79. துன்பம் வந்தாலும் பயன் தருபவை

 


“ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்

     அமுதபா னம்கொடுக்கும்

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்

     அப்போதும் உதவிசெய்வன்


கூறுமதி தேய்பிறைய தாகவே குறையினும்

     குவலயத் திருள்சிதைக்கும்

கொல்லைதான் சாவிபோய் விட்டாலும் அங்குவரு

     குருவிக்கு மேய்ச்சலுண்டு


வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும்

     மிகநாடி வருபவர்க்கு

வேறுவகை இல்லையென் றுரையா தியன்றன

     வியந்துளம் மகிழ்ந்துதவுவான்


மாறுபடு சூரசங் காரகம் பீரனே!

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!"


இதன் பொருள் ---


        மாறுபடு சூரசங்கார கம்பீரனே - பகைத்த சூரனைக் கொன்ற வீரனே!

வடிவேல் அணிந்த முருகா - கூரிய வேலை ஏந்திய முருகனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

தண்ணீர் வற்றிவிட்டாலும் ஆறு, ஊற்று நீர் அமுதபானம் கொடுக்கும் - தண்ணீர் வறண்டு போயினும் ஆறு தன் ஊற்றினாலே இனிய குடிநீரைத் தரும்; 

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும், அப்போதும் உதவி செய்வன் - கதிரவனுடைய அரைப் பகுதியைப் பாம்பு மறைத்தாலும் அந்நிலையிலும் கதிரவன் ஒளி தருவான்; 

கூறும் மதி தேய்பிறையதாகவே குறையினும், குவலயத்து இருள் சிதைக்கும் - சொல்லப்பட்ட திங்கள் தேய்பிறையாகக் குறைந்தாலும் உலகிலுள்ள இருளை ஓட்டும்; 

கொல்லைதான் சாவி போய்விட்டாலும், அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு - புன்செய் நிலம் விளைவின்றிப் பட்டுப்போனாலும் அந்நிலத்திற்கு வரும் குருவிகளுக்குத் தீனி கிடைக்கும்; 

    (அது போலவே)

வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் - சிறப்புடன் கொடுப்போன் வறுமையுற்றாலும், மிகநாடி வருபவர்க்கு - சாலவுந் தேடிவருவோர்களுக்கு, இல்லையென்று உரையாது வேறுவகை இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் - இல்லை என்று கூறாமல் வேறு வகையிலே முடிந்த பொருள்களை வியப்புறும்படி மனம் மகிழ்ந்து கொடுப்பான்.


     கதிவரனை இராகு எனும் பாம்பு மறைப்பதாகக் கூறுவது புராணக்கதை. கட்செவி - பாம்பு (கண்ணே செவியாகவும் உடையது). கொல்லை என்பது முல்லை நிலம்: இக்காலத்திற் புன்செய் எனப்படும்.  காடும் காடுசார்ந்த இடமும் முல்லை. உதாரி (வட) - கொடையாளி. உதாரம் - கொடை. மிடி - வறுமை. ‘வியந்து' என்பதற்கு ‘வியக்க' எனப் பொருள் கூறல் வேண்டும். கம்பீரம் (வட). வீரத் தோற்றம். 

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல், குலன் உடையான் கண்ணே உள' என்பது திருவள்ளுவ நாயனார் அருளிய பொய்யாமொழி. “ஈதல், இசைபட வா.்தல், அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என்னும் திருக்குறளின் வாய்மையை உணர்ந்த, கொடைப் பண்பு உடையோர் தம் உயிரையும் விடுவரே ஒழிய இல்லை என்று இயம்பார்.  “இன்மையால் சென்று இரந்தோர்க்கு இல்லை என்னாது ஈந்து உவக்கும் தன்மையார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம்.

95. இல்லற மாண்பு

 


“தந்தைதாய் சற்குருவை இட்டதெய் வங்களைச்

     சன்மார்க்கம் உளமனை வியைத்

  தவறாத சுற்றத்தை ஏவாத மக்களைத்

     தனைநம்பி வருவோர் களைச்


சிந்தைமகிழ்வு எய்தவே பணிவிடைசெய் வோர்களைத்

     தென்புலத் தோர் வறிஞரைத்

  தீதிலா அதிதியைப் பரிவுடைய துணைவரைத்

     தேனுவைப் பூசுரர் தமைச்


சந்ததம் செய்கடனை என்றும்இவை பிழையாது

     தான்புரிந் திடல்இல் லறம்;

  சாருநலம் உடையராம் துறவறத் தோரும்இவர்

     தம்முடன் சரியா யிடார்!


அந்தரி உயிர்க்கெலாந் தாய்தனினும் நல்லவட்

     கன்பனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!”


இதன் பொருள் —-

அந்தரி உயிர்க்கு எலாம் தாய் தனினும் நல்லவட்கு அன்பனே - பார்வதிதேவியும், உநிர்க்கு எல்லாம் தாயியினும் நல்லவளுமான உமையம்மைக்குக் காதலனே!

அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

தந்தைதாய் சற்குருவை - தந்தை தாயரையும் நல்லாசிரியனையும், இட்ட தெய்வங்களை - வழிபாடு தெய்வங்களையும், சன்மார்க்கம் உள மனைவியை - நல்லொழுக்கமுடைய இல்லாளையும், தவறாத சுற்றத்தை - நீங்காத உறவினரையும், ஏவாத மக்களை - குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகளையும், தனை நம்பி வருவோர்களை - தன்னை நம்பிப் புகலாக அடைந்தோர்களையும், சிந்தை மகிழ்வு எய்தவே பணிவிடை செய்வோர்களை - மனம் மகிழத் தொண்டு புரிவோர்களையும், தென்புலத்தோர் வறிஞரை - தென்புலத்தாரையும் ஏழைகளையும், தீது இலா அதிதியை - குற்றமற்ற விருந்தினரையும், பரிவு உடைய துணைவரை - அன்புமிக்க உடன்பிறப்பாளர்களையும், தேனுவை - பசுக்களையும், பூசுரர் தமை - அந்தணர்களையும், (ஆதரித்தலும்) சந்ததம் செய் கடனை - எப்போதும் செய்யும் கடமைகளையும், இவை - (ஆகிய) இவற்றை, சந்ததம் பிழையாது - எப்போதும் தவறாமல், தான் புரிந்திடல் இல்லறம் - ஒருவன் இயற்றுவது இல்லறம் எனப்படும், சாரும் நலம் உடையர் ஆம் துறவறத்தோரும் இவர் தம்முடன் சரிஆயிடார் - பொருந்திய நன்மையை உடையராகிய துறவு நெறியிலே தவறாது நிற்போரும் இவர்களுடன் ஒப்பாகமாட்டார்.

      “அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை, அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று” என்னும் திருவள்ளுவ நாயனார் வாய்மொழியையும், “இல்லறம் அல்லது நல்லறம் அன்று” என்னும் ஔவையின் அருள்மொழியையும் கருத்தில் கொள்க.

30. தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

“மானொன்று வடிவெடுத்து மாரீசன்

      போய்மடிந்தான்! மானே என்று

தேன்ஒன்று மொழிபேசிச் சீதைதனைச்

      சிறையிருக்கத் திருடிச் சென்றோன்

வானொன்றும் அரசிழந்தான்! தண்டலையார்

      திருவுளத்தின் மகிமை காணீர்!

தானொன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று

      நினைப்பதுவும் சகசந் தானே.”


இதன் பொருள் —-

தண்டலையார் திருவுளத்தின் மகிமை காணீர் - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக் கோயில் கொண்டு விளங்கும் இறைவருடைய  திருவுள்ளப் பெருமையைப் பாருங்கள்!, மான்  ஒன்று  வடிவு எடுத்துப்போய் மாரீசன் மடிந்தான் - மானைப்போல்  ஒன்றிய  வடிவை எடுத்துச் சென்று (இராமனை ஏமாற்றச் சென்ற) மாரீசன் இறந்தான், மானே என்று தேன் ஒன்றும்  மொழிபேசிச்  சீதைதனைச்  சிறையிருக்கத் திருடிச் சென்றோன் - மானே எனக் கூப்பிட்டுத் தேனைப்போல இனிக்கும் மொழிகளை மொழிந்து, சீதையைத்  திருடிச்  சிறைக்குக்  கொண்டு சென்ற இராவணன், வான் ஒன்றும் அரசு இழந்தான் - (நிலத்துடன்) வானையும் சேர்த்த தன் ஆட்சியைப் பறிகொடுத்தான், (ஆகையால்) தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம் ஒன்று நினைப்பதுவும் சகசம் தான் - (உலகில் ஒருவன்) தான் ஒரு வேலையை எண்ணும்போது, தெய்வம் மற்றொன்று எண்ணுவது இயல்பே!

       ‘தானொன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்தது' என்பது பழமொழி. தீவினை நினைத்தல் கூடாது. அது  இறைவன் திருவுள்ளச் சம்மதம் ஆனது அல்ல. அவ்வாறு தீவினை செய்தால் அதன் பயன் நன்றாக இராது.  நல்ல முயற்சியையும் அதன் பயனையும் இச் செய்யுள் குறை கூறவில்லை என்று அறிக.

29. உருத்திராக்கப் பூனை

"காதிலே திருவேடம்! கையிலே

   செபமாலை! கழுத்தின் மார்பின்

மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே

   கரவடம்ஆம் வேடம் ஆமோ?

வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்

   நெறியாரே! மனிதர் காணும்

போதிலே மௌனம்! இராப் போதிலே

   ருத்திராக்கப் பூனை தானே!"


இதன் பொருள் ---

வாதிலே அயன் தேடும் தண்டலை நீள்நெறியாரே - (திருமாலுக்கும் தனக்கும் நேர்ந்த) போட்டியிலே நான்முகன் அன்னப் பறவையாய்ச் சென்று திருமுடியைத் தேடிய திருத்தண்டலை நீள்நெறி இறைவரே!

காதிலே திருவேடம் - காதில் உருத்திராக்கம் அணிந்த திருக்கோலமும், கையிலே செபமாலை - கையில் செபமாலையும், கழுத்தில் மார்பின் மீதில் தாழ்வடங்கள் - கழுத்திலும் மார்பிலும்  உருத்திராக்கத் தாழ்வடங்களும் (உடையவராய்), மனத்திலே கரவடம் ஆம் வேடம் ஆமோ - உள்ளத்திலே வஞ்சகம் பொருந்திய வேடம் ஒரு வேடம் ஆகுமோ?  (அவ்வாறு பொந்நான வேடத்தோடு இருத்தல்) மனிதர்  காணும் போதிலே மௌனம், இராப்போதிலே உருத்திராக்கப் பூனைதான் - மக்கள் பார்க்கும் போது கண்மூடிப் பேசாதிருந்து,  இரவிலே திருடும்  உருத்திராக்கப் பூனையின் செயல் போன்றதாகும்.

     திருமாலும் நான்முகனும் தாமே பெரியவரெனத் தனித்தனிச் செருக்கியபோது சிவபெருமான் இடையிலே நெருப்பு மலையாகத் தோன்றினர்.  அதனைக் கண்ட இருவரும் திகைத்துத் தம்மில் எவர் அதன் அடியையேனும் முடியையேனும் காண்கின்றனரோ அவரே பெரியர் என முடிவு செய்து,  திருமால் பன்றியாகி திருவடியையும் நான்முகன் அன்னப் பறவை ஆகித் திருமுடியையும் தேடிக் கண்டு பிடிக்க முடியாமல் திரும்பினர் என்பது புராணம். 

கரவடம் - வஞ்சகம். உள்ளொன்றும் புறம்பு ஒன்றுமாகத் திரிவோரை ‘உருத்திராக்கப் பூனை' என்பது உலகவழக்கு.


78. தீயவர்கள் சேர்க்கை

 


"ஆனைதண் ணீரில்நிழல் பார்த்திடத் தவளைசென்

     றங்கே கலக்கிஉலவும்

ஆயிரம் பேர்கூடி வீடுகட் டிடில்ஏதம்

     அறைகுறளும் உடனேவரும்


ஏனைநற் பெரியோர்கள் போசனம் செயுமளவில்

     ஈக்கிடந் திசைகேடதாம்

இன்பமிகு பசுவிலே கன்றுசென் றூட்டுதற்

     கினியகோன் அது தடுக்கும்


சேனைமன் னவர்என்ன கருமநிய மிக்கினும்

     சிறியோர்க ளாற்குறைபடும்

சிங்கத்தை யும்பெரிய இடபத்தை யும்பகைமை

     செய்ததொரு நரியல்லவோ


மானையும் திகழ்தெய்வ யானையும் தழுவுமணி

     மார்பனே! அருளாளனே!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே!"


இதன் பொருள் ---

மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணிமார்பனே! - மான்மகளாகிய வள்ளிநாயகியையும், தேவமகளாக விளங்குகின்ற தெய்வயானையையும் தழுவுகின்ற அழகிய திருமார்பனே!, அருளாளனே! - அருளுடையவனே!

மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

ஆனை தண்ணீரில் நிழல்பார்த்திடத் தவளை சென்று அங்கே கலக்கி உலவும் - யானை தண்ணீரில் தன் நிழலைப் பார்க்கும் போது தவளை அங்கே போய்க் கலக்கி (நிழலைப் பார்க்கமுடியாமல்) திரியும். 

ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் - பலர்கூடி வீடு கட்டினால், அதற்குக் குறை சொல்கின்ற கோளனும் அங்கு விரைந்து வருவான்; 

ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இடை கேடது ஆம் - மற்றும், நற்குணம் உடைய பெரியோர்கள் அமர்ந்து உணவு கொள்ளும்போது (அவ்வுணவில்) ஈயானது இறந்து கிடந்து (உணவின்) தூய்மையை ஒழித்துவிடும்; 

இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் - இன்பந்தரும் பசுவினிடத்திலே கன்று சென்று ஊட்டமுடியாமல் (அக்கன்றுக்கு) இனியவனான இடையனே அதனைத் தடுப்பான்; 

சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் - படையை உடைய அரசர்கள் எத்தொழிலைச் செய்ய ஆணையிட்டாலும் அற்பர்களான வேலைக்காரர்களால் அது இழிவடையும்; 

சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ? - சிங்கத்திற்கும், பெரிய எருது ஒன்றிற்கும் பகையை உண்டாக்கியது ஒருசிறு நரிதானே?

ஆயிரம் பேர் என்பது ஓர் எண்ணிக்கை ஆகாது. பலர் என்று பொருள்படும். பலரும் கூடிக் கட்டின வீடு. "கட்டின வீட்டிற்குக் குற்றஞ் சொல்வோரும், ஆக்கின சோற்றுக்குப் பதம் சொல்வோரும் பலர்" என்பது உலக வழக்கு. தீயவர்களால் காரியம் கெடும் என்பது கூறப்பட்டது.

      ‘சிங்கமும் எருதும் நட்பாக இருந்தன. ஒரு நரி சிங்கத்தினிடம் வீண்பழி சொல்லி நட்பைக் கெடுத்து எருதைக் கொன்று விடச் செய்தது' - எனப் பஞ்சதந்திரக் கதை கூறும்.


