“சார்பிலா தவருக்கு நிலையேது? முதலிலா
தவருக் கிலாபமேது?
தயையிலா தவர்தமக் குறவேது? பணமிலா
தார்க்கேது வேசை உறவு?
ஊர்இலா தவர்தமக் கரசேது? பசிவேளை
உண்டிடார்க் குறுதிநிலையேது?
உண்மையில் லாதவர்க் கறமேது? முயல்விலார்க்
குறுவதொரு செல்வமேது?
சோர்விலா தவருக்கு மற்றும்ஒரு பயம்ஏது?
சுகம் இலார்க்காசையேது?
துர்க்குணம் இலாதவர்க் கெதிராளி யேது?இடர்செய்
துட்டருக் கிரக்கமேது?
மார்புருவ வாலிமேல் அத்திரம் விடுத்தநெடு
மால்மருக னானமுருகா!
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
மலைமேவு குமர! ஈசனே!”
இதன் பொருள் —
வாலிமேல் மார்பு உருவ அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா - வாலியின் மார்பில் உருவும்படி அம்பு விடுத்த நீண்ட உருவமுடைய திருமாலின் மருகராகிய முருகப் பெருமானே!
மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!
புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!
சார்பு இலாதவருக்கு நிலை ஏது? - ஆதரவாக ஒருவமையும் இல்லாதவர்க்கு நிலையான இடம் இல்லை;
முதல் இலாதவருக்கு இலாபம் ஏது - முதற்பொருள் வாக்காதவர்கட்கு ஊதியம் இல்லை;
தயை இலாதவர் தமக்கு உறவு ஏது - உள்ளத்தில் இரக்கம் இல்லாதவர்கட்கு உறவினர் இல்லை;
பணம் இல்லாதவர்க்கு வேசை உறவு ஏது - பொருள் இல்லாதவர்கட்குப் பரத்தையரின் நட்பு இல்லை;
ஊர் இலாதவர் தமக்கு அரசு ஏது - நாடு இல்லாதவர்கட்கு அரசாட்சி இல்லை;
பசிவேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது? - பசித்த காலத்தில் உண்ணாதவர்கட்கு நல்ல நிலையில்லை;
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது - உண்மை பேசாதவர்க்கு அறம் இல்லை;
முயல்வு இலாதவர்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது - முயற்சி இல்லாதவர்கட்குக் கிடைக்கக் கூடிய செல்வம் இல்லை;
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது - களைப்பு இல்லாதவர்கட்கு மேலும் வரக் கூடிய அச்சம் ஏதும் இல்லை;
சுகம் இலார்க்கு ஆசை ஏது? - உடல்நலம் அற்றவர்க்கு எப்பொருளிலும் விருப்பம் இல்லை;
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது? - நற்பண்பு உடையோர்க்குப் பகைவர் இல்லை;
இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது? - (பிறர்க்குத்) துன்பம் விளைக்கும் கொடியவர்க்கு அருள் இல்லை.
No comments:
Post a Comment