கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே

 கடவுள் இல்லை என்பதும் ஒரு மதமே

-----

மதம் என்னும் சொல்லுக்கு, கருத்து, கொள்கை, அறிவு, போதனை, பெற்றதைப் பெரிதாக மதிப்பது என்ற பொருள்கள் உண்டு. கருதுவது கருத்து, கொள்ளுவது கொள்கை, அறிவது அறிவு, போதிப்பது போதனை ஆகும்.

உலகில் பலவகையான மதங்கள் உண்டு. நமது தமிழகத்திலும் பலவகையான மதங்கள் இருந்தன. அவைகளின் கொள்கை வேறு வேறாக இருந்தது. கொள்கைகளால் பிணங்குவது மதவாதிகளின் இயல்பு. எனவேதானே, "சமயவாதகிள் தத்தம் மதங்களே அமைவதாக அரற்றி மலைந்தனர்" என்றார் மணிவாசகப் பெருமான். இந்த சமயவாதிகளைப் பார்த்து, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூல நாயனார். சமயகோடிக் எல்லாம் தம்தெய்வம் எம்தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கிடவும் நின்றது" என்று தாயுமான அடிகளாரும், "பேர் உற்ற உலகில் உறு சமயமத நெறி எல்லாம் பேய்ப்பிடிப்பு உற்ற, பிச்சுப்பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது, உயிர்கள் பல பேதமுற்று அங்கும் இங்கும் போர் உற்று இறந்து வீண் போயினார்" என்று வள்ளல்பெருமானும் கூறி அருளினர்.

எனவே, வாதம் புரிந்து, உண்மைப் பொருஉளை உணராமல், வாழ்நாளை வீணாக்குதல் கூடாது. சமயங்களின் உண்மை நிலையை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அப்பர் பெருமானுக்கு அவ்வாறு உணர்ந்து கொள்ளத் திருவருள் வாய்க்காமையால், சைவத்தை விடுத்து சமணத்தைச் சார்ந்தார். "சமயங்கள் ஆனவற்றின் நல் ஆறு தெரிந்து உணர நம்பர் அருளாமையினால், கொல்லாமை மறைந்து உறையும் அமண் ணமயம் குறுகினார்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். மணிமேகலை மாதவன் வடிவத்தில் வஞ்சி நகரில் இருந்து, பல்வகைச் சமய வாதிகளையும் கண்டு, அவரவர் கடைப்பிடியாகக் கொண்டு உள்ள சமயப் பொருட்களைக் கேட்க விரும்பி, அவரிடத்தில் சென்று, அளவைவாதி முதல் பூதவாதி ஈறாகவுள்ள அனைவரையும் கேட்க, அவர்கள் தம் சமயக் கருத்துக்களை உரைத்தனர் என்று மணிமேகலைக் காப்பியத்தில் "சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை" மூலமாக அறியக் கிடக்கிறது. சமயச்சார்பு உடையவர்களிடத்தில் இந்த மனப்பாங்கு அமையாது. உண்மை நிலையை உணர்ந்து கொள்ளும் வேட்கை உடையோர்க்கே இந்த நிலை வாய்க்கும்.

"பூதவாதம்" என்னும் சமயம் "பொருள்முதல் வாதம்" என்றும் "உலகாயதம்" என்றும் சொல்லப்படும். இந்த நாத்திகவாதம் என்பதும் ஒரு மதமாகவே இருந்தது. அது இப்போது உருவானது அல்ல என்பதை அறிதல் வேண்டும்.

பூதவாதி தமது கருத்தைச் சொன்னதாக "மணிமேலை" என்னும் காப்பியத்தில் பின்வருமாறு கூறப்பட்டு உள்ளது

"தாதகிப் பூவும் கட்டியும் இட்டு

மற்றும் கூட்ட மதுக்களி பிறந்தாங்கு,

உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்

அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின்

வெவ்வேறு பிரியும், பறை ஓசையில்கெடும்"

இதன் பொருள் ---

ஆத்திப் பூவையும் கருப்புக் (வெல்லக்) கட்டியையும் கூட்டி, வேறு பிற பொருள்களையும் கலந்தபோது, களிப்பினை உண்டாக்குகின்ற கள் உண்டானது போல, பொருந்துகின்ற பூதங்களின் கூட்டத்தால் உணர்வு பிறக்கும். அவ்வாறு தோன்றிய உணர்வும், அந்த அந்தப் பூதங்களின் கூட்டம் கலைந்து நீங்குமிடத்து,  வேறுவேறாகப் பிரிந்து, பறையில் எழுந்த ஒசையானது சென்று சென்று தேய்ந்து கெடுவது போலத் தேய்ந்து தேய்ந்து தத்தம் பூதமுதலொடு ஒன்றிவிடும்.

ஆத்திப் பூவினோடு பிற பொருள்களைக் கலந்தால், கள் உண்டாகும், அதனால் களிப்பு உண்டாகும் என்றது, பூதங்களின் கூட்டுறவால் உணர்வு பிறக்கும் என்பது உலகாயதர் கொள்கை. மேலும் காண்க.

"உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்,

உயிர் இல்லாத உணர்வுஇல் பூதமும்,

அவ்வப் பூத வழி அவை பிறக்கும்,

மெய்வகை இதுவே; வேறுஉரை விகற்பமும்

உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே;

கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்,

இம்மையும் இம்மைப் பயனும் இப்பிறப்பே,

பொய்ம்மை மறுமை உண்டாய் வினை துய்த்தல்"

இதன் பொருள் ---

உயிர்த் தோற்றத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வுடைய பூதக் கூறும், உடம்பின் ஆக்கத்துக்கு ஏதுவாக அதனோடு கூட்டப்பட்ட உணர்வில்லாத அப்பூதக் கூறுகள், அவ்வப் பூதங்களின் வழியாகவே தோன்றும். உண்மைநெறி இதுவே ஆகும்.  இவற்றின் வேறாகக் கூறப்படும் பொருளும் தத்துவங்களும் உலோகாயதர் மேற்கொண்டு கூறுவனவே ஆகும். காட்சி அளவை அல்லது, வேறே கருத்து முதலியன நிலைபெறாமையின் அவற்றைக் கொள்ளவில்லை. இவ்வாழ்வும் இவ்வாழ்வில் பெறும் இன்பமும் துன்பமும் இப்பிறப்போடே கழிந்து போவன. மறுபிறப்பு உண்டு என்றும், இப்பிறப்பில் செய்யப்படும் வினைப் பயனை மறுபிறப்பில் அனுபவித்தல் வேண்டும் என்றும் கூறுவது பொய் (என்று பூதவாதி கூறினானாக).

எனவே, கடவுள் இல்லை என்று சொல்வதும் ஒருவகைச் சமயமே ஆகும். இதற்கு "சார்வாகம்" என்று ஒரு பெயரும் உண்டு. இது நாத்திக வாதம் ஆகும். கடவுள் இல்லை என்கிற கொள்கை உடையவர்கள், உலகாயதர்கள். இவர்கள் காண்டல், கருதல், உரை என்கின்ற மூன்று அளவைகளுள், காண்டல் என்கின்ற பிரத்தியட்ச அளவை மட்டுமே தமக்கு உடன்பாடு எனக் கொண்டு, கண்ணுக்குப் புலனாகின்ற நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்களுமே எப்போதும் உள்ள பொருள் என்று ஒத்துக் கொள்ளுகின்றவர்கள். முதலில் சொல்லப்படுகின்ற ஆகாயம் என்பது கண்ணுக்குப் புலப்படாமையால், அதை உலகாயதர், ஒரு பூதமாக ஏற்க மறுக்கின்றனர். நிலம், நீர், தீ, காற்று என்னும் நான்கு பூதங்களின் சம்பந்தத்தால் ஆகியதே உடம்பு என்கின்றனர். அது எது போல என்றால், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் ஒருவன் வாயில் இட்டு உண்கின்ற போது, செந்நிறம் தோன்றுவது போல, இந்த நான்கு பூதங்களின் சேர்க்கையால், அவற்றிற்கு வேறாகிய ஓர் உணர்வு உண்டு என்றும், அந்த உணர்ச்சியானது உடம்பு வளருந்தோறும் வளர்ந்து, தேயும்தோறும் தேய்ந்து போவது என்பது. 