94. முப்பத்திரண்டு அறங்கள்

 


"பெறுமில், பெறுவித்தலொடு, காதோலை, நாள்தொறும்

     பிள்ளைகள் அருந்தி டும்பால்,

  பேசரிய சத்திரம், மடம்,ஆ வுரிஞ்சுகல்

     பெண்போகம், நாவிதன், வணான்,


மறைமொழிக ணாடி, தண்ணீர், தலைக் கெண்ணெய்பசு

     வாயின்உறை, பிணம்அ டக்கல்,

  வாவி, இறும் உயிர்மீட்டல், தின்பொருள், அடைக்காய்

     வழங்கல், சுண் ணாம்பு தவுதல்,


சிறையுறு பவர்க்கமுது, வேற்றிலம் காத்தல், பொழில்

     செய்தல், முன் னூலின் மனம்,

  திகழ்விலங் கூண், பிச்சை, அறுசமய ருக்குண்டி,

     தேவரா லாயம்,அ வுடதம்;


அறைதல்கற் போர்க்கன்னம் நாலெட் டறங்களும்முன்

     அன்னைசெயல்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,

பெறும் இல் - மகவு பெறுதற்கு வீடு விடுதல், பெறுவித்தலொடு - மகவு பெறுதற்கு வேண்டியவற்றை உதவுதல், காது ஓலை - காதணி அளித்தல், நாள்தொறும் பிள்ளைகள் அருந்திடும் பால் - அன்றாடம் குழந்தைகள் பருகும் பால் அளித்தல், பேச அரிய சத்திரம் - சொலற்கரிய சத்திரம் கட்டல், மடம் - (துறவிகள் இருக்கும்) மடம் அமைத்தல், ஆவுரிஞ்சு கல் - பசுக்களின் தினவு நீக்கும் கல்நடுதல், பெண்போகம் - பெண்களுக்கு இன்பம் அளித்தல், நாவிதன் - அம்பட்டனுக்கு உதவுதல், வணான் - வண்ணானுக்கு உதவுதல், மறைமொழி கண்ஆடி - மறையில் கூறுமாறு கண்ணாடி யீதல், தண்ணீர் - நீர் வேட்கையைத் தணித்தல், தலைக்கு எண்ணெய் - தலைக்கு எண்ணெய் கொடுத்தல், பசுவின் வாய் உறை - பசுக்களுக்குத் தீனி, பிணம் அடக்கல் - (ஆதரவு அற்ற) பிணத்தை அடக்கம் செய்தல், வாவி - குளம் வெட்டுதல், இறும் உயிர் மீட்டம் - இறக்கும் உயிரைக் காத்தல், தின்பொருள் - தின்பண்டம் அளித்தல், அடைக்காய் வழங்கல் - வெற்றிலை பாக்குக் கொடுத்தல், சுண்ணாம்பு உதவுதல், சிறை உறுபவர்க்கு அமுது - சிறையில் அகப்பட்டவர்க்கு உணவு கொடுத்தல், வேறு இலம் காத்தல் - பிறர் துயரைப் போக்குதல், பொழில் செய்தல் - சோலை வைத்தல், முன் நூலின் மணம் - பழைய நூல் முறைப்படித் திருமணம் செய்வித்தல், திகழ் விலங்கு ஊண் - விளங்கும் விலங்குகளுக்கு உணவளித்தல், பிச்சை - இரப்போர்க்கு ஈதல், அறு சமயருக்கு உண்டி - அறுவகை அகச் சமயத்தாருக்கும் உணவு அளித்தல், தேவராலயம் - திருக்கோயில் கட்டுதல், அவுடதம் - மருந்து கொடுத்தல், அறைதல் கற்போருக்கு அன்னம் - பாடம் படிப்போர்க்கு உணவு அளித்தல், நாலெட்டு அறங்களும் - (ஆகிய) முப்பத்திரண்டு அறங்களும், முன் அன்னை செயல் - முற்காலத்தில் உமையம்மையார் திருக் காஞ்சியில் செய்தவை ஆகும்.


28. குளிர் காய நேரம் இல்லை

 

"உருவெடுத்த நாள்முதலா ஒருசாணும்

   வளர்க்கஉடல் உழல்வ தல்லால்,

மருவிருக்கும் நின்பாத மலர்தேடித்

   தினம்பணிய மாட்டேன்! அந்தோ!

திருவிருக்கும் மணிமாடத் தண்டலைநீள்

   நெறியே! என் செய்தி யெல்லாம்

சருகரிக்க நேரமன்றிக் குளிர்காய

   நேரம்இல்லாத் தன்மை தானே!"


இதன் பொருள் ---

திரு இருக்கும் மணிமாடத் தண்டலைநீள் நெறியே - செல்வம்  நிலைத்த மணிமாடங்கள்  நிறைந்த "திருத்தண்டலை" என்னும் திருத்தலத்தில் "நீள்நெறி" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருளே!

உரு எடுத்த நாள் முதலா  ஒருசாணும்  வளர்க்க உடல் உழல்வது அல்லால் - இந்த உடம்பைத் தாங்கி வந்த நாள்முதலாக ஒருசாண்  வயிற்றைக் காக்கவே இந்த உடம்பைக் கொண்டு உழைப்பது அல்லாமல்,  அந்தோ - ஐயோ! மரு இருக்கும் நின் பாதமலர் தேடித் தினம் பணியமாட்டேன் - மணங்கமழும் தேவரீருடைய திருவடி மலரை நாடி ஒவ்வொரு நாளும் வணங்காமல் விட்டு விட்டேன்! (என் செயலை என்ன என்று சொல்லுவது?) 

என் செய்தி எல்லாம் - என் செய்கை யாவும், சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய நேரம் இல்லாத் தன்மை தானே - (குளிரைப் போக்க எண்ணியவனுக்கு) சருகு அரிக்க நேரம் இருக்குமே ஒழியக் குளிர்காய்வதற்கு நேரம் இல்லாத இயல்பு போலும்!

      உழைத்துப் பொள் சேரப்பதிலேயே கருத்து இருக்கும். இறைவன் தந்த்து என்று அவனை வழிபட மனம் இருக்காது. வயிறார உண்டு உடுப்பதற்கோ அல்லது இல்லாதவர்க்குக் கொடுத்து உதவுவதற்கோ மனம் வராது என்பது கருத்து. சருகு அரிக்க நேரமே ஒழியக் குளிர் காய நேரம் இல்லை' என்பது பழமொழி.


77. வறுமை வந்தால்.....

 


"வறுமைதான் வந்திடின், தாய்பழுது சொல்லுவாள்;

     மனையாட்டி சற்றும் எண்ணாள்;

வாக்கிற் பிறக்கின்ற சொல்லெலாம் பொல்லாத

     வசனமாய் வந்துவிளையும்;


சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது

     சிந்தையில் தைரியமில்லை;

செய்யசபை தன்னிலே சென்றுவர வெட்கம்ஆம்;

     செல்வரைக் காணில்நாணும்;


உறுதிபெறு வீரமும் குன்றிடும்; விருந்துவரின்

     உயிருடன் செத்தபிணமாம்;

உலகம் பழித்திடும்; பெருமையோர் முன்புசென்று

     ஒருவரொரு செய்திசொன்னால்,


மறுவசன முஞ்சொலார்; துன்பினில் துன்பம்இது

     வந்தணுகி டாதருளுவாய்!

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."

இதன் பொருள் ---

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

வறுமை தான் வந்திடில் - (ஒருவனுக்கு) வறுமை வந்து சேருமானால்,

தாய் பழுது சொல்வாள் - புற்ற தாயும் குற்றங் கூறுவாள்; 

மனையாட்டி சற்றும் எண்ணாள் - இல்லாளும் சிறிதும் மதிக்கமாட்டாள்; 

வாக்கில் பிறக்கின்ற சொல் எலாம் பொல்லாத வசனமாய் வந்து விளையும் - வாயிலிருந்து வரும் சொற்கள் எல்லாம் தீயமொழிகளாக மாறிவிடும்;  (நல்லவையாய் இருந்தாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்)

சிறுமையோடு தொலையா விசாரமே அல்லாது - இழிவும் நீங்காத கவலையுமே அன்றி, சிந்தையில் தைரியம் இல்லை - உள்ளத்தில் துணிவு இருக்காது; 

செய்ய சபைதன்னிலே சென்றுவர வெட்கம்ஆம் - நல்ல சபையிலே போய்வர நாணம் உண்டாகும்; 

செல்வரைக் காணில் நாணும் - செல்வம் படைத்தோரைக்  கண்டால் உள்ளம் வெட்கம் அடையும், 

உறுதிபெறு வீரமும் குன்றிடும் - நன்மை தரும் வீரமும் குறைந்துவிடும்; 

விருந்து வரின் உயிருடன் செத்த பிணம்ஆம் - விருந்தினர் வந்தால் உயிருடன் இறந்த பிணமாக நேரும்; 

உலகம் பழித்திடும் - உலகத்தார் இகழ்வர்; 

பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் மறுவசனமும் சொல்லார் - பெருமையுடையோர் எதிரில் போய் ஒரு வறுமையுடைய ஒருவர் ஒரு செய்தியைச் சொன்னால் மறுமொழி சொல்லமாட்டார்;

துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் - துன்பத்திலே துன்பமான இந்த வறுமை (ஒருவருக்கும்) வந்து சேராமல் அருள்செய்வாய்.


விளக்கம் ---

அருணகிரிநாதப் பெருமான், வறுமையைப் பாவி என்கிறார். "மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே, வடிவும், தனமும், மனமும், குணமும், குடியும், குலமும் குடிபோகியவா" என்னும் கந்தர் அனுபூதிப் பாடலைக் காண்க. திருவள்ளுவ நாயனாரும், வறுமையைப் பாவி என்று சொல்லி, "இன்மை என ஒரு பாவி" என்று திருக்குறள் பாடி உள்ளார். "கொடிது கொடிது, வறுமை கொடிது" என்றார் ஔவைப் பிராட்டி.

ஒருவனிடம் கல்வி அறிவு, ஒழுக்கம் முதலான எத்தனை நலங்கள் இருந்தாலும், செல்வ வளம் இல்லையானால், அவனைத் தாயும் இகழ்வாள். சுற்றத்தார் மதிக்க மாட்டார்கள். எல்லோரும் மரியாதை இல்லாமல் பேசுவார்கள். மனைவியும் இகழ்ந்து பேசுவாள் என்கின்றது "அறப்பளீசுர சதகம்" என்னும் நூல். 

"மேலான சாதியில் உதித்தாலும் அதில்என்ன?

     வெகுவித்தை கற்றும் என்ன?

  மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்துஎன்ன?

     மிகுமானி ஆகில் என்ன?


பால்ஆன மொழி உடையன் ஆய்என்ன? ஆசார

     பரனாய் இருந்தும் என்ன?

  பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?

     பாக்கியம் இலாத போது;


வாலாய மாய்ப்பெற்ற தாயும் சலித்திடுவள்!

     வந்தசுற் றமும்இ கழுமே!

  மரியாதை இல்லாமல் அனைவரும் பேசுவார்!

     மனைவியும் தூறு சொல்வாள்!


ஆலாலம் உண்டகனி வாயனே! நேயனே!

     அனகனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நி னை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"

இதன் பொருள் ---

ஆலாலம் உண்ட கனி வாயனே - ஆலகால விடத்தை உண்ட, கனிபோலச் சிவந்த திருவாயை உடையவனே!  நேயனே - அன்பு வடிவானவனே! அனகனே - குற்றம் இல்லாதவனே!   அருமை மதவேள் - அருமை மதவேள் என்பான்,  அனுதினமும் மனதில் நினைதரு - எக்காலத்தும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!

பாக்கியம் இலாத போது - ஒருவனுக்குச் செல்வப் பேறு இல்லாவிட்டால், அவன், மேலான சாதியில் உதித்தாலும் அதில் என்ன - உயர்ந்த குலத்தில் பிறந்தாலும் அதனால் பயன் இல்லை.  வெகுவித்தை கற்றும் என்ன - மிகுதியான கலைகளைப் படித்து உணர்ந்தாலும் பயன் இல்லை,  மிக்க அதி ரூபமொடு சற்குணம் இருந்து என்ன - பேரழகுடன் நற்பண்புகள் பொருந்தி இருந்தாலும் பயன் இல்லை,  மிகு மானி ஆகில் என்ன - சிறந்த மானம் உடையவன் ஆனாலும் பயன் இல்லை. பால் ஆன மொழி உடையன் ஆய் என்ன -இனிய மொழிகளையே பேசுபவன் ஆனாலும் பயன் இல்லை,  பார் மீது வீரமொடு ஞானவான் ஆய் என்ன - உலகிலே வீரமும் அறிவும் உடையவன் என்றாலும் பயன் இல்லை.  பெற்ற தாயும் வாலாயமாய் சலித்திடுவாள் - அவனைப் பெற்றெடுத்த தாயும் இயல்பாகவே வெறுப்பாள்,  வந்த சுற்றமும் இகழும் - வருகின்ற உறவினரும் அவனை இகழ்வர்,  அனைவரும் மரியாதை இல்லாமல் பேசுவார் - எல்லோரும் மதிப்பு இல்லாமல் பேசுவார்கள்,  மனைவியும் தூறு சொல்வாள் - இல்லாளும் குறை கூறுவாள்.


"அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்

பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை;

பொருபடைக் கண்ணாய்! அதுவே திருவுடையார்

பண்டம் இருவர் கொளல்." --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

போரிடுகின்ற வேல் போன்ற கண்ணை உடையவளே!,  அருள் உள்ளம் கொண்ட பெரியோர்களும், அல்லாத பொல்லாதவர்களும், யாராக இருந்தாலும், பொருள் உடையவராக இருந்தால், அவரைப் புகழ்ந்து பேசாதவர் ஒருவரும் இல்லை. அது எப்படிப்பட்டது என்றால், புண்ணியம் உடையவர்களின் பொருளை, ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிக் கொள்ள முயல்வது போன்றது ஆகும்.

புண்ணியம் உள்ளவர் இடத்தில் பொருள் சேரும். அந்தப் பொருளைப் போட்டி போட்டுக் கொள்ளுதல் போல, பொருள் உடையவரைப் பலரும் போட்டியிட்டுப் புகழ்ந்து பேசுவர்.


இனிய சொல்லைச் சொல்பவன் ஆகவும், பணிவு உடையவனாகவும் இருந்தாலும், அவனிடத்தில் பொருள் இல்லை என்றால் யாரும் வாயைக் கூடத் திறக்கமாட்டார்கள். அப்படியே வாயைத் திறந்தாலும், கடும் சொல்லைக் கொண்டுதான் பேசுவார்கள். என்ன சொன்னாலும், இந்த உலகமானது பொருள் உடையவன் காலின் கீழ்தான் அடங்கி இருக்கும். ஆதலினால், இந்த உலக நிலையானது பையத்தியக்காரத் தனத்தை உடையது அல்லாமல், அறிவு உடையது அல்ல என்கின்றார், குமரகுருபர அடிகள், "நீதிநெறி விளக்கம்" என்னும் நூலில்....

"இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும் ஒன்று இல்லானேல்

வன்சொல்லின் அல்லது வாய்திறவா - என்சொலினும்

கைத்துடையான் கால்கீழ் ஒதுங்கும் கடல்ஞாலம்

பித்து உடைய அல்ல பிற."  --- நீதிநெறி விளக்கம்.  


ஔவையாரைக் கேட்டால், "ஒருவன் கல்வி அறிவு இல்லாதவனாகவே இருந்தாலும், அவன் கையில் செல்வம் மட்டும் இருக்குமானால், அவனை எல்லாரும் சென்று எதிர்கொண்டு உபசரிப்பார்கள். கல்வி அறிவில் மிக்கவனாக இருந்தாலும், அவனிடத்தில் செல்வம் இல்லையானால், அவனை அவன் மனைவியும் விரும்ப மாட்டாள். அன்பு செலுத்த வேண்டிய, பெற்றெடுத்த தாயும் அவனை விரும்பமாட்டாள். அவனது வாயில் இருந்து பிறக்கும் சொல் எதுவும் எடுபடாது. எல்லாரும் அவனை ஒதுக்கியே வைப்பர்" என்கின்றார்.

"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்

எல்லாரும் சென்று அங்கு எதிர்கொள்வர் - இல்லானை

இல்லாளும் வேண்டாள், மற்று ஈன்றெடுத்த தாய்வேணடாள், 

செல்லாது அவன்வாயில் சொல்."                       --- நல்வழி.


"நேரா அழுக்குத் துணி ஆகில், உன்தனை நேரில்கண்டும்

பாராதவர் என நிற்பார், உடுத்தது பட்டு எனிலோ,

வாராது இருப்பது என்? வாரும்என்பார், இந்த வஞ்சகர்பால்

சேராது, நன்னெஞ்சமே! ஒற்றியூரனைச் சேர் விரைந்தே."     --- திருவருட்பா.

