திரு இடைமருதூர் - 1





திரு இடைமருதூர்

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

         கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்திருத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.


இறைவன் பெயர்      ---  மகாலிங்கேசுவரர்

இறைவி பெயர்        ---  பிருஹத் சுந்தர குசாம்பிகை,                                             நன்முலைநாயகி, பெருநலமுலையம்மை

தலமரம்                  --- மருதமரம்

தீர்த்தம்                  ---  அயிராவணத்துறை, காவிரி,
                                                      காருண்யாமிர்த தீர்த்தம்,

பதிகம்                  ---   திருநாவுக்கரசர் - 1. காடுடைச் சுடலை
                                                                                 2. பாசம் ஒன்றிலராய்
                                                                                 3. பறையின் ஓசையும்
                                                                                 4. சூலப்படை உடையார்
                                                                                 5. ஆறு சடைக்கு

                                             திருஞானசம்பந்தர் - 1. ஓடேகலன்
                                                                                 2. தோடொர் காதினன்
                                                                                 3. மருந்தவன்
                                                                                 4. நடைமரு திரிபுரம்
                                                                                 5. விரிதரு புலியுரி
                                                                                 6. பொங்குநூல்

                                             சுந்தரர் -  கழுதை குங்குமம்

                                             கருவூர்த்தேவர் - வெய்ய செஞ்சோதி

         காவிரிக் கரையில் உள்ள 6 சிவத்தலங்கள் காசிக்கு சமானமாக கருதப்படுகின்றன. அவற்றில் திருவிடைமருதூர் தலமும் ஒன்றாகும். மற்றவை 1. திருவையாறு, 2. திருசாய்க்காடு (சாயாவனம்), 3. திருவெண்காடு, 4. திருவாஞ்சியம் மற்றும் 5. மயிலாடுதுறை ஆகும்.

         திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மருத மரத்தைத் தலமரமாகக் கொண்ட மூன்று கோயில்கள் உள்ளன. வடக்கே ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படும் தலத்தை வடமருதூர் என்றும், தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் புடார்ச்சுனம் என்றழைக்கப்படும் திருப்புடைமருதூரும் உள்ளது. இவ்விரண்டிற்கும் நடுவே கும்பகோணம் மயிலாடுதுறை ரயில் மார்க்கத்தில் உள்ளது திருவிடைமருதூர்.

     நெடிதுயர்ந்த கோபுரங்களும் நீண்ட பிரகாரங்களும் உடைய திருவிடைமருதூர் ஆலயம் மத்யார்ச்சுனம் என்று வழங்குகிறது. மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் ஆகிய மூன்றின் சிறப்புக்களாலேயே ஒரு கோயில் பெருமை பெறுகின்றது. அந்த வகையில் இந்தத் திருவிடைமருதூர் இறைவன் அருள்மிகு மகாலிங்க சுவாமியின் சிறப்புக்கள் கணக்கில் அடங்கா. தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விசுவநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீசுவரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. மேலும் மேற்கே அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப் பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வதால் மழை பொழிவது இன்றளவும் நடைபெற்று வரும் அதிசயமாகும்.

         இக்கோயில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

அசுவமேதப் பிரகாரம்:
          இது வெளிப் பிரகாரமாகும். இந்த்ப் பிரகாரத்தில் வலம் வருதல் அடுவமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று புராண வரலாறுகள் கூறுகின்றன.

கொடுமுடிப் பிரகாரம்:
          இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கயிலாயத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

ப்ரணவப் பிரகாரம்:
          இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

         திருவிடைமருதூர் தலத்தைச் சுற்றியுள்ள சில ஆலயங்கள் திருவிடைமருதூரின் பரிவார தேவதைத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவையாவன.

    திருவலஞ்சுழி - விநாயகர்
    சுவாமிமலை - முருகர் (அறுபடை வீடுகளில் ஒன்று)
    திருவாரூர் - சோமஸ்கந்தர்
    சிதம்பரம் - நடராஜர்
    ஆலங்குடி - தட்சினாமூர்த்தி
    திருவாவடுதுறை - நந்திகேஸ்வரர்
    திருசேய்நலூர் - சண்டிகேஸ்வரர்
    சீர்காழி - பைரவர்
    சூரியனார்கோவில் - நவக்கிரகம்

         திருவிடைமருதூர் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை வரகுண பாண்டியன் அருகிலுள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்ட நேரத்தில் அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டு இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான். இச்சம்பவம் அவனறியாமல் நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான். அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

         இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேசுவரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர். மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீசுவரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார். இவ்வாலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாம்பிகைக்கு இந்தியாவில் திருவிடைமருதூரிலும், கர்நாடக மாநிலத்திலுள்ள கொல்லூரிலும் பட்டும் சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

         கோயில்கள் பலவற்றுள்ளும் இந்தக் கோயிலில்தான் மிகப்பெரிய எண்ணிக்கையில் அதாவது 32 தீர்த்தங்கள் உள்ளன என்பது வியக்க வைக்கும் செய்தி. இவைகளில் ஒரு ஏக்கர் பரப்புள்ள காருண்யாம்ருத தீர்த்தம் என்பது மிகவும் புகழ் வாய்ந்தது. அதுபோலவே கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது. தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாபவிமோசனம் பெறலாம் என்பர். இங்குள்ள தீர்த்தங்களில் நீராடி மகப்பேறு பெற்றவர் வரலாறும் உண்டு. இப்புண்ணியத் தீர்த்தத்தில் நீராடி யுவனாசுவன் என்ற அயோத்தி மன்னன் மாந்தாதா என்ற மகவைப் பெற்ற செய்தியும், சித்திரகீர்த்தி என்ற பாண்டியன் ஒரு ஆண் மகவைப் பெற்றதாகவும் வரலாறு கூறுகிறது. பூசத்தீர்த்தம் பற்றிய ஒரு சுவையான செய்தி உண்டு. தேவவிரதன் என்ற கள்வன் ஒருவன் இறைவனது திருவாபரணங்களைக் திருட முயன்ற பாவத்துக்காக நோய் வந்து இறந்து போனான். பிறகு அவன் ஒரு புழுவாய்ப் பிறந்து பூசத்தீர்த்தத்தில் நீராடிய ஒரு புண்ணியவான் கால் பட்டு புழு உருவம் நீங்கி முகதி பெற்றான் என்று ஆலய வரலாறு கூறுகிறது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "ஓகை உளம் தேக்கும் வரகுணன் ஆம் தென்னவன்கண் சூழ்பழியைப் போக்கும் இடைமருதில் பூரணமே" என்று போற்றி உள்ளார்.

         காலை 5-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 411
திருநாகேச் சரத்து அமர்ந்த செங்கனகத் தனிக்குன்றை,
கருநாகத்து உரிபுனைந்த கண்ணுதலைச் சென்றுஇறைஞ்சி,
அருஞானச் செந்தமிழின் திருப்பதிகம் அருள்செய்து,
பெருஞான சம்பந்தர் பெருகு ஆர்வத்து இன்புற்றார்.

         பொழிப்புரை : திருநாகேச்சரத்தில் வீற்றிருக்கும் செம்பொன் மலை போன்ற கரிய யானையின் தோலைப் போர்த்துக் கொண்ட பெருமானை வணங்கி, அரிய ஞானம் விளங்கும் செந்தமிழின் இனிய திருப்பதிகத்தைப் பாடி அருள் செய்து, பெருகும் அன்பினால் இன்பம் ஆர்ந்திருந்தார்.

        
பெ. பு. பாடல் எண் : 412
மாநாகம் அருச்சித்த மலர்க்கமலத் தாள்வணங்கி,
நாள்நாளும் பரவுவார் பிணிதீர்க்கும் நலம்போற்றி,
பால்நாறும் மணிவாயர் பரமர்திரு இடைமருதில்
பூநாறும் புனற்பொன்னித் தடங்கரைபோய்ப் புகுகின்றார்.

         பொழிப்புரை : ஆதிசேடன் வழிபட்ட தாமரை போன்ற திருவடிகளை வணங்கி, நாளும் வணங்குபவர்களின் பிணிகளைப் போக்கும் நன்மையினைப் போற்றி, ஞானப்பாலமுதின் மணம் கமழும் திருவாயினையுடைய பிள்ளையார், மலர்கள் மலர்ந்து மணம் வீசும் காவிரியின் வடகரை வழியாகச் சென்று, இறைவரின் `திருவிடைமருதூரில்' புகுகின்றவர்,


பெ. பு. பாடல் எண் : 413
ஓங்குதிருப் பதிகம் "ஓடேகலன்" என்று எடுத்துஅருளி,
தாங்க அரிய பெருமகிழ்ச்சி தலைசிறக்கும் தன்மையினால்,
"ஈங்குஎனை ஆள் உடையபிரான் இடைமருது ஈதோ"என்று
பாங்கு உடைய இன்னிசையால் பாடிஎழுந்து அருளினார்.

         பொழிப்புரை : உயர்ந்த திருப்பதிகத்தை `ஓடேகலன்\' எனத் தொடங்கித் தாங்குதற்கரிய மகிழ்ச்சி மேன்மேலும் பெருகுதலால், `இங்கு என்னை ஆளுடைய இறைவர் வீற்றிருக்கும் திருவிடைமருது இதுதானோ?' என்ற கருத்துடன் நல்ல இயல்புடைய இசை பொருந்தப் பாடி அந்தப் பதியினுள் புகுந்தார்.

         இதுபொழுது அருளியது `ஓடேகலன்' (தி.1 ப.32) எனும் தொடங்கும் தக்கராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடல்தொறும் `இடைமருது ஈதோ' என வரும் தொடர் அமைந்து இருத்தலின் அதனை ஆசிரியர் குறிப்பிடுவாராயினர்.


பெ. பு. பாடல் எண் : 414
அடியவர்கள் எதிர்கொள்ள எழுந்துஅருளி, அங்குஅணைந்து,
முடிவு இல் பரம் பொருள் ஆனார் முதற்கோயில் முன்இறைஞ்சி,
படியில் வலம் கொண்டு, திரு முன்புஎய்தி, பார் மீது
நெடிது பணிந்து எழுந்து, அன்பு நிறை கண்ணீர் நிரந்து இழிய.

         பொழிப்புரை : அப்பதியிலுள்ளார் எதிர்கொள்ளச் சென்று, அப்பதியை அடைந்து, நிலைபெற்ற பரம்பொருளான இறைவரின் பெருங்கோயிலை முன்னே வணங்கி, வலம் வந்து, திருமுன்பு அடைந்து, தரையில் விழுந்து அன்பு நிறைவதால் பொழியும் கண்ணீர் இடையறாது வழிய,


பெ. பு. பாடல் எண் : 415
பரவுறுசெந் தமிழ்ப்பதிகம் பாடி,அமர்ந்து, அப்பதியில்
விரவுவார் திருப்பதிகம் பலபாடி வெண்மதியோடு
அரவுசடைக்கு அணிந்தவர்தம் தாள்போற்றி, ஆர்வத்தால்
உரவுதிருத் தொண்டருடன் பணிந்துஏத்தி உறையும் நாள்.

         பொழிப்புரை : இறைவரைப் போற்றுகின்ற செந்தமிழ்ப் பதிகம் பாடி, விருப்பத்துடன் அப்பதியில் இருந்தருளும் சம்பந்தர், மேலும் பல திருப்பதிகங்களையும் பாடி, வெண்மையான பிறைச்சந்திரனுடன் பாம்பையும் சடையில் அணிந்த பெருமானாரின் திருவடிகளைப் போற்றி, உறைப்புடைய திருத்தொண்டர்களுடன் இறைவரை வணங்கிப் போற்றி, அன்பு மிகுதியால் அங்குத் தங்கியிருந்த காலத்தில்,

         இறைவரின் திருமுன்பு அருளிய பதிகம் `பொங்கு நூல்' எனத் தொடங்கும் காந்தாரப் பண்ணிலமைந்த பதிகமாகும். மேலும் இப்பதியில் அருளிய பதிகங்கள் நான்குள்ளன. அவை:

1.    `தோடோர்' : தி.1 ப.95 - குறிஞ்சி
2.    `மருந்தவன்' : தி.1 ப.110 - வியாழக்குறிஞ்சி
3.    `நடை மரு' : தி.1 ப.121 - வியாழக்குறிஞ்சி
4.    `விரிதரு' : தி.1 ப.122 - வியாழக்குறிஞ்சி


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்

1.032 திருவிடைமருதூர்                       பண் - தக்கராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
ஓடே கலன்,உண் பதும் ஊர்இடுபிச்சை,
காடே இடம் ஆவது,கல் ஆல்நிழற்கீழ்
வாடா முலைமங் கையுந்தா னுமகிழ்ந்து,
ஈடா உறைகின் றஇடை மருதுஈதோ.

         பொழிப்புரை :உண்ணும் பாத்திரம் பிரமகபாலமாகும். அவர் உண்ணும் உணவோ ஊர் மக்கள் இடும் பிச்சையாகும், அவர் வாழும் இடமோ இடுகாடாகும். அத்தகைய சிவபிரான் கல்லால மரநிழற்கீழ் நன்முலைநாயகியும் தானுமாய் மகிழ்ந்து பெருமையோடு விளங்கும் திருத்தலமாகிய இடைமருது இதுதானோ?


பாடல் எண் : 2
தடங்கொண்ட தொர்தாமரைப பொன்முடிதன்மேல்
குடங்கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்துாட்டப்
படங்கொண் டதொர்பாம்பு அரைஆர்த்த பரமன்
இடங்கொண்டு இந்தான் தன்இடை மருதுஈதோ.

