அந்தணரை, நல்லவரை, பரமசிவன்
அடியவரை அகந்தை யால்ஓர்
நிந்தனைசொன் னாலுமென்ன? வைதாலும்
என்ன? அதில் நிடேதம் உண்டோ?
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்
நெறியாரே! துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்துநின்று நாய்குரைத்த
போதில்என்ன? தாழ்ச்சி தானே?”
இதன் பொருள் —-
சுந்தரர்க்குத் தூது சென்ற தண்டலை நீள்நெறியாரே --- சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையாரின் ஊடலை மாற்ற அவரிடம் தூதுபோன திருத்தண்டலை நீள்நெறி இறைவரே! துலங்கும் பூர்ண சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த போதில் என்ன தாழ்ச்சி --- விளங்கும் முழுநிலவைப் பார்த்து ஒரு நாய் குரைப்பதனால் அந்த முழு நிலவுக்கு என்ன குறை உண்டாகும்? (ஒன்றும் இல்லை. அதைப் போலவே), அந்தணரை --- மறையவர்களை, நல்லவரை --- நல்ல உள்ளம் கொண்டோரை, பரமசிவன் அடியவரை --- சிவபெருமானின் அடியவரை, அகந்தையால் ஓர் நிந்தனை சொன்னாலும் என்ன --- உள்ளத்தில் அகந்தை கொண்டு பழித்துக் கூறுவதால் என்ன? வைதாலும் என்ன -- இகழ்ந்தாலும் என்ன? அதில் நிடேதம் உண்டோ --- அவ்வாறு பழித்து இகழ்வதால் அவர்களுக்குப் பிறரால் விலக்கு உண்டாகுமோ? (இல்லை என்பதாம்).
விளக்கம் --- ‘சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் போல' என்பதும் ‘மலையைப் பார்த்து நாய் குரைத்தால் போல’ என்பதும் பழமொழிகள். சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது அதன் அறிவின்மையின் வெளிப்பாடு. அதனால் சந்திரனுக்கு ஒரு குறைவும் உண்டாவது இல்லை.
No comments:
Post a Comment