எனது நல்ல நெஞ்சமே, நீ உடுத்தது அழுக்குத் துணியாக இருக்குமானால், உன்னைக் கண்ணார நேரில் கண்டாலும் உன்னைப் பார்க்காதவர் போல் ஒதுங்கி நிற்பர். நீ உடுத்திருப்பது உயர்ந்த பட்டாடையாக இருக்குமானால், நீ ஒதுங்கிச் சென்றாலும், உன்னிடம் தாமே வலிய வந்து "நீங்கள் வாராது இருப்பது ஏன்? வருக" என்று அழைப்பர். இத்தகைய வஞ்ச நெஞ்சையுடைய உலகினரிடத்தில் செல்வதையும், சேர்வதையும் விட்டுவிட்டு, தனியே திருவொற்றியூர்ப் பெருமானை விரைந்து சென்று சேர்வது நன்மையைத் தரும் என்று நீ அறிவாயாக.


"பொய் விரிப்பார்க்குப் பொருள் விரிப்பார்; நற் பொருட்பயனாம்

"மெய் விரிப்பார்க்கு இரு கைவிரிப்பார்; பெட்டி மேவு பணப்

பை விரிப்பார், அல்குற் பை விரிப்பார்க்கு, அவர் பால் பரவி

மை விரிப்பாய், மனமே! என்கொலோ நின் மதியின்மையே". --- திருவருட்பா.

இதன் பொருள் ---

எனது மனமே! இந்த உலகத்தில் பொய்யை விரித்துப் பேசுவகின்றவர்க்கு, பொருளை நிறையத் தருவார். நல்ல பொருள் பொதிந்த உண்மைப் பொருளை விரித்துச் சொல்பவர்க்கு, இருகைகளை விரித்து இல்லை என்பார். அல்குல் பையை விரிக்கின்ற பரத்தையர்க்கு, பெட்டியில் உள்ள பணப்பையை எடுத்து விரித்து, அதில் உள்ள பொருளைத் தருவார். இப்படிப்பட்டவர்களைப் புகழ்ந்து துன்பப்படுவது உனது அறிவின்மை ஆகும்.


காயார் சரிகைக் கலிங்கம் உண்டேல், இக் கலிங்கம்கண்டால்

நீயார்? நின் பேர்எது? நின்ஊர் எது? நின் நிலை எது? நின்

தாய் யார்? நின் தந்தை எவன்? குலம் ஏது? என்பர்,  சாற்றும் அவ் வல்

வாயார் இடஞ்செலல் நெஞ்சே! விடைதர வல்லை அன்றே". --- திருவருட்பா.

இதன் பொருள் ---

சரிகையோடு கூடிய அழகான துணியை நீ உடுத்து இருந்தால், அந்தத் துணியைக் கண்டு மயங்கி,  "நீ யார், உனது பெயர் என்ன? உனது ஊர் எது? உனது நிலை என்ன? உனது தாய் யார்? உனது தந்தை எவன்?" என்றெல்லாம் உசாவுவார்கள். பேச்சுத் திறமை மட்டுமே உடைய (உள்ளத்தில் அன்பு இல்லாத) இவர்களிடம் செல்லாதே. அவர்களை விட்டு விலகுவாயாக.


திருவொற்றியூர்ப் பெருமானிடம் சென்றால்,

"சீர் தருவார், புகழ்ப் பேர் தருவார், அருள் தேன்தருவார், 

ஊர் தருவார், மதியும் தருவார், கதியும் தருவார், 

ஏர் தருவார், தருவார் ஒற்றியூர் எம் இறைவர், அன்றி 

யார் தருவார் நெஞ்சமே! இங்கும்  அங்கும் இயம்புகவே."   -- திருவருட்பா

     எனது நெஞ்சமே, திருவொற்றியூர் இறைவர் நமக்குச் சீரும் பேரும் புகழும் தருவார். ஊர்களையும் தருவார். திருவருளாகிய தேனும், சீர்த்த மதியும், உயர்ந்த கதியும் அருள்வார். மேன்மேலும் வளர்ச்சியும் உண்டு பண்ணுவார். இவைகளை எல்லாம் இந்தப் பிறவியிலும், மறுபிறவியிலும் இவரைப்போல் தருபவர் யார்? இவற்றை எல்லாம் எண்ணி என்னோடு இசைந்து ஒழுகுவாயாக.


"பொருள்கை உண்டாய்ச் செல்லக் காணில்,

போற்றி என்று ஏற்று எழுவர்;

இருள்கொள் துன்பத்து இன்மை காணில்,

என்னே என்பாரும் இல்லை;

மருள்கொள் செய்கை அசுரர் மங்க

வடமதுரைப் பிறந்தாற்கு

அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால்

இல்லை கண்டீர் அரணே."   --- நம்மாழ்வார்.

இதன் பொருள் ---

உலகத்தவர் ஒருவனுடைய கையிலே பொருள் இருப்பதைக் கண்டால், "வாழ்க, வாழ்க" என்று புகழ்ந்து, அப் பொருளைப் பெற்றுக் கொள்ளும் வரை கூட இருப்பர். அறிவின்மையை உண்டாக்கி, வருத்தத்தைத் தரக்கூடிய வறுமை வந்துவிட்டாலோ, "ஐயோ" என்று இரக்கப்படுவதற்கு யாரும் அங்கே இருக்கமாட்டார்கள். ஆகவே, இந்தப் போலி உறவினரை நம்பக் கூடாது. அஞ்சத்தக்க கொடுமை செய்கின்ற அரக்கர்களை அழிப்பதற்கு என்றே வடமதுரையில் வந்து தோன்றிய கண்ணனுக்கு அடியவர்கள் ஆகி, அவன் அருள் பெற்று உய்வு பெறுவதை அன்றி வேறு பாதுகாவல் இல்லை.


"தாங்க ஒணா வறுமை வந்தால்

     சபைதனில் செல்ல நாணும்,

வேங்கை போல் வீரம் குன்றும்,

     விருந்தினர் காண நாணும்,

பூங்கொடி மனையாட்கு அஞ்சும்,

     புல்லருக்கு இணங்கச் செய்யும்,

ஓங்கிய அறிவு குன்றும்,

     உலகெலாம் பழிக்கும் தானே".  -- விவேகசிந்தாமணி.   

இதன் பொருள் ---  

     ஒருவனுக்குப் பொறுத்துக்கொள்ள முடியாத வறுமை வந்து சேர்ந்தால், அவன், (தகுந்த ஆடை அணிகலன்கள் இல்லாததால்,) உயர்ந்தோர் கூடியுள்ள சபைக்குப் போவதற்கு நாணப்படுவான். அவன் முன்னே கொண்டு இருந்த வேங்கைப் புலி போன்ற வீரத் தன்மையானது குன்றிப் போகும். விருந்தினரைத் தக்கவாறு உபசரிக்கும் நிலை இல்லாததால், விருந்தினரைக் கண்டாலே நாணப்படுவான். மலர்க் கொடி போன்ற மனையாளுக்கும் அவன் அஞ்ச வேண்டி வரும். அந்த வறுமையானது அவனை, கீழ்மக்களோடு இணக்கம் கொள்ளச் செய்யும். அவனிடத்தே முன்பு மிகுந்து இருந்த அறிவானது, இப்போது குன்றிப் போகும். உலகில் உள்ளவர்கள் அவனை நிந்தித்துப் பேசுவார்கள்.


"தரித்திரம் மிக்க வனப்பினை ஒடுக்கிச்

     சரீரத்தை உலர்தர வாட்டும்,

தரித்திரம் அளவாச் சோம்பலை எழுப்பும்,

     சாற்றஅரும் உலோபத்தை மிகுக்கும்,

தரித்திரம் தலைவன் தலைவியர்க்கு இடையே

     தடுப்ப அரும் கலாம்பல விளைக்கும்,

தரித்திரம் அவமானம் பொய் பேராசை

     தரும் இதில் கொடியது ஒன்று இலையே".    --குசேலோபாக்கியானம் 

இதன் பொருள் ---

   வறுமையானது மிகுந்த அழகைக் கெடுத்து உடம்பினை மெலியும்படி வருத்தும். வறுமையானது அளவிடப்படாத சோம்பலை உண்டாக்கும், சொல்லுதற்கரிய உலோபத் தன்மையை மிகச் செய்யும். வறுமையானது கணவன் மனைவியர்க்குள் தடுத்தற்தகு அரிய பல கலகங்களை உண்டாக்கும். வறுமையானது மானம் இழத்தல், பொய் பேசுதல், பேராசை கொள்ளுதல் முதலியவற்றை உண்டாக்கும். ஆதலால், இவ்வறுமையில் கொடியது வேறு ஒன்று இல்லை.


"தரித்திரம் களிப்பாம் கடலுக்கு ஓர் வடவை,

     சாற்றும் எண்ணங்கள் வாழ் இடமாம்,

தரித்திரம் பற்பல் துக்கமும் தோன்றத்

     தக்க பேர் ஆகரம் என்ப,

தரித்திரம் நன்மை சால் ஒழுங்கு என்னும்

     தழைவனம் தனக்கு அழல் தழலாம்,

தரித்திரங் கொடிய எவற்றினும் கொடிது, அத்

     தகையதை ஒழித்தல் நன்று ஆமே". -- குசேலோபாக்கியானம்.

இதன் பொருள் ---

     வறுமையானது மகிழ்ச்சியாகிய கடலினுக்கு வடவைத் தீயாகும். சொல்லப்பட்ட பலவிதான எண்ணங்களுக்கு உறைவிடம் ஆகும். வறுமையானது பலப்பல துன்பங்களும் பிறத்தற்கு இடமாகும். வறுமையானது நன்மை மிகுந்த ஒழுக்கம் என்ற செழித்த சோலையை எரிக்கும் தீ ஆகும்; தரித்திரம் கொடிய எவற்றினும் கொடியது. அத் தன்மை உள்ள வறுமையை நீக்குவதே நன்மையாகும்.

திருமண நிகழ்வு என்றால், ஆணும் பெண்ணும், அவரவர் நிலைக்கு ஏற்பத் தம்மை அலங்கரித்துக் கொண்டுதான் செல்வார்கள். பாண்டிய மன்னன் வீட்டுத் திருமணத்துக்கு ஆடை அணிகலன்கள் ஏதும் இன்றி ஔவையார் சென்றார். திருமண நெரிசலில் சிக்கி, அலைக்கழிக்கப்பட்டுத் திரும்புகின்றார். பாண்டியன் வீட்டுத் திருமணத்தில் கலந்துக் கொள்ளவேண்டும், நல்ல உணவு உண்ணவேண்டும், பரிசுப் பொருள்களைப் பெறவேண்டும் என்னும் ஆவலோடு சில புலவர்கள் வருகின்றார்கள். எதிரிலே வருகின்ற ஔவைப் பிராட்டியாரைக் கண்டு, "மூதாட்டியே! பாண்டியன் வீட்டுத் திருமணம் சிறப்பாக நடந்ததா? உயர்ந்த உணவுகளைப் படைப்பதாகச் சொல்கிறார்கள். தாங்கள் இனிது உண்டீர்களா?" என்று கேட்கிறார்கள்.

ஔவையார், அவர்களைப் பார்த்து, "ஆமாம், உண்டேன், உண்டேன், உண்டேன்" என்று மும்முறை கூறினார். மூன்றுமுறை கூறவும், "உணவு பலமா?" என்றார்கள். ஔவையார், "தெளிந்த தமிழிலே வல்ல பாண்டியருடைய திருமணத்திலே நான் உண்டதன் பெருமையைச் சொல்லவும் வேண்டுமா?" என்று சொல்லி, பின்வரும் பாடலைப் பாடினார்.

"வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து

உண்ட பெருக்கம் உரைக்கக் கேள், --- அண்டி,

நெருக்கு உண்டேன், தள்ளுண்டேன், நீள் பசியினாலே

சுருக்கு உண்டேன், சோறு கண்டிலேன்."

வளமை மிக்க தமிழை ஆராய்ந்த பாண்டியனின் திருமணத்தில் நான் விருந்து உண்ட சிறப்பைச் சொல்லுகின்றேன், கேட்பீர்களாக. விருந்து உண்ண எண்ணி, கூட்டத்தில் அருகில் சென்றபோது நெருக்கப்பட்டேன். இடித்துத் தள்ளப்பட்டேன். நீண்ட நேரம் பசியோடு இருந்த காரணத்தால் வயிறு சுருங்கப் பெற்றேன். உணவை உண்ணவில்லை.

ஆடை, அணிகலன்களுக்கும், செல்வச் சிறப்புக்கும் மிக்க மரியாதையைத் தருகின்ற உலகத்தில், ஔவையார் போன்ற அருந்தமிழ்ப் புலவருக்கு நேர்ந்த கதி, இன்றும் தான் தொடர்கின்றது. எளிமையாக இருந்தால் யாரும் மதிப்பதில்லை. பகட்டு தேவைப்படுகின்றது. அருமைத் தமிழில் பேசினால் போதாது, நுனிநாக்கில் அரைகுறை ஆங்கிலத்தில் பேசிப் பாருங்கள். எங்கு சென்றாலும், எதற்குச் சென்றாலும், பையில் பணம் இல்லாமல் செல்வதால் பயனில்லை.

செல்வம் இல்லையானால், மதிப்பு இல்லை என்பதற்காக, மதிப்பும் மரியாதையும் வேண்டி, அறம் அல்லாத வழிகளில் பொருளை ஈட்டுதல் கூடாது.


93. பகுத்துப் பயன் கொள்ளுதல்.

 


"சுவைசேர் கரும்பைவெண் பாலைப் பருத்தியைச்

     சொல்லும்நல் நெல்லை எள்ளைத்

  தூயதெங் கின்கனியை எண்ணாத துட்டரைத்

     தொண்டரைத் தொழுதொ ழும்பை


நவைதீரு மாறுகண் டித்தே பயன்கொள்வர்

     நற்றமிழ்க் கவிவா ணரை

  நலமிக்க செழுமலரை ஓவிய மெனத்தக்க

     நயமுள்ள நாரியர் தமைப்


புவிமீதில் உபகார நெஞ்சரைச் சிறுவரைப்

     போர்வீர ரைத்தூ யரைப்

  போதவும் பரிவோடு இதஞ்செய்ய மிகுபயன்

     புகழ்பெறக் கொள்வர் கண்டாய்


அவமதி தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட வள்ளலே - தீய அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே! அண்ணலே - தலைவனே! அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


சுவை சேர் கரும்பை - சுவை பொருந்திய கரும்பையும், வெண் பாலை - வெண்மையான பாலையும், பருத்தியை - பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை - சொல்லப்படுகின்ற நல்ல நெல்லையும், எள்ளை - எள்ளையும், தூய தெங்கின் கனியை - தூய்மை பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை - மதிக்காத தீயவர்களையும், தொண்டரை - அடிமையாளரையும், தொழு தொழும்பை - குற்றேவேல் செய்வோரையும், நவை தீருமாறு - குற்றம் நீங்கும்படி, கண்டித்தே பயன் கொள்வர் - கண்டனம் செய்தே அவர்களால் ஆன பயனைப் பெறுவார்கள்,

நல் தமிழ்வாணரை - நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த புலவரையும், நலம் மிக்க செழுமலரை - நன்மை மிகுந்த செழித்த பூவையும், ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை - ஓவியத்தில் எழுதிய பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில் உபகார நெஞ்சரை - பூமியின் மீதில் உதவி செய்யவேண்டுமென்று மனம் படைத்தோரையும், சிறுவரை - சிறுவரையும், போர் வீரரை - போர் வீரர்களையும், தூயரை - தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும் பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் - மிகுதியான அன்போடு மிகுந்த பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.

      (தொழும்பர் - , அடிமைத்தொழில் செய்வோர், அடிமையாள், குற்றேவல் செய்வோர். நவை - குற்றம், இழிவு.)


51. தெரிந்து தெளிதல் - 03. அரிய கற்று

 



திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்


அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீர்ர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "கற்பதற்கு அரிய நூல்களைக் கற்று அறிந்ததோடு, குற்றமும் அற்றவராக இருந்தாலும், ஆராயும் இடத்து, அவரிடமும் அறியாமை இல்லாது இருப்பது அரியது ஆகும்" என்கின்றார் நாயனார்.

அதாவது, எவ்வளவு கல்வி அறிவு உடையவராய் இருந்தாலும், நுணுகிச் சென்று, அவரது குணங்களை ஆராயப் புகுந்தால், அவரிடத்திலும் ஏதோ ஓர் சிறிய குற்றம் இருக்கவே காணப்படும் என்பதால், குணமே உடையவர் என்று எவரையும் கூற முடியாது்.