         பொழிப்புரை :தடாகங்களிற் பறித்த பெரிய தாமரை மலரைச் சூடிய அழகிய திருமுடியில், அடியவர் குடங்களைக் கொண்டு குளிர்ந்த நீரைமுகந்து சுமந்து வந்து அபிடேகிக்குமாறு, படம் எடுத்தாடும் நல்லபாம்பை இடையிலே கட்டிய பரமன் தான் விரும்பிய இடமாகக் கொண்டுறையும் இடைமருது இதுதானோ?


பாடல் எண் : 3
வெண்கோ வணங்கொண்டு, ஒரு வெண்தலைஏந்தி,
அங்கோல் வளையா ளையொர்பா கம்அமர்ந்து,
பொங்கா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எங்கோன் உறைகின் றஇடை மருதுஈதோ.

         பொழிப்புரை :வெண்மையான கோவணத்தை அணிந்து ஒப்பற்ற வெள்ளிய பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி அழகியதாய்த் திரண்ட வளையல்களை அணிந்த உமாதேவியை ஒருபாகமாக விரும்பி ஏற்று, பொங்கிவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது எம் தலைவனாயுள்ள சிவபிரான் எழுந்தருளிய இடைமருதூர் இதுதானோ?


பாடல் எண் : 4
அந்தம் அறியாத அருங் கலம்உந்திக்
கந்தங் கமழ்கா விரிக்கோ லக்கரைமேல்
வெந்த பொடிப்பூ சியவே தமுதல்வன்
எந்தை உறைகின்ற இடைமருது ஈதோ.

         பொழிப்புரை :அரிய அணிகலன்களைக் கரையில் வீசி மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமீது திருவெண்ணீறு அணிந்தவனாய், முடிவறியாத வேத முதல்வனாய் விளங்கும் எம் தந்தையாகிய சிவபிரான் உறைகின்ற இடைமருதூர் இதுதானோ?


பாடல் எண் : 5
வாசங் கமழ்மா மலர்ச்சோ லையில்,வண்டே
தேசம் புகுந்துஈண் டியொர்செம் மைஉடைத்தாய்ப்
பூசம் புகுந்து ஆடிப்பொலிந்து அழகாய
ஈசன் உறைகின் றஇடை மருதுஈதோ.

         பொழிப்புரை :மணம் கமழும் சிறந்த மலர்களை உடைய சோலை களில் வண்டுகளைக் கொண்டதும், உலக மக்கள் பலரும் கூடிச் செம்மையாளராய்த் தைப்பூசத் திருநாளில் நீராடி வணங்குவதும், பொலிவும் அழகும் உடையவனாய் ஈசன் எழுந்தருளி விளங்குவதுமான இடைமருது என்னும் தலம் இதுதானோ?


பாடல் எண் : 6
வன்புற் றுஇளநா கம்அசைத்து அழகாக
என்பில் பலமா லையும்பூண்டு, ஏருதுஏறி
அன்பில் பிரியா தவளோ டும்உடனாய்
இன்புற்று இருந்தான் தன்இடை மருதுஈதோ.

         பொழிப்புரை :வலிய புற்றுக்களில் வாழும் இளநாகங்களை இடையிலே அழகாகக் கட்டிக் கொண்டு, எலும்பால் இயன்ற மாலைகள் பலவற்றையும் அணிகலன்களாகப் பூண்டு, அன்பிற்பிரியாத உமையம்மையோடும் உடனாய் எருதேறிச் சிவபிரான் இன்புற்றுறையும் இடைமருது என்பது இதுதானோ?


பாடல் எண் : 7
தேக்கும் திமிலும் பலவும் சுமந்துஉந்திப்
போக்கிப் புறம்பூ சல்அடிப் பவருமால்
ஆர்க்குந் திரைக்கா விரிக்கோ லக்கரைமேல்
ஏற்க இருந்தான் தன்இடை மருதுஈதோ.

         பொழிப்புரை :தேக்கு, வேங்கை, பலா ஆகிய மரங்களைச் சுமந்து வந்து இருகரைகளிலும், அம்மரங்களை எடுத்து வீசி, ஆரவாரித்து வரும் அலைகளையுடையதாய காவிரி நதியின் அழகிய கரைமீது சிவபெருமான் பொருந்த உறையும் இடைமருது என்னும் தலம் இதுதானோ?


பாடல் எண் : 8
பூஆர் குழலார் ஆகில்கொண் டுபுகைப்ப,
ஓவாது அடியார் அடிஉள் குளிர்ந்துஏத்த,
ஆவா ஆரக்கன் தனைஆற் றல்அழித்த
ஏஆர் சிலையான் தன்இடை மருதுஈதோ.

         பொழிப்புரை :மலர் சூடிய கூந்தலை உடைய மங்கல மகளிர் அகில் தூபம் இட, அடியவர் இடையீடின்றித் திருவடிகளை மனம் குளிர்ந்து ஏத்த, கண்டவர் ஆஆ என இரங்குமாறு இராவணனது ஆற்றலை அழித்த, அம்பு பொருத்தற்கேற்ற மலைவில்லைக் கையில் கொண்ட, சிவபெருமானின் இடைமருது என்னும் தலம் இதுதானோ?


பாடல் எண் : 9
முற்றா ததொர்பால் மதிசூ டுமுதல்வன்,
நல்தா மரையா னொடுமால் நயந்துஏத்தப்
பொன்தோ ளியுந்தா னும்பொலிந்து அழகாக
எற்றே உறைகின் றஇடை மருதுஈதோ.

         பொழிப்புரை :முற்றாத பால் போன்ற இளம்பிறையை முடிமிசைச் சூடிய முதல்வனாய், நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனும், திருமாலும் விரும்பித் தொழ, உமையம்மையும் தானுமாய்ச் சிவபிரான் அழகாகப் பொலிந்து உறைகின்ற இடைமருது என்னும் தலம் இதுதானோ?


பாடல் எண் : 10
சிறுதே ரருஞ்சில் சமணும் புறங்கூற,
நெறியே பலபத் தர்கள்கை தொழுதுஏத்த,
வெறியா வருகா விரிக்கோ லக்கரைமேல்
எறியார் மழுவா ளன்இடை மருதுஈதோ.

         பொழிப்புரை :சிறுமதியாளராகிய தேரர்களும், சிற்றறிவினராகிய சமணர்களும், புறங்கூறித் திரிய, சிவபக்தர்கள் பலர் முறையாலே கைகளால் தொழுது துதிக்கப் பகைவரைக் கொன்றொழிக்கும் மழுவை ஏந்திய சிவபிரான் எழுந்தருளிய, மணம் கமழ்ந்துவரும் காவிரி நதியின் அழகிய கரைமேல் உள்ள இடைமருது என்னும் தலம் இதுதானோ?


பாடல் எண் : 11
கண்ஆர் கமழ்கா ழியுள்ஞா னசம்பந்தன்
எண்ஆர் புகழ்எந் தைஇடை மருதின்மேல்
பண்ணோடு இசைபா டியபத் தும்வல்லார்கள்
விண்ணோர் உலகத் தினில்வீற்று இருப்பாரே.

         பொழிப்புரை :இடமகன்றதும் மணம் கமழ்வதுமான சீகாழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் எண்ணத்தில் நிறைந்துள்ள புகழை உடைய எம்பெருமானுடைய இடைமருது மீது பண்ணோடியன்ற இசையால் பாடிய பத்துப் பாடல்களையும் வல்லவர்கள் விண்ணோர் உலகில் வீற்றிருக்கும் சிறப்பைப் பெறுவார்கள்.

திருச்சிற்றம்பலம்


2.056 திருவிடைமருதூர்                  பண் -காந்தாரம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
பொங்குநூல் மார்பினீர், பூதப்படையீர், பூங்கங்கை
தங்குசெஞ் சடையினீர், சாமவேதம் ஓதினீர்,
எங்கும்எழில்ஆர் மறையோர்கள் முறையால்ஏத்த இடைமருதில்
மங்குல்தோய் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.

         பொழிப்புரை :திருமேனியில் விளங்கித் தோன்றும் பூணூல் அணிந்தமார்பினரே! பூதப்படைகளை உடையவரே! அழகிய கங்கை தங்கும் செஞ்சடையை உடையவரே! சாமவேதத்தைப் பாடுபவரே! நீர் அழகிய மறைகளைக் கற்றுணர்ந்த மறையவர்; எல்லா இடங்களிலும் முறையால் ஏத்த இடைமருதூரில் வானளாவிய கோயிலை உம் கோயிலாகக் கொண்டு மகிழ்ந்துள்ளீர்.


பாடல் எண் : 2
நீர்ஆர்ந்த செஞ்சடையீர், நெற்றித்திருக்கண் நிகழ்வித்தீர்,
போர்ஆர்ந்த வெண்மழுஒன்று உடையீர், பூதம்பாடலீர்,
ஏர்ஆர்ந்த மேகலையாள் பாகங்கொண்டீர், இடைமருதில்
சீர்ஆர்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

         பொழிப்புரை :கங்கை ஆர்ந்த செஞ்சடையை உடையவரே! நெற்றியில் அழகிய கண்ணைக் கொண்டுள்ளவரே! போர்க்கருவியாகிய வெண்மழு ஒன்றை ஏந்தியவரே! பூதங்கள் பாடுதலை உடையவரே! அழகிய மேகலை அணிந்த பார்வதிதேவியைப் பாகமாகக் கொண்டவரே! நீர், இடைமருதில் உள்ள சிறப்புமிக்க கோயிலை உம் கோயிலாகக் கொண்டு எழுந்தருளியுள்ளீர்.


பாடல் எண் : 3
அழல்மல்கும் அங்கையில் ஏந்திப்பூதம் அவைபாடச்
சுழல்மல்கும் ஆடலீர், சுடுகாடுஅல்லால் கருதாதீர்,
எழின்மல்கு நான்மறையோர் முறையால்ஏத்த இடைமருதில்
பொழில்மல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

         பொழிப்புரை :நிறைந்த தீயை, அழகிய கையில் ஏந்திப் பூதங்கள் பாடச் சுழன்று ஆடுபவரே! சுடுகாடல்லால் பிறவிடத்தை நினையாதவரே! நீர், அழகிய நான் மறையோர் முறையால் ஏத்தி வழிபட இடை மருதில் உள்ள சோலைகள் சூழ்ந்த கோயிலை உம் இருப்பிடமாகக் கொண்டு பொலிந்துள்ளீர்.


பாடல் எண் : 4
பொல்லாப் படுதலைஒன்று ஏந்திப்புறங்காட்டு ஆடலீர்,
வில்லால் புரமூன்றும் எரித்தீர், விடைஆர் கொடியினீர்,
எல்லாக் கணங்களும் முறையால்ஏத்த இடைமருதில்
செல்வுஆய கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.

         பொழிப்புரை :பொலிவற்ற, தசைவற்றிய தலையோட்டை ஏந்திச் சுடுகாட்டில் ஆடுபவரே! வில்லால் முப்புரங்களை எரித்தவரே! விடைக்கொடி உடையவரே! நீர், எல்லாக்கணத்தினரும் முறையால் போற்ற இடைமருதில் உள்ள செல்வம் ஆன கோயிலையே உம் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 5
வருந்திய மாதவத்தோர், வானோர்ஏனோர் வந்துஈண்டிப்
பொருந்திய தைப்பூசம் ஆடிஉலகம் பொலிவுஎய்தத்
திருந்திய நான்மறையோர் சீரால்ஏத்த இடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.

         பொழிப்புரை :பெருமானே! நீர், விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடித்தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.

  
பாடல் எண் : 6
சலமல்கு செஞ்சடையீர், சாந்தநீறு பூசினீர்,
வலமல்கு வெண்மழுஒன்று ஏந்திமயானத்து ஆடலீர்,
இலமல்கு நான்மறையோர் இனிதாஏத்த, இடைமருதில்
புலமல்கு கோயிலே கோயிலாகப் பொலிந்தீரே.

         பொழிப்புரை :பெருமானே! கங்கை தங்கிய செஞ்சடையீரே! சாந்தமும் நீறும் பூசியவரே! வெற்றி பொருந்திய வெண்மழு ஒன்றை ஏந்தி மயானத்தில் ஆடுபவரே! இல்லங்களில் தங்கியுள்ள நான் மறையோர் வழிபாட்டுக் காலங்களில் வந்து இனிதாகப் போற்ற இடைமருதில் ஞானமயமான கோயிலை நீர் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 7
புனமல்கு கொன்றையீர், புலியின்அதளீர், பொலிவுஆர்ந்த
சினமல்கு மால்விடையீர், செய்யீர்,கரிய கண்டத்தீர்,
இனமல்கு நான்மறையோர் ஏத்தும்சீர்கொள் இடைமருதில்
கனமல்கு கோயிலே கோயிலாகக் கலந்தீரே.

         பொழிப்புரை :காடுகளில் வளரும் கொன்றையினது மலர்களைச் சூடியவரே! புலித்தோலை உடுத்தியவரே! அழகிய சினம்மிக்க வெள்விடையை உடையவரே! சிவந்த மேனியரே! கரிய கண்டத்தைக் கொண்டவரே! நீர், திரளாகப் பொருந்திய நான்மறையோர் ஏத்தும் சிறப்பு மிக்க இடைமருதில் மேகங்கள் தவழும் உயரிய கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 8
சிலைஉய்த்த வெங்கணையால் புரமூன்று எரித்தீர் திறல்அரக்கன்
தலைபத்தும் திண்தோளும் நெரித்தீர், தையல் பாகத்தீர்,
இலைமொய்த்த தண்பொழிலும் வயலும் சூழ்ந்த இடைமருதில்
நலம் மொய்த்த கோயிலே கோயிலாக நயந்தீரே.