உடம்பிற்கு வேறாக உயிர் என்பது உண்டு என்பது பொய் என்பது அவர் கூற்று. அல்லாமலும், உடம்பிற்கு நல்வினை தீவினை என்கின்ற இருவினையால் வரும் இன்ப துன்பங்கள் என்பதும் பொய்.  இன்ப துன்பங்கள் உடம்பிற்கு இயல்பாகவே உள்ளதால், இருவினை என்பதும் பொய் என்பது அவர் கூற்று. கடவுள் உண்டு என்பதும் பொய் என்பார் அவர். மயிலுக்கு அழகை ஊட்டியவர் யாரும் இல்லை. குயிலின் குரலுக்கு இனிமையை ஊட்டினவரும் யாரும் இல்லை. அவை இயல்பாகவே அமைந்துள்ளது போல், இந்த உலகமும் இயற்கையாகவே அமைந்து உள்ளது. இல்லாத கடவுளை உண்டு என்று சொல்லும் மார்க்கத்தைத் தழுவி, மோட்ச இன்பத்தை அடைவோம் என்னும் கொள்கையும் பொய். ஆனால், தான் கருதுகின்றபடி, இயல்பாகவே அமைந்த இந்த உலகத்தில், வாழுகின்ற காலத்தில் இளம்பருவம் உடைய பெண்களை மணந்து, நல்ல உணவை உண்டு, நல்ல ஆடைகளை உடுத்து, போகத்துடன் வாழ்வதே மோட்ச இன்பம் என்பது அவர் கொள்கை. இந்த இன்பத்தைப் பெறாமல், பகைவராலும், நோயாலும், வறுமையாலும் வருந்துவதே நரகத் துன்பம் என்பது உலகாயதர் கொள்கை. 

இந்த உலகாயதக் கொள்கை மக்களை எளிதில் மயக்கும் ஆற்றல் படைத்தது. எனவே தான், "உலோகாயதன் எனும் ஒண் திறல் பாம்பின் கலாபேதத்த கடுவிடம்" என்றார் மணிவாசகப் பெருமான். 

மேலும், இவ்விதம் கூறிய நான்கு பூதங்களின் கூட்டுறவில், பிராணவாயு என்பது நீங்குமானால், முன் வளர்ந்த உணர்வு என்பது நீங்கி, உடம்பு என்பது நாசம் ஆகும். அதுவே, வீடு என்கின்ற மோட்சத்தை அடைகின்ற பேறு ஆகும். எனவே, இந்த உண்மையை உணராதவர்கள்,  மறுபிறவி உண்டு என்றும், வீடு என்பது உண்டு என்றும் சொல்லி, தவம் கிடந்து, பட்டினி கிடந்து, உடலை வருத்துகின்றனர். அல்லாமலும், பொன் தானம், நிலத் தானம், உணவுத் தானம் என்பவர்கள் வறுமமை நோயால் பீடிக்கப்பட்டவர்கள் ஆவர். ஆலயம், தண்ணீர்ப்பந்தல், கிணறு, சோலை, குளம் முதலியவைகளை தருமத்துக்கு அமைப்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுகின்ற நூல்கள், வழிச் செல்பவர்கள் தாம் செல்லுகின்ற காலத்து இளைப்பு அடையாமலும், உடம்பு வருந்தாமலும், பொருள் செலவு இல்லாமலும், தங்களின் பயணத்தை முடிப்பதன் நிமித்தம் எழுதிய நூல்கள் ஆகும் என்பவர் உலகாயதர். ஆகையால், இவைகளை எல்லாம் விட்டுவிட்டு, மனம் விரும்பும் உணவு உண்டு, நல்ல வத்திரம் அணிந்து, இளம்பெண்களோடு சுகித்து வாழ்வதே வாழ்க்கையின் பயன் என்பது இவர்தம் கொள்கை.

ஆனால், இவர்களை மறுத்து, கடவுள் உண்டு என்ற நிறுவுகின்றவர்கள் சொல்லுவது, ஒருவன் பிறந்தவுடன் தாய் தந்தையர் இறந்து போய் இருப்பார்களானால், அவர்களைக் காணாததாலேயே, தாய்தந்தையர் இல்லை என்று கூறுவது போலத்தான், கண்ணுக்குப் புலப்படாத ஆகாயத்தை இல்லை என்று கூறுவது. மேகமானது திரண்டு, முழங்கி, மின்னி, வானில் பரந்து எழுந்து அதனால் மழை பொழிவதைக் காண்ணால் காண்கின்றோம். இது காட்சி அளவை மட்டுமன்றி கருதல் அளவையும் ஆகும். வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய மூன்றும் கூடி, சிவப்பு என்னும் தன்மையை உண்டாக்குவதற்கு, அவைகளை மென்று தின்கின்ற ஒருவன் வேண்டும் என்பதைப் போல, அவைகளை உண்டாக்குவதற்கும் ஒருவன் வேண்டும் என்று ஆத்திகர்கள் கூறுகின்றனர்.  

இன்னும் பிற வாதங்களும் உண்டு. நான் என்னும் புத்திக்கு விடயமாய் இருப்பது ஆன்மா. நான் மனிதன்,  நான் பார்ப்பான்,  நான் பருத்தேன், நான் இளைத்தேன் என்னும் அனுபவத்தினால், தேகத்திலேயே நான் என்னும் புத்தி உண்டாவதால், தேகமே ஆன்மா. ஆபத்து நேர்ந்த போது தேகத்திலேயே அபிமானம் உண்டாவதால், அதைவிடப் பிரியமான பொருள் வேறு இல்லை. தேகத்தில் உள்ள விருப்பத்தின் பொருட்டே, பிறரிடத்து விருப்பம் உண்டாகின்றது. எனவே, உடம்பைக் காப்பாற்றுதல், அலங்கரித்தல் முதலியனவே புருஷார்த்தங்கள். ஆகாயம், ஊழ், கடவுள், பிறவி என்பது இல்லை. பூதங்களில் கூட்டுறவால் உண்டாவது உடம்பு. இதன் மரணமே மோட்சம். இது தேகான்மவாதியின் மதம்.  காணப்படும் இந்த உடம்பு இந்திரியங்கள் இருந்தால் இருக்கின்றது. இல்லாவிட்டால் செத்துப் போகின்றது. எனவே, உடலுக்கு வேறாக உள்ள, இந்திரியமே ஆன்மா என்பது இந்திரியான்மவாதியின் மதம். பிராணவாயு இருந்தால் இந்த உடம்பு இருக்கின்றது. அது நீங்கிப் போனால் அழிகின்றது. எனவே, உடம்பு நிலைத்து இருக்கக் காரணமான பிராணனே ஆன்மா என்பது பிராணான்மவாதியின் மதம். பிராணனுக்கு உணர்ச்சி இல்லை. மனமே ஆன்மா என்பது மனவான்மவாதியின் மதம். மனமானது புத்தியின் வசமாய் இருக்கின்றது. புத்தியின் ஆகாரமே மனம். ஆதலால், புத்தியே ஆன்மா என்பது புத்தியான்மவாதி மதம்.

      அவை எல்லாம் உண்மை அல்ல. மனத் தூய்மைக்கு அவை வழி வகுக்காது. கயமைத் தனத்திற்கே காரணம் ஆகும் என்பதால், கடவுள் இல்லை  என்று  கூறுபவர்களின்  கூட்டுறவு  உண்டாகாதபடி காத்து அருள் புரியுமாறு, தருமமிகு  சென்னையில்  கந்தகோட்டத்தில்  எழுந்தருளி உள்ள  முருகப் பெருமான்  மீது வள்ளல்பெருமான்  பின்வருமாறு பாடினார்.

"பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது, பதிஏது,

பசுஏது, பாசம்ஏது,

பத்திஏது, அடைகின்ற முத்திஏது, அருள்ஏது,

பாவபுண் ணியங்கள் ஏது,

வரம்ஏது, தவம்ஏது, விரதம்ஏது, ஒன்றும்இலை,

மனம்விரும்பு உணவு உண்டு, நல்

வத்திரம் அணிந்து, மட மாதர்தமை நாடி,நறு

மலர்சூடி, விளையாடி,மேல்

கரம்மேவ விட்டு, முலைதொட்டு வாழ்ந்து, அவரொடு

கலந்து மகிழ்கின்ற சுகமே

கண்கண்ட சுகம், இதே கைகண்ட பலன்எனும்

கயவரைக் கூடாது அருள்,

தரம் மேவு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்

தலம் ஓங்கு கந்தவேளே!

தண்முகத் துய்யமணி! உள்முகச் சைவமணி!

சண்முகத் தெய்வமணியே!"

இதன் பொருள் ---

மேன்மை பொருந்திய சென்னைக் கந்தகோட்டத்தில் எழுந்தருளும் கந்தவேளே! தூய மணிகளுள் சைவமணியாம் சண்முகத் தெய்வ மணியே!  பரம் என்பது யாது?  வினையாவது யாது? வினையின் பயன் என்பது யாது? பதி, பசு, பாசம் என்பன யாவை? பத்தி ஆவது யாது? அதனால் அடைகின்ற முத்தி என்பது யாது? அருள் என்பது யாது? பாவ புண்ணியங்கள் யாவை? வரம் என்றும் தவம் என்றும் விரதம் என்றும் கூறுவன ஒன்றும் இல்லை. மனம் ஆசைப்படுகின்ற உணவை உண்டு, நல்ல ஆடை உடுத்து, இளமகளிரை நாடி அடைந்து, மணம் வீசும் பூக்களைச் சூடிப் பல்வகையாக விளையாடி, கைகளை அம்மகளிர் மேல் செலுத்தி அவர்களுடைய முலைகளைப் பற்றி, உடம்போடு உடம்பு கலந்து மகிழ்கின்ற சுகமே கண்கண்ட சுகம். இதுவே வாழ்வின் கைகண்ட பயன் என்று கருதி மொழிகின்ற கீழ் மக்களோடு கூடாதவாறு அருள் புரிவாயாக.

உலோகாயதன் சமய நடை எப்படிப்பட்டது என்பதை தாயுமான அடிகளார் கூறுமாறு காண்க. நடை என்பதன் பொருள் ஒழுக்கம் ஆகும்.

"மின்அனைய பொய்உடலை நிலைஎன்றும், மைஇலகு

        விழிகொண்டு மையல்பூட்டும்

      மின்னார்கள் இன்பமே மெய் என்றும், வளர்மாட

        மேல்வீடு சொர்க்கம் என்றும்,

பொன்னை அழியாது வளர் பொருள் என்று போற்றி, இப்

        பொய்வேடம் மிகுதிகாட்டி,

      பொறை அறிவு துறவு ஈதல் ஆதி நற்குணம் எலாம்

        போக்கிலே போகவிட்டு,

தன்நிகர் இல் உலோபாதி பாழ்ம்பேய் பிடித்திட,

        தரணிமிசை உலோகாயதன்

      சமயநடை சாராமல், வேதாந்த சித்தாந்த

        சமரச சிவாநுபூதி

மன்ன, ஒருசொல் கொண்டு, எனைத் தடுத்து ஆண்டன்பின்

        வாழ்வித்த ஞானகுருவே!

      மந்த்ர குருவே! யோக தந்த்ர குருவே! மூலன்

        மரபில்வரு மௌனகுருவே."

இதன் பொருள் ---

தோன்றி நெடிது நிற்பதுபோலக் காட்டி விரைய மறையும் தன்மை வாய்ந்த மின்னலுக்கு ஒப்பான, நிலையில்லாத பொய்யுடலை அழியாது என்றும், நிலைநிற்பது என்று மைதீ ட்டப்பட்ட கண்களைக் கொண்டு காமுகர்களை மயக்கவலையில் விழும்படி செய்யும் பெண்ணியலார் இன்பமே நிலையான பேரின்பம் என்றும், அப் பெண்களோடு கூடிப் பகட்டாய் வாழ்வதற்கு அமைக்கப்பட்ட மாடமாளிகை, மேல்வீடு நிலாமுற்றம் முதலிய பல டமைந்த வளமையான மனையே கிடைத்தற்கரிய இன்ப ஒளியுலகம் என்றும், இன்பத்திற்கு ஏதுவாகிய பொன்னையும், அப் பொன்னால் தேடப்படும் பண்டங்களாகிய பொருள்களையும் அழியாது வளர்ந்து பெருகும் நிலைப்பொருள் என்றும் மிகவிரும்பி, தமது புன்மையான பொய்க்கோலத்தின் மிகுதிப்பாட்டை மேற்கொள்ள வெளிப்படுத்தி, காம மயக்கில் விட்டில் பூச்சி என வீழ்ந்த ஆடவர் தங்கட்கு இன்றியமையாத பொறுமையும், சிறந்த அறிவும்ன, செருக்கு அற்று நான் எனது என்னும் இருவகைப் பற்றும் நீங்குதலாகிய துறவும், வாழ்வில் பெறத்தக்க ஊதியமாகிய ஈகை முதலிய நற்பண்புகளும் சிறிதும் வந்து பொருந்த இடங்கொடாது மனம்போன போக்கிலே போகவிட்டு, தனக்குத் தானே இணையான உலோபத் தன்மை எனப்படும் பொருட்பற்று ஆகிய பாழான பேய் பிடித்யது ஆட்ட ஆடிட்ட, இவ்வுலகில் உலகாயதனுடைய சமயக் கட்டில் சாராமல் மறை முடிபும் என்னும் வேதாந்தம், திருமுறை முடிபு என்னும் சித்தாந்தம் ஆகியவற்றின் ஒருங்கியைந்த சிவனடிப் பேரின்பத் துய்ப்பு என்னும் நிலைபெற, ஒப்பில்லாத உபதேசம் என்னும் ஒரு சொல்லைக் கொண்டு அடியேனைத் தடுத்தாட்கொணடு இறவா இன்ப) அன்பினால் ஆட்கொண்டு நிலையான வாழ்வில் வாழ்வித்தருளிய குருநாதரே! (வேதாந்தம் - மறை முடிபு. சித்தாந்தம் - முறை முடிபு. சமரசம் - இயைபு.)

உலகாயதர் கொள்கை பற்றிப் பின்னும் அறியலாம்.

"மதிநிலா நுதலாரோடு மணிநிலா முன்றில் ஏறி

முதிர்நிலா எறிப்ப, செவ்வாய் இளநிலா முகிழ்ப்ப, மொய்த்த

கதிர்நிலா வடங்கொள் கொங்கை, கண்கள், மார்பு அகல மூழ்கும்

புது நிலாவிய நன்போகம் விடுவர் புன்சமயத்தோரே."  --- சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொருள் ---

பூரண நிலவு போல விளங்கும் நெற்றியினை உடைய மாதரோடும் கூடி, ஒளியை உடைய முற்றத்தில் சென்று ஏறி, பூரணச் சந்திரன் ஒளிவிட்டு விளங்க, அவரது சிவந்த வாயில் புன்சிரிப்புத் தோன்ற, செறிந்த ஒளிமிக்க முத்துவடத்தைத் தாங்கிய முலைக்கண்கள் தமது மார்பகலத்தே மூழ்கும்படி அழுந்தி அனுபவித்துல, நாள்தோறும் புதுமை தங்கிய நல்ல அனுபோகத்தைக் கைவிடுவர் புன்மையான சமயநெறியினைச் சார்ந்தோர்.