இதற்குத் திருக்குறள்...

"அரியகற்று ஆசு அற்றார் கண்ணும், தெரியும்கால்

இன்மை அரிதே வெளிறு."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் --- கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், 

தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது --- நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது.

(வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)


பின்வரும் பாடல்கள், இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்....

"வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை

முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்

பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக்

களிறினோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.    --- சுந்தரர் தேவாரம்.

இதன் பொருள் ---

உலகீர், வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம், பிளிறுகின்ற, மனவலியையும், பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு, பிடி யானைகள் சூழ்ந்துள்ள, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே;. ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற் பொருட்டு, அங்குச் சென்று, திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள். 

நூல்களைக் கற்பதால் மட்டும் அறியாமை நீங்குதல் அரிது. எனவே, இறைவனை வழிபடவேண்டும் என்பது கூறப்பட்டது.

"அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே;

கடன்கொண்டும் செய்வன செய்தல் இனிதே;

சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும், ஆராய்ந்து

அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது." --- இனியவை நாற்பது.

இதன் பொருள் ---

அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிது - (தம்பால்) அடைக்கலம் புக்கார் துன்ப மிக்கு அடையாது, ஆற்றல் செய்வது இனிது; கடன் கொண்டும் செய்வன செய்தல் இனிது - கடன் வாங்கியும்  செய்யத்தக்கவற்றைச் செய்வது இனிது; சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்து உரைத்தல் இனிது - மிக்கு நிறைந்த நூற்கேள்வியை உடையவரானாலும் ஆராய்ந்தறிந்தே ஒன்றைச் சொல்லுதல் மிக இனிது.

"அறியகற் றாசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இம்மை அரிதே வெளிறு” (குறள் - 503)

என்றவாறு கல்வி கேள்விகளின் மிக்கார் மாட்டும் ஒரோ வழி அறியாமை உளதாகலின், ‘சிறந்து அமைந்த கேள்வியர் ஆயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனது' என்றார்.


"நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர்,

இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவதென்?

கற்பால் கலங்கருவி நாட! மற் றியாரானும்

சொற்சோரா தாரோ இலர். --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

கல்பால் இலங்கு அருவி நாட - மலைகளிடத்து விளங்கிய அருவிகள் பாயும் மலை நாடனே!, நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவர் - நல்ல குடியின்கண் பிறந்து நல்லனவற்றைக் கற்றாரும், - (சில நேரங்களில்) ஆராய்தல் இல்லாமல் பிழைபடச் சொல்லுவார்கள், இற்பாலர் அல்லார் இயல்பின்மை நோவது எவன் --- நல்ல குடியின்கண் பிறவாதவரது சொற்களில் உள்ள இன்னாமையும் பிழைகளும் ஆகிய இயல்பு இன்மையை நினைந்து வருந்துவது எது பற்றி?, யாரானும் சொல் சோராதாரோ இலர் - யாவரே ஆயினும் சொல்லின்கண் சோர்வுபடாதார் இலர்.

யாவர் மாட்டும் சொற்சோர்வு காணப்படும் என்பதால், சொல்லில் உள்ள கருத்து ஒன்றனையே நோக்குக.


"ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவன் அறியாதவனும் ஒருவன்

குணன் அடங்கக் குற்றம் உளானும், ஒருவன்

கணன் அடங்கக் கற்றானும் இல். ---  நான்மணிக் கடிகை.

இதன் பொருள் ---

எல்லாம் அறிவான் ஒருவனும் இல் - எல்லாக் கலைகளையும் தெரிந்தவன் ஒருவனும் இல்லை; யாதொன்றும் அறியாதவன் ஒருவனும் இல் - ஒரு சிறிதும் தெரியாதவன் ஒருவனும் இல்லை; குணன் அடங்க குற்றம் உள்ளான் ஒருவனும் இல் - ஒரு நல்லியல்பு இல்லாமல், பிழையே உள்ளவன் ஒருவனும் இல்லை; கணன் அடங்க கற்றானும் இல் - அறியாமை சிறிதும் இல்லதாக, கற்றறிந்தவனும் இல்லை.

எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை; குற்றமே உள்ளவனும் இல்லை; அறியாமை இல்லாதவனும் இல்லை.



51. தெரிந்து தெளிதலங் - 01. அறம்பொருள்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 51 -- தெரிந்து தெளிதல்

அதாவது, அரசன், அமைச்சர் முதலாயினாரை அவரது பிறப்பு, குணம், அறிவு என்பனவற்றையும், அவரது செயலையும் காட்சி, கருத்து, ஆகமம் என்னும் பிரமாணங்களால் ஆராய்ந்து தெளிதல். முந்தைய அதிகரங்களில் கூறப்பட்ட வலி அறிதல், காலம் அறிதல், இடம் அறிதல் ஆகிய மூன்றினையும் அறிந்து, பகைவர் மீது போருக்குச் செல்லுதற்கு முன்னர், படை வீர்ர்களின் தொழில் தன்மையை ஆராய்ந்து தெளிதல் வேண்டும் என்பதால் இது கூறப்பட்டது.

அதாவது, தொழிலுக்குத் துணையாகக் கொள்வோரை ஆராய்ந்து தேர்ந்து கொள்ளவேண்டும் என்பது கூறப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "அறம், பொருள், இன்பம், உயிருக்காக அஞ்சுகின்ற அச்சம் என்னும் நான்கின் வகையால் வினைக்கு உரியவன் தெளியப்படுவான்" என்கின்றார் நாயனார்.

"தெரிந்து தெளிதல்" என்பதை, பரிமேலழகர் "உபதை" என்றார்.

உபதை --- சோதனை. மன இயல்பை ஆராய்ந்து தெளிதல்.

அறம், பொருள், இன்பம், உயிரினது அச்சம் என்னும் நான்குவகையால் ஆராய்ந்து தெளிதல் கூறப்பட்டது.

அற உபதை --- அறத்தால் ஆராய்ந்து தெளிதலாவது, அறம் கூறும் அறவோரையும், நன்மை தீமை கூறும் சடங்கு செய்வோன் அல்லது சோதிடரையும் தெளியப்பட வேண்டுவோனிடத்து அனுப்பி, "இவ்வரசன் நூல்களில் கூறியவாறு அறத்தைச் செய்பவன் அல்ல. அறத்திற்கு மாறானவைகளைச் செய்கின்றான். ஆதலால், இவனை நீக்கி, அறத்தின் வழி நடப்பவனும், குடிகளிடத்தில் உரிமை உடையவனும் ஆகிய வேறு ஒருவனை அரசனாக்க எண்ணி உள்ளோம். இக் கருத்தை யாவரும் ஏற்கின்றனர். இதில் உனது கருத்து என்ன?" என்று வஞ்சகத்தோடு சொல்லுவித்து, அக் கருத்துக்கு அவன் உடன்படுவானாயின், அவன் அரசனிடத்தில் இருப்பதற்குத் தகுதி உடையவன் அல்ல என்று தள்ளுதலும், சொன்ன கருத்துக்கு அவன் இசையவில்லையானால், அவனை வைத்துக் கொள்ளுதலும் ஆகும்.

பொருள் உபதை --- பொருளால் சோதித்துத் தெளிந்து கொள்ளுதல். சேனைக்குத் தலைவனாக உள்ளவனையும், அவனைச் சேர்ந்தாரையும் அனுப்பி, "இந்த அரசன் பொருளில் பற்று உடையவனாக, யாருக்கும் எதுவும் கொடுக்காத உலோபியாய் இருக்கின்றான். எனவே, இவனை நீக்கி, உதார குணம் படைத்த ஒருவனை அரசனாக்க எண்ணி உள்ளோம். இதில் உனது கருத்து என்ன?" என்று வஞ்சகத்தோடு சொல்லுவித்து, அதற்கு அவன் உடன்படுவானாயின், அவன் தகுதி உடையவன் அல்லன் என்று நீக்கியும், உடன்படானாயின், அவன் தகுதி உடையவன் என்று ஏற்றுக் கொள்ளுதலும் ஆகும்.

இன்ப உபதை --- இன்பநெறியைக் கூறிச் சோதித்தல். அரசன் மனைவியர் முதலியவரிடத்துப் பழகி வருகின்ற ஓர் முதுமகளை அனுப்பி, அவளைக் கொண்டு, "இந்த அரசனுக்கு உரிமை உள்ளவளாகிய ஒருத்தி, எப்படியாவது உன்னைத் தன்னிடத்தில் சேர்த்து வைக்கவேண்டும் என்று என்னை அனுப்பினாள். எனவே, நீ அவளைச் சேருவாயானால், அதனால் உனக்குப் பெரியதோர் இன்பம் உண்டாவது அல்லாமல், பெரும் பொருளும் கிடைக்கும்" என்று வஞ்சகமாகச் சொல்லுவித்து, அதற்கு அவன் உடன்படுவானாயின், அவனைக் கொள்ளாது நீக்கி, உடன்படாமல் அறநெறியைக் கூறுவானானால், அவனைக் கொள்ளவேண்டும் என்பதும் ஆகும்.

அச்ச உபதை --- அச்சம் உண்டாகும் வழியைக் கூறிச் சோதித்தல். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவனைக் கொண்டு ஊரில் உள்ளவர்களை எல்லாம் அமைச்சனின் வீட்டிற்கு அழைப்பித்து, இப்போது நாம் இங்கே கூடி இருப்பது அரசனுக்கு விரோதமாகிய செயலைச் செய்வதற்கு. மேலும், இந்த அரசன் ஊரில் உள்ள ஒருவனைக் கொண்டு நம்மை எல்லாம் கொல்லத் துணிந்து இருப்பதால், அவன் நம்மைக் கொல்வதற்கு முன், நாம் அவனைக் கொன்று, நமக்கு வேண்டிய ஒருவனை அரசனாக்குவது வேண்டும்" என்று வஞ்சகமாகச் சொல்லி, அக் கருத்துக்கு உடன்படுவார்களாயின், உடன்படுவோரை நீக்கியும், அறநெறியைக் கூறுவோரைத் தன்னிடம் வைத்துக் கொள்ளுதலும் ஆகும்.

இவ்வாறு நான்கு வகையான சோதனைகளைப் பற்றி விநாயக புராணம் கூறுமாறு காண்க.


இதற்குத் திருக்குறள்...

"அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம், நான்கின்

திறம் தெரிந்து தேறப் படும்."

இதற்குப் பரிமேலழகர் உரை ---

அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் --- அரசனால் தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும் இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும் என்னும், 

நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் --- உபதை நான்கின் திறத்தான் மன இயல்பு ஆராய்ந்தால், பின்பு தெளி்யப்படும்.

(அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும் அறவோரையும் விட்டு அவரால் இவ்வரசன் அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்,

பொருள் உபதையாவது: சேனைத் தலைவனையும் அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான் இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப் போக்கிக் கொடையும் உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு எண்ணினம், இது தான் யாவருக்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.

இன்ப உபதையாவது, தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு தவமுதுமகளை விட்டு, அவளால், உரிமையுள் இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க வேண்டும் என்று என்னை விடுத்தாள், அவனைக் கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப் பெரும் பொருளும் கைகூடும் எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.

அச்ச உபதையாவது, ஒரு நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால் ஏனையோரை அவன் இல்லின்கண் அழைப்பித்து, இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார் என்று தான் காவல் செய்து, ஒருவனால் இவ்வரசன் நம்மைக் கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச் செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல் ஈண்டை யாவர்க்கும் இயைந்தது, நின் கருத்து என்னை? எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.

இந்நான்கினும் திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும் திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும் என்பதாம். இவ் வடநூற் பொருண்மையை உட்கொண்டு இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை உயிரெச்சம் எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத் தோன்றியவாறே உரைத்தார்.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறிக....

"பொருள்,போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போந்த

அருள்,போகா ஆர்அறம் என்று ஐந்தும் -  இருள்தீரக்

கூறப் படுங்குணத்தான் கூர்வேல்வல் வேந்தனால்

தேறப் படுங்குணத்தி னான்." ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பொருள் ---

பொருள் - பொருளும், போகம் - இன்பமும், அஞ்சாமை - (இடுக்கண் வந்தால் அதற்கு) அஞ்சாமையும், பொன்றுங்கால் - பிறிதோர் உயிர் அழிய வந்த இடத்து, போந்த அருள் - மிக்க அருளும், போகா - நீங்காத, ஆர் அறம் --- அரிய அறமும், என்ற ஐந்தும் - என்று சொல்லப்பட்ட இவ்வைந்தும், இருள் தீர - குற்றந் தீர, கூறப்படும் - சொல்லப்படுகின்ற, குணத்தான் - தன் குணங்களை உடையவன், கூர் வேல் வல் வேந்தன்றால் தேறப்படும் --- கூரிய வேற்படையை உடைய, வலிய அரசனால் (ஒரு கருமத்தின் மேல் செலுத்தத் தக்கவனென்று) தெளியப்படுகிற, குணத்தினான் - குணத்தை யுடையவனென்று சொல்லப்படுவான்.

பொருளும், இன்பமும், இடுக்கண் வந்த காலத்து அதற்கு அஞ்சாமையும், பிறிதோருயிர் அழிய வந்தவிடத்து அதற்கு இரங்கும் அருளுடைமையும், அருமையாகிய அறமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தனையும் உடையவன் அரசனால் ஒரு கருமத்தின் மேல் செலுத்துதற்கு உரியனாவான்.



50. இடன் அறிதல் - 10. காலாழ் களரின்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் பத்தாம் திருக்குறளில், "துன்பத்திற்கு அஞ்சாத வேற்படையை உடைய வீரர் பலரையும் அழித்த முகத் தந்தங்களை உடைய யானைகளையும், கால் புதையும் சேற்று நிலத்தில் நரியானது மாய்த்துக் கொல்லும்" என்கின்றார் நாயனார்.

தம்மைச் செலுத்துகின்ற பாகர்களுக்கு அடங்காமல், போரில் எதிர் வந்த வீரர்களைத் தமது முகத்தில் உள்ள தந்தங்களால் குத்திக் கொன்ற வல்லமை உடைய பெரிய யானைகள், தமது கால் புதையும் சேற்று நிலத்தில் இருந்துவிட்டால், மிகச் சிறிய நரியும்  யானைகளைக் கொன்றுவிடும். யானையானது சேற்றில் புகுந்து விடுமானால், அதன் உடல் பளுவால், சேற்றில் புதையுமே அன்றி, சேற்றை விட்டு வெளியே வருவதற்கு உரிய வல்லமை இல்லாமையால், சேற்றில் நிற்கத் தகுதியற்ற யானையை, நரியானது கடித்தே கொன்று விடும்.

எனவே, தனக்குப் பொருந்தாத இடத்தில் செல்லுதல் கூடாது என்பது பெறப்பட்டது. பெரிய படையை உடையவனும், தனக்குப் பொருந்தாத இடத்தில் சென்றால், அங்கிருந்து திரும்பி வர முடியாமல் மாய்ந்து போவான் என்று சொல்லப்பட்டது.


இதற்குத் திருக்குறள் ......


"கால்ஆழ் களரின் நரி அடும், கண் அஞ்சா

வேல்ஆள் முகத்த களிறு."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

கண் அஞ்சா வேலாள் முகத்த களிறு --- பாகர்க்கு அடங்காவுமாய், வேலாள்களைக் கோத்த கோட்டவுமாய களிறுகளை, 

கால்ஆழ் களரின் நரி அடும் --- அவை கால் ஆழும் இயல்பிற்றாய சேற்றுநிலத்துப் பட்டுழி நரி கொல்லும்

('முகம் ஆகுபெயர்'. 'ஆண்மையும் பெருமையும் உடையாரும் தமக்கு ஏலா நிலத்துச் செல்லின் அவற்றால் பயன் இன்றி மிகவும் எளியரால் அழிவர்' என்பது தோன்ற நின்றமையின், இதுவும் அவ்வலங்காரம். 'வேலாழ் முகத்த என்று பாடம் ஓதுவாரும் உளர்: வேற்படை குளித்த முகத்தவாயின் அதுவும் நரி அடுதற்கு ஏதுவாய் முடிதலின், அது பாடம் அன்மை அறிக. இவை மூன்று பாட்டானும் பகைவரைச் சார்தலாகா இடனும் சார்ந்துழிப்படும் இழுக்கும் கூறப்பட்டன.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க...