         பொழிப்புரை :மேருமலையாகிய வில்லில் செலுத்திய கொடிய கணையால் முப்புரங்களை எரித்தவரே! வலிமை பொருந்திய இராவணனின் பத்துத்தலைகளையும் தோள்களையும் நெரித்தவரே! மாதொரு கூறரே! இலைகள் அடர்ந்த பொழில்களும் வயல்களும் சூழ்ந்த இடைமருதில் உள்ள அழகு நிறைந்த கோயிலை நுமது இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 9
மறைமல்கு நான்முகனும், மாலும்அறியா வண்ணத்தீர்,
கறைமல்கு கண்டத்தீர், கபாலம்எந்து கையினீர்,
அறைமல்கு வண்டுஇனங்கல் ஆலும்சோலை இடைமருதில்
நிறைமல்கு கோயிலே கோயிலாக நிகழ்ந்தீரே.

         பொழிப்புரை :வேதங்களை ஓதும் நான்முகனும் திருமாலும் அறிய இயலாத தன்மையீர்! கறைக் கண்டத்தீர்! கபாலம் ஏந்தும் கையினை உடையீர்! இசைமிழற்று வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த இடைமருதில் உள்ள நிறைவான கோயிலை நும் இருப்பிடமாகக் கொண்டுள்ளீர்.


பாடல் எண் : 10
சின்போர்வைச் சாக்கியரும், மாசுசேரும் சமணரும்,
துன்புஆய கட்டுரைகள் சொல்லி, அல்லல்தூற்றவே,
இன்புஆய அந்தணர்கள் ஏத்தும்ஏர்கொள் இடைமருதில்
அன்புஆய கோயிலே கோயிலாக அமர்ந்தீரே.

         பொழிப்புரை :பெருமானே! நீர், அற்பமான போர்வை அணிந்த சாக்கியரும், அழுக்கு ஏறிய உடலினராகிய சமணரும் துன்பமயமான கட்டுரைகள் சொல்லித்தூற்ற, இன்பம் கருதும் அந்தணர்கள் ஏத்தும் அழகிய இடைமருதில் அன்புவடிவான கோயிலையே நும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

 
பாடல் எண் : 11
கல்லின் மணிமாடக் கழுமலத்தார் காவலவன்,
நல்ல அருமறையான், நல்தமிழ் ஞானசம்பந்தன்,
எல்லி இடைமருதில் ஏத்துபாடல் இவைபத்தும்
சொல்லு வார்க்கும் கேட்பார்க்கும் துயரம்இல்லையே.

         பொழிப்புரை :கல்லால் இயன்ற அழகிய மாடவீடுகளைக் கொண்ட கழுமலத்தார் தலைவனாகிய நன்மைதரும் அருமறைவல்ல நற்றமிழ் ஞானசம்பந்தன் இராப்போதில் இடைமருதை அடைந்து ஏத்திய பாடல் இவை பத்தையும் சொல்லுவார்க்கும் கேட்பார்க்கும் துயரம் இல்லை.
                                                            திருச்சிற்றம்பலம்


1.095 திருவிடைமருதூர்              பண் - குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
தோடொர் காதினன் பாடு மறையினன்
காடு பேணிநின்று ஆடு மருதனே.

         பொழிப்புரை :திருவிடைமருதூர் இறைவன் தோட்டை, இடத் திருச்செவியில் அணிந்தவனாய் நான்கு வேதங்களைப் பாடுபவனாய், சுடுகாட்டை விரும்பி அதன்கண் நின்று ஆடுகின்றவனாவான்.

பாடல் எண் : 2
கருதார் புரம்எய்வர், எருதே இனிதுஊர்வர்,
மருதே இடம்ஆகும், விருதாம் வினைதீர்ப்பே.

         பொழிப்புரை :தம்மைக் கருதாதவராகிய அசுரர்களின் முப்புரங்களை எய்து அழித்தவரும், எருதை வாகனமாகக் கொண்டு இனிதாக ஊர்பவரும் ஆகிய இறைவர்க்குத் திருவிடை மருதூரே விரும்பி உறையும் இடமாகும். அவரைத் தொழுதால் புகழ் சேரும். வினைகள் தீர் தலை உடையனவாகும்.
  
பாடல் எண் : 3
எண்ணும் அடியார்கள் அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல விண்ணும் தமதுஆமே.

         பொழிப்புரை :மனத்தால் எண்ணி வழிபடும் அன்பர்கள் தலைமையாளராய் விளங்கும் மருதவாணரைப் பண்ணிசையோடு அவர்தம் புகழைப் போற்ற, விண்ணுலகமும் அவர்கள் வசமாகும்.
  
பாடல் எண் : 4
விரியார் சடைமேனி எரியார் மருதரைத்
தரியாது ஏத்துவார் பெரியார் உலகிலே.

         பொழிப்புரை :விரிந்த சடைமுடியை உடையவரும், எரிபோன்ற சிவந்த மேனியருமாகிய மருதவாணரைத் தாமதியாது துதிப்பவர் உலகில் பெரியவர் எனப்போற்றப்படுவர்.

பாடல் எண் : 5
பந்த விடையேறும் எந்தை மருதரைச்
சிந்தை செய்பவர் புந்தி நல்லரே.

         பொழிப்புரை :கட்டுத்தறியில் கட்டத்தக்க விடையை ஊர்ந்து வரும் எந்தையாராகிய மருதவாணரை மனத்தால் தியானிப்பவர்கள் அறிவால் மேம்பட்டவராவர்.
  
பாடல் எண் : 6
கழலும் சிலம்புஆர்க்கும் எழில்ஆர் மருதரைத்
தொழலே பேணுவார்க்கு உழலும் வினைபோமே

         பொழிப்புரை :ஒரு காலில் கழலும் , பிறிதொரு காலில் சிலம்பும் ஒலிக்கும் உமைபாகராகிய அழகிய மருதவாணரை விரும்பித் தொழு வதை நியமமாகக் கொண்டவர்க்கு வருத்துதற்கு உரிய வினைகள் துன் புறுத்தா ; அகலும் .

பாடல் எண் : 7
பிறைஆர் சடை அண்ணல் மறையார் மருதரை
நிறையால் நினைபவர் குறையார் இன்பமே.

         பொழிப்புரை :பிறை பொருந்திய சடைமுடியினை உடைய தலை மையாளரான வேதங்களை அருளிய மருதவாணரை நிறைந்த மனத்தால் நினைப்பவர் இன்பம் குறையப் பெறார்.

பாடல் எண் : 8
எடுத்தான் புயம் தன்னை அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட விடுத்தார் வேட்கையே.

         பொழிப்புரை :கயிலை மலையை எடுத்த இராவணனின் தோள் களை நெரித்த மருதவாணருக்குச் சூட்டுவதற்கு மலர் தொடுத்தவர்கள், பிறவிக்குக் காரணமான ஆசையை விடுத்தவர்களாவர்.

பாடல் எண் : 9
இருவர்க்கு எரிஆய உருவ மருதரைப்
பரவி ஏத்துவார் மருவி வாழ்வரே.

         பொழிப்புரை :திருமால் பிரமர் அடிமுடி அறிய முடியாதவாறு எரி உருவமாய் நின்ற மருதவாணரைப் புகழ்ந்து ஏத்தித் துதிப்பவர் எல்லா நலன்களோடும் மருவி வாழும் வாழ்க்கையைப் பெறுவர்.

பாடல் எண் : 10
நின்றுஉண் சமண்,தேரர் என்று மருதரை
அன்றி உரைசொல்ல நன்று மொழியாரே.

         பொழிப்புரை :நின்றுண்ணும் சமணரும், புத்தரும் எக்காலத்தும் இடைமருது இறைவனாகிய சிவபெருமானை மாறுபட்ட உரைகளால் கூறுவதால் அவர் எக்காலத்தும் நல்லனவே கூறார்.
  
பாடல் எண் : 11
கருது சம்பந்தன் மருதர் அடிபாடிப்
பெரிதும் தமிழ்சொல்லப் பொருத வினைபோமே.

         பொழிப்புரை :இறைவன் திருவருளையே கருதும் ஞானசம்பந்தன் மருதவாணரின் திருவடிகளைப் பெரிதும் போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதுபவர்க்குத் துன்புறுத்திய வினைகள் போகும்.

                                    திருச்சிற்றம்பலம்

1.110 திருவிடைமருதூர்              பண் - வியாழக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
மருந்துஅவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொடு இறவும்ஆனான்
அருந்தவ முனிவரொடு ஆல்நிழற்கீழ்
இருந்தவன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :பிறவி நோய் தீர்க்கும் மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும் தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி முனிவர்களோடு கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

பாடல் எண் : 2
தோற்றவன் கேடுஅவன், துணைமுலையாள்
கூற்றவன், கொல்புலித் தோல்அசைத்த
நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல்
ஏற்றவன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :உயிர்களின் தோற்றத்திற்கும் கேட்டிற்கும் காரண மானவனும், இணையான தனங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்ட சடைமுடிமேல் ஏற்று உலகைக்காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 3
படைஉடை மழுவினன், பால்வெண்ணீற்றன்,
நடைநவில் ஏற்றினான், ஞாலமெல்லாம்
உடைதலை இடுபலி கொண்டுஉழல்வான்,
இடைமருது இனிதுஉறை எம்இறையே.

         பொழிப்புரை :மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.

பாடல் எண் : 4
பணைமுலை உமையொரு பங்கன்,ஒன்னார்
துணைமதில் மூன்றையும் சுடரின்மூழ்கக்
கணைதுரந்து அடுதிறல், காலற்செற்ற
இணைஇலி வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருது ஆகும்.
  
பாடல் எண் : 5
பொழில்அவன், புயல்அவன், புயல்இயக்கும்
தொழிலவன்,  துயர்அவன், துயர்அகற்றும்
கழலவன், கரிஉரி போர்த்துஉகந்த
எழில்அவன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :ஏழ் உலகங்களாக இருப்பவனும், மேகங்களாகவும் அவற்றை இயக்கி மழையைப் பெய்விக்கும் தொழிலைப் புரிவோனாக இருப்பவனும், துன்பங்களைத் தருபவனாகவும் அவற்றைப் போக்கும் கழலணிந்த திருவடிகளை உடையவனாக விளங்குபவனும், யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்த அழகனாக விளங்குபவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 6
நிறையவன், புனலொடு மதியும்வைத்த
பொறையவன், புகழவன், புகழநின்ற
மறையவன், மறிகடல் நஞ்சைஉண்ட
இறையவன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :குறைவற்ற நிறைவாக விளங்குபவனும், கங்கை யோடு திங்களைத் திருமுடியில் வைத்துச் சுமக்கும் சுமையை உடையவனும், புகழ் வடிவினனாக விளங்குபவனும், எல்லோராலும் புகழப்படும் வேதங்களாக விளங்குபவனும், சுருண்டு விழும் அலைகளை உடைய கடலின்கண் தோன்றிய நஞ்சினை உண்ட தலைவனும் ஆகிய சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 7
நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்,
முனிவரொடு அமரர்கள் முறைவணங்க
இனிதுஉறை வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறைமதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 8
தருக்கின அரக்கன தாளும் தோளும்
நெரித்தவன், நெடுங்கைமா மதகரி அன்று
உரித்தவன், ஒன்னலர் புரங்கள் மூன்றும்
எரித்தவன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள் களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மதயானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 9
பெரியவன், பெண்ணினொடு ஆணும்ஆனான்,
வரிஅரவு அணைமறி கடல்துயின்ற
கரியவன், அலரவன் காண்புஅரிய
எரியவன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகிய திருமால் தாமரை மலர்மேல் உறையும் நான்முகன் ஆகியோர் காணுதற்கரிய எரியுருவாய் ஓங்கி நின்றவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

பாடல் எண் : 10
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன
புந்திஇல் உரைஅவை பொருள்கொளாதே,
அந்தணர் ஓத்தினொடு அரவம்ஓவா
எந்தைதன் வளநகர் இடைமருதே.

         பொழிப்புரை :சிந்திக்கும் திறனற்ற சமணர்களும், புத்தர்களும் கூறிய அறிவற்ற உரைகளைப் பொருளுடைய உரைகளாகக் கொள்ளாதீர். அந்தணர்களின் வேத ஒலியோடு விழவொலி நீங்காத வளநகர் ஆகிய இடைமருது எந்தையாகிய சிவபிரான் உறையும் இடமாகும் என்று அறிந்து சென்று வழிபடுமின்.
  
பாடல் எண் : 11
இலைமலி பொழில்இடை மருதுஇறையை
நலமிகு ஞானசம்பந்தன்சொன்ன
பலமிகு தமிழ்இவை பத்தும்வல்லார்
உலகுஉறு புகழினொடு ஓங்குவரே.

         பொழிப்புரை :இலைகள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்த இடை மருதில் உறையும் சிவபிரானை, அருள்நலம் மிகுந்த ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய பயன்மிகு தமிழ்ப் பாடல்களாலியன்ற இப்பதிகப் பாடல்கள் பத்தையும் ஓதிவழிபட வல்லவர் உலகில் நிறைந்து விளங்கும் புகழ்கள் அனைத்தையும் பெற்று ஓங்கி வாழ்வர்.

