திருக் குடந்தைக்
கீழ்க்கோட்டம்
(நாகேசுவரசுவாமி திருக்கோயில்)
சோழ நாட்டு காவிரித் தென்கரைத் திருத்தலம்.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்
கும்பகோணத்திற்கு பேருந்து வசதிகள் உள்ளன.
அமுதகலசத்தின் (குடத்தின்) வில்வம்
சிவலிங்கமான திருத்தலம்.
இறைவர்
: நாகேசுவரர், நாகநாதர்.
இறைவியார்
: பிருகந்நாயகி, பெரிய நாயகி.
தல
மரம் : வில்வம்
தீர்த்தம் : சிங்கமுக தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - சொன்மலிந்த
மறைநான்கா.
"கோயில் பெருத்தது
கும்பகோணம்" என்னும் மொழிக்கேற்ப இத்திருத்தலத்தில் ஏராளமான கோயில்கள் உள்ளன.
தீர்த்தக் கிணற்றில்
படிகள் இறங்கிச் செல்ல வேண்டும்;
இறங்கு
வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன.
இங்குள்ள நடராச
மண்டபம், "பேரம்பலம்"
எனப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது;
இருபுறங்களிலும்
உள்ள கல் (தேர்¢ச்) சக்கரம் கண்டு
மகிழத் தக்கது, இச்சக்கரங்களின்
ஆரங்களாக 12 ராசிகளும் இடம் பெற
இரண்டு குதிரைகளும் நான்கு யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம்
அமைந்துள்ளது மனதைக் கவர்வதாக உள்ளது; பெயரே
ஆனந்தத் தாண்டவ நடராசசபை அல்லவா?
நடனத்திற்குச்
சிவகாமி தாளம் போடும் பாவனையும்,
மகாவிஷ்ணு
குழலூதும் காட்சியும் பேரழகுடையன.
மூலவர் - அழகான
திருமேனி; உயரமான ஆவுடையார் -
மிகவும் குட்டையான பாணம்.
'பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள்' என்னும் மகான்; புதர் மண்டிக்கிடந்த இத் திருக்கோயிலைச்
சீர்த்திருத்தித் திருப்பணிகள் செய்வித்து 1923-ஆம் ஆண்டில் கும்பாபிஷேகம்
செய்வித்துள்ளார். ராஜகோபுரம், மேற்குக் கோபுரம், நடராசசபை, சுற்றுச்சுவர்கள், சங்கமுகதீர்த்தக்கிணறு முதலிய
திருப்பணிகள் அவரால் செய்யப்பட்டவை. இதற்காக இம் மகான், தம் கழுத்தில் பித்தளைச் செம்பு ஒன்றை
உண்டிக் கலயமாகக் கட்டிக் கொண்டு தெருக்கள்தோறும் சென்று பிச்சையெடுப்பது போல நிதி
திரட்டிய அருஞ்செயலை இன்று கேட்டாலும், நினைத்தாலும்
நம் மனம் நெகிழ்கின்றது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், மாணுற்றோர் காழ்க்
கோட்டம் நீங்கக் கருதும் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவும் அன்பர் கேண்மையே" என்று
போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 406
தேமருவு
மலர்ச்சோலைத் திருக் குடமூக்கினில் செல்வ
மாமறையோர், பூந்தராய் வள்ளலார் வந்து அருள,
தூமறையின்
ஒலிபெருக, தூரிய மங்கலம் முழங்க,
கோ முறைமை
எதிர்கொண்டு தம்பதியில் கொடுபுக்கார்.
பொழிப்புரை : தேன் பொருந்திய
மலர்கள் நிறைந்த திருக்குட மூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெருமறையோர், காழி வள்ளலார் ஆகிய பிள்ளையாரை மறையொலி
பெருகவும், மங்கல இயங்கள்
ஒலிக்கவும், மன்னரை எதிர்
கொள்ளும் முறையில் எதிர் கொண்டு,
தம்
பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.
பெ.
பு. பாடல் எண் : 407
திருஞான
சம்பந்தர் திருக்குடமூக்
கினைச்சேர
வருவார்,தம் பெருமானை வண்தமிழின்
திருப்பதிகம்
உருகா நின்று, உளம் மகிழக் "குடமூக்கை
உகந்துஇருந்த
பெருமான்எம்
இறை" என்று பெருகு இசையால்
பரவினார்.
