மேலான செல்வம் எது?

மேலான செல்வம் எது?

-----

வித்து முளையாகிறது. முளை செடியாகிறது. செடி மரமாகிறது. மரம் பூக்கிறது.  மலர் காயாகிறது.  காய் கனியாகிறது. இது போன்றே மனித வாழ்க்கையும் வளர்ந்து கனியாக வேண்டும். வித்து முளைத்துப் பயன் தருவதற்கு மண், நீர், உரம் மனிதன் ஒருவனின் கவனிப்பு ஆகியவை தேவைப்படுகிறத். கனிந்த பிறகு எந்தத் தொடர்பும் கனிக்குத் தேவைப்படுவது இல்லை. கனி நிலைக்கு முன்பு, சுவையிலும் தரத்திலும் வேறுபாடுகள் உண்டு. கனி நிலையில் சுவை வேறுபாடு இல்லை. இறைவனை, "பழத்திடைச் சுவை ஒப்பாய்” என்று அப்பர் பெருமான் பாடுகிறார்.

"அது பழச்சுவை என” என்று மணிவாசகம் கூறுகிறது. அது என்பது இறைவனைக் குறிக்கும். அது எப்படி இருக்கும் என்றால், "பழச்சுவை" போன்று இருக்கும். மனிதனுக்கும் பல்வேறு பொருள்களின் தொடர்பும் மனிதர்களின் கூட்டுறவும் தேவைப்படுகிறது. தனிமரம் தோப்பு ஆவது இல்லை என்பது போலவே, மனிதனுக்கும் சமுதாயம் என்பது தேவைப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவனை நன்னெறிப்படுத்த அறிவு நூல்களும் அருள் நூல்களும் அவசியம் தேவைப்படுகிறது. கருவுயிர்த்த நாள் முதல் தனி மனிதனைத் தொடர்ந்து வளர்த்து, அவனை அன்பு நெறியில் பயில, குடும்பத்தில் சேர்ப்பித்து, அன்புநெறியில் பயிற்றுவித்துப் பின் மேலான அருளியல் வாழ்க்கைக்கு உயர்த்துகிறது திருவள்ளுவ நாயனார் அருளிய திருக்குறள். உலகில் மனிதர்களுக்குச் செல்வங்கள் பலப்பல வேண்டும். ஆயினும் அருட்செல்வமே தலையாய செல்வம் ஆகும் என்பதால்,

"அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் 

பூரியார் கண்ணும் உள."

என்று நிறுவுகிறார் திருவள்ளுவ நாயனார்.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" என்றும் நாயனார் கூறி உள்ளாரே, எதுதான் உயர்ந்த செல்வம்? என்னும் வினா எழலாம். ஞானாசிரியன் செவி வழியாக உபதேசித்து அருளிய செல்வத்தால் அருட்செல்வம் விளைவதால், உபசார வழக்கமாகச் செவிச்செல்வத்தைச் சிறப்பித்தார் நாயனார் என்றே கொள்ளுதல் வேண்டும். அறிவின் பயன் அன்பு. "அறிவினால் ஆகுவது உண்டோ, பிறிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை" என்றார் நாயனார். அன்பின் முதிர்ச்சியில் அருள் தோன்றுகிறது என்பதை "அருள் என்னும் அன்பு ஈன் குழவி" என்னும் திருக்குறள் வழி நிறுவினார்.

நிலையாமையை உடைய உடலை விட்டு உயிர் பிரிந்தபின் உயிருக்குத் துணையாக வராத உலக வாழ்விற்கு மனிதனுக்குத் துணைநின்ற பொருள்கள் அனைத்தும் நிலையாமையை உடையனவே. மனிதன் உயிர் வாழும் வரை துணையாக இருந்து, உயிருக்கு உறுதியைத் தேடிக் கொள்வதற்கே பொருட்செல்வம் பயன்படவேண்டும். அருட்செல்வத்தைத் தேடிக் கொள்வதற்கே அது பயன்படவேண்டும்.

நிலையில்லாத செல்வத்தை அமாவாசை நாளில் மறையும் நிலவோடு ஒப்பிட்டுக் கூறியுள்ளார் நமது கருமூலம் அறுக்க வந்த திருமூல நாயனார்.

"இயக்கு உறு திங்கள் இருட்பிழம்பு ஒக்கும்

துயக்கு உறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா;

மயக்கு அற நாடுமின் வானவர் கோனை,

பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வம் ஆமே."

இதன் பொருள் ---                                                                                                            

வானத்தில் இயங்குதலைப் பொருந்திய நிலவு நிலைத்து நில்லாமல் அமாவாசை நாளில் இருட்பிழம்பு போல ஆகிவிடுகிறது. துன்ப நிலையையே உடையது செல்வம் என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. நேற்று அரசனாய் இருந்தவன் இன்று ஆண்டியாய் ஆயினமை கண்கூடாகப் பலராலும் அறியப்பட்டதே. ஆதலின், செல்வச் செருக்கில் ஆழ்தலை விடுத்து,  சுவர்க்கச் செல்வத்தினரான தேவர்கட்கும் அச்செல்வத்தை அவர்பால் வைத்தலும், வாங்குதலும் உடைய தலைவனாகிய சிவபெருமானை நினையுங்கள். அவன் தன்னை நினைப்பவர்க்குக் கார்காலத்து மேகம் போலப் பெருஞ் செல்வத்தை ஒழியாமல் தருபவன் ஆகின்றான்.

உலக வாழ்வில் நல்வழிக்குப் பயன்படுத்தாமல் சேர்த்து வைத்த செல்வத்தை மறுமை வாழ்வுக்கு எடுத்துச் செல்ல முடியாது என்று பின்வரும் பாடலின் மூலம் அறிவுறுத்துகின்றார் திருமூல நாயனார். 


"ஈட்டிய தேன்பூ மணங்கண்டு இரதமும்

கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்

ஓட்டித் துரந்திட்டு அது வலியார் கொளக்

காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே." 

இதன் பொருள் ---

ஈக்கள் தேனைச் சேர்ப்பதற்குப் பூக்களின் மணங்களை அறிந்துப, அதன் வழியே பூக்களை அணுகி, தேனைச் சேர்த்துக் கொணர்ந்து ஒரு மரக்கிளையில் வைக்குமேயன்றி, அத்தேனைத் தாமும் உண்ணா; பிறர்க்கும் கொடா. ஆயினும்,  வலிமையுடைய வேடர் அவ் ஈக்களை அப்புறப்படுத்தி மீள வரவொட்டாது துரத்தி விட்டுத் தேனைக் கொள்ள,  தேனீக்கள் யாதும் செய்யமாட்டாது அத் தேனை அவர்கட்கு உரியதாக்கித் தாம் கைவிட்டுச் செல்வது போன்றதே, தாமும் உண்ணாது, பிறர்க்கும் கொடாது செல்வத்தை ஈட்டிச் சேமித்து வைப்போரது தன்மையும். 

மணம் வாய்ந்த பூக்களைத் தேடி அவற்றிலிருந்து தேனீக்கள் தேனைச் சேர்த்துத் தமது கூட்டில் வைக்கும். அத் தேனைப் பல சூழ்ச்சிகள் செய்து மனிதன் கைப்பற்றுகிறான். அதுபோல, மனிதன் அரும்பாடுபட்டுச் செல்வத்தைச் சேர்த்தாலும் அவன் உயிரோடு இருக்கும்போதே அது பிறரால் கவரப்படுகிறது.

செல்வமும் செல்வத்தால் பெறப்படுகிற பொருள்களும் நீரில் செல்லும் மரக்கலம் கவிழ்வது போல அழிந்தொழியும் எனச் செல்வத்தின் நிலையாமையைக் குறித்துப் பாடி உள்ளார் திருமூல நாயனார்.


"மகிழ்கின்ற செல்வமும் மாடும், உடனே

கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்,

அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர் வீடு பேறாகச்

சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே." 


இதன் பொருள் ---

மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந்து ஒழிதலைப்போல, விழுந்து ஒழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினையால் கூட்டுவிக்கப்பட்டு இருத்தலை உலகவர் அறிந்திலர்.

உடலுயிர் வாழ்க்கை இடையீடின்றி நடைபெறவே பொருள் தேவைப்படுகிறது. உயிரானது உள்ளிருந்து ஊர்ந்து செல்லுகின்ற உடலாகிய வண்டிக்கு எரிபொருளாக செல்வம் உள்ளது. உடல் வளம் பெற்று உயிர் நலம் பெறுவதற்குத் துய்க்கும் பொருள்களாக காய்களும், கனிகளும் மற்ற பொருள்களும் தேவை. அதுபோல, உயிர் ஈடேற்றம் பெறுவதற்கு அருள் தேவைப்படுகிறது என்பதை மிக அழகாக

"அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருள் இல்லார்க்கு

இவ்வுலகும் இல்லாகி யாங்கு"

என்று திருவள்ளுவ நாயனார் கூறுவதைத் தெளிந்து கொள்ள வேண்டும்.

அருள், அன்பின் முதிர்ச்சியில் தோன்றுகிறது. எந்த மொழியிலும் எந்தச் சமயத்திலும் அருள் நெறியே நெறி என உணர்த்தப்படுகிறது. உலகியலில் இருள் சூழ்ந்த நிலை துன்பத்தைத் தருகிறது. இருள் நிலையில் மேடும் பள்ளமும் தெரிவது இல்லை. பழுது எது? பாம்பு எது? என்று தெரிவதில்லை. எங்கும் செறிந்த இருள்நிலையைக் கடிந்து எழுகின்றது ஞாயிறு.  ஞாயிறு எழுந்தவுடன் இருள் அகலுகிறது. உயிர்களுக்கு அறிவும் ஆள்வினையும் தோன்றுகின்றது. அதுபோலவே, அருட்சார்பு அற்றவர்கள் மனத்தில் இருட்செறிவால் நன்மையும் தீமையும் தெரிவது இல்லை. அருளியலில் ஈடுபட்டவுடன் அறியாமை அகலுகிறது: மயக்கம் தெளிகிறது. தெளிவு பிறக்கிறது.

இந்த நிலையை மணிவாசகப் பெருமான் மிக அழகாகத் திருவாசகப் பாடல் ஒன்றில் அமைத்துக் காட்டி உள்ளார்.


"இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து

    எழுகின்ற ஞாயிறே போன்று

நின்றநின் தன்மை, நினைப்பு அற நினைந்தேன்;

    நீ அ(ல்)லால் பிறிது மற்று இன்மை

சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்

    திருப்பெருந்துறை உறை சிவனே!

ஒன்றும் நீ அல்லை அன்றி ஒன்று இல்லை,

    யார் உன்னை அறியகிற் பாரே." 


இதன் பொருள் ---

          உன்னை அன்றி வேறு ஒரு பொருள் இல்லையாக. பிற எல்லாப் பொருளையும் விட்டுவிட்டு அணு அளவாய்க் குறுகிக் கூட்டப்படுகின்ற திருப்பெருந்துறை சிவனே! காணப்படுகின்ற ஒரு பொருளும் நீ அல்லை. உன்னை அல்லாது பிற பொருளும் இல்லை. யாவர் உன்னை அறிய வல்லவர்? இப்பொழுது எனக்கு அருள் புரிந்து, அறியாமை இருளைப் போக்கி,  என் மனத்தே தோன்றுகின்ற சூரியனே போல வெளிவந்து நின்ற உன்னுடைய இயல்பை,  தற்போதத்தினையே எதிரிட்டு நினையாமல் அருள் வழியிலே நின்று நினைந்தேன்

அருள் தன்மையால் மனிதன் செடிகளையும் மரங்களையும்- பேணுகிறான். பக்கத்தில் வாழும் மனிதர்களைப் பேணுகின்றான்.  தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறான். ஆதலால்,  துன்பம் அவனை அணுகுவதில்லை. அப்படிப்பட்ட அவன் தன்னுயிர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. எல்லார்க்கும் தனது உயிர் அருமையானதே. அப்பர் பெருமான், "என்னினும் இனியான் ஒருன் உளன்" என்று இறைவனைக் குறிப்பிட்டார். ஆனால், பிறர் தனது உயிரைக் காதலிப்பர். பிற உயிரைத் துன்புறுத்துவர். இது அருள் நிலை அல்ல. 

உயிர் யாதொன்றையும் சாராமல் இருக்க முடியாது. ஆதலால், உயிர் தனது சார்பிற்கு உரியனவாகிய பிற உயிர்களையும் அருட்கண்ணோடு காணும் தன்மையைப் பெறுதல் வேண்டும். அதுவே அருட்செல்வம். அந்தச் செல்வம்தான் செல்வத்துள் செல்வம் என்றார் திருவள்ளுவ நாயனார்.

தெருக்கோடியிலுள்ள வீடு தீப்பற்றி எரிந்தால், அந் நெருப்பினை மற்ற வீடுகளுக்குப் பரவாமல் அணைப்பதே எல்லாருக்கும் தீமையை விலக்கி, நன்மையைத் தருவது. அவ்வாறு செய்யாமல் தன் வீட்டின்மீது மட்டும் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க ஒருவன் முற்படுவான் என்றால், அது பயனற்றதாகவே முடியும். ஊற்றிய முயற்சியும் பாழாகி, அவனும் அவன் வீடும் அழிவது உறுதி. எவன் ஒருவன் தன்னுயிர்க்குத் துன்பம் வரக்கூடாது என்று கருதித் தன்னுயிரைக் காதலிக்கின்றானோ, அவன் பிற உயிர்க்கும் அன்பு காட்ட வேண்டும்.

செடி கொடிகளைப் பரிவோடு வளர்த்தால் உயிர் வாழ்க்கைக்குரிய வளப்பமான காய்களும், கனிகளும் கிடைக்கும். குடம் குடமாகப் பால் கொடுக்கும் பசுவினுக்கு அன்பு காட்டினால் உயிர் வாழ்க்கைக்குரிய அமுதம் ஆகிய பால் கிடைக்கும். உயிர்க்கு இன்றியமையாத தேவையான மகிழ்ச்சியை மற்ற மனிதர்களிடத்தில் காட்டும் இனிய முகத்தாலும், கூறும் இனிய சொற்களாலும் திரும்பப் பெறலாம். ஆதலால் தன்னுயிரைக் காதலிப்பவன் செய்யக் கூடிய அறிவுடைய செயல், அருள் உள்ளம் கொண்டு பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே ஆகும்.

"மன் உயிர் ஒம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப

தன்உயிர் அஞ்சும் வினை"

என்று திருவள்ளுவ நாயனார் அச்சம் இல்லாமல் வாழுகின்ற அருள்நெறியை அழகுபடக் காட்டினார்.

அருள் நெறியில் ஒழுகாமல், தன்னலம் ஒன்றையே கருதிப் பிற உயிர்க்குத் துன்பம் செய்வர்கள், அருளை விட்டு விலகித் தீயநெறியில் வாழ்பவர்களே. அவர்கள் பொருளாகிய அறத்தை மறந்து வாழ்பவர்கள் என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

"பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர், அருள்நீங்கி

அல்லவை செய்து ஒழுகு வார்"

என்பது திருக்குறள்.

அருளை மறந்து, தீமையும் செய்து ஒழுகுதல் பரிதாபம். குளிக்கப் போனவன் குளிப்பதை மறந்து, அங்கு உள்ள சேற்றைப் பூசிக்கொண்டதைப் போல இருக்கிறது. அதனால்தான்,

"நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், 

அல்லது செய்தல் ஓம்புமின், அதுதான் 

எல்லாரும் உவப்பது; அன்றியும், 

நல்லாற்றுப் படுஉம் நெறியுமார் அதுவே."

என்கிறது புறநானூறு.

  அருள் உணர்வில் சிறந்து வாழ்வோருக்கு அல்லல் இல்லை. இதற்குச் சான்று, இந்த உலகில் ஏராளம் உண்டு. மணமிக்க மலர்களைத் தரும் செடிகளைப் பலர் விரும்பி வளர்க்கின்றனர். இனிய காய்களைக் கனிகளைத் தரும் மரங்களை வெட்டி அழிப்பவர் ஒருவருமில்லை. அப்படியே யாராவது இருந்தாலும் உலகம் அவர்களை மானிடராக ஒத்துக் கொள்வதில்லை. அவர்களை உலகம் கீழான கயவர்கள் என்று ஒதுக்குகிறது. அதுபோலவே, அருள் உணர்வு உடையவர்கள் வாழ்வார்கள்; வாழ்விக்கப் பெறுவார்கள். காரணம், அவர்கள் வாழ்வில் உலகம்  வாழ்கிறது.

வாழ்க்கையின் அகத்திலும் புறத்திலும் அருளாட்சி உடையோர் அல்லல்பட மாட்டார்கள். அவர்களை அவலம் அடையாது. இது முக்காலும் உண்மை என்று திருவள்ளுவ நாயனார் சாதிக்கின்றார். இந்த உண்மைக்குத் திருவள்ளுவர் காட்டும் சாட்சி எது? காற்று வழங்கும் இந்தப் பெரிய உலகமே சாட்சி என்கிறார்.

"அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை, வளிவழங்கும்

மல்லன்மா ஞாலம் கரி." --- திருக்குறள்.

இந்த உலகத்தில் வலிமை உடையவர் வலிமை அற்றோரின் நிலத்தை அபகரித்துக் கொள்ளலாம். தண்ணீரை அணைகட்டித் தேக்கி வைத்துப் பிறருக்குத் தர மறுக்கலாம். கதிரொளியையும், நிலவொளியையும் கூடத் தடுத்து விடலாம். ஆனால், காற்றை யாரும் அப்படித் தடை செய்ய முடியாது. காற்றுக்கு வேலி இட முடியாது. தடுப்புச் சுவர் எழுப்ப முடியாது. யாரும் முயற்சி செய்து காற்றைசு சுவாசிப்பது இல்லை. அது இயல்பாகவே நிகழ்கிறது. அருள் ஆள்வார் பிறரை வாழ்வித்து வாழ்வர்; மகிழ்வித்து மகிழ்வர். அருளாட்சிக்கு ஊனாட்சித் தன்மை தடையாக இருக்கும்.

"ஊனினைப் பெருக்கி, உன்னை நினையாது ஒழிந்தேன், செடியேன், உணர்வு இல்லேன்" என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். தனது உடம்பின் உனைப் பெருக்க எண்ணுபவர் இறைவனை மறப்பர். அவர்கள் உணர்வு இல்லாதவர் ஆவார். உடல் பெருத்தால், உயிரின் ஆற்றல் முழுதும் ஊன் உடலுக்கு இரை தேடுவதிலேயே கழியும். இறை நினைவு எள்ளளவும் இருக்காது. அவனிடத்தில் உயிர் இரக்கம் என்பது சிறிதும் இருக்காது. உயிர் குடிகொண்டு உள்ள உடலை வளர்ப்பதற்கு எளிய மரக்கறி உணவே போதுமானது. நல்லூணர்வை வளர்க்க அதுவே துணை செயும். கதறக் கதறக் கழுத்தை அறுத்து இரத்தம் சொட்ட இரக்கமின்றிப் புலாலைச் சுவைத்து உண்பவன் எங்ஙனம் அருளாட்சி உடையவனாக இருக்க முடியும்? என்று வினவுகிறார் திருவள்ளுவர்.

"தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்,

எங்ஙனம் ஆளும் அருள்?

என்பது திருவள்ளுவ நாயனார் எழுப்பும் வினா.

மனிதன் உயிரைக் கொன்றுதான் ஊனைத் தின்கிறான். அவனால் பிரிக்கப்பட்ட உயிரை திருப்பித் தருகின்ற ஆற்றல் மனிதனிடத்தில் இல்லை. திருப்பித் தரமுடியாத நிலையிலுள்ள ஆற்றல் அற்ற மனிதன், உயிரைப் பிரித்து, ஊனைத் தின்பது பாவம். எப்படி அவன் தின்ற ஊனைத் திருப்பித் தரமுடியாதோ, அதுபோல நரகமும் அவனைத் திருப்பிவிடாது என்பதனை,

"உண்ணாமை உள்ளது உயிர்நிலை, ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு"

என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

புலால் உண்பவர் மீளா நரகத்தில் ஆழ்வர். இளங்கோவடிகளும் "ஊன் ஊண் துறமின், உயிர்க்கொலை நீங்குமின்" என்றார். சிலர், தாம் கொல்லமாட்டார்கள்.  கடையில் விற்கும் புலாலை வாங்கி உண்பார்கள். இவர்கள் கருத்து கொன்றவனுக்கே பாவம். தமக்கு இல்லை என்பதாகும். கொலை செய்பவன் ஏன் செய்கிறான்?  தான் வளர்த்த ஆட்டைத் தானே கொல்லவேண்டும் என்று எவனாவது எண்ணுவானா? புலால் உண்பவரின் விருப்பத்தை அறிந்தே அவன் கொல்லுகிறான். புலால் உண்பவர் இல்லையானால், கொல்பவரும் இல்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், புலால் உண்பவர்களே புலால் உண்ணும் குற்றத்தைச் செய்வதோடு அல்லாமல், பிறரைத் தம்முடைய புலால் இச்சையின் மூலம் கொலைக் குற்றம் செய்யத் தூண்டுகின்றனர். கொலை செய்பவரை விடக் கொலைக்குத் தூண்டுபவரே கொடியவர் என்று திருக்குறள் வன்மையாக எடுத்துக் கூறுகிறது.

"தினல்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்"

என்பது திருக்குறள்.

இறைவனை நினைந்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விட ஒன்றன் உயிரைச் செகுத்து உண்ணாமையே மேலான அறம் என்று திருவள்ளுவ நாயனார் போதிக்கிறார்

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்பது திருக்குறள்.

"ஒன்றாக நல்லது கொல்லாமை” என்றும் திருவள்ளுவ நாயனார் வலியுறுத்துகிறார். தாயுமான அடிகளும், "கொல்லா விரதம் குவலயம் எல்லாம் ஓங்க, எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே" என்று கூறினார். வள்ளல் இராமலிங்க அடிகள் வாடிய பயிரின் வாட்டத்தைக் கண்டு வாடினார். "கொல்லா நெறியே குருவருள் நெறி" என்றார்.

செல்வத்துள் செல்வம் ஆகிய அருட்செல்வத்தைப் பெறுவதற்கு புலால் உண்ணாமை இன்றியமையாத ஒன்று ஆகும். உயிர்களின்பால் நமக்கு அருள் இருந்தால், அருள் வடிவான இறைவனை நாம் எளிதில் அடையலாம். அப்படிப் பார்த்தால், புலால் உண்ணக் கூடாது என்னும் உணர்வை ஒருவன் பெறுவதே மேலான செல்வம் ஆகும். அவனை மேலான அருள் நிலையில் வைப்பதே அந்தச் செல்வம் ஆகும்.


பொது --- 1058. நிலவில் மாரன்


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

நிலவில் மாரன்  (பொது)


முருகா! 

மாதர் மயலில் முழுகினும் திருவடி மறவேன்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


நிலவில் மார னேறூதை யசைய வீசு மாராம

     நிழலில் மாட மாமாளி ...... கையின்மேலாம்


நிலையில் வாச மாறாத அணையில் மாத ராரோடு

     நியதி யாக வாயார ...... வயிறார


இலவில் ஊறு தேன்ஊறல் பருகி யார வாமீறி

     யிளகி யேறு பாடீர ...... தனபாரம்


எனது மார்பி லேமூழ்க இறுக மேவி மால்கூரு

     கினுமு னீப சீர்பாத ...... மறவேனே


குலவி யோம பாகீர திமிலை நாதர் மாதேவர்

     குழைய மாலி காநாக ...... மொடுதாவிக்


கலவி கூரு மீராறு கனக வாகு வேசூரர்

     கடக வாரி தூளாக ...... அமராடுங்


கடக போல மால்யானை வனிதை பாக வேல்வீர

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


நிலவில் மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம

     நிழலில் மாட மாமாளி ...... கையின் மேலாம்


நிலையில் வாசம் மாறாத அணையில் மாத ராரோடு

     நியதி ஆக வாயார ...... வயிறார


இலவில் ஊறு தேன்ஊறல் பருகி, ஆர அவாமீறி

     யிளகி யேறு பாடீர ...... தனபாரம்


எனது மார்பிலே மூழ்க இறுக மேவி, மால்கூரு-

     கினும் உன்நீப சீர்பாதம் ...... மறவேனே.


குலவி யோம பாகீரதி மிலை நாதர், மாதேவர்

     குழைய மாலிகா நாக ...... மொடுதாவிக்


குடில கோம ளாகார சடில மோலி மீதேறு

     குமர! வேட மாதோடு ...... பிரியாது


கலவி கூரும் ஈராறு கனக வாகுவே! சூரர்

     கடக வாரி தூளாக ...... அமராடும்


கட கபோல மால்யானை வனிதை பாக! வேல்வீர!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


குல வியோம பாகீரதி மிலை நாதர் --- சிறந்த வான நதியாகிய கங்கையைத் திருச்சடையில் தாங்கிய தலைவரும்,

மா தேவர் குழைய --- மகாதேவரும் ஆன சிவபெருமான் மனம் மகிழ,

மாலிகா நாகமொடு தாவி --- மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி,

குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர ---வளைந்துள்ள அழகிய திருச்சடையின் மீதுள்ள மணிமுடியின் மீது தவழ்ந்து ஏறும் குமாரக் கடவுளே!

வேட மாதோடு பிரியாது கலவி கூரும் ஈர் ஆறு கனக வாகுவே --- வேடர் மகள் ஆகிய வள்ளிநாயகியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் அழகிய பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் --- சூரர்களுடைய  சேனைக் கடல் பொடியாகுமாறு போர் புரிந்த,

கட கபோல மால் யானை வனிதை பாக --- கன்ன மதம் ஒழுகும் பெரிய வெள்ளை யானை வளர்த்த தேவயானை அம்மையின் கணவரே! 

வேல் வீர --- வேல் வீரரே!

கருணை மேருவே --- கருணையில் மேரமலையைப் போன்று உயர்ந்தவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

        நிலவில் --- நிலவொளியில்,

மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் --- மன்மதன் ஏறி வரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலையின் குளிர்ந்த நிழலில்,

மாட மாமாளிகையின் மேலாம் நிலையில் --- மாடங்களோடு கூடிய சிறந்த மாளிகையின் மேல் மாடத்தில், 

வாச(ம்) மாறாத  அணையில் --- நறுமணம் சிறிதும் மாறாத படுக்கையில், 

மாதராரோடு நியதியாக --- பெண்களோடு எப்பொழுதும்,

வாயார வயிறார --- வாய் ஆர, வயிறு ஆர,

இலவில் ஊறு தேன் ஊறல் பருகி --- இலவம் பூப் போன்ற சிவந்த வாயில் ஊறுகின்ற தேன் போன்று இனிமைதரும் எச்சிலைக் குடித்து, 

ஆர் அவா மீறி -- நிறைந்த ஆசை அளவு கடந்து எழ,  

இளகி ஏறு பாடீர தன பாரம் --- இளகி, எழுந்து உள்ள சந்தனக் குழம்பு பூசியுள்ள தனபாரமானது,

எனது மார்பிலே மூழ்க இறுக மேவி --- எனது மார்பிலே முழுகி அழுந்தும்படியாக 

மால் கூருகினும் --- காம மயக்கம் மிகுந்து இருந்தபோதிலும்,

உன் நீப சீர் பாதம் மறவேனே --- தேவரீரது கடப்பமலர் பொருந்திய சிறந்த திருவடியை மறக்கமாட்டேன்.


பொழிப்புரை


சிறந்த வான நதியாகிய கங்கையைத் திருச்சடையில் தாங்கிய தலைவரும், மகாதேவரும் ஆன சிவபெருமான் மனம் மகிழ, மாலையாக அணிந்துள்ள பாம்பின் மேல் தாவி வளைந்துள்ள அழகிய திருச்சடையின் மீதுள்ள மணிமுடியின் மீது தவழ்ந்து ஏறும் குமாரக் கடவுளே!

வேடர் மகள் ஆகிய வள்ளிநாயகியோடு பிரியாமல் கலந்து இன்பம் மிகக் கொள்ளும் பன்னிரு திருத்தோள்களை உடையவரே!

சூரர்களுடைய  சேனைக் கடல் பொடியாகுமாறு போர் புரிந்த, கன்ன மதம் ஒழுகும் பெரிய வெள்ளை யானை வளர்த்த தேவயானை அம்மையின் கணவரே! 

வேல் வீரரே!

கருணையில் மேருமலையைப் போன்று உயர்ந்தவரே!

தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

நிலவொளியில், மன்மதன் ஏறி வரும் தென்றல் காற்று அசைந்து வீசுகின்ற பூஞ்சோலையின் குளிர்ந்த நிழலில், மாடங்களோடு கூடிய சிறந்த மாளிகையின் மேல் மாடத்தில்,  நறுமணம் சிறிதும் மாறாத படுக்கையில், பெண்களோடு எப்பொழுதும் கூடி இருந்து வாய் ஆர, வயிறு ஆர, அவர்களின் இலவம் பூப் போன்ற சிவந்த வாயில் ஊறுகின்ற தேன் போன்று இனிமைதரும் எச்சிலைக் குடித்து, நிறைந்த ஆசை அளவு கடந்து எழ,  இளகி, எழுந்து உள்ள சந்தனக் குழம்பு பூசியுள்ள தனபாரமானது, எனது மார்பிலே முழுகி அழுந்தும்படியாக  காம மயக்கம் மிகுந்து இருந்தபோதிலும், தேவரீரது கடப்பமலர் பொருந்திய சிறந்த திருவடியை மறக்கமாட்டேன்.


விரிவுரை


மாரன் ஏறு ஊதை அசைய வீசும் ஆராம நிழலில் --- 

ஊதை - தென்றல் காற்று. மாரன் ஏறு ஊதை - மன்மதன் ஏறுகின்ற தென்றல் காற்றாகிய தேர்.

ஆராமம் - உபவனம், மலர்ச்சோலை, நந்தவனம், பூங்கா, ஊர்சூழ் சோலை.


மாதராரோடு நியதியாக --- 

நியதி - எப்பொழுதும், பெண்களோடு எப்பொழுதும்,

மால் கூருகினும் உன் நீப சீர் பாதம் மறவேனே --- 

மால் - மயக்கம், காம மயக்கம்.

நல்லவற்றை மறக்கச் செய்வது மாதர் மயல். பொன், பொருள், பெண், பதவி இவைகள் மயக்கத்தைத் தரும் அபினி போன்றவை. இறைவனை மறக்கச் செய்யும் வன்மை உடையவை. அடியேன் மாதர் மயலால் வாடினாலும், படுக்கையில் அம்மாதர்கள் தரும் காம இன்பக் கடலில் முழுகினாலும் திருவடிகளை மறவேன் என்கின்றார். இதனால், அருணகிரிநாதர் இவ்வாறு மாதர் கலவி நலத்தில் முழுகினார் என்பதாகப் பொருள் கொள்ளக் கூடாது.  உலகமயல் எந்நிலையிலும் தன்னை மயக்காது என்கின்றார். தனது உள்ள உறுதிப்பாடையே தெரிவிக்கின்றார். இதேபோல் வேறு இடங்களிலும் கூறியிருக்கின்றார்.

வ.எண். திருப்புகழ்ப் பாடல் தொடக்கம் திருத்தலம்

1 மலரணை ததும்ப                                 பழமுதிர்சோலை

2 வாய்ந்தப்பிடை                                 காஞ்சிபுரம்

3 மகரம் எறிகடல்                                 திருவண்ணாமலை

4 சிலைநுதல் வைத்து                         திருவண்ணாமலை

5 தமிழோதிய                                 திருவண்ணாமலை

6 சந்திர ஓலை                                         சிதம்பரம்

7 மார்புரம்பினளி                                 நாகப்பட்டினம்

8 தேனிருந்த                                 திருப்பந்தணைநல்லூர்

9 முகிலைக் காரை                                 திருநெய்த்தானம்

10 கலக சம்ப்ரம                                 விஜயமங்கலம்

11 பந்தப் பொற்பார                         திருப்பூவணம்

12 முருகுசெறி குழல்                                 பொது

13 விடமளவி                                         பொது

14 வட்டமுலை                                         பொது

15 வரிபரந்து                                         பொது

16 வரிவிழி                                                 பொது


கந்தர் அலங்காரம் 37-வது பாடலையும் காண்க.


குல வியோம பாகீரதி மிலை நாதர் --- 

குலம் - சிறந்த, வியோமம் - வானம். பாகீரதி - கங்கை.


மாலிகா நாகமொடு தாவி --- 

மாலிகா நாகம் - பாம்பு மாலை.

குடில கோமளாகார சடிலம் மோலி மீது ஏறு குமர ---

குடிலம் - வளைந்துள்ள,

கோமளாகாரம் - அழகு மிக்க.

சடிலம் - திருச்சடை.

மோலி - மணிமுடி.

சூரர் கடக வாரி தூளாக அமர் ஆடும் --- 

கடக வாரி - சேனைக் கடல்.

கட கபோல மால் யானை வனிதை பாக --- 

கபோல மால் யானை - கபோல மதம் ஒழுகும் பெரிய யானை - வெள்ளையானை ஆகிய அயிராவதம்.


கருத்துரை

முருகா! மாதர் மயலில் முழுகினும் திருவடி மறவேன்.







 

பொது --- 1057. தொட அடாது

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

தொட அடாது (பொது)


முருகா! 