                                             திருச்சிற்றம்பலம்


1.121 திருவிடைமருதூர்              பண் - வியாழக்குறிஞ்சி
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
நடைமரு திரிபுரம் எரிஉண நகைசெய்த
படைமரு தழல்எழ மழுவல பகவன்,
புடைமருது இளமுகில் வளம்அமர் பொதுளிய
இடைமருது அடையநம் இடர்கெடல் எளிதே.

         பொழிப்புரை :இயங்குதலைப் பொருந்திய திரிபுரங்களை எரியுண்ணுமாறு சிரித்தருளித்தனது படைக்கலத்தால் தீ எழும்படி செய்தருளிய வெற்றி மழுவேந்திய பகவனாகிய சிவபிரான் எழுந்தருளியதும் அருகில் வளர்ந்துள்ள மருதமரங்களில் இளமேகங்கள் தவழ்ந்து மழை வளத்தை நிரம்பத்தருவதுமான திருஇடைமருதூரை அடைந்தால் நம் இடர்கெடல் எளிதாகும்.
  
பாடல் எண் : 2
மழைநுழை மதியமொடு, அழிதலை, மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன்,
குழைநுழை திகழ்செவி அழகொடு மிளிர்வதொர்
இழைநுழை புரிஅணல் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :மேகங்களிடையே நுழைந்து செல்லும் பிறை மதியோடு தசைவற்றிய தலையோடு ஆகியவற்றையும், மடமயில்கள் மூங்கிலிடையே நுழைந்து செல்லும் மலையில் தோன்றிய தேவ கங்கை நதியையும்; கமழுமாறு சடைமுடியில் சூடியவனும், குழை நுழைந்து விளங்கும் செவியழகோடு இழையாகத் திரண்ட முப்புரிநூலை விரும்பி அணிபவனுமாகிய அண்ணல் எழுந்தருளிய இடம் திருவிடைமருதூராகும்.
  
பாடல் எண் : 3
அருமையன், எளிமையன், அழல்விட மிடறினன்,
கருமையின் ஒளிபெறு கமழ்சடை முடியன்,
பெருமையன், சிறுமையன், பிணைபெணொடு, ஒருமையின்
இருமையும் உடைஅணல் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :அன்பில்லாதவர்க்கு அரியவனும், அன்புடை அடியவர்க்கு எளியவனும், அழலும் தன்மையுடைய விடத்தை உண்டு நிறுத்திய கண்டத்தினனும், பெரியனவற்றுக்கெல்லாம் பெரியவனும், சிறியன யாவற்றினும் சிறியவனும், தன்னோடு பிணைந்துள்ள உமையம்மையோடு ஓருருவில் இருவடிவாய்த் தோன்றுபவனுமாகிய சிவபிரானுக்குரிய இடம் திருவிடைமருதூர் ஆகும்.
  
பாடல் எண் : 4
பொரிபடு முதுகுஉற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடம்என நவில்வோன்,
வரிவளர் குளிர்மதி ஒளிபெற மிளிர்வதொர்
எரிவளர் சடைஅணல் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :நன்கு காய்ந்து பொரிந்த முதுகினை உடைய நரிகள் களிப்போடு அருகில் மிகுந்து தோன்ற, சுடலைக் காட்டில் நடம் நவில்பவனும், கோடாகத் தோன்றிப் பின்வளரும் குளிர்ந்த பிறைமதியை ஒளிபெற அணிந்த எரிபோன்று வளரும் சடைமுடியை உடையவனும் ஆகிய தலைமையாளனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

 
பாடல் எண் : 5
வருநல மயில்அன மடநடை மலைமகள்
பெருநல முலைஇணை பிணைசெய்த பெருமான்,
செருநல மதில்எய்த சிவன்உறை செழுநகர்
இருநல புகழ்மல்கும் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :அழகோடு அசைந்து வரும் மயில் போன்ற மட நடையினளாகிய மலையரையன் மகளும், பெருநல முலையாள் என்ற திருப்பெயருடையவளுமாகிய அம்மையின் இருதனபாரங்களைக் கூடியவனும், போர் செய்தற்குரிய தகுதியோடு விளங்கிய அவுணர்களின் மும்மதில்களை எய்தழித்தவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடமாகிய செழுமையான நகர் விரிந்த புகழால் நிறைந்த திருஇடைமருதூர் ஆகும்.

 
பாடல் எண் : 6
கலைஉடை விரிதுகில் கமழ்குழல் அகில்புகை
மலைஉடை மடமகள் தனைஇடம் உடையோன்,
விலைஉடை அணிகலன் இலன்என மழுவினோடு
இலைஉடை படையவன் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :மேகலை சூழ்ந்த விரிந்த ஆடையுடன் அகிற் புகையின் மணம் கமழும் கூந்தலை உடைய மலையரையனின் மட மகளாகிய பார்வதி தேவியை இடப்பாகமாக உடையவனும் விலை மதிப்புடைய அணிகலன்கள் எவையும் இல்லாதவன் என்னுமாறு என்பு முதலியன பூண்டு மழு இலைவடிவான சூலம் இவற்றைப் படைக்கலனாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.

 
பாடல் எண் : 7
வளம்என வளர்வன வரிமுரல் பறவைகள்
இளமணல் அணைகரை இசைசெயும் இடைமருது
உளம்என நினைபவர் ஒலிகழல் இணைஅடி,
குளமணல் உறமூழ்கி வழிபடல் குணமே.

         பொழிப்புரை :இது வளமான இடமாகும் என வளர்வனவாகிய வரிப் பாடல்களைப் பாடும் வண்டுகள் இளமணல் அணைந்த கரையில் தங்கி முரலும் இடைமருதை மனமார நினைபவர் அந்நகரை அடைந்து ஆங்குள்ள தீர்த்தத்தில் நன்கு மூழ்கி ஒலிக்கின்ற கழலணிந்த மருதவாணனை வழிபடுதலைப் பண்பாகக் கொள்க.

பாடல் எண் : 8
மறையவன், உலகவன், மதியவன், மதிபுல்கு
துறையவன் எனவல அடியவர் துயர்இலர்,
கறையவன் மிடறுஅது கனல்செய்த கமழ்சடை
இறையவன் உறைதரும் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :வேதங்களை அருளியவனும் அனைத்துலகங்களாய் விளங்குபவனும், திங்களாகத் திகழ்பவனும், அறிவொடுபட்ட கலைத்துறைகளாக விளங்குபவனும் சிவபிரானேயாவன் என்று போற்ற வல்ல அடியவர் துயரிலராவர். மிடற்றிற் கறையுடையவனும் கனல்போல் விளங்கும் சடையினனும் எல்லோர்க்கும் தலைவனும் ஆய அப்பெருமான் உறையும் இடம் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 9
மருதுஇடை நடவிய மணிவணர், பிரமரும்,
இருதுடை அகலமொடு இகலினர், இனதுஎனக்
கருதிடல் அரியதொர் உருவொடு பெரியதொர்
எருதுஉடை அடிகள்தம் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :மருதமரங்களின் இடையே கட்டிய உரலோடு தவழ்ந்த நீலமணிபோன்ற நிறத்தை உடைய திருமாலும், பிரமனும் மிக்க பெருமையுடையவர் யார் எனத் தம்முள் மாறுபட்டவராய் நிற்க அவர்கள் இன்னதெனக் கருதற்கரிய பெரிய ஒளி உருவோடு தோன்றிய பெரிய விடையூர்தியனாகிய சிவபிரானது இடம் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 10
துவர்உறு விரிதுகில் உடையரும் அமணரும்
அவர்உறு சிறுசொலை நயவன்மின், இடுமணல்
கவர்உறு புனல்இடை மருதுகை தொழுதுஎழும்
அவர்உறு வினைகெடல் அணுகுதல் குணமே.

         பொழிப்புரை :துவர் ஏற்றிய விரிந்த ஆடையினை உடுத்தும் போர்த்தும் திரியும் புத்தரும் சமணரும் கூறும் சிறு சொல்லை விரும்பாதீர். காவிரி பல கிளைகளாகப் பிரிந்து செல்லும் வாய்க்கால்களை உடைய இடைமருதைக் கைகளால் தொழுபவர்க்கு வினைகள் கெடுதலும் நல்ல குணங்கள் உண்டாதலும் கூடும்.
  
பாடல் எண் : 11
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன்
இடமலி பொழில்இடை மருதினை இசைசெய்த
படம்மலி தமிழ்இவை பரவவல் லவர்வினை
கெட,மலி புகழொடு, கிளர்ஒளி யினரே.

         பொழிப்புரை :நீர்நிலைகள் பலவற்றை உடைய புகலிப் பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதீசனை இசையால் பரவிய சொல்லோவியமாகிய இத்திருப்பதிகத் தமிழைப் பாடிப் பரவ வல்லவர்தம் வினைகள் கெட்டொழிய அவர்கள் புகழோடும் விளங்கும் ஒளியோடும் திகழ்பவராவர்.

                                    திருச்சிற்றம்பலம்


1.122 திருவிடைமருதூர்              பண் - வியாழக்குறிஞ்சி
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விரிதரு புலிஉரி விரவிய அரையினர்,
திரிதரும் எயில்அவை புனைகணை யினில்எய்த
எரிதரு சடையினர் இடைமருது அடைவுஉனல்
புரிதரு மனன்அவர் புகழ்மிக உளதே.

         பொழிப்புரை :விரிந்த புலித்தோலை ஆடையாக உடுத்த இடை யினரும், வானகத்தில் திரிந்து இடர் செய்த முப்புரங்களை ஆற்றல் பலவும் அமைந்த கணையால் எய்தழித்தவரும் எரிபோன்ற சிவந்த சடை யினருமாகிய சிவபிரானார் உறையும் இடைமருதை அடைய எண்ணும் மனம் உடையவர்க்குப் புகழ்மிக உளதாகும்.
  
பாடல் எண் : 2
மறிதிரை படுகடல் விடம்அடை மிடறினர்,
எறிதிரை கரைபொரும் இடைமருது எனும்அவர்
செறிதிரை நரையொடு செலவுஇலர், உலகினில்
பிறிதுஇரை பெறும்உடல் பெறுகுவது அரிதே.

         பொழிப்புரை :சுருண்டு விழும் அலைகள் உண்டாகும் கடலிடைத் தோன்றிய விடம் சேர்ந்த மிடற்றினர் உறைவதும், காவிரியாற்று அலைகள் கரைகளைப் பொருவதுமான இடைமருது என்னும் தலத்தின் பெயரைச் சொல்லுவோர் உடலிடை அலைபோலத் தோன்றும் தோலின் சுருக்கம், மயிரின் நரை ஆகியன நீங்குவர். மீண்டும் இவ்வுலகில் உணவு உண்ணும் உடலோடு கூடிய பிறவியை எய்தார்.

பாடல் எண் : 3
சலசல சொரிபுனல் சடையினர், மலைமகள்
நிலவிய உடலினர், நிறைமறை மொழியினர்,
இலர்என இடுபலி யவர்இடை மருதினை
வலமிட, உடன்நலிவு இலதுஉள வினையே.

         பொழிப்புரை :சலசல என்னும் ஒலிக்குறிப்போடு சொரியும் கங்கை ஆற்றைச் சடைமிசை அணிந்தவரும், மலைமகளை ஒருபாகமாகக் கொண்ட உடலினரும், நிறைவான வேதங்களை மொழிபவரும், உணவின்மையால் பசியோடுள்ளார் என மகளிர் இடும் பலியை ஏற்பவருமான சிவபிரான் உறையும் இடைமருதை வலம்வருபவர்க்கு வினைகளால் ஆகும் உடல் நலிவு இல்லையாம்.
  
பாடல் எண் : 4
விடையினர், வெளியதொர் தலைகலன் எனநனி
கடைகடை தொறுபலி இடுகஎன முடுகுவர்,
இடைவிடல் அரியவர் இடைமருது எனுநகர்
உடையவர் அடியிணை தொழுவதுஎம் உயர்வே.

         பொழிப்புரை :விடையூர்தியை உடையவரும், வெண்மையான தலையோட்டை உண்கலன் எனக்கொண்டு பலகாலும் வீடுகள்தோறும் சென்று பலி இடுக என விரைந்து செல்பவரும், ஒருமுறை அன்பு செய்யின் விடுதற்கு அரியவரும், இடைமருது என்னும் நகரை உடையவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளைத் தொழுவதே எமக்கு உயர்வைத் தரும்.

பாடல் எண் : 5
உரைஅரும் உருவினர், உணர்வுஅரு வகையினர்,
அரைபொரு புலியதள் உடையினர், அதன்மிசை
இரைமரும் அரவினர், இடைமருது எனஉளம்
உரைகளது உடையவர் புகழ்மிக உளதே.

         பொழிப்புரை :சொல்லுதற்கரிய அழகரும், உணர்வதற்கரிய தன்மையரும், இடையில் பொருந்திய புலித்தோல் ஆடையினரும் அதன்மேல் இரையை விழுங்கும் பாம்பைக் கச்சையாகக் கட்டியவரும் ஆகிய சிவபிரானது இடைமருதைப் பலகாலும் புகழ்ந்து போற்றுவார்க்கு மிகுதியான புகழ் உளதாகும்.
  
பாடல் எண் : 6
ஒழுகிய புனல்,மதி, அரவமொடு உறைதரும்
அழகிய முடிஉடை அடிகளது அறைகழல்
எழிலினர் உறைஇடை மருதினை மலர்கொடு
தொழுதல்செய்து எழும்அவர் துயர்உறல் இலரே.

