நாய்வாலை
அளவு எடுத்துப் பெருக்கித் தீட்டின்
நல் தமிழை எழுத, எழுத்தாணி ஆமோ?
பேய்வாழும்
சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளி,
பெரிய விளக்கு ஏற்றி வைத்தால் வீடு அது ஆமோ?
தாய்வார்த்தை
கேளாத சகசண்டிக்கு, என்
சாற்றிடினும் உலுத்த குணம் தவிர மாட்டான்,
ஈவாரை
ஈய ஒட்டான், இவனும் ஈயான்,
எழுபிறப்பினும் கடையதாம் இவன் பிறப்பே. 13.
நாயினுடைய வாலை எழுத்தாணிக்கு உரிய அளவாக வெட்டி
எடுத்து, ஒழுங்கு செய்து, நீட்டி, கூர்மை ஆகுமாறு தீட்டினாலும், அது சிறந்த தமிழை எழுதுவதற்கு
எழுத்தாணி ஆகப் பயன் படுமோ? இல்லை.
பேய்கள் வாழுகின்ற மயான பூமியை, அதில் உள்ள குப்பைகளைக்
கூட்டி அப்புறப்படுத்தித் தூய்மை செய்து, அந்த இடத்தில் பெரிய ஒளி மிகுந்த விளக்கினை
ஏற்றி வைத்தால்,
அது
மனிதர் வாழுகின்ற வீடு ஆகுமோ? ஆகாது.
இவை போலவே, பெற்ற தாயின் சொற்களைக் கேட்டு,
அதன்படி நடவாத முரட்டுக் குணம் உடைவனுக்கு, என்ன தான் நல்ல அறிவுரைகளைச்
சொன்னாலும்,
தனக்கு
உள்ள இழி குணத்தை விட்டுவிட மாட்டான். மேலும், தன்னிடம் உள்ள உலோப குணத்தினால், பொருள் அற்றோர்க்குப்
பொருளை வழங்கும் பிறரையும், வழங்காமல் தடுப்பதோடு, இவனும் கொடுத்து உதவி புரியமாட்டான்.
இவன் பிறப்பானது, ஏழு வகையான பிறப்புக்களிலும்
கடைப்பட்டது ஆகும்.
No comments:
Post a Comment