“தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும்வா மனம், மச் சமே,
சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த
சரிதமே, பிரமாண் டமும்,
தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;
நெடியமால் கதை;வை ணவம்
நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,
கமலா லயன்கா தைஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கி னேயம்;
அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!”
இதன் பொருள் —
அலைகொண்ட நதியும் வெண்மதியும் அறுகும் புனையும் அத்தனே - அலை வீசும் கங்கை ஆற்றையும் வெண்திங்களையும் அறுகையும் மிலைந்த தலைவனே!
அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!
தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம், பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் - நிலைமைசேர் இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் - நிலையான இவை பத்தும் உயர்ந்த சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை - நெடியவனான திருமாலின் கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய புராணம் நான்கு ஆம் - பெருமையுடைய புராணங்கள் நான்கும் ஆம், கலைவளர் சொல் பதுமமொடு பிரமகை வர்த்தமே கமலாலயன் காதை ஆம் - கலைவல்லார் கூறும் பதுமபுராணமும் பிரமகைவர்த்த புராணமும் தாமரை மலரவன் காதைகள் ஆகும், கதிரவன் காதையே சூரிய புராணம் ஆம் -, கனல் காதை ஆக்கினேயம் - அக்கினியின் கதை ஆக்கினேய புராணம்.
சைவபுராணம் பத்து; வைணவபுராணம் நான்கு; பிரமபுராணம் இரண்டு, கதிரவன் புராணம் ஒன்று; ஆக்கினேய புராணம் ஒன்று; ஆகப் பதினெண் புராணங்கள்.
No comments:
Post a Comment