பொழிப்புரை : திருக்குடமூக்கினைச்
சேர வருபவரான திருஞான சம்பந்தர்,
தம்
இறைவரை வளமையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழத் திருக்குடமூக்கை உவந்து
விரும்பி வீற்றிருந்த பெருமான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார்.
பெ.
பு. பாடல் எண். 408
வந்துஅணைந்து, திருக்கீழ்க்கோட் டத்துஇருந்த
வான்பொருளைச்
சிந்தைமகிழ்வு
உறவணங்கி, திருத்தொண்டர் உடன்செல்வார்
அந்தணர்கள்
புடைசூழ்ந்து போற்றி இசைப்ப, அவரோடும்
கந்தமலர்ப்
பொழில்சூழ்ந்த காரோணம்
சென்று அடைந்தார்.
பொழிப்புரை : மேற்கூறியவாறு போற்றி
வந்து, திருக்கீழ்க்கோட்டத்தில்
வீற்றிருந்த இறைவரை மனம் மகிழ வணங்கித் தொண்டர் கூட்டத்துடன் செல்பவரான சம்பந்தர், அந்தணர்கள் சூழப் போற்றி வர, அவரோடும் கூடி, மணம் பொருந்திய பூஞ்சோலைகள் சூழ்ந்த
திருக்காரோணத்தைச் சென்று அடைந்தார்.
திருக்குடந்தைக்
கீழ்க்கோட்டத்தில் அருளிய பதிகம் கிடைத்திலது.
-----------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 215
நல்லூரில்
நம்பர்அருள் பெற்றுப் போய்,
பழையாறை,
பல்ஊர்வெண்
தலைக்கரத்தார் பயிலும் இடம் பல பணிந்து,
சொல் ஊர் வண்
தமிழ்பாடி, வலஞ்சுழியைத்
தொழுது ஏத்தி,
அல் ஊர் வெண்
பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.
பொழிப்புரை : திருநல்லூர்
இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை
முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான
தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது
ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும்
வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.
பழையாறையில் இது
பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.
1. திருவலஞ்சுழி (அ) `அலையார்` (தி.6 ப.72) - திருத்தாண்டகம். (ஆ) `ஓதமார்` (தி.5 ப.66) – திருக்குறுந்தொகை.
2. திருவலஞ்சுழியும்
திருக்கொட்டையூரும் - `கருமணிபோல்` (தி.6 ப.73) - திருத்தாண்டகம்.
3. திருக்குடமூக்கு - `பூவணத்தவன்` (தி.5 ப.22) - திருக் குறுந்தொகை.
4. குடந்தைக்
கீழ்க்கோட்டம் - `சொல்மலிந்த`(தி.6 ப.75) - திருத்தாண்டகம்.
6. 075 திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் திருத்தாண்டகம்
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
சொல்மலிந்த
மறைநான்கு ஆறுஅங்கம் ஆகிச்
சொல்பொருளும்
கடந்தசுடர்ச் சோதி போலும்,
கல்மலிந்த
கயிலைமலை வாணர் போலும்,
கடல்நஞ்சம்
உண்டுஇருண்ட கண்டர் போலும்,
மன்மலிந்த
மணிவரைத்திண் தோளர் போலும்,
மலையரையன் மடப்பாவை
மணாளர் போலும்,
கொன்மலிந்த
மூவிலைவேல் குழகர் போலும்,
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :குடந்தைக்
கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , சொல் வடிவாய் நிற்கும் நான்கு மறைகளும்
ஆறு அங்கங்களும் ஆனவரும் , சொல்லையும் அதன்
பொருளையும் கடந்த ஒளிப்பிழம்பாம் தன்மையரும் , பக்க மலைகள் நிறைந்த கயிலை மலையில்
வாழ்பவரும் , கடலிடத்துத் தோன்றிய
நஞ்சையுண்டு கறுத்த கழுத்தினரும் ,
வலிமைமிக்க
அழகிய மலை போன்ற திண்ணிய தோளினரும் , பருவதராசன்
மகள் பார்வதியின் கணவரும், கொலைத் தொழில் பழகிய
மூவிலை வேலை ஏந்திய அழகரும் ஆவார்.
பாடல்
எண் : 2
கானல்இளங்
கலிமறவன் ஆகிப் பார்த்தன்
கருத்துஅளவு
செருத்தொகுதி கண்டார் போலும்,
ஆனல்இளங்
கடுவிடைஒன்று ஏறி அண்டத்து
அப்பாலும்
பலிதிரியும் அழகர் போலும்,
தேனல்இளந்
துவலைமலி தென்றல் முன்றில்
செழும்பொழிற்பூம்
பாளைவிரி தேறல் நாறும்
கூனல்இளம்
பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :நல்லதேனின் சிறிய
துளிகளை மிகுதியாக ஏந்தித் தென்றல் தவழும் முன்றிலின்கண்ணுள்ள பொழிலிடத்துப்
பாளைகள் விரிதலால் துளிக்கும் தேனின் மணம் கமழப்பெறுவனவும் , வளைவு பொருந்திய இளம்பிறையைத் தடவும்
துகிற்கொடிகளைக் கொண்டவனும் ஆகிய ,
மாடங்களை
உடைய குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , காட்டில் எழுச்சிமிக்க நல்லிள வேட்டுவன்
ஆகி விசயனுடைய ஊக்கத்தின் அளவினையும் விற்றொழிலின் பயிற்சி முழுவதையும்
அறிந்தவரும் , விரைந்து நடக்கும்
நல்லிள ஆனேற்றை ஊர்ந்து இந்நிலவுலகிற்கு அப்பாலும் பிச்சைகொள்ளத் திரியும் அழகரும்
ஆவார் .
பாடல்
எண் : 3
நீறுஅலைத்த
திருவுருவும், நெற்றிக் கண்ணும்,
நிலாஅலைத்த
பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறுஅலைத்த
சடைமுடியும், அம்பொன் தோளும்,
அடியவர்க்குக்
காட்டிஅருள் புரிவார் போலும்,
ஏறுஅலைத்த
நிமிர்கொடிஒன்று உடையர் போலும்,
ஏழ்உலகும்
தொழுகழல்எம் ஈசர் போலும்,
கூறுஅலைத்த
மலைமடந்தை கொழுநர் போலும்,
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :குடந்தைக் கீழ்க்
கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் திருநீறு பொருந்திய தம் திருவுருவத்தையும் , நெற்றிக் கண்ணினையும் , பிறையொடு பாம்பும் நீர் நிறைந்த
கங்கையும் பொருந்திய சடைமுடியையும் , அழகிய
பொன்நிறத் தோள்களையும் அடியவர்க்குக் காட்டி அருள்புரிவாராய் , இடபம் பொறித்த கொடியை உயர்த்தியவராய் , ஏழுலகங்களும் வணங்கும் திருவடிகளை உடைய
ஈசராய்த் தம் இடப்பங்காய் இடம் பெற்ற மலைமகட்குக் கொழுநராயும் திகழ்பவர் .
பாடல்
எண் : 4
தக்கனது
பெருவேள்வி தகர்த்தார் போலும்,
சந்திரனைக்
கலைகவர்ந்து தரித்தார் போலும்,
செக்கர்ஒளி
பவளஒளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ
ஞாயிறுஎனச் செய்யர் போலும்,
மிக்கதிறல்
மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய்
விண்பொழியக் கழனி எல்லாம்
கொக்குஇனிய
கனிசிதறித் தேறல் பாயும்
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :வேதவழி ஒழுகுதலில்
மிக்க வன்மையுடைய மறையவராய் விளக்கம்பெறும் வேள்வியிடத்து எழும் மிகு புகை
விண்ணிடத்துப் போய் மழையைப் பெய்விக்க , கழனிகளில்
மாமரத்தினுடைய இனிய கனிகள் சிதற அவற்றின் சாறு பரவிப் பாயும் குடந்தைக் கீழ்க்
கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , தக்கனது
பெருவேள்வியை அழித்தவரும் , சந்திரனை ஒற்றைக்
கலையுடன் கைப்பற்றித் தலையில் தரித்துக் காப்பாற்றியவரும் , செவ்வானொளி , பவளஒளி , மின்னொளி , கொழுவிய சுடர்த்தீயொளி , ஞாயிற்றொளி , ஆகிய எல்லா ஒளியும் ஒருங்கு கலந்தாற்
போன்ற செம்மை நிறம் உடையவரும் ஆவார் .
