அடைவாய்? 


பிராயச்சித்தம் --- பாவமன்னிப்பு

 


பிராயச்சித்தம் --- பாவமன்னிப்பு

-----

சரியாக, 1981-ஆம் ஆண்டு நான் ஆஸ்துமா என்னும் ஒவ்வாமை நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தேன். சைதையில் மருத்துவம் பார்த்துக் கொண்டு இருந்த டாக்டர். சுப்பிரமணியம் தான் எனக்கு மருத்துவர். இப்போதும் அந்த மருத்துவர் அடையாறு பகுதியில் மருத்துவம் பார்த்து வருகின்றார். நல்ல மருத்துவரோடு, நல்ல மனிதரும் கூட. வாரத்திற்கு இரண்டு முறையாவது அவரைப் பார்க்கும் நிலையில் இருந்தேன். மருந்துகளை எழுதித் தந்து அவற்றை உட்கொள்ளும் முறையையும், மேற்கொள்ள வேண்டிய பத்திய முறைகளையும் மிகத் தெளிவாகவே அவர் சொல்லி இருந்தார். ஒருமுறை அவர் என்னோடு மிகவும் சலித்துக் கொண்டார். "நான் சொல்லும் முறைகளை நீங்கள் கடைப்பிடிக்கவில்லையானால், நான் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு மருந்துச் சீட்டு தந்துகொண்டே இருக்கலாம். நிச்சயமாக நோய் தீராது" என்றார் அவர். நான் எனது வருத்தத்தைத் தெரிவித்தேன். "நீங்கள் மட்டுமல்ல, நிறைய பேர் இப்படித்தான் இருக்கின்றார்கள். மருந்து சாப்பிட்டால் போதும், பத்தியம் கொஞ்சம் தவறினால் கூடப் பரவாயில்லை என்று இருக்கின்றார்கள். நீங்கள் இனி அப்படி இருக்கக் கூடாது" என்றார்.

மருந்து மட்டும் எடுத்துக் கொள்வதாலோ பயனில்லை. மருந்துகளைக் காலம் தவறி, வேளை தவறியும் எடுத்துக் கொள்வதால் பயனில்லை. மருந்து உட்கொள்வதோடு, மருத்துவர் சொல்லுகின்ற உணவு மற்றும் பிற கட்டுப்பாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ஒருவனுக்கு நோய் வரும் வழிகள் அல்லது காரணங்கள், முன் செய்த வினை என்னும் பழவினை, மற்றும், இயற்கை, ஒட்டுவாரொட்டு, உணவு,  உடை, உறுப்புக் குறைவு என்னும் உறுப்பறை, வறுமை, பஞ்சம், அச்சம், போர் முதலியன ஆகும் என்றும் முன்னோர் சொல்லி உள்ளனர். 

அக்காலத்தில் சுற்றுப்புறச் சூழல் மிக நன்றாகவே இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. உடைப் பழக்கங்களும் பெரும்பாலும் ஊறுபாடு செய்வதாக அமைந்திருக்கவில்லை. உடம்பில் வாதம், பித்தம், சீதம் என்னும் மூன்றும் அவை அமைந்திருக்க வேண்டிய அளவில் இல்லாதபோது, நோய் உண்டாகும் என்பதால், "மிகினும் குறையினும் நோய் செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய முன்று" என்றார் திருவள்ளுவ நாயனார்.  அளவில் மிகுந்தாலும், அளவில் குறைந்தாலும், மருந்து நூலோர் வாதம் முதலாகக் கருதப்பட்ட வாதம், பித்தம், சீதம் என்னும் மூன்று ஆகிய நோய் ஒருவனுக்கு உண்டாகும்.

உணவுப் பழக்கங்களால் உண்டான நோய்க்கு மருந்து உண்டு. எனவே, "மருந்து" என்னும் ஓர் அதிகாரத்தை வைத்து, உணவுப் பழக்கத்தையே மருந்தாகச் சொன்னார். தாக்கும் பகுதி பற்றி உள்ளநோய், உடல்நோய் என, நோய்கள் இருவகைப் படும்.

நோய் நீக்கும் மருத்துவ முறைகள் உட்கொள்வு, முகர்வு, பூச்சு, அணிவு, சுடுகை, ஒத்துகை, வேர்பிடிப்பு, குளிப்பு, அறுப்பு, மந்திரம், மந்திரத் தூக்கம்(Hypnotism), வழிபாடு, இறும்பூது (miracle).  நம்பகம் (Faith) முதலியவனவாகப் பல திறப்படும். 

பழவினையால் வந்த நோய்க்கு மருந்து இல்லை என்பர். இறைவனால் ஊட்டப்பட்ட வினை காரணமாக  வந்த நோய் இறைவழிபாட்டால் மட்டுமே நீங்கும். 

மருந்து, இயற்கை மருந்து செயற்கை மருந்து என இருவகைப்படும். வேரும் தழையும் போல்வன இயற்கை. மாத்திரை போல்வன செயற்கை. 

நோய்கள், உணவு உடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலும் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

உணவு ஒவ்வாமையாவது, சுவை, மணம், ஆற்றல்களால் உடல் கூற்றோடும், கால இடங்களொடும் பொருந்தாமை. உடை ஒவ்வாமையாவது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்காமை.  செயல் ஒவ்வாமை மிகையும் தகாமையும் ஆகும்.

"மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு, அருந்தியது

அற்றது போற்றி உணின்".

என்பதும் திருக்குறளே.

இதன் பொருள் ---

ஒருவன் தான் முன்னர் உண்ட உணவானது செரிமானம் ஆனதை அறிந்து, கடைப்பிடித்து, பின்னர் உண்பான் ஆகில், அவனுடைய உடம்புக்கு மருந்து என வேறு ஒன்று வேண்டியது இல்லை.

பெரும்பாலும் நோய்கள் எல்லாம் செரிமானம் ஆகாத உணவாலும் பொருந்தாத உணவாலும், மிகையான உணவாலுமே நேர்கின்றன.

எனவே, மருத்துவ முறைகளாலும், பத்திய முறைகளாலும் உடம்பிற்கு உண்டான நோய்கள் தீர வழி உண்டு என்பது தெளிவாகும்.

பரிகாரம் என்னும் சொல்லுக்கு,  நீக்குகை, கழுவாய், மாற்று உதவி என்பவற்றோடு, "மருத்துவம்" என்றும் பொருள் உண்டு. இதனால், மருத்தவர் "பரிகாரி" என்று நூல்களில் சொல்லப்பட்டார். 

பரிகாரம் என்பது மருந்து. அதைத் தருபவர் மருத்துவர். மருத்துவர் தரும் மருந்தால் மட்டுமே நோய் தீராது என்பதை மேலே பார்த்தோம். மருந்து உட்கொள்ளும் முறையும், உணவு போன்ற பிற நடவடிக்கைகளும் பத்தியம். மருந்தை உட்கொள்ளுவதால், நோயின் தாக்கம் தணிந்தது போல் தோன்றுமே ஒழிய, தீராது. நோய் தீர்க்கும் மருந்தை, காலம் தவறி உட்கொண்டாலும் நோய் தீராது. ஒருவேளை தவறிவிட்டது என்பதற்காக, அடுத்த வேளை இரட்டிப்பு அளவு மருந்து கொண்டாலும் தீராது. தீரவேண்டுமானால், மருந்தோடு பத்தியமும் காலமுறையில் இணையவேண்டும்.

பழவினை அல்லது முன்வினைகளால் வந்த நோய், வினை தீர்ந்தால் மட்டுமே தீரும். முற்பிறப்பில் செய்த வினைகளை இப்பிறப்பில் நுகர்ந்து கழிக்கிறோம். இனிமேலும் பிறப்பு வருவதற்குக் காரணமாக இருப்பது எது என்று கேட்டால், இப்பிறப்பில் வினையின் பயனை நுகரும் உயிர்கள், "நான்" என்னும் அகங்காரத்தோடு நுகர்கின்றன. அப்போது விருப்பும் வெறுப்பும் விளைகின்றன. இவற்றிலிருந்து "ஏறுவினை" என்றும் "ஆகாமியம்" தோன்றி அடுத்த பிறப்பிற்குக் காரணமாகின்றது. "நான்" என்னும் உணர்வே "நான் செய்தேன், பிறர் செய்தார்" என்ற எண்ணங்களைத் தோற்றுவித்து, அவை அடுத்த பிறப்பிற்கு வித்து ஆகின்றன. இவ்வாறு பிறர்க்கு நலமும் தீங்கும் விளைவிக்கும் வினை அல்லது கர்மமும் இரண்டு வகைப்படும். அறிந்து செய்யும் வினை (புத்திபூர்வ கர்மம்) அறியாது செய்யும் வினை (அபுத்திபூர்வ கர்மம்) என்பன அவை. அறிந்து செய்தாலும், அறியாமல் செய்தாலும், அவற்றின் பயன் தப்பாது விளையும்.

வினைப் பயன்களை அனுபவிக்கும்போது விருப்பு வெறுப்புக்கள் தோன்றுகின்றன. அவை முயற்சியால் வருகின்றன. இன்பம் வரும்போதும் துன்பம் நேரும்போதும் இவை எனது வினைப் பயனால் நேர்ந்தன எனக் கருதுவது இல்லை. இன்பம் வந்தால் " நான் செய்தேன்" என்றும், துன்பம் நேர்ந்தால், "பிறர் செய்தார்" என்றும் கருதுவது உலகியல். இதனால் மேலும் வினை விளைவதால் "நான் செய்தேன், பிறர் செய்தார்" என்னும் அறிவுக்கோணலை, ஞானத் தீயால்  மட்டுமே வெதுப்பி அழித்தல் கூடும்.

இந்த சைவசித்தாந்தக் கருத்து, பகவத்கீதை நான்காம் அத்தியாயம், 37-ஆவது பாடலில் பின்வருமாறு காட்டப்பட்டு உள்ளது காண்க.

"யதை²தா⁴ம்ஸி ஸமித்³தோ⁴ऽக்³நிர்ப⁴ஸ்மஸாத்குருதேऽர்ஜுன|

ஜ்ஞாநாக்³னி: ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத் குருதே ததா² ||"

இதன் பொருள் --- 

அருச்சுனா! சுடர் விட்டு எரியும் தீயானது விறகுகளைச் சாம்பலாக்குவது போன்று, ஞானக் கனலானது கர்மங்களை எல்லாம் சாம்பலாக்குகிறது.

வினைகள் இரு திறப்பட்டு, அறிந்து செய்யும் வினைகள் எனவும், அறியாது செய்த வினைகள் எனவும் நிற்கும். இவற்றால் பிறர்க்கு நலம் தீங்குகளை விளைவிக்கின்றோம். அவற்றின் விளைவு, புண்ணிய பாவங்கள் எனப்பட்டு,  தவறாமல் இறைவனால் ஊட்டப்படும் என்பதை அறிதல் வேண்டும். அவரவர் செய்த வினையின் பயனை, அவரவர்க்கு இறைவன் ஊட்டுவது, உயிர்கள் மீது வைத்த அளப்பரும் கருணையே ஆகும்.

புண்ணிய பாவங்கள் வருகின்ற விதம் குறித்தும், பாவத்தைப் போக்குகின்ற உபாயம் குறித்தும், "சிவப்பிரகாசம்" என்னும் மெய்கண்ட சாத்திரத்தில், அருள்நந்தி சிவாச்சாரியார் அருளியிருப்பதைக் காண்போம்.

"உற்றதொழில் நினைவு உரையின் இருவினையும் உளவாம்;

ஒன்று ஒன்றால் அழியாது; ஊண் ஒழியாது; உன்னில்

மற்று அவற்றில் ஒருவினைக்கு ஓர்வினையால் வீடு,

வைதிக சைவம் பகரும் மரபில் ஆற்றப்

பற்றியது கழியும்; இது விலையால் ஏற்கும்

பான்மையும் ஆம்; பண்ணாது பலிக்கும்; முன்னம்

சொல்தரு நூல்வழியில் வரில், மிகுதி சோரும்;

சோராது அங்கு அது மேலைத் தொடர்ச்சி ஆமே".

இதன் பொருள் ---

உற்ற தொழில், நினைவு, உரையின் அருவினையும் உள ஆம் - உயிருக்குப் பொருந்தி வந்த உடம்பினைக் கொண்டு செய்யும் தொழிலாலும், மனத்தின் நினைவாலும், வாக்கின் சொல்லாலும் மேலே கூறப்பட்ட புண்ணிய பாவங்கள் இரண்டும் உண்டாகும்.  (அப்படி உண்டாகிய கர்மங்களில், ஒரு கர்மத்தைக் கொண்டு, ஒரு கர்மத்தைப் போக்கிக் கொள்ளலாமா? இரண்டு இரண்டாக அனுபவித்து விரைவில் கழித்துக் கொள்ளலாமோ? என்றால்) உன்னில் - ஆராய்ந்து பார்த்தால், ஒன்று ஒன்றால் ஒழியாது, ஊண் ஒழியாது - புண்ணியத்தால் பாவமும் போகாது, பாவத்தால் புண்ணியமும் கழியாது, (அப்படியானால் ஒருவர் செய்த கர்மங்களைப் போக்கிக் கொள்ள வழியே இல்லையோ? என்றால்) மற்று அவற்றின் ஒருவினைக்கு ஓர்வினையால் வீடு - அப்படிச் செய்யப்பட்ட கர்ங்களில் ஒரு கர்மத்தைக் கொண்டு ஒரு கர்மத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உபாயத்தை, வைதிக சமயம் பகரும் - வேதாகமங்கள் சொல்லுகின்றன. மரபில் ஆற்ற - வேதாமகங்கள் சொன்ன முறையிலே செய்தால், பற்றியது கழியும் - உயிர்களைப் பற்றிய கர்மங்கள் நீங்கும். (அப்படிச் செய்யாதவர்களுக்கு, கர்மத்தால் உண்டான குற்றங்கள் (தோஷங்கள்) நீங்கும் வழி என்ன? என்று கேட்டால்) இது விலையால் ஏற்கும் பான்மையும் ஆம் பண்ணாது பலிக்கும் --- இந்தக் குற்றங்கள் நீங்குவதற்குத் தானாகவே செய்துகொள்ளவில்லையானாலும், சில திரவியங்களைக் கொடுத்து, செய்ய வல்லவர்களைக் கொண்டு செய்வித்துக் கொள்வதால், தான் செய்யாது இருந்தாலும், தனக்குப் பலிக்கும். (இவ்வாறு செய்து உண்டான குற்றங்களைப் (தோஷங்களைப்) போக்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்க, செய்தது அழியாது என்று சொன்னது ஏது? என்றால்? அதாவது) முன்னம் சொல் தரு நூல் வழியில் வரின் மிகுதி சோரும் - முன்னே சொல்லப்பட்ட வேதாகமங்களின் முறையிலே ஒருவன் தான் செய்த குற்றத்திற்குத் (தோஷத்திற்குத்) தக்க பிராயச்சித்தம் (கழுவாய்) செய்தாலும், அந்தக் குற்றத்தின் (தோஷத்தின்) கௌரவம் மாத்திரம் கெட்டு, குற்றம் (தோஷம்) நிற்கும். (அது என்னவென்றால், ஒருவன் பிரமஹத்தி, பசுவதை முதலாக உள்ள குற்றங்களைச் செய்துவிட்டு, அதற்குத் தக்க பிராயச்சித்தம் (கழுவாய்) செய்தாலும், நரகவேதனைக்கு உள்ள கௌரவம் மாத்திரம் கெட்டுப் போகும். கொலைத் தோஷம் (கொலைக் குற்றம் நிற்கும். அப்படி நின்ற கொலைத் தோஷம் என்ன செய்யும்? என்றால்) சோராது அது அங்கு மேலைத் தொடர்ச்சி ஆமே - நீங்கிப் போகாத தோஷமானது, இன்னொரு பிறவியை எடுத்து அனுபவிக்க நிற்கும். ஆனபடியால், ஒரு கர்மத்தால், இன்னரு கர்மம் அழியாது என்பதை அறிதல் வேண்டும்.