"பால்ஆர் மொழிஉமை பங்காளர், வெங்கைஅம் பாவைதந்த

மால் ஆழ்தரும் எனை, வெவ்வுரையான், நண்ப! வாட்டுகின்றாய்,

கால்ஆழ் களரின் அமிழ்ந்த வெம் கோட்டுக் களிற்றை ஒரு

வேலால் எறிபவர் போலே, இது என் விதிவசமே."  --- திருவெங்கைக் கோவை.

இதன் பொருள் ---

பால் போலும் மொழியினை உடைய உமாதேவியாரைத் தனது திருமேனியின் ஒரு பாதியிலே உடைய பெருமான் எழுந்தருளி உள்ள, திருவெங்கை என்னும் திருத்தலத்தில் நான் கண்ட அழகிய பாவையால் உண்டான மயக்கத்தில் ஆழ்ந்து உள்ளேன் யான். தோழனே! கால் புதையும் சேற்று நிலத்தில் புகுந்த கொடிய தந்தங்களை உடைய ஆண் யானையை, ஒரு வேலைக் கொண்டு எறிபவரைப் போல, கொடுமையான சொற்களால் என்னை இப்படி வாட்டுகின்றாய். இது எனது விதிவமே ஆகும்.

பாவை - பாவை போல்வாளாகிய தலைமகள். மால்ஆழ் தரும்-மயக்கத்தில் ஆழுகின்ற. வெவ்வுரை - கடுஞ்சொல். கோடு - கொம்பு. களிறு - ஆண்யானை.


"போன மாமுனி தன் தபோவனத்து

ஒருபுடை மிசை நெடுங் கள்ளிக்

கான மானது புகுந்து பாரிடங்களும்

கழுகு இனங்களும் துன்றி,

யானை ஒடிட, நரி துரந்திடு நிலத்து

எரி வெயில் கழைமுத்தம்,

வான் எலாம் நெடும் தாரகைபோல் எழு

மால்வரைப் புறம் சார்ந்தான்." --- வில்லிபாரதம்.


இதன் பொருள் ---

போன மாமுனி - புறப்பட்டுச் சென்ற சிறந்த அந்தக் காள மாமுனிவன், தன் தபோவனத்து - தன்னுடைய தவச் சாலையில், ஒரு புடை - ஒரு பக்கத்திலே, மிடை - நெருங்கிய, நெடுங் கள்ளிக்கானம் ஆனது - நீண்ட கள்ளிக் கானமாகிய இடத்திலே, புகுந்து - புகுந்து, பாரிடங்களும் - பூதங்களும், கழுகு இனங்களும் - கழுகின் கூட்டங்களும், துன்றி - நெருங்கப் பெற்று, யானை ஓடிட நரி துரத்திடு - யானை அஞ்சி ஓடும்படி நரியானது ஓட்ட வல்ல, நிலத்து - (பாலை) நிலமாகிய, எரி வெயில் - எரிகின்ற வெயிலினால்,  கழை முத்தம் வான் எலாம் நெடுந்தாரகை போல் எழும் - மூங்கிலிருந்து முத்துக்கள் ஆகாயமெல்லாம் பெரிய நட்சத்திரங்கள் போல மேலே எழுகின்ற, மால் வரை புறம் - பெரிய மலையின் பக்கமாகிய இடத்தை, சார்ந்தான் - சென்று சேர்ந்தான்.

     பாலை நிலத்தில் யானை வலிகுன்றிடும், ஆதலால், அதனை நரி  துரத்திடும் என்றார். 


"தன் நிலத்தினில் குறு முயல் தந்தியின் வலிது" என்று,

இந் நிலத்தினில் பழமொழி அறிதி நீ; இறைவ!

எந் நிலத்தினும் உனக்கு எளிதாயினும், இவர் நம்

நல் நிலத்தினில் வர, அமர் தொடங்குதல் நன்றால்."   --- வில்லிபாரதம். 

இதன் பொருள் ---

இறைவ - அரசனே! தன் நிலத்தினில் - தான் இருக்குமிடத்தில் உள்ள, குறுமுயல் - சிறிய முயற்குட்டி, தந்தியின் வலிது என்று - (தன்னிடம் விட்டுப் பெயர்ந்து வந்த பெரிய) யானையைக் காட்டிலும் வலிமை உடையது என்று, இ நிலத்தினில் - இவ்வுலகத்துச் சொல்லப்படுகின்ற, பழமொழி - பழமொழியை, நீ அறிதி - நீ அறிவாய்; (ஆகையால்), எந் நிலத்தினும் - (தன் நிலம்) அயல் நிலம் என்னும்) எந்த இடங்களிலும், உனக்கு எளிது ஆயினும் --- உனக்கு (போர் செய்வது) எளிதாயிருந்தாலும், இவர் நம் நல் நிலத்தினில் வர - இவர்கள் நமது நல்ல இடத்தில் வந்த பின்பு, அமர் தொடங்குதல் - (நாம்) போரைத் தொடங்குதல், நன்று - நல்லது.

     "தன் நிலமானால் முயலும் யானையை வெல்லும்" என்பது உலக வழக்கு. இது, இவர் வலியில்லாதவரானாலும், நீ மிக்க வலிமை உடையவனானாலும், இவர் நிலத்திலிருந்து நீ போர் செய்தால் தோல்வி அடைவாய் என்னும் பொருள் தோன்றத் துரியோதனனுக்கு விதுரர் கூறியது. இது நிரைமீட்சிச் சருக்கத்தில் வருகிறது காண்க.

இனிமேல், அருச்சுனாதியரை வெல்ல முடியாதோ? என்று துரியோதனனுக்குத் தோன்றக் கூடிய எண்ணத்திற்குச் சாமாதானம் கூறுப்பட்டது. இப்போது பொருதவர் ஒருகால் பாண்டவராக இருப்பின் பிறகு எப்படியும் அவர்கள் நம் நிலத்தில் வந்து பொருவராதலால், அப்போது அவர்களை வென்றுவிடலாம் என்பான் இவர் நம் நிலத்தினில் வர அமர் தொடங்குதல் நன்று என்றான். துரியோதனனுக்கு ஊக்கம் குறையாதிருத்தற் பொருட்டும், அவனுக்குக் கோபம் உண்டாகாமல் இருப்பதைக் கருதியும்,  "எந்நிலத்தினும் உனக்கு எளிது" என்றான்.  தந்தி - தந்தங்களை உடையது.  

"தன் ஊருக்கு யானை - அயலூருக்குப் பூனை" என வழங்கும் முதுமொழியைக் கருத்தில் கொள்ளுதல் சாலும்.


50. இடன் அறிதல் - 08. சிறுபடையான்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் எட்டாம் திருக்குறளில், "சிறு படையை உடையவனின் செல்லத்தக்க இடத்தை அடைந்தால், பெரும்படையை உடையவனின் மன எழுச்சி அழிந்து விடும்" என்கிறார் திருவள்ளுவ நாயனார்.

தனது சேனையின் பெருமையை மட்டுமே எண்ணி, இடத்தை நோக்காது செல்வானாயின் பயனின்றிப் போய்விடும் என்பது சொல்லப்பட்டது்.


இதற்குத் திருக்குறள்...


"சிறுபடையான் செல்இடம் சேரின், உறுபடையான்,

ஊக்கம் அழிந்து விடும்."


இதற்குப் பரிமேழகர் உரை ---

உறு படையான் --- பெரும்படை உடைய அரசன், 

சிறுபடையான் செல் இடம் சேரின் - ஏனைச் சிறுபடையானை அழித்தல் கருதி அவன் புகலைச் சென்று சாருமாயின், 

ஊக்கம் அழிந்து விடும் --- அவனால் தன் பெருமை அழியும்.

('செல் இடம்' அவனுக்குச் செல்லும் இடம். 'அழிந்துவிடும்' என்பது 'எழுந்திருக்கும்' என்றாற்போல் ஒரு சொல் ஊக்கத்தின் அழிவு உடையான்மேல் ஏற்றப்பட்டது. தன் படைப்பெருமை நோக்கி , இடன் நோக்காது செல்வன் ஆயின், அஃது அப்படைக்கு ஒருங்கு சென்று வினை செயல் ஆகாமையானாகப் பயிற்சி இன்மையானாக,  அப் பெருமையால் பயன் இன்றித் தான் அழிந்துவிடும் என்பதாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...


"இறையருள் தென்னன் இடத்து இந்திரன் வந்து,அன்று

வளையால் எறிபட்ட ஆற்றால், ---  இளையாச்

சிறுபடையான் செல்இடம் சேரின், உறுபடையான்

ஊக்கம் அழிந்து விடும்."


இதன் பொருள் ---

இறையருள் தென்னன் - இறையருளைப் பெற்ற பாண்டியன். பாண்டியன் தளை இட்டு வைத்த மேகங்களை விடுவிக்க வந்த இந்திரன், பாண்டியனோடு செய்த போரில், பாண்டியன் இந்திரன் முடிமேல் வளை (சக்கரம்) ஒன்று எறிந்து அவனைப் புறங்காட்டி ஓடச் செய்தான் என்பது வரலாறு.

திருவிளையாடல் புராணத்தில், இந்திரன் முடிமேல் வளை எறிந்த படலத்தில் இந்த வரலாறு கூறப்பட்டு உள்ளது.

உக்கிரபாண்டியன் நீதிநெறி தவறாமல் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அப்பொழுது ஒருசமயம் மழையானது மூவேந்தர்கள் ஆட்சி செய்யும் தமிழ்நாட்டில் பொய்த்தது. ஆகையால், தமிழ்நாட்டில் நீர்வளம் இன்றிப் பஞ்சம் உண்டானது. தம் மக்களின் துயர் தீர்க்க எண்ணிய மூவேந்தர்களும் பொதிகை மலையில் வசித்த அகத்தியரின் உதவியை நாடினர்.

அகத்தியரும் கோள்நிலை, காலநிலையை ஆராய்ந்து மூவேந்தர்களிடமும் “அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு மழை பெய்யாது. ஆதலால் நீங்கள் மழைக்கடவுளான இந்திரனிடம் மழையைப் பெய்யச் செய்யுமாறு கேளுங்கள்” என்று கூறினார். மூவேந்தரும் அகத்தியரிடம் “நாங்கள் இந்திரனை சந்திப்பதற்காக எவ்வாறு இந்திலோகத்தை அடைவது?” என்று வினா எழுப்பினர்.

அதற்கு அகத்தியர் "நீங்கள் மூவரும் சோமவார விரத வழிபாட்டினைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தை அடையுங்கள்" என்று கூறினார். தமிழ் மூவேந்தரும் சோமவாரம் விரதமுறையை விளக்குமாறு அகத்தியரை வேண்டினர்.

அகத்தியர் பின்வருமாறு விளக்கினார். "சோமாவார விரதமுறையை பின்பற்ற விரும்புபவர்கள் கார்த்திகை, மார்கழி மாதங்கள் மற்றும் இரண்டு அமாவாசை சேர்ந்து வரும் மாதங்களைத் தவிர ஏனைய மாதங்களில் திங்கள் கிழமைகளில் இவ்விரதத்தை துவக்கலாம். இதற்காக விரதம் தொடங்கும் திங்கட்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமைகளில் இரவில் உணவு உண்ணாமல், நிலத்தில் படுத்து உறங்க வேண்டும். திங்கள் கிழமை அதிகாலையில் எழுந்து சொக்கநாதரை மனதில் நினைத்து, அன்றைய கடன்களை முடித்து, பொற்றாமரைக் குளத்தில் நீராடி, திருவெண்ணீறு அணிந்து கொள்ள வேண்டும். மந்தாரை, முல்லை, இருவாட்சி, சாதி, மல்லிகை மலர்களால் விநாயகரை வழிபட்டு பின் சொக்கநாதரை முறைப்படி வழிபட வேண்டும். பின் பஞ்சாமிர்தம், பஞ்சகவ்வியம், நறுங்கனி, தேன், சந்தனக்குழம்பு, குளிர்ந்த தூய நீர் ஆகியவற்றால் திருமஞ்சனம் (அபிடேகம்) செய்ய வேண்டும். அழகிய வெண்பட்டு, பச்சைக் கற்பூரச் சுண்ணம், சந்தனம், மல்லிகை உள்ளிட்ட மணமுள்ள மாலை ஆகியவற்றை அணிவிக்க வேண்டும். பொன்னாலான அணிகலன்களை இறைவனுக்கு அணிவிக்க வேண்டும். பலவித பலகாரம், பானகம் மணம் மிக்க தாம்பூலம் ஆகியவற்றைப் படைத்து தீபதூப ஆராதனைகள் செய்து வில்வத்தால் அர்ச்சித்து மனமுருக வழிபாடு நடத்த வேண்டும்.  பின் தானங்கள் பலவற்றைக் கொடுக்க வேண்டும்".

"இவ்வாறு வழிபட்டால் நல்ல திருமணப்பேறு, நன்மக்கட்பேறு, நல்லவாக்கு, கல்வி, பொருள், இனியபோகம், பகைவரை வெற்றி கொள்ளும் தன்மை, இப்பிறவியிலேயே அரசுரிமை, பிறநலன்கள் ஆகியவை கிடைக்கும்".

"மேலும், முந்தைய பிறவிகளில் செய்த தீவினைகள் நீங்கப் பெற்று இப்பிறவியில் வீடுபேறு அடைவர். தேவருலகில் பதிநான்கு இந்திரப் பட்டம் பெற்று அவன் பக்கத்தில் வாழ்வர்.” என்று சோமவாரத்தின் விரதமுறை மற்றும் பலன்களை அகத்தியர் விளக்கிக் கூறினார்.

அகத்தியர் கூறிய விதிமுறைப்படி மூவேந்தர்கள் மூவரும் சோமவார விரதத்தைப் பின்பற்றி சிவபெருமானின் திருவருளைப் பெற்று இந்திரலோகத்தைச் சென்று அடைந்தனர். மூவேந்தரும் வருவதை அறிந்த இந்திரன் மூவேந்தர்கள் அமருவதற்காக, தன்னைவிட தாழ்ந்த நிலையில் உள்ள சிம்மாசனத்தை அமைத்தான்.

இந்திரோலகத்தை அடைந்த மூவேந்தர்களில் சேரனும், சோழனும் இந்திரனின் காட்டிய சிம்மாசனத்தில் அமர்ந்தனர். உக்கிரபாண்டியன் மட்டும் இந்திரனுக்கு சமமாக அவனுடைய சிம்மாசனத்தில் இந்திரனோடு அமர்ந்தான். இதனால் இந்திரன் உக்கிரபாண்டியனின் மீது கடும் கோபம் கொண்டான். இந்திரன் சேர, சோழர்களைப் பார்த்து “நீங்கள் வந்த காரியம் யாது?” என்று கேட்டான். அவர்கள் இந்திரனிடம் “மழைக்கு அதிபதியே! எங்கள் நாட்டில் மழை பெய்யவில்லை. அதனைப் பெறவேண்டி இங்கே வந்தோம்.” என்று கூறினர். அதனைக் கேட்ட இந்திரன் அவர்களுக்கு பொன்னாடை மற்றும் இரத்தின ஆபரங்கள் கொடுத்து அவ்விருவர் நாடுகளிலும் மழைபெய்யச் செய்யவதாக வாக்கு கொடுத்து அவர்களை வழி அனுப்பினான்.