         பொழிப்புரை :வழிந்தொழுகும் கங்கை நதி, இளம்பிறை, பாம்பு ஆகியன உறையும் அழகிய சடைமுடியை உடையவரும், ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்துள்ள அழகரும் ஆகிய அடிகளது இடைமருதை அடைந்து மலர் கொண்டு போற்றித்தொழுது எழுவார் துன்புறுதல் இலராவர்.
  
பாடல் எண் : 7
கலைமலி விரலினர், கடியதொர் மழுவொடும்
நிலையினர், சலமகள் உலவிய சடையினர்,
மலைமகள் முலைஇணை மருவிய வடிவினர்,
இலைமலி படையவர் இடம்இடை மருதே.

         பொழிப்புரை :வீணையை மீட்டி இன்னிசைக் கலையை எழுப்பும் விரலை உடையவரும், கொடிய மழுவாயுதத்தோடு விளங்கும் நிலையினரும், கங்கை உலாவும் சடைமுடியினரும் மலைமகளின் முலைத்தழும்பு பொருந்திய வடிவினரும், இலைவடிவான சூலத்தை ஏந்தியவருமாய சிவபிரானார் இடம் இடைமருதாகும்.
  
பாடல் எண் : 8
செருஅடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினில்ஒரு பதுமுடி நெரிதர,
இருவகை விரல்நிறி யவர்இடை மருது,அது
பரவுவர் அருவினை ஒருவுதல் பெரிதே.

         பொழிப்புரை :போரில் முறையற்ற செயல்களைச் செய்யும் இராவணன் தன்னிடமும் அவ்வாறு திறலோடும் செய்தலைக் கண்டு அரிய கயிலைமலையின்கீழ் அகப்படுத்தி அவனுடைய பத்துத் தலைகளும் நெரியுமாறு சினம் கருணை ஆகிய இருவகைக் குறிப்போடு கால் விரலை ஊன்றியவராகிய சிவபிரானது இடைமருதைப் பரவுவார் அருவினைகள் பெரிதும் நீங்கும்.

பாடல் எண் : 9
அரியொடு மலரவன், எனஇவர் அடிமுடி
தெரிவகை அரியவர் திருவடி தொழுதுஎழ,
எரிதரும் உருவர்தம் இடைமருது அடைவுறல்
புரிதரு மனன்அவர் புகழ்மிக உளதே.

         பொழிப்புரை :திருமால் பிரமர்களாகிய இருவரும் அடிமுடி காண முயன்றபோது அவர்கட்கு அரியவராய்த் தோன்றி அவர்கள் தம்மைத் தொழுது எழுந்தபோது அழலுருவாய்க் காட்சிதந்த சிவபிரானாரது இடைமருதினை அடைய விரும்புவார்க்குப் புகழ் மிக உளதாகும்.

பாடல் எண் : 10
குடைமயி லினதழை மருவிய உருவினர்,
உடைமரு துவரினர், பலசொல உறவுஇலை,
அடைமரு திருவினர் தொழுதுஎழு கழல்அவர்
இடைமருது எனமனம் நினைவதும் எழிலே.

         பொழிப்புரை :குடையையும் மயிற்பீலியையும் கையில் ஏந்திய வடிவினை உடைய சமணர்களும், மருதந்துவர் ஏற்றிய ஆடையை உடுத்த புத்தர்களும் பலவாறு கூற அவர்களோடு நமக்கு உறவில்லை என ஒதுக்கிச் செல்வங்கள்யாவும் தம்மை வந்தடைந்தவராய் விளங்கும் அடியவர்களால் தொழப்பெறும் திருவடிகளை உடைய சிவபிரானது இடைமருது என மனத்தால் நினைவது அழகைத்தரும்.
  
பாடல் எண் : 11
பொருகடல் அடைதரு புகலியர் தமிழொடு
விரகினன், விரிதரு பொழில்இடை மருதினைப்
பரவிய ஒருபது பயிலவல் லவர்இடர்
விரவிலர் வினையொடு வியன்உலகு உறவே.

         பொழிப்புரை :கரையைப் பொரும் கடலை அணித்தாக உடைய புகலிப்பதியில் தோன்றியவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் விரிந்த பொழில்களால் சூழப்பட்ட இடைமருதில் விளங்கும் பெருமானைப் பரவிய இத்திருப்பதிகத்தின் பத்துப் பாடல்களையும் பயில வல்லவர் வினைகளும் இடர்களும் இலராவர். அகன்ற வீட்டுலகம் அவர்கட்குச் சொந்தமாகும்.

                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 192
எறிபுனல்பொன் மணிசிதறும் திரைநீர்ப் பொன்னி
         இடைமருதைச் சென்றுஎய்தி, அன்பி னோடு
மறிவிரவு கரத்தாரை வணங்கி, வைகி,
         வண்தமிழ்ப்பா மாலைபல மகிழச் சாத்தி,
பொறிஅரவம் புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
         போற்றி,அருந் தமிழ்மாலை புனைந்து, போந்து,
செறிவிரைநன் மலர்ச்சோலைப் பழையாறு எய்தி,
         திருச்சத்தி முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.

         பொழிப்புரை : பின், அலை எறியும் நீரால் பொன்னையும் மணிகளையும் கொழிக்கும் அலைகளையுடைய காவிரிக் கரையில் உள்ள திருவிடைமருதூரைச் சென்றடைந்து, மான் கன்றைக் கையில் உடைய இறைவரை அன்பு மிக வணங்கி, அங்கே தங்கி, இசையாலும், பொருண்மையாலும் வளமை மிக்க தமிழ்ப்பதிக மாலை பலவற்றையும் மகிழ்ந்து பாடிப் போற்றி, புள்ளிகளையுடைய பாம்புகளை அணிந்த இறைவரைத் திருநாகேச்சுரத்தில் வணங்கி, அரிய தமிழ் மாலை பாடிச் சென்று, மணம் நிரம்பிய நல்ல மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த பழையாறை எனும் திருப்பதியை அடைந்து, பின் திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்.

         இப்பாடலில் திருச்சத்திமுற்றத்தை அடைதற்கு முன் குறிக்கப் பெற்ற திருப்பதிகள் மூன்றாம். இவற்றில் அருளிய திருப்பதிகங்கள்:

1.    திருவிடைமருதூர்:
(அ). `காடுடை` (தி.4 ப.35)- திருநேரிசை.
(ஆ). `பாசம் ஒன்று இலராய்` (தி.5 ப.14) - திருக்குறுந்தொகை.
(இ). `பறையின் ஓசையும்` (தி.5 ப.15) - திருக்குறுந்தொகை.
(ஈ). `சூலப்படை உடையார்` (தி.6 ப.16)- திருத்தாண்டகம்.
(உ). `ஆறுசடைக்கணிவர்` (தி.6 ப.17) – திருத்தாண்டகம்.

2.    திருநாகேச்சரம்: (அ). `கச்சைசேர்` (தி.4 ப.66)- திருநேரிசை. (ஆ). `நல்லர்`(தி.5 ப.52) - திருக்குறுந்தொகை. (இ). `தாயவனை`(தி.6 ப.66) - திருத்தாண்டகம்.

3.    திருப்பழையாறை: இத்திருப்பதிக்கு நாவரசர் இருமுறை எழுந்தருளுகின்றார்.(தி.12 திருநாவுக்கரசர் புராணம், 215) இதுபொழுது பதிகம் அருளப் பெறவில்லை.


திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

4. 0 35  திருவிடைமருதூர்                திருநேரிசை
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
காடுஉடைச் சுடலை நீற்றர், கையில்வெண் தலையர், தையல்
பாடுஉடைப் பூதஞ் சூழப் பரமனார் மருத வைப்பில்
தோடுஉடைக் கைதை யோடு சூழ்கிடங்கு அதனைச் சூழ்ந்த
ஏடுஉடைக் கமல வேலி இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து , கையில் வெள்ளிய மண்டையோட்டினை ஏந்தி , பக்கத்தில் தம்மைச் சார்ந்த பூதங்கள் சூழ மேம்பட்ட சிவபெருமான் , மருதநிலத்தில் , மடல்களை உடைய தாழைகளோடு சூழும் அகழியைச் சூழ்ந்து தாமரை வேலியாய் அமையும் திருவிடைமருதூரை இடமாகக் கொண்டுள்ளார் .


பாடல் எண் : 2
முந்தையார், முந்தி உள்ளார், மூவர்க்கும் முதல்வர் ஆனார்,
சந்தியார் சந்தி உள்ளார் , தவநெறி தரித்து நின்றார்,
சிந்தையார் சிந்தை உள்ளார், சிவநெறி அனைத்தும் ஆனார்,
எந்தையார் எம்பி ரானார் இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : எம்தந்தையாராய் எம் தலைவராய் உள்ள பெருமான் முற்பட்டவர்களுக்கும் முற்பட்டவராய் , அரி அயன் அரன் என்ற மூவருக்கும் முதற் பொருளானவராய் , அந்திகளிலும் அவ்வந்தித் தொழுகைகளிலும் விளங்கும் அருளுருவினராய் , தவநெறியில் ஒழுகுபவர் உள்ளத்திருப்பவராய் , மங்கலமான வழிகள் எல்லாமாயும் ஆகியவராய் , இடைமருதை இடங்கொண்டவராவர் .


பாடல் எண் : 3
கார்உடைக் கொன்றை மாலை கதிர்மணி அரவி னோடு,
நீர்உடைச் சடையுள் வைத்த நீதியார், நீதி ஆய
போர்உடை விடைஒன்று ஏற வல்லவர், பொன்னித் தென்பால்
ஏர்உடைக் கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : காவிரியின் தென்கரையில் அழகிய தாமரைகள் செழித்து ஓங்கும் இடைமருது என்ற தலத்தை உறைவிடமாகக் கொண்ட பெருமான் கார்காலத்தில் மலரும் மலர்களை உடைய கொன்றை மாலையை ஒளிவீசும் இரத்தினத்தைத் தலையில் உடைய பாம்பினோடு கங்கை தங்கும் சடையில் வைத்த நேர்மையராய் , அறமே வடிவெடுத்ததும் போரிடும் ஆற்றலுடையதுமான காளையைச் செலுத்துவதில் வல்லவராய் உள்ளார் .


பாடல் எண் : 4
விண்ணினார், விண்ணின் மிக்கார், வேதங்கள் நான்கும் அங்கம்
பண்ணினார், பண்ணின் மிக்க பாடலார், பாவம் தீர்க்கும்
கண்ணினார், கண்ணின் மிக்க நுதலினார், காமற் காய்ந்த
எண்ணினார் எண்ணின் மிக்க இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : அடியவருடைய எண்ணத்தில் மேம்பட்ட , இடைமருதை இடங்கொண்ட பெருமானார் தேவருலகை உடையவராய் , அதனினும் மேம்பட்டவராய் , நான்கு வேதமும் ஆறு அங்கங்களும் உலகறியச் செய்தவராய் , பண்ணில் மேம்பட்ட பாடல்களை உடையவராய் , அடியவர்களுடைய பாவங்களைப் போக்கும் கருத்து உடையவராய் , மேம்பட்ட நெற்றிக்கண்ணராய் மன்மதனை வெகுண்ட பெருமானாய் உள்ளார் .


பாடல் எண் : 5
வேதங்கள் நான்கும் கொண்டு, விண்ணவர் பரவி ஏத்த,
பூதங்கள் பாடி ஆடல் உடையவன், புனிதன், எந்தை
பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள் தங்கள் மேலை
ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : நான்கு வேதங்களையும் ஒலித்துக்கொண்டு தேவர்கள் முன்நின்று போற்றிப் புகழப் பூதங்கள் பாடக் கூத்தாடுதலை உடைய தூயராகிய எம் தலைவர் , தம் திருவடிகளை முன் நின்று துதித்த அடியார்களுடைய பழைய வினைகளையும் இனிவரக் கூடிய வினைகளையும் தீர்ப்பவராக இடைமருதை இடங் கொண்டுள்ளார் .


பாடல் எண் : 6
பொறிஅரவு அரையில் ஆர்த்து, பூதங்கள் பலவுஞ் சூழ,
முறிதரு வன்னி கொன்றை முதிர்சடை மூழ்க வைத்து,
மறிதரு கங்கை தங்க வைத்தவர், எத் திசையும்
எறிதரு புனல்கொள் வேலி இடைமருது இடங்கொண் டாரே.

         பொழிப்புரை : புள்ளிகளை உடைய பாம்பினை இடையில் இறுகச் சுற்றிப் பூதங்கள் பலவும் தம்மைச் சூழ்ந்திருக்கத் தளிரை உடைய வன்னி , கொன்றை என்பனவற்றைச் செந்நிறம் மிக்க சடையில் கங்கை வெள்ளத்தில் முழுகுமாறு சூடிய பெருமான் நாற்றிசைகளிலும் அலைவீசும் நீரோடு கால்களை எல்லையாக உடைய இடைமருது இடங்கொண்டார் .


பாடல் எண் : 7
படர்ஒளி சடையின் உள்ளால் பாய்புனல் அரவி னோடு,
சுடர்ஒளி மதியம் வைத்துத் தூஒளி தோன்றும் எந்தை,
அடர்ஒளி விடைஒன்று ஏற வல்லவர், அன்பர் தங்கள்
இடர்அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : இடைமருது இடங்கொண்ட பெருமான் ஒளி வீசும் சடையிலே பரவும் நீரை உடைய கங்கை , பாம்பு , ஒளி வீசும் பிறை எனும் இவற்றைச் சூடித் தூய செந்நிறத்தோடு காட்சி வழங்கும் எங்கள் தலைவராய் , பகைவர்களை அழிக்கும் பிரகாசமான காளையை ஏறி ஊர வல்லவராய் , அன்பர்களுடைய துயரங்களைப் போக்கவல்லவருமாய் உள்ளார் .