பாடல்
எண் : 5
காலன்வலி
தொலைத்த கழல் காலர் போலும்,
காமன்எழில்
அழல்விழுங்கக் கண்டார் போலும்,
ஆல்அதனில்
அறம்நால்வர்க்கு அளித்தார் போலும்,
ஆணொடுபெண் அலிஅல்லர்
ஆனார் போலும்,
நீலவுரு
வயிரநிரை பச்சை செம்பொன்
நெடும்பளிங்குஎன்று
அறிவரிய நிறத்தார் போலும்,
கோலமணி
கொழித்துஇழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :அழகிய
அரதனங்களைக்கரையில் ஒதுக்கி , மலையினின்று இறங்கிவரும்
காவிரியின் நன்னீரால் சிறப்புமிகும் குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழும் எம்
கூத்தனார், இயமனது
ஆற்றலையழித்ததும் , கழல் அணிந்ததும் ஆகிய
காலை உடையவரும் , மன்மதனது அழகிய உடலை
அழல் உண்ணும் வண்ணம் நுதற் கண்ணை விழித்து நோக்கியவரும் , சனகாதி முனிவர் நால்வர்க்கும் , கல்லாலின் கீழ் அமர்ந்து அறம்
உரைத்தருளியவரும் , ஆண் பெண் அலிகளின்
அல்லராம் தன்மை உடையவரும் , நீலமணி , வரிசைப் படப்பதித்தற்குரிய வயிரம் , பச்சை , செம்பொன் , நீடு பளிங்கு என்றிவற்றுள் இன்னது ஒன்று
போலும் நிறத்தினர் என உணர ஒண்ணாததொரு நிறமுடையவரும் ஆவார் .
பாடல்
எண் : 6
முடிகொண்ட
வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்,
முளைஞாயிறு
அன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட
சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவல்
செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட
இடைமடவாள் பாகம் கொண்டு
சுடர்ச்சோதிக்
கடிச்செம்பொன் மலைபோல்இந்நாள்
குடிகொண்டுஎன்
மனத்தகத்தே புகுந்தார் போலும்
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :குடந்தைக்
கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார், முடியினிடத்தே
வளர்மதியைத் தரித்தவராய், மூன்றாய் எழுந்து
தோன்றும் இளஞாயிறுகள் என்னத் தக்க மலர்க்கண்கள் மூன்றுடையவராய், பாதத்தில் கட்டப்பட்டு ஒலிக்கும்
சிலம்பினராய், அருள் நிறைந்து
ஒளிமிக்க வரிசையான பற்களுடன் அழகிதாய் விளங்கும் செவ்வாயினராய் , உடுக்கை போன்ற இடுப்பினை உடைய உமை
யம்மையை இடப்பங்காய்க் கொண்டவராய் ,
ஒளிப்பிழம்பாய்
விளக்கம் மிக்க செம்பொன் மலை போன்றவராய் , இந்நாள் என் மனத் திடத்தே புகுந்து
குடிகொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 7
கார்இலங்கு
திருவுருவத்து அவற்கும் மற்றைக்
கமலத்தில் காரணற்கும்
காட்சி ஒண்ணாச்
சீர்இலங்கு
தழற்பிழம்பில் சிவந்தார் போலும்,
சிலைவளைவித்து
அவுணர்புரஞ் சிதைத்தார் போலும்,
பார்இலங்கு
புனல்அனல்கால் பரமா காசம்
பரிதிமதி
சுருதியுமாய்ப் பரந்தார் போலும்,
கூர்இலங்கு
வேல்குமரன் தாதை போலும்,
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :குடந்தைக்
கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் மேகம் போல விளங்கும் அழகிய உருவத்தையுடைய
திருமாலுக்கும் , படைப்பிற்குக்
காரணராய்த் தாமரை மலரில் விளங்கும் பிரமனுக்கும் காண முடியாதபடி புகழ் நிலவும்
நெருப்புப்பிழம்பு உருவத்தில் சிவந்து காணப்பட்டவரும் , மலையை வில்லாக வளைத்து அசுரருடைய
முப்புரங்களையும் அழித்தவரும், விளங்கும் நிலம், நீர், தீ, காற்று மேம்பட்ட ஆகாயம், சூரியன் சந்திரன் , சுருதி என்றிவையாய்ப் பரவி நின்றவரும் , கூர்மையுடன் திகழும் வேலையுடைய
குமரனுக்குத் தந்தையானவரும் ஆவார் .
பாடல்
எண் : 8
பூச்சூழ்ந்த
பொழில்தழுவு புகலூர் உள்ளார்,
புறம்பயத்தார், அறம்புரிபூந்
துருத்தி புக்கு,
மாச்சூழ்ந்த
பழனத்தார், நெய்த்தா னத்தார்,
மாதவத்து
வளர்சோற்றுத் துறையார், நல்ல
தீச்சூழ்ந்த
திகிரிதிரு மாலுக்கு ஈந்து
திருவானைக் காவில்ஓர்
சிலந்திக்கு அந்நாள்
கோச்சோழர்
குலத்துஅரசு கொடுத்தார் போலும்,
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :குடந்தைக்
கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் பூக்கள் பரவிய பொழிலால் தழுவப்பட்ட
புகலூரில் உள்ளவரும் , புறம்பயத்தில்
உறைபவரும் , அறத்தை மக்கள்
விரும்பி மேற்கொள்ளும் பூந்துருத்தியில் புக்கவரும் , வண்டுகள் சூழ்ந்த பழனத்தை விரும்பிக்
கொண்டவரும் , நெய்த்தானத்து
நிலைத்தவரும், சிறந்த தவஞ்செய்தற்கு
ஏற்ற சோற்றுத்துறையைப் போற்றிக் கொண்டவரும் , தீயைப் போன்ற ஒளியை உமிழும்
சக்கராயுதத்தைத் திருமாலுக்கு ஈந்த வரும் , திருவானைக்காவில் தொண்டு செய்த ஒப்பற்ற
சிலந்திக்கு மேம்பட்ட சோழர்குடிக்குரிய அரசாட்சியை அந்நாள் கொடுத்தவரும் ஆவார் .
பாடல்
எண் : 9
பொங்குஅரவர், புலித்தோலர், புராணர், மார்பில்
பொறிகிளர்வெண் பூணூல்
புனிதர் போலும்,
சங்குஅரவக்
கடன்முகடு தட்ட விட்டுச்
சதுரநடம் ஆட்டுஉகந்த
சைவர் போலும்,
அங்கரவத்
திருவடிக்குஆள் பிழைப்பத் தந்தை
அந்தணனை
அறஎறிந்தார்க்கு அருள்அப் போதே
கொங்குஅரவச்
சடைக்கொன்றை கொடுத்தார் போலும்,
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :குடந்தைக்
கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் சினம் மிகும் பாம்பை அணிந்தவரும் , புலித்தோலை உடுத்தவரும் , பழமையானவரும் , உத்தம இலக்கணமாகிய பொறிகள் ( மூன்று
வரிகள் ) விளங்கும் மார்பிடத்து வெள்ளிய பூணூலைத் தரித்த புனிதரும், சங்குகள் வாழ்வதும் ஒலியுடையதும் ஆகிய
கடல் அண்டமுகட்டில் சென்று மோதுமாறு கைகளை வீசித் திறம்பட நடனமாடும் அநாதிசைவரும், கழலும், சிலம்பும் கிடந்து ஒலிக்கும்
திருவடிக்கு ஆளாதலில் தவறியதனால்,
தந்தையாகிய
அந்தணனைத் தாளிரண்டும் வெட்டுண்டு வீழ மழுவினாலெறிந்த சண்டேசருக்கு அப்பொழுதே
அரவம் தவழும் சடைமுடியிடத்துத் திகழும் கொன்றைமாலையைக் கொடுத்தவரும் ஆவார்.
பாடல்
எண் : 10
ஏவிஇடர்க்
கடல்இடைப்பட்டு இளைக்கின் றேனை
இப்பிறவி அறுத்து,ஏற வாங்கி, ஆங்கே
கூவிஅமர்
உலகுஅனைத்தும் உருவிப் போகக்
குறியில்அறு
குணத்துஆண்டு கொண்டார் போலும்,
தாவிமுதற்
காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற்
றாமரைபுட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு
குமரிவரு தீர்த்தம் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை :முதன்மை பொருந்திய
காவிரி , நல்யமுனை , கங்கை , சரசுவதி , பொற்றாமரை , பிற தாமரைத் தடாகங்கள் , தெளிநீர்க் கிருட்டிணை , குமரி ஆகிய தீர்த்தங்கள் தாவிவந்து
சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்துத் திகழுமெம் கூத்தனார் , என் வினைக்கு ஈடாகத் தம்மால்
செலுத்தப்பட்டுத் துன்பக்கடலில் வீழ்ந்து துன்புறுகின்ற என்னைக் கூவிக் கரை
ஏறும்படி எடுத்து , இப்பிறவியை அறுத்து
யான் விண்ணவர் உலகம் எல்லாவற்றையும் தாண்டித் தமது சிவலோகத்தில் சென்று சேரும்படி , மாயை கலவாத தம் அருட்குணம் ஆறனுள்ளும்
படுத்து என்னை ஆட்கொண்டவர் ஆவார் .
பாடல்
எண் : 11
செறிகொண்ட
சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்கும்
சிவபுவனத்து அமுதம் போலும்,
நெறிகொண்ட
குழலியுமை பாக மாக
நிறைந்துஅமரர்
கணம்வணங்க நின்றார் போலும்,
மறிகொண்ட
கரதலத்துஎம் மைந்தர் போலும்,
மதில்இலங்கைக்
கோன்மலங்க வரைக்கீழிட்டுக்
குறிகொண்ட
இன்னிசைகேட் டுஉகந்தார் போலும்,
குடந்தைக்கீழ்க்
கோட்டத்துஎம் கூத்த னாரே.
பொழிப்புரை : குடந்தைக்
கீழ்க்கோட்டத்துத் திகழும் எம் கூத்தனார் , இறையின்பம் எய்துதலையே முடிந்தபயனாய்த்
தெளிய வுணர்ந்து தியானத்தில் செறிந்து நிற்பார் சிந்தையில் தித்திக்கும்
சிவலோகத்து அமுதம் ஆவாரும் , நெறித்த கூந்தலையுடைய
உமை ஒருபாகமாக இருக்க , அமரர் கூட்டம் வணங்க , எல்லா நலனும் நிரம்பப்பெற்றுத்
திகழ்ந்தவரும் , மான்கன்றைத் தம்
கரத்தில் ஏந்திய எம் வலியரும் ,
மதிற்காவல்
மிக்க இலங்கையிறை கருத்தழியுமாறு மலைக்கீழ் இட்டு அவனை ஒறுத்துப் பின் இலக்கணம்
அமைந்த அவன் இசையைக் கேட்டு விருப்புற்று அவனுக்கு நலம்பல நல்கினவரும் ஆவார் .
திருச்சிற்றம்பலம்
ஐயடிகள் காடவர்கோன்
நாயனார்
அருளிய
க்ஷேத்திரத்
திருவெண்பா
பாடல்
எண் : 2
கடுஅடுத்த
நீர்கொடு வா, காடி தா என்று,
நடுநடுத்து, நாஅடங்கா முன்னம், பொடிஅடுத்த
பாழ்க்கோட்டம்
சேராமுன், பன்மாடத்
தென்குடந்தைக்
கீழ்க்கோட்டம்
செப்பிக் கிட.
'கடுக்காய் நீரைக் கொண்டுவா' என்றும், நீராகாரம் என்று சொல்லப்படும் 'பழஞ்சோற்று நீரைக் கொண்டு வா' என்றும், உறவினர் எல்லாம்
சொல்லும்படியாக, உடம்பெல்லாம்
நடுநடுங்கி, நாக்கு அடங்கிப் போய், உயிர் போன பிறகு, உடலைப் பாழான மயனாத்தில் கொண்டு
சேர்க்கப்படும் முன்னமே, அழகு மிக்க பல மாடங்களோடு கூடிய, குடந்தைக்கீழ்க் கோட்டம் என்று சொல்லி
இருப்பாயாக. தலத்தில் பெயரைச் சொல்வது
என்பது இறைவவன் திருப்பெயரைச் சொல்வது போலாகும்.
குறிப்பு....கடுக்காய் நீர் பித்தத்தைப்
போக்குவது. நீராகாரம் என்னும் பழஞ்சோற்று
நீரானதும் பித்தத்தைப் போக்குவதோடு,
ஆகாரமாகவும்
அமைந்து பசியையும் போக்கும்.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment