“நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
வளநாட்டில், நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்
புவியாளும் வண்மை செய்த
தீர்க்கமுள்ள அரசனையே தெய்வம் என்பார்;
கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கமுள்ள அரசனும்தன் மந்திரியும்
ஆழ்நரகில் மூழ்கு வாரே!”
இதன் பொருள் —-
நால் கவியும் புகழவரும் தண்டலையார் வளநாட்டில் - ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகைக் கவிகளிலும் வல்லவர்கள் புகழுமாறு சிறப்புற்று விளங்கும் திருத்தண்டலை இறைவரின் செழிப்பான நாட்டில், நல்ல நீதிமார்க்கமுடன் நடந்து - நல்ல அறநெறியுடன் ஒழுகி, செங்கோல் வழுவாமல் புவி ஆளும் வண்மை செய்த - நடுநிலை தவறாமல் உலகத்தை ஆளும் கொடையாளியான, தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் - துணிவுடைய மன்னனையே கடவுள் என்று கூறுவார்கள்; கொடுங்கோன்மை செலுத்தி நின்ற - தவறான ஆட்சி நடத்துகின்ற, மூர்க்கம் உள்ள அரனும் தன் மந்திரியும் - கொடிய அரசனும் அவனுடைய அமைச்சனும், ஆழ்நரகில் மூழ்குவார் - ஆழமான நரகத்திலே அழுந்துவார்கள்.
“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்' என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி. “முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்” என்றார் திருவள்ளுவ நாயனார். தீர்க்கம் - துணிவு, உறுதி.
No comments:
Post a Comment