பாடல் எண் : 8
கமழ்தரு சடையின் உள்ளால் கடும்புனல் அரவி னோடு,
தவழ்தரு மதியம் வைத்து, தன்அடி பலரும் ஏத்த,
மழுஅது வலங்கை ஏந்தி, மாதுஒரு பாகம் ஆகி,
எழில்தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : பூக்களின் நறுமணம் கமழும் சடையினுள்ளே விரைந்து ஓடும் கங்கை , பாம்பு பிறை இவற்றைச் சூடித் தம் திருவடிகளைப் பலரும் துதிக்குமாறு மழுப்படையை வலக்கையில் ஏந்திப் பார்வதிபாகராய் அழகிய சோலைகள் சூழ்ந்த இடைமருதுப் பெருமான் உள்ளார் .


பாடல் எண் : 9
பொன்திகழ் கொன்றை மாலை, புதுப்புனல், வன்னி, மத்தம்,
மின்திகழ் சடையில் வைத்து மேதகத் தோன்று கின்ற
அன்றுஅவர் அளக்கல் ஆகா அனல்எரி ஆகி நீண்டார்,
இன்றுஉடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : பொன்போல ஒளிவீசும் கொன்றைப்பூமாலை , கங்கை , வன்னி இலை , ஊமத்தம் எனும்இவற்றை ஒளிவீசும் சடையிற் சூடி , ஏனைய தேவர்களின் மேம்பட்டுத் தோன்றுகின்ற பிரமனும் திருமாலும் ஒரு காலத்தில் அடிமுடி காணமுடியாதபடி தீத்தம்பமாகக் காட்சி வழங்கிய பெருமான் இப்பொழுது நன்மக்கள் துதிக்குமாறு இடைமருதில் உறைகின்றார் .


பாடல் எண் : 10
மலையுடன் விரவி நின்று மதியிலா அரக்கன் ஊக்கத்
தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி,
சிலைஉடை மலையை வாங்கித் திரிபுரம் மூன்றும் எய்தார்,
இலை உடைக் கமல வேலி இடைமருது இடம்கொண் டாரே.

         பொழிப்புரை : கயிலைமலையை அடைந்து அறிவற்ற அரக்கனாகிய இராவணன் அம்மலையைப் பெயர்க்க முற்பட அவனைத் தலை உட்பட உடல்முழுதும் துன்புறுத்தி மீண்டும் அவன் வேண்ட அவனுக்குத் தலைவராய் இருந்து அவனுக்குப் அருட்பேறுகள் பலவற்றை விரும்பி அளித்து , மலையாகிய வில்லை வளைத்து வானில் திரிகின்ற மும்மதில்களையும் எய்து அழித்த பெருமான் இலைகளோடு கூடிய தாமரைமலர்கள் ஊர் எல்லையில் பூத்துக் குலுங்கும் திருவிடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளி இருப்பவராவார் .

                                             திருச்சிற்றம்பலம்


5. 014    திருவிடைமருதூர்       திருக்குறுந்தொகை
                                     திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பாசம் ஒன்றுஇல ராய்ப்பல பத்தர்கள்
வாச நாள்மலர் கொண்டுஅடி வைகலும்
ஈசன் எம்பெரு மான்இடை மருதினில்
பூசம் நாம்புகு தும்,புனல் ஆடவே.

         பொழிப்புரை : பல அன்பர்கள் உலக பாசங்கள் ஒன்றும் இல்லாதவராய் மணமிக்க புதுமலர்கள் கொண்டு திருஇடைமருதில் வீற்றிருக்கும் ஈசன் எம்பெருமான் திருவடியை வழிபட்டு வைகுதலைக் கண்டு , புனலாட யாமும் பூசத்திருநாளில் அங்குப் புகுந்து வழிபடுவோம் .

பாடல் எண் : 2
மறையின் நாண்மலர் கொண்டுஅடி வானவர்
முறையி னால்முனி கள்வழி பாடுசெய்
இறைவன் எம்பெரு மான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.

         பொழிப்புரை : வானவர்களும் முனிவர்களும் மறையின் முறையினால் புதிய மலர்கள் கொண்டு வழிபாடு செய்கின்ற இறைவனும் , எம்பெருமானுமாகிய இடைமருதூரில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்கும் .

பாடல் எண் : 3
கொன்றை மாலையும், கூவிள மத்தமும்,
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தை பிரான்இடை மருதினை
நன்று கைதொழு வார்வினை நாசமே.

         பொழிப்புரை : கொன்றை மாலையும் , கூவிளமும் , ஊமத்தமலரும் ஒருங்கு சென்று சேரும்படியாகத் திகழ்கின்ற சடையில் வைத்தவனாகிய இடைமருதூர் உறையும் எந்தையினை என்றும் நன்றுறக் கைதொழுவார் வினைகள் நாசமாகும் .
  
பாடல் எண் : 4
இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்
அம்மை யேல்,பிற வித்துயர் நீத்திடும்
எம்மை ஆளும் இடைமரு தன்கழல்
செம்மை யேதொழு வார்வினை சிந்துமே.

         பொழிப்புரை : எம்மையாளும் இடைமருதூர் உறையும் இறைவன் கழலைச் செம்மையாகத் தொழுவார் வினை சிந்தும் . அத்தொழுகை இம்மையில் வானவர் செல்வம் விளைத்திடும் ; அப்பிறப்பில் பிறவித் துயர் இல்லாவகையில் நீங்கும் .
  
பாடல் எண் : 5
வண்டு  அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,
எண்தி சைக்கும் இடைமரு தா,என
விண்டு போய்அறும் மேலை வினைகளே.

         பொழிப்புரை : வண்டுகள் அணைந்த வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடாமுடியை உடைய கூத்தனார் எனப் படர்க் கையிற் பரவியும் எண்டிசைக்கும் கதியாகிய இடைமருதா என முன்னிலைப் படுத்திப் புகழ்ந்தும் வழிபட மேலை வினைகள் யாவும் நம்மைவிட்டு விலகிக்கெடும்.
  
பாடல் எண் : 6
ஏறு அதுஏறும் இடைமருது ஈசனார்,
கூறு வார்வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்,
ஊறி ஊறி உருகும் என்உள்ளமே.

         பொழிப்புரை : விடையினை உகந்தேறும் இறைவரும் , தன்னைக் கூறுவார் வினைகளைத் தீர்க்கும் குழகரும் , ஆறு செஞ்சடையின்கண் வைத்த அழகருமாகிய இடைமருதூர் எம்பிரானையெண்ணி என் உள்ளம் ஊறி ஊறி உருகுகின்றது .
 
பாடல் எண் : 7
விண்உ ளாரும் விரும்பப் படுபவர்,
மண்உ ளாரும் மதிக்கப் படுபவர்,
எண்ணின் ஆர்பொழில் சூழ்இடை மருதினை
நண்ணி னாரை,நண் ணாவினை, நாசமே.

         பொழிப்புரை : விண்ணிலுள்ள தேவரான் விரும்பப்படுபவரும் , மண்ணினுள்ள மனிதரான் மதிக்கப்படுபவரும் ஆகிய இறைவர்க்குரிய பொழில் சூழ்ந்த திரு இடைமருதூரை எண்ணி நண்ணியவரை வினையினால் வரும் கேடுகள் நண்ணமாட்டா .
  
பாடல் எண் : 8
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தனார்,
கந்த மாலைகள் சூடுங் கருத்தனார்,
எந்தை என்இடை மருதினில் ஈசனைச்
சிந்தை யால்நினை வார்வினை தேயுமே.

         பொழிப்புரை : திருநீறு பூசும் விகிர்தரும் , நறுமண மாலைகள் சூடும் தலைவரும் , என் தந்தைபோல்வாருமாகிய திருவிடைமருதூர் ஈசனைச் சிந்தையால் நினைப்பவர்களது வினைகள் தேயும் .

பாடல் எண் : 9
வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,
பூதம் பாடநின்று ஆடும் புனிதனார்,
ஏதம் தீர்க்கும் இடைமரு தா,என்று
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

         பொழிப்புரை : தேவர்கள் ஓதும் விரிசடை அண்ணலாரும் பூதங்கள் பாடநின்று ஆடும் புனிதருமாகியவரை ஏதந்தீர்க்கும் இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் இறைவா ! என்று சொல்லிப் பாதங்கள் ஏத்தினால் நம்பாவங்கள் நம்மை விட்டு நீங்கும் .

பாடல்  எண் : 10
கனியி னும்,கட்டி பட்ட கரும்பினும்,
பனிம லர்க்குழல் பாவைநல் லாரினும்,
தனிமு டிகவித்து ஆளும் அரசினும்
இனியன், தன்அடைந் தார்க்குஇடை மருதனே.

         பொழிப்புரை : இடைமருதூரில் எழுந்தருளியிருக்கும் ஈசன் , தன்னையடைந்த அன்பர்களுக்குக் கனி , கட்டிபட்ட கரும்பு , குளிர் மலரணிந்த குழலையுடைய பாவை போன்ற பெண்கள் , தனித்து முடிகவித்து நின்று ஆளும் அரசு ஆகிய அனைத்தினும் மிக்க இனிமை உடையவன் . தன்னை அடைந்த மெய்ஞ்ஞானிகளுக்கு அவர்தம் உணர்வு புறத்தே செல்வுழி இப்பொருள்களிலெல்லாம் பரானந்த போகமாய் விளைவன் என்றலும் பொருத்தம் .

பாடல் எண் : 11
முற்று இலாமதி சூடும் முதல்வனார்,
ஒற்றி னார்மலை யால்அரக் கன்முடி,
எற்றி னார்கொடி யார்இடை மருதினைப்
பற்றி னாரைப் பற்றாவினை பாவமே.

         பொழிப்புரை : இளம்பிறை சூடும் முதல்வரும் , மலையால் அரக்கன் முடியை விரலைச் சிறிது ஊன்றி ஒற்றியவரும் , இடபக் கொடியை உடையவரும் ஆகிய பெருமான் எழுந்தருளியுள்ள இடை மருதூரினைப் பற்றியவர்களை வினைகளும் அவற்றான் வரும் இடர்களும் பற்றமாட்டா .

                                    திருச்சிற்றம்பலம்

5. 015    திருவிடைமருதூர்       திருக்குறுந்தொகை
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பறையின் ஓசையும், பாடலின் ஓசையும்,
மறையின் ஓசையும் வைகும் அயல்எலாம்,
இறைவன் எங்கள் பிரான்இடை மருதினில்
உறையும் ஈசனை உள்கும்என் உள்ளமே.

         பொழிப்புரை : பறை , பாடல் , மறை ஆகிய மூன்றின் ஓசைகளும் தங்கியிருக்கும் வயற்புறங்களை உடையதும் , இறைவனாகிய எங்கள் பிரான் எழுந்தருளியிருப்பதுமாகிய இடைமருதூரினில் உறைகின்ற ஈசனை என் உள்ளம் உள்குகின்றது .
  
பாடல் எண் : 2
மனத்துள் மாயனை, மாசுஅறு சோதியை,
புனிற்றுப் பிள்ளைவெள் ளைம்மதி சூடியை,
எனக்குத் தாயை,எம் மான், இடை மருதனை
நினைத்திட்டு ஊறி நிறைந்தது என்உள்ளமே.

         பொழிப்புரை : மனத்தினுள் மாயமாய் வந்து நிற்பவனும் , குற்றமற்ற ஒளிவடிவானவனும் , மிக்க இளமதியைச் சூடியவனும் , எனக்குத் தாயானவனும் , எம்மானும் இடைமருதூரில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனை நினைத்திட்டு அன்பு ஊறி என் உள்ளம் நிறைந்தது .
 
பாடல் எண் : 3
வண்டு அணைந்தன வன்னியும், மத்தமும்,
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை,
எண்தி சைக்கும் இடைமரு தா, என
விண்டு போய்அறும் மேலை வினைகளே.

         பொழிப்புரை : வண்டணைந்த வன்னியும் , மத்தமுமாகிய மலர்களைக் கொண்டு அணைந்த சடைமுடிக் கூத்தப் பிரானை , எண்டிசைக்கும் தலைவனாகிய இடைமருதா என்றுகூற , நம் பழைய வினைகள் நம்மைவிட்டுப் பிரிந்து கெட்டு நீங்கும் .
  
பாடல் எண் : 4
துணை இலாமையில் தூங்குஇருள் பேய்களோடு,
ஆணையல் ஆவது எமக்குஅரி தேஎனா
இணைஇ லா,இடை மாமரு தில் எழு
பணையில் ஆகமம் சொல்லும்தன் பாங்கிக்கே.

         பொழிப்புரை : ஊழிக்காலத்துப் புலராது தாழ்க்கும் இருளில் முதல்வன் தனக்கு உடனிருப்பார் பிறரொருவரும் ஆண்டு இன்மையின் , தன் கணங்களாகிய பேய்களோடு அணைந்து காலத்தைக் கழித்தல் அரிதென்று எண்ணி ஒப்பற்றதாகிய திருவிடை மருதூரில் எழுந்த மருதமரத்தின் கீழிருந்து தன் பாங்கியாகிய உமையம்மைக்கே ஆகமம் உரைப்பாராயினர் .

பாடல் எண் : 5
மண்ணை உண்டமால் காணான் மலர்அடி,
விண்ணை விண்டஅயன் காணான் வியன்முடி,
மொண்ணை மாமருது என்றுஎன் மொய்குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.

         பொழிப்புரை : மண்ணுலகை உண்ட திருமால் மலரடி காணான் , என்றும் விண்ணுலகைப் பிளந்து பறந்து சென்ற நான்முகன் வியன்முடி காணான் என்றும் , மாமருதூரில் இருப்பவனே எனக்கருள் என்றும் என் மொய்குழலாளாகிய மகள் விளையாட்டுக்குரிய தன்தோழியர் கூட்டத்துடன் உரைத்து மகிழ்வாள் . பருவம் எய்தாதாரையும் தன்பால் ஈர்ப்பவன் முதல்வன் என்றபடி .
  
பாடல் எண் : 6
மங்கை காணக் கொடார்மண மாலையை,
கங்கை காணக் கொடார்முடிக் கண்ணியை,
நங்கை மீர்இடை மருதர்இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார் இதழியே.

         பொழிப்புரை : பெண்களே , இடைமருதர் இந்த என்மகளாகிய நங்கைக்குக் கொன்றையைக் கொடுத்துள்ளார் ( கொன்றை மலரின் நிறமாகிய பசலையைக் கொடுத்துள்ளார் .) ஆயின் , அவர் மார்பில் தாராக உள்ள மணமாலையைக் கொடுப்பின் , பக்கத்தில் இருக்கும் பார்வதி காண்பள் ; ஆகலின் அதனைக் கொடுத்தல் இயலாது . இனித் தமது முடியின் கண்ணதாகிய கண்ணியையும் கங்கை ஆண்டிருந்து காண்பாள் ஆகலின் கொடுத்தல் இயலாது . மற்று எங்கிருந்து இப் பசலையாகிய கொன்றையைப் பெற்று இவளுக்கு இவர் கொடுத்தது ?

                                             திருச்சிற்றம்பலம்

6. 016    திருஇடைமருதூர்       திருத்தாண்டகம்
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
சூலப் படைஉடையார் தாமே போலும்,
         சுடர்த்திங்கட் கண்ணி உடையார் போலும்,
மாலை மகிழ்ந்துஒருபால் வைத்தார் போலும்,
         மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்,
வேலைக் கடல்நஞ்சம் உண்டார் போலும்,
         மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்,
ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருதூர் என்ற திருத்தலத்தை உகந்தருளியிருக்கும் இறைவர் சூலப்படை உடையவராய், ஒளி வீசும் பிறையை முடிமாலையாக அணிந்தவராய், விரும்பித் திருமாலை ஒருபாகமாகக் கொண்டவராய், மந்திரமும் அம்மந்திரங்களைப் பயன்கொள்ளும் செயல்களுமாக அமைந்தவராய், கடலில் தோன்றிய விடத்தை உண்டவராய், ஊழ்வினையை நுகரும்போதே உடன் ஈட்டிக் கொள்ளப்படும் மேல் வினைகளை நீக்கும் வேறுபட்ட இயல்பினராய், நறுமணம் கமழும் கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.
  
பாடல் எண் : 2
கார்ஆர் கமழ்கொன்றைக் கண்ணி போலும்,
         கார்ஆனை ஈர்உரிவை போர்த்தார் போலும்,
பாரார் பரவப் படுவார் போலும்,
         பத்துப் பல்ஊழி பரந்தார் போலும்,
சீரால் வணங்கப் படுவார் போலும்,
         திசையனைத்தும் ஆய்,மற்றும் ஆனார் போலும்,
ஏர்ஆர் கமழ்குழலாள் பாகர் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் கார்காலத்தில் பூக்கும் நறுமணக்கொன்றைப் பூவினை முடிமாலையாக உடையவராய், கரிய யானையின் உதிரப்பசுமை கெடாத தோலினைத் திருமேனியின் மீது போர்த்தியவராய், உலகத்தாரால் முன் நின்று துதிக்கப்படுபவராய்ப் பல ஊழிக்காலங்களையும் அடக்கி நிற்கும் காலமாய் நிற்பவராய், பலரும் தம்முடைய பொருள்சேர் புகழைச் சொல்லி வணங்க நிற்பவராய், பத்துத் திசைகளிலும் உள்ள நிலப் பகுதிகளும் மற்றும் பரவி நிற்பவராய், நறுமணம் கமழும் அழகிய கூந்தலை உடைய பார்வதி பாகராய் அமைந்துள்ளார்.

பாடல் எண் : 3
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்,
         விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்,
பூதங்கள் ஆய புராணர் போலும்,
         புகழ வளர்ஒளியாய் நின்றார் போலும்,
பாதம் பரவப் படுவார் போலும்,
         பத்தர் களுக்குஇன்பம் பயந்தார் போலும்,
ஏதங்கள் ஆன கடிவார் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் வேதங்களோடு வேள்விகளைப் படைத்தவராய், விண்ணுலகும் மண்ணுலகும் ஐம்பூதங்களும் தாமேயாகிய பழையவராய்த் தம்மைப் புகழ்வார் உள்ளத்தில் ஞானஒளியாய் நிற்பவராய்த் தம் திருவடிகள் எல்லோராலும் முன்நின்று துதிக்கப்படுவனவாய், அடியார்களுக்கு இன்பம் பயப்பவராய், அவர்களுடைய துன்பங்களையெல்லாம் துடைப்பவராய் அமைந்துள்ளார்.
  
பாடல் எண் : 4
திண்குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித்
         திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்,
விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி,
         வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்,
பண்குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப்
         பரங்குன்றம் மேய பரமர் போலும்,
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :பிற பிறப்புக்களில் உள்ள உயிர்களை அடிமைப் படுத்தி ஆளும் ஆற்றலை உடைய, தேவகணங்கள் தம் திருவடிகளைத் துதித்துத் திசை நோக்கி வணங்குமாறு செய்த இடைமருது மேவிய ஈசர், இந்திரன் செய்த வேள்வியை அழியுமாறு கெடுத்து, மேக வடிவில் வந்த திருமாலை வாகனமாகக் கொண்டு செலுத்திய வேறுபட்ட இயல்பினர். யாழைப் பண்ணும் (சுருதிகூட்டும்) இயல்பினராகிய மகளிரின் ஆடல் பாடல்கள் நீங்காத பரங்குன்றை விரும்பித் தங்கிய பரம்பொருள் ஆவார். எண்ணாயிரவர் என்ற தொகுதியைச் சார்ந்த அந்தணர்கள் வேற்றுத் தெய்வங்களை விடுத்துத் தம்மையே பரம்பொருளாகத் தியானிக்கும் இயல்பினராவர்.

பாடல் எண் : 5
ஊகம் முகில்உரிஞ்சு சோலை சூழ்ந்த
         உயர்பொழில்அண் ணாவில் உறைகின் றாரும்,
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகிப்
         படுவெண் தலையில் பலிகொள் வாரும்,
மாகம்அடை மும்மதிலும் எய்தார் தாமும்,
         அணிபொழில்சூழ் ஆரூர் உறைகின் றாரும்,
ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் வானளாவிய சோலைகளிலே குரங்குகள் நடமாடும் அண்ணாமலையிலும், அழகிய பொழில்கள் சூழ்ந்த ஆரூரிலும், கச்சி ஏகம்பத்திலும் உகந்தருளியிருக்கின்றார். பார்வதி பாகராய்ப் பிரமனுடைய மண்டையோட்டில் பிச்சை எடுப்பவர். வானில் உலவிய மும்மதில்களையும் எய்து வீழ்த்தியவர். எல்லாப் பொருள்களாகவும் உள்ளவர்.
  
பாடல் எண் : 6
ஐயிரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும்,
         அறுமூன்றும் நான்மூன்றும் ஆனார் போலும்,
செய்வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்,
         திசைஅனைத்து மாய்நிறைந்த செல்வர் போலும்,
கொய்மலர்அம் கொன்றைச் சடையார் போலும்,
         கூத்தாட வல்ல குழகர் போலும்,
எய்யவந்த காமனையும் காய்ந்தார் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் பத்துத் திசைகளும், ஏழு இசைகளும், பதினெட்டு வித்தைகளும், பன்னிரண்டு சூரியர்களும், தீவினைகளும் நல்வினைகளுமாகிப் பத்துத் திசைகளிலும் உள்ள பொருள்கள் யாவுமாய் நிறைந்த செல்வராவார். அவர் கொன்றை சூடிய சடையர். கூத்து நிகழ்த்துதலில் வல்ல இளைஞர். தம் மீது மலரம்புகளைச் செலுத்தவந்த மன்மதனைக் கோபித்தவர்.
  
பாடல் எண் : 7
பிரியாத குணம்உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய்,
         பிரிவுடைய குணம்பேசில் பத்தோடு ஒன்றாய்,
விரியாத குணம்ஒருகால் நான்கே என்பர்,
         விரிவிலாக் குணநாட்டத்து ஆறே என்பர்,
தெரிவுஆய குணம்அஞ்சும், சமிதை அஞ்சும்,
         பதம்அஞ்சும், கதிஅஞ்சும் செப்பி னாரும்,
எரிஆய தாமரைமேல் இயங்கி னாரும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் உயிர்களை விட்டு நீங்காத பத்து இயற்கைப் பண்புகளாகவும், உயிர்களுக்கு மலச் சார்பினால் வரும் பதினொரு செயற்கைப் பண்புகளாகவும், பரம் பொருளுக்கு என்று ஒருகால் தொகுத்துச் சொல்லப்படும் நான்கு பண்புகளாகவும், பிறிதொருகால் சொல்லப்படும் ஆறு பண்புகளாகவும் உள்ளனவற்றையும் மெய்ந்நூல்கள் பற்றி ஆராய்ந்து உணரப்படும் பொதுவான ஐம்பண்புகளையும் ஐவகை சமித்துக்களையும், திருவைந்தெழுத்தையும் உயிர்கள் சென்று சேரக்கூடிய வழிகள் ஐந்தையும் குறிப்பிட்டு ஞானப்பிரகாசமாகிய ஒளியை உடைய அடியவர்களின் உள்ளத்தாமரையில் உலவிவருபவராவார்.
  
பாடல் எண் : 8
தோலில் பொலிந்த உடையார் போலும்,
         சுடர்வாய் அரவுஅசைத்த சோதி போலும்,
ஆலம் அமுதாக உண்டார் போலும்,
         அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனார் போலும்,
காலனையும் காய்ந்த கழலார் போலும்,
         கயிலாயம் தம்இடமாக் கொண்டார் போலும்,
ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் தோலுடையை உடுத்து அதன்மேல் ஒளிவாய்ந்த பாம்பினை இறுக்கிக் கட்டிய சோதி வடிவானவர். விடத்தையே அமுதம்போல உண்டவர். அடியவர்களுக்கு அமுதம் போல் இனியவர். காலனை வெகுண்டுதைத்த திருவடியை உடையவர். கயிலாயத்தை நிலையான இடமாக உடையவர். நறுமணம் வீசும் கூந்தலை உடைய பார்வதி பாகர்.

பாடல் எண் : 9
பைந்தளிர்க் கொன்றைஅம் தாரார் போலும்,
         படைக்கணாள் பாகம் உடையார் போலும்,
அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்,
         அணிநீல கண்டம் உடையார் போலும்,
வந்த வரவும் செலவு மாகி,
         மாறாதுஎன் உள்ளத்து இருந்தார் போலும்,
எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் பசிய தளிர்கள் இடையே தோன்றும் கொன்றைப் பூ மாலையர். வேல்போன்ற கண்களை உடைய பார்வதி பாகர். மாலை வானம் போன்ற செந்நிற அழகர். அழகிய நீலகண்டர். உலகில் பிறப்புக்களையும் இறப்புக்களையும் நிகழ்வித்து என் உள்ளத்தில் நீங்காதிருப்பவர். அடியார்களுடைய இடர்களைத் தீர்த்து அவர்களைக் காக்கும் இயல்பினர்.

பாடல் எண் : 10
கொன்றைஅம் கூவிள மாலை தன்னைக்
         குளிர்சடைமேல் வைத்துஉகந்த கொள்கை யாரும்,
நின்ற அனங்கனை நீறா நோக்கி,
         நெருப்புஉருவ மாய்நின்ற நிமல னாரும்,
அன்றுஅவ் அரக்கன் அலறி வீழ
         அருவரையைக் காலால் அழுத்தி னாரும்,
என்றும் இடுபிச்சை ஏற்றுஉண் பாரும்,
         இடைமருது மேவிய ஈச னாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய ஈசனார் கொன்றை மலரோடு வில்வமாலையைக் குளிர்ந்த சடைமீது வைத்து மகிழ்ந்த இயல்பினர். தம்மீது அம்பு எய்ய இருந்த மன்மதனைச் சாம்பலாக்கி நெருப்பு வடிவாய் நின்ற தூயவர். இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்ட அன்று அவன் அலறிவிழுமாறு அம்மலையைக் காலால் அழுத்தியவர். என்றும் மற்றவர் இடும் பிச்சையை வாங்கி உண்பவர்.