தனக்கு இணையாக அமர்ந்திருந்த உக்கிரபாண்டியனை நோக்கிய இந்திரன் அவனை அவமானப்படுத்த எண்ணி ஒரு சூழ்ச்சியைச் செய்தான். பலபேர் சேர்ந்து தூக்கிவரும் பொருட்டு உள்ள முத்துமாலையை உக்கிரபாண்டியனுக்கு பரிசளிக்க எண்ணினான். அவனின் ஆணையின்படி பலபேர் சேர்ந்து முத்துமாலையைத் தூக்கி வந்து உக்கிரபாண்டியனிடம் நீட்டினர். உக்கிரபாண்டியன் முத்துமாலையை தூக்கத் திணருவதைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்க இந்திரன் எண்ணியிருந்தான். ஆனால், உக்கிரபாண்டியன் முத்துமாலையை எளிதாக தூக்கி கழுத்தில் அணிந்து கொண்டான். இதனைப் பார்த்த இந்திரன் அதிர்ச்சியடைந்தான். பின் உக்கிரபாண்டியனிடம் “இன்று முதல் நீ ஆரம் தாங்கிய பாண்டியன் என்று அழைக்கப்படுவாய்” என்று கூறினான்.

ஆனால், உக்கிரபாண்டியன் அதனைப் பொருட்படுத்தாது இந்திரனிடம் ஏதும் கேட்காது மதுரை நகர் திரும்பினான். சேர, சோழ நாடுகளில் இந்திரன் மழையைப் பெய்வித்தான். பாண்டிய நாட்டில் மட்டும் மழை பெய்யவில்லை.

ஒருநாள் உக்கிரபாண்டியன் மரங்கள் அடர்ந்த பொதிகை மலைச்சாரலில் வேட்டையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது புட்கலாவருத்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி என்னும் நான்கு மேகங்கள் பொதிகை மலைச்சாரலில் மேய்ந்து கொண்டிருந்தன.

அதனைக் கண்ட உக்கிரபாண்டியன் அவற்றைப் பிடித்து சிறையில் அடைத்தான். இதனை அறிந்த இந்திரன் கடும்கோபம் கொண்டான். உக்கிரபாண்டியன் மீது போர் தொடுத்தான். பாண்டியனின் படைகளும், இந்திரனின் படைகளும் நேருக்கு நேராக நின்று போரிட்டன. போரின் போது உக்கிரபாண்டியன், இறைவனான சுந்தரபாண்டியன் அளித்த வளையை இந்திரனை நோக்கி வீசினான்.

வளையானது இந்திரன் அணிந்திருந்த கிரீடத்தைச் சிதைத்தது. அதனைக் கண்ட இந்திரன் "நான் முன்னர் சோமசுந்தரரை வழிபட்டதின் பலனாக என்னுடைய தலை இன்று தப்பியது" என்று எண்ணி போர்களத்தைவிட்டு தேவலோகத்தை அடைந்தான்.

பின்னர் ‘உனது நாட்டில் மழையைப் பொழிவிக்கிறேன். நீ என்னுடைய மேகங்களைத் திருப்பித் தருவாயாக’ என்று ஓலை ஒன்றை அனுப்பினான். இந்திரன் அனுப்பிய ஓலையை நம்பாததால் மேகங்களின் விடுவிக்க உக்கிரபாண்டியன் மறுத்து விட்டான். பாண்டிய நாட்டு வேளாளன் ஒருவன் “அரசே இந்திரனின் செய்திக்கு நான் பிணை. இந்திரன் என்னை நன்கு அறிவான். ஆதலால் நீங்கள் மேகங்களை விடுதலை செய்யுங்கள்" என்று கூறினான்.

உக்கிரபாண்டியனும் மேகங்களை விடுவித்தான். பின்னர் இந்திரன் பாண்டிய நாட்டில் மழையை பெய்யச் செய்து நாட்டை வளமாக்கினான். மழையால் பாண்டிய நாடு செழித்து பொலிவு பெற்றது.

வலிமை மிக்கவர்கள் தங்களை விட வலிமை குறைந்தவர்களைத் துன்புறுத்தும் வகையில் நடந்துகொண்டால் இறைவனின் அருளால் வலிமை மிக்கவர் தண்டிக்கப்படுவர் என்பதை இப்படலம் விளக்குகிறது.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்...


"வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்

அணங்கருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து,

அளைச்செறி இழுவை இரைக்கு வந்தன்ன

மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து

விழுமியம் பெரியம் யாமே, நம்மில்

பொருநனும் இளையன், கொண்டியும் பெரிதென

எள்ளி வந்த வம்ப மள்ளர்

புல்லென் கண்ணர், புறத்திற் பெயர,

ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான், ஆண்டு அவர்

மாண்இழை மகளிர் நாணினர் கழியத்

தந்தை தம்மூர் ஆங்கண்

தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே."     ---  புறநானூறு.

இதன் பொருள் ---

நிலை தவறாது நிற்கவல்ல, நல்ல கால் வலியும், வென்று அழிக்க முடியாத உயர்ந்த தோள்வலியும் உடையவன் எமது தலைவன். குகைக்கு உள்ளே கிடந்த புலி, எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டு, தன் பசிக்கு உணவாகிய இரையைத் தேடிக்கொண்டு வருவதைப் போல வரும், வெல்லுதற்கு அரிய, பரந்து அகன்ற மார்பை உடைய தலைவனின் வீரத்தை மதிக்காதவர்களாய், "மிகப் பெரியவர்கள், மிகப் பெரிய படையை உடையவர்கள் நாம், நாம் போய்ப் போரிடப் போகும் இவனோ வயதில் மிகச் சிறியவன். இவனை வென்றால் கிடைக்கின்ற தேட்டையோ மிகப் பெரிது" என்ற பேராசையால், படை கொண்டு வந்த வீரரை, இங்கே கொல்லாது, புறமுதுகு இட்டு ஓடச் செய்து, அவர்களின் காதல் மகளிர் கண்டு வெட்கத்தால் உயிர் விடும் வண்ணம், போர்ப்பறை ஒலிக்க, அவர்கள் உரைச் சென்று, அங்கேயே அப் பகைவர்களைக் கொன்றவன் இவன்.

தனது பகைவர்களை அவர்கள் ஊரிலேயே சென்று வெல்லும் வலிமையை உடையவன் பாண்டியன் நெடுஞ்செழியன் என்பதைக் கூறும் பாடல் இது.


50. இடன் அறிதல் - 07. அஞ்சாமை அல்லால்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "பகைவரிடத்தில் தொழில் செய்யும் விதங்களை எல்லாம் குறைவுபடாமல் ஆராய்ந்து, இடத்தோடு பொருந்தச் செய்தால், அந்தச் செயலுக்கு அஞ்சாமையைத் தவிர வேறு துணைகள் வேண்டா" என்கின்றார் நாயனார்.

அதாவது, தன் வலி, மாற்றான் வலி, துணை வலி என்ற இம் மூன்று வலிமையினுள், இடம் அறிந்து செய்கின்றவர்க்குத் தாம் எண்ணிய காரியத்தை முடிப்பதற்குத் தமது வலி ஒன்றே போதுமானது என்றும், துணை வலி என்பதே வேண்டாம் என்று கூறப்படுவதால், ஒரு தொழிலைச் செய்து முடிக்க வேண்டுமானால், இடம் அறிதலே சிறந்தது என்பது பெறப்பட்டது. 


இதற்குத் திருக்குறள்

"அஞ்சாமை அல்லால் துணை வேண்டா, எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

எஞ்சாமை எண்ணி இடத்தான் செயின் --- பகையிடத்து வினை செய்யும் திறங்களை எல்லாம் ஒழியாது எண்ணி அவற்றை அரசர் இடத்தோடு பொருந்தச் செய்வராயின், 

அஞ்சாமை அல்லால் துணை வேண்டா --- அச்செயற்குத் தம்திண்மை அல்லது பிறிதொரு துணை வேண்டுவதில்லை.

('திண்ணியராய் நின்று செய்து முடித்தலே வேண்டுவது அல்லது துணை வேண்டா' என்றார், அவ் வினை தவறுவதற்கு ஏது இன்மையின். இவை மூன்று பாட்டானும் வினை செய்தற்கு ஆம் இடன் அறிதல் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து வரு பாடல்...


"சென்னிஅனீ கத்தைமோ திச்சிதைத்தது ஓர்கோழி

முன்உறையூர்க் கானில், முருகேசா - மன்னுலகில்

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை

எண்ணி இடத்தால் செயின்."


இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே! முன் - முன்னாளிலே, உறையூர் கானில் - உறையூர்க் காட்டிலே, ஓர் கோழி - ஒரு கோழியானது, சென்னி - சோழனது, அனீகத்தை - படையை, மோதி சிதைத்தது - அடித்துக் கெடுத்தது. மன் உலகில் - நிலைபெற்ற உலகத்தில், எஞ்சாமை எண்ணி - குறைவில்லாமல் எண்ணிப் பார்த்து, இடத்தால் செயின் - இடமறிந்து செய்தால், அஞ்சாமை அல்லால் துணை வேண்டா - அஞ்சாமையை அல்லாமல் வேறு துணை வேண்டியது இல்லை.

முன்னாளிலே உறையூர்க் காட்டில் ஒரு கோழியானது சோழனுடைய படையை மோதியடித்துக் கெடுத்தது. இவ் உலகில் சிறிதும் குறைவில்லாமல் நன்றாக எண்ணமிட்டு இடத்தையும் நோக்கிக் காரியத்தைச் செய்தால் அஞ்சாமை அல்லால் வேறு துணை வேண்டியது இல்லை என்பது சொல்லப்பட்டது.


உறையூர்க் கோழியின் கதை


முன்னாளிலே சனநாத வளவனுடைய மகனாகிய அரசசூளாமணி என்பவன் நாட்டு வளங்களைக் காண எண்ணிப் புறப்பட்டான். பல இடங்களையும் பார்த்துக் கொண்டு திரிசிராமலைக்கு மேல்பால் உள்ள உறையூர்க் காட்டை அடைந்தான். அப்போது அங்கு ஒரு கோழியானது அந்த இடத்தின் வலிமையால் சோழனுடைய பெரிய படையில் பாய்ந்து பட்டத்து யானை முதலியவைகளையும் மோதிக் கலங்குமாறு செய்தது. அதனைக்  கண்ட அரசன், இது இவ்வாறு செய்வதற்கு ஏது, இந்த இடத்தின் வலிமையே என்று முடிவு செய்து அங்கு ஒரு நகரத்தை உண்டாக்கி அதனைத் தலைநகராகக் கொண்டான்.


50. இடன் அறிதல் - 05. நெடும்புனலுள்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஆழம் நிறைந்த நீரில் உள்ள முதலையானது பிற உயிர்களை எல்லாம் வெல்லும்; முதலையானது நீரில் இருந்து நீங்குமானால், பிற உயிர்கள் எல்லாம் அதனை வெல்லும்" என்கின்றார் நாயனார்.

அவரவரும் தத்தமது இடத்தில் வலிமை உள்ளவராகவே இருப்பார். நிலைப்படாத நீரில் முதலை வசிக்கும் காலத்து, பிற உயிர்கள் எல்லாம் அந்த ஆழம் உடைய நீரில் செல்வது அருமை உடையது. எனவே, நீரிலேயே நிலைத்து வாழும் முதலையானது அவற்றை எளிதில் வென்று விடும். தான் நிலைத்து இருந்த நீரை விட்டு, முதலையானது வெளியில் வருமானால், வெளியில் நிலைத்து வாழும் பிற உயிரினங்கள் அதனை எளிதில் வெல்லும்.

எனவே, பகைவர், இருக்கக் கூடாத இடத்தில் இருக்கும் காலத்தில் அவரை எளிதில் வெல்லலாம் என்று சொல்லப்பட்டது.


இதற்குத் திருக்குறள்...


"நெடும்புனல்உள் வெல்லும் முதலை, அடும் புனலின்

நீங்கின், அதனைப் பிற."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முதலை நெடும்புனலுள் (பிற) வெல்லும் --- முதலை ஆழமுடைய நீரின்கண் ஆயின், பிறவற்றையெல்லாம் தான் வெல்லா நிற்கும், 

புனலின் நீங்கின் அதனைப் 'பிற' அடும் - அப்புனலின் நீங்குமாயின், அதனைப் பிற எல்லாம் வெல்லா நிற்கும்.

(எனவே, 'எல்லாரும் தம் நிலத்து வலியர்' என்பது கூறப்பட்டது. 'பிற' என்பது முன்னும் கூட்டப்பட்டது. நிலைப்படா நீரின்கண் பிற நிற்றலாற்றாமையின் அவையெல்லாம் முதலைக்கு எளியவாம், அவை இயங்குவதற்குரிய நிலத்தின் கண் அஃது இயங்கல் ஆற்றாமையின், 'அஃது அவற்றிற்கெல்லாம் எளிதாம்', என்றது, மேற்செல்லும் அரசர் பகைவர் நிற்றலாற்றா இடன் அறிந்து செல்வராயின், அவர் தமக்கு எளியராவரன்றித் தாம் நிற்கலாற்றா இடத்துச் செல்வராயின் அவர்க்கு எளியராவர் என்னும் பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிதுமொழிதல் என்னும் அலங்காரம். அவரை அவர் நிற்றலாற்றாவிடத்துச் சென்று வெல்க என்பதாம்.)


இதற்குப் பின்வரும் பாடல் ஒப்பாக அமைந்துள்ளதைக் காணலாம்...

"யானையைச் சலந்தனில் இழுத்த அக்கரா

பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ?

தானையும் தலைவரும் தலம்விட்டு ஏகினால்

சேனையும் செல்வமும் தியங்கு வார்களே."      --- விவேக சிந்தாமணி.

இதன் பொருள் ---

யானையைச் சலந்தனில் இழுத்த அக் கரா - யானை ஒன்றினை, தான் வலிமையோடு இருக்கும் நீர் நிலையில் பற்றி இழுத்த முதலையானது, பூனையைக் கரைதனில் பிடிக்கப் போகுமோ --தன் இருக்கும் இடத்தை விட்டுத் தரையில் வந்து ஒரு பூனையைப் பிடிக்க முடியுமோ? (தனக்கு வலிமை பொருந்திய நீர் நிலையை விட்டு வெளியே வந்தால், சிறிய பூனையைக் கூட இழுக்க வலிமை இருக்காது. அதுபோல) தானையும் தலைவரும் தலம் விட்டு ஏகினால் - படைகளும் அவற்றின் தலைவராகிய படைக் கர்த்தர்களும் அவர் இருக்கும் இடத்தை விட்டு, தங்களுக்கு வலிமை முறையும் இடத்திற்குச் சென்றால், சேனையும் செல்வமும் தியங்குவார்களே - படைகளும் பொருளும் வலி குறைந்து பகைவரிடம் அகப்பட்டு (செய்வது அறியாது) மயங்குவார்கள்.

கருத்து - அவரவர் இருப்பிடத்தில் அவரவருக்குத் தக்க வலிமை இருக்கும். மாற்றார் மேல் செல்லும்போது காலம், வலி, இடம் ஆகியவற்றை ஆராய்ந்து அறிந்து செல்லுதல் வேண்டும்.


50. இடன் அறிதல் - 04. எண்ணியார் எண்ணம்

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்தில் வரும் நான்காம் திருக்குறளில், "தகுந்த இடத்தை அறிந்து, பகைவரிடத்தில் செய்வகைகளைப் பொருள் செய்து மேற்கொண்டால், தன்னை வெல்ல எண்ணிய பகைவரும் தமது எண்ணத்தைக் கைவிடுவர்" என்கின்றார் நாயனார்.


இதற்குத் திருக்குறள்


"எண்ணியார் எண்ணம் இழப்பர், இடம் அறிந்து

துன்னியார் துன்னிச் செயின்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

இடன் அறிந்து துன்னியார் --- தாம் வினை செய்தற்கு ஏற்ற இடத்தினை அறிந்து சென்ற அரசர், 

துன்னிச் செயின் --- அரணைப் பொருந்தி நின்று அதனைச் செய்வாராயின், 

எண்ணியார் எண்ணம் இழப்பர் --- அவரை வெல்வதாக எண்ணி இருந்த பகைவர் அவ்வெண்ணத்தினை இழப்பர்.

('அரண்' என்பது அவாய் நிலையான் வந்தது. 'எண்ண' என்றது எண்ணப்பட்ட தம் வெற்றியை. 'அதனை இழப்பர்' என்றார், அவர் வினை செய்யாமல் தம்மைக் காத்தமையின். இதனான், அவர் பகைவர் தோற்பர் என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பகைவர் அரணின் புறத்திருப்பார் அதற்கு ஆம் இடம் அறிதல் கூறப்பட்டது.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, "நீதிசூடாமணி" என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"சார்ந்துபறை கீறிச் சாரசந்தன் தன்உடலை

ஈர்ந்துவென்றான் வீமன், இரங்கேசா! - தேர்ந்தக்கால்

எண்ணியார் எண்ணம் இழப்பார் இடன்அறிந்து

துன்னியார் துன்னிச் செயின்."

