திரு ஏகம்ப மாலை - 14


"வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார், வழக்குஉரைப்பார்,

தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடிஒன்று

மாதுக்கு அளித்து மயங்கிடுவார் விதி மாளும் மட்டும்,

ஏதுக்கு இவர் பிறந்தார்? இறைவா, கச்சிஏகம்பனே."


பொழிப்புரை : திருக்கச்சி ஏகம்பத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவன!  வீண் வாதத்துக்கும், வீண் சண்டைக்கும் போவார்கள்.  மீண்டு வருவார்கள். தமது வழக்கை மற்றவர் கேட்கச் சொல்லுவார்கள். தீய செயலுக்குத் துணையும் போவார்கள். தமது வாழ்நாள் முடியும் அளவும், பொருளை ஓடி ஓடித் தேடி, தம்மால் விரும்பப்பட்ட விலைமகளிருக்குக் கொடுத்து மயங்குவார்கள். என்ன காரணத்துக்காக இவர்கள் பிறந்தார்களோ?


விளக்கம்: தீவினையை உடையவர்கள், இம்மை மறுமை வீடு ஆகியவற்றிற்கு உரிய புகழ், அறம், ஞானத்தைத் தேடாது, தம்மைச் செய்தாரை இருளில் சேர்க்கும் பழி முதலியவற்றையே விரும்பித் தேடுவார்கள். அதற்கான செயல்களையே விரும்பிச் செய்வார்கள் என்பதால்,  "வாதுக்குச் சண்டைக்குப் போவார், வருவார், வழக்கு உரைப்பார், தீதுக்கு உதவியும் செய்திடுவார்" என்றார் அடிகளார்.


தாம் தேடிய பொருளை, பொருள் இல்லாத பிறர்க்கு ஈதலும், தாம் அனுபவித்தலும் செய்யாமல், அப் பொருளை நாள்தோறும் தாம் விரும்பிய பொதுமகளிருக்குக் கொடுத்து, அறிவு அழிந்து மயங்கிடுவார் ஆதலால், "தினம் தேடிஒன்று மாதுக்கு அளித்து மயங்கிடுவார் விதி மாளும் மட்டும்" என்றார் அடிகளார்.  


தாம் பிறந்தும், பிறப்பின் பயனையும், மறுமைக்கு உரிய பயனையும் தேடிக் கொள்ளாமல், வாழ்நாளை வீண் நாள் ஆக்கி உழல்வதால், "ஏதுக்கு இவர் பிறந்தார்" என்றார். "ஈதல், இசைபட வாழ்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" என்றார் திருவள்ளுவ நாயனார். உயிருக்கு ஊதியமாக வரும் ஈதல், புகழ் ஆகியவற்றைப் பெறுவதற்கே இந்த உடம்பு வந்தது என்பதை அறியாதவர்கள்,  "தோன்றலின் தோன்றாமை நன்று".


No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...