ஒரு வினையால் மற்றொரு வினை அழியாது என்று சொல்லப்பட்டுள்ளதைக் கூர்ந்து நோக்கினால், வினைப் பயனை அனுபவித்துக் கழிப்பதே, வினை வராமல் காக்கும் முறை என்பது புலப்படும். ஆயினும் வைதிகசைவ மரபில் கழுவாய் செய்யப் பாவம் நீங்கும் எனப்படுகிறதே என்றால், புண்ணியத்தால் பாவத்தை ஒழிப்பது, விலை கொடுத்து நற்பயனை வாங்க முயல்வதற்கு ஒப்பாகும். ஆகம விதிப்படி கழுவாய் செய்தாலும் வினையின் கொடுமை நீங்குமே ஒழிய, வினையின் பயன் வேரறக் கழியும் என்பது உண்மை அல்ல. அப்படிக் கழியாது மிஞ்சி நின்ற வினைப்பயன் அடுத்த பிறவிக்கும் தொடர்புடையது ஆகும்.

கூர்ந்து நோக்கினால், ஒரு புண்ணியத்தால் மற்றொரு பாவம் கழிக்கப்படுவதில்லை  என்பதும், வினை நீங்குவதற்கு இறைவன் திருவருளே துணை நிற்க வேண்டும் என்பதும் தெளிவாகும். சமய குரவர்களான திருஞானசம்பந்தப் பெருமானும், திருநாவுக்கரசர் பெருமானும் ,இறைவன் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டவர்களுக்கு வினைகள் வேரோடு அறும் என்று பல இடங்களில் அறிவுறுத்தி அருளியுள்ளமையை  நன்றாக எண்ணிப் பார்த்தால், வினைகளை முற்றிலும் துடைப்பவன் இறைவனே என்பதும்,  பிராயச்சித்தம் என்னும் கழுவாய் அல்லது பரிகாரம் மூலம் விளைகள் அறுவதற்கு வழியில்லை என்பதும், அவரவர் வினையை அவரவர் அனுபவித்தே கழிக்கவேண்டும் என்பதும் தெளிவாகும்.

மேலும், பிராயச்சித்தம் அல்லது கழுவாய் அல்லது பரிகாரம் என்பது, அவ்வபோது செய்யக் கூடாதவற்றைச் செய்துவிட்டு, அதன் விளைவில் இருந்து தப்பித்துக்கொள்ள அவ்வபோது செய்துகொள்வது அல்ல. உலகியல் முறையில் பார்த்தால் கூட, ஒருமுறை தவறு செய்தால் மன்னிப்புக் கிடைக்கும். தொடர்ந்து தவறு செய்துகொண்டு இருந்தால், மன்னிப்புக் கிடைக்காது. தக்க தண்டனையே கிடைக்கும்.

ஒருமுறை செய்தது தவறு என்று தெரிந்தால், அதற்காக வருத்தப்பட்டு, மீண்டும் அத்தகையதொரு தவறு மீளவும் தன்னிடம் நிகழாமல் ஒருவன் காத்துக் கொள்ள வேண்டும் என்று திருவள்ளுவ நாயனார் அறிவுறுத்துகின்றார். இறைவனிடம் வருந்தி முறையிட்டுவிட்டு, பாவ மன்னிப்புக் கிடைத்ததாக எண்ணிக் கொண்டு, பிறகு மீண்டும் பாவத்தைச் செய்வது அறியாமை. அறமன்றங்களிலும் இச்செயல் உரிய பலனைத் தராது போகும். 

"எற்று என்று இரங்குவ செய்யற்க, செய்வானேல்,

மற்று அன்ன செய்யாமை நன்று."       --- திருக்குறள்.

" நான் செய்து செயல் எத்தகையது என்று பின்னர் வருந்தும்படியான செயலை ஒருக்காலும் செய்யாது இருக்கவேண்டும். ஒருக்கால் அறிவு மயங்கிச் செய்துவிட்டால், மீண்டும் அதுபோன்ற செயல்களைச் செய்யாமல் இருப்பது நன்மையைத் தரும்" என்கின்றார் நாயனார்.

ஊழ்வினை வந்த போது அறிவு மயங்கும். ஊழ்வலியால் அறிவு மயங்கி, ஒருவன் தீச் செயலைச் செய்துவிடுவானாயின், அது பின்னர் பயனை விளைக்கும் தோறும் துன்பம் மிகுந்து கொண்டே இருக்கும். அதை அனுபவித்தே கழித்தல் வேண்டும். அதை விடுத்து, இவ்விதம் செய்தால் இத் துன்பம் நேர்ந்தது என்று தனக்குத் தானே வருந்துவதால் பயனில்லை. வருந்திக் கொண்டு இருந்தால், இவன் பயனில்லாத செயல்களையே செய்து விட்டு வருந்துகின்றான்; மன உறுதி இல்லாதவன், தன் பழியைத் தானே தூற்றிக் கொள்கின்றான் என்று பிறரால் பழிக்க நேரும். எனவே, இரங்குதல் கூடாது.  செய்த தீய செயலால் வந்த துன்பத்தை அனுபவித்த பிறகும், அது போன்றதொரு செயலைப் பின்னும் செய்யாமல் இருத்தல் வேண்டும்.


மனத் தூய்மை


மனத் தூய்மை

----

மனத் தூய்மை, நல்லொழுக்கம், தவம் முதலியன யாருக்கும் ஒரு நாளில் பொருந்திவிடுவன அல்ல. பல்வேறு நல்லியல்புகளை ஏற்று, வாழ்க்கையில் செயற்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலமே அவை வாய்க்கும். ஒழுக்கத்தின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அல்லது வீழ்ச்சிக்கும், உள்ளமே அடிப்படை. உள்ளத்தில் தோன்றிய ஒன்று, அது நல்லது ஆனாலும் சரி, கெட்டது ஆனாலும் சரி, உடனடியாகச் செயலுக்கு வராது போனாலும் காலப் போக்கில் செயற்பட்டு அதற்குரிய பயனைத் தந்தே தீரும். 

திருவள்ளுவ நாயனார் குற்றத்தினை மட்டும் கூறவில்லை; கடியவில்லை. குற்றத்தின் காரணத்தையும் கண்டு கடிகிறார். மனிதனின் தேவைகள் எப்பொழுதும் குறைவாகவே இருக்க வேண்டும். தேவைகளைப் பெருக்கிக் கொள்வதால், வாழ்க்கை ஆடம்பரமாவது மட்டுமல்லாமல், ஆசையையும் தூண்டும். ஆசையானது இல்லாத ஒன்றைப் பெறத் தூண்டும். அப்பொழுது உள்ளம் களவை நாடும். ஆதலால் களவு என்னும் தீய ஒழுக்கத்தில் இருந்து விடுபட, தேவையைக் குறைக்க வேண்டும். தனது பொருளியல்புக்கு ஏற்றவாறு அடக்கமாக, எளிமையாக வாழுதல் வேண்டும்.

"அளவின்கண் நின்று ஒழுகல் ஆற்றார், களவின்கண்

கன்றிய காத லவர்"

என்பது திருக்குறள்.

"களவு என்னும் கார் அறிவாண்மை" என்கிறார் திருவள்ளுவ நாயனார். களவு என்பது இருண்ட அறிவினை உடைய வல்லமை. அது, "அளவு என்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல்" என்கிறார் நாயனார். களவு என்னும் இருண்ட அறிவினை உடைய வல்லமை, அளவு என்ற சொல்லும் வல்லமை உடையவரிடம் இல்லையாம். களவு எனும் இருண்ட அறிவு, கருதிய இன்பத்தைத் தருவதில்லை. மாறாக, நீங்காத துன்பத்தையே தருகிறது. களவில் ஈடுபட்ட நெஞ்சத்தினர் நேரிய முயற்சிகளில் ஈடுபடுதலும் இல்லை. ஆதலால், களவினால் ஒரோவழி ஆக்கம் வந்தாலும், அது அளவிறந்து ஆவதுபோல் ஆகிப் பின்னர் கெடும். இன்ப நப்பாசைகளைத் தோற்றுவித்து, பின் அவற்றை நிறைவு செய்து கொள்ள முடியாத அவல நிலைமையையும், களவின் வழிவந்த துன்பங்களையும் ஒருசேர அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது.

ஒருவர்க்குப் பொருள் எப்பொழுதும் தனித்து வராது. பொருள் நல்வழியில் வருவதும் உண்டு. ஊக்கம், உழைப்பு, ஆற்றல் நிறைந்த முயற்சி ஆகியவற்றுடன் பொருள் வருமானால், பொருள் கழிந்தாலும் இந்த இயல்புகள் நம்மிடத்தே தங்கி நின்று, மீண்டும் பொருளைக் கொண்டுவந்து சேர்க்கும். களவு, வஞ்சனை, சூது முதலிய இயல்புகள் பொருளைக் கொண்டு வருவதும் உண்டு. இவ்வாறு வந்து சேரும் பொருள்கள், செலவழிந்து விட்டால் பொருளுடன் வந்த பாவங்கள் போகா. ஆனால், களவு, வஞ்சனை, சூது முதலியவை வீழ்ச்சிக்கே வழி வகுக்கும். இந்த வழியை நாடுபவர் பொருள் வாழ்வு நன்றாம அமையாது. அவர்களது உடல் வாழ்க்கையும் கூட நன்றாக அமையாது.

"அளவு அல்ல செய்து ஆங்கே வீவர், களவு அல்ல

மற்றைய தேற்றா தவர்”

என்று கூறுகிறார் திருவள்ளுவ நாயனார்.

வாழ்க்கையை அறிவு, அனுபவம் என்னும் இரண்டு உந்துசக்திகள் வழி நடத்திச் செல்லவேண்டும். அறிவில் அனுபவம் விளைகிறது. அனுபவத்தில் அறிவு விளைகிறது. இந்த இரண்டு சக்திகளையும் முறையாகப் பற்றி, நெறியில் நின்று வாழ்பவர்கள் வாழ்க்கையின் வரம்புகளை அறிவார்கள். அவர்கள் நெஞ்சத்தில் அறவுணர்வு நிலைபெற்று இருக்கும். இதே போலக் களவு உடையவர் உள்ளத்தே வஞ்சனை நிலைபெற்று நிற்கும்.

"அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்,

களவு அறிந்தார் நெஞ்சில் கரவு" --- திருக்குறள்.

களவு என்னும் இருண்ட அறிவு நிலையில் இருந்து நீங்கியவர்கள், தவம் செய்து பெறக்கூடிய புத்தேள் உலகத்தையும் பெறுவர் என்று நாயனார் தெளிவுபடுத்துகிறார்.

"கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை, கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு" --- திருக்குறள்.

எனவே, மனிதர்கள் தனிநிலையில் குற்றங்களில் இருந்து நீங்கி, நலம் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வாய்மையில் சிறந்த ஒழுக்கம் இல்லை. தனிமனிதனை சமுதாயத்தோடு இணைத்து எவ்வித இடையீடும் இல்லாமல் இன்ப நலம் செழிக்கப் பிணைத்து வைக்கும் பெருநெறி வாய்மையே நெறியாகும். இன்றைய உலகியலில் "உண்மை", "சத்தியம்" என்ற பெயர்களில் நிலவும் ஒழுக்கக் கருத்துகளை விட எல்லாவகையாலும் சிறந்த கருத்து உடையது "வாய்மை” என்பது. இதுவே திருவள்ளுவ நாயனார் கூறும் ஒழுக்கம் ஆகும். தீமை பயவாத சொல்லே வாய்மை என்பது நாயனார் கண்ட முடிவு. இக்கருத்தினை வலிமையாகவே அறிவுறுத்துகிறார். 

"வாய்மை எனப்படுவது யாது எனின், யாதுஒன்றும்

தீமை இலாத சொலல்" --- திருக்குறள்.

எனவே, யாருக்கும் - யாதொன்றுக்கும் எந்தக் காலத்திலும் எந்த வகையிலும் எந்த அளவிலும் தீமை பயவாத சொற்களே வாய்மையில் சிறந்த சொற்கள் என்பதனை உணர்த்த "யாது ஒன்றும் தீமை இலாத சொலல்" என்று கூறுகின்றார். சொற்களின் ஒழுக்கத் தகுதியை ஆராய்வதற்கு அந்தச் சொற்களால் விளையும் பயனே உரைகல்லாக அமையும். ஆதலால், நிகழ்ந்தது கூறல் வாய்மை அல்ல. நன்மை பயக்குமானால் நிகழ்ந்ததைக் கூறலாம், தீமை விளைக்குமாயின், நிகழ்ந்தைதைக் கூறியதும் பொய்யே என்பது திருவள்ளுவ நாயனார் காட்டும் தெளிவான ஒழுக்கம். நிகழாததைக் கூறுவது மட்டும் அல்ல, பொய்யைக் கூறினாலும், அதனால் நன்மை விளையுமாயின், வாய்மை என்றே கொள்ளப்பெறும்.

"பொய்ம்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின்." --- திருக்குறள்.

இவ்வாறு பொய்ம்மையும் வாய்மையாதல் பெரும்பாலும் சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் அடிக்கடி நிகழும். சிலருக்கு நல்லதை அப்படியே நல்லதாக எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்காது. அவர்களுக்குக் கவர்ச்சி தேவைப்படும்.  இனிய பூச்சு தேவைப்படும். முறையான நன்மை என்பது எப்பொழுதும் கவர்ச்சியாகக் காட்சி அளிக்காது. ஆனால், ஆழமான மாறாத நல்லின்பத்தை அது தரும். இத்தகு நல்லின்பத்திற்கு அழைத்துச் செல்லப் பொய்மையும் வாய்மையாக அவசியம் கருதிக் கருதப்படுகிறது. ஆனாலும் பொய், பொய்யேதான். அது எப்போதும் வாய்மையாகி விடுவதில்லை. நன்மை விளைந்தால் போதுமா? விளையும் நன்மைக்கு ஆழமான இயல்பு கூறுகிறார் திருவள்ளுவ நாயனார். அந்த நன்மை "புரை தீர்ந்த நன்மை"யாக இருக்கவேண்டும். பெரும்பாலும் தனக்கு நன்மை அல்லது தன்னை மிகவும் நெருங்கிச் சார்ந்திருப்பவர்க்கு நன்மை என்ற மனப்போக்கே மக்களின் இயல்பாக உள்ளது. ஆனால், யாதொரு குற்றமும் இல்லாத நன்மை விளையும் பொழுதே பொய்ம்மையும் வாய்மையாகக் கருதப்பெறும். 

குற்றத்தில் இருந்து நீங்கிய நன்மையை அறம் என்றார் நாயனார். அது, கேட்டையாவது, மரணத்தையாவது அடைய நின்ற ஓர் உயிருக்கு, சொற்களின் பொய்ம்மையால், அந்தக் கேட்டிலிருந்தும், மரண தண்டத்தில் இருந்தும் நீக்கி, நன்மையை அடையச் செய்தல். 

--- தீமையைத் தராத நடந்ததைச் சொல்லுதலும், நன்மையைத் தரும் நடவாததைச் சொல்லுதலும் வாய்மை. 

--- நன்மையைத் தராத நடவாததைச் சொல்லுதல் பொய்ம்மை. தீமையைத் தரும் நடந்ததைச் சொல்லுதல் பொய்ம்மை.

