"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றொடுஒன்றை
மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்றவினை
காட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின்வழி
ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லைஅம்பலத்தே".
பொழிப்புரை --- உண்ணச் செய்பவனும், உறங்கச் செய்பவனும், ஒரு பொருளோடு ஒரு பொருளை இந்த உலகத்தில் மூட்டி விடுவோனும், சேரச் செய்பவனும், நல்வினை தீவினை என்னும் பாசமாகிய கயிற்றின் வழியே அசையச் செய்பவனும் ஆகிய ஒருவன் தில்லை அம்பலத்திலே விளங்குகின்றான்.
விளக்கம் --- இறைவன் உயிர்களுக்கு உடம்பு, கருவி கரணங்கள், உலகம், உலகப் பொருள்கள் ஆகியவற்றைப் படைத்த பின்னர், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை இயற்றுகின்றான் என்பதை உணர்த்த, "ஊட்டுவிப்பானும், உறங்குவிப்பானும்" என்றார். இறைவன் ஒர் உயிரை இன்னொரு உயிரோடு கூட்டுவதும், பிரிப்பதும் செய்வான் என்பதால், "ஒன்றோடு ஒன்று மூட்டுவிப்பானும்" என்றார். ஆணோடு பெண்ணைச் சேர்ப்பவனும் அவனே யாதலால், "முயங்குவிப்பானும்" என்றார். உயிர்களுக்கு இருவினைப் பயனை உண்பிப்பவனும் அவனே என்பதால், "முயன்ற வினை காட்டுவிப்பானும்" என்றார். உயிர்களை நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய கயிற்றினால் பிறவியில் சேர்த்து ஆட்டுவிப்பவன் என்பதால், "இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப்பானும்" என்றார்.
இதனை,
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாட்டு
வான்ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
என்னும் மணிவாசகத்தால் உணர்க.
No comments:
Post a Comment