திருக் குடந்தைக்
காரோணம்
(சோமேசர் திருக்கோயில்)
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின்
வடகரையில் அமைந்து உள்ளது.
இறைவர்
: சோமேசர், சிக்கேசர், சோமநாதர்.
இறைவியார்
: சோமசுந்தரி, தேனார் மொழியாள்.
தீர்த்தம் : சோம தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : சம்பந்தர் - வாரார்கொங்கை
கும்பகோணத்தில் மகாமக குளத்தின்
வடகரையிலுள்ள காசி விசுவநாதர் கோவிலே திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும்
பாடல் பெற்ற திருத்தலம் என்று சிலர் சொல்கின்றனர்.
இத்தலத்தில் இராமபிரான், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி
சிவபெருமானை வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் (காய - ஆரோகணம்)
காரோணம் என்று பெயர் பெற்றது. மற்றும் சிலர் கும்பகோணத்தில் கும்பேசுவரர்
கோயிலுக்கு அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ள சோமேசர் கோவில்
தான் திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற திருத்தலம் என்று
கூறுகின்றனர். மகாபிரளய காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட
தலமாதலால் காரோணம் என்றும், இந்த சோமேசர் கோயில்
அம்பிகை, இறைவன் திருமேனியை
ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று. இந்த இரு கோயில்களில் உள்ள
சிவாச்சாரியார்களும் தங்களுடைய கோயிலே பாடல் பெற்ற தலம் என்று அழைக்கின்றனர்.
நவகன்னியர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமை
இத்தலத்திற்குள்ளது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னியர்களுக்கு
நெடுங்காலமாக ஒரு குறை. மக்கள் நீராடி தங்கள் பாவங்களை தங்கள் மீது கழுவிச்
செல்கிறார்கள். அப்படிச் சேர்ந்த பாவங்களை நாங்கள் சுமக்க வேண்டுமா என்று ஈசனிடம்
அவர்கள் முறையிட்டனர். ஈசன் நவகன்னியர்களையும் அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணம்
மகாமக தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என்றருளினார். ஈசனும் மகாமகக்
குளத்தின் வடகரையில் எழுந்தருளினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்ற பெயர்களுடன் இறைவன், இறைவி எழுந்தருளியிருக்கும் இக்கோவிலே
குடந்தைக் காரோணம் என்று பலரால் கூறப்படுகிறது.
ஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன்னாலுள்ள
நுழைவாயில் முகப்பின் மேலே நவகன்னியர்களை மகாமக தீர்த்தத்தில் நீராட ஈசன்
அழைத்துச் செல்லும் சுதைச் சிற்பங்களைக் காணலாம். 5 நிலை கோபுர வாயில் கடந்து உள்ளே
சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமர விநாயகரையும், கொடிமரத்தியும் காணலாம். அடுத்துள்ள
மண்டபத்தில் பலிபீடமும், நந்தியெம் பெருமானும்
உள்ளனர். அடுத்த பிரகாரத்தில் நவகன்னியரும் சிலை வடிவில் இவ்வாலயத்தில் காட்சி
அளிக்கின்றனர். சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. இராமர் இலங்கைக்குச்
செல்லுமுன இத்தலத்திற்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். இராமர்
வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இவ்வாலயத்தின் வடகிழக்கு மூலையில் நாம் காணலாம்.
உயர்ந்த பாணத்துடன் இவர் காட்சி அளிக்கிறார். இந்த மகாலிங்கம் வளர்ந்து வருவதாக
ஐதீகம்.
ஆலயத்தில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர்.
நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உண்டு. கோஷ்டத்தில் தனி சந்நிதியில்
அருள்தரும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.
உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம்
அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில்
பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது
பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர்
வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது
கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய
குடத்தின் மீது அம்பைச் செலுத்தி,
குடம்
உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை
உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர்
ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார். சிவபெருமான் குடத்தின் மீது
அம்பைச் செலுத்திய போது அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது.
அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே
இவ்வாலயத்திலுள்ள இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இக்கோயிலுக்கு மூன்று வாயில்களும் ஒரு
பிரகாரமும் உள்ளது. கிழக்கிலுள்ள இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர்
மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். மகாவிஷ்ணு வழிபட்ட ஈஸ்வரர் என்பதால்
சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்துள்ள கட்டைகோபுரத்தை கடந்துவந்தால்
சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால்
சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும்
தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம்
இது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி
தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "வாழ் கோட்டத் தேர்
ஓணம் மட்டும் திகழ் குடந்தை மட்டும் அன்றி, காரோணம் மட்டும் கமழ் மலரே"
என்று போற்றி உள்ளார்.
காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 406
தேமருவு
மலர்ச்சோலைத் திருக் குடமூக்கினில் செல்வ
மாமறையோர், பூந்தராய் வள்ளலார் வந்து அருள,
தூமறையின்
ஒலிபெருக, தூரிய மங்கலம் முழங்க,
கோ முறைமை
எதிர்கொண்டு தம்பதியில்
கொடுபுக்கார்.
பொழிப்புரை : தேன் பொருந்திய
மலர்கள் நிறைந்த திருக்குட மூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெருமறையோர், காழி வள்ளலார் ஆகிய பிள்ளையாரை மறையொலி
பெருகவும், மங்கல இயங்கள்
ஒலிக்கவும், மன்னரை எதிர்
கொள்ளும் முறையில் எதிர் கொண்டு,
தம்
பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 407
திருஞான
சம்பந்தர் திருக் குடமூக்கினைச் சேர
வருவார், தம் பெருமானை வண்தமிழின்
திருப்பதிகம்
உருகாநின்று, உளம் மகிழக் "குடமூக்கை
உகந்து இருந்த
பெருமான்எம்
இறை" என்று பெருகு இசையால்
பரவினார்.
பொழிப்புரை : திருக்குடமூக்கினைச்
சேர வருபவரான திருஞான சம்பந்தர்,
தம்
இறைவரை வளமையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழத் திருக்குடமூக்கை உவந்து
விரும்பி வீற்றிருந்த பெருமான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார்.
பெ.
பு. பாடல் எண். 408
வந்துஅணைந்து, திருக் கீழ்க்கோட்டத்து இருந்த
வான்பொருளைச்
சிந்தை மகிழ்வு
உற வணங்கி, திருத்தொண்டர் உடன் செல்வார்
அந்தணர்கள்
புடை சூழ்ந்து போற்றி இசைப்ப, அவரோடும்
கந்தமலர்ப்
பொழில்சூழ்ந்த காரோணம்
சென்று அடைந்தார்.
பொழிப்புரை : மேற்கூறியவாறு போற்றி
வந்து, திருக்கீழ்க்கோட்டத்தில்
வீற்றிருந்த இறைவரை மனம் மகிழ வணங்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்பவரான சம்பந்தர், அந்தணர்கள் சூழப் போற்றி வர, அவரோடும் கூடி, மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருக்காரோணத்தைச் சென்று அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 409
பூ மருவும்
கங்கை முதல் புனிதமாம்
பெரும் தீர்த்தம்
மாமகம்
தான் ஆடுதற்கு வந்து, வழிபடும் கோயில்
தூமருவு
மலர்க்கையால் தொழுது, வலம் கொண்டு, அணைந்து
காமர் கெட
நுதல் விழித்தார் கழல் பணிந்து, கண்களித்தார்.
பொழிப்புரை : மலர்கள் பொருந்திய
கங்கை முதலான தூயநதிகள் பலவும்,
தத்தம்
இடங்களிலிருந்து இப்பதியிலுள்ள குளத்தில் மாமகத்தன்று ஆடும் பொருட்டாக வந்து
வழிபடுகின்ற பெருமை உடைய அக்கோயிலைத் தூய்மையான மலர்போன்ற கைகளால் தொழுது, வலம் வந்து, மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்த
இறைவரின் திருவடிகளை வணங்கிக் கண்டுகளித்தனர்.
பெ.
பு. பாடல் எண் : 410
கண் ஆரும்
அருமணியை, காரோணத்து ஆர்அமுதை,
நண்ணாதார்
புரம் எரித்த நான்மறையின் பொருளானை,
பண் ஆர்ந்த
திருப்பதிகம் பணிந்து ஏத்தி, பிறபதியும்
எண் ஆர்ந்த
சீர் அடியார் உடன் பணிவுற்று
எழுந்துஅருளி.
பொழிப்புரை : கண்ணகத்தே நின்று
களிதரும் அரிய மணி போன்றவரும், திருக்குடந்தைக்
காரோணத்தில் எழுந்தருளியிருக்கும் அமுதம் போன்றவரும், பகைவரின் முப்புரங்களை எரித்த
நான்மறைகளின் பொருளாக விளங்குபவருமான இறைவரை வணங்கிப் பண்ணமைந்த திருப்பதிகத்தைப்
பாடிப் பணிந்து, போற்றிப் பிற
பதிகளையும் வணங்க எண்ணி, எண்ணிறந்த
அடியவர்களுடன் பணிந்து, அங்கிருந்து
மேற்செல்வார்.