இதன் பொருள் ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! வீமன் சார்ந்து - வீமன் (வேதிய வேடம் தாங்கிக் கண்ணனோடு) சென்று, பறை கீறி - (சராசந்தன் பட்டணத்தில் இருந்த) பேரிகையைக் கிழித்து, சராசந்தன் தன் உடலை ஈர்ந்து - சராசந்தனுடைய உடலை இரு பிளவாக்கி  வென்றான் - வெற்றி பெற்றான்,(ஆகையால், இது)  இடன் அறிந்து - தொழிலை முடிப்பதற்குத் தகுந்த இடத்தை அறிந்து, துன்னியார் - சேர்ந்த அரசர்,  துன்னி செயின் - பொருந்தி இருந்து அத்தொழிலைச் செய்வாராயின், எண்ணியார் - (முன்பு அவரை வெல்ல) எண்ணியிருந்த பகைவர், எண்ணம் இழப்பர் - அவ் எண்ணத்தை இழந்து தோற்பார்கள் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- இடம் அறிந்து காரியம் செய்தால் பகைவரை வெல்லலாம்.

விளக்கவுரை --- சராசந்தன் இருதாய்மார் வயிற்றில் அரை, அரை உடலாகப் பிறந்தவன். ஆகையால், அந்த அசம்பாவிதத்துக்கு அஞ்சி அவ்வூர் அரசன், அந்த அரை உடல்களைக் கோட்டைக்கு வெளிப்புறத்தில் வீசி எறிந்தான். நடு நிசியில் சரா என்னும் அரக்கி இரை தேடி அங்கு வந்தபோது, அந்த அரை உடல்களை ஒன்று சேர்த்து, உண்ண மனம் வராமல் வியந்து நோக்கிக் கொண்டிருந்தாள். அதற்குள் பொழுது விடிந்தது. அந்த அதிசயத்தை அவ் ஊரார் அனைவரும் கண்டு அரசற்கு அறிவித்தார்கள். அரசன் வந்து சரா என்பவளுக்கு வேண்டிய உணவளித்து அவளை மகிழ்வித்தான். ஆகையால் அவள், தான் ஒன்று சேர்த்த குழந்தைக்குத் தன் பெயரே வழங்கும்படி அதற்குச் "சராசந்தன்" என்று பெயரிட்டு அழைக்க வேண்டிக்கொண்டு, அதை விட்டுச் சென்றாள். அரசனும் அப்படியே ஒப்பி, அக் குழந்தைக்குச் சராசந்தன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அவனுக்கு வரத்தினால் தெய்வீகமாய் ஒரு பேரிகை கிடைத்தது. அது சத்துருக்கள் வரவை முன்னம் அறிந்து அறிவிக்கும் ஆற்றல் உடையது. சராசந்தன் வளர்ந்து வயது நிரம்பினபோது அவ்வூரை ஆளும் அரசனாய்ச் சத்துருக்களை வென்று புகழ் பெற்று விளங்கினான்.

தருமன் இராஜசூய யாகம் செய்வதற்குப் பொருள் வேண்டியிருந்தது. அது சேகரிக்கும் பொருட்டுக் கண்ணபிரான் வீமனை அழைத்துக் கொண்டு, சராசந்தன் ஊருக்குப் போனார்.  அங்குக் கட்டியிருந்த பேரிகை தங்கள் வரவை அறிவிக்கும் முந்தியே, கண்ணபிரான் வீமசேனனைக் கொண்டு அதைக் கிழிப்பித்துச் சராசந்தன் அரண்மனைக்குள் திடும் பிரவேசமாய் வீமனோடு நுழைந்தார். அது கண்ட அவன் கடும் கோபம் கொண்டு சண்டைக்குக் கிளம்பினான். கண்ணபிரான் செய்த சங்கேதப்படி வீமசேனன் கொஞ்சமேனும் பின் வாங்காமல், அவனோடு அகோர மல்யுத்தம் செய்து, இரண்டரை நாழிகைக்குள் அவனது உடலை இருபிளவாகக் கிழித்துத் தலைமாறி எறிந்தான். ஆகையால், சராசந்தன் மாண்டான். உடனே கண்ணபிரான் சற்றேனும் தாழ்க்காமல், அவன் பிள்ளைக்குப் பட்டம் கட்டிவிட்டு, யாகத்துக்காக வேண்டிய பொருளைக் கொள்ளையிட்டு, அங்கிருந்து எடுத்துக் கொண்டு வந்து தருமராஜனிடத்தில் கொடுத்தார். ஆகையால், "துன்னியார் துன்னிச் செயின், எண்ணியார் எண்ணம் இழப்பர்" என்றார் திருவள்ளுவ நாயனார்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய, "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்....

"வயத்து இரதம் ஏறி வரும்அபிமன் தன்னைச்

செயத்திரதன் கொன்றான், சிவசிவா! --- முயற்சியுடன்

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து

துன்னியார் துன்னிச் செயின்."

ஜெயத்திரதன் சிந்து நாட்டு அரசன். கௌரவர்களின் தங்கை துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தக்ஷத்ரன். ஜயத்திரதன் பிறந்தபோது ஓர் அசரீரி "இவன் போரில் புகழ் படைத்து வீர சுவர்க்கம் அடைவான்" எனக் கூறியது கேட்டு ஜயத்திரதன் தந்தை, "என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்" என்றான். 

காமியக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்தபோது, திரௌபதி தனித்து இருந்தாள். அப்போது அங்கு வந்த சிந்து நாட்டு மன்னன் ஜயத்திரதன் ஆசிரமத்தின் வெளியே நின்றுக் கொண்டிருந்த திரௌபதியை கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான். காம வயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான். அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.

வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்திரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடைக் கொண்டு ஜயத்திரதனுடன் போரிட்டனர். அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன். தருமரின் ஆணையால் அவன் தலையை மொட்டை அடித்து அனுப்புகின்றனர். நாணி தலைகுனிந்து திரும்பிய ஜயத்திரதன், கங்கைக் கரைக்குச் சென்று பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களை கொல்லத் தக்க வலிமையை வேண்டுகிறான். கண்ணனின் துணை இருக்கும் வரை, பாண்டவர்களை யாராலும் கொல்ல முடியாது. ஆனாலும் ஜயத்திரதன் விடவில்லை. பாண்டவர்களுக்கு மிகப் பெரும் மனவலியை போரில் உண்டாக்க வரம் கேட்கிறான். அவன் வாக்கினையே அவனுக்கு எதிராக ஈசன் திருப்புகிறார். அதன்படி, "ஒரே ஒரு நாளிற்கு, அருச்சுனன், கண்ணன் இருவரைத் தவிர்த்து, போர் களத்தில் ஜயத்திரதன் யாரை வேண்டுமானாலும் எளிமையாய் தோற்கடிக்கும் ஆற்றலை பெறுவான். அந்த நாளையும் ஜயத்திரதனே தேர்வு செய்துகொள்ளலாம்" என வரம் கொடுத்துவிட்டு மறைந்து விடுகிறார்.

பதின்மூன்றாம் நாள் குருச்சேத்திரப் போரில் துரியோதனன் திட்டப்படி, துரோணர் சக்கர வியூகம் அமைத்துப் போரை நடத்துகிறார். அன்றைய போரின் போது தருமனைச் சிறைப்பிடிக்க எண்ணி சக்கரவியூகமாக வளைத்து விடுகிறார்கள். இந்த அமைப்பை உடைத்து செல்லத் தெரிந்தவர்கள் பாண்டவர் தரப்பில், அருச்சுனன், கிருஷ்ணர் மற்றும் அபிமன்யு ஆகிய மூவர் மட்டுமே. ஆனால் அபிமன்யுவுக்கு உள்ளே போகத் தெரியுமே தவிர வெளியே வரத் தெரியாது. இருந்தாலும் அருச்சுனரும் கிருஷ்ணரும் அச்சமயம் போர்க்களத்தில் வேறிடத்தில் இருந்ததால், அபிமன்யு மட்டும் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு. ஆனால், தருமன் மீட்கப்பட்டு வெளி வந்த மறுகணம், அவர் உள்பட அபிமன்யுவைப் பின் தொடர்ந்த பாண்டவர்கள் நால்வரையும் ஜெயத்திரதன் முன்னேற விடாமல் தடுத்து விடுகிறான். அபிமன்யுவைத் தனியாக வளைத்து விடுகிறார்கள். துரோணர் ஆச்சரியத்தில் கண்பிதுங்கிப் போகும் அளவுக்கு அத்தனை பேரையும் தனியாக சமாளிக்கிறான் சிறுவனாகிய அபிமன்னன். கடும் போராட்டத்துக்குப் பிறகு, அவனை வீழ்த்திக் கொன்று விடுகிறார்கள்.

  "துன்னியார் துன்னிச் செயின், எண்ணியார் எண்ணம் இழப்பர்" என்றார் திருவள்ளுவ நாயனார். கௌரவர்கள் சூழ்ச்சியால், அபிமன்னன் தனது எண்ணத்தை இழந்தான் என்பதை அறிக.




27. மன்னுயிரைத் தன் உயிர் போல் எண்ணுக

 


"முன்னரிய மறைவழங்கும் தண்டலையார்

      ஆகமத்தின் மொழிகே ளாமல்

பின்னுயிரை வதைத்தவனும், கொன்றவனும்

      குறைத்தவனும், பேரு ளோனும்,

அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்

      நரகுறுவர்; ஆத லாலே

தன்னுயிர்போல் எந்நாளும் மன்னுயிருக்

      கிரங்குவது தக்க தாமே."


இதன் பொருள் ---

முன் அரிய மறை வழங்கும் தண்டலையார் ஆகமத்தின் மொழி கேளாமல் - முற்காலத்தில் அருமையான (அறநெறியை அறிவுறுத்தும்) வேதங்களை (உலகுக்கு) அருளிய, திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் 'நீள்நெறி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள சிவபரம்பொருள் திருவாய் மலர்ந்து அருளிய ஆகம நூல்களில் கூறியதைக் கேட்காமல், உயிரை வதைத்தவனும் - உயிருக்கு இடுக்கண் விளைவித்தவனும்,  கொன்றவனும் - அழித்தவனும்,  குறைத்தவனும் - (உயிராற்றலைக்) குறைவு  படுத்தியவனும், பேர் உளோனும் - (முன் நின்று கொலையாளி எனப்) பெயர் பெற்றவனும், அந்நெறியே சமைத்தவனும் - கொலை வழியிலே நின்று சமையல் செய்தவனும், உண்டவனும் - சாப்பிட்டவனும் (ஆகியோர்), நரகு உறுவர் - நரகத்தை அடைவர்,  

ஆதலால் -  

எந்நாளும் தன் உயிர்போல் மன் உயிருக்கு இரங்குவதும் தக்கது  ஆம் - (உயிர்களைக் கொல்லாமல், கொன்றைதைத் தின்னாமல், விலைக்கத் தராமல், ஊனைச் சமைக்காமல், ஊனை உண்ணாமலும்)) எப்போதும் தன் உயிரைப்போலப் பிற உயிரையும் நினைத்து இரக்கம் காட்டுவதும் நன்மையாகும்.

      ‘தன் உயிரைப் போல, மன் உயிரை நினை' என்பது பழமொழி. "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவ நாயனார் அருளிச் செய்த, பின்வரும், திருக்குறள் பாடல்களின் கருத்தை அறிக.


"தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனின், யாரும் 

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்."


"உண்ணாமை வேண்டும் புலாஅல். பிறிதொன்றன் 

புண்ணது உணர்வார்ப் பெறின்." 


"செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார், 

உயிரின் தலைப்பிரிந்த ஊன்"


"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின், ஒன்றன் 

உயிர்செகுத் துண்ணாமை நன்று." 


"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி 

எல்லா உயிரும் தொழும்."


பின்வரும் பாடல்கள் ஒப்பாக அமைந்துள்ளது காணலாம்...


தின்னும் அது குற்றம் இலை, செத்தது எனும் புத்தா!

தின்பை என் கொன்று உனக்குத் தீற்றினர்க்குப் பாவம்,

மன்னுவது உன் காரணத்தால், தின்னாதார்க்கு

வதைத்து ஒன்றை இடாமையினால், வதைத்தவர்க்கே பாவம்,

என்னில், உனை ஊட்டினர்க்குப் பாவம் சேர

என்னதவம் புரிகின்றாய்? புலால் கடவுட்கு இடாயோ?

உன் உடலம் அசுசி என நாணி வேறு ஓர்

உடல் உண்ணில் அசுசி என உணர்ந்திலை காண் நீயே.     ---  சிவஞானசித்தியார், பரபக்கம்.

இதன் பொருள் ---

ஒர் உயிரைக் கொல்லுவதுதான் குற்றம். செத்ததைத் தின்பது குற்றம் இல்லை என்று கூறும் புத்தா! நீ தின்பாய் என்று கருதி, ஒன்றைக் கொன்று, நீ தின்பதற்குப் புலாலை ஊட்டினர்க்குப் பாவம் உன் காரணத்தால் உண்டாகும். அது எங்ஙனம் என்னில், தின்னாதார்க்குக் கொன்று ஊட்டுவார் இல்லை. ஆகையால், 'என் காரணத்தால் பாவம் உண்டாகாது, கொன்றவர்க்கே பாவம் உண்டு' என்று கூறினால், உன்னைப் பரிந்து ஊட்டினவர்க்குப் பாவம் உண்டாக நீ என்ன தவத்தைச் செய்கின்றாய். அது அன்றியும், நீ புலால் நுகரும் காலத்தே உன் கடவுளுக்கும் புலாலை ஊட்டுவாய். அது அல்லாமலும், உன் உடம்பு சுத்தம் இல்லையென்று வெட்கப்பட்டு, நீ பிற உடம்பின் சதையை நுகருவதும் சுத்தம் இல்லையென்று அறிந்தாய் இல்லை.


"கொன்றான், கொலையை உடன்பட்டான், கோடாது

கொன்றதனைக் கொண்டான், கொழிக்குங்கால் ---கொன்றதனை

அட்டான் இடஉண்டான் ஐவரினும் ஆகும்எனக்

கட்டுஎறிந்த பாவம் கருது." ---  சிறுபஞ்சமூலம்.

இதன் பதவுரை ---

கொன்றான் - ஓர் உயிரைக் கொன்றவன், கொலையை உடன்பட்டான் - பிறன் ஒருவன் செய்யும் கொலைக்கு உடம்பட்டு நின்றவன், கோடாது - மனம் நாணாமல், கொன்றதனைக் கொண்டான் - கொன்ற தசையை விலைக்குக் கொண்டவன், கொழிக்குங்கால் - ஆராயுமிடத்து, கொன்றதனை அட்டான் - அங்ஙனம் கொல்லப்பட்டதன் ஊனைச் சமைத்தவன், இட உண்டான் - சமைத்ததனை இட உண்டவன் (என்று சொல்லப்படுகிற), ஐவரினும் - இந்த ஐவரிடத்தும், கட்டு எறிந்த பாவம் - வரம்பு அழித்ததினால் உண்டாகிய பாவமானது, ஆகும் எனக் கருது - நிகழும் என்று நீ கருதுவாயாக.

உயிரைக் கொன்றவன், கொலை செய்வதற்கு உடன்பட்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனை விலைக்கோ அல்லது இலவசமாகவோ பெற்றுக் கொண்டவன், கொல்லப்பட்டதனுடைய ஊனைச் சுவைபடச் சமைத்தவன்,  சமைத்த அதனை இட உண்டவன் என, இந்து ஐவர் மாட்டும் வரம்பு கடந்து செய்த பாவம் நிற்கும்.

கொலை செய்தவன் முதல், உண்டவன் ஈறாக எல்லார்க்குமே கொலைக் குற்றம் உண்டு என்பது சொல்லப்பட்டது.


