52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில் தானே உரிமை உடையவனாய் முயல்கின்ற செயலை உடையவனை வேறாக நினைப்பவனை விட்டுத் திருமகள் நீங்குவாள்" என்கின்றார் நாயனார்.

தொழிலைச் செய்யப் புகுந்த ஒருவன், அந்தச் செயலைத் தன்னிடத்தே ஒப்படைத்தவனுக்கு அன்னியன் போல் இல்லாமல், சுற்றத்தவர் போல் உரிமையுடன் செய்து வருவதைக் கண்டவர்கள், பொறாமை காரணமாக மாறுப்பட்ட செய்திகளைச் சொன்னால், அவற்றைக் கேட்டு மனம் மாறுபடக் கூடாது. அப்படிச் செய்தால், கோள் சொல்வோர்க்கு இடம் தருபவனிடத்தில் தொழில் புரியத் தகாது என்று எண்ணி, தொழில் செய்யப் புகுந்தவன், தொழிலை விட்டு நீங்குவான். அவ்வாறு நீங்கினால், அவனிடத்தில் தொழில் செய்வார் வேறு ஒருவரும் வரமாட்டார்கள். அதனால் வருவாய் குறைந்து விடும். அதனால், முன்னரே இருந்த செல்வமும் கரைந்து போகும்.


இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“வினைக்கண் வினை உடையான் கேண்மை, வேறாக

நினைப்பானை நீங்கும் திரு.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

வினைக்கண் வினை உடையான் கேண்மை --- எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ் வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, 

வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் --- அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும்.

(கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர் செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம் கெடும் என்பது கருத்து.)


பின் வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...

“இன்னா செயினும் விடற்பாலர் அல்லாரைப்

பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும்; --பொன்னொடு

நல்லிற் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம்

இல்லத்தில் ஆக்குத லால்.” --- நாலடியார்.

இத்ன பொருள் ---

நண்பனாக உள்ள ஒருவன் தனக்குத் துன்பமே செய்தாலும்,  விட்டு ஒதுக்கி விடாமல், தனது இனிய நண்பரைப் பொன்னைப் போலப் போற்றிப் பாதுகாத்து வருதல் வேண்டும். பொன்னையும் பொருளையும் அழிக்கின்றது நெருப்புதான். என்றாலும், அதை அன்றாடம் நமது வீட்டில் உணவு சமைக்க மூட்டுகின்றோம். அல்லவா? அதுபோலத்தான் தவறு செய்தாலும் நண்பரைப் பொறுத்துக் கொள்ளவேண்டும்.

நண்பர் குறைகளைத் தமது பெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப் போற்றி ஒழுகல் வேண்டும்.


“இன்னா செயினும் விடுதற் கரியாரைத்

துன்னாத் துறத்தல் தகுவதோ? - துன்னருஞ்சீர்

விண்குத்து நீள்வரை வெற்ப! களைபவோ

கண்குத்திற்று என்றுதம் கை. ---  நாலடியார்.

இதன் பொருள் ---

அணுகுதற்கரிய சிறப்பினை உடைய, வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களை உடைய மலைநாடனே! தவறுதலாகத் தம் கண்ணைக் குத்திற்று என்று தமது கையை மக்கள் வெட்டி நீக்கி விடுவார்களோ? இல்லை. அதுபோலத்தான், அறியாமையால் தீமைகள் செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நட்பினரை நெருங்காமல் கைவிட்டு விடுதல் தகுந்தது ஆகாது.

தம்மைச் சேர்ந்தோர் ஒருகால் தீமைகள் செய்யினும் அவரை உடனே கைவிட்டு விடாமல் அணைத்துக் கொள்ளல் வேண்டும்.


52. தெரிந்து வினையாடல் - 07 இதனை இதனால்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஏழாம் திருக்குறளில், "இந்தச் சாதனத்தால், இந்தச் செயலை, இவன் முடிக்க வல்லவன் என்று கூறுபடுத்தி ஆராய்ந்து, மூன்று கூறுகளும் ஒத்து இருந்து போது, அந்தச் செயலை அவனிடத்தில் ஒப்படைக்கவேண்டும்" என்கின்றார் நாயனார்.

ஒருவனுக்குத் துணைவரும் பொருளும் இல்லாத காலத்து, எடுத்த காரியம் முடியாது. ஆதலால், தொழிலைச் செய்ய வேண்டியவனுக்கு அமைய உள்ள துணைவரை முதலில் நோக்க வேண்டும், பின்னர் தொழிலைச் செய்வதற்கு உரிய பொருள் நிலையை நோக்க வேண்டும். இரண்டும் ஒத்து வந்தாலும், தொழிலை ஒருவன் விடாது முடிக்கும் ஆற்றல் உடையவனாக இருத்தல் வேண்டும்.


இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து,

அதனை அவன்கண் விடல்.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து --- இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்க வல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து, 

அதனை அவன்கண் விடல் --- மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.

(கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)


இத் திருக்குறளுக்கு விளக்கமாக, கமலை வெள்ளியம்பலவாண முனிவர் பாடி அருளிய, "முதுமொழி மேல் வைப்பு" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“ஈசன் குண்டோதர போ என்று அருளும் குன்றுபுரை

சோறுகறி உண்டு தொலைப்பதற்கு, நாடி

இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து,

அதனை அவன்கண் விடல்.”

இதன் பொருள் ---

குன்று புரை சோறு கறி உண்டு தொலைப்பதற்கு, 'குண்டோதர! போ' என்று ஈசன் அருளும் எனக் கூட்டுக. இந்த வரலாறு திருவிளையாடல் புராணத்தில் குண்டோதரனுக்கு அன்னம் இட்ட படலத்தில் உள்ளது.

குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம், சிவபெருமானது அறுபத்துநான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய “திருவிளையாடல் புராணம்” என்னும் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற எழாவது படலம் ஆகும். 

மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண ரநிகழ்வுக்குப் பிறகு இலட்சக்கணக்கான மக்கள் சாப்பிட்ட பின்னும் மடப்பள்ளியில் உணவு அப்படியே இருந்தது. மணமகளான மீனாட்சி அம்மையிடம் அரண்மனை ஆட்கள் இதைப் பற்றி கூறினார்கள். மீனாட்சி அம்மைக்கு, இத்தனை மக்கள் உண்டபின்னும் தன் அரண்மனை உணவு தீராமல் இருப்பது கண்டு, கர்வம் வந்தது. சுந்தரேசுவரரிடம் மணமகன் வீட்டில் உணவு அருந்தாமல் யாரேனும் உள்ளார்களா? என்று மீனாட்சி அம்மை வினவினார்.

சுந்தரேசுவரர் தனது பூதகணங்களை அழைத்து உணரவு அருந்தாதவர் யாரென வினவினார். குண்டோதரன் என்ற பூதம் மட்டும் திருமண வேலைகளில் மூழ்கியிருந்தமையால் உணவருந்தாமல் இருந்தார். அதை அறிந்த சிவபெருமான் குண்டோதரனை உணவருந்தி விட்டு வரும்படி கூறினார். அத்துடன் வடவைத்தீ (வடவாமுகாக்கினி) எனும் பசியை உண்டாக்கினார்.

மடைப்பள்ளியில் உள்ள அனைத்து உணவுகளையும் குண்டோதரன் உண்டார். அதன் பிறகும் பசி அடங்கவில்லை. மீண்டும் சமையல் செய்து உணவிட்டனர், அதையும் குண்டோதரன் உண்டார். இதையறிந்த மீனாட்சி அம்மை, சுந்தரேசுவரரின் திருவிளையாடல் இது என்பதை அறிந்து, ஈசனைச் சரணடைந்தார்.

குண்டோதரனின் பசியை நீக்க சுந்தரர் அன்னப்பூரணியை அழைத்தார். குண்டோதரனின் பசி அடங்கியது, ஆனால், நீர் நிலைகள் அனைத்திலும் உள்ள நீரைக் குடித்தாலும், தாகம் மட்டும் அடங்கவில்லை. இதனால் சிவபெருமான் தனது சடைமுடியில் இருந்த கங்கையை குண்டோதரனின் தாகம் தீர்க்குமாறு கூறினார். மதுரையில் நதியாக ஓடிய கங்கையை வைகை என்று அழைக்கின்றனர். 


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, பிறைசை சாந்தக் கவிராயர் பாடி அருளிய, நீதிசூடாமணி என்கின்ற "இரங்கேச வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“சல்லியனைத் தேருக்குச் சாரதியாய்க் கொண்டதனால்

எல்லாவன்சேய் தோற்றான் இரங்கேசா --- சொல்லில்

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.”

இதன் பொருள் ---  

இரங்கேசா - திருவரங்கநாதக் கடவுளே! சல்லியன் - சல்லியனை, எல்லவன் சேய் - சூரியகுமாரனாகிய கர்ணன், சாரதியாய் கொண்டதனால் - தனது தேர்ப் பாகனாகக் கொண்டதனால், தோற்றான் - பாரதப் போரில் தோற்று மடிந்து போனான்,  (ஆகையால், இது) சொல்லில் - எடுத்துச் சொன்னால், இதனை - இத் தொழிலை, இதனால் - இக் கருவியால், இவன் முடிக்கும் என்று - இன்னவன் முடிக்க்க் கூடியவன் என்று, ஆய்ந்து - ஆராய்ந்து (கூறுபடுத்து இம் மூன்றும் தம்முள் ஒத்திருந்தவிடத்து), அதனை - அத் தொழிலை, அவன் கண் விடல் - அவனிடத்தில் (அரசன்) விடக் கடவன் (என்பதை விளக்குகின்றது).

கருத்துரை --- திறம் தெரிந்து வேலையிட வேண்டும்.

விளக்கவுரை --- இப்படித் திறம் தெரியாமல் சல்லியனைக் கர்ணனுக்குத் தேர்ப்பாகன் ஆக்கியதால் துரியோதனன் அவமானம் அடைந்ததும் அன்றிக் கர்ணனும் மாண்டு ஒழிந்தான்.  துரியோதனன் எண்ணியது எல்லாம் வேறாக ஆனது. அருச்சுனன் தேர்க்கு கண்ணன் சாரதியாய் இருந்தான். ஆகையால், அவனோடு சண்டை செய்யும் கர்ணனுடைய தேருக்குச் சாரதியாய் இருக்கச் சல்லியனே தகுதியானவன் என்று தப்பான எண்ணம் கொண்டான். சல்லியன் ஆகாரபுஷ்டியாய், பேருக்கு அரசனாய் இருந்தானே தவிர, போருக்கும் தேருக்கும் வல்லன் அல்லன் என்று யாருக்கும் தெரியும். அப்படி இருந்தும் அதைக் கொஞ்சமேனும் உணராமல், சாம பேத தான தண்டம் என்னும் சதுர்வித உபாயங்களில் வல்லவனாகிய பார்த்தசாரதிக்கு எதிராக, சாரதியாகச் சல்லியனை நியமித்த துரியோதனனது அறிவீனம் வியக்கற்பாலது. இப்படியே அவன் பாரதப் போரில், இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராயாமல், அதனை அவன்கண் விட்டுப் பலமுறை தோற்று, அவமானமடைந்து மாண்டு இகழ்ச்சிக்கு ஆளானான்.


அடுத்து,இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் பச்சைக் கந்தையர் மடத்து சென்ன மல்லையர் பாடி அருளிய "சிவசிவ வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“தசமுகனை ராகவன் நம் சானகியைக் கொண்டே

சிதையவதைத் தான், சிவசிவா! --- இதயத்து

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து

அதனை அவன்கண் விடல்.”

இரகுகுல உத்தமனான இராமபிரான் தனது சிற்றன்னையாகிய கைகேசி சூழ்வினையால் நாடிழந்து, காடடைந்து நின்ற நிலையில், இலக்குமணனால் உறுப்பு அறுப்புண்ட சூர்ப்பணகை என்னும் அரக்கி, சீதையை இராமனிடம் இருந்து பிரிக்க எண்ணி, தன் தமையனாகிய இராவணனிடம் போய்ச் சீதையின் பேரழகைப் பலபடி வருணிக்க, அவ் வருணனையைக் கேட்ட இராவணன், சீதைபால் மோகம் கொண்டு சந்நியாச வேடத்தோடும் சீதராமலட்சுமணர்கள் இருந்த பஞ்சவடியை அடைந்து தனது மாமனாகிய மாரீசனைப் பொன்மானாக அனுப்பி, இராமலக்குமணர்களைப் பிரித்துச் சீதையை பர்ணசாலையொடு பெயர்த்துக் கொணர்ந்து, இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைத்துத் தன் எண்ணம் முடிவுறாது நிற்க, இராமன் சுக்கிரீவனது நட்புப் பெற்று, அனுமானை அனுப்பி, சீதை இலங்கையில் சிறை இருந்து வருந்துவது உணர்ந்து, வானர வீரர்களோடு திருவணை கட்டிக் கடலைத் தாண்டி இலங்கை சேர்ந்து அரக்கர் யாவரையும் மடித்து, முடிவில் இராவணனையும் தன் அம்பிற்கு இலக்காக்கினான்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, "திருப்புல்லாணி மாலை" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

"அன்று ஆய்ந்து அவர்சொல் இதனை இதனால் இவன்முடிக்கும்

என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல் எனலால் கனகக்

குன்றுஆர்ந்த கொங்கைச் சனகியைத் தேடக் குறித்து, நல்கும்

ஒன்றாம் பொன் ஆழியை மாருதிபால் புல்லையூர் முகிலே".

இதன் பொருள் ---

கனகக் குன்று ஆர்த்த - பொன்மலை போலப் பொருந்திய.  பொன்னாழி - பொன்னாலாகிய சூளாமணி.  

இச் செய்யுளில் இராமபிரான் அநுமன்தான் காரியத்தை முடிக்கக் கூடியவன் என்று அவனிடம் சூளாமணியைக் கொடுத்தனுப்பிய செய்தி குறிக்கப்படுகிறது.


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை காணலாம்...


“உற்றான் உறாஅன் எனல்வேண்டா ஒண்பொருளைக்

கற்றானை நோக்கியே கைவிடுக்க, - கற்றான்

கிழவனுரை கேட்கும் கேளான் எனினும்

இழவு அன்று எருது உண்ட உப்பு.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

உற்றான் உறாஅன் எனல் வேண்டா - தமக்கு உறவினன் உறவு அல்லாதவன் என்று ஆராய வேண்டுவதில்லை, ஒண்பொருளை கற்றானை நோக்கி கைவிடுக்க - காரியம் செய்யும் பொருட்டுக் கொடுக்கும் ஒள்ளிய பொருளைக் கல்வியறிவால் சிறந்தானை ஆராய்ந்து அவனிடம் கொடுக்க, கற்றான் கிழவன் உரை கேட்கும் - கல்வியறிவால் சிறந்தான் தனக்குப் பொருள் கொடுத்துத உதவியவன் சொற்களைக் கேட்டு நடப்பான், கேளான் எனினும் - கேளாது ஒழிவானாயினும், எருது உண்ட உப்பு இழவு அன்று - காளை உண்ட உணவு நட்டம் ஆகாமை போலப் பயன்கொடாது ஒழியான் என்பதாம்.

நமக்கு முடியவேண்டிய செயலையும் அதற்காக நாம் கொடுக்க இருக்கும் பொருளையும் கல்வியறிவு உடையானைத் தேடிக் கொடுக்கவேண்டும் என்பதாம்.

கொள் முதலியவற்றை உண்பிப்பது நோயைத் தவிர்த்து எருதுக்கு உரம் செய்வதால், எருது சலிப்பின்றித் தலைவனுக்கு வேலைசெய்யும். அதுபோல் கற்றவன் காரியம் செய்யும்போது அவனுக்கு ஈந்த பொருள் நட்டம் ஆகாமல் தலைவனுக்கு இலாபத்தையே உண்டாக்கும்.


52. தெரிந்து வினையாடல் - 06. செய்வானை நாடி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஆறாம் திருக்குறளில், "செயலைச் செய்பவனை ஆராய்ந்து, செய்ய வேண்டிய செயலை ஆராய்ந்து, செய்யும் காலத்தோடு பொருந்த உணர்ந்து கொண்டு, செயலைச் செய்தல் வேண்டும்" என்கின்றார் நாயனார்.

செய்பவனது இலக்கணத்தையும், செய்ய எண்ணிய செயலையும் நன்றாக ஆராய்ந்து, காலமும் கருதிச் செய்யவேண்டும். இவ்வித தன்மையை உடையவன், இந்தச் செயலைச் செய்வானாயின், இந்தக் காலத்தில், இந்த செயல் முடியும் என்று ஆராய்ந்து செய்தல் வேண்டும்.

இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“செய்வானை நாடி, வினை நாடி, காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.“

இதற்குப் பரிமேலழகர் உரை ---

செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, 

வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, 

காலத்தொடு எய்த உணர்ந்து செயல் --- பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க.

(செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.)


    பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...


“பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்துஇல்லார்

உண்டார் அடிசிலே தோழரிற் - கொண்டாராய்

யாக்கைக்குத் தக்கவறி வில்லார்க் காப்படுப்பின்

காக்கைக்குக் காப்படுத்த சோறு.” --- சிறுபஞ்சமூலம்.


இதன் பொருள் ---


பண்டாரம் - பண்டாரத்துக்கு, பல்கணக்கு - பல கணக்குத் தொழிலுக்கும், கண்காணி - (பொருள்களைத் திருடு போகாமல் காக்கும்) மேற்பார்வைத் தொழிலுக்கும், இல்லார் - இல்லக் கிழத்திகளின் காவலுக்கும், பாத்து - பலபேர் பங்கிட்டு, உண்டு ஆர் - உண்டு வயிறு நிறைகின்ற, அடிசில் - உணவின் காவலுக்கும், யாக்கைக்கு - உடம்பு எடுத்ததற்கு, தக்க - தகுதியான அறிவு இல்லார் - மேலான அறிவில்லாதவர்களை, தோழனின் - தங்கள் நண்பர்களைப்போல, கொண்டாராய் --- மனத்துள் கொண்டவர்களாய், கா – காவல் தொழிலுக்கு, படுப்பின் - ஏற்படுத்தினால், (அவையெல்லாம் அவர்களிடத்து) காக்கைக்கு - காகத்துக்கு, காப்பு அடுத்த - தன் காவலில் சேர்ந்த, சோறு – சோறு போல ஆகும். (அதாவது அச் சோற்றைப் போலக் காவலாலேயே களவுபோம்.)


பண்டாரத்தினையும், பல் கணக்கினையும், கண்காணியையும், தனது இல்லத்தில் வாழும் மங்கையரையும், தனக்கு ஆக்கும் உணவினையும் பகுத்து, மக்கள் தன்மைக்குத் தக்க அறிவில்லாதாரையும் தன் தோழரைப் போலக் கொண்டு தேறிக் காக்காவிட்டால், அக்காவலானது, காக்கையைச் சோறு காக்க விட்டதனோடு ஒக்கும்.


“விட்டுக் கருமம் செயவைத்த பின்னரும்

முட்டா தவரை வியங்கொளல் வேண்டுமால்

தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும்

தட்டாமல் செல்லா துளி.” --- பழமொழி நானூறு.


இதன் பொருள் ---


தொட்டக்கால் மாழ்கும் தளிர்மேலே நிற்பினும் - தொட்ட அளவில் மெலியும் தளிரின் மேலே நின்றதாயினும், உளி தட்டாமல் செல்லாது - உளியானது தன்னை வேறொருவன் தட்டாமல் அத் தளிரை அறுத்துச் செல்லாது. (அதுபோல), கருமம் விட்டுச் செய வைத்த பின்னரும் - காரியத்தின் பொறுப்பை அவர்களிடத்தே விட்டு அவர்களையே செய்யுமாறு செய்த பின்னரும், முட்டாது அவரை வியங்கொளல் வேண்டும் - இடையீடின்றி அவரை ஏவி ஆராய்தல் வேண்டும்.


நமது காரியத்தைப் பொறுப்பாக ஏற்றுக்கொண்டு ஒருவர் செய்வாரேயாயினும், இத்துடன் தமது பொறுப்புக் கழிந்தது என்று இராமல், அவரை அடிக்கடிக் கண்காணித்து ஊக்கப்படுத்துதல் வேண்டும்.


52. தெரிந்து வினையாடல் - 05. அறிந்தாற்றி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் ஐந்தாம் திருக்குறளில், "ஒரு தொழிலைச் செய்யும் உபாயங்களை அறிந்து செய்யும்போது, தொழிலைச் செய்வதாலும், அதற்கு உண்டாகும் இடையூறுகளாலும் வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு செய்பவனை அல்லாமல், செய்யத் தகுந்தவன் என்று பிறரைக் கொள்ளுதல் கூடாது" என்கின்றார் நாயனார்.

ஒரு தொழிலைச் செய்யும் போது, அதனால் துன்பம் வருமாயினும், இடையூறு வருமாயினும் பொறுத்துக் கொண்டு, எடுத்த காரியத்தை முடித்துக் காட்டவேண்டும். வேண்டியவன் என்னும் ஒரு காரணத்தால், ஒரு தொழிலை அறிவும் ஆற்றலும் இல்லாத ஒருவனிடம் ஒப்படைத்தால், தொழில் முடியாததோடு, கேடும் வரும்.

இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்,

“அறிந்து ஆற்றிச் செய்கிற்பார்க்கு அல்லால், வினைதான்

சிறந்தான் என்று ஏவல் பாற்று அன்று.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் --- செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானை அல்லது, 

வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று --- வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று.

('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.)


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...

“ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன்இனிதே;

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வு இனிதே;

ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வு இனியது இல்.” --- இனியவை நாற்பது.

இதன் பொருள் ---

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே - (ஒரு தொழிலைச்) செய்ய மாட்டாதானை, அதனைச் செய் என, வருத்தாமை மிகவும் இனிது. கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வு இனிதே - யமனது வருகையின் நிச்சயத்தை சிந்தித்து நினைத்து வாழ்வது இனிது. ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வு இனியது இல் - செல்வம் அழிந்தாலும், பாவச் சொற்களைச் சொல்லாமைக்கு ஏதுவாகிய , தெளிவினும் தெளிவு பிறிதொன்றில்லை.


“தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் திறன் இலா

முற்றலை நாடிக் கருமஞ் செயவையார்;

கற்று ஒன்று அறிந்து கசடு அற்ற காலையும்

மற்றதன் பால் தேம்பல் நன்று.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

தெற்ற அறிவுடையார்க்கு அல்லால் - தெளிவாக அறிந்த அறிவு உடையாரைத் தேடி வைப்பது அல்லாமல், திறன் இலா முற்றலை - திறமையில்லாத வயது முதிர்ந்தவர்களை, நாடி கருமம் செய வையார் - ஆராய்ந்து செயலைச் செய்ய வைக்க மாட்டார்கள். (காரியம் முடியவேண்டுமென்ற கருத்து உடையார்), ஒன்று கற்று அறிந்து கசடு அற்ற காலையும் - ஒரு பொருளைக் கற்றறிந்து கல்வியின்கண் குற்றமில்லாது ஒருவர் விளங்கிய இடத்தும், மற்று அதன்பால் – குணம் இல்லையாயின் அவரிடத்துக் கொண்ட நட்பு, தேம்பல் நன்று - மெலிதலே நல்லது.

காரியம் முடியவேண்டும் என்று நினைப்பவர்கள் சிறந்த அறிவு பெற்றவர்களையே அதனைச் செய்ய நிறுத்துதல் வேண்டும்.


“தம்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன

வெந்தொழில ராய வெகுளிகட்குக் கூடுமோ?

மைந்திறை கொண்ட மலைமார்ப! ஆகுமோ?

நந்துழுத எல்லாம் கணக்கு.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மைந்து இறைகொண்ட மலைமார்ப - வலிமை தங்கிய மலைபோன்ற மார்பை உடையவனே! நந்து உழுத எல்லாம் கணக்கு ஆகுமோ - நத்தையால் கீறப்பட்டன யாவும் எழுத்து ஆகுமோ? (ஆகா) (அதுபோல), தம்தொழில் ஆற்றும் தகைமையார் - தம்முடைய தொழில் திறமையுற நடாத்தும் தன்மை உடையார், செய்வன - செய்கின்ற செயல்கள், வெம் தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ - கொடுஞ்செயலை உடையாராகிய சினம் உடையவர்களுக்குச் செய்தல் இயலுமோ? (இயலாது).

மேன்மக்கள் செய்யும் காரியங்கள் கீழ்மக்களுக்குச் செய்ய இயலா.


52. தெரிந்து வினையாடல் - 04. எனைவகையான்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் நான்காம் திருக்குறளில், "எல்லா வகையாலும் ஆராய்ந்து தெளிந்து தொழிலை வைத்தாலும், தொழிலின் இயல்பினாலே வேறுபட்டு விளங்குகின்ற மக்கள் பலர் ஆவார்" என்கின்றார் நாயனார்.

தம்மை ஒரு பதவியில் வைத்த பிறகு, அந்தப் பதவியின் பெருமையால், பலர் தம்மை மறந்தவராகவும், மக்களைத் துன்புறுத்துபவராகவும், கூடுமானால் தமது மேலதிகாரிக்கே கேடு விளைவிப்பவராகவும் உள்ளவர் பலர் உலகத்தில் உண்டு. எனவே, எவ்வளவுதான் ஆராய்ந்து வைத்தாலும், ஆசையின் கொடுமையால், தமது நிலையை மறந்து, கெடுகின்ற மக்கள் பலர் உலகத்தில் உள்ளனர் என்பது அறியப்படும்.

திருக்குறளைக் காண்போம்...

"எனைவகையான் தேறியக் கண்ணும், வினைவகையான்

வேறுஆகும் மாந்தர் பலர்."

இதற்குப் பரிமேலழகர் உரை ---

எனை வகையான் தேறியக் கண்ணும் --- எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், 

வினை வகையான் வேறாகும் மாந்தர் பலர் --- அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.

(கட்டியங்காரன் போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)

இத் திருக்குறளுக்கு விளக்கமாக, திராவிட மாபாடியக் கர்த்தரான, மாதவச் சிவஞான யோகிகள் பாடி அருளிய, "சோமேசர் முதுமொழி வெண்பா" என்னும் நூலில் வரும் ஒரு பாடல்...

“தேசிகனாக் கொண்ட சுரர்இறைக்குத் தீங்குஇழைத்தான்

தூசுஆர் துவட்டாச்சேய் சோமேசா --- பேசில்

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறுஆகும் மாந்தர் பலர்.”

இதன் பொருள் ---

சோமேசா!  பேசில் - சொல்லுமிடத்து, எனை வகையால் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினை வைத்த பின்னும்,  வினைவகையான் வேறு ஆகும் மாந்தர் பலர் - அவ்வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்,

தூசு ஆர் - குற்றங்கள் நிறைந்த,  துவட்டா சேய் - அசுரர் குலத்தில் தோன்றிய துவட்டை என்பவன் பெற்ற புதல்வன் ஆகிய விச்சுவஉருவன் என்பான், தேசிகன் ஆ கொண்ட தன்னைக் குருவாக ஏற்றுக் கொண்ட, சுரர் இறைக்கு - தேவேந்திரனுக்கு, தீங்கு இழைத்தான் - தீமையான வேள்வியைச் செய்தான் ஆகலான் என்றவாறு.

பதவி மனிதன் பண்பை மாற்றிவிடும் என்பது அறியத் தக்கது. 

"அனைய தொல் குரவற் காணும் அளவுநீ துவட்டா ஈன்ற

தனையன் முச் சென்னி உள்ளான் தானவர் குலத்தில் வந்தும்

வினையினால் அறிவால் மேலான் விச்சுவ வுருவன் என்னும்

இனையனைக் குருவாக் கோடி என்னலும் அதற்கு நேர்ந்தான்."


"அழலவிர்ந் தனைய செங்கேழ் அடுக்கிதழ் மளரி வாழ்க்கைத்

தொழுதகு செம்மல் தன்னைத் தொழுதுமீண் டகன்று நீங்கா

விழைதரு காதல் கூர விச்சுவ உருவன் தன்னை

வழிபடு குருவாக் கொண்டான் மலர்மகன் சூழ்ச்சி தேறான்."


"கைதவக் குரவன் மாயம் கருதிலன் வேள்வி ஒன்று

செய்திடல் அடிகல் என்னத் தேவர்கட்கு ஆக்கம் கூறி

வெய்தழல் வளர்ப்பான் உள்ளம் வேறுபட்டு அவுணர்க் கெல்லாம்

உய்திறம் நினைந்து வேட்டான் தனக்குமேல் உறுவது ஒரான்."

என, திருவிளையாடல் புராணத்தில், இந்திரன்பழி தீர்த்த படலத்தில் வரும் பாடல்களைக் காண்க.

கிரேதயுகம் ஒன்றில் இந்திரன் அரியணையில் வீற்றிருந்து அரம்பையர் ஆடலிலும் பாடலிலும் மனத்தைச் செலுத்திக் களித்து இருக்கும்போது, தன் குருவாகிய பிரகஸ்பதி அங்கு வரக் களிமயக்கினால் அவரை வழிபடாது இருந்தான். அது கண்டு பிரகஸ்பதி அங்கு நில்லாது விரைந்து திரும்பிச் சென்றார்.  இந்திரனுடைய செல்வம் குன்றத் தொடங்கியது.  இது, குருவை வழிபடாமையால் வந்த கேடு என்று அறிந்து, அவன் அவரை எங்கெங்கும் தேடினான். ஓரிடத்தும் கண்டானில்லை. அதனால் சத்தியலோகம் சென்று நான்முகனுக்கு நிகழ்ந்த செய்தியைக் கூற, அவன் வஞ்சனையாக,  "உனது குருவை நீ காணும் மட்டும் துவட்டா என்னும் அசரனது மகனாகிய விச்சுவவுருவனைக் குருவாகக் கொள்க" என்றான். அவ்வாறே அவ் விச்சவவுருவனைக் குருவாகக் கொண்டு ஒரு வேள்வி இயற்றிய அளவில், அவன் அசுரர்க்கு நன்மையும், தேவர்க்குத் தீமையும் உண்டாக நினைந்து, அதனைச் செய்ய அதனை அறிந்த இந்திரன் அவனை வச்சிராயுதத்தால் தாக்கினான். அப்போது விச்சுவவுருவனுடைய மூன்று தலைகளும் மூன்று பறவைகளாய்ப் பறந்து சென்றன. அப்பொழுதே பிரமபாவம் இந்திரனைப் பற்றியது. தேவர்கள் அதனைப் பகிர்ந்து மண், மகளிர், நீர், மரம் இவற்றிற்குக் கொடுத்தனர். அது மண்ணினிடம் உவராகியும், மகளிரிடம் பூப்பாகியும், நீரினிடம் நுரையாகியும், மரத்தினிடம் பயின் (பிசின்) ஆகிக் கழிய, அத்தேவர்கள் அதற்கு மாறாக மண் அகழினும் தூர்ந்து வடு நீங்கவும், மகளிர் மகப் பெறும் அளவும் நாயகனோடு இன்பம் நுகரவும், நீர் இறைக்கும் தோறும் ஊறி நிறையவும், மரம் வெட்டும்தோறும் தளிர்த்து நிற்கவும் நலம் உதவினார்கள்.


அடுத்து, இத் திருக்குறளுக்கு விளக்கமாக, சிதம்பரம் ஈசானிய மடத்து இராமலிங்க சுவாமிகள் பாடி அருளிய, "முருகேசர் முதுநெறி வெண்பா" என்னும் நூலில் இருந்து ஒரு பாடல்...

“காண்டல் இன்றிச் சச்சந்தன் கட்டியங்காரற்கு அரசை

மூண்டு அளித்து மாண்டான், முருகேசா! --- வேண்டி

எனைவகையால் தேறியக் கண்ணும் வினைவகையால்

வேறுஆகும் மாந்தர் பலர்.”

இதன் பொருள் ---

முருகேசா - முருகப் பெருமானே, சச்சந்தன் - சச்சந்தன் என்பவன், காண்டல் இன்றி - நன்கு ஆராய்ந்து கொள்ளாமல், கட்டியங்காரற்கு - கட்டியங்காரன் என்பவனுக்கு, அரசை - தன்னுடைய அரசாட்சியை, மூண்டு அளித்து - அதிகமான அன்பு கொண்டு கொடுத்து, மாண்டான் - இறுதியில் இறந்து ஒழிந்தான்.  வேண்டி - விரும்பி, எனை வகையால் தேறியக் கண்ணும் - எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும், வினை வகையால் - காரியத்தை மேற்கொண்டு செய்யும்பொழுது, வேறாகும் மாந்தர் பலர் – மனம் வேறுபட்டுத் திரிந்து போகும் மக்கள் பலர் உலகத்திலே இருக்கிறார்கள்.

சச்சந்தன் கட்டியங்காரனுடைய உண்மை நிலையை உணர்ந்து கொள்ளாமல், அரசை அவனிடம் கொடுத்து, இறுதியில் மாண்டு ஒழிந்தான். எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்தாலும், பிறகு காரியத்தை மேற்கொண்டு செய்யுங்கால் மனம் வேறுபட்டுத் திரிந்து போகின்ற மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் என்பதாம்.

சச்சந்தன் கதை

ஏமாங்கத நாட்டிலே இராசமாபுரத்திலே சச்சந்தன் என்னும் அரசன் ஒருவன் இருந்தான். அவன் விதேய நாட்டு அரசனாகிய சீதத்தன் மகள் விசயை என்பவளை மணந்து வாழ்க்கை நடத்தினான். எப்பொழுதும் விசயையினுடைய இன்பத்திலே திளைக்கவேண்டும் என்னும் அவா அவனுக்கு அளவு இல்லாது எழுந்தமையின், தன்னுடைய அரசாட்சியைக் கட்டியங்காரன் என்னும் பொல்லாத அமைச்சனிடத்திலே ஒப்புவித்தான்.  அவனுடைய குணநலன்களை அரசன் ஆராய்ந்து அறிந்து கொள்ளவும் இல்லை. அவ்வாறு ஒப்புவித்தால் குற்றம் உண்டாகும் எனப் பிற அமைச்சர் கூறிய அறிவுரைகளையும் அரசன் ஏற்கவில்லை. மனைவியோடு மன்னன் இன்புற்று இருக்குங்கால், அக் கட்டியங்காரனால் எதிர்க்கப்பட்டு அவனை வெல்லும் ஆற்றல் இல்லாமையால் மடிந்து ஒழிந்தான்.


பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளமை அறியலாம்...

“காட்டிக் கருமம் கயவர்மேல் வைத்தவர்

ஆக்குவர் ஆற்றஎமக்கு என்றே அமர்ந்திருத்தல்,

மாப்புரை நோக்கின் மயில்அன்னாய்! பூசையைக்

காப்பிடுதல் புன்மீன் தலை.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மா புரை நோக்கின் மயில் அன்னாய் - மாவடுவை ஒத்த கண்ணையும், மயிலை ஒத்த சாயலையும் உடையாய்!, கருமம் காட்டி - செயலினைக் காட்டிக் கொடுத்து, கயவர் மேல் வைத்தவர் - கீழ்மக்கள் மேல் காரியத்தைச் செய்து முடிக்கும் பொறுப்பினை வைத்தவர், எமக்கு ஆற்ற ஆக்குவர் என்றே அமர்ந்திருத்தல் - எமக்கு மிகவும் செவ்வையாகக் காரியத்தைச் செய்து தருவர் என்று உறுதிகொண்டு வாளா இருத்தல், புன்மீன் தலை - புல்லிய மீன்கள் (உலர்கின்ற) இடத்தில், பூசையைக் காப்பிடுதல் - பூனையைக் காவலாக வைப்பதனோடு ஒக்கும்.

தம்முடைய காரியத்தைக் கீழ்மக்களிடம் ஒப்பித்திருப்பவர் ஒரு நன்மையும் அடையார்.


“அகந்தூய்மை அல்லாரை ஆற்றப் பெருக்கி

இகந்துழி விட்டிருப்பின், அஃதால் - இகந்து

நினைந்து தெரியானாய் நீள்கயத்துள் யாமை

நனைந்துவா என்று விடல்.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

அகம் தூய்மை இல்லாரை ஆற்றப் பெருக்கி - மனத்தின்கண் தூய்மை இல்லாதவர்களை மிகவும் பெருக்கிக் கொண்டு, இகந்த உழி விட்டிருப்பின் - தம் காரியத்தை முடிக்கும்பொருட்டு அவரைத் தூரத்தே செல்ல விட்டு இருப்பின், அஃது - அச்செயல், நினைந்து தெரியானாய் - மனதின்கண் ஆராய்ந்து அறியானாய், யாமை - (ஆமையைப் பிடித்த ஒருவன்) அந்த ஆமையை, நீள் கயத்துள் இகந்து - நீண்ட குளத்திற்குப் போய், நனைந்து வா என்று விடல் - நீரால் நனையப் பெற்றுத் திரும்பி வா என்று சொல்லி விடுதலை ஒக்கும்.

மனத்தூய்மை இல்லாதாரை, தூரத்து இடத்துள்ள கருமத்தை முடிக்க அனுப்புதல் கூடாது.

ஆமையைக் குளத்திற்கு அனுப்பினால், அது திரும்ப வராதது போல, மனத்தூய்மை இல்லாரும் காரியம் முடித்துத் திரும்புதல் இல்லை ஆகும்.




52. தெரிந்து வினையாடல் - 02. வாரி பெருக்கி

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


இந்த அதிகாரத்துள் வரும் இரண்டாம் திருக்குறளில், "பொருள் வரும் வழிகளை விரியச் செய்து, அப் பொருளால் செல்வங்களை வளர்த்து, பொருள் வரும் வழிகளுக்கும், பொருளுக்கும், செல்வங்களுக்கும் வந்த இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவன் தொழிலை மேற்கொள்ளவேண்டும்" என்கின்றார் நாயனார்.

மேலே இறைமாட்சி என்னும் அதிகாரத்தில், 385-ஆவது திருக்குறளில் அறிவுறுத்தியபடி, பொருள்களை உண்டுபண்ணுதலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், சேர்த்த பொருள்களைக் காத்தலும், காத்த பொருளை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டாகச் செலவழித்தலும் ஆகிய காரியங்களைச் செய்ய வேண்டுமாதலால், வினை செய்பவன் பொருள்களை வளர்க்கவேண்டுமானால், உழவு செய்தல், பசுக் காத்தல், வாணிபம் செய்தல் ஆகிய பொருள் வரும் வழிகளை விருத்தி செய்தல் வேண்டும். அவ்விதம் விருத்தி செய்த பொருள்களுக்கு மற்றவர்களால் துன்பம் வருமானால், அத் துன்பத்தினை நீக்கிக் காத்தல் வேண்டும். இவ்விதம் செயல் புரிபவனையே தேர்ந்து தொழிலில் ஈடுபடுத்தவேண்டும்.


இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்..


“வாரி பெருக்கி, வளம் படுத்து, உற்றவை

ஆராய்வான் செய்க வினை.”


இதற்குப் பரிமேலழகர் உரை ---


வாரி பெருக்கி --- பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, 

வளம் படுத்து --- அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, 

உற்றவை ஆராய்வான் --- அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், 

வினை செய்க --- அரசனுக்கு வினை செய்க.

(வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)


பின்வரும் பாடல் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்துள்ளதை அறியலாம்....

“புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்

விதுப்பு அற நாடின் வேறு அல்ல; --- புதுப்புனலும்

மாரி அறவே அறுமே, அவர் அன்பும்

வாரி அறவே அறும். --- நாலடியார்.

இதன் பொருள் ---

புதுப் புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும் விதுப்பு அற நாடின் வேறு அல்ல --- புதுநீர்ப் பெருக்கும் அழகிய தோடணிந்த வேசையரின் தொடர்பும் விரைதல் இன்றி ஆராய்ந்தால் அவை தம் தன்மையில் வேறு வேறு அல்ல;    புதுப் புனலும் மாரி அறவே அறும் அவர் அன்பும் வாரி அறவே அறும் --- புது வெள்ளமும் மழை நிற்க நின்றுவிடும்; அவ் விலைமகளிர் அன்பும் பொருள் வருவாய் நீங்க நீங்கிவிடும்.


பொருட் பெண்டிர், பொருளை மட்டும் கொண்டு பொருள் கொடுப்பாரைக் கொள்ளாதவராகலின், அவர் தொடர்பு கொள்ளத் தக்கதல்ல. பொருட்பெண்டிரால் பொருள் கரையும். பொருள் வரும் வழி விரிவடையாது. 


நதியில் புது வெள்ளம் வருகின்ற போது, ஏற்கெனவே உள்ள நீரையும் அடித்துச் சென்று விடும். பொதுமாதர் தொடர்பும் அப்படியே உள்ள பொருள் அனைத்தையும் வற்றச் செய்து விடும்.



52. தெரிந்து வினையாடல் - 01. நன்மையும் தீமையும்

திருக்குறள்

பொருட்பால்

அ. அரசியல்

அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல்


தெரிந்து வினையாடலாவது, முந்திய அதிகாரத்தில், செயலுக்கு உரியவ ஒருவனை ஆராய்ந்து தெளிதலை அறிவுறுத்திய நாயனார், இப்போது, அவ்வாறு தெளியப்பட்ட ஒருவரை, அவர் செய்யக்கூடிய தொழிலை அறிந்து ஆளுகின்ற திறத்தை அறிவுறுத்துகின்றார்.

இந்த அதிகாரத்துள் வரும் முதல் திருக்குறளில், "ஒரு செயலைத் தன்னிடத்து வைத்தால், அச் செயலில் ஆகக் கூடியதும், ஆகாததும் ஆகிய செயல்களை ஆராய்ந்து அறிந்து, ஆகிவரும் செயல்களையே செய்யும் இயல்பு உடையவனையே செயலில் விடவேண்டும்" என்கின்றார் நாயனார்.

தொழிலுக்கு நியமிக்கப்பட்டவன் திறத்தை அறியும் வண்ணம், இரகசியமானதும், இரகசியம் அல்லாததும் ஆகிய இரண்டிற்கும் பொதுவாகிய ஒரு தொழிலில் முதலில் அவனை ஈடுபடுத்தி, அத் தொழிலைத் திறம்படச் செய்வானானால், அதனைக் கொண்டு, இவன் இந்தச் செயலைத் திறம்படச் செய்து முடித்தான், இனி,  எத் தொழிலைக் கொடுத்தாலும் திறம்படச் செய்வான் என்ற நம்பிக்கை பிறந்த பின்னர், இரகசியமான தொழில்களையும் அவனிடத்தில் ஒப்புவிக்கலாம்.

இதற்கு நாயனார் அருளிய திருக்குறள்...

“நன்மையும், தீமையும் நாடி, நலம் புரிந்த

தன்மையான் ஆளப் படும்.”

இதற்குப் பரிமேலழகர் உரை ---

நன்மையும் தீமையும் நாடி --- அரசன் முதற்கண் ஒரு வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, 

நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், 

ஆளப்படும் --- பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும்.

(தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)

பின்வரும் பாடல்கள் இத் திருக்குறளுக்கு ஒப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்...

“நல்லவும் தீயவும் நாடிப் பிறருரைக்கும்

நல்ல பிறவும் உணர்வாரைக் கட்டுரையின்

வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தைப்

புல்லம் புறம்புல்லு மாறு.” --- பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

நல்லவும் தீயவும் நாடி - நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து, பிறர் உரைக்கும் கட்டுரையின் - மாறுகொண்ட இருவர் கூறும் கட்டுரை ஒன்றால், நல்ல பிறவும் உணர்வாரை - நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை, வல்லிதின் நாடி வலிப்பதே - ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே, புல்லம் புல்லத்தை புறம் புல்லுமாறு – காளை ஒன்று மற்றொரு காளையோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.

'அரசன், அறிவால் மிக்க அமைச்சர்களோடு கூடி ஒழுகின், அரச காரியங்கள் இனிது நடைபெறும் என்பது இங்கே சொல்லப்பட்டது..

வலிமை பெற ஆராய்தலாவது - ஆழ்ந்து ஆராய்தல். ஒரு காளை மற்றொரு காளையோடு மாறுபாடின்றி இணைந்து ஒழுகின் பொலிவு பெற்றிருத்தலோடு அவைகளால் முடியும் காரியங்கள் இனிது விரைந்து முடிதல்போல, அரசன் அறிவால் தன்னை ஒத்த அமைச்சர்களோடு இணைந்து ஒழுகின், அரச காரியங்கள் இனிது விரைந்து முடியும். புல்லுதல் - மனத்தால் புல்லுதல். காளைகள் மாறுபட்டு ஒழுகின் காரியம் நடத்தல் இல்லை என்பது அறிந்தது ஒன்று. காளைகள் போல - உலக இயலாகிய வண்டியைச் செலுத்துவதற்கு, அரசன் அமைச்சர்கள் என்போர்கள் இன்றியமையாதவர்கள் என்பதாம்.

“நல்லவும் தீயவும் நாடி, நாயகற்கு,

எல்லை இல் மருத்துவன் இயல்பின் எண்ணுவார் ; 

ஒல்லை வந்து உறுவன உற்ற பெற்றியின்,

தொல்லை நல்வினை என உதவும் சூழ்ச்சியார்.”   ---  கம்பராமாயணம், அரசியல் படலம்.

இதன் பொருள் ---

நாயகற்கு - தன் அரசனுக்கு, நல்லவும் தீயவும் நாடி - நன்மை தருவனவற்றையும் தீமை பயப்பனவற்றையும் ஆராய்ந்து;  எல்லை - முடிவில்; மருத்துவர் இயல்பின் - நோயாளிகளின் விருப்பு வெறுப்புகளை  நோக்காது அவர்களது நலத்தையே நோக்கிச் செயற்படும் மருத்துவர்களின்  தன்மைபோல;  எண்ணுவார் - தலைவனுக்கு நன்மையையே கருதுவர். ஒல்லை வந்து உறுவன - அன்றியும் விரைவில் வந்து சேரும் தீங்குகள்; உற்ற பெற்றியின் - நேர்ந்த இடத்து;  தொல்லை நல்வினை என - முன்னர்ச் செய்த புண்ணியம் வந்து உதவுவது போல; உதவும் சூழ்ச்சியார் - அத் தீங்குகளைப் போக்கத் துணைபுரியும் சிந்தனைத் திறம் உடையவர்களும் ஆவார்.

     இங்கு அமைச்சர்கள் மருத்துவர்களைப் போன்று இருந்தனர் என்று  சொல்லப்படுகிறது. நோய் அற்ற ஒருவன் தனது உடல் உறுதிபெற, ஊட்டம் தரும் மருந்தினை நாடியும்,  நோய் உற்றவன் நலம் பெற வேண்டி, நோய் நாடி, அதன் காரணத்தை நாடி, அதனைத் தணிக்கும் வழிகளை நாடி, நோயாளி நோய் ஆகியவற்றின் தன்மைக்குத்  தக்கவாறு செயற்படுபவர் மருத்துவர். அதுபோல, அமைச்சர்களும் அரசன் ஆட்சி நலமுடன் திகழச் செய்தற்கு உரியவற்றைத் தேர்ந்து தெளிந்து செயற்படுத்தியும், தீமை நேர்ந்த காலத்தில், அதனை ஆராய்ந்து காரணத்தைக்  கண்டு அறிந்து, நீக்குதற்கு உரிய வழிகளை எண்ணி, தக்கது கொண்டு துப்படைதும் செய்தனர்.  


மேலோர் இயல்பு

“அன்னதா னஞ்செய்தல், பெரியோர்சொல் வழிநிற்றல்,

     ஆபத்தில் வந்தபேர்க்கு

அபயம் கொடுத்திடுதல், நல்லினம் சேர்ந்திடுதல்,

     ஆசிரியன் வழிநின்றவன்


சொன்னமொழி தவறாது செய்திடுதல், தாய்தந்தை

     துணையடி அருச்சனைசெயல்,

சோம்பலில் லாமல்உயிர் போகினும் வாய்மைமொழி

     தொல்புவியில் நாட்டியிடுதல்,


மன்னரைச் சேர்ந்தொழுகல், கற்புடைய மனைவியொடு

     வைகினும் தாமரையிலை

மருவுநீர் எனவுறுதல், இவையெலாம் மேலவர்தம்

     மாண்பென் றுரைப்பர் அன்றோ!


வன்னமயில் மேலிவர்ந் திவ்வுலகை ஒருநொடியில்

     வலமாக வந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே !புல் வயல்நீடு

     மலைமேவு குமர!  ஈசனே!”


இதன் பொருள் ---


    வன்ன மயில்மேல் இவர்ந்து இவ்வுலகை ஒருநொடியில் வலமாக வந்த முருகா - அழகிய மயில்மேல் அமர்ந்து இந்த உலகத்தை ஒரு நொடிப் பொழுதில் வலமாக வந்த முருகப் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


அன்னதானம் செய்தல் - (பசித்தவருக்கு) உணவு கொடுத்தல், பெரியோர் சொல்வழி நிற்றல் - பெரியோர் கூறிய நெறியிலே செல்லுதல், ஆபத்தில் வந்தபேர்க்கு அபயம் கொடுத்திடுதல் – இடையூறு என்று வந்தவர்களுக்குப் புகல் அளித்தல், நல் இனம் சேர்ந்திடுதல் - நல்லோருடன் நட்புக்கொள்ளுதல், ஆசிரியன் வழிநின்று அவன் சொன்னமொழி தவறாது செய்திடுதல் - ஆசிரியர் காட்டிய நெறியிலே தானும் சென்று, அவர் ஆணைப்படி நடத்தல், தாய் தந்தை துணை அடி அருச்சனை செயல் - பெற்றோரின் இரு தாள்களிலும் மலரிட்டு வணங்குதல், உயிர் போகினும் சோம்பல் இல்லாமல் வாய்மை மொழி தொல்புவியில் நாட்டியிடுதல் – உயிர் போவதானாலும் சோர்வு இன்றி உண்மை மொழியை (இப்) பழைய உலகிலே நிலைநிறுத்தல், மன்னரைச் சேர்ந்தொழுகல் - அரசரின் ஆதரவிலே வாழ்க்கையை நடத்துதல், கற்புடைய மனைவியொடு மருவினும் - கற்பில் சிறந்த இல்லாளுடன் வாழ்ந்தாலும், தாமரை இலை மருவுநீர் என உறுதல் – தாமரை இலையிலே கலந்த நீரைப் போல(ப் பற்றின்றி) இருத்தல், இவையெலாம் - இவை யாவும், மேலவர்தம் மாண்பு என்று உரைப்பர் - பெரியோருடைய நல்லியல்பு என்று கூறுவர். 


51. சாகும் காலத்தில் சங்கரா

“வாங்காலம் உண்டசெழுந் தண்டலையார்

     அடிபோற்றி வணங்கி நாடிப்

போங்காலம் வருமுன்னே புண்ணியம்செய்

     தரியகதி பொருந்து றாமல்

ஆங்காலம் உள்ளதெல்லாம் விபசாரம்

     ஆகிஅறி வழிந்து வீணே

சாங்காலம் சங்கரா! சங்கரா!

     எனின்வருமோ தருமந்தானே!”


இதன் பொருள் ---

    வாங்கு ஆலம் உண்ட செழுந்தண்டலையார் அடிபோற்றி வணங்கி நாடி - எடுத்த நஞ்சினைப் பருகிய, வளமிக்க திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ள இறைவரின் திருவடியை வழிபட்டு, ஆராய்ந்து, போங்காலம் வரும் முன்னே புண்ணியம் செய்து – இறக்கும் காலம் வரும் முன்னே புண்ணியச் செயல்களைச் செய்து, அரிய கதி பொருந்துறாமல் - சிறந்த நிலையை அடையாமல், ஆம்காலம் உள்ளது எல்லாம் விபசாரம் ஆகி அறிவு அழிந்து - வாழும் நாள் உள்ளவரைக்கும் தீய ஒழுக்கத்துடன் அறிவு கெட்டிருந்து; சாம்காலம் வீணே சங்கார சங்கரா எனின் தருமம் வருமோ - இறக்கும்போது வீணாகச் சங்கரா! சங்கரா! என வேண்டினால் நன்னெறி கிடைத்திடுமோ?

      வாழ்நாளில் ஒருவனுக்கு எதன்மேல் மிகுந்த விருப்பம் உள்ளதோ, அதுவே இறுதியில் அவன்  நினைவில் இருக்கும். ஆகையால், வாழ்நாள் முழுதும் இல்லாத இறைவன் நினைவு இறுதியில் வராது. மனிதரில் பலருக்கும் வீண்பொழுது கழிப்பது என்றால், வெல்லம் போல் இனிக்கும்.  வாழ்நாள் முழுதும் தவறு செய்தவன் அதன் பயனை அனுபவித்தே ஆகவேண்டும். எனவே, வாழ்நாளை வீணில் கழித்துவிட்டு, சாகின்ற காலம் நெருங்கும்போது, மரண பயத்தால், "சங்கரா! சங்கரா!" என வேண்டிக் கொள்வதால் பயன் இல்லை. வேண்டின்  பயன்பெறல் ஒண்ணாது.

விளைநிலத்தை உழுது பயிரிட்டால் பயன் விளையும். பாழ் நிலத்தை உழுவதால் பயனில்லை. “பாழ்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்கு” என்பது திருவாசகம். பயனில்லாத காரியங்களைச் செய்து பயனறறுப் போதல் அறிவுடைமை ஆகாது.

"காணாமல் வேணது எல்லாம் கத்தலாம், கற்றோர்முன்

கோணாமல் வாய்திறக்கக் கூடாதே, நாணாமல்

பேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தக்கால்,

கீச்சுக்கீச்சு என்னும் கிளி".

இது ஔவைப் பிராட்டியாரின் தனிப் பாடல்களில் ஒன்று.

இதன் பொருள் ---

கற்றவரைக்  காணாதபோது, அவர்கள் இல்லாத இடத்தில், ஒருவர் தாம் விரும்பிவாறு எல்லாம் உரக்கப் பேசலாம். ஆனால், கற்றவர் வந்துவிட்டால், நாணாமல் வாய் திறந்து நல்ல சொற்களைச் சொல்ல இயலாது. கிளி தனக்குக் கற்பித்தவற்றை அஞ்சாமல் பேசும். ஆனால், தனக்குப் பகையான பூனை ஒன்று வருமானால், அச்சத்தால் அது, கீச்சு கீச்சு என்று கதறும். 

நல்லவர்களின் பார்வையில் இல்லாத வரையில் கன்னா பின்னா என்று வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருக்கத் தோன்றும். ஆனால், கற்ற பெரியோர்கள் முன்னிலையில் நல்ல சொற்களைக் கூட வாய்விட்டுப் பேச முடியாதபடி அச்சம் வந்து முன் நிற்கும். இது எதைப் போன்றது என்றால், வீட்டிலே கிளியை வைத்து, அதற்கு வார்த்தை சொல்லிப் பழக்குவார்கள். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு இருக்கும் கிளி. ஆனால், தனக்குப் பகையான பூனை வந்துவிட்டால், அச்சத்தில் கிளியானது, தனது இயல்பான நிலையில், கீச்சு கீச்சு என்று அலரும். அப்போது "அக்கக்கா" என்று சொல்லாத, கிளியின்  நிலையைப்  போன்றதே  நமது  நிலை.

மனிதர்களும்கூட தட்டிக் கேட்க யாரும் இல்லாதபோது, தம்மையே பெரிதாக மதித்து, வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு இருப்பார்கள். நல்ல வார்த்தை பேச வராது. அதிலும், இறைவன் திருநாமத்தைச் சொல்லுவது என்றால் வாய் நோகும். ஒருக்கால், சொல்லிக் கொண்டு இருந்தாலும், அச்சப்படும் நிகழ்வு நேர்ந்தால், ஐயோ, ஐயோ என்று அலறல் தான் வரும். "சிவசிவ" என்று சொல்ல வராது. வாழும்போதே இப்படி என்றால், மரணம் சம்பவிக்கும் காலத்தில் எப்படி இருக்கும்?.

இறைவன் நினைப்புச் சாகின்ற தருணத்தில் வருமா என்பதை அனுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார் திருவள்ளுவ நாயனார். நம்முடைய அனுபவத்தில் நம் நினைவில் என்ன என்ன படுகின்றனவோ அவை கனவில் வருகின்றன. திருடனைக் கண்டு பயப்படுகிறோம். திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம். கனவில் திருடன் தோன்றி நம்மை அலற வைக்கிறான். தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால், கனவிலும் இறைவன் வருவான். நாம் இறைவனை நினைப்பதில்லை. அவன் நம் கனவில் வருவதில்லை. நம் மனத்தில் உள்ள அழுத்தமான நினைவுகளே கனவில் தோன்றுகின்றன. "கனவிலேனும் காட்டு என்றால் காட்டுகிலாய், கருணை ஈதோ" என்று வள்ளல்பெருமான் புலம்பியது போல, நமக்குப் புலம்ப வருவது இல்லை.

கனவில் இறைவனைக் காண வேண்டுமென்றால், நனவில் அவனை அழுத்தமாக நினைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் படுத்து உறங்குகின்ற சாக்காட்டிலேயே இறைவன் நினைவு வரவில்லையென்றால், உடலை விட்டுப் போகும் பொழுது இயற்கையான வாசனையை மீறிக் கொண்டு இறைவனது நினைவு எப்படி வரும்?

பயத்தால் அலறும்போது, "அம்மா, அப்பா!" என்று அலறுகிறோம்; "ஐயோ!" என்று கூவுகிறோம். அப்படிக் கூவிப் பழக்கம் ஆகிவிட்டது. அப்போது இறைவனை அழைப்பதில்லை. அந்தப் பழக்கம் திடீரென்று நம்மிடம் வராது. பலநாள் பழக்கத்தால் வர வேண்டும்.

மரண பக்குவம் ஆகின்ற காலத்தில் இறைவன் திருநாமத்தைச் சொல்ல வராது. கூடி இருப்பவர்களாவது சொல்லவேண்டும். அதைக் கேட்டுக் கொண்டே உயிர் பிரியவேண்டும். நல்வினைப் பயன் இருந்தால் நடக்கும். இல்லாதபோது, ஐயோ, அம்மா என்ற அலறல் சத்தம்தான் இருக்கும். கூ... கா.... என உறவினர்கள் கூடி அழுவார்கள். சாகப் போகின்றவனும் அலறுவான். கூட இருப்பவர்களும் அலறுவார்கள். "செத்த பிணத்தின் முன், இனிச் சாகும் பிணங்கள் கத்தும்."

உயிரினது இந்தத் தன்மையை அறிந்த அப்பர் பெருமான், இறைவன் திருநாமமாகிய திருவைந்தெழுத்தை, சாகும் தருவாயிலும் சொல்லும் பாக்கியத்தை அருள் புரியுமாறு சிவபெருமானிடம் வேண்டுகின்றார். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்றும், "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்றும் வழக்குச் சொற்கள் உண்டு. இளமையில் இருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி வரவேண்டும். ஒருக்கால் மரண பயத்தால், சொல்ல நாக்கு எழாத நிலை வந்துவிடக் கூடாது என்பதால், சாகின்ற போதும் உனது திருநாமத்தைச் சொல்லுகின்ற பாக்கியத்தை அருள்வாய் என்று வேண்டுகின்றார்.

"தூமென்  மலர்க்கணை கோத்துத்தீ வேள்வித் தொழில்படுத்த

காமன் பொடிபடக் காய்ந்த கடல்நாகைக் காரோண!நின்

நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்செழுத்தும்

சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய் எங்கள் சங்கரனே".

இதன் பொருள் ---

தூய மெல்லிய பூக்களாகிய அம்புகளைக் கோத்துக் காமாக்கினியை உம்மிடத்தே வளர்க்க முற்பட்ட மன்மதன் சாம்பலாகுமாறு கோபித்த கடல் நாகைக் காரோணத்தில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே!  எங்களுக்கு நன்மையை அளிப்பவனே! உன் திருப் பெயரை உனது திருமுன் நின்று துதித்து, "நமசிவாய" என்ற திருவைந்தெழுத்தையும் அடியேன் உயிர்போகும் பொழுது சொல்லகின்ற பாக்கியத்தை அருள் புரிவாயாக.

பட்டினத்து அடிகளாரும் இவ்வாறே வேண்டுகின்றார்....

"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விழுகின்ற போது,ஒன்று வேண்டுவல் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டு,

கையும் தொழப்பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே".      

இதன் பொருள் ---

திருவொற்றியூரில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே! அடியேன் ஒரு வரத்தை உம்மிடம் யாசிக்கின்றேன். அதனைத் திருவருள் செய்யவேண்டும். கோழையும் கட்டி, கண்களும் உள்வாங்கி, உணர்வும் கெட்டு, உடம்பும் பொய்யாகி விடுகின்ற காலத்தில், திருநீற்றை அணிந்து, கைகளால் உம்மைத் தொழுது, பஞ்சாட்சரத்தை ஓதும்படியாக அருள் புரியவேண்டும்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூர்த் தியாகேசரிடம் மிகுதியான அன்பு கொண்டவர். இறைவனும் அவரைத் தனது தோழராகவே கொண்டார். சுந்தரர் திருவொற்றியூர் வந்தார். தாம் திருவொற்றியூரை விட்டுப் போவதில்லை எனச் சபதம் செய்து கொடுத்துவிட்டுச் சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார். திருவாரூர்ப் பெருமானைப் பிரிந்திருக்க அவரால் முடியவில்லை. "சங்கிலி நாச்சியாருக்குச் சத்தியம் செய்து கொடுத்தால் என்ன?" என்று புறப்பட்டுவிட்டார். சத்தியத்தை மீறியதால் அவர் கண்கள் குருடாகிவிட்டன. அப்போது இறைவனை நினைந்து அவர் புலம்புகிறார். "ஐயனே!  தேவரீரை நான் எப்போதும் நினைக்கிறவன் ஆயிற்றே. வழுக்கி விழுந்தாலும் உனது திருநாமத்தைச் சொல்வதையல்லாமல் ஐயோ, அம்மா, அப்பா என்று எனக்கு சொல்லத் தெரியாதே! என் கண்ணுக்கு ஒரு மருந்து சொல்ல மாட்டாயா?" என்று கதறுகிறார்.

"அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்,

அதுவும் நான்படப் பாலது ஒன்று ஆனால்,

பிழுக்கை வாரியும் பால்கொள்வர், அடிகேள்!

பிழைப்பன், ஆகிலும் திருவடிப் பிழையேன்;

வழுக்கி விழினும் திருப்பெயர் அல்லால்

மற்று நான் அறியேன் மறுமாற்றம்;

ஒழுக்க! என்கண்ணுக்கு ஒருமருந்து உரையாய்,

   ஒற்றியூர் என்னும் ஊர் உறைவானே!"

என்று, தாம் இறைவன் திருநாமத்தை எப்போதும் மறவாமை குறித்துப் பாடுகின்றார். பிறிது ஓரிடத்தில், "நற்றவா! உன்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே" என்கின்றார். இறைவன் திருநாமத்தைச் சொல்லிச் சொல்லிப் பழகிப் போனதால் அவர் இறைவனை மறந்தாலும் அவருடைய நாக்கு அவன் நாமத்தை மறக்காமல் சொல்கின்றது.

அத்தகைய நிலை நமக்கும் வரவேண்டுமென்றால் இப்பொழுதிலிருந்தாவது பழகி வர வேண்டும். கடைசி காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், எமன் "இந்த நேரத்தில் நான் வருவேன்" என்று அறிக்கை அனுப்பிவிட்டு வர மாட்டான். எப்போது வருவான் என்பதை நாமாகத் தெரிந்து கொள்ளவும் முடியாது. ஆகவே, இப்பொழுதிலிருந்தே இறைவன் திருநாமத்தைச் சொல்லி, அவனது திருவடியை வழிபடப் பழகினால், இறக்கும் பொழுது அவன் நினைவு வரும். அந்தச் சமயம் அவன் ஓடோடியும் வந்து காப்பாற்றுவான்.

"சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து  என்னைச் சூழ்ந்து கொண்டால்,

வேலாயுதா! என்று கூப்பிடுவேன், அந்த வேளை தன்னில் 

மாலான வள்ளி தெய்வானையுடன் மயில் விட்டு இறங்கி,

காலால் நடந்து என் முன்னே வர வேணும் கந்தப்பனே"

என்று வேண்டுதலை வைக்கின்றார் அடியவர் ஒருவர். ஆறெழுத்து மந்திரத்தினை சதாகாலமும் நினைத்து நினைத்து உரு ஏறிய உள்ளம் இப்படிப் பேசுகின்றது. சூலாயுதம் கொண்டு எமதூதர் வந்து சூழ்ந்து கொள்ளுகின்ற தருணத்தில் கூட இறைவன் நினைவு வந்து விடுமாம் அந்த அடியவருக்கு. "கூப்பிடுவேன்" என்று உறுதிபடக் கூறுகின்றார்.

இறைவன் திருநாமம் வெறும் பெயர் மாத்திரம் அல்ல. அதற்குச் சிறப்பான பொருள் உண்டு. அதனால் பெறும் உணர்ச்சியும் உண்டு. அன்போடு சொல்லச் சொல்ல, அது மனத்திலே ஏறி, அதன் பொருள் உள்ளத்திலே தங்கும். அதனுடைய ஆற்றல் உள்ளத்தில் பதியும். அதனால் இறைவன் மீது கொண்ட பற்று மிகுதியாகும். இன்ப அனுபவம் உண்டாகும். அன்பினால் சொன்னால்தான் படிப்படியாக இந்த அனுபவங்கள் ஏற்படும்.

ஒரு பெண் இருக்கிறாள். அவள் வீட்டுக்குப் பக்கத்தில் ஆறுமுகம் என்று ஒரு பையன் இருக்கிறான். அவன் பெயரைச் சொல்லிப் பலர் கூப்பிடக் கேட்கிறாள் அந்தப் பெண். அந்தப் பெயரைக் கேட்கும் போது எந்தவிதமான உணர்ச்சியும் அவளுக்கு உண்டாவதில்லை. பெண்ணுக்குத் திருமணம் ஆகிறது. அவளுடைய கணவர் பெயரும் ஆறுமுகம் என்பதுதான். வழக்கம்போல் பக்கத்து வீட்டுப் பையனை அவன் தந்தை, "ஆறுமுகம்"  என்று கூப்பிட, அந்த ஒலி இன்றைக்கு அவள் காதில்  விழுந்து குளிர்கிறது. காரணம் என்ன?  அவள் பலகாலும் கேட்டுப் பழகிய அந்தச் சொல், இப்போது அந்தப் பெண்ணுடைய கணவனின் திருநாமம். அந்தப் பெயரைச் சொல்லி வேறு ஒருவரைக் கூப்பிடுவதாக இருந்தாலும், அவள் காதிலே விழும்போது இனிமை உண்டாகிறது. தன் நாயகனை நினைப்பூட்டுவதால் அந்த இன்பத்தைப் பெறுகிறாள். "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்றுதான் அப்பர் பெருமான் கூறுகின்றார்.

இதைப் போலவேதான் ஆண்டவன் நாமத்தை அன்பினால் சொல்லப் பழகிவிட்டால், அந்தச் சொல்லானது கேட்ட மாத்திரத்தில் தன் பொருளாகிய இறைவன் திருவுருவத்தை நினைப்பூட்டும். "ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும், வாள் தடங்கண் மாதே! உறங்குதியோ" என்றார் மணிவாசகப் பெருமான். இறைவன் திருநாமத்தைக் கேட்டவுடனே உள்ளம் உருகவேண்டும். அதனால்தான், "இறைவன் திருநாமத்தைச் சொல்லும் போதெல்லாம் நாக்கு இனிக்கிறது, மனம் இனிக்கிறது" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். தேன் இனிக்கும் என்பது நமக்குத் தெரியும். தேனை நாக்கிலே விட்டுக் கொண்டால்தான் அந்த இனிமை தெரியும். அவ்வாறே இறைவன் திருநாமம் இனிக்கும் என்றால், அது கருத்தோடு கலந்தால்தான் இனிக்கும். அயில்வேலன் கவி அன்பால் கருத்தோடு கலந்தால் இனிக்கும். எப்போதும் சொல்லத் தோன்றும். எமன் வரும்போதும் சொல்லி இன்புறலாம்.


நல்லவரால் நன்மை

 


“பாலினொடு தேன்வந்து சேரில்ருசி அதிகமாம்,

    பருகுநீர் சேரின் என்னாம்’

பவளத்தி னிடைமுத்தை வைத்திடிற் சோபிதம்,

    படிகமணி கோக்கின்என்னாம்;


மேலினிய மன்னர்பால் யானைசேர் வதுகனதை,

    மேடமது சேரின்என்னாம்;

மிக்கான தங்கத்தில் நவமணி உறின்பெருமை,

    வெண்கல் அழுத்தின்என்னாம்;


வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின்நலம்,

    வளைகிழவர் சேரின்என்னாம்;

மருவுநல் லோரிடம் பெரியோர் வரின்பிரியம்,

    வருகயவர் சேரின்என்னாம்;


மாலிகை தரித்தமணி மார்பனே! தெய்வானை

    வள்ளிக்கு வாய்த்தகணவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

    மலைமேவு குமர! ஈசனே!”


இதன் பொருள் ---


       மணிமாலிகை தரித்த மார்பனே – மணிகளால் ஆன மாலையைத் தரித்த திருமார்பினை உடையவரே!


        தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – தெய்வயானை அம்மைக்கும், வள்ளிநாயகிக்கும் வாய்த்த கணவரே! 


        மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


பாலினொடு தேன் வந்து சேரின் ருசி அதிகம் ஆம் - பாலுடன் தேன் கலந்தால் இனிமை மிகும்; பருகும் நீர் சேரில் என் ஆம் - குடிக்கும் நீர் பாலுடன் கலந்தால் இனிமை தருமா? 


    பவளத்தின் இடை முத்தை வைத்திடின் சோபிதம் - பவளத்தின் இடையிலே முத்தை அமைத்தால் அழகு மிக்கு விளங்கும்; படிகமணி கோக்கின் என்ஆம் - படிகமணியைத் தொடுத்தால் விளக்கம் உறுமா? 


    மேல் இனிய மன்னர்பால் யானை சேர்வது கனதை – மேன்மை உடைய அரசரிடம் யானை வந்து சேருவது பெருமை; மேடமது சேரின் என்ஆம் - ஆடு வந்து சேருவது பெருமையா?


     மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை - உயர்ந்த பொன்னில் ஒன்பது வகை மணிகள் பதிப்பது சிறப்பு; வெண்கல் அழுத்தின் என் ஆம் - வெள்ளைக் கல்லைப் பதிப்பது சிறப்பாகுமா? 


    வாலிப மி(ன்)னார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் - பருவமங்கையருடன் இளைஞர்கள் கூடுவது நன்மை; வளை கிழவர் சேரின் என்ஆம் - முதுகு கூனிய முதியவர்கள் கூடுவது நன்மையா?, 


    மருவும் நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் – நற்பண்பு உடையோரிடம் நல்லோர் சேர்வதே விருப்பமாகும்; வரு கயவர் சேரின் என் ஆம் - தீயவர் கலப்பது என்ன ஆகும்?


     நல்லவர்களைச் சேர்ந்தால் நன்மை விளையும். தீயவர்களைச் சேர்ந்தால் தீமையே விளையும். உயர்ந்தாரோடு உயர்ந்தார் கூடுவதே பொருத்தம். பின்வரும் பாடலைக் கருத்தில் கொண்டு நோக்குக.


"அரி மந்திரம் புகுந்தால், ஆனை மருப்பும்

பெருகு ஒளிசேர் முத்தும் பெறலாம், --- நரிநுழையில்

வாலும் சிறிய மயிர்என்பும் கர்த்தபத்தின்

தோலும்அல்லால் வேறும்உண்டோ சொல்".

இதன் பொருள் ---

சிங்கத்தின் குகையிலே புகுந்தோம் என்றால், அங்கே விரும்பப் படாத பொருள்கள் பல இருக்குமாயினும், அங்கே யானையின் தந்தமும், அதில் இருந்து பிறக்கும் மிக்க ஒளி பொருந்திய முத்தும் கிடைக்கப் பெறலாம். நரியின் குழியிலோ, அறுந்த வால்களும், சிறிய மயிர்களும், உடைந்த எலும்பும், கழுதையின் தோலும் ஆகிய இவ்வகையான தாழ்ந்த பொருள்களை அல்லாமல், வேறு உயர்ந்த பொருள்கள் எவையும் கிடைக்கமாட்டா. அதுபோலத்தான், நல்லவர்களைச் சேர்வதும், தீயவர்களைச் சேர்வதும்.


50. எய்தவன் இருக்க, அம்பை நோவது ஏன்?

“வைதிடினும், வாழ்த்திடினும், இன்பதுன்பம்

     வந்திடினும், வம்பு கோடி

செய்திடினும், தண்டலைநீள் நெறியார்தம்

     செயலென்றே தெளிவ தல்லால்;

மெய்தவிர, அவர்செய்தார், இவர்செய்தார்

     எனநாடி வெறுக்க லாமோ?

எய்தவர்தம் அருகிருக்க அம்பைநொந்த

     கருமம் என்ன? இயம்பு வீரே!


இதன் பொருள் ---


    வைதிடினும் வாழ்த்திடினும் - (பிறர்) இகழ்ந்தாலும் புகழ்ந்தாலும், இன்பதுன்பம் வந்திடினும் - இன்பம் வரினும் துன்பம் வரினும்,  வம்பு கோடி செய்திடினும் - கோடிக் கணக்காக வஞ்சகம் (பிறர்) செய்தாலும், தண்டலை  நீள்நெறியார் தம் செயல் - (அவை யாவும்) திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் ‘நீள்நெறி’ என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள இறைவரின் அருளே ஆகும், என்றே தெளிவது அல்லால் - எனவே தெளிவடைவது அல்லாமல், மெய் தவிர - உண்மை நீங்க, அவர் செய்தார் இவர் செய்தார் என நாடி வெறுக்கலாமோ - அவர் செய்தார், இவர் செய்தார் என்று ஆராய்ந்து அவர்களை வெறுத்தல் கூடுமோ?, எய்தவர் தம் அருகு இருக்க அம்பை நொந்த கருமம் என்ன இயம்புவீர் - (அம்பை) விடுத்தவர் தம் பக்கத்தில் இருக்கும்போது அம்பை நோவது என்ன காரியம்? சொல்லுவீர்.

      அவரவர் செய்வினையே அவரவர் நுகரும் பயனாக முடிவதால், பிறரை நோவதால், ஏதும் பயனில்லை. வினைப்பயனை நமக்கு ஊட்டும் திருத்தண்டலையாரின் செயல் என்றே கொள்ளல் வேண்டும், ‘எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?' என்பது பழமொழி.

    “நோய் எல்லாம் நோய் செய்தார் மேலஆம், நோய் செய்யார் நோய் இன்மை வேண்டுபவர்” என்னும் திருக்குறளைக் காட்டி "வருகின்ற துன்பங்கள் எல்லாம், முன்பு பிறர்க்குத் துன்பம் செய்தார்க்கு வந்து சேர்வன. துன்பம் இல்லைமையை விரும்புபவர், பிறர்க்குத் துன்பம் செய்யமாட்டார்" என்கின்றார் நாயனார்.  "தினை விதைத்தவன், தினையை அறுப்பான். வினை விதைத்தவன் வினையை அறுப்பான்" என்னும் பழமொழி இங்குக் கருதத் தக்கது.


      பின்வரும் “சிவஞான சித்தியார்” பாடல்களின் கருத்துக்களை இங்கு வைத்து எண்ணுக...

“இவன் உலகில் இதம் அகிதம் செய்த எல்லாம்

         இதம் அகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்

அவன் இவனாய் நின்றமுறை ஏகனாகி

         அரன்பணியில் நின்றிடவும் அகலும் குற்றம்

சிவனும் இவன் செய்தி எல்லாம் என்செய்தி என்றும்

         செய்ததுஎனக்கு இவனுக்குச் செய்தது என்றும்

பவம்அகல உடனாகி நின்று கொள்வன் பரிவால்

         பாதகத்தைச் செய்திடினும் பணி ஆக்கி விடுமே.”

         சிவபெருமான் தன்னை வழிபடும் அடியார்களுடன் பிரிப்பின்றி உடன் நிற்பான். அத்தகைய அடியார்கட்கு உலகில் நலம் தீங்குகள் செய்தவர்க்கே அச்செயல்களின் பயன் சென்று பொருந்தும். அல்லாமல், அடியார்களுக்கு வினைப்பயன் எய்தாது. தன் முனைப்பற்றுத் திருவருளில் ஒடுங்கித் தலைவன் செயலே தம் செயலாக அரன் பணியில் நிற்கும் இவ்வடியார்களுக்கு உயிரின் குற்றமாகிய மலமும் நீங்கும். சிவபெருமானும் அடியார்களின் செயல்கள் எல்லாம் தன் செயலாகவும், அடியார்களுக்குச் செய்த எல்லாம் தனக்குச் செய்தன எனவும் உடனாக நின்று ஏற்றுக் கொள்வான். அவ்வாறு கொள்ளவே அடியார்களின் பிறப்பு அகலும். அத்தகைய அடியவர்கள் சிவபிரான் மீது கொண்ட அன்பின் மிகுதியால் எப்போதேனும் தீங்கு செய்திடினும் இறைவன் அதனையும் தனது பணியாக ஏற்று அருளுவான்.

         இப்பாடலில் இவன் என்ற சொல் அடியார்களைக் குறித்தது. அவன் என்ற சொல் சிவபெருமானைக் குறித்தது.

“யான் செய்தேன் பிறர் செய்தார் என்னது யான் என்னும்

         இக்கோணை ஞான எரியால் வெதுப்பி நிமிர்த்து

தான்செவ்வே நின்றிட அத் தத்துவன் தான் நேர

         தனை அளித்து முன்நிற்கும் வினை ஒளித்திட்டு ஓடும்

நான் செய்தேன் எனும் அவர்க்குத் தான் அங்கு இன்றி

         நண்ணுவிக்கும் போகத்தை பண்ணுவிக்கும் கன்மம்

ஊன்செய்யா ஞானந்தான் உதிப்பின் அல்லால்

         ஒருவருக்கும் யான் எனது இங்கு ஒழியாது அன்றே.”

         நான் பிறர்க்கு இன்ன நன்மை, தீமை செய்தேன், பிறர் எனக்கு இன்ன நன்மை, தீமை செய்தார் என்று கருதுவது யான் எனது என்னும் செருக்கினால் விளையும் மனக்கோட்டம் ஆகும். இத்தகைய மனக்கோட்டத்தை ஞானம் என்னும் நெருப்பால் காய்ச்சி அதனை நிமிர்த்துதல் வேண்டும். அவ்வாறு நிமிர்த்தி இறைவனின் திருவருள் வழியிலே தன்முனைப்பு இன்றி நிற்க, இறைவன் நேராக வெளிப்பட்டுத் தோன்றி அருள்பாலிப்பான். அவனுடைய முன்னிலையில் நில்லாது ஞானம் உடையாரின் வினைகள் ஒளித்துவிடும். இவ்வாறன்றி, இதனை நான் செய்தேன் என்று தன் முனைப்போடு செயல்படுவோர்க்கு இறைவன் விளங்கித் தோன்றுதல் இல்லை. மேலும் அவர்கள் செய்யும் வினைக்கு ஏற்ற பயனையும் இறைவன் ஊட்டுவான். எனவே அவர்களுக்கு வேறு வினையும் தோன்றும். மாயையினால் ஆகிய கருவிகளைப் பொருந்தி அறியும் சிற்றறிவினின்றும் வழிபட்டு ஏகனாகி இறைபணி நிற்கும் ஞானம் உதித்தால் அன்றி, ஒருவருக்கும் யான் எனது என்னும் செருக்கு ஒழிவதில்லை.

    நல்வினை தீவினை என்னும் இரண்டும் தாமே முன்பு செய்துகொண்டவை. நல்வினையின் பயனாக இன்பமும், தீவினையின் பயனாகத் துன்பமும் விளையும். எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் கலந்தே அனுபவிக்கவேண்டும். இன்பத்திற்கு மகிழும்போது, துன்பத்திற்குத் துவளுதல் கூடாது. இன்பத்தை வேண்டாம் என்னாது அனுபவித்தவன், துன்பம் வந்துபோது அதையும் வேண்டாம் என்னாது அனுபவித்தல் வேண்டும்.

“நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர், அன்று ஆம்கால்

அல்லல் படுவது எவன்.” --- திருக்குறள்.

ஊழ் தீயவற்றை மட்டும் செய்வதில்லை. நன்மைகளையும் செய்கிறது. ஊழால் நன்மை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், அதனால் கேடு விளையும்போது இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை. இது ஏன்? ஊழின் நியதிப்படி, ஒருவர் புதிரான விளைவுகளை இயல்பு என்று நினைக்க வேண்டும். நல்லதோ கெட்டதோ ஊழ் வகுத்ததை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும். ஊழ் என்கிற உலகத்து இயற்கை ஒருவனது செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் ஒத்து நல்லவை நடக்கும்போது, அவை நன்மை என்பதால் ஏற்றுக் கொள்ளும் மனிதர்கள், ஒவ்வாதும் இருந்து, தமக்குத் தீயன நிகழும்போது, இயல்பாக அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. மனதைச் சமநிலை செய்து  "இயற்கையாக" வரும் இன்பத்தையும் துன்பத்தையும், ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்றார் நாயனார். 

நல்லது நடக்கும்போது நல்லது என மனம் மகிழ்ந்து அனுபவிப்பவர், தீயது நிகழும்போது துயர் கொள்வது ஏன்? என வினவுகிறது இப்பாடல். நல்லூழை ஏற்றுக் கொண்டது போல், தீயூழையும் ஏற்றுக் கொள்வதே நியதி. தீயூழ் வந்தபோது, வருந்தித் தவித்துப் பயன் இல்லை. அதைக் கடந்து வாழ முயலவேண்டும். "ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்து உடையார்" என்று நாயனார் அருளிய திருக்குறளின்படி, ஊக்கத்தைத் திண்ணமாகத் தமது கைப்பொருளாக்க் கொண்டுள்ளவர், செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தார். மக்களாய்ப் பிறந்தார் வாழ்க்கை எப்பொழுதும் அயராது அதிராது அசையாது முயற்சித்துக் கொண்டே இருந்து ஊழையும் உப்பக்கம் காண முயலுதல் வேண்டும்.


பின்வரும் பாடல்களைக் கருத்திலு கொள்ளுதல் நலம்.

"முன்பு நின்று இசை நிறீஇ, முடிவு முற்றிய

பின்பும் நின்று, உறுதியைப் பயக்கும் பேரறம்,

இன்பம் வந்து உறும்எனின் இனிது; ஆயிடைத்

துன்பம் வந்து உறும்எனின், துறக்கல் ஆகுமோ?". --- கம்பராமாயணம், தைலாமாட்டு படலம்.

இதன் பதவுரை --

பேர் அறம் - பெருமை பொருந்திய தருமம்; முன்பு நின்று இசை நிறீஇ - (தன்னை மேற்கொள்பவனுக்கு இவ்வுலகில்) முன்னதாகப் புகழை நிலைநிறுத்தி; முடிவு முற்றிய பின்பும் நின்று - இந்த வாழ்வு முடிவுக்கு வந்தபிறகும் இருந்து (மறுமையில்);  உறுதியைப் பயக்கும் - நன்மைப் பயனாகிய மேல் உலகத்தைத் தரும்; இன்பம் வந்து உறும் எனின் இனிது - (வாழ்வில்) இன்பம் வந்து நேருமாயின் இனிமையானது;  ஆயிடை - அவ்விடத்து; துன்பம் வந்து உறும் எனின் - துன்பம் வந்து நேருமாயின்; துறக்கல் ஆகுமோ?’ - அவ்வறத்தைக் கைவிட ஆகுமோ?

இன்ப துன்பங்கள் கலந்ததே வாழ்வு. அறவழி நடப்பார்க்கு  இன்பமே வரும். ஆயினும், ஒருவேளை துன்பம் வருமாயினும் அதுபற்றி அறத்தைக் கைவிடல் ஆகாது. அறம் என்ற சொல்லின் முழுப் பொருளும் தருமம் என்பதில் அடங்காது. பொருள் விளங்க வேண்டிய அளவுக்கே அறம் என்பதற்குத் தருமம் என்று உரை காண்கிறோம்.


“சிறுகா, பெருகா, முறைபிறழ்ந்து வாரா,

உறுகாலத்து ஊற்று ஆகா, ஆம் இடத்தே ஆகும்,

சிறுகாலைப் பட்ட பொறியும், அதனால்

இறுகாலத்து என்னை பரிவு.” ---  நாலடியார்.

இதன் பொருள் ---

குறையாது, கூடாது. முறைமாறி வந்து சேராது. வரவேண்டிய காலத்தில் வந்தே தீரும். எவராலும் அதைத் தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும்போதே, ஒவ்வொரு உயிருக்கும் விதிக்கப்பட்ட உண்மை இது ஆகும். இதை உணர்ந்து கொள்ளமால், துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்துவதால் என்ன பயன். (பயன் ஏதும் இல்லை).

ஊழ்வினைகளை நுகர்ந்தே தீரவேண்டுமாதலின், தீவினைகள் செய்யாதிருத்தல் வேண்டும்.


“பேறு, அழிவு, சாவு, பிறப்பு, இன்பத் துன்பம் என்று

ஆறு உள அந்நாள் அமைந்தன, -- தேறி

அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)

இவையிவை என்றுஉணரற் பாற்று”  ---  அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

செல்வமும், வறுமையும், இறப்பும், பிறப்பும், இன்பமும், துன்பமும் என்று சொல்லப்படுகின்ற ஆறும், முன்செய்த வினை காரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன. இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை, மாறி மாறி வருந்தோறும், மகிழாமலும், வருந்தாமலும், நம்மை நாடி வந்த இவை, இவை, இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்து அறிந்து அடங்குதலே செய்யத் தக்கது.


“வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை, - நினைத்தனைத்

தொல்லையது என்று உணர்வாரே தடுமாற்றத்து

எல்லை இகந்து ஒருவுவார்.” ---   நாலடியார்.

இதன் பொருள் ---

முற்பிறவியில் செய்த வினையின் பயன் இப்போது வருகின்ற துன்பம் என்று எண்ணாமல் அறிவற்ற மூடர்கள் வருந்துவார்கள். ஆனால், கற்றறிந்த பெரியோர்கள் இப்போது படுகின்ற துன்பங்களுக்கு எல்லாம் காரணம், நாம் முற்பிறவியில் செய்த தீவினைகளே என்பதை உணர்ந்து, இனித் தீவினைகளைச் செய்வதை விட்டு ஒழித்து, நல்வினைகளையே செய்ய முற்படுவார்கள்.


“பண்டு உருத்துச் செய்தபழவினை வந்து எம்மை

இன்று ஒறுக்கின்றது என அறியார், - துன்புறுக்கும்

மேவலரை நோவது என்? மின்நேர் மருங்குலாய்!

ஏவலாள் ஊருஞ் சுடும்.” ---  பழமொழி நானூறு.

இதன் பொருள் ---

மின்னலைப் போன்று விளங்கும் நுண்மையான இடையினை உடையவளே! ஒருவனால் ஏவி விடப்பட்ட ஏவலாளன் ஒரு ஊரையும் கூடச் சுட்டுப் பொசுக்கி விடுவான். அதற்கு, அவனை ஏவியவனை நோகவேண்டுமே அல்லாமல், அவனை நோவதால் ஒரு பயனும் இல்லை. அதுபோலவே, முன் பிறவியில் நாம் ஆத்திரம் கொண்டு செய்த பாவச் செயல்கள், தொடர்ந்து வந்து இப் பிறவியில் வருத்துகின்றது என்ற உண்மையைச் சிந்தித்து அறியாதவர்கள், தம்மைத் துன்பப்படுத்தும் பகைவர்களை, அது அவர்கள் செய்த செயலாகக் கொண்டு நொந்து கொள்வது எதற்காகவோ? 


பந்தித்த பாவங்கள் அம்மையில் செய்தன, இம்மைவந்து

சந்தித்த பின்னைச் சமழ்ப்பது என்னே, வந்து அமரர் முன்னாள்

முந்திச் செழுமலர் இட்டு முடிதாழ்த்து அடிவணங்கும்

நந்திக்கு முந்துற ஆட்செய்கி லாவிட்ட நன்னெஞ்சமே.   ---  அப்பர்.


முந்திச் செய்வினை இம்மைக்கண் நலிய

    மூர்க்கன் ஆகிக் கழிந்தன காலம்,

சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன்,

    சிறுச் சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்,

அந்தி வெண்பிறை சூடும்எம் மானே!

    ஆரூர் மேவிய அமரர்கள் தலைவா!

எந்தை நீஎனக்கு உய்வகை அருளாய்,

    இடைமருது உறை எந்தை பிரானே.         ---  சுந்தரர்


“தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்னும் புறநானூற்றுப் பாடல் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுக.


பொது --- 1110. வண்டுதான் மிக

அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

வண்டுதான் மிக (பொது)


அன்பர் மனத்தில் உறையும் முருகா! 

தேவரீரை வழிபட்டு உய்ய அருள்.



தந்தனா தனதனந் தந்தனா தனதனந்

     தந்தனா தனதனந் ...... தனதான


வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்

     பந்திமா மலர்சொரிந் ...... துடைசோர


வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்

     தந்தமா மதனலம் ...... விதமாக


விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்

     டொன்றுமா யுறவழிந் ...... தநுபோகம்


விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்

     துன்றன்மே லுருகஎன் ...... றருள்வாயே


பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்

     பைம்பொன்மா நகரிலிந் ...... திரன்வாழ்வு


பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்

     தன்பினோ ரகமமர்ந் ...... திடுவோனே


அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்

     தண்டுவாள் கொடுநடந் ...... திடுசூரன்


அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்

     டங்கைவே லுறவிடும் ...... பெருமாளே.


                      பதம் பிரித்தல்


வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகம் என்

     பந்திமா மலர் சொரிந்து, ...... உடைசோர,


வம்புசேர் கனி பொருந்து இன்பவாய் அமுது அருந்த,

     அந்த மா மதன் நலம் ...... விதமாக


விண்டு, மேனிகள் துவண்டு, அன்றில் போல், உளம்இரண்டு

     ஒன்றுமாய் உற அழிந்த், ...... அநுபோகம்


விஞ்சவே தரும் இளங் கொங்கையார் வினைகடந்து,

     உன்தன் மேல் உருக என்று ...... அருள்வாயே?


பண்டு பாரினை அளந்து, உண்ட மால் மருக! செம்

     பைம்பொன் மாநகரில், இந் ...... திரன்வாழ்வு


பண்பு எலாம் மிகுதி பொங்கு, இன்ப யானையை மணந்து,

     அன்பின் ஓர் அகம் அமர்ந் ...... திடுவோனே!


அண்டர்தாம் அதிபயம் கொண்டு வாடிட, நெடும்

     தண்டு வாள் கொடு, நடந் ...... திடு சூரன்


அங்கம் ஆனது பிளந்து எங்கும் வீரிட,வெகுண்டு,

     அம் கை வேல் உற விடும் ...... பெருமாளே.


பதவுரை


பண்டு பாரினை அளந்து உண்ட மால் மருக --- முன்பு பூமியை (வாமனராக வந்து) அளந்தவரும், (கண்ணனாக வந்து) உண்டவருமான திருமாலின் திருமருகரே!

செம் பைம் பொன்மா நகரில் இந்திரன் வாழ்வு –- செம்மையான பசுமையான பொன்னுலகம் எனப்படும் தேவலோகத்தில் இந்திரனின் செல்வமாக அமைந்தவரும்,

பண்பு எ(ல்)லா(ம்) மிகுதி பொங்கு இன்ப யானையை மணந்து --- பண்புகள் யாவும் நிறைந்து விளங்கும் இன்ப வடிவமான தேவயானை அம்மையாரைத் திருமணம் புணர்ந்தவரே!

 அன்பினோர் அகம் அமர்ந்திடுவோனே --- அன்பால் வழிபடுவோரின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!

அண்டர்தாம் அதிபயங் கொண்டு வாடிட --- தேவர்கள் மிக்க அச்சம் கொண்டு வாடி இருக்க,

நெடும் தண்டு வாள் கொடு நடந்திடு சூரன் அங்கமானது பிளந்து எங்கும் வீரிட வெகுண்டு --- பெரிய தண்டாயுதம், வாள் ஆகியவற்றைக் கொண்டு போரிட வந்த சூரபதுமனது உடலானது பிளவுபட்டு, எங்கும் கூச்சல் எழும்பும்படி சினந்து,

அங்கை வேல் உற விடும் பெருமாளே --- அழகிய திருக்கையில் விளங்கும் அழகிய வேலாயுதத்தைச் சென்று தாக்கும்படியாக விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

வண்டுதான் மிக இடம் கொண்ட கார் அளகம் --- வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் 

மென் பந்தி மா மலர் சொரிந்து --- வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்களைச் சொரிந்து, 

உடை சோர --- அணிந்துள்ள ஆடை நெகிழ,

வம்பு சேர் கனி பொருந்தி --- புதுமையான இன்பத்தைத் தருகின்றதும், கனியின் சுவை உடையதும் ஆகிய,

இன்ப வாய் அமுதருந்து அந்த மா மதன் நலம் --- இன்பத்தைத் தருகின்றதும் ஆகிய வாயூறலை அமுதமாக அருந்துகின்ற அந்த மன்மதலீலையின் நலமானது,

விதமாக விண்டு --- விதவிதமாக விளைய.

மேனிகள் துவண்டு --- இருவர் உடலும் சோர்வுபட்டு,

அன்றில் போல் உளம் இரண்டு ஒன்றுமாய் உறவு அழிந்து --- அன்றில் பறவையைப் போல இருவர் உள்ளமும் ஒன்றி, இரண்டு என்பது அழிந்து,  

அநுபோகம் விஞ்சவே தரும் இளங் கொங்கையார் வினைகடந்து --- காம நுகர்ச்சியை மிகுதியாகவே தருகின்ற இளமையான முலைகளை உடைய பொதுமாதரின் கூட்டுறவை விட்டு,

உன்றன் மேல் உருக என்று அருள்வாயே --- தேவரீரது திருவடிகளில் அடியேனது மனம் உருகி நிற்கும்படியாகத் திருவருள் புரிவீராக.


பொழிப்புரை


முன்னொரு காலத்தில் வாமனராக வந்து, மாவலியிடம் மூன்று அடி மண் கேட்டு, தனது நெடிய திருவடியால் இந்த உலகை அளந்தவரும், கண்ணனாக வந்து இந்த பூமியை உண்டவருமான திருமாலின் திருமருகரே!

    செம்மையான பசுமையான பொன்னுலகம் எனப்படும் தேவலோகத்தில் இந்திரனின் செல்வமாக அமைந்தவரும், நற்பண்புகள் யாவும் நிறைந்து விளங்கும் இன்ப வடிவமான தேவயானை அம்மையாரைத் திருமணம் புணர்ந்தவரே!

     அன்பால் வழிபடுவோரின் உள்ளத்தில் வீற்றிருப்பவரே!

    தேவர்கள் மிக்க அச்சம் கொண்டு வாடி இருக்க, பெரிய தண்டாயுதம், வாள் ஆகியவற்றைக் கொண்டு போரிட வந்த சூரபதுமனது உடலானது பிளவுபட்டு, எங்கும் கூச்சல் எழும்பும்படி சினந்து, அழகிய திருக்கையில் விளங்கும் அழகிய வேலாயுதத்தைச் சென்று தாக்கும்படியாக விடுத்து அருளிய பெருமையில் மிக்கவரே!

    வண்டுகள் நிரம்பவும் மொய்க்கும் கரிய கூந்தலில் வரிசையாக வைக்கப் பெற்ற நல்ல மலர்களைச் சொரிந்து,  அணிந்துள்ள ஆடை நெகிழ, புதுமையான இன்பத்தைத் தருகின்றதும், கனியின் சுவை உடையதும், இன்பத்தைத் தருகின்றதும் ஆகிய வாயூறலை அமுதமாக அருந்துகின்ற அந்த மன்மதலீலையின் நலமானது, விதவிதமாக விளைய. இருவர் உடலும் சோர்வுபட்டு, அன்றில் பறவையைப் போல இருவர் உள்ளமும் ஒன்றி, இரண்டு என்பது அழிந்து, காம நுகர்ச்சியை மிகுதியாகவே தருகின்ற இளமையான முலைகளை உடைய பொதுமாதரின் கூட்டுறவை விட்டு, தேவரீரது திருவடிகளில் அடியேனது மனம் உருகி நிற்கும்படியாகத் திருவருள் புரிவீராக.

விரிவுரை

இப் பாடலின் முற்பகுதியில் பொதுமாதர் கலவி நிலைதனை எடுத்துக் கூறி, அதனைஐ விடுத்து நிலையான இன்ப வாரிதியில் திளைத்து இருக்கும் பேற்றைப் பெறுதற்கு, இறைவன் திருவடியில் மனம் உருகி வழிபட வேண்டும் என்று அறிவுறுத்தினார் அடிகளார். “மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் என் உற்ற மனம், உன்தனை நினைத்து அமைய அருள்வாயே” என்று பிறிதொரு திருப்புகழில் அடிகளார் காட்டி உள்ளார் என்பதை அறிக.


பண்டு பாரினை அளந்து உண்ட மால் --- 

பாரினை உண்ட மால், பாரினை அளந்த மால். கண்ணனாக அவதரித்து மண்ணை உண்ட பெருவாயர். வாமனராக வந்து அவதரித்து மாவலியிடம் மூன்று அடி மண் கேட்டு, உலகை அளந்த திருமால். பிரளயத்தின்போது பூவுலகை திருமால் விழுங்கி தன்  பொன் வயிற்றில் வைத்துக் காத்த நிகழ்வை ஆழ்வார்கள் பாடி உள்ளார்கள்.


“பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும் வள்ளல் 

வல் வயிற்றுப் பெருமான் 

உள்ளுளார் அறிவார் அவன்தன் 

கள்ளமாய மனக்கருத்தே.” -- நம்மாழ்வார்)


“மண்ணும் மலையும் மறிகடலும் மாருதமும்

விண்ணும் விழுங்கியது மெய்யென்பர்,

எண்ணில் அலகளவு கண்டசி ராழியாய்க் 

கன்றிவ் வுலகளவும் உண்டோ? உன் வாய்.” -- பொய்கையாழ்வார்


“ உற்று வணங்கித் தொழுமின் உலகேழும்

முற்றும் விழுங்கும் முகில் வண்ணன்” -- பூதத்தாழ்வார்.


“ஆரே அறிவார் அனைத்துலகும் உண்டு உமிழ்ந்த

போாழியான் தன் பெருமையை” -- திருமழிசையாழ்வார்.


“மண்ணும் மலையும் கடலும் உலகேழும்

உண்ணும் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளை” –- பெரியாழ்வார். 


“நாமம் பல சொல்லி, நாராயணா என்று 

நாம் அங்கையால் தொழுதும் நல்நெஞ்சே! - வாமருவி

மண்ணுலகம் உண்டு உமிழ்ந்த வண்டு அறையும் தண் துழாய் *

கண்ணனையே காண்க நம் கண்”    -- மூன்றாம் திருவந்தாதி.


“உலகம் உண்ட பெருவாயா! உலப்பில் கீர்த்தி அம்மானே” --- நம்மாழ்வார்.


“ஞாலமும் மேலை விண்ணோடு உலகேழும் உண்டு

குறளாய் ஒர் ஆலின் இலைமேல் பாலனும்”   - அப்பர்.


    பிரகலாதருடைய புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன் மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும் தன்வசப் படுத்தி ஆண்டான். அதனால் சிறிது செருக்குற்று, இந்திராதி இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து, அவர்களது குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான். தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டான். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம் சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர். தேவர் குறை தீர்க்கவும், காசிபருக்கு அருளவும் வேண்டி, திருமால் அதிதி தேவியின் திருவயிற்றில் கருவாகி, சிறிய வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.


“காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்

வாலறிவற்கு அதிதிக்கு ஒரு மகவாய்,

நீல நிறத்து நெடுந்தகை வந்துஓர்

ஆல்அமர் வித்தின் அரும்குறள் ஆனான்.”


    மாவலி ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ் வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக் கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல இரவலர் வந்து, பொன்னையும் பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர்.  மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி வழங்கினான்.

    அத் தருணத்தில், வாமனர் முச்சிப்புல் முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும் ஆக, சிறிய வடிவுடன் சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்" என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத் திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும் சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க மகிழ்ச்சி உறுகின்றேன்.  நின்னைப் போல் வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை.  என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.

    அருகிலிருந்த வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன் மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான். அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று" என்று தடுத்தனன்.

    மாவலி, "சுக்கிரபகவானே! உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று. இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார். ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர் ஆகும்”.


“மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது

ஏந்திய கைகொடு இரந்தவர் எந்தாய்,

வீய்ந்தவர் என்பவர் வீய்ந்தவரேனும்

ஈய்ந்தவர் அல்லது இருந்தவர் யாரே.”


“எடுத்துஒருவருக்கு ஒருவர் ஈவதனின் முன்னே

தடுப்பது நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,

கொடுப்பது விலக்கு கொடியோய், உனது சுற்றம்

உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.”

"கொடுப்பதைத் தடுப்பவனது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி வாமனரது கரத்தில் நீர் வார்த்து, "மூவடி மண் தந்தேன்" என்றான்.

உடனே வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம் ஓரடியாகவும், விண்ணுலகை எல்லாம் ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும் பதமும் மாவலி பெற்றனன்.


அன்பினோர் அகம் அமர்ந்திடுவோனே --- 

அகம் – உள்ளம்.  “நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்” என்பார் அப்பர் பெருமான்.  

"இறைவன் எங்கே இருக்கின்றான்?" இந்தக் கேள்வியை விட, "இறைவன் இல்லாத இடம் எது?" என்று கேட்பது பயனுடையதாக இருக்கும்.

ஔவைப் பாட்டி ஒரு நாள் நெடுந்தூரம் நடந்து வந்து, சற்றே இளைப்பாற ஒரு கோயிலுக்குள் நுழைந்து, சுவாமி சந்நிதிக்கு நேரே காலை நீட்டி அமர்ந்தார். அதை அங்கு இருந்த சிறுவன் ஒருவன் பார்த்தான். "பாட்டி, சுவாமி இருக்கின்றார்" என்றான். ஔவைப் பாட்டி, "அப்படியா, நான் களைப்பில் கவனிக்கவில்லை. நானோ கிழவி. மிகவும் அலுப்பாக உள்ளது. சுவாமி இல்லாத இடமாகப் பார்த்து, நீயே எனது காலைக் கொஞ்சம் திருப்பி விடு. உனக்குப் புண்ணியமாகப் போகும்" என்றார். பையன் சிந்தனையில் ஆழ்ந்தான். "சுவாமி இல்லாத இடமா?"

எங்கும் நிறைந்து விளங்குவது பரம்பொருள். அது அன்பு வடிவானது. ஓர் உருவமோ, ஒரு பெயரோ இல்லை. இறைவன் அன்பு வடிவானவன் என்பதை, "அன்பு உருவாம் பரசிவமே" என்னும் வள்ளல் பெருமான் வாக்கால் அறியலாம். "நேயத்தே நின்ற நிமலன்" என்றும் "அன்பினில் விளைந்த ஆரமுதே" என்று மணிவாசகப் பெருமான் காட்டினார். 

இறைவன் ஒரு நாமம், ஓர் உருவம் இல்லாதவன். அவன் சோதி வடிவமானவன். சோதி என்று நாம் கருதுவதுமே உருவ நிலைதான் என்கிறது மணிவாசகம். "சோதியாய்த் தோன்றும் உருவமே!, அருவாம் ஒருவனே!" எனவரும் திருவாசகத்தால் அறியலாம். அந்த சோதி என்பதும் கூட, நமது கற்பனையைக் கடந்தது என்பதால், "கற்பனை கடந்த சோதி", என்றும், அது கருணையே வடிவானது என்பதால், "கருணையே வடிவமாகி" என்றும் தெய்வச் சேக்கிழார் பெருமான் வழங்கினார்.

அன்பு எங்கு உள்ளதோ, அங்கே சிவம் விளங்கும். அன்பு வேறு, சிவம் வேறு என்பவர் அறிவு இல்லாதவர். அன்பும் சிவமும் இரண்டு அல்ல என்கிறார் திருமூல நாயனார்.

"அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவு இலார்,

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிகிலார்,

அன்பே சிவம் ஆவது ஆரும் அறிந்தபின்,

அன்பே சிவமாய் அமர்ந்து இருப்பாரே."        -- திருமந்திரம்.

"மலர்மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்" என்றார் திருவள்ளுவ நாயனார். "மலர்மிசை ஏகினான்" என்னும் சொற்றொடருக்கு, அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேருதல் என்று அற்புதமான உரையை வகுத்தார் பரிமேலழகர். "சேர்தல்" என்பது "இடைவிடாது நினைத்தல்" என்றார்.

மலர் என்றது, அன்பால் நினைவாரது உள்ளமாகிய தாமரை மலர். "பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை" என்றாற் போல், பூ என்று வெறுமனே சொன்னாலே அது தாமரையைத் தான் குறிக்கும். இங்கே உள்ளமானது தாமரை எனப்பட்டது. அன்பு இருந்தால், உள்ளம் தாமரை ஆகும். அதற்கு கையானது குவிய வேண்டும். கை குவிந்தால் இதயம் தானே மலர்கின்ற தன்மையைப் பெறும். "கரமலர் மொட்டித்து இருதயம் மலர, கண் களி கூர, நுண் துளி அரும்ப, சாயா அன்பினை நாள்தொறும் தழைப்பவர்" என்பார் மணிவாசகப் பெருமான். "கைகுவித்து இரு கண்களில் நீர் பெருகி" என்பார் தாயுமானார்.  

இறைவனை உள்ளக் கமலத்தில் வைத்து, இடையறாது வழிபடுவது ஞானபூசை ஆகும். "இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞான பூசை" என்கிறது சைவசித்தாந்தம். இந்த ஞான பூசையைச் செய்து இறைவனுடைய மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவர் பெரியபுராணத்தில் வைத்துப் போற்றப்படுகின்ற பூசலார் நாயனார்.

"அங்கு இங்கு எனாதபடி, எங்கும் பிரகாசமாய், ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எதுவோ", "தன் அருள் வெளிக்கு உள்ளே அகிலாண்ட கோடி எல்லாம் தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் தழைத்தது எதுவோ", "மனம் வாக்கினில் தட்டாமல் நின்றது எதுவோ" சமய கோடிகள் எல்லாம் தம் தெய்வம், எம் தெய்வம் என்று எங்கும் தொடர்ந்து எதிர் வழக்கு இடும்படியாக நின்றது எதுவோ", "எங்கணும் பெருவழக்காய் உள்ளது எதுவோ", "யாதினும் வல்ல ஒரு சித்தாகி (அறிவுப் பொருளாகி) இன்பமாய் என்றைக்கும் உள்ளது எதுவோ"  "கங்குல் பகல் அற நின்ற எல்லை உள்ளது எதுவோ" அதுவே பரம்பொருள் என்கின்றார் தாயுமான அடிகளார்.

எனவே, அளவில்லாத ஆற்றலும், அளவில்லாத கருணையும் உடைய இறைவன், அவரவர் கருதுகின்ற வடிவங்களில், அவரவர் இடுகின்ற பெயரைக் கொண்டு, எழுந்தருளி அருள் பாலிக்கின்றான் என்பது தான் உண்மை. எனவே, அன்பு வடிவான சிவத்தை, அன்பு ஒன்றினால் மட்டுமே அடைய முடியும். எனவே தான், அன்பால் நினைவாரது உள்ளம் "கமலம்" எனப்பட்டது.

அழுத பிள்ளையைப் போல, துன்பம் நேரும்போதும், தேவை உண்டாகும் போதும் இறைவனை நினைந்து வழிபட்டு, பிறகு அவனை மறந்து உலகியலிலேயே உழல்வது மனித இயல்பு. அவ்வாறு இல்லாமல், எப்போதும் இறைவனது திருவடியை நினைப்பதையே, சேர்தல் என்னும் சொல்லால் குறித்தார் திருவள்ளுவ நாயனார்.

  உருவமும் பெயரும் அற்ற, பரம்பெருளுக்கு உரியது, இந்த வடிவம்தான், இந்தப் பெயர்தான் என்று பாவித்து முழங்குவது எல்லாம் வெறும் சமயப் பூசலே. 

"யாதுஒரு தெய்வம் கொண்டீர், அத்தெய்வம் ஆகி ஆங்கே

மாதுஒரு பாகனார்தாம்  வருவர், மற்றத் தெய்வங்கள்

வேதனைப்படும் இறக்கும், பிறக்கும், மேல் வினையும் செய்யும்,

ஆதலால், இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே.

 

என்கிறது சைவசித்தாந்தம்.

 

எச்சமயத் தெய்வமும் தான் என நிறைந்த தெய்வம்;

எல்லாம் செய் வல்ல தெய்வம்; எனது குல தெய்வம்.

 

என்கிறார் வள்ளல் பெருமான்.

 

“ஆரொருவர் உள்குவார் உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்“ என்பது அப்பர் தேவாரம். 

 

சுருதி வானவனாம், திருநெடுமாலாம், 

சுந்தர விசும்பின் இந்திரனாம்,

பருதி வானவனாம், படர்சடை முக்கண் 

பகவனாம், அக உயிர்க்கு அமுதாம்

எருது வானவனாம், எயில்கள் மூன்று எரித்த 

ஏறு சேவகனுமாம்,"பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம், கங்கை

கொண்ட சோளேச்சரத்தானே.      ---  திருவிசைப்பா.

 

"பின்னும் கருதுவார் கருதும் உருவமாம்" என்பதைப் பரிமேலழகர், "அவர் நினைந்த வடிவத்தோடு" என்று அழகுறக் காட்டினார்.

இறைவன் தன்னை அன்போடு வழிபடுபவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குவான் என்பதை, "நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்" என்றும், "மறவாதே தன்திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற திறலான்" என்றும் அப்பர் பெருமான் பாடிக் காட்டினார். "அகன்அமர்ந்த அன்பினர் ஆய், அறுபகை செற்று, ஐம்புலனும் அடக்கி, ஞானம் புகல் உடையோர் தம் உள்ளப் புண்டரீகத்து உள் இருக்கும் புராணர்" புறத்தே கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் இடம் திருவீழிமிழலை என்றார் திருஞானசம்பந்தப் பெருமான். 

புறத்தே கோயில் மற்றும் பிற இடங்களில் நமது வேண்டுதலுக்கு ஏற்ப எழுந்தருளி அருள் புரிகின்ற, பரம்பொருளுக்கு, நிரந்தரமான இடம் உயிர்களின் உள்ளமே ஆகும்.

நஞ்சத்தை உண்டதனால் இருள் ஒத்த செறிந்த அழகினை உடைய கண்டத்தை உடைய எம்பெருமானை, வானோர் உலகத்தான், தேவர் உலகத்தான் என்று சொல்பவர்கள் எல்லாம்  அவர்கள் அறிந்தவாறே சொல்லிக்கொள்ளட்டும். ஞானமே வடிவாகிய அவன் என் நெஞ்சத்தான் என்றே நான் சொல்வேன் என்கின்றார் காரைக்கால் அம்மையார்.

 

“வானத்தான் என்பாரும் என்க; மற்று உம்பர்கோன்

தானத்தான் என்பாரும் தாம் என்க; - ஞானத்தான்,

முன் நஞ்சத்தால் இருண்ட மொய்ஒளிசேர் கண்டத்தான்,

என்நெஞ்சத் தான்என்பன் யான்.”       --  அற்புதத் திருவந்தாதி.


இறைவனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர், பொருளின் இயல்பு பற்றி அறிந்து கொள்ளவேண்டும். எந்தப் பொருளுக்கும் பொது இயல்பு என்றும் சிறப்பு இயல்பு என்றும் இருநிலைகள் உண்டு. இயல்பு என்றாலும் இலக்கணம் என்றாலும் ஒன்றே. ஒரு பொருளுக்கு அதன் தன்மையில் இயல்பாகவே உள்ள இயல்பு "சிறப்பு இயல்பு" என்றும், வேறு ஒரு பொருளின் சார்பினால் உண்டாகி, அந்தச் சார்பு நீங்கியதும், நீங்குகின்ற இயல்புக்கு "பொது இயல்பு" என்றும் பொருள். சிறப்பு இயல்பு என்பது "சொரூப இலக்கணம்" ஆகும். பொது இயல்பு என்பது, "தடத்த இலக்கணம்" ஆகும்.

ஆன்மாவானது, எந்தப் பொருளைச் சார்ந்து இருக்கின்றதோ, அந்தப் பொருளின் தன்மையை அடைந்து நிற்கும். காரணம், அது தற்சுதந்தரம் இல்லாதது. ஆனால், இறைவனோ, வந்தப் பொருளின் சார்பினாலும் மாறுபடாமல் என்றும் ஒரே தன்மையனாய் இருப்பான். இது பற்றியே, இறைவனை "மெய்ப்பொருள்" என்றும் "செம்பொருள்" என்றும் பெரியோர் வழங்குவர். குணம், குறி, பெயர், செயல், ஆகிய ஒன்றும் இல்லாமல், தன் நிலையில் தானாகவே விளங்கும் ஒரு பொருள்தான் இறைவன். அது மெய்ப்பொருளின் சொரூப நிலை ஆகும்.


கருத்துரை

அன்பர் மனத்தில் உறையும் முருகா! தேவரீரை வழிபட்டு உய்ய அருள்.


ஆபத்தில் யாருக்கும் உதவ வேண்டும்.

“அஞ்சல்என நாயினுடல் தருமன் சுமந்துமுன்

     ஆற்றைக் கடத்துவித்தான்;

அடைக்கலம் எனும்கயற் காகநெடு மாலுடன்

     அருச்சுனன் சமர்புரிந்தான்;


தஞ்சம்என வந்திடு புறாவுக்கு முன்சிபி

     சரீரம் தனைக்கொடுத்தான்;

தடமலைச் சிறகரிந் தவனைமுன் காக்கத்

     ததீசிமுது கென்பளித்தான்;


இன்சொலுட னேபூத தயவுடையர் ஆயினோர்,

     எவருக்கும் ஆபத்திலே

இனியதம் சீவனை விடுத்தாகி லும்காத்

     திரங்கிரட் சிப்பர் அன்றோ!


வஞ்சகிர வுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன்

     வளர்சூரன் உடல்கீண்டவா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமர! ஈசனே.”


இதன் பொருள் ---


        வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர்சூரன் உடல் கீண்டவா – வஞ்சகச் செயலுடைய கிரவுஞ்ச மலையையும் தாருகனையும் சிங்கமுகனையும் சூரபதுனையும் உடலைப் பிளந்த வீரரே!  

        மயில் ஏறி விளையாடு குகனே - மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

முன் அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து ஆற்றைக் கடத்துவித்தான் - முற்காலத்தில் அஞ்சாதே என்று ஒரு நாயைத் தருமபுத்திரன் சுமந்துசென்று ஆற்றைக் கடப்பித்தான்;

        அடைக்கலம் எனும் கயற்கு ஆக நெடுமாலுடன் அருச்சுனன் சமர்புரிந்தான் - அடைக்கலம் என வந்த கயன் என்னும் கந்தருவனைக் காப்பாற்றத் (தன் ஆருயிர் நண்பனும் தலைவனுமான) திருமாலுடன் அருச்சுனன் போரிட்டான்; 

        முன் தஞ்சம் என வந்திடு புறாவுக்குச் சிபி சரீரந்தனைக் கொடுத்தான் -  முற்காலத்தில் அடைக்கலம் என்று வந்த புறாவைக் காப்பாற்றச் சிபிச்சக்கரவர்த்தி தன் உடம்பையே அதற்கு ஈடாகத் தந்தான்; 

        முன் தடமலைச் சிறகு அரிந்தவனைக் காக்கத் ததீசி முதுகு என்பு அளித்தான் - முன்னாளில் பெரிய மலைகளின் சிறகை வெட்டிய இந்திரனைக் காப்பாற்றத் ததீசிமுனிவன் தன் முதுகெலும்பை (வச்சிராயுதமாக்க) அளித்தான்; 

        இன்சொலுடனே பூத தயவு உடையர் ஆயினோர் – இனிய மொழியும் உயிர்களிடம் இரக்கமும் கொண்டோர், ஆபத்திலே எவருக்கும் தம் இனிய சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ? – ஆபத்து நேர்ந்த காலத்தில் தம் இனிய உயிரைவிட்டாவது இரக்கத்துடன் யாரையும் காப்பாற்றி அருளுவர் அல்லவா?


விளக்கம்

    திருவள்ளுவ நாயனார், அன்பு இல்லாதவர்கள் பிறர்க்குப் பயன்படாதவர்கள் என்பதால், எல்லாப் பொருளையும் தமக்கே உரியவர்கள் அவர்கள் என்றும், அன்பு உடையவர்கள் பொருளால் மட்டும் அல்லாது தமது உடம்பாலும் பிறருக்கு உரியவர்கள் என்றும் காட்டினார். “அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர், அன்பு உடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்பது திருக்குறள். எலும்பு, ஆகுபெயராய் உடம்பை உணர்த்தியது.

தருமன் கதை

தருமன் சுவர்க்கத்தை நாடிப்போகையில், ஒரு நாய் இழிந்த நாற்றத்துடன் பின் தொடர்ந்தது. அங்குக் குறுக்கிட்ட ஆற்றைக் கடக்கமுடியாமல் அது வருந்த நாயைத் தருமன் தன் தோளிலே சுமந்து அக்கரையில் கொண்டுசேர்த்தான்.


அருச்சுனன் கதை:

தன்னைக் கொல்லவேண்டிச் சக்கரத்தை ஏவிய கண்ணனுக்கு அஞ்சிய கயன் என்னும் கத்தருவன் அருச்சுனனைச் சரணடைந்தான். அவனைக் காப்பதற்காகக் கண்ணனோடு அருச்சுனன் போர் செய்ய நேர்ந்தது, முடிவில் இருவரும் சமாதானம் அடைந்து கந்தருவனை விடுவித்தனர்.


சிபிச்சக்கரவர்த்தி கதை:

தன்னை இழந்தும் பிறர் நலம் காணும் வள்ளலாய் வாழ்ந்தவர்  சூரியகுலத் தோன்றலாகிய சிபி என்னும் சக்கரவர்த்தி. அவர்தம் வள்ளல் தன்மையை உலகறியச் செய்ய எண்ணிய இந்திரன் பருந்தாகவும், இயமன் புறாவாகவும் உருக் கொண்டனர். புறாவினைப் பருந்து துரத்த, புறா சிபியிடம் அடைக்கலம் புகுந்தது. ''என்   இரையைக் கொடு'' என்று பருந்து சிபியைக் கேட்க, சக்கரவர்த்தியோ, தன்பால் அடைக்கலம் புகுந்த ஒன்றனைத் தருதல் இயலாது என மறுத்து, ஈடாக வேறு எதனை வேண்டினும் தருவதாகக் கூறினான். அதற்கு உடன்பட்ட பருந்து, அந்தப் புறாவின் எடை அளவுக்குச் சிபியின் உடலில் இருந்து ஊன் தந்தால் போதும் என்றது. மகிழ்ந்த சிபி, புறாவினை ஒரு தட்டில் வைத்து, தன் உடல் தசையில் பகுதியை துலாக்கோலின் வேறு தட்டில் இட்டான். ஆனால், தன் உடல் உறுப்புகளை எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக அரிந்து வைத்த போதும் துலாக்கோல் சமன் அடையாது, புறாவின் தட்டு தாழ்ந்தே நின்றது. பின்னர், தானே தட்டில் ஏறி நின்றனன். தட்டுகள் சமநிலை உற்றன. அப்போது இந்திரனும் இயமனும் தத்தம் உண்மை உருவோடு தோன்றி அவர்க்கு வேண்டிய வரங்களைத் தந்து போயினர் என்பது வரலாறு.

"புறவு ஒன்றின் பொருட்டாகத் துலை புக்க

   பெருந்தகைதன் புகழில் பூத்த

அறன் ஒன்றும் திரு மனத்தான். அமரர்களுக்கு

   இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்

திறல் உண்ட வடி வேலான். ‘’தசரதன்’’ என்று.

   உயர் கீர்த்திச் செங்கோல் வேந்தன்.

விறல்கொண்ட மணி மாட அயோத்திநகர்

   அடைந்து. இவண் நீ மீள்தல்!’ என்றான்".


"இன் உயிர்க்கும் இன் உயிராய்

   இரு நிலம் காத்தார் என்று

பொன் உயிர்க்கும் கழலவரை

   யாம் போலும். புகழ்கிற்பாம்?-

மின் உயிர்க்கும் நெடு வேலாய்! -

   இவர் குலத்தோன். மென் புறவின்

மன் உயிர்க்கு. தன் உயிரை

   மாறாக வழங்கினனால்"

என்று கம்பநாட்டாழ்வார் போற்றி உள்ளார்.


"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்

தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்

கால் உணவாகச் சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருளக் கொடுஞ்சிறைக்

கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஒரீஇத்

தன் அகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக"

என்று புறநானூற்றுப் பாடலிலும் சிபியின் பெருமை போற்றப்பட்டு இருப்பது காண்க.


ததீசியின் கதை:

முற்காலத்தில் மலைகளுக்குச் சிறகுகள் இருந்தன. அவைகள் தாம் நினைத்த இடங்களுக்குப் பறந்து சென்று ஊர்களையும் அவைகளில் உள்ள மக்களையும், மேல் விழுந்து கொன்று பாழாக்கின. எல்லாரும் இந்திரனை வேண்டிக் கொண்டதனால், அவன் அவைகளின் சிறகுகளை வெட்டி உலகத்திற்கு உபகாரம் பண்ண எண்ணினான். தன்னுடைய வச்சிராயுதம் மழுங்கி இருந்தமையால் அங்ஙனம் செய்ய அவனால் ஆகவில்லை. உடனே, அவன் பூலோகத்தில் தவம் செய்துகொண்டிருந்த ததீசி முனிவரைக் கண்டு, "ஐயனே! அடியேனுடைய வச்சிராயுதம் மழுங்கினமையால், அதனால் மலைகளின் சிறகுகளை வெட்டி இப்பூலோகத்து உயிர்களுக்கு உபகாரம் செய்ய முடியவில்லை. தேவரீருடைய முதுகெலும்பால் வேறொரு புதிய வச்சிராயுதம் செய்துகொண்டால், அவைகளை நான் சிறகு அரிந்து அடக்கி விடுவது நிச்சயம். ஆகையால், அதை எனக்கு அருளவேண்டும்" என்று தன் குறையிரந்து வேண்டினான். அது கேட்டவர், முதல் எழு வள்ளல்களில் ஒருவராகையால், "இந்திரனே! ஜீவகாருண்யமே எமக்கு முதற்படியாய் உள்ளது. அதுவே அன்பை வெளிப்படுத்துவது. இச் சரீரம் நிலையற்றது. இது யாருக்குச் சொந்தம்? செத்தால் நாய்க்கும் பேய்க்கும் ஈக்கும் எறும்புக்கும், காக்கைக்கும் கழுகுக்கும் சொந்தம், எனக்கும் சொந்தம், உனக்கும் சொந்தம். இது ஒரு சாக்குப்பை. இருகாலில் செல்லும் பேய்த்தேர், இது நீர்க்குமிழி போன்றது. இது இருக்கும் இப்பொழுதே பல்லுயிர்க்கும் உபகாரம் புரியவேண்டும். இந்தா, இதை எடுத்து உனது விருப்பம் போல் செய்துகொள்" என்றார்.  தமது ஜீவனைக் கபாலமூலமாய் வெளிப்படுத்தி விட்டுக் கட்டைப் பிணமாய் இருந்தார். அதுகண்ட இந்திரன் அவருடைய ஜீவகாருண்யத்தையும் அன்பையும் வியந்தபடியே, அந்த உடலின் முதுகெலும்பைக் கொண்டு ஒரு புதிய வச்சிராயுதம் செய்து, அதனால் மலைகளின் சிறகுகளைக் கொய்து, பல்லுயிரையும் காத்தான்.  

பிறர்மேல் அன்பற்ற சுயநலப் பிரியர்கள் தமது உடல் பொருள் ஆவி முன்றும் தம்மது என்று தாம் இருப்பர். அன்பு உடையார் அங்ஙனம் இன்றித் தமது கண்ணைப் பிடுங்கி அப்பின கண்ணப்பரைப் போல், தமது உயிரையும் பிறர்க்கு வழங்கச் சித்தமாய் இருப்பார்கள். பிரதி உபகாரம் கருதி செய்ய மாட்டார்கள். "கைம்மாறு வேண்டா கடப்பாடு, மாரி மாட்டு என்ஆற்றும் கொல்லோ உலகு" என்றபடி பிரதி உபகாரம் வேண்டாமலே பகைவர்க்கும் நன்றி செய்வார்கள்.


52. தெரிந்து வினையாடல் - 09. வினைக்கண்

திருக்குறள் பொருட்பால் அ. அரசியல் அதிகாரம் 52 -- தெரிந்து வினையாடல் இந்த அதிகாரத்துள் வரும் ஒன்பதாம் திருக்குறளில், "மேற்கொண்ட செயலில...