திருக்குடந்தைக்
காரோணத்தில் அருளிய பதிகம் `வாரார் கொங்கை' (தி.1 ப.72) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்த
பதிகமாகும்.
1.072
திருக்குடந்தைக்காரோணம் பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
வார்ஆர்கொங்கை
மாதுஓர்பாகம் ஆக, வார்சடை
நீர்ஆர்கங்கை
திங்கள்சூடி, நெற்றி ஒற்றைக்கண்,
கூர்ஆர்மழுஒன்று
ஏந்தி,அந்தண் குழகன்
குடமூக்கில்
கார்ஆர்கண்டத்து
எண்தோள்எந்தை காரோ ணத்தாரே.
பொழிப்புரை :திருக்குடமூக்கில்
விளங்கும் காரோணத்தில் கருமை பொருந்திய கண்டத்தராய், எட்டுத் தோள்களோடு விளங்கும்
எந்தையாராகிய இறைவர், கச்சணிந்த கொங்கைகளை
உடைய பார்வதிதேவியை ஒருபாகமாக் கொண்டு, நீண்ட
சடைமிசை நீர் மய மான கங்கை, பிறை ஆகியவற்றைச்
சூடி, இயல்பான இருவிழிகளோடு
நெற்றியில் ஒற்றைக் கண்ணுடையவராய்,
கூரிய
மழு என்னும் ஓர் ஆயுதத்தை ஏந்தி,
அழகிய
தண்ணளி செய்யும் குழகராய் விளங்குகின்றார்.
பாடல்
எண் : 2
முடியார்மன்னர், மடமான்விழியார், மூவுலகும் ஏத்தும்
படியார், பவள வாயார்பலரும்
பரவிப் பணிந்துஏத்த,
கொடிஆர்விடையார்
மாடவீதிக் குடந்தைக் குழகுஆரும்
கடிஆர்சோலைக்
கலவமயிலார் காரோ ணத்தாரே.
பொழிப்புரை :மாட வீதிகளை உடைய
குடந்தை என்னும் திருத் தலத்தில் உள்ளதும், மணம் கமழும் சோலைகளில் தோகைகளோடு கூடிய
மயில்கள் விளங்குவதும் ஆகிய காரோணத்தில், இளமை
பொருந்தியவராய் இலங்கும் இறைவர்,
முடிமன்னர்கள், இளையமான் போன்ற விழியினை உடையமகளிர், மேல் கீழ் நடு என்னும் மூவுலக மக்கள், தேவர், முனிகணங்கள், பவளம் போன்ற வாயினை உடைய அரம்பையர்
முதலானோர் பலரும் பரவிப்பணிந்து போற்ற விடைக்கொடியோடு விளங்குபவராவார்.
பாடல்
எண் : 3
மலையார்மங்கை
பங்கர்,அங்கை அனலர், மடல்ஆரும்
குலையார்தெங்கு
குளிர்கொள்வாழை அழகார் குடமூக்கில்
முலையார் அணிபொன்
முளை வெண் நகையார் மூவா மதியினார்
கலையார் மொழியார்
காதல் செய்யும் காரோ ணத்தாரே.
பொழிப்புரை :மட்டைகளோடும்
குலைகளோடும் கூடிய தென்னைகளும் குளிர்ந்த வாழைகளும் சூழ்ந்த அழகமைந்த குடமூக்கு
என்னும் திருத்தலத்தில், பொன்னணிகள் விளங்கும்
தனங்களையும் மூங்கில் முளை போன்ற வெண்மையான பற்களையும் இளம் பிறை போன்ற
நெற்றியையும் இசைக்கலை சேர்ந்த மொழியையும் உடைய மகளிர் பலரால் விரும்பப்படும்
காரோணத்து இறைவர் மலைமங்கைபங்கர்;
அழகியகையில்
அனல் ஏந்தியவர்.
பாடல்
எண் : 4
போதுஆர்புனல்சேர்
கந்தம்உந்திப் பொலிய அழகாரும்
தாதுஆர்பொழில்சூழ்ந்து
எழிலார்புறவில் அந்தண் குடமூக்கில்
மாதுஆர்மங்கை
பாகமாக மனைகள் பலிதேர்வார்
காதுஆர்குழையர்
காளகண்டர் காரோ ணத்தாரே.
