8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

 


            8. நல்லது நாயகனுக்கு

                         ---


"அல்லமரும் குழலாளை வரகுணபாண்

     டியராசர் அன்பால் ஈந்தார்!

கல்லைதனில் மென்றுமிழ்ந்த ஊன்அமுதைக்

     கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!

சொல்லியதண் டலையார்க்குக் கீரையும்மா

     வடுவும்ஒரு தொண்டர் ஈந்தார்!

நல்லதுகண் டாற்பெரியோர் நாயகனுக்

     கென்றதனை நல்கு வாரே."


இதன் பொருள் ---


அல் அமரும் குழலாளை வரகுண பாண்டிய ராசர் அன்பால் ஈந்தார் - இருள்போலும் கரிய நிறம் பொருந்திய  கூந்தலை உடையவளை வரகுண பாண்டிய மன்னர் அன்புடன் அளித்தார், 


கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன் அமுதைக் கண்ணப்பர் கனிவால் ஈந்தார் - தேக்கிலைக் கலத்திலே மென்று உமிழ்ந்த இறைச்சியாகிய உணவைக் கண்ணப்ப நாயனார் அன்புடன் காளத்தி இறைவருக்குக் கொடுத்தார்.


சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும் ஒரு தொண்டர் ஈந்தார் - புகழ் பெறுகிற திருத் தண்டனை என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு விளங்கும் சிவபரம்பொருள் ஆகிய தண்டலையாருக்குச் செங்கீரையும் மாவடுவும் ஓர் அடியவர் படைத்தார்.


பெரியோர் நல்லது கண்டால் அதனை நாயகனுக்கு என்று நல்குவார் - சான்றோர்கள் நல்ல பொருளைப் பார்த்தால், அது நம் இறைவனுக் காகட்டும் எனக்  கொடுப்பார்கள்.


     வரகுணபாண்டியர் தாம்  மணந்த மனைவி அழகாய் இருந்ததனால் சிவபிரானுக்கென்று படைத்தார்; அந்த  அம்மையார்  சிவலிங்கத்தில் மறைந்தார். ஆனால்;  இவர் பற்றிய கைமட்டும் மறையாதிருந்தது வரகுணர் வருந்திச்  சிவபிரானை வேண்ட அக்கையும்  மறைந்தது. வேடரான திண்ணனாா் காளத்தியப்பரைக் கண்டவுடன் தம்மை  மறந்து தாயினும் அன்புடையராய்க், கான விலங்குகளின் ஊனை நெருப்பில் வதக்கி வாயிலிட்டுச் சுவை பார்த்துக் கல்லையில் வைத்துக் கொண்டு வந்து ஊட்டினார்.


      கணமங்கையில் வாழ்ந்த அரிவாள்தாய நாயனார் திருத் தண்டலை இறைவர்க்குச் செங்கீரையும் மாவடுவும் (தாம் உணவின்றி இளைத்தபோது கூட) படைத்து அருள்பெற்றார்.


     அடியவர்கள் தமக்கு வாய்த்த நல்ல பொருளை இறைவனுக்கு அளிப்பர் என்பது கருத்து.


72. மாணிக்கங்கள்

 



               72. மாணிக்கங்கள்

                            -----


சுழிசுத்த மாயிருந்ததிலும் படைக்கான

     துரகம்ஓர் மாணிக் கம்ஆம்;

  சூழ்புவிக் கரசனாய் அதிலேவி வேகமுள

     துரையுமோர் மாணிக் கம்ஆம்;


பழுதற்ற அதிரூப வதியுமாய்க் கற்புடைய

     பாவையோர் மாணிக் கம்ஆம்;

  பலகலைகள் கற்றறி அடக்கமுள பாவலன்

     பார்க்கிலோர் மாணிக் கம்ஆம்;


ஒழிவற்ற செல்வனாய் அதிலே விவேகியாம்

     உசிதனோர் மாணிக் கம்ஆம்;

  உத்தம குலத்துதித் ததிலுமோ மெய்ஞ்ஞானம்

     உடையனோர் மாணிக் கம்ஆம்;


அழிவற்ற வேதாக மத்தின்வடி வாய்விளங்

     கமலனே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அழிவுஅற்ற வேத ஆகமத்தின் வடிவாய் விளங்கு அமலனே - கெடுதல் இல்லாத மறைவடிவாயும் ஆகம வடிவாயும் விளங்கும் தூயவனே!, 


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


சுழி சுத்தமாய் இருந்து, அதிலும் படைக்கு ஆன துரகம் ஓர் மாணிக்கம் ஆம் - தூய சுழிகளுடன் போருக்கும் பயன்படும் குதிரை ஒரு மாணிக்கம் போன்றது.


சூழ்புவிக்கு அரசனாய் அதிலே விவேகம் உ(ள்)ள துரையும் ஓர் மாணிக்கம் ஆம் - சூழும் உலகிற்கு மன்னனாகி மேலும் அறிவும் உடைய தலைவன் ஒரு மாணிக்கம் போன்றவன், 


பழுதுஅற்ற அதிரூபவதியுமாய்க் கற்பு உடைய பாவை ஓர் மாணிக்கம் ஆம் - குற்றமற்ற சிறந்த அழகும் கற்பும் உடைய மங்கை ஒரு மாணிக்கம் போன்றவள்.


பல கலைகள் கற்று அறி அடக்கம் உ(ள்)ள பாவலன் பார்க்கில் ஓர் மாணிக்கம் ஆம் - பலவகையான கலைகளைப் படித்தறிந்து, அடக்கமாயிருக்கும் பாவலன் ஆராயின் ஒரு மாணிக்கம் போன்றவன். 


ஒழிவு அற்ற செல்வனாய் அதிலே தியாகியாம் உசிதன் ஓர் மாணிக்கம் ஆம் - அளவில்லாத செல்வத்துடன் மேலுங் கொடையாளியுமான உயர்ந்தோன் ஒரு மாணிக்கம் போன்றவன்.


உத்தம குலத்து உதித்து அதிலும் மெய்ஞ்ஞானம் உடையன் ஓர் மாணிக்கம் ஆம் - நல்ல குடியில் பிறந்து மேலும் மெய்யறிவும் உடையவன் ஒரு மாணிக்கம் போன்றவன்.


56. வேசையர்

 


                          56. வேசையர்

                                  -----

பூவில்வே சிகள்வீடு சந்தைப் பெரும்பேட்டை,

     புனைமலர் படுக்கைவீடு

பொன்வாசல், கட்டில்பொது அம்பலம், உடுத்ததுகில்

     பொருவில்சூ தாடுசாலை,


மேவலா கியகொங்கை கையாடு திரள்பந்து,

     விழிமனம் கவர்தூண்டிலாம்,

மிக்கமொழி நீர்மேல் எழுத்து, அதிக மோகம் ஒரு

     மின்னல்இரு துடைசர்ப்பமாம்,


ஆவலாகிய வல்கு லோதண்டம் வாங்குமிடம்,

     அதிகபடம் ஆம்மனதுகல்,

அமிர்தவாய் இதழ்சித்ர சாலையெச் சிற்குழி,

     அவர்க் காசை வைக்கலாமோ?


மாவடிவு கொண்டே ஒளித்தவொரு சூரனை

     வதைத்தவடி வேலாயுதா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


மாவடிவு கொண்டு ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா - மாமர வடிவாக நடுக்கடலிலே மறைந்த ஒப்பற்ற சூரபதுமனைப் பிளந்த வடிவேல் பெருமானே!


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


பூவில் வேசிகள் வீடு பெருஞ் சந்தைப்பேட்டை - உலகில் பொதுமகளிர் வீடு பெரிய சந்தைப்பேட்டை; 


மலர்புனை படுக்கைவீடு பொன்வாசல் - மலர்களாலே அணிசெயப்பெற்ற படுக்கை அறை பொன்பறிக்கும் வாயில்.


கட்டில் பொது அம்பலம் - படுக்கைக் கட்டில் பலருக்கும் பொதுவான இடம். 


உடுத்த துகில் பொருஇல் சூதுஆடு சாலை - அவர்கள் உடுத்த ஆடை ஒப்பற்ற சூதாடும் அரங்கு.


மேவல் ஆகிய கொங்கை கை ஆடு திரள்பந்து - விருப்பத்தை ஊட்டும் அவர்களின் கொங்கைகள் (பலர்) கையாலும் ஆடத் தக்க திரண்ட பந்து.


விழி மனம் கவர் தூண்டில்ஆம் - அவர்களின் கண்கள் (பலருடைய) மனத்தையும் கவர்கின்ற தூண்டில் ஆகும்.


மிக்கமொழி நீர்மேல் எழுத்து - மிகைப்பட்ட அவர்கள் பேச்சு நீர்மேல் எழுத்தாகும்;


அதிக மோகம் ஒரு மின்னல் - அவர்கள் காட்டும் மிக்க ஆசை ஒரு மின்னல் போன்று மாறக் கூடியது. 


இருதுடை சர்ப்பம் ஆம் - அவர்களுடைய இரண்டு துடைகளும் பாம்புகள்; 


ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்கும் இடம் - விருப்ப மூட்டும் அல்குலோ எனில் தண்டனையை நிறைவேற்றும் இடம்.


அதி கபடம் ஆம் மனது கல் - மிக்க வஞ்சகம் பொருந்திய அவர்கள் உள்ளம் கல்லாகும்.


அமிர்தவாய் இதழ் சித்திரசாலை எச்சிற்குழி - அமுதம் எனக் கூறும் வாயிலுள்ள இதழ் ஓவியக் கூடத்திலே பலரும் எச்சில் துப்ப இருக்கும் எச்சிற்குழி; 


அவர்க்கு ஆசை வைக்கலாமோ - அவர்களிடம் காதல்கொள்வது தகாது.


திருவொற்றியூர்

 

"சுடப்படுவார் அறியார், புரமூன்றையும் சுட்டபிரான்

திடப்படு மாமதில் தென்ஒற்றியூரன் தெருப் பரப்பில்

நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்குஉருண்டு

கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே."


பொழிப்புரை --- மனமே1வ முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், உறுதி வாய்ந்த பெரிய மதில் சூழ்ந்த அழகு மிக்க திருவொற்றியூரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளி உள்ளவன். அந்தத் திருவொற்றியூரின் தெருக்களில் நடக்கின்றவர்களுடைய திருவடிகள் நமது தலைமீது பொருந்தும்படி நன்றாய் உருண்டு கிடப்பது தான், பிரமனது ஏட்டைக் கிழிக்கின்ற வழியாகும். இந்த உண்மையை, இறந்தபிறகு தன்னைச் சுடுகின்ற சுற்றத்தோடு பொருந்தி உலக மயலிலே உழலும் அஞ்ஞானிகள் அறியமாட்டார்கள்.


விளக்கம் ---  இறந்த பிறகு உறவினராலே தூலதேகத்தை சுடப்படுவோராகிய அஞ்ஞானிகளுக்கு உண்மை விளங்காது என்பார் "சுடப்படுவார் அறியார்" என்றார். முப்புரங்களை எரித்த பிரான் என்பது, முப்புரமாவது மும்மல காரியம் என்பதனால் விளங்கும்.  மும்மலங்களைச் சுட்டான் என்பார் "புரமூன்றையும் சுட்டபிரான்" என்றார். பிறவியை ஒழித்துக் கொள்ள வேறு ஓர் உபாயம் எதையும் முயலவேண்டாம் என்பார், திருவொற்றியூர்த் தெருக்களில் நடப்பவருடைய திருவடிகள் தலைமீது பொருந்த இருந்தாலே போதும் என்பார், "தெருப் பரப்பில் நடப்பவர் பொன்பதம் நம்தலை மேல்பட, நன்கு உருண்டு கிடப்பது காண் மனமே, விதி ஏட்டைக் கிழிப்பதுவே" என்றார்.  உருண்டு கிடத்தல் என்பது அங்கப் பிரதட்சிணம் என்று வடமொழியில் சொல்லப்படும். விதி என்பது பிரமனுக்கு உரிய பெயர்களில் ஒன்று.  அவன் எழுதி வைத்த ஏட்டின்படியே பிறவியும், வாழ்வும் மற்ற நிலைகளும் வாய்க்கும். அவன் எழுதுவது நின்றால் பிறவி இல்லை.  அதனால், பிரமன் எழுதுகின்ற ஏட்டைக் கிழித்துவிட்டால், அவனுக்கு எழுத எடு இருக்காது.


திருவொற்றியூர்

 


"ஐயும் தொடர்ந்து, விழியும் செருகி, அறிவு அழிந்து,

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போது ஒன்று வேண்டுவன் யான்,

செய்யும் திருவொற்றியூர் உடையீர், திருநீறும் இட்டுக்

கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே."


பொழிப்புரை ---  அலங்காரங்கள் செய்து அமைந்த திருவொற்றியூரிலே திருக்கோயில் கொண்டு எழுந்தருளிய சிவபெருமானே! நெஞ்சிலே கோழை மிகுந்து வரவும், கண்கள் பஞ்சடைந்து போகவும், அறிவும் அழிந்து கிடக்கவும்,  இதுவரை மெய் என்று நம்பியிருந்த இந்த உடம்பும் பொய்யாகிப் போகின்ற காலத்தில் அடியேன் ஒன்றை வேண்டிக் கொள்வேன். திருநீற்றை உடம்பில் தரித்து, கைகளைக் கூப்பி, உம்மைத் தொழுது, திருவைந்தெழுத்தை உச்சரிக்க எனக்குக் கற்பித்து அருள்வாயாக.


விளக்கம் ---  நமது உடம்பில் வாதம், பித்தம், சிலேத்துமம் முறையே 4 :2 : 1 என்னும் விகிதத்தில் இருக்கவேண்டும். இந்த அளவுகளில் ஒன்று குறைந்தாலும், அதிகமானாலும் நோய் செய்யும்.  "மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று" என்றார் திருவள்ளுவ நாயனார். இந்த மூன்றின் தொகையும் 7. உடம்பின் அடுக்குகளும் 7.   வாதம் என்னும் காற்று 4/7ம், பித்தம் என்னும் நெருப்பு 2 /7 ம், ஐயம் என்னும் சிலேத்துமம் ஆகிய நீர் 1 /7 ம் இருக்கவேண்டும்.


இந்த மூன்றில் சிலேத்துமம் இறப்பை நெருங்கச் செய்வது.  இறப்பு நெருங்க நெருங்கத் தொண்டையில் கபம் கட்டும். கோழை மிகுந்து சிக்கிக் கொள்ளும். குடலில் மலச்சிக்கல், தொண்டையில் கோழைச் சிக்கல் கூடாது. இறப்புக் காலத்தில் உடலில் குளிர்ச்சி மிகும்போது தொண்டையில் ஐ என்னும் கபம் கட்டும்.


"வாதம் ஊது காமாலை சோகைநோய், பெருவயிறு வயிறுவலி படுவன்வர, இருவிழிகள் பீளை சாறிடா ஈளை மேலிடா வழவழென உமிழும் அது கொழகொழென ஒழுகிவிழ வாடி ஊனெலாம் நாடி பேதமாய்...."  என்பார் அருணகிரிநாதப் பெருமான்.


"ஐ நெரிந்து அகம் மிடற்றே அடைக்கும் போது, ஆவியார்தாம்

செய்வது ஒன்றி அறியமாட்டேன், திருப்புகலூ ரனீரே"


என்றும்,


"ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு

ஆவியார் போவதுமே அகத்தார் கூடி

மையினால் கண்எழுதி மாலை சூட்டி

மயானத்தில் இடுவதன்முன்....."


என்றும் அப்பர் தேவார வாக்குகளாலும்,


"புலன்ஐந்தும் பொறிகலங்கி, நெறிமயங்கி

அறிவு அழிந்திட்டு, ஐ மேல் உந்தி

அலமந்த போதாக அஞ்சேல் என்று

அருள்செய்வான்....."


எனவும் வரும் திருஞானசம்பந்தர் தேவாரத்தாலும் அறியலாம்.


இறப்புக் காலத்தில் கண் பஞ்சடைந்து போகும் கண்மணிப் பாவையும் செருகும் ஆதலின், "விழியும் செருகி" என்றார். மெய்யுணர்வும் அழியும் ஆதலால், "அறிவு அழிந்து" என்றார்.


பொய்யான, நிலையில்லாத உடல்தான். ஆனாலும் மெய்யாகிய உயிர் அதனுள் இருப்பதால் மெய் எனப்பட்டது. நாமும் பொய்யாகிய உடலை மெய் என நம்பினோம். அது ஒரு நாள் பொய்யாகிப் போகும் என்பதால், "மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது" என்றார்.  


அப்போது ஆன்மாவானது பாம்பின் வாய்த் தேரை போல பலப்பல நினைக்கும். அப்போதுதான் இறைவனை எண்ணும். அப்போதாவது இறைவனை மனதார எண்ணி வேண்டுவது வேண்டும். அது என்ன,  முத்தி தருவதாகிய திருநீற்றை உடல் முழுது அணியவேண்டும். பெருமானை மனதார வணங்க வேண்டும். திருவைந்தெழுத்தை மானதமாக உச்சரிக்க வேண்டும். இவை யாவும் இறப்பு நெருங்குகின்ற காலத்தில் தன் முயற்சியால் தடையின்றி முடியாது என்பதால்,  "திருநீறும் இட்டுக் கையும் தொழப் பண்ணி, ஐந்தெழுத்து ஓதவும் கற்பியுமே" என்று வேண்டினார்.


55. நல்லோர் இருக்கும் இடத்தில் தீயவரும் உண்டு

 

55.  நல்லோர் இருக்கும் இடத்தில் தீயவரும் இருப்பர்.

                                   ---


மடுவினிற் கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்

     வன்முதலை அங்கிருக்கும்

மலையினில் தேன்உண்டு சென்றொருவர் கிட்டாமல்

     மருவிஅதில் வண்டிருக்கும்


நெடுமைதிகழ் தாழைமலர் உண்டொருவர் அணுகாமல்

     நீங்காத முள்ளிருக்கும்

நீடுபல சந்தன விருட்சம்உண் டணுகாது

     நீளரவு சூழ்ந்திருக்கும்


குடிமல்கி வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது

     குரைநாய்கள் அங்கிருக்கும்

கொடுக்கும் தியாகியுண் டிடையூறு பேசும்

     கொடும்பாவி உண்டுகண்டாய்


வடுவையும் கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற

     வள்ளிக் குகந்தகணவா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குறவள்ளிக்கு உகந்த கணவா - மாவின் வடுவையும் நஞ்சையும் போன்ற இரு கண்களை உடைய வேடர்குல வள்ளியம்மைக்கு விருப்பமான கணவரே1


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


மடுவினில் கஞ்சமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் வன்முதலை அங்கு இருக்கும் - ஆழமான நீர் நிலையிலே தாமரைமலர் இருந்தாலும், ஒருவரும் நெருங்காமல் கொடிய முதலை அந்த நீர்நிலையிலே இருக்கும்; 


மலையினில் தேன் உண்டு, சென்று ஒருவர் கிட்டாமல் அதில் வண்டு மருவி இருக்கும் - மலையிலே தேன் அடை இருக்கிறது எனினும், ஒருவரும் அதனிடம் அணுகாமல் தேனீக்கள் அந்த அடையிலே இருக்கும்.


நெடுமை திகழ் தாழைமலர் உண்டு, ஒருவர் அணுகாமல் நீங்காத முள்இருக்கும் - நீண்டதாக விளங்கும் தாழையிலே மலர் உள்ளது எனினும், அதை ஒருவர் நெருங்கிப் பறிக்காமல் அத்தாழையிலே முள் நீங்காமல் இருக்கும்.


நீடு பல சந்தன விருட்சம் உண்டு, அணுகாது நீள் அரவு சூழ்ந்து இருக்கும் - உயர்ந்த பல சந்தன மரங்கள் உள்ளன எனினும் அவற்றினிடஞ் செல்ல முடியாமல் நீண்ட பாம்புகள் சூழந்து வாழும்.


குடிமல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரைநாய்கள் அங்கு இருக்கும் - குடிகள் நிறைந்து வாழும் மனையிலே புகமுடியாமல் அங்கே குரைக்கும் நாய்கள் காவலாக இருக்கும்.


கொடுக்கும் தியாகி உண்டு, இடையூறு பேசும் கொடும்பாவி உண்டு - உதவி செய்யும் கொடையாளி இருக்கின்றான் எனினும், இடையூறு செய்யும் கொடியபாவியும் அங்கு உள்ளான்.