"ஊடுவது, உணர்வது, உற்ற கலவி மங்கையரை உள்கி

வாடுவது, அடியில் வீழ்ந்து வருந்துவது, அருந்தவம்; பின்

கூடுவது உணர்வு கெட்டுக் குணம் எ(ல்)லாம் வேட்கையே ஆய்

நீடுவது இன்ப முத்தி; இத்தில் நின்றார்கள் முத்தர்." --- சிவஞானசித்தியார், பரபக்கம்

இதன் பொருள் ---

புதிதாகக் கூடிக் கலவியில் மாதரை நினைத்து அவர்கள் தம்முடன் ஊடுவதானால் அவரை ஊடல் தீர்ப்பது பொருட்டாக உள்ளம் தளர்தலும், அவர்கள் காலடிகளில் வீழ்ந்து வருந்துதலுமே அரிதாகச் செய்யுலம் தவம் ஆகும். அப்படித் தவத்தில் நின்றபின், அம்மகளிரோடு தன் அறிவு கெட்டுக் கூடுவது முத்தி ஆகும். இந்திரியங்கள் எல்லாம் ஒருமைப்பட விருப்பம் நிலைப் பெறுவது முத்தி இன்பம் ஆகும். இவ்வழியில் நின்றவர்களே முத்தராவர்.        

உடம்பே உயிர், உடம்பால் அடையும் இன்பமே மோட்சம் எனக் கருதுகின்ற உலகாயத நிலை விருதா என்றும், மடவார் மயலாலே அந்த வாழ்வு அவமாகிப் போகும் என்றும் அருணகிரிநாதப் பெருமான் இத் திருப்புகழில் அறிவுறுத்துமாறு காண்க.

"விழு தாது எனவே கருதாது, உடலை

     வினை சேர்வதுவே ...... புரி தாக,

விருதாவினிலே உலகாயதம் மேல்

     இடவே, மடவார் ...... மயலாலே,

அழுது ஆ கெடவே, அவம் ஆகிட, நாள்

     அடைவே கழியாது, ...... உனை ஓதி

அலர் தாள் அடியேன் உறவாய் மருவ,

     ஓர் அழியா வரமே ...... தருவாயே."

இதன் பொருள் ---

     விழுகின்ற தாது (சுக்கிலம்) தான் இந்த உடல் என்று கருதாமல், வினைகளை மேலும் மேலும் சேர்ப்பதையே விருப்பம் கொண்டு, வீணாக (தேகமே ஆத்மா, போகமே மோட்சம் என்ற) உலக வழக்கில் அறிவு மேலிட, பெண்களின் மேல் ஆசைமயக்கத்தால் அவநிலையை அடைந்து கெட்டுப் போகும்படியாக, வாழ்நாள் முழுவதும் கழிந்து போகாமல்,  தேவரீரது திருப்புகழை ஓதித் துதித்து, அன்றலர்ந்த தாமரை போன்ற உமது திருவடிகளே எனக்கு உறவாகக் கலந்து இருக்க, ஒப்பற்ற அழியா வரத்தினைத் தந்து அருள்வாயாக.

    உலோகாயதன் நிலை குறித்து அருணகிரிநாதர் மேலும் ஒரு திருப்புகழில் கூறுவதும் காண்க.

"இலகிய வேலோ? சேலோ? ஒளிவிடு வாளோ? போதோ?

     எமன்விடு தூதோ? மானோ? ...... விடம் ஈதோ?

என விழி கூறா வாரா அரிவையர், தோள் ஊடு ஆடா

     இறுதியில் வேறாய், மாறா ...... நினைவாலே,

பலபல கோளாய், மாலாய் உழலும் அதானால், வீணே

     படிறு சொல் ஆகா, உலோகா ...... யதன் ஆகி,

பரிவுடன் நாடாய் வீடாய் அடிமையும் ஈடேறாதே,

     பணி தியில் மூழ்கா, மாயா ...... விடுவேனோ?"

இதன் பொருள் ---

விளங்குகின்ற வேலாயுதமோ, சேல் மீனோ, தாமரையோ, யமன் அனுப்பியுள்ள தூதோ, மானோ, நஞ்சு தானோ இது என்று வியக்கக் கூடிய கண்களால் பேசும்படி வருகின்ற விலைமாதர்களின் தோள்களில் ஈடுபட்டுத் திளைத்து, கடைசியாக மனம் வேறுபட்டு, மாறுபட்ட எண்ணத்தால் பலபல தீமைகள் உண்டாக, மோகத்துடன் அலைச்சல் உறுகின்றதாக என் அனுபவம் ஆனதால், வீணான வஞ்சனைச் சொற்களைப் பேசி யாருக்கும் ஆகாத உலகாயதனாகி, அன்புடன் நாட்டிலும் வீட்டிலும் பயனடையாமல் அடிமையாகிய நானும் செல்வச் செருக்கில் முழுகி இறந்து படுவேனோ? 

மணிவாசகப் பெருமானும் இதனைத் தமது திருவாசகத்தில் பின்வருமாறு காட்டினார்...

"மிண்டிய மாய வாதம் என்னும்

சண்ட மாருதம் சுழித்து அடித்து ஆஅர்த்து

உலோகாயதன் எனும் ஒண்திறல் பாம்பின்

கலாபே தத்த கடுவிடம் எய்தி,"

முன்னர்க் குறிப்பிட்டது போல, உலோகாயதம் என்பது, காட்சியே அளவை என்றும், பூதங்கள் நான்கே என்றும், உடம்பே ஆன்மா என்றும், மறுபிறவியும் கடவுளும் இல்லை என்றும், இன்பமும் பொருளுமே புருஷார்த்தங்கள் என்றும் சொல்லும் மதம். பாம்பு ஒளி உடையது. ஆனால், விடத்தைக் கொண்டது. உலோகாயதம் கவர்ச்சி உடையது. ஆனால், தீமையுடையது. விடம் இம்மையில் தீமை புரிவது. உலோகாயத மதம் இம்மை மறுமை இரண்டிலும் தீமை புரிவது. அதனால் உலோகாயத மதத்தைப் "பாம்பு" என்றும், அதன் பயனைக் "கடுவிடம்" என்றும் கூறினார்.

எனவே, நாத்திக வாதமும் ஒரு மதமாகவே இயங்கி வந்தது, இயங்கி வருகிறது. இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கின்றான், புறத்திலும் இருக்கின்றான் என்று கொள்வோருக்கு அவரவர் உள்ளத்திலும், புறத்திலும் இருக்கின்றான். உள்ளத்திலும் இல்லை, புறத்திலும் இல்லை என்பாருக்கும் அப்படியே இல்லாத பொருளாகே மறைந்து பின்னர் விளங்குவான். 

இல்லை என்பதன் உண்மைப் பொருள், உண்மைப் பொருளாக விளங்கும் இறைவனால் பெறக்கூடிய நன்மை ஏதும் இல்லை என்பதே.

"உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் என்பவர்க்கு

உள்ளத்தும் உள்ளன், புறத்து உள்ளன் எம்இறை;

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை என்பவர்க்கு

உள்ளத்தும் இல்லை, புறத்து இல்லை தானே."  --- திருமூலர்.

இல்லை என்று ஆகிவிட்ட ஒரு பொருளை இல்லை என்று நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. உள்ளது என்று சொல்லுகின்ற பொருளைத் தான் இல்லை என்று மறுக்கின்ற வாதம் எழும். "உள்ளது போகாது, இல்லது வாராது" என்பது சற்காரிய வாதம். நாத்திகவாதம் என்னும் மதச் சார்பும் ஒருவகை மதச்சார்பே ஆகும். மதச்சார்பு இன்மை என்பது, தாம் கொண்ட கொள்கையைப் பிறர் மீது திணிக்காமல் இருப்பதும், பிறரையும் தம்மைப் போல மனிதர்தாம் என மதித்து அன்பு செய்து, அவரது கொள்கைக்கும் மதிப்புத் தருவதும் ஆகும்.




சமயப் பொதுமை

 


சமயப் பொதுமை

-----

மனிதன் உலகத்தில் வாழும்போது இன்பத்தை வேண்டுகிறான். துன்பத்தை வேண்டுவது இல்லை. ஆனால் எல்லோரும் இன்பம் அடைகிறார்களா என்றால், அதுதான் இல்லை. சின்னஞ்சிறு குழந்தையின் கண்ணுக்கு கண்ணாடித் துண்டு அழகாகத் தெரிகிறது. அதைக் கையில் எடுத்து விளையாடுகிறது. கையிலே கீறிக் கொண்டு இரத்தம் வந்து கத்துகிறது. முதலில் எடுக்கும்போது அதனால் துன்பம் உண்டாகும் என்று குழந்தைக்குத் தெரியாது. முன் அனுபவமும் அறிவும் இல்லாமையினால் உடைந்த கண்ணாடியை எடுத்துக் கீறிக்கொண்டு துன்பம் அடைகிறது. துன்பம் அடையவேண்டும் என்பது அதன் நோக்கம் இல்லை. துன்பம் அடையும் வகையில் அதன் அறியாமை அதனைச் செலுத்துகிறது. அதுபோலவே மனிதன் துன்பத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இல்லை. அவன் எப்போதும் இன்பமே வேண்டுமென்று விரும்புகிறான். ஆனால் அது எங்கே கிடைக்குமென்று அறியாமையினால் துன்புறுகின்றான். இன்பம் கிடைக்குமென்று எதை எதையோ நினைந்து எண்ணி ஏமாந்து, தான் நினைத்தபடி முடியாமல் துன்பம் உண்டாவதைக் காண்கிறான். 

சில பண்டங்கள் நாவுக்கு இன்பமாக இருக்கின்றன. ஆனால், உடம்புக்குக் கேடு விளைக்கும். ஐந்து இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பம் எல்லாம் அப்போதைக்கு இன்பம் என்று தோன்றினாலும் அவற்றால் விளைகின்ற துன்பம் மிகப் பெரிது. மனிதன் இந்திரியங்களால் உண்டாகின்ற இன்பத்தை உண்மை இன்பம் என்று கருதி ஏமாந்து போகிறான். அப்போதைக்கு இன்பமாகத் தோன்றுவனவற்றைச் சிற்றின்பம் என்று சொல்வார்கள். ஐந்து பொறிகளின் வாயிலாகக் கிடைக்கின்ற எல்லா இன்பங்களுமே சிற்றின்பந்தான். சிற்றின்பம் என்ற பெயர் இருந்தாலும் அதனை இன்பம் என்று சொல்வதற்கு இல்லை. 

இனிப்பு என்று ஒன்றைச் சொன்னால், மற்றவை கசக்குமோ என்ற எண்ணம் தோன்றும். அதுபோலவே, சிற்றின்பம் என்ற பெயரே, பேரின்பம் என்று மற்றொன்று இருப்பதை உணர்த்தும். விளையாடிக் கொண்டு இருப்பவன் சிறிய பையன்  என்றால், பெரிய பையன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிகிறது. அதுபோல, சிற்றின்பம் என்ற தொடர் பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறதை உணர்த்துகிறது. அறிவினாலும் ஆற்றலினாலும் சிறியவர்களாக இருக்கும் நாம் சிற்றின்பத்தை நாடிச் செல்கிறோம். பெரியவர்கள் பேரின்பத்தை நாடுகிறார்கள். நாம் செய்கிற முயற்சிகள் யாவுமே சிறிய முயற்சிகளே. நெடுங்காலம் செலவிட்டும் பெரிய முயற்சிகளைச் செய்தும் இந்த இன்பத்தை அடைகிறோம்.  இது எப்படிச் சிறிய இன்பம் ஆகும்? என்று தோன்றும். நெடுநாளைக்கு இந்த இன்பம் நில்லாமல், பின்னாலே துன்பம் தரும் வகையில் அமைந்திருப்பதனால் இது சிற்றின்பம் ஆகிறது. இந்த இன்பம் பொய்யான இன்பம்; போலி இன்பம். மெய்யான இன்பம் என்பது மாறாமல், குறையாமல், நிறைவாக இருக்கிற பேரின்பமே. உண்மையில் அதுதான் உண்மையில் இன்பம் ஆகும்.

அந்த இன்பத்தை அடைவது எப்படி என்பதுதான் பெரிய கேள்வி. பேரின்பம் என்ற ஒன்று இருக்கிறது என்று யாரேனும் சொல்வதைக் காதாலே கேட்கிறோம். மனம் நம்புவது இல்லை. நமக்கு உறுதிப்பாடு இல்லாவமையால் ஐயம் பிறக்கிறது. "இறைவன் இருக்கிறான். அவன் திருவருள் செய்வான். அந்தத் திருவருளால் நிலையான இன்பத்தைப் பெறலாம்"  என்று ஒருவர் அல்ல, இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான பேர்கள் பலகாலமாகச் சொல்லிக் கொண்டு வருகிறார்கள். நாம் நேரிலும் கேட்கிறோம். இப்படிச் சொன்ன பெரியவர்கள் சாதி,  சமயம், மொழி, நாடு என்ற வரையறைகளைக் கடந்தவர்கள். இப்படிப்பட்டவர்கள் இன்னும் தோன்றுவார்கள். பலகாலமாகப் பல பெருமக்கள் பேரின்பத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தாலும் நமக்கு நம்பிக்கை உண்டாவது இல்லை. பிறர் மதிக்கவேண்டுமே என்று கருதி பேச்சளவில் நாம் நம்புவதாகக் காட்டுகிறோம். பேரின்பம் என்று ஒன்று இருக்குமா? அது  நமக்குக் கிடைக்குமா?" என்ற ஐய அலை ஓய்ந்தபாடு இல்லை. இதற்கு முதற்காரணம், மாயை என்றும் திரோதம் என்றும் மறைப்பாற்றல் என்றும் சொல்வார்கள்.

நாம் விரும்புகின்ற சிற்றின்றபத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறோம். பல சமயங்களில் அது கைகூடுவது இல்லை. ஒருவேளை கைகூடினாலும், நாம் கருதியது போல இல்லை. அதனால் ஏமாற்றம் அடைகிறோம். இந்த ஏமாற்றத்தால், பேரின்பம் என்ற ஒன்று நமது முயற்சியினால் கைகூடும் என்பது ஐயமே என்ற எண்ணம் உண்டாகிறது. படித்தவர்களில் சிலர் பேரின்பம் என்பது வெறும் கற்பனையே என்று எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். பேரின்பத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிறருக்கு விரிவாக மேடைகளில் முழங்குகின்ற பலரின் வாழ்க்கை, சொல்வது ஒன்று,  செய்வது ஒன்றாக அமைந்து இருக்கிறது. ஏட்டுச்சுரைக்காய் போலப் பிறருக்கு உபதேசம் செய்யும் வகையில் அவர்கள் பெரியவர்கள் எழுதிய நூலை எடுத்துச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளத்தில் அவற்றில் சிறிதும் நம்பிக்கை இருப்பதில்லை. மெத்தப் படித்தவர்களே நம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்களானால், அவர்களை அப்படி ஆக்கும் மாயாசத்திக்கு எவ்வளவு ஆற்றல் இருக்க வேண்டுமென்பதை எண்ணிப் பார்க்கலாம். 

தம்முடைய முயற்சியினாலே பேரின்பத்தைப் பெற்றதாகச் சொல்லாமல், "இறைவன் திருவருளால் பெற்றேன்" என்று சொன்ன பெருமக்களே பலர். நம்மைப் போல வாழும் காலத்தில் அவர்கள் கண்டு அறியாத தனி இன்பத்தை, இறைவன் திருவருளைப் பெற்ற பிறகு அடைகிறார்கள். அப்போது அவர்களுக்கு உண்டாகும் வியப்பு அளவிட முடியாது. "கண்டறியாதன கண்டேன்"  என்றும், "'தேடிக் கண்டுகொண்டேன்" என்றும் பெருமகிழ்ச்சியோடு அப்பர் பெருமான் கூறுகிறார். "ஆர் பெறுவார் அச்சோவே" என்கிறார் மணிவாசகப் பெருமான். இறைவனுடைய திருவருளைப் பெற்ற பெருமக்கள் பலரும் தாம் பெற்ற அனுபவத்தை விம்மிதத்தோடு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சொல்லி இருக்கிறார்கள். இப்படி வெவ்வேறு வகையில் சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயமும் நமக்கு உண்டாகி விடுகிறது. 

எல்லோரும் ஒன்றே சொன்னால் அது நிச்சயம் என்று தெளிந்து கொள்ளலாம். அவர்கள் வெவ்வேறு வகையில் இறைவனுடைய திருவருளைப் பெற்றாலும், அவர்கள் பெற்ற இன்ப உணர்ச்சி பொதுவான ஒன்றே. விரத நாள் என்பதற்காகப் பலரும் இனிப்பான பண்டத்தைச் செய்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் செய்த பண்டம் மற்றொருவர் வீட்டில் இல்லை. வெவ்வேறு உருவத்தில் இனிப்புப் பண்டத்தை உண்டாலும், அறிகின்ற சுவை இனிப்பு என்ற ஒன்றுதான். அதுபோலவே, இறைவனுடைய திருவருளைப் பெறும் வழி வெவ்வேறாக இருந்தாலும், இறைவனைச் சந்தித்த முறை வெவ்வேறாக இருந்தாலும், அவர்கள் திருவருளை உணர்ந்து பெற்ற இன்பம் ஒன்றுதான். அவரவர்களுடைய உபாசனை முறைக்கும், குருவின் உபதேச வகைக்கும், சாதனத்தின் தன்மைக்கும் ஏற்ப அவர்களுக்கு அனுபவம் வருகிறது. எத்தகைய உணவை உண்டாலும் பசி தீருகிற அனுபவம் ஒன்று. அதுபோலவே எந்த வகையில் வழிபட்டாலும் இறைவன் திருவருளால் பெறுகின்ற இன்பம் ஒன்றுதான். இத்தகைய இன்பத்தைத்தான் பேரின்பம் என்று பொதுவாக எல்லோரும் சொன்னார்கள். குறித்தார்கள். 

ஆணும் பெண்ணும் பல உருவமாகப் பலவகை வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருத்தியை மனைவியாகப் பெற்று வாழ்ந்தாலும், எல்லோரும் பெறுகின்ற சிற்றின்பம் பொதுவகையில் ஒன்றுதான். உருவமும் அழகும் வெவ்வேறு விதமாக இருந்தாலும், ஆண் பெண் உறவில் உண்டாகின்ற இன்பத்தில் வேறுபாடு இல்லை. அதுபோலத்தான், வெவ்வேறு உருவத்தில் கடவுளை வழிபட்டு, வெவ்வேறு மந்திரங்களை உருவேற்றி, வெவ்வேறு இடத்தில் உபாசனை செய்து, வெவ்வேறு காலத்தில் இன்பத்தை அடைந்தாலும் எல்லா இன்பமும் ஒன்றே. 

எந்த வழியானாலும் முன்னாலே ஒருவர் சென்று பயன் பெற்ற வழியாக இருக்க வேண்டும். நாலுபேர் போன வழியில் போகவேண்டும் என்பது வழக்குச் சொல்லாக உள்ளது. இதைத்தான் மரபு என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் பெரியவர்கள் வெவ்வேறு பெயராலே சொல்கிறார்கள். எந்த வழியில் சென்றாலும் இறைவனுடைய திருவருளைப் பெறலாம். இந்த வழியில் சென்றால் திருவருளைப் பெறலாம் என்பது ஒரு சமயம். இன்னொரு சமயம் இன்னொரு வழியைக் காட்டும். சமய பேதங்கள் இருந்தாலும், அவற்றால் அடைகின்ற இன்பம் ஒன்றுதான்.

இந்தப் பொதுமையை உணர்ந்து கொள்ளமால், சமயங்களுக்கிடையில் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குவது பேதைமை ஆகும். மறைப்பு ஆற்றல் அல்லது திரோதானம், முள்ளை முள்ளால் அகற்றுவது போல, அறியாமையை உண்டாக்கி, அறிவை விளக்குகிறது. உலகிலே மக்கள் ஒருவரை ஒருவர் இன்னார் இனியார் என்று தெளிவாக அறியாது மயங்குகின்றார்கள். உடன் பிறந்தவன்தான் அருச்சுனன் என்பதை அறியாத கர்ணன் அவனைப் பகைவன் என்று கருதிப் பகைத்தான். இதம் சொன்ன வீடணனை, இராவணன் வெறுத்தான். கெடுமதி கூறிய மகோதரனை மதித்தான். ஒரு மதத்தினர் கூறும் திறத்தினை மற்றொரு மதத்தினர் தெளிவாக அறியாது, அவர்களுடன் தர்க்கமிட்டுக் கலகம் புரிகின்றார்கள். பசுக்கள் பல நிறமாயினும் பால் ஒரு நிறம்தானே? நதிகள் வளைந்து வளைந்து பல்வேறு வழிகளில் சென்றாலும் முடிவில் கூடுகின்ற இடம் கடல்தானே?

அதுபோல் சமயங்கள் முடிகின்ற இடம் ஒன்றுதான், ஆகவே சமயவாதம் புரிதல் கூடாது. இறையருளை நாடி ஒன்றுபட வேண்டும். சமயவாதம் புரிவோர் நரகிலே ஒற்றுமைப்பட்டு வாழ்வார்கள் என்பதை, "காதிமோதி வாதாடு நூல் கற்றிடுவோரும்..... மாறு இலாத மாகாலன் ஊர் புக்கு அலைவாரே" என்றார் அருணகிரிதாப் பெருமான். 

கடவுள் உணர்ச்சி ஒன்றுதான் இந்த மனப் பக்குவத்தைத் தரும். கடவுள் உணர்ச்சி இல்லாதவர் எதனையும் செய்யத் தலைப்படுவர். புண்ணிய பாவங்களையும் உண்டு என்று உடன்படாது, நினைத்தவற்றை எல்லாம் பேசி, நினைத்தவற்றை எல்லாம் செய்து நரகக் குழியில் சென்று வீழ்வர். ஆகவே, கடவுள் அன்பு மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதனைக் கடைப்பிடிக்க. மனிதவாழ்க்கைக்கு மூச்சுக் காற்று எத்துணை அவசியமோ, அத்துணை அவசியம் கடவுளன்பு.

எங்கும் நிறைந்த பரம்பொருள் நமது உள்ளத்தில் உறைகின்றார் என்று மறவாது நினைப்பவர், மனத்தினாலும் பிற உயிர்க்குத் தீமை செய்யமாட்டார். கடவுள் எல்லாவற்றையும் அறிகின்றார் இருக்கின்றார் என்று எண்ணுவோமானால், உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது.  ஆகவே,  இறைவனை ஒரு கணமேனும் மறவாது சிந்தை செய்து உய்வு பெறவேண்டும். கடவுள் உணர்ச்சி மனிதனைத் தூய்மையாக்குகின்றது. வாய்மை நெறியில் வளப்படுத்துகின்றது. ஆகவே, அறிவு நூல்களைக் கற்கவேண்டும். அவ்வறிவு நூல்களைக் கற்றாரே கற்றார் ஆவார். அல்லாதார் கற்றார் எனினும் கல்லாதாரே ஆவார். "கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி" என்றும், "கற்றவர்கள் உண்ணும் கனி" என்றும் "கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ" என்றும் வரும் அமுத வசனங்களால் அறிக.

கற்றதன் பயன் வாலறிவன் நற்றாள் தொழுதலே என்று திருவள்ளுவ நாயனார் வகுத்து உரைத்த வாய்மையாலும் அறிக.

"கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன்

நள்ளார் தொழாஅர் எனின்". --- திருக்குறள்.

"கற்பவை கற்க" என்று திருவள்ளுவர் கூறியபடியால், கற்கத் தக்க நூல்களையே கற்கவேண்டும். கற்கத்தக்க நூல்கள் எவை அவை ஞானநூல்களாகும். "அறிவுநூல் க(ல்)லா மூடர்" என்கின்றார் அருணகிரிநாதப் பெருமான் ஒரு திருப்புகழில்.

தமிழ் நூல்களில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று தோத்திர நூல்கள். மற்றொன்று சாத்திர நூல்கள். தோத்திரங்கள் பன்னிரு திருமுறைகள். சாத்திரங்கள் பதினான்கு சித்தாந்த சைவ நூல்கள். அருணகிரிநாதர், தாயுமானார் முதலிய அருளாளர்கள் அருளிய நூல்கள் அவைகளின் வழி வந்தவைகள். எனவே, இத்தகைய முத்திநெறிக்கு உரிய சத்திய நூல்களையே கற்றல்வேண்டும், கற்றவண்ணம் நிற்றல் வேண்டும்.

கற்பது என்பது உள்ளத்தில் உள்ள கசடு அறுவதற்காகவே. "கற்க கசடு அற" என்றார் திருவள்ளுவ நாயனார். ஓதுவது என்பதை நன்னெறியில் நிற்பதற்காக. "ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது" என்றார் திருஞானசம்பந்தர். ஒதுவது என்பது உணர்தலில் முடிய வேண்டும். "ஓதியும் உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும்" என்றார் திருவள்ளுவ நாயனார். "உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்" என்றார் தெய்வச் சேக்கிழார் பெருமான். எனவே, அருள்நூல்களையும், சாத்திரங்களையும், கசடு அறக் கற்று, ஓதி உணர்ந்து தெளிவு பெறுதல் வேண்டும். 

"எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பில் பிறிது இல்லை; - அப்பிறப்பில்

கற்றலும், கற்றவை கேட்டலும், கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்." --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

மக்கள் பிறப்பில் படிப்பதற்கு உரியவற்றைப் படித்தலும், படித்தவற்றைப் பெரியோரிடம் கேட்டுத் தெளிவடைதலும், அவ்வாறு கற்றும் கேட்டும் தெளிந்த வழியிலே நிற்றலும் பொருந்தப் பெற்றால், வேறு எந்த வகைப் பிறப்பாக இருந்தாலும், மனிதனாகப் பிறப்பதைப் போல ஒருவனுக்கு இன்பம் தரக்கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதுவே, மனிதப் பிறப்பு எடுத்ததன் சிறந்த பயன் ஆகும்.

     காரணம், அப்போதுதான், மனதில் தீய எண்ணங்கள் தோன்றாதிருக்கும்.

"கற்றதுவும் கற்று, ஒருபால் நிற்பக் கடைப்பிடியும்,

மற்று ஒருபால் போக மறித்திட்டுத்-தெற்றென

நெஞ்சத்துள் தீமை எழுதருமேல், இன்னாதே

கஞ்சத்துள் கல்பட்டால் போன்று. "             --- அறநெறிச்சாரம்.

     படிக்க வேண்டிய நூல்களைப் படித்து, அதனால் பெற்ற அறிவு ஒழுக்கம் ஆகியவற்றோடு பொருந்த வேண்டும். அவ்வாறு பொருந்தாமல் ஒரு பெறம் நிற்கவும், எடுத்த செயலை முடிக்கும் துணிவும், படித்த நூல்களின் கருத்தில் இருந்து மாறுபட்டு, மற்றொருபுறம் செல்லவும், நல்லொழுக்கத்தில் நடப்பதை விடுத்து, மனத்திலைவிரைந்து கெட்ட எண்ணம் உண்டாகுமானால், அது, தின்னும் உணவில் கலந்து இருக்கும் கல்லைப் போல, மிக்க துன்பத்தைத் தருவதாகும்.

"கற்றும் என்பலன்? கற்றிடு நூன்முறை

சொற்ற சொற்கள் சுகாரம்ப மோ?நெறி

நிற்றல் வேண்டும், நிருவிகற பச்சுகம்

பெற்ற பேர்பெற்ற பேசாப் பெருமையே." ---  தாயுமானார்.

கற்க வேண்டிய நூல்களைக் கற்று, கற்ற நெறியில் நில்லாமல், வெறும் இலக்கண இலக்கியங்களாகிய கருவி நூல்களை மட்டும் கற்று, அதனால் வந்த பொது அறிவினால், நம்மினும் உயர்ந்தவர் எவர் என்று செருக்குக் கொண்டு, பல புலவர் நிமிர்ந்து நிற்பர். அவர்கள் உள்ளத்தில் குழைவு இராது. சிந்தையில் தணிவும், செய்கையில் பணிவும் இரா. இத்தகையோர் ஒருவரையொருவர் காணும்போது தாம்தாம் கற்ற வித்தைகளைக் கொட்டிக் கலகமிடுவர்.

பிறவித் துன்பத்தை நினைந்து உள்ளம் குழைந்து உருகி, "ஈசனே! எண்ணில்லாத பிறவி எடுத்து எடுத்து இளைத்து விட்டேனே! இனி இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ? யாது வருமோ? இனி எளியேனைப் பிறவா வண்ணம் ஏன்றுகொள்" என்று உள்ளத்தால் உரைத்து, வெள்ளம்போல் விழிநீர் பெருக நின்று, நெய்யிலே இட்ட அப்பத்தில் தண்ணீர்ப் பசை அற்றவுடன், அந்த அப்பம் அமைதி உறுவதுபோல் சாந்தியுடன் நிற்பர்.

இத்தகைய பெருந்தன்மையும் நன்மையும் அறியாத பலர், மரப் பெட்டியில் உள்ள நூல்களை மாமிசப் பெட்டியில் ஏற்றி, அகந்தை கொண்டு, மனிதப் பண்பு ஒரு சிறிதும் இன்று, ஒருவரை ஒருவர் எதிர்த்து அதிர்ந்து பேசி, பற்கள் உதிர்ந்து, கண்கள் பிதிர்ந்து, பேதுறுவர்.  இம்மையிலே இகழும் மறுமையிலே நரகமும் அடைவர்.

சமயப் பொதுமை உணர்வு இல்லாதவர்கள் எப்போதும் தாம் கற்றதை வைத்துக் கொண்டு குரைத்துக் கொண்டு திரிவார்கள் என்கிறார் திருமூல நாயனார்.

"ஒன்றதே பேரூர், வழி ஆறு அதற்கு உள,

என்றது போலும் இருமுச் சமயமும்,

நன்று இது தீது இது என்று உரை ஆதர்கள்

குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே."      ---  திருமந்திரம்.

சென்று அடைதற்கு உரிய பெரிய ஊர் ஒன்றே. அதனை அடையும் வழிகள் ஆறு உள்ளன என்றது போன்று, கடவுள் உண்மையைக் கூறும் ஆறு சமயங்களும்,கடவுள் என்னும் ஒரு பொருளையே அடைவதற்குச் சாதனமாக உள்ளன. நான் சொல்லும் இந்த வழியே நல்லது, பிறர் கூறும் வழிகள் எல்லாம் தீயனவே என்று (உண்மை அறிவு விளங்காமல், தாம் உணர்ந்த்ததையே சொல்லிப்)  பிணங்குகின்ற சமயவாதிகள் எல்லாம்,மலையைப் பார்த்துக் குரைக்கின்ற நாயை ஒத்தவர் ஆவர் என்று சமயவாதிகளைப் பார்த்துச் சாடுகின்றார்.

     எல்லாச் சமயங்களும், மக்கள் அறிவு நலம் பெற்று வாழ்வதன் பொருட்டே அருளாளர்களால் வகுத்து உரைக்கப்பட்டன.  அவற்றிடையே அமைந்த ஒருமை உணர்வினைக் காண முயலாது, அவற்றின் வெளித் தோற்றத்தை மட்டும் கண்டு மருண்டு வாதித்துப் பிணங்குவோர், மலையைக் கண்டு மருண்டு குரைத்துக் கொண்டு கடிக்க ஒடும் நாயினைப் போன்று, பிறர் கூறும் மொழியின் பொருளை உள்ளவாறு உணரும் தெளிவின்றித் தம் சொற்களைப் பயனில்லாதவைகளாகச் செய்கின்றார்களே என்றும் இரங்கி வருந்தி, "குன்று குரைத்து எழு நாயை ஒத்தார்களே" என்றார் திருமூலர். ஞானமே திருமேனியாகவுடைய இறைவன் சமயங்கள் தோறும் அருளிச் செய்த ஆகமங்களில் கூறப்பட்ட மெய்யுணர்வு பற்றிய முடிவுகள் எல்லா ஆகமங்களிலும் ஒத்துச் சென்று முழுமுதற் பொருள் ஒன்றையே நோக்கிச் செல்வன என்பதை விளக்க, "ஒன்று அது பேரூர் வழி ஆறு அதற்கு உள" என்றார்.

     சமய நெறியில் நம்பிக்கை இல்லாதவர்கள் அப்படியே இருக்கவேண்டும். சமயப் பற்றாளர்களைப் பார்த்து எப்போதும் குரைத்துக் கொண்டு இருத்தல் கூடாது. இல்லை என்பது ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம் என்றால், உண்டு என்பதும் ஒருவருடைய கொள்கைச் சுதந்தரம். அதைப் பரிகசிப்பது தன்னைத் தானே ஒருவன் தாழ்த்திக் கொள்வது போல ஆகும். சபயப் பற்றாளர்களும் தாம் சார்ந்து உள்ள சமயத்தின் உண்மையை முழுமையாக உணரவேண்டும். மேலெழுந்த வாரியாகப் படித்துவிட்டோ, பிறர் சொல்லுவதைக் கேட்டோ. சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் கூடாது. எல்லாச் சமய உண்மைகளையும் தெரிந்திருக்க வேண்டும். ஒழுங்காகக் கற்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப சமய உண்மைகளை உரைப்பார்கள்; கற்பித்துக் கொள்ளுவார்கள். என் தாய் உயர்ந்தவள் என்றால், இன்னொரு அம்மையார் தாழ்ந்தவர் என்று கொள்வது எவ்வளவு மடமைக்கு உரியதோ, அதுபோலத் தான் சமய நிலைகளும். இவர்களை மலையைப் பார்த்துக் குலைக்கின்ற நாய்கள் என்றார் திருமூல நாயனார்.. மலையின் உண்மை இயல்பை நாய் அறியாது தானே. நாயின் இயல்பு என்ன? குரைத்தல் தான். பேதையின் இயல்பு என்ன? தான் சொன்னதையே சாதிப்பது தான். மேலான இந்த உண்மையைத் தெளிந்து அடங்க வேண்டும். இதை,

"சமயவாதிகள் தத்தம் மதங்களே

அமைவதாக அரற்றி மலைந்தனர்."

என்கிறார் மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில். சமயவாதிகள் எல்லாம் தம் தம் மதங்களே ஏற்புடையதாகும் எனச் சொல்லி ஆரவாரித்துப் பூசலிட்டார்கள், பூசலிடுவார்கள், இனியும் பூசலிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்பது இதன் பொருள். சமயம் கடந்த உண்மையைச் சமயநெறி சார்ந்து தெளியவேண்டும் என்பது தான். தெளிவு, அறிவு, ஞானம், அன்பு என்பவை அளவுக்குள் அடங்காதவை. அளவு அற்றவை.

     இதைத்தான், "தொட்டு அனைத்து ஊறும் மணல்கேணி, மாந்தர்க்குக் கற்று அனைத்து ஊறும் அறிவு" என்று திருவள்ளுவ நாயனார் காட்டினார். மணல் கேணியை எந்த அளவுக்குத் தோண்டுகின்றோமோ அந்த அளவுக்குத் தண்ணீர் ஊறும். ஒருவன் எந்த அளவுக்கு நூல்களைப் பயிலுகின்றானோ, அந்த அளவுக்கு அறிவு ஊறும். அதுகொண்டே,"பாடம் ஏறினும் ஏடு அது கைவிடேல்" என்றும் "ஓதுவது ஒழியேல்" என்றும் "ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்" என்றும் முதுமொழிகள் தோன்றின. படித்தல் வேறு. ஓதுவது வேறு.

     கறுப்புக் கண்ணாடி அணிந்தவனுக்கு, அவன் காணும் பொருள்கள் எல்லாம் மங்கலாகவே தெரியும். சமயக் கண்ணோடு பார்ப்பவனுக்கு சமயம் மட்டுமே தெரியும். சமயம் கடந்த உண்மை தெரியாது. சமயம் எதை நமக்கு அறிவுறுத்த வந்தது என்றும் தெரியாது. மனக்கண்ணால் காணுங்கள். அறிவுக் கண்ணால் காணாதீர்கள். உங்களுடைய இன்றைய அறிவு, நாளை பொய்யாகலாம், மாறுபடலாம். நேற்று நீங்கள் சொன்னதை இன்று நீங்களே கூட மறுக்கலாம். உங்களுக்குப் பின் வந்த உங்கள் மகனோ மகளோ, ஏன் உங்களோடு உங்களுக்காகவே வாழுகின்ற உங்கள் வாழ்க்கைத்துணை கூட மறுக்கலாம். விருப்பு வெறுப்பு இல்லாமல் எதையும் கண்டால் நல்லது.

"பித்தர்குணம் அதுபோல, ஒரு கால் உண்டாய்ப்

பின் ஒருகால் அறிவு இன்றிப் பேதையோராய்க்

கத்திடும் ஆன்மாக்கள் உரைக் கட்டில்பட்டோர்

கனகவரை குறித்துப் போய்க் கடற்கே வீழ்வர்."

எனவரும் அருள்நந்தி சிவச்சாரியார் பாடல் மேற்குறித்த திருமந்திரத்திற்கு உரிய விளக்கமாக அமைந்துள்ளமை காணலாம்.

பைத்தியம் பிடித்தவனுக்குத் தன் செய்கை அல்லாது பிறரைப் புரிந்து கொள்ள வராது. அவனது செயல் ஒருகால் அறிவு உள்ளது போலவும், இன்னொருகால் அறிவில்லாதது போலவும் தோன்றும். அதுபோல, அறிவு விளங்கியது போல, அறிவின்றிப் பேசுகின்ற சமயவாதிகளின் பேச்சில் அறிவு மயங்கிக் கட்டுண்டவர்கள், மேருமலையை அடைய எண்ணிப் போய், அதை அடையாமல் கடலில் விழுந்ததைப் போல் ஆவார்கள். 

"அறநிலையத் துறையில் முழுமையாக நான் ஈடுபட்டட பிறகு ஒரு உண்மை விளங்கியது. அறுபது ஆண்டு காலத்திற்கு மேல் எங்களுடைய திராவிட இயக்கம் சமுதாய உயர்வுக்காகப் பல எதிர்ப்பு இயக்கங்களை மேற்கொண்டதால், சமய இலக்கியங்களைக் குறித்து தமிழ் மக்களுக்குச் சரியான பாதையைக் காட்டாமல், எங்கோ பிழை ஏற்பட்டுவிட்டது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். பேரறிஞர் அண்ணா அவர்கள் முழு நாத்திகராக விளங்கிய தந்தை பெரியாருடைய மாணவர். தந்தை பெரியாரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு தலைவர் என்றாலும், தந்தை பெரியாரோடு முரண்பட்டு, 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கிய போது, தந்தை பெரியாருடைய இலட்சியத்திற்கு மாறாக, நாத்திகக் கொள்கைக்கு எதிரான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற சொற்றொடரைப் பிரகடனப்படுத்தினார். ஆனால், இது சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக இடம் பெற்றிருக்கிற திருமூலர் திருமந்திரத்தில் உள்ள தத்துவமாகும்" என்று 08.05.2021 அன்று வெளியான தினமணி  நாளிதழில் முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் இரு இராம. வீரப்பன் அவர்கள் குறிப்பிட்டு உள்ளார்கள்.

எனவே, இறையருளால் உண்மை இன்பத்தைப் பெற்று மகிழலாம். அதற்குத் துணை செய்வது சமய உணர்வு. சமய உண்மையை அறிந்து கொள்ளாமல், சமயங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்துக் கொண்டு பிணங்குதல் நன்மையைத் தராது. குலம் என்றால் அது மனிதகுலம் ஒன்றுதான். இறைவனும் ஒருவனே ஆவான்.  


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...