பொழிப்புரை :நீர் நிலைகளில்
தோன்றும் தாமரை கழுநீர் குவளை முதலிய பூக்களின் வாசனை முற்பட்டுப் பொலிவெய்த, அழகு நிரம்பிய மகரந்தம் நிறைந்த
சோலைகளாலும் எழிலார்ந்த காடுகளாலும் சூழப்பெற்றதாய் விளங்கும் அழகிய தண்மையான குட
மூக்கில் விளங்கும் காரோணம் எனப்பெயர் பெறும் கோயிலில் எழுந்தருளிய இறைவர், காதல் நிறைந்த உமையம்மைபாகராக மனைகள்
தோறும் பலி ஏற்பவர். காதில் குழை அணிந்தவர். காளம் என்னும் நஞ்சினைக் கண்டத்தே
கொண்டவர்.
பாடல் எண் : 5
பூவார்பொய்கை
அலர்தாமரைசெங் கழுநீர் புறவுஎல்லாம்
தேஆர்சிந்தை
அந்தணாளர் சீரால்அடி போற்றக்
கூவார்குயில்கள்
ஆலுமயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை
காஆர்பொழில்சூழ்ந்த
அழகார்குடந்தைக் காரோ ணத்தாரே.
பொழிப்புரை :சிவபிரான், தெய்வத்தன்மை நிறைந்த மனத் தினராகிய
அந்தணர்கள் அழகிய பொய்கைகளில் பூத்த தாமரை செங்கழுநீர் ஆகியவற்றையும் முல்லை
நிலங்களில் பூத்த மல்லிகை முல்லை முதலிய மணமலர்களையும் கொண்டு தனது புகழைக் கூறித்
திருவடிகளைப் போற்ற, கூவும் குயில்கள்
ஆடும் மயில்கள், இன்சொல்பேசும் கிளிப்பிள்ளைகள்
ஆகிய பறவைகளை உடையதும், பணியாளர்களால்
காக்கப் பெறுவதுமாகிய பொழிலால் சூழப்பெற்ற அழகிய குடந்தைக் காரோணத்தில்
எழுந்தருளியுள்ளார்.
பாடல்
எண் : 6
மூப்பூர் நலிய
நெதியார் விதியாய் முன்னே அனல்வாளி
கோப்பார்,பார்த்தன்
நிலை கண்டு அருளும் குழகர்,
குடமூக்கில்
தீர்ப்பாரஉடலில்
அடுநோய், அவலம் வினைகள்
நலியாமைக்
காப்பார், காலன் அடையாவண்ணம்
காரோ ணத்தாரே.
பொழிப்புரை :குடமூக்கிலுள்ள
காரோணத்து இறைவர் மூப்பு ஊர்ந்துவந்து நலிய நியதி தத்துவத்தின் வழியே நெறியாய்
நின்று நம்மைக்காப்பவர். முற்காலத்தில் அனலையே அம்பாக வில்லில் கோத்து
முப்புரங்களை அழித்தவர். அருச்சுனன் செய்ததவத்தின் நிலை கண்டு இரங்கிப்
பாசுபதக்கணை வழங்கியருளிய குழகர். நம் உடலை வருத்தும் நோய்கள், நம்மைப் பற்றிய வினைகள், மனத்தை வருத்தும் துன்பங்கள்
ஆகியவற்றைத் தீர்ப்பவர். காலன் அடையாவண்ணம் காப்பவர்.
பாடல்
எண் : 7
ஊன்ஆர் தலைகை
ஏந்தி, உலகம் பலிதேர்ந்து உழல்வாழ்க்கை,
மான்ஆர் தோலார்,
புலியின் உடையார், கரியின் உரி போர்வை,
தேன்ஆர் மொழியார்
திளைத்து அங்கு ஆடித் திகழும் குடமூக்கில்
கான்ஆர் நட்டம்
உடையார் செல்வக் காரோணத்தாரே.
பொழிப்புரை :விளங்கும்
குடமூக்கில் உள்ள செல்வவளம் மிக்க காரோணத்து இறைவர், ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் ஏந்தி, உலகம் முழுதும் திரிந்து பலி ஏற்று
உழலும் வாழ்க்கையர், மான் தோலைப்
பூணநூலில் அணிந்தவர். தேனார் மொழி அம்மையோடு குடமூக்கில் கூடி மகிழ்ந்து
சுடுகாட்டில் நடனம் புரிபவர்.