                                    திருச்சிற்றம்பலம்

6. 017    திருஇடைமருதூர்      திருத்தாண்டகம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஆறுசடைக்கு அணிவர், அங்கைத் தீயர்,
         அழகர் படையுடையர், அம்பொன் தோள்மேல்
நீறு தடவந்து இடபம் ஏறி
         நித்தம் பலிகொள்வர், மொய்த்த பூதம்
கூறும் குணம்உடையர், கோவ ணத்தர்,
         கோடால வேடத்தர், கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலும் ஆவார்,
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருதூரினை விரும்பித் திருத்தலமாகக் கொண்ட ஈசனார் சடையில் கங்கையை அணிந்து, உள்ளங்கையில் தீயினை ஏற்றவர். அழகர். படைக்கலங்களை ஏந்திய அழகிய பொலிவு உடைய தோள் மீது, நீறு பூசிக் காளையை இவர்ந்து நாளும் பிச்சை ஏற்பவர். தம்மைச் சுற்றியுள்ள பூதங்களால் தம் பண்புகள் பாராட்டப் பெறுபவர். கோவணம் ஒன்றே உடையவர். கையிலே உண்கலத்தை ஏந்திய வேடத்தவர் . இவ்வுலகிற்குத் தோற்றம் நிலை அழிவு ஆகியவற்றைச் செய்யும் இயல்பினர் .
  
பாடல் எண் : 2
மங்குல் மதிவைப்பர், வான நாடர்,
         மடமான் இடம்உடையர், மாத ராளைப்
பங்கின் மிகவைப்பர், பால்போல் நீற்றர்,
         பளிக்கு வடம்புனைவர், பாவ நாசர்,
சங்கு திரையுகளும் சாய்க்காடு ஆள்வர்,
         சரிதை பலவுடையர், தன்மை சொல்லின்,
எங்கும் பலிதிரிவர், என்னுள் நீங்கார்,
         இடைமருது மேவி இடம்கொண்டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவிய இடங்கொண்ட பெருமானார் வானத்தில் இயங்கும் பிறையைச் சடையில் வைத்தவர் . தேவருலகிற்கும் உரியவர் . பார்வதியை இடப்பாகமாக உடையவர் . மான்குட்டியை இடக்கரத்தில் வைத்திருப்பவர் . பால்போன்ற திருநீற்றை அணிந்து , படிக மணிமாலை பூண்டு , அடியார் பாவங்களைப் போக்குபவர் . சங்குகள் அலைகளில் உலவும் சாய்க்காடு என்ற தலத்தை ஆள்பவர் . பல அரிய செயல்களை உடையவர் . எங்கும் பிச்சைக்காகத் திரியும் இயல்பினர் . என் உள்ளத்தை விடுத்து என்றும் நீங்காதிருப்பவர் .
  
பாடல் எண் : 3
ஆல நிழல்இருப்பர், ஆகா யத்தர்,
         அருவரையின் உச்சியர், ஆணர், பெண்ணர்,
காலம் பலகழித்தார், கறைசேர் கண்டர்,
         கருத்துக்குச் சேயார்தாம் காணா தார்க்கு,
கோலம் பலஉடையர், கொல்லை ஏற்றர்,
         கொடுமழுவர், கோழம்பம் மேய ஈசர்,
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்,
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஆலமர நிழலிலும் ஆகாயத்திலும் மலை உச்சியிலும் இருப்பவர் . ஒரே உருவில் ஆணும் பெண்ணுமாக இருப்பவர் . காலங்களுக்கு அப்பாற் பட்டவர் . நீலகண்டர் . தம்மை அறியாதார் உள்ளத்துக்குத் தொலைவில் இருப்பவர் . பல வேடங்களை உடையவர் . முல்லை நிலத்துக்கு உரிய திருமாலைக் காளைவாகனமாக உடையவர் . கொடிய மழுப்படை ஏந்தியவர் . கோழம்பம் , ஏலக்காய் மணம்கமழும் ஈங்கோய் மலை இவற்றை விரும்பி நீங்காதிருப்பவர் .

பாடல் எண் : 4
தேசர், திறம்நினைவார் சிந்தை சேரும்
         செல்வர், திருவாரூர் என்றும் உள்ளார்,
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்,
         மருவும் கரிஉரியர், வஞ்சக் கள்வர்,
நேசர் அடைந்தார்க்கு, அடையா தார்க்கு
         நிட்டுரவர், கட்டங்கர், நினைவார்க்கு என்றும்
ஈசர், புனல்பொன்னித் தீர்த்தர், வாய்த்த
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் ஒளியுடையவர் , தம் அருள் திறங்களைத் தியானிப்பவர்களுடைய உள்ளத்தில் சென்றடையும் செல்வர் . திருவாரூரில் என்றும் இருப்பவர் . பூவிலுள்ள மணம்போல உலகங்கள் எங்கும் பரவியிருப்பவர் . மான் தோலைப் போர்த்தியவர் . யானைத் தோலையும் உடையவர் . எவ்விடத்தும் உருக்காட்டாது மறைந்தே இருக்கும் கள்வர் . அடியார்களுக்கு அன்பர் . தம் அடிகளை அடையாதவர்களுக்குக் கொடியவர் . கட்டங்கப் படையுடையவர் . தம்மை விருப்புற்று நினைப்பவரை என்றும் தாங்குபவர் . காவிரியாகிய தீர்த்தத்தை உடையவர் .

பாடல் எண் : 5
கரப்பர் கரியமனக் கள்வர்க்கு, உள்ளம்
         கரவாதே தம்நினைய கிற்பார் பாவம்
துரப்பர், தொடுகடலின் நஞ்சம் உண்பர்,
         தூய மறைமொழியர், தீயால் ஒட்டி
நிரப்பர், புரமூன்றும் நீறு செய்வர்,
         நீள்சடையர் பாய்விடைகொண்டு எங்கும் ஐயம்
இரப்பர், எமைஆள்வர், என்உள் நீங்கார்,
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் வஞ்சனை மனத்தை உடைய கள்வர்க்குத் தம்மை மறைத்துக் கொள்பவர் . உள்ளத்தில் வஞ்சனையின்றித் தம்மை விருப்புற்று நினைப் பவருடைய பாவங்களை விரட்டுபவர் . கடல் விடத்தை உண்டவர் . தூய வேதங்களை ஓதுபவர் . அறிவில்லாத அசுரர்களின் மும்மதில் களையும் தீயிட்டுச் சாம்பலாக்கியவர் . நீண்ட சடை முடியர் . விரைந்து செல்லும் காளையை இவர்ந்து எங்கும் பிச்சை யெடுப்பவர் . எங்களை ஆள்பவர் . என் உள்ளத்தைவிட்டு நீங்காது இருப்பவர் .

பாடல் எண் : 6
கொடிஆர் இடபத்தர், கூத்தும் ஆடிக்
         குளிர்கொன்றை மேல்வைப்பர், கோலம் ஆர்ந்த
பொடிஆரும் மேனியர், பூதிப் பையர்,
         புலித்தோலர், பொங்குஅரவர், பூண நூலர்,
அடியார் குடியாவர், அந்த ணாளர்
         ஆகுதியின் மந்திரத்தார், அமரர் போற்ற
இடிஆர் களிற்றுஉரியர், எவரும் போற்ற
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :எல்லோரும் போற்றுமாறு இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் இடபக்கொடியினராய்க் கூத்தாடுபவராய்க் கொன்றை சூடியவராய் , அழகிய நீறு பூசிய மேனியராய்த் திருநீற்றுப் பையினை உடையவராய்ப் புலித்தோலை உடுத்தவராய்ச் சீறும் பாம்பினராய்ப் பூணூலை அணிந்தவராய் அடியவர்களுக்கு மிக அணுகிய உறவினராய்க் கருணையுடையவராய் , வேள்வித் தீயில் ஆகுதியிடும் போது சொல்லப்படும் மந்திரவடிவினராய்த் தேவர் போற்றுமாறு பிளிறிக்கொண்டு வந்த களிற்றைக்கொன்று அதன் தோலைப் போர்த்தியவராவர் .

பாடல் எண் : 7
பச்சை நிறம்உடையர், பாலர், சாலப்
         பழையர், பிழைஎலாம் நீக்கி ஆள்வர்,
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்,
         கலன்ஒன்று கைஏந்தி இல்லம் தோறும்
பிச்சை கொளநுகர்வர், பெரியர், சாலப்
         பிறங்கு சடைமுடியர், பேணும் தொண்டர்
இச்சை மிகஅறிவர், என்றும் உள்ளார்,
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :என்றும் உள்ளாராய் இடைமருதுமேவி இடங் கொண்ட எம்பெருமானார் பார்வதிக்குரிய தம் இடப்பாகத்தே பச்சை நிறம் உடையவராய் . மிக இளையராகவும் மிகப் பழையராகவும் காட்சி வழங்கி , அடியார்களை அவர்களுடைய பிழைகளைப் போக்கி ஆட்கொள்பவர் . கோபம் கொள்ளும் பாம்பினைக் கச்சையாகப் பூண்ட தோள்களை உடையவர் . கையில் மண்டையோடாகிய பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி வீடுகள் தோறும் சென்று பிச்சை எடுத்து உண்பவர் . ஆயினும் உண்மை நிலையினில் மிகவும் பெரியவர் . விளங்குகின்ற சடைமுடியை உடையவர் . தம்மை விரும்பும் அடியார் களுடைய விருப்பத்தை மிகவும் அறிந்தவர் .
  
பாடல் எண் : 8
காஆர் சடைமுடியர், காரோ ணத்தர்,
         கயிலாயம் மன்னினார், பன்னும் இன்சொல்
பாஆர் பொருளாளர், வாள்ஆர் கண்ணி
         பயிலும் திருவுருவம் பாகம் மேயார்,
பூஆர் புனல்அணவு புன்கூர் வாழ்வர்,
         புரமூன்றும் ஒள்அழலாக் காயத் தொட்ட
ஏஆர் சிலைமலையர், எங்கும் தாமே
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவி இடங்கொண்டு எங்கும் தாமேயாகப் பரவியிருக்கின்ற பெருமானார் , சோலை போலப் பரவிய சடையினராய் நாகை குடந்தைக் காரோணங்களிலும் , கயிலாயத்திலும் , தங்குபவராய்ப் பூக்கள் நிரம்பிய புனலால் சூழப்பட்ட புன்கூரில் வாழ்பவராய் , இனிய சொற்களாலாகிய பாடல்களின் பொருளை ஆளுதல் உடையவராய் , வாள் போன்ற கண்களை உடைய பார்வதி பாகராய், முப்புரங்களையும் தீக்கொளுவுமாறு கொண்ட அம்பொடு பொருந்திய மலையாகிய வில்லை உடையவராய் விளங்குகின்றார் .

பாடல் எண் : 9
புரிந்தார் நடத்தின்கண், பூத நாதர்,
         பொழில்ஆரூர் புக்குஉறைவர், போந்து தம்மில்
பிரிந்தார் அகல்வாய பேயும் தாமும்
         பிரியார் ஒருநாளும், பேணு காட்டில்
எரிந்தார் அனல்உகப்பர், ஏழில் ஓசை,
         எவ்விடத்துந் தாமேஎன்ரு ஏத்து வார்பால்
இருந்தார், இமையவர்கள் போற்ற என்றும்
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவி இடங்கொண்ட பெருமானார் கூத்தில் விருப்பம் உடையவர் . பூதங்களின் தலைவர் . தம் இருப்பிடமாகிய வீட்டுலகை விடுத்துப் போந்து சோலைகள் சூழ்ந்த ஆரூரில் புகுந்து தங்குபவர் . அகன்ற வாயை உடைய பேய்களை என்றும் பிரியாதவராய்த் தாம் விரும்பும் சுடுகாட்டில் எரிக்கப்படுபவருடைய தீயினை விரும்புபவர் . எழுவகையில் அமைந்த இசையால் தம்மையே பரம்பொருளாகத் துதிப்பவர்கள் உள்ள இடங்களிலெல்லாம் தேவர்களும் போற்றுமாறு என்றும் நிலையாக இருப்பவராவர் .

பாடல் எண் : 10
விட்டுஇலங்கு மாமழுவர், வேலை நஞ்சர்,
         விடங்கர், விரிபுனல்சூழ் வெண்காட்டு உள்ளார்,
மட்டுஇலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்,
         மழபாடி உள்உறைவர், மாகா ளத்தர்,
சிட்டிஉலங்கு வல்அரக்கர் கோனை அன்று
         செழுமுடியும் தோள்ஐஞ்ஞான்கு அடரக் காலால்
இட்டு,இரங்கி மற்றுஅவனுக்கு ஈந்தார் வென்றி,
         இடைமருது மேவி இடம்கொண் டாரே.

         பொழிப்புரை :இடைமருது மேவி இடம் கொண்ட பெருமானார் ஒளிவீசும் பெரிய மழுப்படையை உடையவர் . கடல் நஞ்சுண்டவர் . அழகர் . நீர்வளம் மிக்க வெண்காட்டில் உள்ளவர் . தேன் பொருந்திய மாலையை அணிந்த மார்பில் திருநீறு பூசியவர் . மழபாடியிலும் இரும்பை , அம்பர் , உஞ்சைனி என்ற மாகாளங்களிலும் உறைபவர் . பெருமை விளங்கும் வலிய அரக்கர்கோனாகிய இராவணனை அவன் கயிலை மலையைப் பெயர்க்க முயன்ற போது சிறந்த தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு திருவடியால் நசுக்கிப் பின் அவன் பக்கல் இரக்கம் கொண்டு அவனுக்குப் பல வெற்றிகளையும் வழங்கியவர் .
                                             திருச்சிற்றம்பலம்
                                                                           -----தொடரும் -----



















No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...