பொது --- 1107. அங்கதன் கண்டகன்

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அங்கதன் கண்டகன் (பொது)


தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்

     தந்தனந் தந்தனந் ...... தனதான


அங்கதன் கண்டகன் பங்கிலன் பொங்குநெஞ்

     சன்பிலன் துன்பவன் ...... புகழ்வாரா


அஞ்சொடுங் கும்பொதும் பொன்றையென் றுஞ்சுமந்

     தங்குமிங் குந்திரிந் ...... திரைதேடுஞ்


சங்கடங் கொண்டவெஞ் சண்டிபண் டன்பெருஞ்

     சஞ்சலன் கிஞ்சுகந் ...... தருவாயார்


தந்தொழும் பன்தழும் பன்பணிந் தென்றுநின்

     தண்டையம் பங்கயம் ...... புகழ்வேனோ


கங்கையும் பொங்குநஞ் சம்பொருந் தும்புயங்

     கங்களுங் திங்களுங் ...... கழுநீருங்


கஞ்சமுந் தும்பையுங் கொன்றையுஞ் சந்ததங்

     கந்தமுந் துன்றுசெஞ் ...... சடையாளர்


பங்குதங் கும்பசுங் கொம்புதந் தின்புறும்

     பந்தவெங் குண்டர்தங் ...... குலகாலா


பண்டிதன் கந்தனென் றண்டரண் டந்தொழும்

     பண்புநண் பும்பெறும் ...... பெருமாளே.


                            பதம் பிரித்தல்



அங்கதன், கண்டகன், பங்கு இலன், பொங்கு நெஞ்சு

     அன்பு இலன், துன்பவன், ...... புகழ் வாரா


அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை, என்றும் சுமந்து,

     அங்கும் இங்கும் திரிந்து ...... இரைதேடும்


சங்கடம் கொண்ட வெம் சண்டி, பண்டன், பெரும்

     சஞ்சலன், கிஞ்சுகம் ...... தரு வாயார்


தம் தொழும்பன், தழும்பன், பணிந்து என்று நின்

     தண்டைஅம் பங்கயம் ...... புகழ்வேனோ?


கங்கையும், பொங்கு நஞ்சம் பொருந்தும்  புயங்-

     கங்களும், திங்களும், ...... கழுநீரும்,


கஞ்சமும், தும்பையும், கொன்றையும், சந்ததம்

     கந்தமும் துன்று செஞ் ...... சடையாளர்


பங்கு தங்கும் பசுங் கொம்பு தந்து, இன்புறும்

     பந்த! வெம் குண்டர் தம் ...... குலகாலா!


பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும்

     பண்பு நண்பும் பெறும் ...... பெருமாளே.


பதவுரை


கங்கையும் பொங்கு நஞ்சம் பொருந்தும் புயங்கங்களும் திங்களும் கழுநீரும் --- கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், 


கஞ்சமும் தும்பையும் கொன்றையும் சந்ததம் கந்தமும் துன்று செம் சடையாளர் --- தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த திருச்சடையை உடைய சிவபெருமானது 


பங்கு தங்கும் பசும் கொம்பு தந்து இன்புறும் பந்த --- இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதி தேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் திருஞானசம்பந்த மூர்த்தியே!


வெம் குண்டர் தம் குலகாலா --- கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்குக் காலனாய்த் திகழ்ந்தவரே! 


பண்டிதன் கந்தன் என்று அண்டர் அண்டம் தொழும் பண்பு நண்பும் பெறும் பெருமாளே --- கலைவல்லவன், கந்தபிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, நற்பண்பையும், உமது திருவருளையும் பெற்றுக் களிக்கும் பெருமையில் மிக்கவரே!


அங்கதன் --- பழிப்புரை கூறுவோன்,


கண்டகன் --- கொடியவன்,


பங்கு இலன் --- பாங்கு இல்லாதவன்,


பொங்கு நெஞ்சு அன்பிலன் --- அன்பு பொங்குகின்ற உள்ளம் இல்லாதவன்,


துன்பவன் --- துன்பத்தில் திளைத்து இருப்பவன் ஆகிய அடியேன்,


புகழ் வாரா அஞ்சு ஒடுங்கும் பொதும்பு ஒன்றை என்றும் சுமந்து --- புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய இந்த உடலை எந்நாளும் சுமந்து,  


அங்கும் இங்கும் திரிந்து இரை தேடும் சங்கடம் கொண்ட வெம் சண்டி --- அங்கும் இல்குமாகத் திரிந்து உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடியவன், மானம் அற்றவன்,


பண்டன் -- ஆண்மை இல்லாதவன்,


பெரும் சஞ்சலன் --- மிக்க மனக் கவலை உடையவன்,


கிஞ்சுகம் தரு வாயார் தம் தொழும்பன் --- சிவந்த வாயிதழினை உடைய விலைமாதர்க்கு ஏவல் செய்பவன்,


தழும்பன் --- குற்றம் உள்ளவன், 


பணிந்து --- தேவரீரைப் பணிந்து,


என்று நின் தண்டை அம் பங்கயம் புகழ்வேனோ --- எப்போது உமது தண்டை அணிந்ததும், அழகிய தாமரை போன்றதுமான திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவேனோ? 


பொழிப்புரை


கங்கை நதியும், பொங்கி எழும் விஷம் பொருந்திய பாம்புகளும், சந்திரனும், செங்கழுநீர் மலரும், தாமரையும், தும்பையும், கொன்றையும், எப்போதும் நறுமணம் கமழும்படி அணிந்த சிவந்த திருச்சடையை உடைய சிவபெருமானது இடப் பாகத்தில் வீற்றிருக்கும் பசிய பூங்கொம்பு போன்ற பார்வதிதேவி ஞானப்பாலைக் கொடுத்ததனால் மகிழும் திருஞானசம்பந்த மூர்த்தியே!

கொடிய சமணர்களுடைய கூட்டத்துக்குக் காலனாய்த் திகழ்ந்தவரே! 

கலைவல்லவன், கந்தபிரான் என்று விண்ணுலகிலும், மண்ணுலகிலும் உள்ளவர்கள் தொழுது, நற்பண்பையும், உமது திருவருளையும் பெற்றுக் களிக்கும் பெருமையில் மிக்கவரே!

பழிப்புரை கூறுவோன், கொடியவன், பாங்கு இல்லாதவன், அன்பு பொங்குகின்ற உள்ளம் இல்லாதவன், துன்பத்தில் திளைத்து இருப்பவன் ஆகிய அடியேன், புகழைத் தராத ஐம்புலன்கள் தங்கியுள்ள குகையாகிய இந்த உடலை எந்நாளும் சுமந்து,  அங்கும் இல்குமாகத் திரிந்து உணவைத் தேடுகின்ற வேதனைத் தொழிலை மேற்கொண்ட கொடியவன், மானம் அற்றவன், ஆண்மை இல்லாதவன், மிக்க மனக் கவலை உடையவன், சிவந்த வாயிதழினை உடைய விலைமாதர்க்கு ஏவல் செய்பவன், குற்றம் உள்ளவன், இப்படிப்பட்ட இழிகுணத்தவன் ஆகிய அடியேன் தேவரீரைப் பணிந்து, எப்போது உமது தண்டை அணிந்ததும், அழகிய தாமரை போன்றதுமான திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவேனோ? 


No comments:

Post a Comment

பொது --- 1107. அங்கதன் கண்டகன்

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அங்கதன் கண்டகன் (பொது) தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்      தந்தனந் தந்தனந் ...... தனதான அங்கதன் கண்டகன்...