பாரதப் போரின் 15-ஆம் நாள் அன்று, பொய் சொல்லமாட்டேன் என்ற தருமரைப் பார்த்து கண்ணன் ஏது காட்டி, அசுதவத்தாமா என்னும் யானை இறந்ததாகச் சொல்லுமாறு வற்புறத்திக் கூறுவதாக அமைந்த பாடல் ஒன்று திருவள்ளுவ நாயனார் காட்டிய வாழ்வியல் நெறிக்குச் சரியான சான்றாக அமையும்

"உம்மையில் மறுமைதன்னில் 

உறு பயன் இரண்டும் பார்க்கின்,

இம்மையில் விளங்கும் யார்க்கும் 

அவர் அவர் இயற்கையாலே

மெய்ம்மையே ஒருவர்க்கு உற்ற 

விபத்தினை மீட்கும் ஆகின்,

பொய்ம்மையும் மெய்ம்மை போலப் 

புண்ணியம் பயக்கும் மாதோ!"        --- வில்லிபாரதம், 15-ஆம் போர்.

இதன் பதவுரை ---

உம்மையில் - கழிந்த பிறப்பிலும், மறுமை தன்னில் - இனி வரும் பிறப்பிலும், உறு - பொருந்திய, பயன் இரண்டும் -வினைப்பயன்கள் இரண்டும், பார்க்கின் - ஆராயுமிடத்து, இம்மையில் அவர் அவர் இயற்கையாலே - இப்பிறப்பில் காணப்படுகிற அவரவரது தன்மைகளினாலே, யார்க்கும் - எல்லார்க்கும்,  விளங்கும் - விளங்கும்; ஒருவர்க்கு உற்ற விபத்தினை - ஒருவர்க்கு நேர்ந்த மிக்க ஆபத்தை, பொய்ம்மையும் - அசத்தியமும், மெயம்மையே மீட்கும் ஆகில் - உண்மையாகவே போக்குமானால், மெய்ம்மை போல - சத்தியம் போலவே, புண்ணியம் பயக்கும். நல்வினைப் பயனைத் தரும்.

இப்பிறப்பில் ஒருவர் அனுபவிக்கிற இன்பதுன்பங்களினால் முற்பிறப்பில் அவர்செய்த நல்வினை தீவினைகளை ஊகித்து அறியலாம் என்பதும், இப்பிறப்பில் ஒருவர் செய்யும் நல்வினை தீவினைகளைக் கொண்டு வருபிறப்பில் அவர் அடையப் போகும் இன்பதுன்பங்பளை ஊகித்து அறியலாம்.  பெரிய ஆபத்துக் காலத்தில் அதனை நீக்கும் பொருட்டுப்  பொய் கூறலாம் என்று கண்ணன் வற்புறுத்தினான். 

பகையும் பிணக்கும் சமுதாயத்தில் தோன்றிப் புரையோடிப் போகாமல் தடுக்கும் நெறியே வாய்மை. வாய்மை என்பது சொல்லாக மட்டும் நின்று பொருள் உணர்த்தாமல், சொல்பவரின் ஒழுக்கத்தையும் காட்டுகிறது. "மெய்ம்மை" "உண்மை” என்ற சொற்களுக்கு இத்தகைய ஆற்றல் இல்லை. உள்ளதைக் கூறல் உண்மை. நிகழ்ந்ததைக் கூறல் மெய்ம்மை. உண்மை உள்ளத்தைப் பொருத்தது. மெய்ம்மை செயல்களையும் நிகழ்வுகளையும் பொருத்தது. இவற்றால் விளையும் பயன்கள் மிகுதியும் சிறப்புடையனவாக அமைய வாய்மையே மிகவும் சிறந்த ஒழுக்கம்.

வடையின் வாசனையை எலிக்குக் காட்டிப் பிடிப்பதைப்போல, மக்களைத் தம் வலையில் வீழ்த்திச் சுரண்டி அடக்கி ஆளவே பலர் வாயினால் இனிய சொற்களைப் பேசுவர். கையினால் இனிய செயல்கைளயும் செய்வர்.  "ஒருவன் தன் மனமானது அறிந்த ஒன்றை, பிறர் அறியவில்லை என்று பொய்யாகச் சொல்லாது ஒழியவேண்டும். அப்படிப் பொய் கூறிய பின்னர், தனது மனமே அந்தப் பாவத்துக்குச் சாட்சியாய் நின்று, அப் பாவத்தின் பயனாகிய துன்பத்தை அடைவிக்கும்" என்கின்றார் நாயனார்.

"உற்ற நோய் நோன்றல், உயிர்க்கு உறுகண் செய்யாமை, அற்றே தவத்திற்கு உரு" என்னும் திருக்குறளுக்கு இணங்க, உயிர்க்கு உறுகண் செய்யாது இருப்பதோடு, பொய்ம்மை கூறியேனும் உயிர்களைக் காக்கவேண்டும் என்பதைக் கூறிய நாயனார். தனக்கு வரும் தீங்குகள் எவ்வளவு ஆனாலும், பொறுத்துக் கொள்ளவேண்டுமே அன்றி, அவைகளைத் தவிர்த்தல் பொருட்டு, பொய்ம்மை கூறாது இருக்கவேண்டும் என்று  கூறுகின்றார்.  இதனை உணர்த்தவே 

"தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, பொய்த்தபின்

நன் நெஞ்சே தன்னைசு சுடும்" 

என்கிறார் திருவள்ளுவ நாயனார். ஒருவன், பிறர் பார்க்கவில்லை என்பதால், தான் எது கூறினாலும் பொருந்தும் என்று எண்ணி, தன் மனம் அறிந்த பொய் ஒன்றினைச் சொல்லுதல் ஆகாது என்றும், அவ்வாறு சொல்லுவானாயின், அவன் மனமே அவன் சொல்லிய பொய்யாகிய பாவத்திற்குச் சாட்சியாய் இருந்து, பின்னர் துன்பத்தைத் தருவிக்கும் என்று கூறுவதால், ஒருவன் பொய் கூறித் தப்பித்துக் கொள்ள முயலுவானாயின், அம் முயற்சி பயன்படாது என்றும், பொய்ம்மை வெளிப்பட்டுத் தீங்கினைப் பயக்கும் என்றும் சொன்னார்.

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்லவேண்டாம்" என்பது உலகநீதி என்பதை அறிக.

'கண்டவர் இல்' என, உலகத்துள் உணராதார்,

தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்,

நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும், 'அறிபவர்

நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்,...      --- கலித்தொகை, நெய்தல்கலி.

இதன் பொருள் ---

நெஞ்சைக் காட்டிலும் அணுகிய சாட்சி வேறு இல்லை. ஆகையால், அறியாதவர்கள் தம் மனம் இது செய்தல் ஆகாது என்று மீளாது, வேறு விலக்குவார் இல்லாமல், உலகத்தில் கண்டவர்களும் இல்லை என்று கருதி, தாம் செய்யும் தீவினைகளுள் தமது நெஞ்சு அறியவே செய்த கொடிய தீவினைகளை, பின்பு பிறர் அறியாமல் மறைத்தார்களாயினும், அவை மறையா..

"தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்

பின்னைத் தான் எய்தா நலன் இல்லை--தன்னைக்

குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றவேல் செய்தல்

பிடிபடுக்கப் பட்ட களிறு." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னர் அவனால் அடைய முடியாத இன்பம் எவ்வுலகத்தும் இல்லை. தன்னைத் தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத்து அகப்பட்ட ஆண் யானையைப் போல் எக்காலத்தும் வருந்துதற்குக் காரணமாகும்.

ஒருவன் சொல்லுவன பிறருக்கு இனியன போலத் தோற்றம் அளிக்கலாம். பலர் அதை நம்பவும் செய்யலாம். ஆனால், அதனால் பயனில்லை. பலரும் நம்புகிறார்கள் என்பதற்காகவே, சொன்ன பொய்யானது  வாய்மை ஆகிவிடாது. உள்ளத்தினாலும் பிறருக்குத் தீமை கருதாத ஒழுக்கத்தையே வாய்மை ஒழுக்கம் என்று திருவள்ளுவ நாயனார் வரையறுத்துக் கூறுகிறார். நெருப்பும் சுடும்.  நெருப்பு இருக்கும் இடமும் சுடும். அதுபோலத் தீமை தங்கியுள்ள நெஞ்சும் சுடும். 

உள்ளத்தால், செயலால் நன்மை நாடும் வாய்மை ஒழுக்கம் மேற்கொண்டு ஒழுகினாலே போதும். உடம்பினை வருத்தும் தவங்கள் செய்ய வேண்டாம். ஆரவாரத் தன்மை உடைய அறங்களைச் செய்ய வேண்டாம். உடலின் தூய்மை தண்ணீரால் கழுவுவதின் மூலம் கிடைக்கிறது. இன்று கழுவினால் தூய்மையாக இருக்கும். ஆனாலும் நாளை தூய்மை குறையும். மீண்டும் கழுவித் தூய்மை செய்துகொள்ள வேண்டும்.

"புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்" --- திருக்குறள்.

உடல் துய்மையைத் தொடர்ந்து கவனித்து அடிக்கடி கழுவித் தூய்மை செய்துகொண்டு, தனக்கும் பிறருக்கும் மகிழ்வைத் தரக்கூடிய வகையில் வாழ்வதைப் போல, வாய்மையால் அடிக்கடி நினைந்து நினைந்து, மனத் தூய்மையைப் பேணிக் காப்பாற்றுதல் வேண்டும்.




பொது --- 1069. வருக வீட்டு எனும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

வருக வீட்டுஎனும் (பொது)


முருகா! விலைமாதரைப் போற்றாமல், 

தேவரீரைப் போற்றி உய்ய அருள்.


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்

     வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர்


மனது போற்கரு கினகு வாற்குழல்

     வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ


பருகு பாற்கடல் முருகு தேக்கிய

     பாலோ தேனோ பாகோ வானோ ...... ரமுதேயோ


பவள வாய்ப்பனி மொழியெ னாக்கவி

     பாடா நாயே னீடே றாதே ...... யொழிவேனோ


அருகு பார்ப்பதி யுருகி நோக்கவொ

     ரால்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... வெனஏகி


அவுணர் கூப்பிட வுததி தீப்பட

     ஆகா சூரா போகா தேமீ ...... ளெனவோடிக்


குருகு பேர்க்கிரி யுருவ வோச்சிய

     கூர்வே லாலே யோர்வா ளாலே ...... அமராடிக்


குலிச பார்த்திப னுலகு காத்தருள்

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                          பதம் பிரித்தல்


வருக வீட்டு எனும் விரகர், நேத்திரம்

     வாளோ? வேலோ? சேலோ? மானோ? ...... எனுமாதர்,


மனது போல் கருகின, குவால் குழல்

     வானோ? கானோ? மாயா மாயோன் ...... வடிவேயோ?


பருகு பாற்கடல் முருகு தேக்கிய

     பாலோ? தேனோ? பாகோ? வானோர் ...... அமுதேயோ?


பவள வாய்ப் பனி மொழி எனாக் கவி

     பாடா நாயேன் ஈடேறாதே ...... ஒழிவேனோ?


அருகு பார்ப்பதி உருகி நோக்க, ஒர்

     ஆல்கீழ் வாழ்வார் வாழ்வே! கோகோ ...... என ஏகி


அவுணர் கூப்பிட, உததி தீப் பட,

     "ஆகா சூரா! போகாதே, மீள்" ...... என ஓடிக்


குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய

     கூர் வேலாலே, ஓர் வாளாலே ...... அமர் ஆடி,


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.

பதவுரை

அருகு பார்ப்பதி உருகி நோக்க --- பார்வதி தேவியார் அருகில் இருந்து உள்ளம் கசிந்து பார்க்க,

ஓர் ஆல் கீழ் வாழ்வார் வாழ்வே --- ஒப்பற்ற கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபரம்பொருளின் செல்வமே,

கோகோ என ஏகி அவுணர் கூப்பிட --- போர்க்களத்தில் அரக்கர்கள் கோகோ என்று கூச்சலிடவும்,

உததி தீப் பட --- கடல் தீப்பட்டு எரியவும்,

ஆகா சூரா போகாதே மீள் என ஓடி --- ஆஆ சூரனே ஓடிப் போகாதே இப்படி வா என்று ஓடி,

குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய --- கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி விடுத்து அருளிய

கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி --- கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் புரிந்து,

குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே --- வச்சிராயுதத்தை உடைய தேவர் கோமகன் ஆன  இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- செவ்வேள் பரமரே!

வானோர் பெருமாளே ---  தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

வருக வீட்டு எனும் விரகர் --- எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என அழைக்கும் திறமைசாலிகள்,

நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் ---  கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்று வியக்கும்படியான விலைமாதர்களின்

மனது போல் கருகின குவால் குழல் --- மனதைப் போலக் கருநிறம் பொருந்தி உள்ள அடர்ந்த கூந்தல்,

வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ --- வானில் உள்ள கருமேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும்,

பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ --- உண்ணத்தக்க பாற்கடலில் உள்ள சுவை மிக்க பாலோ,

தேனோ பாகோ வானோர் அமுதேயோ பவளவாய் பனிமொழி எனா --- தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும்,

கவி பாடா நாயேன் --- கவிகளைப் பாடி அவர்களைப் போற்றுகின்ற அடி நாயேன்,

ஈடேறாதே ஒழிவேனோ --- ஈடேறாமல் அழிந்து போவேனோ?

பொழிப்புரை

பார்வதி தேவியார் அருகில் இருந்து உள்ளம் கசிந்து பார்க்க, ஒப்பற்ற கல்லால மரத்தின் கீழே வீற்றிருப்பவராகிய சிவபரம்பொருளின் செல்வமே!

போர்க்களத்தில் வந்த அரக்கர்கள் கோகோ என்று கூச்சலிடவும், கடல் தீப்பட்டு எரியவும், ஆஆ சூரனே ஓடிப் போகாதே இப்படி வா என்று ஓடி, கிரவுஞ்சம் என்னும் பறவையின் பெயரைக் கொண்ட மலையை ஊடுருவும்படி விடுத்து அருளிய கூரிய வேலாலும், ஒப்பற்ற வாளாலும் போர் புரிந்து, வச்சிராயுதத்தை உடைய தேவர் கோமகன் ஆன  இந்திரனுடைய பொன்னுலகைக் காத்து அருளிய தலைவரே!

கடவுளே! செவ்வேள் பரமரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

எங்கள் வீட்டுக்கு வாருங்கள் என அழைக்கும் திறமைசாலிகள் கண்கள் வாளோ, வேலாயுதமோ, சேல் மீனோ, மானோ என்று வியக்கும்படியான விலைமாதர்களின் மனதைப் போலக் கருநிறம் பொருந்தி உள்ள அடர்ந்த கூந்தல், வானில் உருவாகும் கருமேகமோ, காடோ, அழிவில்லாத திருமாலின் வடிவம் தானோ என்றும், உண்ணத்தக்க பாற்கடலில் உள்ள சுவை மிக்க பாலோ, தேனோ, வெல்லமோ, தேவர்களிடம் உள்ள அமுதம் தானோ பவளம் போல் சிவந்த வாயினின்று எழும் குளிர்ந்த பேச்சுக்கள் என்றும், கவிகளைப் பாடி அவர்களைப் போற்றுகின்ற அடி நாயேன், ஈடேறாமல் அழிந்து போவேனோ?

விரிவுரை

வருக வீட்டு எனும் விரகர் நேத்திரம் வாளோ வேலோ சேலோ மானோ எனும் மாதர் --- 

விரகர் - திறமைசாலிகள். தந்திரக்காரர்கள். 

நேத்திரம் - கண்கள். 

சந்தியில் நின்றுகொண்டு பொதுமகளிர், வழியோடு போகும் இளைஞர்கள் மீது கண்வலை வீசி, “வணக்கம்; உங்கள் வரவு நல்வரவு. உங்களைப் பார்த்ததே பரம சந்தோஷம். ஏன் நடுத்தெருவில் நின்று பேசவேண்டும்?  உங்கள் பாதம் பட்டால் போதும். இதோ என் வீடு. வாருங்கள். உள்ளே போவோம்’ என்று அழைப்பர்.

“இங்கு நின்றது என் வீடே வாரீர்   

 என்று இணங்கிகள் மாயா லீலா

 இன்ப சிங்கியில் வீணே வீழாது அருள்வாயே”    ---  (அங்கை மென்குழல்) திருப்புகழ்.

மனது போல் கருகின குவால் குழல் வானோ கானோ மாயா மாயோன் வடிவேயோ --- 

மாயம் புரிகின்ற பொதுமகளிரின் மனமானது இருண்டு கிடக்கும். அவர்கள் மனம் போலவே கூந்தலும் கருநிறம் கொண்டதாக உள்ளது.

பருகு பாற்கடல் முருகு தேக்கிய பாலோ தேனோ பாகோ வானோர் அமுதேயோ பவளவாய் பனிமொழி --- 

பாற்கடல் முருகு - பாற்கடலின் இனிமை.

உண்ணத்தக்க பாற்கடலில் உள்ள சுவை மிக்க பாலோ,


கவி பாடா நாயேன் ஈடேறாதே ஒழிவேனோ --- 


நெய்த்த சுரிகுழல் அறலோ?முகிலோ?

     பத்ம நறுநுதல் சிலையோ?பிறையோ?

     நெட்டை இணைவிழி கணையோ?பிணையோ?......இனிதுஊறும்

நெக்க அமுது இதழ் கனியோ?துவரோ?

     சுத்த மிடறு அது வளையோ?கமுகோ?

     நிற்கும் இளமுலை குடமோ?மலையோ?......அறவேதேய்ந்து


எய்த்த இடை அது கொடியோ?துடியோ?

     மிக்க திருஅரை அரவோ?ரதமோ?

     இப்பொன் அடிஇணை மலரோ?தளிரோ?......எனமாலாய்,

இச்சை விரகுடன் மடவார் உடனே,

     செப்ப மருளுடன் அவமே திரிவேன்,

     ரத்ந பரிபுர இருகால் ஒருகால் ...... மறவேனே.

என அடிகளார் பிறிதொரு திருப்புகழிலும் பாடி இருத்தல் காண்க.

பெண்களின் அழகைப் பலவாறு புகழ்ந்து பாடி, நரகத்துக்குப் போகின்றவர்கள், இறைவனைப் புகழ்ந்து பாடி சிவகதியை அடைய முயலவில்லையே என்று பட்டினத்தடிகள் இரங்கிப் பாடுகின்றார்.  


"நெறிதரு குழலை அறல் என்பர்கள்,

நிழல் எழு மதியம் நுதல் என்பர்கள்,

நிலவினும் வெளிது நகை என்பர்கள்,

நிறம்வரு கலசம் முலை என்பர்கள்,

அறிகுவது அரிது இவ் இடை என்பர்கள்,

அடிஇணை கமல மலர் என்பர்கள்,

அவயவம் இனைய மடமங்கையர்

அழகியர், அமையும், அவர் என் செய?


மறிமழு உடைய கரன் என்கிலர்,

மறலியை முனியும் அரன் என்கிலர்,

மதிபொதி சடில தரன் என்கிலர்,

மலைமகள் மருவு புயன் என்கிலர்,

செறிபொழில் நிலவு தி(ல்)லை என்கிலர்,

திருநடம் நவிலும் இறை என்கிலர்,

சிவகதி அருளும் அரசு என்கிலர்,

சிலர் நரகு உறுவர் அறிவு இன்றியே."      --- கோயில் நான்மணி மாலை.


குருகு பேர்க் கிரி உருவ ஓச்சிய கூர் வேலாலே ஓர் வாளாலே அமர் ஆடி --- 

குருகு - பறவை. இங்கு கிரவுஞ்சம் என்னும் பறவையைக் குறிக்கும்.

    கிரவுஞ்சம் என்பது உயிர்களின் சஞ்சிதம், பிராரத்தம்,   ஆகாமியம் ஆகிய மூன்று விதமான வினைகளின் தொகுதியைக் குறிக்கும்.

சூரபதுமன் அழியாத யாக்கையைப் பெற்றவன். வச்சிரம் போன்ற உடம்பு உடையவன். வச்சிர உடம்பு என்பது என்றும் அழியாது, பிறவிகள்தோறும் உயிருக்கு வந்து பொருந்துகின்ற ஆணவமலத்தைக் குறிக்கும்.

      சிங்கமுகாசுரன் என்பது உயிர்கள் இயற்றுகின்ற கன்மம் ஆகிய மலத்தைக் குறிக்கும். கன்மம் --- வினை அல்லது செயல். அது அறச் செயல், பாவச் செயல் என்று இருவகையாக இருக்கும். இச் செயல்கள் முறையே புண்ணியம் பாவம் ஆக மாறி, வினைத் தொகுதியில் சேரும்.

      இலட்சத்து ஒன்பது வீரர்களையும் தாரகனுடைய மாயக் கருத்துக்கு இணங்கி, கிரவுஞ்சம் என்னும் மலை வடிவாய் இருந்த அசுரன், தன்னிடத்தில் மயக்கி இடர் புரிந்தான். முருகப் பெருமான் தனது திருக்கரத்தில் இருந்து வேலை விடுத்து, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, அதில் இருந்த அனைவரையும் விடுவித்து அருள் புரிந்தார்.

"வருசுரர் மதிக்க ஒரு குருகுபெயர் பெற்ற கன

வடசிகரி பட்டு உருவ வேல்தொட்ட சேவகனும்"

என்றார் வேடிச்சி காவலன் வகுப்பில் அடிகளார். 

        "மலை பிளவு பட மகர சலநிதி குறுகி மறுகி முறை இட முனியும் வடிவேலன்" என்றார் அருணகிரிநாதர் சீர்பாத வகுப்பில். "மலை ஆறு கூறு எழ வேல் வாங்கினான்" என்றார் கந்தர் அலங்காரத்தில். "கனக் கிரவுஞ்சத்தில் சத்தியை விட்டவன்" என்றார் கச்சித் திருப்புகழில்.

கிரவுஞ்ச மலையானது மாயைக்கு இடமாக அமைந்திருந்தது. அது பொன்மலை. பொன் யாரையும் மயக்கும். கிரவுஞ்ச மலை என்பது உயிர்களின் வினைத் தொகுதியைக் குறிக்கும். முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலாயுதம், கிரவுஞ்ச மலை என்னும் வினைத் தொகுதியை அழித்தது. இது உயிர்களின் வினைத் தொகுதியை அழித்து, அவைகளைக் காத்து அருள் புரிந்த செய்தி ஆகும்.

"இன்னம் ஒருகால் எனது இடும்பைக் குன்றுக்கும்

கொல்நவில் வேல்சூர் தடிந்த கொற்றவா! - முன்னம்

பனிவேய்நெடுங் குன்றம்பட்டு உருவத் தொட்ட 

தனி வேலை வாங்கத் தகும்."

என்னும் திருமுருகாற்றுப்படை வெண்பாப் பாடலாலும் இனிது விளங்கும்.

       "நீசர்கள் தம்மோடு எனது தீவினை எலாம் மடிய, நீடு தனி வேல் விடும் மடங்கல் வேலா" என்று பழநித் திருப்புகழில் அடிகளார் காட்டியபடி, நமது வினைகளை அறுத்து எறியும் வல்லமை முருகப் பெருமானுடைய ஞானசத்தியாகிய வேலுக்கே உண்டு என்பது தெளிவாகும். "வேலுண்டு வினை இல்லை" என்னும் ஆப்த வாக்கியமும் உண்டு. "வினை ஓட விடும் கதிர்வேல் மறவேன்" என்றார் கந்தர் அநூபூதியில்.

வாள் என்பதும் எம்பெருமான் முருகனுக்கு ஓர் ஆயுதம்.


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே --- 

குலிசம் - வச்சிராயுதம். பார்த்திபன் அரசன். 

குலிசத்தை உடைய அரசன் என்பது தேவர்களின் தலைவனான இந்திரனைக் குறிக்கும். 


கருத்துரை

முருகா! விலைமாதரைப் போற்றாமல், தேவரீரைப் போற்றி உய்ய அருள்.






காமக் கடலைக் கடக்க உதவும் தெப்பம்

 


காமக் கடலைக் கடக்க உதவும் தெப்பம்

-----

மனைவியின் இலக்கணத்தை ஓர் அதிகாரத்தில், மனைவி இன்ன இன்ன குணங்கள் நிரம்பியவளாக இருக்கவேண்டும் எனத் திருவள்ளுவ நாயனார் வரையறுக்கிறார். சுருங்கிய குறட்பாவின் மூலம் ஆழமும் விரிவுமுள்ள கருத்துக்களை வழங்குகின்ற நாயனார் அந்த அதிகாரத்துக்கு "மனைவி" அல்லது "காதலி" என்று தலைப்புக் கொடுத்து இருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. மனைவி என்பவள் கணவனுக்குத் துணையாக அறத்தின் வழியே நின்று அறத்தை வளர்ப்பவள் என்பதை அறிவுறுத்த நல்ல தமிழ்த் தொடரை அமைத்து அருளி இருக்கின்றார். மனிதன் வாழ வேண்டும். நன்றாக வாழ வேண்டும். நன்றாக வாழ்வதற்கு மூலகாரணமாய் இருப்பது அறம். அறம் இல்லாவிட்டால் நன்றாக வாழ முடியாது. அறம் செய்ய வேண்டுமானால் துணை வேண்டும். நலமான வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவள் மனைவி. ஆதலால், அந்த அதிகாரத்துக்கு "வாழ்க்கைத்துணை நலம்" என்று பெயர் இட்டு அருளினார். தலைப்பிலிருந்தே மனைவியின் இலக்கணம் புலப்படும். 

மனிதனுக்கு உடம்பு ஆகிய புறக்கருவியும், மனம் ஆகிய அகக்கருவியும் இறைவன் அமைத்து இருப்பதே நல்ல முறையில் வாழவேண்டும் என்பதற்காக. நல்ல முறையில் வாழ்வதாவது அறநெறியில் வாழ்வது. அறநெறியில் வாழவேண்டுமானால் தனி மனிதனால் முடியாது. அதற்கு ஒரு துணையைத் தேடிக்கொள்ள வேண்டும். அந்தத் துணைதான் மனைவி. அற வாழ்க்கைக்குத் துணையாக இருப்பவள் அவள். அவளுடைய நலத்தைச் சொல்லும் அதிகாரம் அது.  துணையாக இருக்கிறவளுடன் நடத்தும் இல்வாழ்க்கையானது, அறம் பொருள் இன்பம் ஆகியவற்றைத் தந்து, வீடாகிய பேற்றைப் பெறவும் காரணமாகவும் அமையும்.

உலகில் பல மரம் செடி கொடிகள் இருக்கின்றன. மனித பரம்பரை வளர்வது போல, மரத்தின் பரம்பரையும் வளர வேண்டும். அது வளரவேண்டுமானால் விதை உண்டாக வேண்டும். விதை கீழே விழுந்து முளைக்க வேண்டும். இலையிலோ, கிளையிலோ, வேரிலோ நினைத்த இடத்தில் விதை உண்டாகும்படி இறைவன் செய்திருக்கலாம். அங்கெல்லாம் உண்டானால் யாரும் கவனிக்க மாட்டார்கள். எல்லோரும் கவனிக்கக்கூடிய இனிமையான பழத்திற்குள் வைத்திருக்கிறான். "பழத்தை நன்றாக உண்ணுங்கள். விதையை வீசி எறந்து விடாதீர்கள். விதையை நல்ல இடத்தில் புதைத்தால் அது போன்ற சுவை மிக்க பழங்களைத் தரும் மரம் வளரும்"  என்பதைப் போல ஆண்டவன் வித்து நடுவதாகிய கடமையை, பழத்தைத் தின்பதாகிய இன்பத்தோடு சேர்த்து வைத்திருக்கிறான். அறத்தை வளர்க்கும் வேலைக்கு முன்கூட்டியே,  பழத்தை இறைவன் கூலியாகக் கொடுக்கிறான். 

நன்றாக இவ்வுலகத்தில் வாழ்க என்று நல்ல உடம்பைக் கொடுத்து அனுப்புகிறான் இறைவன். மலருக்கும்,  மலத்திற்கும் வேறுபாடு காணாமல் நல்ல ஞானிபோலவே குழந்தை பிறக்கிறது. ஆனால் அது வளர்ந்து,  பலவகைத் தொழில் புரிந்து,  அல்லாதன புரிந்து, நோயையும் நொடியையும் பெற்று வருந்துகிறது. மனிதனுக்கு எப்பொழுதும் நல்லதையே முன்னால் கொடுக்கிறான். கடமையை மாத்திரம் செய்யச் சொன்னால் மனிதன் செய்ய மாட்டான். "கோயிலுக்குப் போ" என்றால் போகமாட்டான். பிரசாதம் அல்லது உணவு கொடுக்கின்றார்கள் என்றால் ஓடுவான். பிரசாதம் அல்லது உணவு கிடைக்கும் வரையிலாவது கோயிலில் இருப்பான். மனிதனுக்கு எப்பொழுதும் இன்பத்தில் ஆசை. ஆகவே இறைவன் கடமையைச் செய்வதில் இன்பத்தையும் பிணைத்து வைத்திருக்கிறான். 

பரம்பரை வளர நாம் உலகில் வாழ்கிறோம். நாம் வாழ்வது போல உலகம் வாழவேண்டும். தொடர்ந்து மனித பரம்பரை வளர வேண்டும். பரம்பரை நல்ல முறையில் வளர வேண்டுமானால் வித்து இடுவது என்ற கடமை நல்ல முறையில் நடக்க வேண்டும். இன்பம் இல்லாவிட்டால் யாரும் கடமையைச் செய்யமாட்டார்கள். சுவை மிக்க பழத்திற்குள்ளே விதையை வைத்தாற்போல, மனித பரம்பரையின் வளர்ச்சிக்கான வித்தைக் காம இன்பத்திற்கு இடையே வைத்தான் இறைவன். முறைப்படி வாழ்ந்தால் அறத்தைச் செய்யலாம். காமத்தை அனுபவிக்கலாம். 

காமத்தின் முடிவு, பரம்பரை அறத்தைக் காப்பாற்றுவது. தசரதன் அறுபதாயிரம் மனைவியரோடு வாழ்ந்தவன். இருந்தாலும் பிள்ளைப் பேறு இல்லை. தன் குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற நினைப்பைக் காட்டிலும், உலகம் ஆகிய குடும்பத்திற்கு ஒரு குழந்தை வேண்டும் என்று அவன் நினைக்கிறான். "நான் அறுபதினாயிரம் ஆண்டு செவ்வனே இவ்வுலகத்தைக் காத்துவிட்டேன். எனக்குக் குறை ஒன்றும் இல்லை. என் காலத்திற்குப் பிறகு,  இவ்வுலகைக் காப்பவர் இல்லாமையால், இவ் வையகம் கலங்கி விடுமே என்கிற கலக்கம் மனதில் உண்டாகிறது"  என்கிறான். 

"அறுபதினாயிரம் ஆண்டு மாண்டு உற

உறுபகை ஒடுக்கி இவ் உலகை ஓம்பினேன்;

பிறிது ஒரு குறை இலை; என் பின் வையகம்

மறுகுறும் என்பது ஓர் மறுக்கம் உண்டு அரோ".   --- கம்பராமாயணம்.

மதுரைச் சொக்கநாதப் பெருமான் மீது அன்பு வைத்து இருந்தவர் தருமி என்ற ஆதிசைவர். அவர் பிரம்மச்சாரி. தாய்தந்தை இல்லாதவர். அவருக்குத் திருமணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அதற்கு வேண்டிய பொருள் அவரிடத்தில் இல்லை. பாண்டியன் தனது கருத்தைத் தெரிவிக்கும் கவியை இயற்றுபவருக்கு ஆயிரம் பொன் தருவதாகச் சொல்லி ஒரு கிழியைக் கட்டித் தொங்கவிட்டிருந்தான். தருமிக்குக் கவிதை பாட வராது. அவர் இறைவனிடம் போய்,  முறையிடுகின்றார்.

"நெடிய வேதநூல், நிறைய ஆகமம்

முடிய ஓதிய முறையில் நிற்பு எனும்

வடுஇல் இல்லற வாழ்க்கை இன்றி, நின்

அடி அருச்சனைக்கு அருகன் ஆவனோ"   --- திருவிளையாடல் புராணம்.

"உயர்ந்த வேத நூல்கள் முழுதும், ஆகமங்கள் முழுதும் ஓதி அறிந்த முறையில் பிரமச்சரியத்தை மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனாலும், குற்றமில்லாத இல்லற வாழ்க்கை இல்லாமல்  தேவரீரின் திருவடியை அருச்சிப்பதற்கு உரிமை உள்ளவன் ஆகமாட்டேனே". என்று சோமசுந்தரப் பெருமான் திருமுன் அழுது அரற்றி,  "அரசன் கட்டித் தொங்க விட்டிருக்கும் பொன் எனக்குக் கிடைக்கும்படியாகத் திருவருள் புரியவேண்டும்" என்று முறையிட்டார். இல்லற நெறியில் நிற்பவர்தான் இறைவனுக்குப் பூசை செய்யும் அருகதை உள்ளவர் என்பது இதனால் தெரியவரும். அது மட்டுமல்ல. இறைவனுக்குத் தொண்டு செய்கின்ற பரம்பரை தன்னோடு முடிந்து போய்விடக் கூடாது என்னும் கவலையும் கூட தருமிக்கு இருந்தது. அவருடைய நியாயமான கவலையை இறைவன் மாற்றி அருளினார் என்பது புராண வரலாற்றின் மூலம் அறியவரும்.

தசரதன் விருப்பமும் தருமியின் விருப்பமும் தாம் செய்த அறம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதே. அதற்குப் பிள்ளைப் பேறு வேண்டும். அதற்கு மனைவி வேண்டும். அறத்திற்குத் துணையாக நிற்பவள் மனைவி. அப்படி இல்லாமல் தனது காமத்தை மாத்திரம் தீர்ப்பவளாக ஒருவன் மனைவியை வைத்துக் கொண்டால், தாசியை வைத்துக் கொண்டது போன்றதுதான். காமம் அல்லது இன்பம், கடமையைச் செய்வதற்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடமையை மறப்பதற்குக் காரணமாக இருத்தல் ஆகாது. மனைவி என்பவள் அழகாய் இருக்க வேண்டும் என்று திருவள்ளுவர் சொல்லவில்லை. அழகாக இல்லாத பெண்கள் திருமணம் ஆகாமலேயே நின்று விடுவதில்லை. அழகு என்பது கண்ணுக்குக் கண் வேறுபடும். ஒருவன் கண்ணுக்கு அழகற்றவளாய்த் தோன்றுபவள், மற்றவன் கண்ணுக்கு அழகாகக் காட்சி அளிப்பாள். 

இளமைக் காலம் மட்டுமல்ல. முதுமை வந்தபோதும், கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் அன்பு பூண்டு இருந்தால், அதுதான் உண்மைக் காதல்; பருவம் கடந்தும் பசுமையாக நிலவும் உண்மையான அன்பு. உடம்பு முதிர முதிர அழகு தேயும். செல்வமும் நாளடைவில் தேயும். ஆனால் இந்த அன்பு மாத்திரம் உடம்பு தளரத் தளர வளரும். 

காமம் என்பது கடலைப் போன்றது. "காமக் கடல்" என்றுதான் திருவள்ளுவ நாயானார் சொல்லுகின்றார். "வெங் காம சமுத்திரம்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான். கடலுக்குக் கரை இல்லை. வெங்காமம் என்னும் கடலுக்கும் கரை இல்லை. மனைவி மறைந்த பின்னும் மற்றோர் திருமணம் செய்து கொள்ளுகின்றவர்களைப் பார்க்கின்றோம். பேரரசர் ஆகிய தசரதர் அறுபதினாயிரம் மனைவிகளை மணந்து கொண்டவர்.  இது காமத்தின் இயற்கை. விசுவாமித்திரர் முதலிய பெரிய முனிவர்களும் காமத்தினால் அல்லற்பட்டார்கள். புறத் தோற்றத்தைக் கண்டு, தோலைக் கண்டு, மூக்கு, விழியைக் கண்டு ஏமாந்து போகிறவனுக்குக் காமம் பரவுவதற்குக் காரணம் அந்தத் தோற்றமே. 

அந்தக் காமம் என்னும் கடல், மையல் செய்யும் மங்கையரின் உறுப்புக்களில் பரவிக் கிடக்கிறது என்கிறார் அருணகிரிநாதர். "சித்ர மாதர் அல்குல் படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில், உந்தித் தடத்தில், தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரம்" என்கின்றார்.

"காமம்" என்பதற்கு இரண்டு விதமான பொருள் உண்டு. ஒன்று தீயது; மற்றொன்று நல்லது. தீயது மையல்.  நல்லது காதல். பொதுவாகக் காமம் என்ற சொல் பழைய நூல்களில் அன்போடு கூடிய காதலுக்கே வழங்கப்பட்டது. உறுதிப் பொருள்களுக்கு இலக்கணம் வரைந்த திருவள்ளுவர் "காமத்துப் பால்" என்றே பெயர் வகுத்திருக்கிறார். காமம் என்பதற்குத் தவறான பொருள் மட்டுமே வழங்கியிருந்தால், "இன்பத்துப் பால்" என வைத்திருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும் என்றும் இக்காலத்தில் சிலர் சொல்கிறார்கள்.  காமம் என்பதற்குத் தவறான பொருள் இப்போது ஏற்பட்டு விட்டதால் அப்படிச் சொல்கிறார்கள். 

அன்புடைய காமம் காதல்.  அது நல்ல காமம். தீயது வெங்காமம்  எனப்படும் கொடுமையான காமம். புறக்கண்களால் வெறும் உடல் அழகை மாத்திரம் பார்ப்பதனால் எழுவது வெங்காமம். குணநலங்களைப் பார்க்கும் பார்வை வெங் காமத்துக்கு இல்லை. சீதாபிராட்டியை இராமனும் பார்த்தான்; அவளும் அவனைப் பார்த்தாள். இருவரும் கண்களாகிய வாசல் வழியே நுழைந்து ஒருவர் உள்ளத்தை ஒருவர் தொட்டுப் பார்த்துக் கொண்டார்கள். இது காம நோக்கு. வெங்காம நோக்கு அல்ல.

"பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து.

ஒருவரை ஒருவர்தம் உள்ளம் ஈர்த்தலால்.

வரி சிலை அண்ணலும் வாள்கண் நங்கையும்.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்". --- கம்பராமாயணம்.

"சித்ரமாதர்" என்கிறார் அருணகிரிநாதர். அலங்காரமான பெண்கள் என்று பொருள். தன் நாயகனுக்கு மாத்திரம் இன்பம் அளிக்க அலங்காரம் பண்ணிக் கொள்ளும் பெண்ணின் அழகு பிறர் கண்களில் படாது. பிறர் கண்களில் படவேண்டும் என்றே தம்மை அலங்காரம் பண்ணிக் கொண்டு,  ஆடவர் உள்ளங்களை மயக்கிக் கவரும் சித்திர மாதர்கள் உள்ளனர்.  அத்தகைய சித்திர மாதர் மேனி முழுவதும் வெங்காம சமுத்திரம் படர்ந்திருக்கிறது என்கிறார் அருணகிரிநாதர். அவர் கற்புடைய பெண்களைக் குறிக்கவில்லை. பிறர் கண்ணில் பட்டும் மையல் செய்யாத கற்புடைய மங்கையர்களுடைய அழகு அவர்களுடைய கணவர்களுக்கு மட்டுமே குளிர்ச்சியையும் இன்பத்தையும் அளிக்கும். கடல் பரவிக் கிடக்கின்றது என்றாலும் அதில் ஒரு துளியாவது மனிதனுடைய தாகத்தை அடக்காது. கடல் நீரைப் பருகப் பருகத் தாகந்தான் அதிகமாகும். அதைப்போல வெங்காமத்தை அனுபவிக்க அனுபவிக்க மேலும் மேலும் தாகம் உண்டாகும்.  காமம் மேலும் வளரும். அந்தக் காமக்கடல் புறப் பார்வையில் படும்படியாகச் சித்திர மாதர்களுடைய உறுப்புக்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தன் புறக் கண்களால் இந்த அழகைப் பார்த்து மனத்தை இழப்பவன், அக்கடலுள் மூழ்கித் துன்புறுகிறான். வாழ்நாளை வீணாக்கிக் கொண்டு ஆழ்ந்து போகிறான். அந்தச் சமுத்திரத்தை அருணகிரிநாதர் தாம் ஏளிதாகவே கடந்து விட்டதாகச் சொல்கிறார்.

சமுத்திரத்தைக் கடக்க வேண்டுமானால் தெப்பம் வேண்டும். தெப்பம் ஏது?  என்றால்,  "கடத்தில் குறத்தி பிரான் அருளால் கலங்காத சித்தத் திடத்தில் புணை என யான் கடந்தேன்" என்கின்றார் அருணகிரிநாதர். காமத்தை வெல்லக் காமத்தை வென்றவன்தான் வழி காட்ட முடியும். குறமகள் வள்ளியை நாடித் தேடிச்சென்று திருமணம் புணர்ந்த முருகப் பெருமான் திருவருள் என்னும் தெப்பம் தனக்குத் துணையாக வாய்த்தது என்கின்றார். வள்ளித் திருமணம் என்பது, காமத் திருமணம் அல்ல.  அது ஞானத் திருமணம். பக்குவப் பட்ட ஆன்மாவைத் தேடிச் சென்று இறைவன் அருள் புரிந்த வரலாற்றைக் குறிப்பால் உணர்த்துவது அது. இறைவன் மாசு இல்லாத அடியார்களைத் தேடிச் சென்று ஆட்கொண்டு அருள்வான். "மாசு இல் அடியார்கள் வாழ்கின்ற ஊர் சென்று தேடி விளையாடியே, அங்ஙனே நின்று வாழும் மயில் வீரன்" என்று முருகப் பெருமானைக் காட்டுகின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

கற்பில் சிறந்த பெண்களைக் காணும்போது காம உணர்வு தலைக் காட்டாது. ஆண்களுடைய பெயர்களுக்குப் பிறகு செட்டியார், ரெட்டியார், முதலியார், ஐயர் என்ற பட்டங்கள் இருக்கின்றன. ஆனால் பெண்கள் பெயர்களுக்குப் பின் எந்தச் சாதிக்காரர்களாக இருந்தாலும் "அம்மாள்" என்ற பட்டமே உள்ளது. லட்சுமி அம்மாள், சரசுவதி அம்மாள், பாகீரதி அம்மாள் என்று எந்தப் பெண்மணியாக இருந்தாலும் அம்மாள் என்று அழைப்பதே வழக்கம். அண்ணன் தனது தங்கையை 'அம்மா' என்றே அழைக்கும் பாங்கும் இருந்தது.  தந்தையும் தனது மகளை, 'அம்மா' என்றே அழைப்பார். மனைவியைத் தவிர மற்ற பெண்கள் எல்லாரும் அம்மாவே. காமத்தை வெல்ல வேண்டியவர்கள் உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பார்க்க வேண்டும். தாயாகப் பழக வேண்டும். தாயிடம் பேசுவது போலப் பேசவேண்டும். பெண்டாட்டி என்ற சொல்லுக்கு இயல்பான பொருள் பெண் என்பதுதான். அதற்கு இப்போது மனைவி என்ற பொருள் வந்துவிட்டது. மனைவி ஒருத்தியைத்தான் பெண்ணாகக் கண்டார்கள்.  மற்றவர்களைத் தாயாகப் பார்த்தார்கள். 

திருவள்ளுவர், பேராண்மை என்று சொல்கிறார். இதற்கு வீரம் என்றும் பொருள். மனிதன்,  அகவீரம், புறவீரம் என்று இரண்டு விதமான வீரம் உடையவன்.  உடம்பின் ஆற்றலால் தன்னை எதிர்க்கின்றவர்களோடு போராடி வெல்வது புறவீரம். அகவீரம் என்பது காமத்தை வெல்லும் வீரம். உலகிலுள்ள பெண்களைத் தாயாகப் பாவித்து, தன் உள்ளத்தில் எழுகின்ற வெங்காமத்தைப் பொசுக்கி வெல்கின்ற வீரமே அகவீரம். "புலன் ஐந்தும் வென்றான்தன் வீரமே வீரம்" என்பார் ஔவைப் பிராட்டியார்.

அகப் பகையை வென்றவர்கள் முனிவர்கள். புறப் பகையை அடக்கும் ஆண்மை உடையவர்களுக்கும், வீரம் மிக்கவர்களுக்கும் உட்பகையாகிய காமத்தை அடக்குவது அருமை. புறப்பகையை அடக்க ஆண்மை வேண்டுமென்றால் அகப்பகையை அடக்கப் பேராண்மை வேண்டும். அகப்பகையை வென்றவர் மாபெரும் வீரர். திருவள்ளுவ நாயனார், "பிறன்மனை நோக்காத பேராண்மை" என்கின்றார்.  

மணிவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரில் ஓர் அருட்காட்சி. ஒரு பெண் ஒர் ஆடவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்து விட்டாள். ஆனால் வேறொருவனுக்கு அவளை மணம் செய்விக்க அவளுடைய பெற்றோர்கள் முடிவு செய்தார்கள். தோழியின் மூலம் தன் எண்ணத்தை அந்தப் பெண் தன் பெற்றோர்களுக்கு உணர்த்தச் சொன்னாள். 'இந்தப் பிள்ளை வேண்டாம். இவனைவிட வேறு ஒரு நல்ல ஆடவன் வருவான்' எனத் தோழியும் குறிப்பாக உணர்த்தினாள். அவர்கள் கேட்கவில்லை. பெற்றோர்கள் முடிவுப்படி அந்தப் பெண் வேறு ஒருவனை மணந்துகொண்டால் அவள் கற்பு இழந்தவளாகி விடுவாள். அதைவிட அவள் உயிரை இழந்துவிடலாம். தோழி,  "நீ இந்த அறம் மறந்த ஊரில் இருக்கவேண்டாம். உன் தலைவனோடு இரவுக்கு இரவாகவே வேறு எங்காவது போய் விடு"  என்று சொல்லி, அவள் காதலனுக்கும் தெரிவித்தாள். தோழியின் யோசனைப்படியே அந்தப் பெண் தன் காதலனுடன் போய்விட்டாள். விடிந்து,  வீட்டில் உள்ளவர்கள் எழுந்து பார்த்தபோது பெண்ணைக் காணவில்லை. தேடினார்கள். அகப்படவில்லை. தோழியைக் கேட்டார்கள். "நான்தான் அப்பொழுதே குறிப்பாகச் சொன்னேனே. அவளுக்கு முன்பே ஒரு காதலன் இருக்கிறான். அதைத் தெரிந்து கொள்ளாமல் வேறோர் ஆடவனுக்கு மணம் செய்விக்க நினைத்தீர்கள். அவள் தனது கற்பை இழக்கத் துணியவில்லை" என்று சொன்னாள். தன் உயிரினும் சிறந்த பெண் வீட்டை விட்டே போய் விட்டாள் என்றவுடன் பெண்ணின் தாய்க்கு மிக்க வருத்தம் உண்டாயிற்று. அவளை வளர்த்த செவிலித்தாய், "நான் போய்த் தேடிப் பார்த்து அவளை அழைத்து வருகிறேன் பார்" என்று சொல்லி வீட்டை விட்டுப் புறப்பட்டாள். மரம் இல்லாத பாலைவனத்தின் வழியே அவள் போய்க் கொண்டிருந்தாள். அப்போது கொஞ்ச தூரத்தில் அவளுக்கு முன்னால் ஒரு பெண்ணும் ஒர் ஆணும் வருவது தெரிந்தது. 'நம் மகள்தான் வருகிறாள் போலிருக்கிறதே. உடன் வரும் அந்த ஆடவன்தான் அவள் காதலனோ' என்று நினைத்தாள். "அவர்கள் என் பெண்ணும் அவள் காதலனுமாக இருக்கக்கூடாதா என்ற ஆசை அவள் நெஞ்சில் துடித்தது. வேறு யாரோ இரண்டு பேர்கள் ஆணும் பெண்ணுமாக வந்தார்கள். அப்பெண் அவள் பெண்ணைப் போலவே இருந்தாள். உடனே அவர்களிடம், அவர்களை அப்படி எதற்காகப் பார்த்தாள் என்பதைச் சொல்கிறாள். "என் பெண்ணும் அவளுடைய காதலனும் என்று எண்ணிப் பார்த்தேன். அவர்களும் இப்படியேதான் இருப்பார்கள். அவர்கள்தான் மீண்டும் வந்துவிட்டார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேன்.  நீங்கள் இந்த வழியாகவேதானே வந்தீர்கள்? உங்களுக்கு முன்னே உங்களைப் போலவே இரண்டு பேர் போனார்களா?"  என்று கேட்கிறாள். அவர்களுக்கு எதிரே இருவர் போனதுண்டு. அதைச் சொல்ல அந்த ஆடவன் முந்துகிறான். கண்டதைச் சொல்ல வேண்டும் அல்லவா? 

"தில்லையில் இருக்கின்ற என்னையும் ஒரு பொருளாக் கருதி ஆட்கொண்ட தில்லையம்பலப் பெருமானுக்கு உரிய மலையில் வாழும் சிங்கத்தைப் போல இருந்த ஒரு வீரனைக் கண்டேன்" என்று சொன்னான். பார்த்ததைச் சொல்ல வேண்டும். பாட்டியோ இரண்டு பேர்களைப் பார்த்தாயா என்று கேட்கிறாள். அவனோ பெண்ணைப் பற்றிச் சொல்லவில்லை. " ஆண்டான் அருவரை ஆளி (சிங்கம்) அன்னானைக் கண்டேன்"  என்று சொல்கிறான். அந்த அம்மாள் தேடி வந்தது தன் பெண்ணை, ஆனால் இவன் ஆணைக் கண்டேன் என்கிறான். அவன் ஏன் அப்படிச் சொன்னான்? ஆடவனைத்தான் அவன் பார்த்தான். பார்த்ததைச் சொல்லிவிட்டான். ஆனால் அவளை இவன் பார்க்கவில்லை. தான் பார்க்காததை அவன் சொல்லவில்லை. அந்தச் செவிலியின் உளம் குளிர வேண்டுமே. அந்தப் பெண்ணை இவன் காதலி பார்த்திருப்பாள். அவளைச் சொல்லும்படி சொல்கிறான். "வேறு பெண்ணையே பார்க்காதவன் என்றால் அவனிடம் எதிரே நின்று இத்தனை நேரமும் பேசுபவள் பெண்தானே? அவளைப் பார்க்காமல் கண்ணை மூடிக்கொண்டுதான் பேசினானோ?” என்று கேட்கத் தோன்றும். அவன் எதிரே நின்றவளைப் பெண்ணாகப் பார்க்கவில்லை. தாயாகப் பார்த்தான். அது எப்படித் தெரிகிறது? " தூண்டா விளக்கு அனையாய், என்னையோ அன்னை சொல்லியதே?” என்றுதான் தான் காதலியை நோக்கி அவன் சொன்னான்.  இப்படித் தன் மனைவி ஒருத்தியையே பெண்ணாகவும், மற்றவர்களை எல்லாம் தாயாகவும் பார்க்கும் தமிழரின் பண்பட்ட மரபை மணிவாசகப் பெருமான் "திருக்கோவையார்" என்னும் அருள் நூலில் ஓர் அருட்காட்சியாகவே காட்டுகின்றார். புறத் தோற்றத்தைக் கண்டு, பொறிகளின் வயப்பட்டு அறிவு இழந்து வெங்காம சமுத்திரத்திலே ஆழ்ந்து போகின்றவர்கள், அதில் இருந்து மீள வேண்டுமானால் அவர்களுடைய பார்வை மாற வேண்டும். 

முருகப் பெருமானைத் தந்தையகவும், வள்ளிநாயகியை தாயாகவும் பார்த்துப் பார்த்துத் தியானம் செய்து காமத்தை வெல்லலாம் என்கின்றார் அருணகிரிநாதர். சிவப்பிரகாசர் இந்தக் கருத்தைச் "சோணசைல மாலை" என்னும் அருள் நூலில் இவ்வாறு பாடுகிறார். 

"கண்புனல் துளிப்ப அழல்படும் இழுதின்

      கரைந்துஉகு நெஞ்சில், நின் தனையே

பெண்பயில் உருவமொடு நினைந்து, எனது

      பெண்மயல் அகற்றும் நாள் உளதோ"

"திருக்கயிலை நாயகனே, கண்கள் நீர் பொழிய நெருப்பில் இட்ட வெண்ணெய்போல் கரைந்து உருகும் எனது நெஞ்சில் தேவரீரை, உமது திருவருளாகிய சத்தியோடு நினைந்து, எனது பெண்ணாசையைத் துறக்கும் நாள் எந்நாளோ" என்று ஏங்குகின்றார். அருணகிரிநாதர், வெங்காம சமுத்திரத்தைக் கடக்கத் தமக்கு அருளியவன் காட்டிலுள்ள குறத்தியின் தலைவன் என்றார். முருகன் என்று சொல்லாமல், வள்ளிமணாளன் என்கின்றார்.

முருகனுக்குக் குமாரன் என்ற பெயர் உண்டு. மாரன் என்பது மன்மதனுக்குப் பெயர். காம உணர்ச்சியை எழுப்புகிறவன் மாரன் ஆகிய மன்மதன். குமாரன் என்பதற்கு மாரனைக் குற்சிதம் (அருவருப்புக் கொள்ளச்) செய்யும் பேரழகு உடையவன் என்பது பொருள். தியான நிலையில் இருந்த சிவபெருமான் மீது மன்மதன் மலரம்பை விட்டுத் தியானம் கலையச் செய்தான். நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனையே சுட்டெரித்தார் சிவபிரான். பிறகுதான் பார்வதி திருமணம் நிகழ்ந்தது. பின்பே முருகப் பெருமானின் அவதாரம். ஆகவே, முருகன் பிறப்பதற்கு முன் மன்மதன் அழிந்தான். குமாரன் அவதரிக்கும் முன்பே மார தகனம் நடந்தது. குமாரன் எங்கே இருக்கிறானோ அங்கே மாரனுக்கு வேலை இல்லை. குமாரனுடைய அருள் இருந்தால் மாரனை வென்று விடலாம். 

உலகத்தில் சித்திர மாதர் மையல் வலைப்பட்டு, மனம் அழிந்து, பலர் துன்பத்தில் துவளுவதைப் பார்த்து வருந்தி, தாமே துன்பப்படுவது போல வாடி, "இனி எனக்குத் துன்பம் இல்லை. நான் காட்டிலுள்ள குறமகளாகிய வள்ளிநாயகனின் அருளினால் உண்டான சித்த உறுதியையே தெப்பமாகக் கொண்டு சித்திர மாதர்களின் மேனி எல்லாம் படர்ந்து பரவி இருக்கிற வெங்காம சமுத்திரத்தைக் கடந்து விட்டேன்" எனச் சொல்கிறார் அருணகிரிநாதர்.

"கடத்தில் குறத்தி பிரான் அருளால், கலங்காத சித்தத் 

திடத்தில் புணைஎன யான்கடந்தேன், சித்ர மாதர்அல்குல் 

படத்தில், கழுத்தில், பழுத்த செவ்வாயில், பணையில்,உந்தித் 

தடத்தில் தனத்தில் கிடக்கும் வெங்காம சமுத்திரமே".

என்பது கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடி பாடல்.

"அழகிய பெண்களுடைய பாம்பின் படம் போன்ற அல்குலிலும், கழுத்திலும், அழகு மிகுந்த செவ்வாயிலும், மூங்கில் போன்ற தோள்களிலும், கொப்பூழ் ஆகிய தடாகத்திலும், கொங்கைகளிலும் கிடக்கின்ற, வெம்மை மிகுந்த கொடிய காமம் என்னும் கடலை, வள்ளிமணாளனின் திருவருளால் சிறிதும் கலக்கம் அடையாத உள்ள உறுதியைத் தெப்பமாகக் கொண்டு அடியேன் கடந்த கரை ஏறினேன்" என்கிறார் அருணகிரிநாதர்.

வெங்காம சமுத்திரம் --- முறையற்ற காமமாகிய கடல்.



பெரியோரை அவமதித்தால் கேடு நிச்சயம்

 

பெரியோரை அவமதித்தால் கேடு நிச்சயம்

----

"நெருப்பினால் சுடப்பட்டாலும் பிழைத்துக் கொள்ளல் ஆகும். ஆனால், பெரியாரிடத்தில் தவறு செய்து ஒழுகுபவர் தப்பிப் பிழைத்தல் ஆகாது" என்கின்றார் திருவள்ளுவ நாயனார்.

"எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், உய்யார்

பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்."

என்பது அவர் அருளிய திருக்குறள்.

காடுகளிலே உள்ள மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அதனால் உண்டாகும் தீயினிடத்தில் ஒருவன் அகப்பட்டுக் கொள்வானானால், அந்தத் தீயானது உடம்பினைப் பிடிக்கும் முன்னரோ அல்லது உடம்பினைப் பற்றிய பின்னரோ தப்பிச் சென்று காத்துக் கொள்ளலாம். ஆனால், நிறைமொழி மாந்தருக்குச் செய்த அவமானம் செய்த ஒருவன், அவரிடத்தில் உண்டான கோபத் தீயில் இருந்து தன்னை எவ்விதத்திலும் காத்துக் கொள்ளுதல் முடியாது. அவரிடத்தில் பிழைத்தவர் அழிந்து போதல் நிச்சயம். எனவே, பெரியவரிடத்தில் பிழை செய்தல் ஆகாது.

"பணியப் படுவார் புறங்கடையர் ஆக, 

தணிவுஇல் களிப்பினால் தாழ்வார்க்க் - அணியது 

இளையாள் முயக்கு எனினும், சேய்த்து அன்றே மூத்தாள் 

புணர்முலைப் போகம் கொளல்." 

என்று "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில் குமரகுருபர அடிகளார் அருளி உள்ளார்.

இதன் பொருள் ---

பணியப் படுவார் - தம்மால் வணங்கி வரவேற்றுக் கொள்ளத் தக்க பெரியோர், புறங்கடையர் ஆக - (தம்மைக் காண்பது கருதித்) தமது தலைவாயிலில் வந்து நிற்கவும், தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு - அமைவு இல்லாத செல்வத்தால் உண்டான மகிழ்ச்சியினால், (விரைவில் எழுந்து சென்று அவரை எதிர்கொண்டு அழைத்து உபசரிக்காமல்) காலம் தாழ்த்துவார்க்கு, அணியது இளையாள் முயக்கு எனினும் - (அப்போதைக்கு) அவருக்கு நெருக்கமாக இருப்பது திருமகளின் சேர்க்கையாக இருந்தாலும்,  சேய்த்து இன்றே மூத்தாள் தொலையாத போகம் கொளல் - மூத்தவள் ஆகிய மூதேவியினது நெருங்கிய சேர்க்கையால் உண்டாகும் இடையறாத போகத்தை அவர் கொள்வது வெகு தொலைவில் இல்லை.

செல்வச் செருக்கினால் கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியோர் தம்மிடத்து வந்தபோது,  அவர் வரவு தமது பாக்கியம் என்று கருதாது, செல்வச் செருக்கினால் அறிவு மயங்கி, அவமரியாதை செய்தவர் விரைவில் கேட்டினை அடைவார் என்பது கருத்து.

தணிவில் களிப்பு - தணிவு இல்லாத களிப்பு. 'தணிவு' என்னும் சொல்லுக்கு  'அடங்குதல்' என்று பொருள். செல்வம் போதும் என அடங்காத மனம். "செல்வம் என்பது சிந்தையின் நிறைவு" என்று சிம்பர மும்மணிக் கோவையில் அடிகளார் அருளி உள்ளார். களிப்பு என்னும் சொல்லுக்கு, மகிழ்ச்சி என்புத பொருளாயினும், செருக்கு, மயக்கம்,வெறி, சிற்றின்பத்தால் உண்டாகும் உள்ளக் களிப்பு என்றே பொருள் கொள்ளுதல் பொருந்தும்.

செல்வம் மிகுந்த போது களிப்பாகிய செருக்கு வந்து மூடும் என்பதைப் பின்வரும் பிரமாணங்களால் தெளியலாம். 

"சக்கரச் செல்வம் பெறினும் விழுமியோர்

எக்காலும் சொல்லார் மிகுதிச்சொல்; - எக்காலும்

முந்திரிமேல் காணி மிகுவதேல், கீழ்தன்னை

இந்திரனா எண்ணி விடும்.           --- நாலடியார்.

இதன் பொருள் ---

      ஆட்சிக்கு உரிய அளவற்ற செல்வம் பெற்றாலும் மேலோர் எந்தக் காலத்திலும் வரம்பு கடந்த சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.  ஆனால் முந்திரி அளவுக்கு மேல் காணி அளவாகச் செல்வம் பெற்றாலும், கீழ்மகன் தன்னை என்றும் இந்திரனாக எண்ணி இறுமாந்து திரிவான்.

    முந்திரி, காணி என்றது, அந்நாளில் வழக்கில் இருந்த அளவுகள். முந்திரி என்பது 320-ல் ஒரு பங்கு. காணி என்பது, 80-ல் ஒரு பங்கு.

"வெள்எலும்பு பெற்றநாய் துண்ட விடக்கு உறின்

கொள்ளும் நனிகளி, கோடியும் வேண்டுமோ?

உள்ளதுடன் இம்மி மிகினும் உறுப கீழ்

வெள்ளத்து அனைய வியப்பு."

என்று பெரியோர் காட்டினார்.  வெள்ளை நிறத்துடன் கூடிய எலும்பைப் பெற்று இருந்த நாய்க்கு, ஒரு சிறு மாமிசத் துண்டு கிடைத்துவிட்டால் மிக்க களிப்பினை அடையும். அதுபோலவே, கோடி அளவு அல்ல, சிறிதளவு செல்வம் இருந்து, அது சிறிது மிகுந்துவிட்டாலும், கீழ்மக்கள் அளவற்ற வியப்பினை அடைவார்கள்.

செல்வம் கீழ்மக்களிடத்தில் வந்து சேர்ந்து விட்டால், என்ன நடக்கும் என்பதை அழகாகப் பின்வரும் பாடல் காட்டுகிறது. இந்தப் பாடல் வில்லிபாரதத்திலும் வருகிறது.

"செல்வம் வந்து உற்ற காலைத்

     தெய்வமும் சிறிது பேணார்,

சொல்வன அறிந்து சொல்லார்,

     சுற்றமும் துணையும் பேணார்,

வெல்வதே கருமம் அல்லால்

     வெம்பகை வலிது என்று எண்ணார்,

வல்வினை விளைவும்ஓரார்,

     மண்ணின் மேல் வாழும் மாந்தர்." --- விவேக சிந்தாமணி.

 இதன் பொருள் ---

      இந்த நிலவுலகத்தில் வாழுகின்ற மனிதர்களில் அறிவு அற்றவர்களாக உள்ளவர்கள், தங்களுக்குப் பெருத்த செல்வம் வந்து பொருந்திய போது, தமது அறியாமை காரணமாக, தெய்வத்தையும் சிறிதும் வழிபடமாட்டர்கள்; சொல்ல வேண்டியதை அறிந்து, பிறர் மகிழும்படி சொல்லமாட்டார்கள்; உறவினர்களையும், உதவியாக உள்ள நண்பர்களையும் போற்றிக் கொள்ள மாட்டார்கள்; எப்பொழுதும் எதையும் வெல்ல வேண்டும் என்பதே கருத்தாகக் கொண்டு செயல்படுவதைத் தவிர, எதிரிகள் வலிமை உடையவர்களாக இருந்தாலும், அதைச் சிறிதும் எண்ணித் துணிய மாட்டார்கள்; தாம் செய்யும் பாவச் செயல்களால் விளையப் போகும் தீமைகளையும் ஆராய்ந்து பார்க்கமாட்டார்கள்.

            அறிவில் சிறியவர்களே மதித்துப் போற்றுகின்ற செல்வமானது ஒருவனுக்கு வந்துவிட்டால், பிறரிடம் அன்போடு உரையாடாமையால், வாய் உள்ளவரும் ஊமையராவர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால், காது உள்ளவரும் செவிடராவர்; பிறரை ஏறெடுத்தும் பாராமையால், கண் உள்ளவரும் குருடராவர்.

"சிறியரே மதிக்கும் இந்தச் செல்வம் வந்து உற்ற ஞான்றே

வறியபுன் செருக்கு மூடி, வாய்உளார் மூகர் ஆவர்;

பறிஅணி செவி உளாரும் பயில்தரு செவிடர்ஆவர்;

குறிஅணி கண்உ(ள்)ளாரும் குருடராய் முடிவர் அன்றே." --- குசேலோபாக்கியானம். 

      வினையின் காரணமாக வந்து உற்ற உடலும், பெற்ற பொருளும், முற்றவும் அழிந்து போவதை உலக அனுபவங்களால் நாளும் அறிந்து இருந்தும்,  தனது உயிர்க்கு வேண்டிய உறுதியை விரைந்து தேடிக் கொள்ளாமல், அஞ்ஞான இருளில் மூழ்கி இருந்து மடிந்து போவது அழகல்ல. உயிரோடு உடன் பிறந்த உடலே பிணமாய் ஒழிகின்றது. தனது உடம்பின் நிழல் கூட வெய்யிற்கு ஒதுங்க உதவுவதில்லை. அப்படி ஒழிவதை நேரில் பலமுறை கண்டு இருந்தும், தாம் சேர்த்து வைத்துள்ள நிலையில்லாத பொருளை "என்னுடையது, என்னுடையது" என்று களித்து இருப்பவர் அறிவில்லாதவர் என்கின்றார் திருமூல நாயானர்.

"தன்னது சாயை தனக்கு உதவாது கண்டும்,

என்னது மாடு என்று இருப்பர்கள் ஏழைகள்;

உன் உயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது

கண்ணது காண்ஒளி கண்டு கொ(ள்)ளீரே."  --- திருமந்திரம்.

இதன் பொருள் ---

      தமது நிழல் தம் வெயில் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளுதற்கு உதவாமையைக்  கண்டுவைத்தும், அறிவில்லாதார்,  தம்முடைய செல்வமானது தமது துன்பத்தைப் போக்கிக் கொள்ளுதற்கு உதவும் என்று இறுமாந்து இருக்கின்றனர். கருதி உணரப்படுகின்ற உயிர் காணப்படும் உடம்போடே ஒன்றாய்ப் பிறந்தது. ஆயினும், அதுவே உடம்பில் என்றும் நின்று அதனைக் காவாது இடையே விட்டு ஒழிகின்றது. (அங்ஙனமாக, உடன் பிறந்து உடம்பே உயிரை விட்டு ஒழியும்போது, உடம்புக்கு வேறாய், இடையே வந்த செல்வமா நம்மோடு நிலைத்து நின்று நலம் செய்யும்?) பொருள்களைக் காணும் ஆற்றல் உங்கள் கண்ணில் உள்ளது. அதனைக் கொண்டு நீங்கள் இவற்றை நேரே கண்டு கொள்ளுங்கள். (சாயை --- நிழல். மாடு --- செல்வம்) 

      வெய்யிலுக்கு ஒதுங்குவதற்கும் உதவாத இந்த உடம்பின் நிழல்போல, உங்கள் கையில் உள்ள பொருளும் உங்களுக்கு, நீங்கள் செல்லப் போகின்ற இறுதிப் பயணத்துக்கு உதவாது, எனவே, முருகப் பெருமானை நினைந்து, நொய்யில் பாதி அளவாவது, இல்லை என்று வந்தோருக்குக் கொடுத்து உதவுங்கள் என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான்.

 "வையின் கதிர் வடிவேலோனை வாழ்த்தி, வறிஞர்க்கு என்றும்

நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்கள், நுங்கட்கு இங்ஙன்

வெய்யிற்கு ஒதுங்க உதவா உடம்பின் வெறு நிழல்போல்

கையில் பொருளும் உதவாது காணும் கடைவழிக்கே."                 --- கந்தர் அலங்காரம்.

 

     பின்வரும் பாடல்களையும் இங்கு வைத்து எண்ணி நலம் பெறலாம்...

 "என்பொருள் என் பொருள் என்று சீவன்விடு

    மனமே! ஒன்று இயம்பக் கேளாய்;

உன்பொருள் ஆனால் அதன்மேல் உன்நாமம்

    வரைந்து உளதோ? உன்த(ன்)னோடு

முன்பிறந்து வளர்ந்ததுகொல்? இனி உ(ன்)னைவிட்டு

    அகலாதோ? முதிர்ந்து நீ தான்

பின்பிறக்கும் போது, அதுவும் கூட இறந்

    திடும் கொல்லோ? பேசுவாயே."    --- நீதிநூல்.

என்னுடைய பொருள், என்னுடைய பொருள் என்று உயிரை விடுகின்ற எனது நெஞ்சமே! உனக்கு ஒன்று சொல்லுகின்றேன், கேள். உன்னுடைய பொருளானால் அப்பொருளின் மேல் உனது பெயர் எழுதப்பட்டிருக்கின்றதா? நீ பிறக்கும்போது உன்னுடனேயே அது பிறந்து வளர்ந்ததா?  இனிமேலும் அது உன்னை விட்டு நீங்காதா?  நீ மூப்பு அடைந்து சாவும்பொழுது அதுவும் உன்னோடு கூடச் செத்துவிடுமா? ஆராய்ந்து சொல்வாயாக.

  

"நோக்கு இருந்தும் அந்தகரா, காது இருந்தும்

    செவிடரா, நோய் இல்லாத

வாக்கு இருந்தும் மூகையரா, மதியிருந்தும்

    இல்லாரா, வளரும் கைகால்

போக்கு இருந்தும் முடவரா, உயிர் இருந்தும்

    இல்லாத பூட்சி யாரா

ஆக்கும் இந்தத் தனம், அதனை ஆக்கம் என

    நினைத்தனை நீ அகக் குரங்கே."      --- நீதிநூல். 

      எனது நெஞ்சமாகிய வஞ்சகக் குரங்கே! நீ கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், குற்றமற்ற வாய் இருந்தும் ஊமையாய், அறிவு இருந்தும் மூடனாய், நீண்ட கைகால்கள் இருந்தும் முடவனாய், உயிர் இருந்தும் அது இல்லாத வெற்று உடலினனாய்ப் பயன் இழக்கச் செய்யும்,  இந்தத்  தீப்பொருளை, வளரும் செல்வமாம் வாழ்வு என நினைக்கின்றாய்.

"வில்லது வளைந்தது என்றும், 

வேழம்அது உறங்கிற்று என்றும்

வல்லியம் பதுங்கிற்று என்றும் 

வளர்கடா பிந்திற்று என்றும்

புல்லர்தம் சொல்லுக்கு அஞ்சிப் 

பொறுத்தனர் பெரியோர் என்று

நல்லது என்று இருக்க வேண்டா 

நஞ்சு எனக் கருதலாமே." --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

உலகத்தவர்களே! பகைவரைக் கொல்வதற்கு வளைக்கப்பட்டு இருக்கும் வில்லைப் பார்த்து, இந்த வில்லானது வளைந்து போனது அது தீங்கு செய்யாது என்றும்; காலம் பார்த்துத் தனது பகையை முடிக்கக் கருதி உறங்குகின்ற யானையைப் பார்த்து, இந்த யானையானது உறங்கிவிட்டது. அதனால், அது தீங்கு செய்யாது என்றும், ஒரு விலங்கைக் கொல்வதற்குக் காலம் பார்த்துப் பதுங்கிக் கிடக்கும் புலியைப் பார்த்து, இந்தப் புலியானது பதுங்கி விட்டது அதனால் இது தீங்கு செய்யாது என்றும், தனது பகையின் மேல் பாய்வதற்காக ஓடி வந்து பின்னிடுகின்ற ஆட்டுக் கடாவைப் பார்த்து, இந்த ஆட்டுக்கடாவானது பாய்வதை விடுத்து, பின்னே சென்று விட்டது அதனால் இது பின்னும் பாய்ந்து வந்து தீங்கு செய்யாது என்றும், தம்மை நிந்திப்போர் தாமாகவே கெட்டுப் போவார்கள் என்பதை அறிந்து, கீழ்மக்களின் நிந்தனையைப் பொறுத்துக் கொண்டு வாளா இருக்கும் பெரியோர்களைப் பார்த்து, இந்தப் பெரியவர்கள் கீழ்மக்களின் சொற்களுக்குப் பயந்தே பொறுத்துக் கொண்டார்கள். எனவே, இவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள் என்றும், எண்ணிக் கொண்டு, இச் செய்கைகளால் வருவது நன்மையே என்று முடிவு கட்டி இருந்துவிட வேண்டாம். இவற்றால் வருவது நஞ்சைப் போன்ற கேடுதான் என்று எண்ணலாம்.

எனவே, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கி, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக இருக்கும் பெரியவர்களை அவமதித்தால் கேடு நிச்சயம் என்பதை அறிதல் வேண்டும்.




பொது --- 1068. முதலி யாக்கையும்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

முதலி யாக்கையும் (பொது)


முருகா! 

'வானுலகை ஆள வாராய்' என அடியேனுக்கு அருளாய்.


தனன தாத்தன தனன தாத்தன

     தானா தானா தானா தானா ...... தனதான


முதலி யாக்கையு மிளமை நீத்தற

     மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம்


முறையி டாப்படு பறைக ளார்த்தெழ

     மூடா வீடூ டேகேள் கோகோ ...... எனநோவ


மதலை கூப்பிட மனைவி கூப்பிட

     மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய


மறலி யூர்ப்புகு மரண யாத்திரை

     வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும்


புதல றாப்புன எயினர் கூக்குரல்

     போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப்


பொருது தாக்கிய வயப ராக்ரம

     பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங்


குதலை வாய்க்குரு பரச டாக்ஷர

     கோடா ரூபா ரூபா பாரீ ...... சதவேள்விக்


குலிச பார்த்திப னுலகு காத்தருள்

     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


முதலி யாக்கையும், இளமை நீத்து அற

     மூவா தாராகா ஆதாரா ...... என ஞாலம்


முறை இடாப் படு பறைகள் ஆர்த்து எழ,

     மூடா வீடு ஊடே கேள் கோகோ ...... என நோவ,


மதலை கூப்பிட, மனைவி கூப்பிட,

     மாதா மோதா வீழா, வாழ்வே ...... என மாய


மறலி ஊர்ப் புகும் மரண யாத்திரை

     வாரா, வான் ஆள் போம்  நாம், நீ மீள் ...... எனவேணும்.


புதல் அறாப் புன எயினர் கூக்குரல்

     போகா நாடார் பாராவார ...... ஆர் அசுர் ஓடப்


பொருது தாக்கிய, வய பராக்ரம

     பூபாலா! நீபா! பாலா! தா ...... தையும் ஓதும்


குதலை வாய்க் குருபர! சடாட்சர!

     கோடா ரூப அரூபா, பார் ஈ, ...... சதவேள்விக்


குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்

     கோவே! தேவே! வேளே! வானோர் ...... பெருமாளே.


பதவுரை

புதல் அறாப் புன எயினர் கூக்குரல் போகா நாடார் --- புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருந்து கூக்குரல் இடும் வேடர்களும்,

பாராவார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய பராக்ரம --- கடல் போலப் பெருக வந்த அசுரர் சேனைகளும் பயந்து ஓட, அவர்களுடன் போர் புரிந்து தாக்கி எதிர்த்த வெற்றிவீரரே!

பூபாலா --- பூமியைக் காப்பவரே!

நீபா --- கடப்பமலர் மாலை அணிந்தவரே!

பாலா --- குழந்தையே!

தாதையும் ஓதும் குதலை வாய்க் குருபர ---  தந்தையாகிய சிவபரம்பொருளும் கற்கும்படி ஓதிய மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரரே!

சடாட்சர கோடு ஆர் ரூபா --- ஆறெழுத்து வடிவமாக உள்ளவரே!

அரூபா --- வடிவம் இல்லாதவரே!

பார் ஈ --- உலகத்தை ஈந்தவரே!

சத வேள்விக் குலிச பார்த்திபன் உலகு காத்து அருள் கோவே --- நூறு அசுவமேத வேள்விகளை முடித்தவனும், வச்சிராயுதம் உடையவனும் ஆகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவரே!

தேவே --- கடவுளே!

வேளே --- செவேள் பரமரே!

வானோர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே! 

முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா --- உயிர் வாழ்க்கைக்கு முதன்மையான உடல் இளமை நீங்கி முதுமையை அடையும் வரை,

தாராக ஆதாரா என ஞாலம் முறை இடா --- வாழ்க்கைக்குப் பற்றுகோடாக இருந்தவரே (இப்பொழுது உயிர் உடலில் நீங்கியதே) என்று உலகவர்கள் முறையிட,  

படு பறைகள் ஆர்த்து எழ --- ஒலிக்கின்ற பறைகள் ஆரவாரம் செய்ய,

மூடா --- பிணத்தைத் துணியால் மூடி, 

வீடு ஊடே கேள் கோ கோ என நோவ --- வீட்டுக்குள்ளே உறவினர் கோகோ என்று கூச்சலிட்டு மனம் வருந்த,

மதலை கூப்பிட --- பிள்ளைகள் அழ,

மனைவி கூப்பிட --- மனைவி அழ,

மாதா மோதா வீழா வாழ்வே என --- தாய் (தலையிலும் மார்பிலும்) அடித்துக் கொண்டு விழுந்து, என் செல்வமே என்று அலற,

மாய மறலி ஊர்ப் புகும் மரண யாத்திரை வாரா --- எமனுடைய ஊருக்குச் செல்லும் மரண யாத்திரை எனக்கு வாரா வகைக்கு,

வான் ஆள் போ(ம்) நாம் --- அடியேன் போய் வானுலகை ஆள்வதற்கு,

நீ மீள் என வேணும் --- "நீ வா" என்று அருள் புரிய வரவேண்டும்.

பொழிப்புரை

புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில் இருந்து கூக்குரல் இடும் வேடர்களும், கடல் போலப் பெருக வந்த அசுரர் சேனைகளும் பயந்து ஓட, அவர்களுடன் போர் புரிந்து தாக்கி எதிர்த்த வெற்றிவீரரே!

பூமியைக் காப்பவரே! கடப்பமலர் மாலை அணிந்தவரே! குழந்தையே! தந்தையாகிய சிவபரம்பொருளும் கற்கும்படி ஓதிய மழலைச் சொற்கள் நிறைந்த திருவாயை உடைய குருபரரே!ஆறெழுத்து வடிவமாக உள்ளவரே! வடிவம் இல்லாதவரே! உலகத்தை ஈந்தவரே! நூறு அசுவமேத வேள்விகளை முடித்தவனும், வச்சிராயுதம் உடையவனும் ஆகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக் காத்தருளிய தலைவரே! கடவுளே! செவேள் பரமரே! தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே! 

உயிர் வாழ்க்கைக்கு முதன்மையான உடல் இளமை நீங்கி முதுமையை அடையும் வரை, வாழ்க்கைக்குப் பற்றுகோடாக இருந்தவரே! இப்பொழுது உமது உயிர் உடலில் இருந்து நீங்கியதே என்று உலகவர்கள் முறையிட,  ஒலிக்கின்ற பறைகள் ஆரவாரம் செய்ய, பிணத்தைத் துணியால் மூடி, வீட்டுக்குள்ளே உறவினர் கோகோ என்று கூச்சலிட்டு மனம் வருந்த, பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் தலையிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு விழுந்து, 'என் செல்வமே' என்று அலற, எமனுடைய ஊருக்குச் செல்லும் மரண யாத்திரை எனக்கு வாரா வகைக்கு, அடியேன் போய் வானுலகை ஆள்வதற்கு, "நீ வா" என்று அருள் புரிய வரவேண்டும்.

விரிவுரை

முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா --- 

உயிர் வாழ்க்கைக்கு முதன்மையாக இறையருளால் வாய்த்த இந்த  உடல் இளமைத்த் தன்மையில் இருந்து சிறிது சிறிதாக மாறி, முதுமை நிலையை வந்து அடையும்.


தாராக ஆதாரா என ஞாலம் முறை இடா --- 

தாரகம் --- கடப்பதற்கு உரிய கருவி.

ஆதாரம் --- பற்றுக் கோடு. நிலைக்களம்.


வீடு ஊடே கேள் கோ கோ என நோவ --- 

"கூகா என என் கிளை கூடி அழ" என்று அடிகளார் கந்தர் அனுபூதியில் அருளியது காண்க.


மறலி ஊர்ப் புகும் மரண யாத்திரை வாரா --- 

மறலி - இயமன். 

உயிரானது உடம்பை விட்டு இயமன் உலகுக்குச் செல்லுகின்ற யாத்திரை மரண யாத்திரை எனப்படும். "தொலையா வழி" என்பார் அருணகிரிநாதர்.


பாராவார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய பராக்ரம --- 

பாராவாரம் - கடல். கடல் போலப் பெருகி வந்த அசுரர் சேனையைப் போர் புரிந்து தாக்கிய பராக்கிரமம் உடையவர் முருகப் பெருமான்.


தாதையும் ஓதும் குதலை வாய்க் குருபர --- 

குதலை - மழலைச் சொல். இனிய மொழி.

சிவபெருமான் முருகப் பெருமானை வழிபட்டு உபதேசம் பெற்ற வரலாற்றினைத் தணிகைப் புராணம் கூறுமாறு காண்க.

திருக்கயிலை மலையின்கண் குமாரக் கடவுள் வீற்றிருந்த போது, சிவ வழிபாட்டின் பொருட்டு வந்த தேவர்கள் அனைவரும் முருகப் பெருமானை வனங்கிச் சென்றனர். அங்ஙனம் வணங்காது சென்ற பிரமனை அழைத்து பிரணவப் பொருளை வினாவி, அதனை உரைக்காது விழித்த அம்புயனை அறுமுகனார் சிறைப்படுத்தி, முத்தொழிலும் புரிந்து, தாமே மூவர்க்கும் முதல்வன் என்பதை மலையிடை வைத்த மணிவிளக்கு என வெளிப்படுத்தினர்.

பின்னர் ஒருகால் கந்தாசலத் திருக்கோயிலின்கண் இருந்த கந்தக் கடவுள், தந்தையாராகிய தழல் மேனியாரைத் தெரிசிக்கச் சென்றனர். பொன்னார்மேனிப் புரிசடை அண்ணல் “புதல்வ! இங்கு வருக” என்று எடுத்து அணைத்து உச்சி மோந்து முதுகு தைவந்து “குமரா! நின் பெருமையை உலகம் எவ்வாறு அறியும். மறைகளால் மனத்தால் வாக்கால் அளக்க ஒண்ணாத மாப் பெருந்தகைமை உடைய நின்னை உள்ளபடி உணரவல்லார் யாவர்?” என்று புகழ்ந்து, அதனை விளக்குவான் உன்னி எத்திறப்பட்டோர்க்கும் குருநாதன் இன்றி மெய்ப்பொருளை உணர முடியாது என்பதையும், குரு அவசியம் இருத்தல் வேண்டு மென்பதையும் உலகிற்கு உணர்த்துமாறு திருவுளங்கொண்டு, புன்முறுவல் பூத்த முகத்தினராய் வரைபகவெறிந்த வள்ளலை நோக்கி,

"அமரர் வணங்கும் குமர நாயக! அறியாமையானாதல், உரிமைக் குறித்தாதல் நட்பினர் மாட்டும் பிழைகள் தோன்றல் இயற்கை. அறிவின் மிக்க ஆன்றோர் அறிந்து ஒரு பிழையும் செய்கிலர். அறிவிற் குறைந்த சிறியோர் அறிந்தும், அறியாமையானும் பெரும் பிழைகளையும் செய்வர். அவ்வத் திறங்களின் உண்மைகளை அறிந்த பெரியோர் அது பற்றிச் சினந்து வயிரம் கொள்ளார். ஆதலால் அம்புயனும் அறிவின்மையால் நின்னைக் கண்டு வணக்கம் புரியாது சென்றனன். அவனைக் குட்டி பல நாட்களாகச் சிறையில் இருத்தினாய். எல்லார்க்கும் செய்யும் வணக்கமும் நினக்கே எய்தும் தகையது; அறு சமயத்தார்க்கும் நீயே தலைவன்” என்று எம்பிரானார் இனிது கூறினர். 

எந்தை கந்தவேள் இளநகைக் கொண்டு “தந்தையே! ஓம் எழுத்தின் உட்பொருளை உணராப் பிரமன் உலகங்களைச் சிருட்டி செய்யும் வல்லவனாதல் எவ்வாறு? அங்ஙனம் அறியாதவனுக்குச் சிருட்டித் தொழில் எவ்வாறு கொடுக்கலாம்?” என்றனர்.

சிவபெருமான் “மைந்த! நீ அதன் பொருளைக் கூறுவாய்” என்ன, குன்று எறிந்த குமாரக் கடவுள் “அண்ணலே! எந்தப் பொருளையும் உபதேச முறையினால் அன்றி உரைத்தல் தகாது. காலம் இடம் என்பன அறிந்து, முறையினால் கழறவல்லேம்” என்றனர். 

கேட்டு “செல்வக் குமர! உண்மையே உரைத்தனை; ஞானபோத உபதேசப் பொருள் கேட்பதற்குச் சிறந்தது என்னும் மாசி மாதத்து மகநாள் இதோ வருகிறது; நீ எஞ்ஞான்றும் நீங்காது விருப்பமுடன் அமருந் தணிகைவெற்பை அடைகின்றோம்” என்று கணங்களுடன் புறப்பட்டு ஏறூர்ந்து தணிகை மாமலையைச் சார்ந்தனர். குமாரக் கடவுள் தோன்றாமைக் கண்டு, பிரணவப் பொருள் முதலிய உண்மை உபதேசமெல்லாம் தவத்தாலும் வழிபாட்டாலுமே கிடைக்கற்பால என்று உலகங்கண்டு தெளிந்து உய்யுமாறு தவம் புரிய ஆரம்பித்தனர். ஞானசத்திதரக் கடவுளாரின் அத்தாணி மண்டபம் எனப்படும் திருத்தணிமலைச் சாரலின் வடகீழ்ப்பால் சென்று, தம் புரிசடைத் தூங்க, வேற்படை விமலனை உள்ளத்தில் நிறுவி ஒரு கணப் பொழுது தவம் புரிந்தனர். எல்லாம் வல்ல இறைவன் அங்ஙனம் ஒரு கணப் பொழுது தவம் புரிந்ததனால், அத்தணிகைமலை "கணிக வெற்பு" எனப் பெயர் பெற்றது என்பர்.

கண்ணுதற் கடவுள் இங்ஙனம் ஒரு கணம் தவம் இயற்ற, கதிர் வேலண்ணல் தோன்றலும், ஆலம் உண்ட நீலகண்டப் பெருமான் எழுந்து குமரனை வணங்கி, வடதிசை நோக்கி நின்று, பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு, சீடனது இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தும் பொருட்டு சிஷ்ய பாவமாக நின்று வந்தனை வழிபாடு செய்து, பிரணவ உபதேசம் பெற்றனர்.


எதிர் உறும் குமரனை இரும் தவிசு ஏற்றி, அங்கு

அதிர்கழல் வந்தனை அதனொடும் தாழ்வயின்

சதுர்பட வைகுபு, தாவரும் பிரணவ

முதுபொருள் செறிவு எலாம் மொழிதரக் கேட்டனன்.  --- தணிகைப் புராணம்.


“நாத போற்றி என, முது தாதை கேட்க, அநுபவ

 ஞான வார்த்தை அருளிய பெருமாளே."   --- (ஆலமேற்ற) திருப்புகழ்.


“நாதா குமரா நம என்று அரனார்

 ஓதாய் என ஓதியது எப் பொருள்தான்”   --- கந்தர்அநுபூதி 


“தமிழ்விரக, உயர்பரம சங்கரன் கும்பிடுந் தம்பிரானே” --- (கொடியனைய) திருப்புகழ்.


மறிமான் உகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு

தந்த மதியாளா.... --- (விறல்மாரன்) திருப்புகழ்.


சிவனார் மனம் குளிர, உபதேச மந்த்ரம் இரு

செவி மீதிலும் பகர்செய் குருநாதா... --- திருப்புகழ்.


பிரணவப் பொருள் வாய்விட்டுச் சொல்ல வொண்ணாதது; ஆதலால் சிவபெருமான் கல்லாலின் கீழ் நால்வருக்கும் தமது செங்கரத்தால் சின் முத்திரையைக் காட்டி உபதேசித்தார். ஆனால், அறுமுகச் சிவனார் அவ்வாறு சின் முத்திரையைக் காட்டி உணர்த்தியதோடு வாய்விட்டும் இனிது கூறி உபதேசித்தருளினார்.


அரவு புனிதரும் வழிபட

மழலை மொழிகோடு தெளிதர ஒளிதிகழ்

அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே.  --- (குமரகுருபரகுணதர) திருப்புகழ்.


தேவதேவன் அத்தகைய பெருமான். சிஷ்யபாவத்தை உணர்த்தி உலகத்தை உய்விக்கும் பருட்டும், தனக்குத்தானே மகனாகி, தனக்குத் தானே உபதேசித்துக் கொண்ட ஒரு அருள் நாடகம் இது. உண்மையிலே சிவபெருமான் உணர முருகப் பெருமான் உபதேசித்தார் என்று எண்ணுதல் கூடாது.


தனக்குத் தானே மகனாகிய தத்துவன்,

தனக்குத் தானே ஒரு தாவரு குருவுமாய்,

தனக்குத் தானே அருள் தத்துவம் கேட்டலும்

தனக்குத் தான் நிகரினான், தழங்கி நின்றாடினான். ---  தணிகைப் புராணம்.


மின் இடை, செம் துவர் வாய், கரும் கண், 

வெள் நகை, பண் அமர் மென் மொழியீர்!

என்னுடை ஆர் அமுது, எங்கள் அப்பன், 

எம்பெருமான், இமவான் மகட்குத்

தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன், 

தமையன், எம் ஐயன தாள்கள் பாடி,

பொன்னுடைப் பூண் முலை மங்கை நல்லீர்! 

பொன் திருச் சுண்ணம் இடித்தும், நாமே!

என்னும் திருவாசகப் பாடலாலும்,  சிவபெருமான் தனக்குத் தானே மகன் ஆகி, உபதேசம் பெறும் முறைமையை உலகோர்க்கு விளக்கியதாகக் கொள்ளலாம்.

அறிவு நோக்கத்தால் காரியபபடுவது சிவதத்துவம். பின் ஆற்றல் நோக்கத்தால் காரியப்படுவது சத்தி தத்துவம். இறைவன் சிவமும் சத்தியுமாய் நின்று உயிர்களுக்குத் தனுகரண புவன போகங்களைக் கூட்டுவிக்கிறான். ஆதலின், ‘இமவான் மகட்குக் கேள்வன்’ என்றார். அவ்வாறு கூட்டும்போது முதன்முதலில் சுத்தமாயையினின்றும், முறையே சிவம், சத்தி, சதாசிவம், மகேசுவரம், சுத்த வித்தை ஆகிய தத்துவங்கள் தோன்றுகின்றன. சத்தியினின்றும் சதாசிவம் தோன்றலால், சத்திக்குச் சிவன் மகன் என்றும், சத்தி சிவத்தினின்றும் தோன்றலால் தகப்பன் என்றும், சிவமும் சத்தியும் சுத்த மாயையினின்றும் தோன்றுவன என்னும் முறை பற்றித் தமையன் என்றும் கூறினார். இங்குக் கூறப்பட்ட சிவம் தடத்த சிவமேயன்றிச் சொரூப சிவம் அல்ல.

திருக்கோவையாரிலும்,


தவளத்த நீறு அணியும் தடம் தோள் அண்ணல் தன் ஒருபால்

அவள் அத்தனாம், மகனாம், தில்லையான் அன்று உரித்ததுஅன்ன

கவளத்த யானை கடிந்தார் கரத்த கண் ஆர்தழையும்

துவளத் தகுவனவோ சுரும்பு ஆர்குழல் தூமொழியே.


என வருவதும் அறிக. `சிவ தத்துவத்தினின்றும் சத்தி தத்துவம் தோன்றலின் அவள் அத்தனாம் என்றும், சத்தி தத்துவத்தினின்றும் சதாசிவ தத்துவம் தோன்றலின் மகனாம் என்றும் கூறினார்.


வாயும் மனமும் கடந்த மனோன்மனி

பேயும் கணமும் பெரிது உடைப் பெண்பிள்ளை

ஆயும் அறிவும் கடந்த அரனுக்குத்

தாயும் மகளும் நல் தாரமும் ஆமே. --- திருமந்திரம்.


கனகம் ஆர் கவின்செய் மன்றில்

அனக நாடகற்கு எம் அன்னை

மனைவி தாய் தங்கை மகள்.... --- குமரகுருபரர்.


பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ணம்

காத்தவளே, பின் கரந்தவளே, கறைக் கண்டனுக்கு

மூத்தவளே, என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே,

மாத்தவளே உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே. --- அபிராமி அந்தாதி.


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்,

அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள், ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம்,

துவளேன் இனி, ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே. --- அபிராமி அந்தாதி.


சிவம்சத்தி தன்னை ஈன்றும், சத்திதான் சிவத்தை ஈன்றும்,

உவந்து இருவரும் புணர்ந்து, இங்கு உலகுஉயிர் எல்லாம்ஈன்றும்

பவன் பிரமசாரி ஆகும், பால்மொழி கன்னி ஆகும்,

தவம் தரு ஞானத்தோர்க்கு இத் தன்மைதான் தெரியும் அன்றே. --- சிவஞான சித்தியார்.


சடாட்சர கோடு ஆர் ரூபா --- 

சடாட்சரம் - ஆறெழுத்து. அது "குமாராய நம" என்பது.  ஆறெழுத்து வடிவமாக உள்ளான் பெருமான்.

கோடு - வளைவு. எழுத்துக்கள் வளைந்து வளைந்து உள்ளன.


கருத்துரை

முருகா! 'வானுலகை ஆள வாராய்' என அடியேனுக்கு அருளாய்.


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...