"அலைப்பான் பிறஉயிரை ஆக்கலும் குற்றம்,

விலைப்பாலில் கொண்டு ஊன் மிசைதலும் குற்றம்,

சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்,

கொலைப்பாலும் குற்றமே ஆம்." ---  நான்மணிக்கடிகை.

இதன் பதவுரை ---

அலைப்பான் பிற உயிரை ஆக்கலும் குற்றம் - கொன்று புலாலை உண்பதற்காக, பிற உயிர்களை வளர்த்தலும் குற்றம் ஆகும்; விலைப்பாலின் ஊன் கொண்டு மிசைதலும் குற்றம் - விலைக்கு  ஊனை வாங்கிச் சமைத்து  உண்ணுதலும் குற்றம் ஆகும்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் - சொல்லும் வகை அல்லாத சொற்களைச் சொல்லி விடுதலும் குற்றம் ஆகும்; கொலைப்பாலும் குற்றமே ஆம் - கொலை வகைகளும் குற்றமே ஆகும்.

பிற உயிர்களைக் கொன்று உண்பதற்காக, அவற்றை வளர்த்தலும் குற்றம். கொல்லப்பட்ட ஒன்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்பதும் குற்றம். சொல்லத் தகாதவற்றைச் சொல்லுதலும் குற்றம்.  இவ்வாறான கொலை வகைகள் யாவும் குற்றமே ஆகும்.


76. நன்மை (உறுதி) தருபவை

 

"கைக்குறுதி வேல்,வில்; மனைக்குறுதி மனையாள்;

     கவிக்குறுதி பொருளடக்கம்;

கன்னியர் தமக்குறுதி கற்புடைமை; சொற்குறுதி

     கண்டிடில் சத்யவசனம்;


மெய்க்குறுதி முன்பின்; சபைக்குறுதி வித்வசனம்;

     வேசையர்க் குறுதிதேடல்;

விரகருக் குறுதிபெண்; மூப்பினுக் குறுதிஊண்;

     வீரருக் குறுதிதீரம்;


செய்க்குறுதி நீர்;அரும் பார்க்குறுதி செங்கோல்;

     செழும்படைக் குறுதிவேழம்;

செல்வந் தனக்குறுதி பிள்ளைகள்; நகர்க்குறுதி

     சேர்ந்திடும் சர்ச்சனர்களாம்;


மைக்குறுதி யாகிய விழிக்குற மடந்தைசுர

     மங்கைமரு வுந்தலைவனே

மயிலேறி விளையாடு குகனேபுல்! வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---

மைக்கு உறுதியாகிய விழி குறமடந்தை சுரமங்கை மருவும் தலைவனே! - மைக்கு அழகு செய்யும் விழிகளை உடைய குறமங்கை (வள்ளியம்மை)யும், தேவயானையும் விரும்பும் மணவாளனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கைக்கு உறுதி வேல் வில் - (வீரன்) கைக்கு நன்மை தருவன வேலும் வில்லும்; 

மனைக்கு உறுதி மனையாள் - இல்லத்திற்கு நலம் தருபவள் இல்லாள்; 

கவிக்கு உறுதி பொருள் அடக்கம் - செய்யுளுக்கு நலம் தருவது பொருட்செறிவு; 

கன்னியர் தமக்கு உறுதி கற்பு உடைமை - பெண்களுக்கு நன்மை கற்புடன் இருத்தல்; 

சொற்கு உறுதி கண்டிடில் சத்திய வசனம் - சொல்லுக்கு நன்மையை ஆராய்ந்தால் உண்மை கூறுதல்; 

மெய்க்கு உறுதி முன்பின் - உடம்புக்கு நலம் தருவோர், தமக்கு முன்னர் பிறந்த அண்ணனும், பின்னர் பிறந்த தம்பியும்; 

சபைக்கு உறுதி வித்வசனம் - அவைக்களத்திற்கு நன்மை புலவர் பெருமக்கள் இருத்தல்; 

வேசையருக்கு உறுதி தேடல் - பரத்தைகளுக்கு நன்மை பொருள் தேடல்; 

விரகருக்கு உறுதி பெண் - காமுகருக்கு நலம் பெண்கள்; மூப்பினுக்கு உறுதி ஊண் - முதுமைக்கு நலம் உணவு; 

வீரருக்கு உறுதி தீரம் - வீரருக்கு நலம் அஞ்சாமை; 

செய்க்கு உறுதி நீர் - நிலத்திற்கு நலம் நீர்; 

அரும் பார்க்கு உறுதி செங்கோல் - அரிய உலகிற்கு நன்மை நல்ல ஆட்சி; 

செழும் படைக்கு உறுதி வேழம் - வளமிக்க படைக்கு நன்மை யானைப்படை; 

செல்வம் தனக்கு உறுதி பிள்ளைகள் - செல்வத்திற்கு நன்மை பிள்ளைகள்; 

நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்கள் ஆம் - நகரத்திற்கு நன்மை அங்கு வாழும் நல்லோர்களாகும்.


     (சத்தியம் (வடசொல்) - உண்மை. வித்வசனம் (வடசொல்) - புலவர் பெருமக்கள். உறுதி - நன்மை (உறுவது என்று பொருள்) - சர்ச்சனர் (வடசொல்) - நல்லோர்.


92. பகை கொள்ளத் தகாதவர்

 


"மன்னவர், அமைச்சர், துர்ச்சனர், கோளர், தூதரொடு

     மாறாத மர்மம் உடையோர்,

  வலுவர், கரு ணீகர்,மிகு பாகம்செய்து அன்னம்இடும்

     மடையர்,மந் திரவாதியர்,


சொன்னம் உடையோர் புலையர், உபதேசம் அதுசெய்வோர்

     சூழ்வயித் தியர், கவிதைகள்

  சொற்றிடும் புலவர் இவர் பதினைந்து பேரொடும்

     சொப்பனந் தனில் ஆகிலும்


நன்னெறி அறிந்தபேர் பகைசெய்தி டார்கள் இந்

     நானிலத்து என்பர் கண்டாய்!

  நாரியோர் பாகனே! வேதாக மம்பரவும்

     நம்பனே! அன்பர் நிதியே!


அன்னம்ஊர் பிரமனும் கண்ணனும் காணாத

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!"


இதன் பொருள் ---

நாரி ஓர் பாகனே - உமையொரு பங்கரே! 

வேத ஆகமம் பரவும் நண்பனே - மறையும் ஆகமமும் போற்றும் சிறப்பு உடையவரே!

அன்பர் நிதியே - அன்பரின் சேமப்பொருளே!, 

அன்னம் ஊர் பிரமனும் கண்ணனும் காணாத அண்ணலே - அன்னப் பறவையின் மேல் ஊர்ந்து வரும் நான்முகனும் திருமாலும் (முறை\யே திருமுடியும் திருவடியும்) காண இயலாத பெரியோனே!

அருமை மதவேள் -  அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!,  

மன்னர் - அரசர், அமைச்சர் - மந்திரிகள், துர்ச்சனர் - தீயோர், கோளர் - கோள் சொல்லுவோர், தூதரொடு - தூதர்களுடன், மாறாத மர்மம் உடையோர் - நீங்காத செற்றம் கொண்டவர்கள், வலுவர் - வலிமையுடையோர், கருணீகர் - கணக்கர், மிகு பாகம் செய்து அன்னம் இடும் மடையர் - சிறந்த சமையல் செய்து உணவிடும் சமையற்காரர், மந்திர வாதியர் - மந்திரஞ் செய்வோர் சொன்னம் உடையோர் - செல்வ மிக்கவர்கள், புலையர் - இழிந்தோர், உபதேசமது செய்வோர் - உபதேசியர், சூழ் வயித்தியர் - ஆராய்ச்சியுடைய மருத்துவர், கவிதைகள் சொற்றிடும் புலவர் - செய்யுள் இயற்றும் புலவர்கள், 

இவர் பதினைந்து பேரொடும் சொப்பனந்தனில் ஆகிலும் நன்னெறி அறிந்த பேர் இந்நானிலத்து பகை செய்திடார் - இவர்கள் பதினைவருடனும் கனவிலும் நல்ல நெறி அறிந்தவர்கள் இவ்வுலகில் பகை கொள்ளார், என்பர் - என்று பெரியோர் கூறுவர்.

      (நன்மை + நெறி - நன்னெறி, மடை - சமையல் வேலை, சோறு. மடையர் - சமையல் செய்வோர். உபதேசம் புரிவோர் - ஆன்மநெறி கற்பிக்கும் ஆசிரியர்.


50. இடன் அறிதல் - 03. ஆற்றாரும் அற்றி

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்


இடன் அறிதல்" என்பது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் மூன்றாம் திருக்குறளில், "ஏற்ற இடத்தைத் தெரிந்து, தம்மைப் பாதுகாத்துக்கொண்டு, தொழிலை மேற்கொண்டால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராக விளங்குவார்" என்கின்றார் நாயனார்.


திருக்குறளைக் காண்போம்...

"ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன் அறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

ஆற்றாரும் ஆற்றி அடுப --- வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர்,  

இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் --- அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின்.

('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல்,  பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலி இன்றியும் வெல்வர் என்பதாம்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

"காட்டு முயலும் கதக் கரியைக் கொல்லுமால்

தோட்டலர் நீர்க் கச்சியினுள், சோமேசா! --- நாட்டியிடின்

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்."

இதன்பொருள்---

சோமேசா! ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியராய் வெல்வர், இடன் அறிந்து - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, போற்றி - தம்மைக் காத்து, போற்றார்கண் செயின் - பகைவர்மாட்டு வினை செய்வாராயின் என்று,

நாட்டி இடின் - துணிந்து சொல்லுமிடத்து, தோடு அலர் நீர் கச்சியினுள் - இதழ்களையுடைய மலர்கள் பொருந்திய நீர்வளம் மிக்க காஞ்சி மாநகரில்,  காட்டு முயலும் - காட்டின்கண் வாழ்கின்ற முயலும், கதம் கரியை கொல்லும் - சினத்தையுடைய யானையை வருத்தியது ஆகலான் என்றவாறு.

காஞ்சியின்கண் உள்ள ஒரு சிறிய முயல், அத் தலவாசம் செய்யும் வலிமையினால், ஒரு யானையை வருத்தி ஓட்டிற்று. பின்வரும் பெரியபுராணப் பாடலைக் காண்க. 


"மன்னு கின்றஅத் திருநகர் வரைப்பில்

மண்ணில் மிக்கதுஓர் நன்மையி னாலே

துன்னும் யானையைத் தூற்றில்வாழ் முயல்முன்

துரக்க எய்திய தொலைவில்ஊக் கத்தால்

தன்நி லத்துநின்று அகற்றுதல் செய்யும்

தானம் அன்றியும் தனுஎழுந் தரணி

எந்நி லத்தினுங் காண்பரும் இறவாத்

தானம்என்று இவை இயல்பினில் உடைத்தால்."

இதன் பொருள் ---

நிலைபெற்ற அக்காஞ்சித் திருநகர் எல்லையில், இம்மண்ணில் மிக்கதோர் நன்மையினால் விளங்கிடும் பேற்றால், நெருங்கிக் கொலை புரியும் யானையைத் தூற்றில் (காடு அல்லது புதர்) வாழும் ஒரு முயல், தன் ஊக்கத்தால் அவ்யானையை ஓடிடச் செய்த இடமும், இறந்த உடம்புகள் மீளவும் உயிர் பெற்று எழுகின்ற ஓர் இடமும், எந்நிலத்திலும் காண்டற்கரிய இறவாத் தானம் என்ற இடமும் உள்ளன.

"வென்றி இபம் ஒன்று குறுமுயலுக்கு ஓடும் இடம் பார்த்து" என்னும் ஏகாம்பரநாதர் உலா அடிகளையும் காண்க.


50. இடன் அறிதல் - 02. முரண் சேர்ந்த

 


திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 50 -- இடன் அறிதல்

இடன் அறிதலாவது, ஒரு செயலைச் செய்தற்கு ஏற்ற வலியும், காலமும் அறிவதோடு, செயலைச் செய்தவதற்கு, தக்க இடத்தையும் அறிதல் வேண்டும் என்பது. அதாவது, வெற்றி கொள்வதற்கு ஏற்ற வலிமையினையும், தக்க காலத்தினையும் அறிந்து, பகைவர் மீது செல்ல எண்ணிய ஒருவன், அதற்கு ஏற்ற இடத்தையும் அறிந்து செல்லுதல் என்பது சொல்லப்பட்டது.

இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பகை உணர்ச்சியோடு கூடிய பகை வலிமைகள் கொண்டவர்க்கும், பாதுகாப்பான இடத்தைச் சேர்ந்து இருப்பது, பயன்கள் பலவற்றையும் தரும்" என்கின்றார் நாயனார். மிக்க வலிமை கொண்ட ஒருவனுக்கு அரண் முதலியவை எதற்கு என்பதற்கு இவ்வாறு கூறளி அருளினார் நாயனார்.

மொய்ம்பு --- வலிமை.

அரண் சேராது ஆகும் ஆக்கமும் இருத்தலால், "அரண் சேர்ந்த அக்கம்" என்றார். காப்பு இல்லாமல், தமது வலிமையினால் பகைவரை வளைத்துக் கொள்வதும், காப்போடு கூடி, பகைவரை வளைத்தலும் என இருவகை ஆகும்.

பிறரால் அழிக்கக் கூடாத பெரிய வலிமையை உடையவராக இருந்தாலும், பகைமேல் செல்லுகின்ற காலத்து, பாதுகாப்பான இடம் அவசியமாகும்.


திருக்குறளைக் காண்போம்...

"முரண்சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும், அரண் சேர்ந்து ஆம்

ஆக்கம் பலவும் தரும்."


இதற்குப் பரிமேலழகர் உரை ---

முரண் சேர்ந்த மொய்ம்பின் அவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், 

அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும்.

(மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும், இது பகைமேல் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை --- சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின், ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன. பகைவரால் தமக்கு நலிவின்மையும்,  தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.) 


பின்வரும் பாடல்,  இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காண்க ---

"முரண் புகு தீவினை முடித்த முன்னவன்

கரண் புகு சூழலே சூழ, காண்பது ஓர்

அரண் பிறிது இல் என, அருளின் வேலையைச்

சரண் புகுந்தனன் என முன்னம் சாற்றினான்."   --- கம்பராமாயணம், வீடணன் அடைக்கலப்படலம்.

இதன் பொருள் ---

முரண் புகு தீவினை முடித்த முன்னவன் - அறத்துக்கு மாறானதாகச் சொல்லப்படும் தீய செயலைச் செய்து முடித்த  அண்ணனாகிய இராவணன்; கரண் புகு சூழலே சூழ - மனம் போன போக்கிலேயே போக (அதைப் பார்த்த வீடணன்); காண்பதோர் அரண் பிறிதில் என - நமக்குப் பாதுகாப்பு வேறு எதுவும் காணப்படவில்லை என்று;  அருளின் வேலையை - அருட்கடலாக விளங்கும் இராமபிரானை;  சரண் புகுந்தனன் - அடைக்கலம் அடையப் புகுந்தான்;  என முன்னம் சாற்றினான் - என்று முதலிலேயே கூறினான். 

முரண் - மாறுபாடு (அறத்துக்கு மாறானது) தீவினை - தீய செயல் - சீதாபிராட்டியை வஞ்சித்துக் கவர்ந்து வந்தது சிறை வைத்து போன்ற தீய செயல்கள். கரண் - அந்தக்கரணம். இங்கே மனம். முரண்பட்ட தீவினை செய்த அண்ணன்,  மனம் போன போக்கில் செல்வதால், இவனுடன் வாழ்தல்  ஏற்றதல்ல. இராமபிரானைத் தவிர புகலிடம் (காப்பான இடம்) வேறில்லை. எனவே, அருட்கடலான இராமனைச் சரண் அடைய வந்துள்ளான்.


79. துன்பம் வந்தாலும் பயன் தருபவை

  “ஆறுதண் ணீர்வற்றி விட்டாலும் ஊற்றுநீர்      அமுதபா னம்கொடுக்கும் ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும்      அப்போதும் உதவிசெய்வன் கூறுமதி தேய்...