பாடல்
எண் : 8
வரைஆர் திரள்தோள்
மதவாள் அரக்கன் எடுப்ப மலைசேரும்
விரைஆர் பாத
நுதியால் ஊன்ற நெரிந்து சிரம் பத்தும்
உரைஆர் கீதம்
பாடக்கேட்டு அங்கு ஒளிவாள் கொடுத்தாரும்
கரைஆர் பொன்னி
சூழ்தண்குடந்தைக் காரோ ணத்தாரே.
பொழிப்புரை :கரைகளோடு கூடிய
காவிரியாற்று நீர் சூழ்ந்த தண்மையான குடந்தை மாநகரில் அமைந்த காரோணத்து இறைவர் மலை
போன்ற திரண்ட தோள்களை உடைய மதம் மிக்க வாட்போரில் வல்ல இராவணன் கயிலைமலையைப்
பெயர்க்க, அவ்வளவில் தம் மணம்
கமழும் திருவடி நுனிவிரலால் அம்மலையில் சேர்த்து ஊன்றி, அவ்விராவணன் தலை பத்தும் நெரித்துப்
புகழ்மிக்க சாமகானத்தைப் பாடக் கேட்டு, அப்பொழுதே
அவனுக்கு ஒளிபொருந்திய சந்திரஹாசம் என்னும் வாளைக் கொடுத்தவர் ஆவார்.
பாடல்
எண் : 9
கரியமாலும்
செய்யபூமேல் அயனுங் கழறிப்போய்
அரியஅண்டம்
தேடிப்புக்கும் அளக்க ஒண்கிலார்,
தெரியஅரிய
தேவர், செல்வம் திகழுங்
குடமூக்கில்
கரியகண்டர், காலகாலர், காரோ ணத்தாரே.
பொழிப்புரை :செல்வம் விளங்கும்
குடமூக்கில் உள்ள காரோணத்து இறைவர் கருநிறம் பொருந்திய திருமாலும் சிவந்த தாமரை
மலர் மேல் விளங்கும் நான்முகனும் ஒருவரோடு ஒருவர் மாறுபடப் பேசியவராய் அரிய
உலகங்கள் அனைத்தும் தேடிச் சென்றும் அடி முடிகளை அளக்க ஒண்ணாதவராய் உயர்ந்து நின்ற
பெரியவர். முனைப்புடையவரால் காணுதற்கு அரியவர். கருநிறம் பொருந்திய கண்டத்தினர்.
கால காலர்.
பாடல்
எண் : 10
நாணார் அமணர், நல்லது அறியார், நாளும் குரத்திகள்
பேணார் தூய்மை, மாசு கழியார், பேசேல் அவரோடும்,
சேண்ஆர் மதிதோய்
மாடமல்கு செல்வ நெடுவீதிக்
கோணாகரம்
ஒன்று உடையார்குடந்தைக் காரோ ணத்தாரே.
பொழிப்புரை :சமணர்கள் நாணம்
இல்லாதவர்கள். நல்லதை அறி யாதவர்கள். நாள்தோறும் பெண்பால் குருமார்களும், தூய்மை பேணாதவர்கள். உடல் மாசை நீராடிப்
போக்கிக் கொள்ளாதவர்கள். அவர்களோடு பேசவும் செய்யாதீர்கள். வான் அளாவிய மதியினைத்
தோயும் மாடவீடுகளைக் கொண்ட செல்வச் செழுமை உடைய வீதிகளோடு கூடிய காரோணமாகிய
இருப்பிடத்தை உடையவர் சிவபெருமானார். அவரைச் சென்று வழிபடுவீர்களாக.
பாடல்
எண் : 11
கருஆர் பொழில் சூழ்ந்து
அழகார் செல்வக் காரோணத்தாரைத்
திருஆர் செல்வம்
மல்கு சண்பைத் திகழுஞ் சம்பந்தன்
உருஆர் செஞ்சொல்
மாலை இவை பத்து உரைப்பார், உலகத்துக்
கருஆர் இடும்பைப்
பிறப்பு அது அறுத்துக் கவலை கழிவாரே.
பொழிப்புரை :அடர்த்தியால்
கருநிறம் பெற்ற பொழில்கள் சூழ்ந்த அழகிய செல்வக்காரோணத்து இறைவரைத் தெய்வ நலத்தால்
விளைந்த செல்வம் நிறைந்த சண்பை என்னும் சீகாழிப்பதியில் விளங்கும் ஞானசம்பந்தன்
பாடிய செஞ்சொல் மாலையாகிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும் உரைப்பவர், இவ்வுலகில் மீளக்கருவுற்று இடர்ப்படும்
பிறப்பினை எய்தாது கவலைகள் நீங்கப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment