அம்பலவாணக் கவிராயர்
பாடிய
சதுரகிரி அறப்பளீசுர
சதகம்
அறப்பளீசுர சதகம்
என்பது சதுரகிரி என்னும் திருத்தலத்தில் உள்ள அறப்பள்ளி என்னும் திருக்கோயிலில்
எழுந்தருளிய சிவபெருமானை வாழ்த்தும் முறையில் உலகியல் பற்றிக் கூறும் நூறு
செய்யுட்களை உடைய நூல். அறப்பள்ளி + ஈசுரன் : அறப்பளீசுரன்.
இது கொல்லிமலைச் சார்பிலுள்ள சதுரகிரியில்
உள்ள திருக்கோயில். சதுரகிரிக்கே அறப்பள்ளியெனப் பெயருண்டென்றும் கூறுகின்றனர்.
திருவாசகத்தில் திருச்சதகம் என்றுஒரு பகுதி நூறு திருப் பாடல்களைக் கொண்டதாக விளங்குவதைக் காணலாம்.
"விளையும் ஒருபொருள்
மேல்ஒரு நூறு தழைய வுரைத்தல் சதகம் என்ப" . இது சதகம் என்னும் நூலுக்குரிய இலக்கண விளக்கம். ஒரு பொருளென்பது
அகப்பொருள் புறப்பொருள்களில் ஒன்றைக் குறிக்கும். இந் நூல் புறப்பொருளைப்
பற்றியது.
புறப்பொருளாவது
மக்களுடைய வீரம், கொடை, ஒழுக்கம் முதலியவற்றைக்
குறிக்கும்.
அறப்பளீசுர சதகம் என்னும் இந்நூலின் இறுதிச் செய்யுளில், ‘அம்பலவாண கவிராயனாகும்' எனத் தம்மை ஆசிரியர் குறிக்கிறார். இவர் சோழ
நாட்டில் தில்லையாடி என்னும் ஊரில் வேளாளர் குலத்திற் சுமார் முந்நூறு
ஆண்டுகளுக்குமுன் பிறந்து, சீகாழியில்
தங்கியிருந்த - இராம நாடகம் பாடிய - சிறப்புப்பெற்ற அருணாசலக் கவிராயரின் மூத்த
புதல்வர்.
இந் நூலாசிரியரை ஆதரித்தவர் வேளாளர்
குலத்தைச் சார்ந்த மோழை பூபதி என்பவரின் புதல்வர் மதவேள் எனப்படுபவரென்றும் அவர்
சிறந்தவர் என்றும் கங்கை குலத்தவர் என்றும் அறியலாம்.
இந் நூலின் முதல் பாடல் மக்களில் உயர் பிறப்பு பற்றிக் கூறுகின்றது.
1. உயர் பிறப்பு
கடல் உலகில்
வாழும் உயிர் எழுபிறப்பினுள் மிக்க
காட்சிபெறு நரசன்மம் ஆய்க்
கருதப் பிறத்தல் அரிது; அதினும்உயர்
சாதியில்
கற்புவழி வருதல் அரிது;
வடிவமுடன்
அவயவம் குறையாது பிழையாது
வருதல் அது தனினும் அரிது;
வந்தாலும் இது புண்யம் இதுபாவம் என்று எண்ணி
மாசு இல் வழி நிற்றல் அரிது;
நெடிய தனவான் ஆதல் அரிது, அதின் இரக்கம் உள
நெஞ்சினோன் ஆதல் அரிது;
நேசமுடன் உன் பதத்து அன்பனாய் வருதல் இந்
நீள்நிலத்து அதினும் அரிதாம்;
அடியவர்க்
கமுதமே! மோழை பூபதி பெற்ற
அதிபன் எமது அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுரகிரி வளர்
அறப்பளீ சுரதே வனே!
இப் பாடலின் பொருள்....
அடியவர்க்கு அமுதமே ---
அடியவர்களின் துன்பத்தை நீக்கி இனபத்தை அளிப்பவனே!
மோழை பூபதி பெற்ற அதிபன் எமது அருமை மதவேள் - மோழை
எனப்படும்
தலைவன்
ஈன்ற தலைவன் எம் அரிய மதவேள்,
அனுதினமும் மனதில் நினைதரு - நாள்தோறும்
உளமார நினைந்து வழிபடுகின்ற,
சதுரகிரி வளர்
அறப்பளீசுர தேவனே - சதுரகிரியி என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள அறப்பளீசுர தேவனே!
கடல் உலகில் வாழும் எழுபிறப்பு
உயிர்களுள் - கடலால் சூழப்பட்ட இந்த நிலவுலகத்தில் வாழ்கின்ற எழுவகையாகத் தோன்றிய
உயிர்கள் உள்ளும்,
மிக்க காட்சி பெறு
நர சன்மமாய்க் கருதப் பிறத்தல் அரிது - மிகுந்த அறிவையுடைய மக்கட் பிறப்பு என்று எண்ணுமாறு பிறப்பது அருமை உடையது.
அதினும் உயர் சாதியில் கற்புவழி வருதல்
அரிது - அப் பிறப்பதிலும்
உயர்ந்த குணங்களை உடைய இனத்திலே கற்பு ஒழுக்கம் உடைய மரபிலே பிறத்தல் அருமை உடையது.
அது த(ன்)னினும்
வடிவமுடன் அவயவம் குறையாது பிழையாது வருதல் அரிது - அவ்வாறு பிறந்தாலும்,
நல்ல அழகுடன், உறுப்புக் குறைவு ஏதும் அல்லாமலும், உறுப்புக்களில் பிழை ஏதும் இல்லாமலும் பிறப்பது அருமை உடையது.
வந்தாலும் இது புண்யம் இது பாவம் என்று
எண்ணி மாசு இல்வழி நிற்றல் அரிது - அவ்வாறு பிறந்து வந்தாலும், இது புண்ணியம், இது பாவம் என்று அறிந்து, உயிர்க்குக் குற்றம் இல்லாத நல்ல நெறியில் நிற்பது அதை விடவும் அருமை உடையது.
நெடிய தனவான் ஆதல் அரிது - அப்படி எல்லாம் அமைந்து விட்டாலும், பெரிய செல்வந்தன் ஆவது அருமை உடையது.
அதின் இரக்கம் உள
நெஞ்சினோன் ஆதல் அரிது - மிகப் பெரும் செல்வத்தை உடையவன் ஆனாலும், (செல்வத்துப் பயனே ஈதல் என்னும் ஆத்த வாக்கியத்தை அனுசரித்து) உயிர்கள் பால் இரக்கம் கொண்ட மனத்தினை உடையவன் ஆவது அருமை,
அதினும் உன் பதத்து நேசமுடன் அன்பனாய்
வருதல் இந் நீள் நிலத்து அரிது ஆம் - இப்படி எல்லாம் அமைந்து விட்டாலும், ( இவை எல்லாம் தன் முயற்சியால் வந்தது அல்ல, இறைவன் திருவருள் தணை நிற்க வந்தது என உணர்ந்து)
உன்
திருவடிகளிலே அன்பு பூண்டு ஒழுகும் அடியவனாக வருதல் என்பது, இந்த நெடிய உலகத்திலை அருமையிலும் அருமையானது ஆகும்.
மக்கள் பிறப்பாக இருப்பது சிறப்புத் தான். அதிலும், அறிவுடைய மக்கட் பிறப்பாகப்
பிறந்து செல்வம், ஒழுக்கம், அழகு, கடவுள் வழிபாடு ஆகிய இவைகள் உடையவராக இருப்பது சிறப்புக்கு உரியது.
No comments:
Post a Comment