உணர்வு அருள்வாய்


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


தொடஅ டாது நேராக வடிவு காண வாராது

     சுருதி கூறு வாராலு ...... மெதிர்கூறத்


துறையி லாத தோராசை யிறைவ னாகி யோரேக

     துரிய மாகி வேறாகி ...... யறிவாகி


நெடிய கால்கை யோடாடு முடலின் மேவி நீநானு

     மெனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம்


நிகரில் கால னாரேவ முகரி யான தூதாளி

     நினைவொ டேகு மோர்நீதி ...... மொழியாதோ


அடல்கெ டாத சூர்கோடி மடிய வாகை வேலேவி

     யமர்செய் வீர ஈராறு ...... புயவேளே


அழகி னோடு மானீனு மரிவை காவ லாவேதன்

     அரியும் வாழ வானாளு ...... மதிரேகா


கடுவி டாக ளாரூப நடவி நோத தாடாளர்

     கருதி டார்கள் தீமூள ...... முதல்நாடுங்


கடவு ளேறு மீதேறி புதல்வ கார ணாவேத

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


தொட அடாது, நேராக வடிவு காண வாராது,

     சுருதி கூறுவாராலும் ...... எதிர் கூறத்


துறை இலாதது, ஓர்ஆசை இறைவன் ஆகி, ஓர் ஏக

     துரியம் ஆகி, வேறு ஆகி, ...... அறிவு ஆகி,


நெடிய கால் கையோடு ஆடும் உடலின் மேவி, நீ நானும்

     எனவும் நேர்மை நூல்கூறி, ...... நிறைமாயம்


நிகரில் காலனார் ஏவ, முகரி ஆன தூதாளி

     நினைவொடு ஏகும் ஓர் நீதி ...... மொழியாதோ?


அடல் கெடாத சூர் கோடி மடிய, வாகை வேல் ஏவி,

     அமர்செய் வீர! ஈர்ஆறு ...... புயவேளே!


அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா! வேதன்

     அரியும் வாழ வான் ஆளும் ...... அதி ரேகா!


கடு விடா களா ரூப, நட விநோத தாடாளர்,

     கருதிடார்கள் தீ மூள, ...... முதல்நாடும்


கடவுள், ஏறு மீது ஏறி புதல்வ! காரணா! வேத!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


அடல் கெடாத சூர் கோடி மடிய --- வலிமை கெடாத எண்ணற்ற அரக்கர்கள் மடியுமாறு,

வாகை வேல் ஏவி அமர் செய் வீர --- வெற்றிவேலை விடுத்து அருளிப் போர் புரிந்த வீரரே!

ஈர் ஆறு புய வேளே --- பன்னிரண்டு திருத்தோள்களை உடைய செவ்வேள் பரமரே!

அழகினோடு மான் ஈனும் அரிவை காவலா --- மான் பெற்ற அழகிய பெண்ணாகிய வள்ளிநாயகியின் மணவாளரே!

அரியும் வாழ வான் ஆளும் அதிரேகா --- (பிரமனும்) திருமாலும் (சூரனுக்கு அஞ்சாமல்) வாழும்படியாக வானுலகை ஆளும் மேன்மை உடையவரே!

கடு விடா களா ரூப --- விடம் நீங்காத கழுடத்துடன் கூடிய திருமேனியை உடையவரும், 

நட வினோத தாடாளர் --- அற்புதத் திருக்கூத்து இயற்றும் மேன்மையாளரும்,

கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் கடவுள் --- தன்னை நினைக்காத அரக்கர்களின் திரிபுரங்கள் தீ மூண்டு அழியும்படியாக நாட்டம் வைத்த கடவுளும்,

ஏறு மீது ஏறி புதல்வ --- இடப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் திருப்புதல்வரே! 

காரணா --- மூலகாரணரே!

வேத --- வேதப் பொருளானவரே!

கருணை மேருவே --- கருணையில் மேருமலை போன்று உயர்ந்தவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

தொட அடாது --- தொடுவதற்கு முடியாததாய், 

நேராக வடிவு காண வாராது --- நேராக இன்ன வடிவம் உடையது என்று காணுதற்குக் கிட்டாததாய்,

சுருதி கூறுவாராலும் எதிர் கூற துறை இ(ல்)லாதது --- வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாக இன்னது என்று சொல்வதற்கு வழி இல்லாததாய்,

ஓர் ஆசை இறைவனாகி --- விரும்பும் கடவுள் ஆகி,

ஓர் ஏக துரியமாகி --- ஒப்பற்ற யோகியர் தன்மயமாய் நிற்கும் ஒரு பொருள் ஆகி,

வேறு ஆகி --- இவை அல்லாத பொருள்களும் ஆகி,

அறிவாகி --- அறிவு வடிவாகி,

நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி --- நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு,

நீ நானும் எனவு(ம்) நேர்மை நூல் கூறி நிறை மாயம் (யாதோ?) --- நீ என்றும், நான் என்றும் இருவகையாய் கூறும் நிலைமையானது நூல்களால் சொல்லபட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (இன்னது என்று விளங்கவில்லை, விளக்கி அருள வேண்டும்),

நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி --- ஒப்பில்லாத காலனார் ஏவ ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள்

நினைவோடு ஏகும் ஓர் நீதிமொழி யாதோ? --- மறக்காமல் (உயிரைப் பிரிக்க) வருகின்ற ஒரு நியதி இன்னது என்று விளங்கவில்லை (விளக்கி அருள வேண்டும்.) 

பொழிப்புரை


வலிமை கெடாத எண்ணற்ற அரக்கர்கள் மடியுமாறு, வெற்றிவேலை விடுத்து அருளிப் போர் புரிந்த வீரரே! பன்னிரண்டு திருத்தோள்களை உடைய செவ்வேள் பரமரே! மான் பெற்ற அழகிய பெண்ணாகிய வள்ளிநாயகியின் மணவாளரே! பிரமனும் திருமாலும் சூரனுக்கு அஞ்சாமல் வாழும்படியாக வானுலகை ஆளும் மேன்மை உடையவரே!

        விடம் நீங்காத கழுடத்துடன் கூடிய திருமேனியை உடையவரும், அற்புதத் திருக்கூத்து இயற்றும் மேன்மையாளரும், தன்னை நினைக்காத அரக்கர்களின் திரிபுரங்கள் தீ மூண்டு அழியும்படியாக நாட்டம் வைத்த கடவுளும், இடப வாகனத்தின்மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமானின் திருப்புதல்வரே! 

        மூலகாரணரே! வேதப் பொருளானவரே! கருணையில் மேருமலை போன்று உயர்ந்தவரே!

தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே!

தொடுவதற்கு முடியாததாய், நேராக இன்ன வடிவம் உடையது என்று காணுதற்குக் கிட்டாததாய், வேதப் பொருளைக் கூற வல்லவர்களாலும் விளக்கமாக இன்னது என்று சொல்வதற்கு வழி இல்லாததாய், விரும்பும் கடவுள் ஆகி, ஒப்பற்ற யோகியர் தன்மயமாய் நிற்கும் ஒரு பொருள் ஆகி, இவை அல்லாத பொருள்களும் ஆகி, அறிவு வடிவாகி, நீண்ட கால், கை ஆகிய உறுப்புக்களுடன் நடமாடும் உடலில் இடம் கொண்டு, நீ என்றும், நான் என்றும் இருவகையாய் கூறும் நிலைமையானது நூல்களால் சொல்லபட்டு, அதனால் நிரம்ப ஏற்படும் மாயமான உணர்ச்சி (இன்னது என்று விளங்கவில்லை, விளக்கி அருள வேண்டும்). ஒப்பில்லாத காலனார் ஏவ ஆரவாரத்துடன் வருகின்ற தூதர்கள் மறக்காமல் உயிரைப் பிரிக்க வருகின்ற ஒரு நியதி இன்னது என்று விளங்கவில்லை (அதனையும் விளக்கி அருள வேண்டும்.) 

விரிவுரை

இறைவன் எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு நிற்கின்ற பெரும் பொருளாக உள்ளான். அவனது பெருநிறைவை ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அதனை ஒருவாறு விளங்கிக் கொள்ளலாம். நமக்குத் தெரிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. வானம் எல்லாப் பொருள்களுக்கும் இடம் தந்து நிற்கிறது. நிலம், நீர், தீ, காற்று முலியவற்றைத் தன்னகப்படுத்தி நிற்கிறது. எண்ணற்ற கோள்களையும், விண்மீன்களையும் தன்னுள்ளே தாங்கி நிற்கிறது. அந்த வானைப் போல இறைவன் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கின்றான். எல்லாவற்றிற்கும் தானே ஆதாரமாக நிற்கின்றான். எல்லாவற்றையும் அவனே செயற்படுத்துகின்றான். இதனால், அவனே மேற்பொருள் என்பது விளங்கும்.

உயிரை வடமொழியில் ஆன்மா என்றும், சீவன் என்றும், சீவான்மா என்றும் வழங்குவர். உயிர்கள் எண்ணற்றவை. உயிர்கள் இறைவனிடத்தில் அடங்கியிருப்பவை. இறைவனது பெருநிறைவு, வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம்முறையில் இறைவன் வியாபகம்; உயிர்கள் இறைவனிடத்தில் வியாப்பியம். உயிர் தனக்குக் கீழ்ப்பட்ட பொருள்களாகிய மலங்களின் தொடர்பினால் அறிவு மயங்கித் துன்புறும்; பின் அவற்றின் பிடியிலிருந்து விடுபட்டு மேற்பொருளாகிய இறைவனைச் சார்ந்து இன்புறும். இவ்வாறு மேற்பொருள்; கீழ்ப்பொருள் ஆகிய இரண்டின் வசப்படுவதாய், அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாய் நிற்பதால் உயிர் இடைப் பொருள் ஆயிற்று.

மேற்பொருளாகிய கடவுளும், இடைப்பொருளாகிய உயிரும் அறிவுடைப் பொருள்கள். அவை சித்து எனப்படும். கீழ்ப்பொருளாகிய மலம் ஆணவம், மாயை, கன்மம் என மூவகைப்படும். இவை அறிவற்றவை. இவை சடம் எனப்படும். இம் மூன்றும் உயிரைத் தம் வயப்படுத்தி உயிரின் தூய்மையைக் கெடுத்து நிற்றலாலும் பின்னர் அகற்றப்படுதலாலும் மலம் எனப்பட்டன. மலம் என்பதற்கு அழுக்கு என்று பொருள்.

கடவுளும் உயிரும் சித்து என்ற வகையில் ஓரினம் என்றாலும் அறிவு நிலையில் தம்முள் வேறுபட்டனவாகும். கடவுளது அறிவு பேரறிவு. உயிரினது அறிவு சிற்றறிவு. கடவுளது அறிவு தானே அறிவது, உயிரினது அறிவு அறிவிக்கவே அறிவது. கடவுளது அறிவு எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்து நிற்பது. உயிரினது அறிவு ஒவ்வொன்றாகவே அறிந்து வருவது. கடவுளது அறிவு எதிலும் தோயாமல் தனித்து நின்று அறிவது. உயிரினது அறிவு அறியப்படும் பொருளில் தோய்ந்து, அதிலே அழுந்தி அதன் வண்ணம் ஆவது. இத்தகைய தனித்தன்மைகளால் கடவுளும் உயிரும் ஒரு நிகரன அல்ல என்பது விளங்கும்.

கடவுட்பொருள் மிக நுண்ணியதாய் இருத்தலின் ஆணவம் முதலிய மலங்களால் பற்றப்படுதல் இன்றி, என்றும் தூயதாய் நிற்பது. கடவுளை நோக்க உயிர் பருமையானது ஆகலின் அம்மலங்களால் பற்றப்படுதற்கு உரியதாயிற்று. இதற்கு ஓர் எடுத்துக்காட்டுக் கூறலாம். கடலாகிய இடத்தில் நீர் நிரம்பியிருக்கிறது. அந்நீர் முழுதையும் உப்புப் பற்றியிருக்கிறது. கடல் இடம் என்பது நுண்ணியது ஆகலின் பருமையான உப்பு நுண்ணிய கடல் வெளியைப் பற்றமாட்டாமல், பருமையான நீரையே பற்றுவதாயிற்று. அந்த உப்பைப் போன்றவை மலங்கள். கடல் நீரைப் போன்றவை உயிர்கள்.

தொட அடாது --- 

கடவுள் என்பது உண்மையில் வடிவு உடைய பொருள் அல்ல. எனவே, அதைக் கையால் தொட்டு உணரமுடியாது.

நேராக வடிவு காண வாராது --- 

இன்ன வடிவம் உடையது கடவுள் என்றும் நிச்சயமாக றிந்து கொள்ள முடியாது.

சுருதி கூறுவாராலும் எதிர் கூற துறை இ(ல்)லாதது --- 

வேதங்களாலும் அறிய முடியாத பொருள் கடவுள். வேதங்களே இன்னமும் இறைவனைதே தேடிக் கொண்டு இருக்கின்றன. வேதங்களாலும் அறிய முடியாதபடி ஆழ்ந்து, அகன்ற நுண்ணியன் ஆக உள்ளவன் இறைவன். "வேதங்கள் ஐயா ஏ, ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே" என்பது மணிவாசகம்.

ஓர் ஆசை இறைவனாகி --- 

இறைவன் அவரவர் கருதும் வடிவில் எழுந்தருள் புரிவான்.

ஓர் ஏக துரியமாகி --- 

துரியம் - யோகியர் தன்மயமாய் நிற்கும் ஒரு பொருள்.

வேறு ஆகி --- 

"வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி" என்றார் அப்பர் பெருமான். 

அறிவாகி --- 

இறைவன் மேலான அறிவு வடிவாக உள்ளவன். "அறிவும் அறியாமையும் கடந்த அறிவு திருமேனி" என்பார் அருணகிரிநாதர்.

நெடிய கால் கையோடு ஆடும் உடலில் மேவி --- 

உயிருக்கு உயிராக இருந்து அவைகளை இயக்குபவன் இறைவன்.

நீ நானும் எனவு(ம்) நேர்மை நூல் கூறி நிறை மாயம் (யாதோ?) --- 

எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து நிற்கும் அறிவுப் பொருளாகிய இறைவனைத் தனிப்பொருள் எனவும் உயிரைத் தனிப்பொருள் எனவும் இரண்டு விதமாக நூல்கள் கூறுவது அறியாமை. ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது என்பதை, குருநாதனாக எழுந்தருளி விளக்கி அருள முருகப் பெருமானை வேண்டுகிறார் அடிகளார்.

நிகரில் காலனார் ஏவ முகரியான தூதாளி நினைவோடு ஏகும் ஓர் நீதிமொழி யாதோ? --- 

முகரி - ஆரவாரம்.

உயிர்களை காலக் கிரமத்தில் உடலில் இருந்து பிரித்துக் கொண்டு காலதூதர்கள் போவது ஒரு நியமமாக உள்ளது. இதுவும் எதற்காக என்று விளக்கி அருள வேண்டுகிறார் அடிகளார்.

அரியும் வாழ வான் ஆளும் அதிரேகா --- 

அதிரேகம் - வியப்பு, மேன்மை, மேம்பாடு.

கடு விடா களா ரூப --- 

களம் - கழுத்து. 

நட வினோத தாடாளர் --- 

தாடாளர் - மேன்மை உடையவர்.

கருதிடார்கள் தீ மூள முதல் நாடும் கடவுள் --- 

திரிபுர தகனத்தைக் கூறுகின்றார் அடிகளார்.


கருத்துரை

முருகா! உணர்வு அருள்வாய்






பொது - 1056. சுருதிஊடு கேளாது

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

சுருதிஊடு கேளாது (பொது)


முருகா!

ஒன்றாலும் அழியாத பரமஞானத்தை உபதேசித்து அருள்வீர்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது

     துரிய மீது சாராது ...... எவராலுந்


தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத

     சுகம கோத தீயாகி ...... யொழியாது


பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது

     பவனம் வீசில் வீழாது ...... சலியாது


பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது

     பரம ஞான வீடேது ...... புகல்வாயே


நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள

     நிபிட தாரு காபூமி ...... குடியேற


நிகர பார நீகார சிகர மீது வேலேவு

     நிருப வேத ஆசாரி ...... யனுமாலும்


கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி

     ககன சாரி பூசாரி ...... வெகுசாரி


கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                    பதம் பிரித்தல்


சுருதி ஊடு கேளாது, சரியை ஆளர் காணாது,

     துரியம் மீது சாராது, ...... எவராலும்


தொடர ஒணாது, மாமாயை இடை புகாது, ஆனாத

     சுக மகா உததீயாகி ...... ஒழியாது,


பருதி காயில் வாடாது, வடவை மூளில் வேகாது,

     பவனம் வீசில் வீழாது, ...... சலியாது,


பரவை சூழில் ஆழாது, படைகள் மோதில் மாயாது,

     பரம ஞான வீடு ஏது ...... புகல்வாயே.


நிருதர் பூமி பாழ் ஆக, மகர பூமி தீ மூள,

     நிபிட தாருகா பூமி ...... குடியேற,


நிகர பார நீகார சிகர மீது வேல் ஏவு

     நிருப! வேத ஆசாரி ...... யனும், மாலும்


கருதும் ஆகம ஆசாரி, கனக கார்முக ஆசாரி,

     ககன சாரி, பூசாரி, ...... வெகுசாரி


கயிலை நாடக ஆசாரி, சகல சாரி வாழ்வு ஆன

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


நிருதர் பூமி பாழாக --- அரக்கர்களின் நாடு நகரங்கள் இடிந்து அழிந்து ஒழியுவும்,

மகர பூமி தீ மூள --- மகர மீன்கள் வாழுகின்ற கடல் வற்றி நெருப்பு மூளவும்,

நிபிட தாரு கா பூமி குடி ஏற --- நெருங்கியுள்ள கற்பகம் முதலிய தருக்களை உடைய விண்ணுலகத்தில் தேவர்கள் குடியேறவும்,

நிகர பார நீகார சிகரம் மீது வேல் ஏவு நிருப --- பூத சேனைகளை விழுங்கியதும், கனமானதும், அவமதிக்கத் தக்கதும் ஆகிய கிரவுஞ்ச மலைமீது வேலாயுதத்தை விடுத்து அருளிய தலைவரே!

வேத ஆசாரியனும் மாலும் கருதும் மாக மா சாரி --- வேதங்களில் வல்ல பிரமதேவனும், நாராயணரும் தியானிக்கின்ற  ஞானவெளியாகிய அம்பலத்தில் ஆடுகின்றவரும்,

கனக கார்முக ஆசாரி --- பொன்மலையாகிய மேருமலையை வில்லாக உடைய குருநாதரும்,

ககன சாரி, பூசாரி, வெகு சாரி கயிலை நாடகாசாரி --- பெருவெளியில் விளங்குபவரும், பூசிக்கத்தக்கவரும், திருக்கயிலையில் அநேக விதமான திருநடனம் புரிகின்றவரும்,

சகல சாரி வாழ்வான --- எல்லா இடங்களிலும் சஞ்சரிப்பவரும் ஆகிய சிவபெருமானுடைய பெருவாழ்வு தரும் திருக்குமாரராகிய

கருணை மேருவே --- கருணையில் மேருமலை போல் உயர்ந்து விளங்கும்

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

சுருதி ஊடு கேளாது --- வேதங்களிடை கேட்டு அறியமுடியாதது.

சரியையாளர் காணாது --- சரியை நெறியில் நின்றவர்களால் கண்டு அறிய முடியாதது.

துரியம் மீது சாராது --- துரிய நிலையில் வந்து பொருந்தாதது.

எவராலும் தொடர ஒணாது --- யாராலும் தொடர்ந்து எட்ட முடியாதது.

மா மாயை இடை புகாது --- பெரிய மாயைக்குள் அகப்படாதது.

ஆனாத சுக மகா உததீ ஆகி ஒழியாது --- ஒருபோதும் கெடாத பெரிய இன்பக் கடல் ஆகியும் ஒருபொழுதும் முடிவு இல்லாதது.

பருதி காயில் வாடாது --- கதிரவன் வெயிலினால் வாடாதது.

வடவை மூளில் வேகாது --- வடவைத் தீயில் வெந்து அழியாதது.

பவனம் வீசில் வீழாது சலியாது --- பெருங்காற்று வீசினால் சாய்ந்து விழாதது, சலித்தல் இன்றி ஒரு தன்மையாகத் திகழ்வது.

பரவை சூழில் ஆழாது --- கடல் நீர் பொங்கி வந்தாலும் அழுந்தாதது.

படைகள் மோதில் மாயாது --- ஆயுதங்களினால் தாக்கினாலும் அழியாதது.

பரம ஞான வீடு ஏது புகல்வாயே --- இத்தனைப் பெருமைகளும் உடைய பெரிய ஞான வீடுபேறு எதுவோ, அதனை அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்.


பொழிப்புரை

அரக்கர்களின் நாடு நகரங்கள் இடிந்து அழிந்து ஒழியுவும், மகர மீன்கள் வாழுகின்ற கடல் வற்றி நெருப்பு மூளவும், நெருங்கியுள்ள கற்பகம் முதலிய தருக்களை உடைய விண்ணுலகத்தில் தேவர்கள் குடியேறவும், பூத சேனைகளை விழுங்கியதும், கனமானதும், அவமதிக்கத் தக்கதும் ஆகிய கிரவுஞ்ச மலைமீது வேலாயுதத்தை விடுத்து அருளிய தலைவரே!

வேதங்களில் வல்ல பிரமதேவனும், நாராயணரும் தியானிக்கின்ற ஞானவெளியாகிய அம்பலத்தில் ஆடுகின்றவரும், பொன்மலையாகிய மேருமலையை வில்லாக உடைய குருநாதரும், பெருவெளியில் விளங்குபவரும், பூசிக்கத்தக்கவரும், திருக்கயிலையில் அநேக விதமான திருநடனம் புரிகின்றவரும்,  எல்லா இடங்களிலும் சஞ்சரிப்பவரும் ஆகிய சிவபெருமானுடைய பெருவாழ்வு தரும் திருக்குமாரராகிய, கருணையில் மேருமலை போல் உயர்ந்து விளங்கும், தேவர்கள் போற்றும் பெருமையின் மிக்கவரே!

வேதங்களிடை கேட்டு அறியமுடியாதது.

சரியை நெறியில் நின்றவர்களால் கண்டு அறிய முடியாதது.

துரிய நிலையில் வந்து பொருந்தாதது.

யாராலும் தொடர்ந்து எட்ட முடியாதது.

பெரிய மாயைக்குள் அகப்படாதது.

ஒருபோதும் கெடாத பெரிய இன்பக் கடல் ஆகி, ஒருபொழுதும் முடிவு இல்லாதது.

கதிரவன் வெயிலினால் வாடாதது.

வடவைத் தீயில் வெந்து அழியாதது.

பெருங்காற்று வீசினால் சாய்ந்து விழாதது, சலித்தல் இன்றி ஒரு தன்மையாகத் திகழ்வது.

கடல் நீர் பொங்கி வந்தாலும் அழுந்தாதது.

ஆயுதங்களினால் தாக்கினாலும் அழியாதது.

இத்தனைப் பெருமைகளும் உடைய பெரிய ஞான வீடுபேறு எதுவோ, அதனை அடியேனுக்கு உபதேசித்து அருள் புரிவீர்.


விரிவுரை


நிருதர் பூமி பாழாக ---

சூராதி அவுணர்கள் வாழ்ந்த விரமகேந்திரபுரம், ஆசுரம், மாயமாபுரம் முதலிய பெரும்பட்டினங்கள் வேலாயுதத்தாலும், முருகவேள் பணித்தபடி வருணனாலும் அழிந்துபட்டன.

வேல் - ஞானம். அசுரர் - அஞ்ஞானம். ஞானத்தினால் அஞ்ஞானத்தின் இருப்பிடங்கள் அழிவுற்றன.

மகர பூமி தீ மூள ---

மகர மீன்கள் வாழ்வதனால் கடலுக்கு மகராலயம் என்று ஒரு பேர் உண்டு. நூறு ஆயிரம் கோடி அண்டங்களில் உள்ள அக்கினிகளும் ஒருங்கே திரண்டது போன்ற வேலாயுதத்தின் வெம்மையால் கடல் வற்றி வறண்டுவிட்டது.


"மாலை இட்ட சிரங்கள் செவேல் செவேல்என

     மேல் எழுச்சி தரும்பல் வெளேல் வெளேல்என

     வாகை பெற்ற புயங்கள் கறேல் கறேல்என ......எதிர்கொள்சூரன்

மார்பும் ஒக்க நெரிந்து கரீல் கரீல்என

     பேய்கு திக்க நிணங்கள் குழூ குழூஎன

     வாய்பு தைத்து விழுந்து ஐயோ ஐயோஎன ......உதிரம்ஆறாய்


வேலை வற்றி வறண்டு சுறீல் சுறீல்என

     மாலை வெற்பும் இடிந்து திடீல் திடீல்என

     மேன்மை பெற்ற ஜனங்கள் ஐயா ஐயாஎன ...... விசைகள்கூற

வேல் எடுத்து நடந்த திவா கரா,சல

     வேடு வப்பெண் மணந்த புயா சலா,தமிழ்

     வேத வெற்பில் அமர்ந்த க்ருபா கரா,சிவ ......குமரவேளே." --- (ஓலமிட்ட) திருப்புகழ்.

கடல் என்பது பிறவியைக் குறிக்கும். பிறவிப் பெருங்கடல் என்பார் திருவள்ளுவர். "பவசாகரத்தில் அழுந்தி" என்பது வேதமலைத் திருப்புகழ். ஆகவே, பிறவியாகிய கடல் ஞானமாகிய வேலினால் வற்றிவிட்டது என்பதை உணர்க.

"வேலைதுகள் பட்டுமலை சூரன்உடல் பட்டுஉருவ

    வேலைஉற விட்டதனி      வேலைக் காரனும்;"       --- திருவேளைக்காரன் வகுப்பு.


நிபிட தாருகா பூமி குடியேற ---

நிபிடம் - நெருக்கம். தாருகாபூமி - தரு (மரம்) உள்ள இடம். விண்ணுலகத்தில் கற்பகம், அரிசந்தனம், மந்தாரம், சந்தானம், பாரிசாதம் என்ற ஐந்துவிதமான தருக்கள் உண்டு. இவைகள் அநேக நலன்களைச் செய்ய வல்லவை. பாற்கடல் கடைந்தபோது, அமிர்தத்துடன் பிறந்தவை. இப் பொன்னுலகிற்குத் தலைநகரம் அமராவதி. சூரபன்மனுடைய மகன் பானுகோபன், பொன்னுலகைக் கவர்ந்து கொண்டான். இந்திரன் முதலிய இமையவர் பல யுகங்கள் நாடு நகரங்களை இழந்து பெருங்கவலை உற்றார்கள். முருகப் பெருமான் சூர் முதலை வேர்முதலோடு களைந்து, விண்ணவரைப் பொன்னுலகில் குடியேற்றினார்.

நிகர பார நீகார சிகரம் ---

நிகரம் - விழுங்குகை. பாரம் - திண்மை. நீகாரம் - அவமதிப்பு. சிகரம் - மலை, கிரவுஞ்சகிரி.

கிரவுஞ்சமலை மாயையினால் பூத சேனைகளையும் இலக்கத்து ஒன்பான் வீரர்களையும் விழுங்கியது. அம்மலையை வேற்படையால் பிளந்து, குமரவேள் அமரரை வாழ வைத்தருளினார்.

வேத ஆசாரியன் ---

வேதங்களில் வல்லவர் பிரமதேவர். வேதன் என்ற பேரும் உடையவர்.

கருதும் மாக மா சாரி ---

கருதுதல் - தியானித்தல். மாகம் - ஆகாயம்.  மா - பெருமை.  சாரி - நடிப்பவர்.

ஆகாயத் தலமாகிய சிதம்பரத்தில் ஒருபுறம் திருமாலும், மற்றொரு புறத்தில் பிரமதேவரும் இருந்து அம்பலவாணரைத் தியானித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

அகில உலகங்களும் உய்யும்பொருட்டு, எம்பெருமான் ஆதியும் அந்தமும் இன்றி, அநவரத ஆனந்தத் தாண்டவமாடுகின்றான்.  எல்லாப் பொருள்களும் அதனால் வாழுகின்றன.

நம்முடைய நிழலை நாம் அசையச்செய்ய வேண்டுமானால் நாம் அசைய வேண்டும். நாம் அசைந்தால், நமது நிழல் அசையும்.  அதுபோல், நடராஜமூர்த்தி ஆடுவதனால் தான், கதிர் மதி மண் விண் அணு முதிலய அனைத்தும் அசைகின்றன.

"ஆகம ஆசாரி" என்று பொருள் கொண்டாலும் பொருந்தும் என்பது அறிக. வேதங்களையும் ஆகமங்களையும் திருவாய் மலர்ந்து அருளியவர் சிவபரம்பொருள்.


"தொகுத்தவன் அருமறை அங்கம், ஆகமம்

வகுத்தவன், வளர்பொழில் கூகம் மேவினான்,

மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்துஅறச்

செகுத்தவன் உறைவிடம் திருவிற் கோலமே."


"எரித்தவன் முப்புரம் எரியின் மூழ்க,

தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்,

விரித்தவன் வேதங்கள் வேறுவேறு

தெரித்தவன் உறைவிடம் திருவல்லமே."


எனவரும் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய பாடல்களைக் காண்க.


"எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர், தாம் விரும்பும்

உண்மை ஆவது பூசனை என உரைத்து அருள

அண்ண லார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள்

பெண்ணில் நல்லவள் ஆயின பெருந்தவக் கொழுந்து."


என்னும் பெரியபுராணப் பாடலையும் கருத்தில் கொள்க.


கனக கார்முக ஆசாரி ---

கனகம் - பொன். கார்முகம் - வில்.

திரிபுர சங்கார காலத்தில் சிவபெருமான் போன்மலையாகிய மேருமலையை வில்லாகப் பிடித்தருளினார். அதனால், மலைவில்லார் என்று அவருக்கு ஒரு பேர் உண்டு.

"கல்லால் நிழல் மலை வில்லார் அருளிய

பொல்லார் இணையடி நல்லார் புனைவரே"..---  சிவஞானபோதம்.


ககன சாரி ---

ககனம் - வெளி. வெளிகளுக்கும் அப்பால் உள்ள பரவெளி. நாம் உலாவுகின்ற வெளி பூதாகாசம். அது ஞானாகாசம். அங்கே இறைவனுடைய அருளால் நிகழ்கின்றது.


பூசாரி ---

பூசை செய்பவன் பூசாரி.

சிவபெருமான் சேர்ந்து அறியாக் கையான். தலையாய தேவாதி தேவர்க்கெல்லாம் சேயான். ஆதலினால், அவர் ஒருவரையும் வழிபடுவதில்லை. வழிபாட்டு முறையைக் காட்ட தன்னைத் தானே பூசிப்பார்.


"பூசையும், பூசைக்கு ஏற்ற பொருள்களும், பூசைசெய்யும்,

நேசனும், பூசைகொண்டு நியதியில் பேறுநல்கும்,

ஈசனும்ஆகி, பூசையான் செய்தேன் எனும் என்போத,

வாசனை அதுவும்ஆன மறைமுதல் அடிகள் போற்றி."  ---  திருவிளையாடல் புராணம்.

எல்லாராலும் பூசிக்கப்படுபவர். சகல தேவர்களும் அவரைப் பூசித்து, எல்லா நலன்களையும் பெற்றார்கள். திருவீழிமிழலை, திருப்பிரமபுரம், திருக்கண்ணார் கோயில் முதலிய திருத்தலங்களைக் காண்க.

வெகுசாரி கயிலை நாடகாசாரி ---

சாரி - வட்டமாக ஓடுதல்.

"சயிலாங்க னைக்கு ருகியி டப்பக்

     கங்கொ டுத்த கம்பர் ...... வெகுசாரி

சதிதாண்ட வத்தர் சடை இடத்துக்

     கங்கை வைத்த நம்பர் …." ---  திருப்புகழ்.

இறைவன் திருநடனம் புரியும் போது வட்டமாகவும் வேறு பல விதமாகவும் சுழன்றனர். கலைகளுக்குள் உயர்ந்த கை நடனக் கலை.  அக் கலைக்குப் பரதநூல் என்ற ஒரு பேரும் உண்டு.

ப – பாவம். ர – ராகம். த – தாளம். பாவ ராக தாளம் மூன்றுடன் கூடியது பரதம்.  இக் கலைக்கு குருநாதர் நடராஜமூர்த்தி.

"திமிதம்என முழஒலிமு ழங்கச் செங்கைத்

     தமருகம் அதுஅதிர்சதியொடு அன்பர்க்கு இன்பத்

          திறம்உதவு பரதகுரு வந்திக் கும்சற் ...... குருநாதா!"    --- (அமுதுததி) திருப்புகழ்.


சகல சாரி ---

சாரி - சஞ்சரித்தல். எல்லாப் பொருள்களிலும் இறைவன் நீக்கமற நிறைந்து இருக்கின்றான். அதனால், எல்லாவற்றையும் அறிகின்றான். அறிந்து எல்லாவற்றையும் அசைக்கின்றான்.

"அண்ட பகிரண்டமும் அடங்க ஒருநிறைவாகி

ஆனந்தம் ஆன பரமே.".. ---  தாயுமானார்.


சுருதி ஊடு கேளாது ---

இறைவனால் அருளப்படுவது சிவஞானம் என்னும் பரஞானம்.  வேதாகமங்கள் அபரஞானம் என்னும் கலைஞானம். அபர ஞானத்தால் பரஞானத்தை அறிய முடியாது. பரஞானம் உதிப்பதற்கு அபரஞானம் துணை புரியும்.

சுருதி - வேதம். காதால் கேட்கப்படுவது என்பது இதன் பொருள்.  வேதம் என்பது எழுதாக்கிளவி. "வேதத்தில் கேள்வி இலாதது" என்றார் சுவாமிகள் பிறிதொரு திருப்புகழிலும்.


சரியையாளர் காணாது ---

சரியை - இறைவனை அடைதற்குரிய படிகளில் ஒன்று. அதிலேயே நின்றவர் இறைவனை அடைய முடியாது. சரியை அரும்பு போன்றது. அதனால்தான், ஞானமாகிய கனி உண்டாகும். சரியை - அரும்பு. கிரியை - மலர். யோகம் - காய். ஞானம் - கனி.


"விரும்பும் சரியைமுதல் மெய்ஞ் ஞானம் நான்கும்

அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே". ---  தாயுமானார்.


அரும்பு மலராக வேண்டும். மலர் காயாக வேண்டும். காய் கனியாக வேண்டும். அங்ஙனம் இன்றி அரும்பு மலராது கருகி விடுமாயின் அரும்பினால் பயனில்லை. அதுபோல், சரியையால் கிரியையும், கிரியையால் யோகமும்,யோகத்தால் ஞானமும் பெறவேண்டும்.  பரகதிக்கு நேர்வழி ஞானம் ஒன்றே ஆகும். "ஞானம் அலது கதி கூடுமோ" என்றார் தாயுமானார்.

"ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும் ஓத அரிய துரியம் கடந்தது" என்று திருவானைக்கா திருப்புகழில் அடிகளார் பாடி உள்ளமை காண்க.


"புறச்சமய நெறிநின்றும், அகச்சமயம் புக்கும்,

புகல்மிருதி வழிஉழன்றும், புகலும் ஆச்சிரம

அறத்துறைகள் அவை அடைந்தும், அருந்தவங்கள் புரிந்தும்,

அருங்கலைகள் பலதெரிந்தும், ஆரணங்கள் படித்தும்,

சிறப்புடைய புராணங்கள் உணர்ந்தும், வேத

சிரப் பொருளை மிகத் தெளிந்தும் சென்றால், சைவத்

திறத்து அடைவர்; இதில்சரியை கிரியா யோகம்

செலுத்தியபின் ஞானத்தால் சிவன் அடியைச் சேர்வர்."--- சிவஞானசித்தியார்.


"ஞானநூல் தனைஓதல் ஓதுவித்தல்

நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா

ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும்

இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை,

ஊனம்இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம்

ஒன்றுக்கு ஒன்று உயரும்; இவை ஊட்டுவது போகம்,

ஆனவையால், மேலான ஞானத்தால் அரனை

அருச்சிப்பர் வீடுஎய்த அறிந்தோர் எல்லாம்." --- சிவஞானசித்தியார்.


"கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை

கிளத்தல் எனஈர் இரண்டாம் கிளக்கில் ஞானம்,

வீட்டை அடைந்திடுவர் நிட்டை மேவினோர்கள்,

மேவாது தப்பினவர் மேலாய பதங்கட்கு

ஈட்டிய புண்ணிய நாதர் ஆகி, இன்பம்

இனிது நுகர்ந்து, அரன் அருளால் இந்தப் பார்மேல்

நாட்டியநல் குலத்தினில் வந்து அவதரித்து, குருவால்

ஞானநிட்டை அடைந்து, அடைவர் நாதன் தாளே."--- சிவஞானசித்தியார்.


"ஞானத்தால் வீடு என்றே நான்மறைகள் புராணம்

நல்ல ஆகமம் சொல்ல, அல்லவாம் என்னும்

ஊனத்தார் என் கடவர், அஞ்ஞானத்தால்

உறுவதுதான் பந்தம், உயர் மெய்ஞ்ஞானந்தான்

ஆனத்தால் அது போவது, அலர் கதிர் முன் இருள்போல்

அஞ்ஞானம் விட, பந்தம் அறும் முத்தி ஆகும்,

ஈனத்தார் ஞானங்கள் அல்லா ஞானம்,

இறைவன் அடி ஞானமே ஞானம் என்பர்."--- சிவஞானசித்தியார்.


"சரியையா ளர்க்கும்,அக் கிரியையா ளர்க்கும்,நல்

     சகலயோ கர்க்கும்எட்ட ...... அரிதாய

சமயபே தத்தினுக்து அணுகஒணா மெய்ப்பொருள்

     தருபரா சத்தியிம் ...... பரமான

துரியமேல் அற்புதப் பரமஞா னத்தனிச்

     சுடர்வியா பித்தநற் ...... பதி...." ---  திருப்புகழ்.


துரியம் மீது சாராது ---

துரியம் நான்காவது அவத்தை. அது நாபியில் பிராணனுடன் புருடன் கூடி நிற்கும் நிலை.

"வழுத்திய நாபியில் துரியப் பிராணனோடு

மன்னுபுருடனும் கூடி வயங்கா நிற்கும்.".. ---  தாயுமானார்.

அதற்கு மேல் துரியாதீதம். அது மூலாதாரத்தில் புருடன் மட்டும் தனித்து நிற்பது. அவத்தை ஐந்தும் கடந்த இடத்திலே விளங்குவது ஞானம்.


"அட்டாங்க யோகமும், ஆதாரம்ஆறும், அவத்தைஐந்தும்

விட்டு,ஏறிப் போன வெளிதனிலே வியப்பு ஒன்று கண்டேன்,

வட்டு ஆகி, செம் மதிப் பால் ஊறல் உண்டு மகிழ்ந்து இருக்க,

எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி இருக்கின்றதே."   ---  பட்டினத்தார்.


எவராலும் தொடர ஒணாதது ---

"யாவர் ஆயினும் அன்பர் அன்றி அறிய ஒண்ணா மலர்ச் சோதியான்" என்பது மணிவாசகம். எவராலும் என்பது ஏனைய சமயவாதிகளைக்

குறிக்கின்றது. சிவசமய நெறிநின்று சித்தாந்த ஞானம் உள்ள, சரியை கிரியை யோகங்களைப் பயின்று, பின் திருவருளால் உண்டாகும் சிவஞானம் ஒன்றாலேயே அது அறியத்தக்கது. அந்த ஞானம் கைவரப் பெற்ற நம்பியாரூரர் தொடர்ந்து பற்றினார்.


"ஆவணம் பறிக்கச் சென்ற அளவினில் அந்தணாளன்

காவணத்து இடையே ஒட, கடிது பின்தொடர்ந்து நம்பி

பூவணத் தவரை உற்றார், அவர்அலால் புரங்கள் செற்ற

ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந்து எட்டவல்லார்?"     ---  பெரியபுராணம்.


ஓல மறைகள் அறைகின்ற ஒன்றுஅது,

மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர்,

ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவர் எவராலும்

ஓத அரிய துரியம் கடந்தது,.... ---  திருப்புகழ்.



மாமாயை இடை புகாது ---

மாயா ---  மா - தோற்றம். யா - ஒடுக்கம். உலகத்தின் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமாக இருப்பது மாயை. அம் மாயைக்கு அப்பால்பட்டது மெய்ப்பொருள்.


"வாசித்துக் காண ஒணாதது பூசித்துக் கூட ஒணாதது

     வாய்விட்டுப் பேச ஒணாதது ...... நெஞ்சினாலே

மாசர்க்குத் தோண ஒணாதது நேசர்க்குப் பேர ஒணாதது

     மாயைக்குச் சூழ ஒணாதது... " ---  திருப்புகழ்.


ஆனாத சுக மகா உததி ஆகி ---

ஆனாத – கெடாத. மெய்ஞ்ஞானத்தால் வரும் சுகம் ஒருபோதும் கெடாததும் நீங்காததும் ஆகும்.

"ஆனாத ஞான புத்தியைக் கொடுத்ததும்",  "ஆனா அமுதே அயில் வேல் அரசே" எனவரும் திருவாக்குகளைச் சிந்திக்கவும்.

சுகம் - இன்பம். மகா உததி - பெருங்கடல். பேரின்பப் பெருங்கடல். "வீடு பரம சுக சிந்து" என்கின்றார் திருவானைக்கா திருப்புகழில்.

பருதி காயில் வாடாது, வடவை மூளில் வேகாது ---

நித்தியமாய் உள்ள அப்பொருளை சூரியனால் உலர்த்தமுடியாது.  நெருப்பால் வேகவைக்க முடியாது.  காற்றினால் அசைக்கமுடியாது. தண்ணீரால் கரைக்க முடியாது. ஆயுதங்களால் சேதிக்க முடியாது.  பகவத் கீதை காண்க. "ஆதித்தற் காய ஒண்ணாதது, வேகத்துத் தீயில் வேகாதது" என்று அடிகளார் பிறிதொரு திருப்புகழில் பாடி உள்ளது அறிக.


பரமஞான வீடு ---

வீடு - விடுபடுவது. பந்தத்தினின்றும் விடுபடுவது வீடு. அது, சிறந்த சிவஞானத்தினால் நிகழ்வது.


கருத்துரை

முருகா! ஒன்றாலும் அழியாத பரமஞானத்தை உபதேசித்து அருள்வீர்.




பொது - 1055. குருதி தோலினால்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

குருதி தோலினால் (பொது)


முருகா! 

தேவரீரது திருவடியைப் பாடி உய்ய அருள்வீர்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


குருதி தோலி னால்மேவு குடிலி லேத மாமாவி

     குலைய ஏம னாலேவி ...... விடுகாலன்


கொடிய பாச மோர்சூல படையி னோடு கூசாத

     கொடுமை நோய்கொ டேகோலி ...... யெதிராமுன்


பருதி சோமன் வானாடர் படியு ளோர்கள் பாலாழி

     பயமு றாமல் வேலேவு ...... மிளையோனே


பழுது றாத பாவாண ரெழுதொ ணாத தோள்வீர

     பரிவி னோடு தாள்பாட ...... அருள்தாராய்


மருது நீற தாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி

     மடுவி லானை தான்மூல ...... மெனவோடி


வருமு ராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்

     வசன மோம றாகேசன் ...... மருகோனே


கருதொ ணாத ஞானாதி எருதி லேறு காபாலி

     கடிய பேயி னோடாடி ...... கருதார்வெங்


கனலில் மூழ்க வேநாடி புதல்வ கார ணாதீத

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம்ஆவி

     குலைய, ஏமனால் ஏவி ...... விடுகாலன்


கொடிய பாசம் ஓர் சூல படையி னோடு, கூசாத

     கொடுமை நோய் கொடே, கோலி ...... எதிராமுன்,


பருதி, சோமன், வான்நாடர், படி உளோர்கள், பால்ஆழி

     பயம் உறாமல் வேல் ஏவும் ...... இளையோனே!


பழுது உறாத பாவாணர் எழுத ஒணாத தோள்வீர!

     பரிவினோடு தாள் பாட ...... அருள்தாராய்.


மருது நீறு அதுஆய் வீழ, வலிசெய் மாயன், வேய் ஊதி

     மடுவில் ஆனை தான் மூலம் ...... என, ஓடி


வரு முராரி, கோபாலர், மகளிர் கேள்வன், மாதாவின்

     வசனமோ மறா கேசன் ...... மருகோனே!


கருத ஒணாத ஞான ஆதி, எருதில் ஏறு காபாலி,

     கடிய பேயினோடு ஆடி, ...... கருதார் வெம்


கனலில் மூழ்கவே நாடி புதல்வ! காரண அதீத!

     கருணை மேருவே தேவர் ...... பெருமாளே.


பதவுரை


பருதி சோமன் வான்நாடர் படிஉளோர்கள் --- சூரியன், சந்திரன், வானோர்கள், உலகில் உள்ளோர்கள்,

பால்ஆழி பயம் உறாமல் வேல்ஏவும் இளையோனே ---  திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் (ஆகிய இவர்கள்) கொண்ட அச்சம் நீங்க வேண்டி வேலை விடுத்து அருளிய இளையவயரே! 

பழுது உறாத பாவாணர் எழுத ஒணாத தோள் வீர --- குற்றம் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த பாவாணர்களாலும் எழுத்தில் வடிக்க முடியாத அழகிய திருத்தோள்களை உடைய வீரரே! 

மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் --- மருதமரம் பொடிபட்டு விழுமாறு வல்லமையைக் காட்டிய திருமால்,

வேய் ஊதி --- புல்லாங்குழலை ஊதுபவர், 

மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி --- நீர்நிலையில் கஜேந்திரம் என்னும் யானையானது ஆதிமூலமே என்று ஓலமிட்ட போது ஓடி வந்து காத்த (முரன் என்னும் அசுரனைக் கொன்ற) முராரி.

கோபாலர் மகளிர் கேள்வன் --- ஆயர் குலத்து கோபிகை மகளிரின் உள்ளம் கவர்ந்தவர், 

மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே --- தாயின் சொல்லை மறுக்காத கேசவனின் திருமருமகரே!

கருத ஒணாத ஞான ஆதி --- எண்ணுதற்கு அரிய ஞான முதல்வரும்,

எருதில் ஏறு காபாலி --- காளை வாகனத்தை உடையவரும், பிரமகபாலத்தைத் திருக்கையில் ஏந்தியவரும்,

கடிய பேயினோடு ஆடி --- கடுமை வாய்ந்த பேய்களோடு ஆடல் புரிபவரும்,

கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி புதல்வ --- தன்னைக் கருதாதவர்கள் கொடிய அனலில் மூழ்குமாறு திருக்கண் சாத்தியவரும் ஆன சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

காரண அதீத --- காரணங்களுக்கு அப்பாற்பட்டவரே!

கருணை மேருவே --- கருணையில் மேருமலையைப் போன்றவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

குருதி தோலினால் மேவு குடிலில் --- இரத்தம், தோல் ஆகியவற்றினால் ஆன உடம்பாகிய குடிசையில்,

ஏதம் ஆம் ஆவி குலைய --- கேடு அடையும்படியாக இந்த உயிர் நீங்கும்படி, 

ஏமனால் ஏவி விடு காலன் --- இயமானல் ஏவி விடப்படுகின்ற காலன்,

கொடிய பாசம் --- கொடிய பாசத்தையும்,

ஓர் சூல படையினோடு --- ஒப்பற்ற சூலாயுதத்தோடும், 

கூசாத கொடுமை நோய்கொடே கோலி எதிரா முன் --- சற்றும் கூச்சம் இல்லாமல் பொல்லாத துன்பநோய்களைத் தந்து அடியேனை எதிர்ப்படுவதன் முன்பாக, 

பரிவினோடு தாள் பாட அருள் தாராய் --- அன்போடு உமது  திருவடியைப் பாடும்படியாகத் திருவருள் புரிவீராக.  


பொழிப்புரை


சூரியன், சந்திரன், வானோர்கள், உலகில் உள்ளோர்கள், திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமால் முதலானவர்கள் கொண்ட அச்சம் நீங்க வேண்டி வேலை விடுத்து அருளிய இளையவயரே! 

குற்றம் இல்லாத பாக்களைப் பாடும் திறமை வாய்ந்த பாவாணர்களாலும் எழுத்தில் வடிக்க முடியாத அழகிய திருத்தோள்களை உடைய வீரரே! 

மருதமரம் பொடிபட்டு விழுமாறு வல்லமையைக் காட்டிய திருமால்னவ; புல்லாங்குழலை ஊதுபவர்; நீர்நிலையில் கஜேந்திரம் என்னும் யானையானது ஆதிமூலமே என்று ஓலமிட்ட போது ஓடி வந்து காத்த, முரன் என்னும் அசுரனைக் கொன்ற முராரி; ஆயர் குலத்து மகளிரின் உள்ளம் கவர்ந்தவர்; தாயின் சொல்லை மறுக்காத கேசவனின் திருமருமகரே!

எண்ணுதற்கு அரிய ஞான முதல்வரும், காளை வாகனத்தை உடையவரும், பிரமகபாலத்தைத் திருக்கையில் ஏந்தியவரும், கடுமை வாய்ந்த பேய்களோடு ஆடல் புரிபவரும், தன்னைக் கருதாதவர்கள் கொடிய அனலில் மூழ்குமாறு திருக்கண் சாத்தியவரும் ஆன சிவபரம்பொருளின் திருப்புதல்வரே!

காரணங்களுக்கு அப்பாற்பட்டவரே!

கருணையில் மேருமலையைப் போன்றவரே!

தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

இரத்தம், தோல் ஆகியவற்றினால் ஆன உடம்பாகிய குடிசையில், கேடு அடையும்படியாக இந்த உயிர் நீங்கும்படி, இயமானல் ஏவி விடப்படுகின்ற காலன், கொடிய பாசத்தையும், ஒப்பற்ற சூலாயுதத்தோடும், சற்றும் கூச்சம் இல்லாமல் பொல்லாத துன்பநோய்களைத் தந்து அடியேனை எதிர்ப்படுவதன் முன்பாக,  அன்போடு உமது  திருவடியைப் பாடும்படியாகத் திருவருள் புரிவீராக.  


விரிவுரை


குருதி தோலினால் மேவு குடிலில் ஏதம் ஆம் ஆவி குலைய --- 

குடில் - குடிசை. குடிசை எளிதில் அழியக் கூடியது. அது போன்றது இந்த உடம்பு என்னும் குடிசை. இந்த உடம்பானது நெடுநாளைக்கு நிற்பது என்றும், மிகவும் சிறந்தது என்றும், புனிதமானது என்றும், இன்னும் நீண்ட நாளைக்கு நிற்கவேண்டும் என்றும் கருதி அலைகின்ற அறிவிலிகளுளார்கு அடிகள் அறிவுறுத்துகின்றார்.

இவ்வுடம்பு வச்சிராயுதத்தினால் ஆனது அல்ல.  இரும்பு வெண்கலம் முதலிய உலோகங்களினால் ஆனதும் அல்ல. தோல் எலும்பு உதிரம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனது. இது பீளை கோழை முதலிய அருவருப்பான பொருள்களுடன் கூடியது என்பார்.

தோல் எலும்பு நரம்பு உதிரத்தால் ஆன உடம்பு விரைவில் அழிந்துபடும்.  அவ்வண்ணம் அழியும் முன் உய்வண்ணம் அடைதல் வேண்டும்.

"குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு

எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி

குலைந்த செயிர்மயிர் குருதியொடு இவைபல  கசுமாலம்"

என்பார் பழநித் திருப்புகழில்.

இவ்வாறு அழியும் உடம்பை நாம் பெற்றது உடம்புள் உறையும் உத்தமனைக் கண்டு, அழிவற்ற தன்மையை அடையும் பொருட்டே. அதனை மறந்து, உண்டும் உடுத்தும் உறங்கியும் உலாவியும் வீணாக இந்த உடம்பைச் சுமந்து அலைந்து திரிந்து உயிரானது மெலிதல் கூடாது.

இங்கே நன்றாக உண்டு உண்டு உடம்பு தடிக்கின்றது. ஆனால் உயிர் அங்கே சென்று மெலிகின்றது, நலிகின்றது. ஏதப்படுகின்றது.

உயிரானது இவ்வாறு நலியாத முன்னம் இறைவன் திருவருளைப் பாடி உய்யத் திருவருள் புரியுமாறு ஆடிகளார் முருகப் பெருமானை வேண்டுகின்றார்.

பழுது உறாத பாவாணர் எழுத ஒணாத தோள் வீர --- 

உள்ளத்தில் குற்றம் அற்ற பாவாணர்களாலும் இறைவன் திருவுருவ அழகை எழுதிக் காட்ட முடியாது. அனுபவிக்கத் தான் முடியும். சொல்லால் எழுதிக் காட்ட முடியாது.

"மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி

    மயானத்தான், வார்சடையான், என்னின் அல்லால்

ஒப்பு உடையன் அல்லன், ஒருவன் அல்லன்,

    ஓர் ஊரன் அல்லன், ஓர் உவமன் இல்லி,

அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

    அவன் அருளே கண்ணாகக் காணின் அல்லால்

இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்

    இவன் இறைவன் என்று எழுதிக் காட்ட ஒணாதே"

என்று அப்பர் பெருமான் கூறுமாறு காண்க.

இதன் பொருள் ---

இறைவன் மைபூசிய கண்ணளாம் உமையம்மையும் தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும் நீண்ட சடையினனும் ஆவான் ` என்று கூறின் அவன் அவ்வளவே ஆம் தன்மையன் அல்லன். அவன் எப்பொருளையும் தன்பொருட்டு ஏற்க இசைதலை உடையான் அல்லன். உலகப் பொருள்களில் ஒருவன் அல்லன் ; ஓரூர்க்கே உரியனல்லன். யாதொரு பொருளும் தனக்கு உவமையாதல் இல்லாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும் அந்த நிறத்தையும் அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமேயல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் பிறரொருவர் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

மருது நீறு அதாய் வீழ வலி செய் மாயன் ---

நளகூபரன் மணிக்ரீவன் என்பவர் குபேரனுடைய குமாரர்கள். இருவரும் மது அருந்தி ஆடையின்றி நீர் விளையாட்டு புரிந்து கொண்டிருந்தார்கள். நாரத முனிவர் அங்கே வந்தனர். அவரைக் கண்டு நாணம் இன்றி கட்டைபோல் நின்றார்கள். "நல்லோர் முன் ஆடையின்றி மரம்போல் நின்ற படியால் மரங்களாகப் பிறக்கக் கடவது” என்று நாரத முனிவர் சபித்தார். அவர்கள் அஞ்சி, அவரை அஞ்சலி செய்து மன்னிக்குமாறு வேண்டினார்கள். நாரதர் திருவுள்ளம் இரங்கி, "ஆயர்பாடியில் நந்தகோபாலன் திருமாளிகையில் மருத மரங்களாக நீங்கள் முளைப்பீர்கள்.  கண்ணபிரானுடைய வண்ண மலரடி தீண்டப் பெறுதலால் சாபம் நீங்கும்” என்று அருள் புரிந்தார். கண்ணபிரான் உரலிலே கட்டப்பட்டு அம்மரங்களின் இடையே தவழ்ந்து சென்று, உரல் அம்மரங்களின் இடையே தடைப்பட்டதனால் சேவடி தீண்டி மரங்களை உதைத்தருளினார். உடனே அம்மரங்கள் வேருடன் வீழ்ந்தன. அவர்களது சாபம் பாபம் இரண்டும் வேரற்று வீழ்ந்தன. இருவரும் பண்டை வடிவம் பெற்று கமலக்கண்ணனைக் கைதொழுது துதி செய்து தங்கள் உலகம் பெற்றார்கள்.

மடுவில் ஆனை தான் மூலம் என ஓடி வரு முராரி --- 

திருமால், கஜேந்திரம் என்னும் யானைக்கு அருள் புரிந்த வரலாற்றைக் கூறுகின்றார் அடிகளார்.

திருப்பாற்கடலால் சூழப்பட்டதாயும், பதினாயிரம் யோசனை உயரம் உடையதாயும், பெரிய ஒளியோடு கூடியதாயும், திரிகூடம் என்ற ஒரு பெரிய மலை இருந்தது. சந்தனம், மந்தாரம், சண்பகம் முதலிய மலர்தரும் மரங்கள் நிறைந்து எப்போதும் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அம்மலையில் குளிர்ந்த நீர் நிலைகளும் நவரத்தின மயமான மணற்குன்றுகளும் தாமரை ஓடைகளும் பற்பல இருந்து அழகு செய்தன. கந்தருவரும், இந்திரர் முதலிய இமையவரும், வானமாதர்களும் வந்து அங்கு எப்போதும் நீராடி மலர் கொய்து விளையாடிக் கொண்டு இருப்பார்கள். நல்ல தெய்வமணம் வீசிக்கொண்டிருக்கும். அவ்வழகிய மலையில், வளமைத் தங்கிய ஒரு பெரிய தடாகம் இருந்தது. அழகிய பூந் தருக்கள் சூழ அமிர்தத்திற்கு ஒப்பான தண்ணீருடன் இருந்தது அத் தடாகம். அந்தத் திரிகூட மலையின் காடுகளில் தடையின்றி உலாவிக் கொண்டிருந்த கஜேந்திரம் என்கின்ற ஒரு யானையானது, அநேக பெண் யானைகளாலே சூழப்பட்டு, தாகத்தால் மெலிந்து, அந்தத் தடாகத்தில் வந்து அதில் முழுகித் தாகம் தணித்து தனது தும்பிக்கை நுனியால் பூசப்பட்ட நீர்த் துளிகளால் பெண் யானைகளையும் குட்டிகளையும் நீராட்டிக் கொண்டு மிகுந்த களிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு முதலை அந்த யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. அக் கஜேந்திரம் தன்னால் கூடிய வரைக்கும் முதலையை இழுக்கத் தொடங்கிற்று. முதலையை வெற்றி பெறும் சக்தியின்றித் தவித்தது. கரையிலிருந்த மற்ற யானைகள் துக்கப் பட்டு அந்த யானையை இழுக்க முயற்சி செய்தும் காப்பாற்ற முடியவில்லை. யானைக்கும் முதலைக்கும் பலகாலம் போர் நிகழ்ந்தது.  உணவு இன்மையாலும் முதலையால் பல வாண்டுகள் துன்புற்றமையாலும் எலும்பு மயமாய் இளைத்தது கஜேந்திரம். யாதும் செய்யமுடியாமல் அசைவற்று இருந்தது. பின்பு தெளிந்து துதிக்கையை உயர்த்தி, பக்தியுடன் “ஆதிமூலமே!” என்று அழைத்தது. திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்று உணர்ந்த அந்த யானை அழைத்த குரலை, பாற்கடலில் அரவணை மேல் அறிதுயில் செய்யும் நாராயணமூர்த்தி கேட்டு, உடனே கருடாழ்வான் மீது தோன்றி, சக்கரத்தை விட்டு முதலையைத் தடிந்து, கஜேந்திரத்திற்கு அபயம் தந்து அருள் புரிந்தனர். சிவபெருமான் தமக்குத் தந்த காத்தற்றொழிலை மேற்கொண்ட நாராயணர் காத்தற் கடவுளாதலால், உடனே ஓடிவந்து கஜேந்திரனுடைய துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்கினர்.

“மதசிகரி கதறிமுது முதலை கவர் தரநெடிய

 மடுநடுவில் வெருவியொரு விசையாதி மூலமென

 வருகருணை வரதன்”              --- சீர்பாதவகுப்பு.

யானை பொதுவாக அழைத்தபோது நாராயணர் வந்து காத்தருளிய காரணம், நாராயணர் தமக்குச் சிவபெருமான் கொடுத்தருளிய காத்தல் தொழிலைத் தாம் செய்வது கடமை ஆதலால் ஓடி வந்தனர். ஒரு தலைவன் நீ இந்த வேலையைச் செய்யென்று ஒருவனுக்குக் கொடுத்துள்ளபோது, ஒருவன் தலைவனையே அழைத்தாலும் தலைவன் கொடுத்த வேலையைச் செய்வது அப்பணியாளன் கடமையல்லவா? தலைவனைத்தானே அழைத்தான்? நான் ஏன் போகவேண்டு மென்று அப்பணியாளன்  வாளாவிருந்தால், தலைவனால் தண்டிக்கப் படுவானல்லவா? ஆதலால், சிவபெருமான் தனக்குத் தந்த ஆக்ஞையை நிறைவேற்ற நாராணர் வந்தார் என்பது தெற்றென விளங்கும்.

மாதாவின் வசனமோ மறா கேசன் மருகோனே --- 

சீதையைத் திருமணம் புணர்ந்த பின்னர், அயோத்திக்கு வந்த இராமபிரானுக்கு மகுடம் சூட்டி, அரசபாரத்தை அளித்து, தான் தவம் புரியப் போவதாக தயரதன் முடிவு எடுத்து, மகுடம் சூட்டுவதற்கு உரிய நாளும் குறிக்கப்பட்டது. மந்தரையின் போதனையால் மனம் மாறிய கைகேயியின் சூழ்ச்சியால், தசரதனிடம், தனது மகன் பரதன் ஆரசாள வேண்டும் என்றும், இராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் புரியவேண்டும் என்றும் பெற்ற வரத்தின் காரணமாக, இராமன் மணிமுடி தரிப்பது தவிர்க்கப்பட்டு, கைகேயியின் வார்த்தை தவறால், இராமன் காட்டுக்குச் செல்கின்றான்.

இராமனைப் பொறுத்த வரையில் அவனுக்குத் தாய், தந்தை, சகோதரன் என்று பாகுபாடு உண்டு. இருமுதுகுரவர் எனப்படும் தாய்தந்தை இருவரும் என்ன ஏவினாலும், ஏன் என்று கேளாமல், உடனே கீழ்ப்படிய வேண்டும் என்ற கொள்கையுடையவன். 

அதனால், கைகேயி 'அரசன் உன்னை காட்டிற்குச் செல்ல ஆணை இட்டுள்ளான்' என்று கூறினவுடன், மறுவார்த்தை பேசாமல், "எந்தையே ஏவ, நீரே உரை செய இயைவது உண்டேல், உயந்தனன் அடியேன்”என்றும், "மன்னவன் பணி அன்றாகில் நும் பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?" என்றும் கூறி "விடையுங் கொண்டேன், மின் அவரி கானம் இன்றே மேவினன்" என்று மணிமுடியைத் துறந்து, நாட்டை விட்டுக் காட்டுக்குச் சென்றான்.

கேசன் - அழகிய திருமுடியை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். கேசி என்னும் அசிரனைக் கொன்றதால், கேசவன் என்று திருமாலுக்கு ஒரு பெயர் உண்டு.

கருதார் வெம் கனலில் மூழ்கவே நாடி புதல்வ --- 

கமலாட்சன், விட்யுன்மாலி, தாராகாட்சன் என்ற மூன்று அசுர வேந்தர்கள் சிறந்த சிவனடியார்கள். இவர்கள் இரும்பு, வெள்ளி, பொன் என்ற உலோகங்களாலாய மூன்று புரங்களில் வாழ்ந்தார்கள். இமையவருக்கு இடுக்கண் புரிந்தார்கள்.

திரிபுர வாசிகளின் சிவபக்தி குலையுமாறு திருமால் புத்தாவதாரம் எடுத்து, நாரதரைச் சீடராகப் பாடச் செய்து திரிபுர நகர்களில் தெய்வம் இல்லை என்று பிரசாரம் புரிந்தார். திரிபுரத் தலைவர்கள் மூவர் மட்டும் உறுதிகுலையாது சிவபக்தியில் சிறந்து இருந்தார்கள். திரிபுர வாசிகள் சிவபக்தி குலைந்தார்கள். தேவர்கள் சிவபெருமானிடம் திரிபுரத்தை அழிக்குமாறு முறையிட்டார்கள்.


அப்போது, இந்தப் பூமியே தேராகவும், கீழே உள்ள எழு உலகங்கள் கீழ்த் தட்டுக்களாகவும், மேலே உள்ள எழு உலகங்கள் மேல் தட்டுக்களாகவும், எண்திசைப் பாலகர்கள் தூண்களாகவும், மேருகிரி வில்லாகவும், வாசுகி நாணாகவும், பிரமன் சாரதியாகவும், வேதங்கள் குதிரைகளாகவும், திருமால் பாணமாகவும், அதற்கு அக்கினி வாயாகவும், வாயு அம்பின் குதையாகவும் இவ்வாறு தேவர்கள் கூட்டமே தேராக அமைத்துத் தந்தார்கள். கரிய உருவுடைய திருமால் அம்பாக ஆனார்.

ஆனால், இறைவர் அவ்வில்லையும் கணையையும் பயன்படுத்தாமல் சிரித்தார். முப்புரமும் பொடிபட்டுச் சாம்பரானது. அதன் தலைவர்களும், சிவபூசையினின்றும் திறம்பாதவர்களும், சிவசிந்தையுடன் வாழ்ந்தவருளும் ஆகிய தாரகாக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என்ற மூன்று அரக்கர்கள் மட்டும் எரியாமல் உய்வு பெற்றார்கள். ஏனோர்கள் எரிந்து ஒழிந்தார்கள்.


"மாலாய வாளியைத் தொடுத்து அரக்கர்களின் ஒரு மூவர்

மாளாது பாதகப் புரத்ரயத்தவர்

தூளாகவே முதல் சிரித்த வித்தகர்"   ---  (ஆனாத) திருப்புகழ்.


"கல்லால்நிழல் கீழாய்இடர் காவாய்என வானோர்

எல்லாம்ஒரு தேராய்அயன் மறைபூட்டிநின்று உய்ப்ப

வல்லாய்எரி காற்றுஈர்க்குஅரி கோல்வாசுகி நாண்கல்

வில்லால்எயில் எய்தான்இடம் வீழிம்மிழ லையே".  ---  திருஞானசம்பந்தர்.


வரிஅரவே நாண்ஆக மால்வரையே வில்லாக

எரிகணையால் முப்புரங்கள் எய்துஉகந்த எம்பெருமான்

பொரிசுடலை ஈமப் புறங்காட்டான் போர்த்ததுஓர்

கரிஉரியான் மேவியுறை கோயில் கைச்சினமே.---  திருஞானசம்பந்தர்.


குன்ற வார்சிலை நாண் அராஅரி

வாளி கூர்எரி காற்றின் மும்மதில்

வென்றவாறு எங்ஙனே விடைஏறும் வேதியனே

தென்ற லார்மணி மாட மாளிகை

சூளி கைக்குஎதிர் நீண்ட பெண்ணைமேல்

அன்றில் வந்துஅணையும் ஆமாத்தூர் அம்மானே.---  திருஞானசம்பந்தர்.


கையில்உண் உடுழல்வாரும் சாக்கியரும்

கல்லாத வன்மூடர்க்கு அல்லா தானைப்

பொய்இலா தவர்க்குஎன்றும் பொய்இ லானைப்

பூண்நாகம் நாணாகப் பொருப்பு வில்லாக்

கையினார் அம்புஎரிகால் ஈர்க்குக் கோலாக்

கடுந்தவத்தோர் நெடும்புரங்கள் கனல்வாய் வீழ்த்த

செய்யின்ஆர் தென்பரம்பைக் குடியின் மேய

திருவாலம் பொழிலானைச் சிந்தி நெஞ்சே.  ---  அப்பர்.


நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா

நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்துஅருளி அவர்க்காய்

வெற்புஆர்வில் அரவுநாண் எரிஅம்பால் விரவார்

புரமூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்,

சொற்பால பொருட்பால சுருதிஒரு நான்கும்

தோத்திரமும் பலசொல்லித் துதித்து இறைதன் திறத்தே

கற்பாரும் கேட்பாரு மாய் எங்கும் நன்குஆர்

கலைபயில்அந் தணர்வாழும் கலயநல்லூர் காணே. ---  சுந்தரர்.


கருத்துரை


முருகா! தேவரீரது திருவடியைப் பாடி உய்ய அருள்வீர்.





பொது - 1054. இரதமான வாயூறல்

 

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

இரதமான வாய்ஊறல் (பொது)


முருகா! 

சிற்றின்பம் எந்தப் பயனும் உடையது அல்ல. 

துன்ப வடிவானது.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக

     இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி


இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு

     மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்


சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான

     சமுக மோத ராபூத ...... முதலான


சகள மோச டாதார முகுள மோநி ராதார

     தரணி யோநி ராகார ...... வடிவேயோ


பரத நீல மாயூர வரத நாக கேயூர

     பரம யோகி மாதேசி ...... மிகுஞான


பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத

     பதும சேக ராவேலை ...... மறவாத


கரத லாவி சாகாச கலக லாத ராபோத

     கமுக மூஷி காரூட ...... மததாரைக்


கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                        பதம் பிரித்தல்


இரதம் ஆன வாய்ஊறல் பருகிடா விடாய் போக,

     இனிய போக வாராழி ...... அதில்மூழ்கி,


இதயம் வேறு போகாமல் உருகி, ஏகமாய் நாளும்

     இனிய மாதர் தோள்கூடி ...... விளையாடும்,


சரச மோக மா வேத சரியை யோம க்ரியா ஞான

     சமுகமோ, தரா பூதம் ...... முதலான,


சகளமோ?  சடாதார முகுளமோ? நிராதார

     தரணியோ?  நிராகார ...... வடிவேயோ?


பரத நீல மாயூர! வரத! நாக கேயூர!

     பரம யோகி! மாதேசி! ...... மிகுஞான


பரமர் தேசிகா! வேட பதிவ்ருதா சுசீ பாத

     பதும சேகரா! வேலை ...... மறவாத


கரதலா! விசாகா! சகல கலாதரா! போத

     கமுக மூஷிக ஆரூட ...... மத தாரைக்


கடவுள் தாதை சூழ்போதில், உலகம் ஏழு சூழ்போது

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை


பரத நீல மாயூர --- நடனமாட வல்ல நீலமயில் வாகனரே!

வரத --- வரம் அருள வல்லவரே!

நாக கேயூர --- பாம்பைத் தோள்களில் அணிந்தவரும்

        பரம யோகி --- மேலான யோகியும்,

        மா தேசி --- பெருஞ்சோதி வடிவானவரும்,

மிகு ஞான பரமர் தேசிகா --- மேலான ஞானமூர்த்தியும் ஆகிய சிவபரம்பொருளின் குருநாதரே!

வேட பதிவ்ருதா சுசீ பாத பதும சேகரா --- வேடர் குலத்தில் வளர்ந்தவளும், கற்பு நிறைந்த தூயவளும் ஆன வள்ளிநாயகியின் திருவடியைச் சூடுபவரே!

வேலை மறவாத கரதலா --- வேலை மறவாத திருக்கரத்தை உடையவரே!

விசாகா --- விசாகரே!

சகல கலாதரா --- கலைகள் அனைத்துக்கும் ஆதாரமானவரே!

போதக முக --- யானை முகத்தை உடையவரும்,

மூஷிக ஆரூட --- மூடிக வாகனரும் ஆகிய

மத தாரைக் கடவுள் --- மதநீர் ஒழுகுகின்ற கடவுள் ஆகிய விநாயகர்,

தாதை சூழ் போதில் --- தமது தந்தையார் ஆகிய சிவபரம்ப்பொருளை வலமாக வந்த போது,

உலகம் சூழ்போது கருணை மேருவே --- உலகத்தை வலமாக வந்தருளிய கருணைமலையே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக --- (விலைமாதரின் வாயில் ஊறும்) சுவையான எச்சிலைப் பருகி, அதனால் காம தாகம் நீங்கி,

இனிய போக வாராழி அதில் மூழ்கி --- இனிமை மிக்க சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி,

இதயம் வேறு போகாமல் உருகி --- மனம் வேறிடத்தை நாடாமல் உருகி,

ஏகமாய் --- மனம் ஒன்றி,

நாளும் இனிய மாதர் தோள் கூடி விளையாடும் சரச மோகம் --- நாள்தோறும் இனிய விலைமாதர் தோள்களைக் கூடி விளையாடுகின்ற சல்லாப மோகமானது, 

மாவேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ --- சிறந்த வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள சரியை மார்க்கமோ? கிரியை மார்க்கமோ? யோக மார்க்கமோ? ஞான மார்க்கமோ? அல்லது இவைகளின் கூட்டோ?

தரா பூதம் முதலான சகளமோ --- மண் முதலாகிய பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ?

சடாதார முகுளமோ --- ஆறு ஆதாரங்களின் அரும்பு நிலையோ?

நிராதார தரணியோ --- சார்பு இல்லாத சூரிய ஒளியோ?

நிராகார வடிவேயோ --- உருவம் அற்ற திருமேனியோ?


பொழிப்புரை

நடனமாட வல்ல நீலமயில் வாகனரே! 

வரம் அருள வல்லவரே!

பாம்பைத் தோள்களில் அணிந்தவரும், மேலான யோகியும், பெருஞ்சோதி வடிவானவரும், மேலான ஞானமூர்த்தியும் ஆகிய சிவபரம்பொருளின் குருநாதரே!

வேடர் குலத்தில் வளர்ந்தவளும், கற்பு நிறைந்த தூயவளும் ஆன வள்ளிநாயகியின் திருவடியைச் சூடுபவரே!

வேலை மறவாத திருக்கரத்தை உடையவரே! விசாகரே!

        கலைகள் அனைத்துக்கும் ஆதாரமானவரே!

யானை முகத்தை உடையவரும், மூடிக வாகனரும் ஆகிய மதநீர் ஒழுகுகின்ற கடவுள் ஆகிய விநாயகர், தமது தந்தையார் ஆகிய சிவபரம்ப்பொருளை வலமாக வந்த போது, உலகத்தை வலமாக வந்தருளிய கருணைமலையே!

        தேவர்கள் போற்றுகின்ற பெருமையில் மிக்கவரே!

விலைமாதரின் வாயில் ஊறும) சுவையான எச்சிலைப் பருகி, அதனால் காம தாகம் நீங்கி, இனிமை மிக்க சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி, மனம் வேறிடத்தை நாடாமல் உருகி, மனம் ஒன்றி, நாள்தோறும் இனிய விலைமாதர் தோள்களைக் கூடி விளையாடுகின்ற சல்லாப மோகமானது, சிறந்த வேதங்களில் சொல்லப்பட்டு உள்ள சரியை மார்க்கமோ? கிரியை மார்க்கமோ? யோக மார்க்கமோ? ஞான மார்க்கமோ? அல்லது இவைகளின் கூட்டோ? மண் முதலாகிய பூதங்களின் உருவத் திருமேனி விளக்கமோ? ஆறு ஆதாரங்களின் அரும்பு நிலையோ? சார்பு இல்லாத சூரிய ஒளியோ? உருவம் அற்ற திருமேனியோ?


விரிவுரை

இத் திருப்புகழின் முற்பகுதியில் அடிகளார் மாதர் கூட்டுறவால் விளையும் சிற்றின்பமானது எந்த வகையிலும் நன்மை புரிவது அல்ல என்கிறார். துன்பத்திற்கு இடமான இன்பமே அது.


நாக கேயூர --- 


கேயூரம் - தோள் அணிகளில் ஒருவகை. சிவபெருமான் பாம்பைத் தோளிகளில் அணிந்தவர்.


மா தேசி --- 


தேசி, தேசு - ஒளி வடிவானவர்.


மிகு ஞான பரமர் தேசிகா --- 


முருகப் பெருமான் மேலான ஞானமூர்த்தி ஆகிய சிவபரம்பொருளுக்கே குருவாகத் திகழ்ந்தவர்.

 

வேட பதிவ்ருதா சுசீ பாத பதும சேகரா --- 


பதிவ்ருதா - பதிவிரதம்.


சுசீ - தூய. 


பாத பதுமம் - திருவடித் தாமரை.


சேகரர் - அணிந்தவர்.


"பாகு கனிமொழி மாது குறமகள்

     பாதம் வருடிய ...... மணவாளா!" --- திருப்புகழ்.


"பணி யா என, வள்ளிபதம் பணியும்

தணியா அதிமோக தயாபரனே!" --- கந்தர் அனுபூதி.


போதக முக மூஷிக ஆரூட மத தாரைக் கடவுள் தாதை சூழ் போதில் உலகம் சூழ்போது கருணை மேருவே --- 

பெருச்சாளி வாகனரும், மதநீர் ஒழுகுகின்ற யானை முகத்தை உடையவரும் ஆகிய விநாயகப் பெருமான் சிவபெருமானை வலமாக வந்த போதில், உலகத்தையே வலமாக வந்தவர் முருகப் பெருமான்.

விநாயகப் பெருமானுக்கும் முருகப் பெருமானுக்கும் உண்டான போட்டியில், முருகப் பெருமான் விரைந்து இந்த உலகை ஒரு நொடியில் வலம் வந்தார். 

“செகமுழுதும் முன்பு தும்பி முகவனொடு தந்தைமுன்பு

   திகிரிவலம் வந்த செம்பொன்     மயில்வீரா”    --- (அனைவரு) திருப்புகழ்


“இலகுகனி கடலைபயறு ஒடியல்பொரி அமுதுசெயும்

   இலகுவெகு கடவிகட தடபாரமேருவுடன்

இகலி,முது திகிரிகிரி நெரிய,வளை கடல்கதற,

   எழுபுவியை ஒருநொடியில் வலமாக வோடுவதும்”  ---  சீர்பாத வகுப்பு.


“ஆர மதுரித்த கனி காரண முதல் தமைய

   னாருடன் உணக்கைபுரி      தீமைக்காரனும்

ஆகமம் விளைத்து அகில லோகமு நொடிப்புஅளவில்

   ஆசையொடு சுற்றும்அதி     வேகக்கரனும்”       --- திருவேளைக்காரன் வகுப்பு.


“வாரணமுகன் தனது தாதையை வலஞ்சுழல

வாகைமயில் கொண்டுஉலகு சூழ்நொடி வரும் குமரன்” --- பூதவேதாள வகுப்பு.

ஆறுமுகப் பரம்பொருள் அகில உலகையும் வலம் வந்து திருக்கயிலை வந்து சேரும் முன், மூத்தபிள்ளையார், விநாயகப் பெருமான் தமது தாய்தந்தையரை வலம் வந்து, முதலில் கனியைப் பெற்றுக் கொண்டார் என்பது அனைவரும் அறிந்த வரலாறு.

இதன் மூலம் அறிந்து கொள்ளவேண்டிய நுண்பொருள்

ஒரு கனியைப் பெறுவதற்கு வேண்டித் தமது பிள்ளைகளிடம் போட்டியை உண்டாக்குவது சிவபரம்பொருளின் நோக்கம் அல்ல. காரைக்கால் அம்மையாருக்கு ஒன்றுக்கு இரண்டு கனிகளை அருளிய சிவபரம்பொருள், இன்னொரு கனியை உண்டாக்கித் தமது பிள்ளைகளுக்கு, ஆளுக்கு ஒன்றாக அளித்து இருக்கலாம். அவரால் அது முடியாதது அல்ல. ஆரமதுரித்த ஒரு கனியைக் காரணமாக வைத்து, முருகப் பெருமான் தமது தமையனாரோடு பிணக்கம் கொள்ளுவாரா? தம்பியின் மீது அன்பு வைத்த விநாயகப் பெருமான்தான் இதற்கு இசைவாரா?

சிவம் என்ற ஒன்றினுள் எல்லாவற்றையும் காணும் தன்மை ஒன்று. எல்லாவற்றிலும் சிவத்தைக் காணும் தன்மை மற்றொன்று.

இந்த உண்மையைத் தனது இரு பிள்ளைகளின் வழி நமக்கு உணர்த்த, சிவபரம்பொருள் ஆடிய அருள் விளையாடல் இது ஆகும். 

சிவத்திற்கு அந்நியமாக வேறு ஏதும் இல்லை என்பதை தெரிவிக்க விநாயகர், தமது தாய்தந்தையர் ஆகிய இருவரையும் வலம் வந்தார்.  இந்த உலகமே சிவபரம்பொருளின் வடிவானது என்பதையும் தெரிவிக்க முருகப் பெருமான் உலகை ஒரு நொடியில் வலம் வந்து காட்டினார்.

யானைக்குக் கன்னமதம், கபோலமதம், பீஜமதம் என மும்மதங்கள் உண்டு. கணபதிக்கு யானை உறுப்புக் கழுத்துக்கு மேல் மட்டுமே உள்ளது. எனவே, விநாயகப் பெருமானுக்கு மும்மதம் என்பது பொருந்தாது. 

மும்மதம் என்பன இச்சா ஞானக் கிரியைகளின் உருவகம் ஆகும் என்பதை அறிதல் வேண்டும். அவை, நமது ஆணவ அழுக்கினால் உண்டான துர்நாற்றத்தைப் போக்கி அருள் புரியும்.

இது குறித்ததொரு வரலாறு

வாழ வைத்தவர் வீழ்ந்து ஒழிய வேண்டும். அப்பொழுதான் என் பெருமை தலை எடுக்கும் என்று எண்ணும் ஏழை அறிவினர் சிலர் அன்னாளிலும் இருந்தனர். அவர்களுள் ஒருவன்தான் சலந்தரன். சலந்தராசுரன் தன் மனைவியாகிய பிருந்தை தடுத்தும் கேளாது, சிவபெருமானோடு போர் புரிய வேண்டிக் கயிலை நோக்கி வரும் வழியில், சிவபெருமான் ஓர் அந்தண வடிவம் கொண்டு நின்று, "எங்குச் செல்கின்றாய்" என்று வினவ, அவன் "சிவனோடு போர் புரிந்து வெல்லச் செல்கிறேன்" என்ன,  பெருமான், "அது உனக்குக் கூடுமோ? கூடுமாயின், தரையில் நான் கீறும் சக்கரத்தை எடுப்பாய்" என்று ஒரு சக்கரம் கீற, அதை அவன் தோளின்மீது எடுக்க, அப்போது அது அவன் உடம்பைப்  பிளக்கவே அவன் இறந்தொழிந்தான்.

சலந்தரன் உடல் குருதி, பொறுக்க முடியாத துர்நாற்றமாய் உலகைப் போர்த்தது. அதனால் தாங்க முடியாமல் தடுமாறிய அகில உலகமும், ஐங்கரக் கணபதியை ஆராதித்தது. உடனே ஆனைமுகப் பெருமானின் ஊற்றெடுத்த அருள்மதம், எங்கும் வியாபித்து, அப் பொல்லாத நாற்றத்தைப் போக்கியது. அதன் மூலம் உலகமும் உய்ந்தது என்கின்றது காஞ்சிப் புராணம்.


"விழிமலர்ப் பூசனை உஞற்றித் திருநெடுமால் 

பெறும் ஆழி மீளவாங்கி,

வழிஒழுகாச் சலந்தரன்மெய்க் குருதிபடி 

முடைநாற்றம் மாறும் ஆற்றால், 

பொழிமதநீர் விரை ஏற்றி விகடநடப் 

பூசைகொண்டு புதிதா நல்கிப், 

பழிதபு தன் தாதையினும் புகழ்படைத்த 

மதமாவைப் பணிதல் செய்வாம்."  --- காஞ்சிப் புராணம்.                                           


" உள்ளம் எனும் கூடத்தில் ஊக்கம் எனும்

தறிநிறுவி, உறுதியாகத்

தள்ளரிய அன்பு என்னும் தொடர் பூட்டி,

இடைப்படுத்தித் தறுகண் பாசக்

கள்ளவினை பசுபோதக் கவளம் இடக்

களித்து உண்டு, கருணை என்னும்

வெள்ளமதம் பொழிசித்தி வேழத்தை  நினைந்து

வரு வினைகள் தீர்ப்பாம்." --- திருவிளையாடல் புராணம்.

எனவே, இச்சை, கிரியை, ஞானம் என்னும் மூன்று அருட்சத்திகளே மும்மதம் என்பதை அறிவுறுத்தவே, "கருணை மதம் பொழிகின்ற சித்தி வேழம்" என்றது திருவிளையாடல் புராணம்.


கருத்துரை

முருகா! சிற்றின்பம் எந்தப் பயனும் உடையது அல்ல. துன்ப வடிவானது.


பொது - 1053. அயிலின் வாளி

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அயிலின் வாளி (பொது)


முருகா! 

விலைமாதர் வலைப் படாமல் நன்னெறியில் ஒழுக அருள்.


தனன தான தானான தனன தான தானான

     தனன தான தானான ...... தனதான


அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரி தாயீச

     ரமுத ளாவு மாவேச ...... மதுபோல


அறவு நீளி தாய்மீள அகலி தாய வார்காதி

     னளவு மோடி நீடோதி ...... நிழலாறித்


துயில்கொ ளாத வானோரு மயல்கொ ளாத ஆவேத

     துறவ ரான பேர்யாரு ...... மடலேறத்


துணியு மாறு லாநீல நயன மாத ராரோடு

     துவளு வேனை யீடேறு ...... நெறிபாராய்


பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான

     பவதி யாம ளாவாமை ...... அபிராமி


பரிபு ரார பாதார சரணி சாம ளாகார

     பரம யோகி னீமோகி ...... மகமாயி


கயிலை யாள ரோர்பாதி கடவு ளாளி லோகாயி

     கனத னாச லாபார ...... அமுதூறல்


கமழு மார ணாகீத கவிதை வாண வேல்வீர

     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


                       பதம் பிரித்தல்


அயிலின் வாளி, வேல்வாளி, அளவு கூரிது ஆய், ஈசர்

     அமுது அளாவும் ஆவேச ...... மதுபோல,


அறவும் நீளிதாய், மீள அகலிது ஆய், வார்காதின்

     அளவும் ஓடி, நீடு ஓதி ...... நிழல் ஆறி,


துயில் கொளாத வானோரும், மயல் கொளாத ஆவேத

     துறவர் ஆன பேர் யாரும் ...... மடல் ஏறத்


துணியுமாறு உலா, நீல நயன மாதராரோடு

     துவளுவேனை ஈடேறும் ...... நெறி பாராய்.


பயிலும் மேக நீகார சயில ராசன் வாழ்வான

     பவதி, யாமளா, வாமை, ...... அபிராமி,


பரிபுர ஆர பாதார சரணி, சாமள ஆகார,

     பரம யோகினீ, மோகி, ...... மகமாயி,


கயிலை ஆளர் ஓர்பாதி, கடவுள் ஆளி, லோக ஆயி,

     கனதன அசலா பார ...... அமுது ஊறல்


கமழும் ஆரணா! கீத கவிதை வாண! வேல்வீர!

     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.


பதவுரை

பயிலும் மேக நீகாரம் சயில ராசன் வாழ்வான பவதி --- மேகக் கூட்டங்கள் தவழுகின்ற இமயமலைக்கு அரசனுக்குப் பெருவாழ்வாக அமைந்த மகளான உமாதேவியாரும்,

யாமளா --- பச்சை நிறம் உடையவளும்,

வாமை --- சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் அமர்ந்தவளும்,

அபிராமி --- பேரழகியும், 

பரிபுர ஆர பாதார சரணி --- சிலம்பு அணிந்த திருவடித் தாமரைகளை உடையவளும்,

சாமள ஆகார --- மரகதப் பச்சை வண்ணத்தை உடையவளும்,

        பரம யோகினீ --- மேலான யோகினியும்,

மோகி --- உயிர்களிடத்தில் அன்பு உள்ளவளும்,

மகமாயி --- பெரிய அம்பிகையும், 

கயிலையாளர் ஓர் பாதி --- திருக்கயிலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருமேனியில் ஓர் பாதியினை உடையவளும்,

கடவுள் ஆளி --- எல்லாத் தேவர்களையும் ஆள்பவளும்,

லோக ஆயி --- உலக அம்மை ஆனவளும், (ஆகிய அம்பிகையின்)

கன தன அசலா பாரம் அமுது ஊறல் கமழும் ஆரணா கீத --- மலைபோலப் பருத்து உள்ள தனபாரங்களில் ஊறிய அமுதத்தை உண்ட திருவாயால் வேதகீதங்கள் ஆகிய தேவாரப் பாடல்களை அருளியவரே!

கவிதை வாண --- கவியில் வல்லவரே!

வேல் வீர --- வேலாயுதத்தை உடைய வீரரே! 

கருணை மேருவே --- கருணையில் மேருமலையைப் போன்றவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே! 

அயிலின் வாளி --- அம்பின் கூர்மை,

வேல் வாளி --- வேலின் கூர்மை,

அளவு கூரிதாய் --- ஆகியவைகளை ஒத்த அளவு கூர்மை பொருந்தியதாய்,

ஈசர் அமுது அளாவும் --- சிவபரம்பொருள் அமுதாக உண்டு அருளிய ஆலகால விடத்தினை ஒத்ததாய், 

ஆவேச மது போல --- உணர்வை மழுங்கச் செய்யும் கள்ளைப் போன்றதாய்,

அறவு(ம்) நீளிதாய் --- மிக நீண்டு உள்ளதாய்,

மீள அகலிதாய் --- பின்னும் அகலமாக உள்ளதாய்,

வார் காதின் அளவும் ஓடி --- நெடிய காது வரைக்கும் ஓடி,

நீடு ஓதி நிழல் ஆறி --- கூந்தலின் நிழலில் இளைப்பாறுவதாய்,

துயில் கொளாத வானோரும் --- கண் இமைக்காத வானவர்களும்,

மயல் கொளாத ஆவேத துறவரான பேர் --- காம மயக்கம் கொள்ளாத துறவினர்களும்,

யாரும் மடல் ஏற --- மற்ற யாரும் மடல் ஏறும்படியாக,

துணியுமாறு உலா --- துணிவு கொள்ளுமாறு உலவுகின்ற,

நீல நயன மாதராரோடு துவளுவேனை --- மையிட்ட கண்களை உடைய பொதுமாதரோடு இணங்கித் துவண்டு வாடுகின்ற அடியேனை,

ஈடேறும் நெறி பாராய் --- ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக.


பொழிப்புரை

மேகக் கூட்டங்கள் தவழுகின்ற இமயமலைக்கு அரசனுக்குப் பெருவாழ்வாக அமைந்த மகளான உமாதேவியாரும், பச்சை நிறம் உடையவளும், சிவபரம்பொருளின் இடப்பாகத்தில் அமர்ந்தவளும், பேரழகியும், சிலம்பு அணிந்த திருவடித் தாமரைகளை உடையவளும், மரகதப் பச்சை வண்ணத்தை உடையவளும், மேலான யோகினியும்,உயிர்களிடத்தில் அன்பு உள்ளவளும், பெரிய அம்பிகையும், திருக்கயிலையில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளின் திருமேனியில் ஓர் பாதியினை உடையவளும், எல்லாத் தேவர்களையும் ஆள்பவளும், உலக அம்மை ஆனவளும் ஆகிய அம்பிகையின் மலைபோலப் பருத்து உள்ள தனபாரங்களில் ஊறிய அமுதத்தை உண்ட திருவாயால் வேதகீதங்கள் ஆகிய தேவாரப் பாடல்களை அருளியவரே!

கவியில் வல்லவரே!

வேலாயுதத்தை உடைய வீரரே! 

கருணையில் மேருமலையைப் போன்றவரே!

தேவர்கள் போற்றும் பெருமையில் மிக்கவரே! 

அம்பின் கூர்மை, வேலின் கூர்மை ஆகியவைகளை ஒத்த அளவு கூர்மை பொருந்தியதாய், சிவபரம்பொருள் அமுதாக உண்டு அருளிய ஆலகால விடத்தினை ஒத்ததாய், உணர்வை மழுங்கச் செய்யும் கள்ளைப் போன்றதாய், மிக நீண்டு உள்ளதாய், பின்னும் அகலமாக உள்ளதாய், நெடிய காது வரைக்கும் ஓடி, கூந்தலின் நிழலில் இளைப்பாறுவதாய், கண் இமைக்காத வானவர்களும், காம மயக்கம் கொள்ளாத துறவினர்களும், மற்ற யாரும் மடல் ஏறத் துணிவு கொள்ளுமாறு உலவுகின்ற மையிட்ட கண்களை உடைய பொதுமாதரோடு இணங்கித் துவண்டு வாடுகின்ற அடியேனை ஈடேறும்படியான வழியைக் காட்டி அருள்வாயாக.


விரிவுரை


அடிகளார் இத் திருப்புகழின் முற்பகுதியில் விலைமாதர்களின் கண்களைப் பற்றிக் கூறுகின்றார்.

ஈசர் அமுது அளாவும் --- 

திருப்பாற்கடலில் தோன்றிய ஆலகால விடத்தை, சிவபரம்பொருள் அமுதாக உண்டு அருளினார். எனவே, ஆலகால விடம் ஈசர் அமுது எனப்பட்டது.


ஆவேச மது போல --- 

ஆவேசத்தை உண்டாக்குவதால் மதுவை ஆவேச நீர் என்றார் அடிகளார் பிறிதொரு திருப்புகழில்.


அறவு(ம்) நீளிதாய் --- 

அறவும் - மிகவும். முற்றும்.

மீள அகலிதாய் --- பின்னும் அகலமாக உள்ளதாய்,

துயில் கொளாத வானோரும் மயல் கொளாத ஆவேத துறவரான பேர் யாரும் மடல் ஏறத் துணியுமாறு உலா நீல நயன மாதராரோடு துவளுவேனை --- 

வானவர்களின் கண்கள் இமைக்காத தன்மை உடையவை. எனவேர, துயில் கொள்ளாத வானோர் என்றார். துறவினர்கள் காம மயக்கத்துக்கு ஆட்படாதவர்கள்.

முற்றும் துறந்த முனிவர்களும் தங்களைக் கண்டு மயங்கித் தியங்கி உருகி நிற்குமாறு அழகில் மிகுந்து நிற்பர் பொதுமகளிர்.

"கிளைத்துப் புறப்பட்ட சூர் மார்புடன் கிரி ஊடுருவத்

தொளைத்துப் புறப்பட்ட வேல் கந்தனே, துறந்தோர் உளத்தை

வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைக்க வதைக்கும் கண்ணார்க்கு

இளைத்துத் தவிக்கின்ற என்னை எந்நாள் வந்து இரட்சிப்பையே? "         --- கந்தலங்காரம்.


"மாதர் யமனாம், அவர்தம் மைவிழியே வன்பாசம்,

பீதிதரும் அல்குல் பெருநரகம், - ஓத அதில்

வீழ்ந்தோர்க்கும் ஏற விரகு இல்லை, போரூரைத்

தாழ்ந்தோர்க்கும் இல்லை தவறு."     --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை


விசுவாமித்திரர் மேனகையைக் கண்டு மயங்கினார். பல காலம் செய்த தவம் அழிந்து குன்றினார்.

காசிபர் மாயையைக் கண்டு மருண்டார். ஆனால் இவை சிவனருள் இன்றி நிற்கும் முனிவருக்கு உரியவை.

காமனை எரித்த கண்ணுதற் கடவுளைக் கருத்தில் இருத்திய நற்றவரைப் பொது மகளிர் மயக்க இயலாது.

திருப்பூம்புகலூரில் உழவாரத் தொண்டு செய்து கொண்டிருந்தார் அப்பர் பெருமான், அப்போது அரம்பை முதலிய வான மாதர்கள் வந்து அவர் முன்னே,

"ஆடுவார் பாடுவார் அலர்மாரி மேற்பொழிவார்

கூடுவார் போன்று அணைவார் குழல் அவிழ இடைநுடங்க

ஓடுவார் மாரவே ளுடன்மீள்வர்; ஒளிபெருக

நீடுவார் துகீல் அசைய நிற்பாரும் ஆயினார்."

இந்த சாகச வித்தைகளைக் கண்ட அப்பர் பெருமானுடைய மனம் ஒருசிறிதும் சலனம் அடையவில்லை. “உமக்கு இங்கு என்ன வேலை? போமின்” என்று அருளிச் செய்தார். ஆதலால் சிவனடியார்கள் காதலால் மயங்க மாட்டார்கள்.

பயிலும் மேக நீகாரம் சயில ராசன் வாழ்வான பவதி --- 

பயிலும் - தங்குகின்ற, பொருந்துகின்ற.


மேக நீகாரம் - மேகக் கூட்டங்கள்.


சயில ராசன் - மலையரசன்.

கயிலையாளர் ஓர் பாதி கடவுள் ஆளி லோக ஆயி கன தன அசலா பாரம் அமுது ஊறல் கமழும் ஆரணா கீத --- 

முருகப் பெருமான் உமாதேவியாரது திருமுலைப் பாலாகிய சிவஞானத் திருவமுதை உண்டு ஞானபண்டிதன் என்று நம்பினோர் அனைவருக்கும் ஞானத்தை அருளிச் செய்கின்றனர்.

அறுமுகனார் அம்மை முலைப்பாலை விரும்பிச் செய்த திருச்செயலை அடியில் கண்ட அருட்பாடலில் கண்டு மகிழ்க.

"எள்அத் தனைவருந்து உறுபசிக்கும்

இரங்கி, பரந்து சிறுபண்டி

எக்கிக் குழைந்து, மணித்துவர்வாய்

இதழைக்குவித்து, விரித்து எழுந்து

துள்ளித் துடித்து, புடைபெயர்ந்து,

தொட்டில் உதைத்து, பெருவிரலைச்

சுவைத்து, கடைவாய் நீர்ஒழுக,

தோளின் மகரக்குழைதவழ,

மெள்ளத் தவழ்ந்து, குறுமூரல்

விளைத்து, மடியின் மீதுஇருந்து,

விம்மிப் பொருமி முகம்பார்த்து,

வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத்து அமுதுஉண்டு அகமகிழ்ந்த

மழலைச் சிறுவா! வருகவே!

வளருங் களபக் குரும்பைமுலை

வள்ளி கணவா! வருகவே!"     ---திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.

உமையம்மையின் திருமுலைப்பாலை உண்டவர்கள் இருவரே.  ஒருவர் இளைய பிள்ளையாராகிய திருமுருகன். ஞானாகரன், ஞானபண்டிதன் என்னும் திருப்பெயர் அமைந்தது. மற்றொருவர்

ஆளுடைய பிள்ளையார். உமையம்மை அருளிய ஞானப் பாலை உண்டதனால், சிவஞானசம்பந்தர் ஆனார். வேதப் பொருள் நிறைந்த தேவாரப் பாடல்களைத் திருஞானசம்பந்தராக வந்து திருவாய் மலர்ந்து அருளினார்.


"எண்ணரிய சிவஞானத்து இன் அமுதம் குழைத்து அருளி

உண் அடிசில் என ஊட்ட, உமையம்மை எதிர்நோக்கும்

கண்மலர்நீர் துடைத்து அருளிக் கையிற்பொற் கிண்ணம்அளித்து

அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார் அருள்புரிந்தார்."


"யாவருக்கும் தந்தைதாய் எனும் இவர் இப்படி அளித்தார்.

ஆவதனால் ஆளுடைய பிள்ளையாராய் அகில

தேவருக்கும் முனிவருக்கும் தெரிவரிய பொருளாகும்

தாவில்தனிச் சிவஞான சம்பந்தர் ஆயினார்."


"சிவன் அடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்,

பவம் அதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்,

உவமை இலாக் கலைஞானம், உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்,

தவ முதல்வர் சம்பந்தர் தாம்உணர்ந்தார் அந்நிலையில்."    ---  பெரிய புராணம்.


கருத்துரை

முருகா! விலைமாதர் வலைப் படாமல் நன்னெறியில் ஒழுக அருள்.


வயிற்றுப் பசிக்கு உணவு - அறிவுப் பசிக்குக் கேள்வி

  வயிற்றுப் பசிக்கு உணவு அறிவுப் பசிக்கு கேள்வி ---- உயிருக்கு நிலைக்களமாகவே இந்த உடம்பு வாய்த்தது. உடலை வளர்த்தால் உயிர் வளரும், "உட...