    வடு - மாம்பிஞ்சு. கடு - நஞ்சு. பார்வை கொடியதாக இருக்கும்போது (பிணங்கியபோது) நஞ்சுபோன்றும் இனிமையாக (அன்புடன்) இருக்கும்போது மாவடுவைப் போன்றும் காதலர்களுக்கு ஒரு பெண்ணின் கண் தோன்றும், ‘வாழ்கிற வீட்டிற்கு மறநாய் போல' என்னும் பழமொழியைக், ‘குடி.......இருக்கும்' என்னுந் தொடர் நினைவு ஊட்டுகிறது.


     நல்லவன் ஒருவனுக்கு, பிறருக்கு உதவி வாழவேண்டும் என்னும் எண்ணம் இருந்தாலும் கொடுக்காமல் தடுக்கின்ற சூழலும் உண்டு.                                  



70. பூப்பு வாரம்


               70. பூப்பு  இலக்கினம்

                              ---


வறுமைதப் பாதுவரும் மேடத்தில்; இடபத்தில்

     மாறாது விபசாரி ஆம்;

  வாழ்வுண்டு போகமுண் டாகும்மிது னம்; கடகம்

     வலிதினிற் பிறரை அணைவாள்;


சிறுமைசெயும் மிடிசேர்வள் மிருகேந் திரற்கெனில்

     சீர்பெறுவள் கன்னி யென்னில்;

  செட்டுடையள் துலையெனில்; பிணியால் மெலிந்திடுவள்

     தேளினுக் குத்; தனுசுஎனில்


நெறிசிதைவள், பூருவத் தபரநெறி உடையளாம்;

     நீள்மகரம் மான மிலளாம்;

  நிறைபோக வதிகும்பம் எனில்; மீனம் என்னிலோ

     நெடியபே ரறிவு டையளாம்;


அறிவாளர் மடமாதர் தமையறி இராசிபலன்

     அதுவென்பர்; அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


மேடத்தில் வறுமை தப்பாது வரும் - மேட இராசியில் (பூப்பு அடைந்தால்) தவறாமல் வறுமை உண்டாகும்.


இடபத்தில் மாறாது விபசாரி ஆம் - இடப ராசியில் தவறாமல் தீய ஒழுக்கம் உடையள் ஆவள்.


மிதுனம் வாழ்வு உண்டு, போகம் உண்டாகும் - மிதுனத்தில் வாழ்வும் இன்பமும் அடைவாள்.


கடகம் வலிதினில் பிறரை அணைவாள் - கடகத்தில் தானே (கணவன் அல்லாத) மற்றவரைத் தழுவுவாள்.


மிருகேந்திரற்கு எனில் சிறுமை செயும் மிடி சேர்வாள் - சிங்கத்தில் இழிவுதரும் வறுமை உடையள் ஆவள்.


கன்னி என்னில் சீர் பெறுவள் - கன்னியில் ஆயின் புகழ் பெறுவாள்.


துலை எனில் செட்டு உடையள் - துலையாயின் சிக்கனம் உடையவளாய் இருப்பாள்,


தேளினுக்குப் பிணியால் மெலிந்திடுவள் - விருச்சிகத்தில் நோயால் இளைத்திடுவாள்.


தனுசு எனில் நெறி சிதைவள், பூருவத்து அபரநெறி உடையள்ஆம் - தனுசில் ஆனால் ஒழுக்கம் கெடுவாள், முன்னும் பின்னுந் தீயஒழுக்கம் உடையவளாகவே இருப்பாள்.


நீள் மகரம் மானம் இலள்ஆம் - பெரிய மகரத்தில் பெருமை இழந்தவள் ஆவாள்.


கும்பம் எனில் நிறை போகவதி - கும்பத்தில் நிறைந்த இன்பம் உடையவள் ஆவாள்.


மீனம் என்னிலோ நெடிய பேரறிவு உடையள் ஆம் - மீனத்தில் ஆனால் மிகுந்த பேரறிவு உடையவள் ஆவாள்.


மடமாதர் தமை அறிவாளர் அறி இராசிபலன் அது என்பர் - இளமங்கையரை அறிவாளர் அறிவதற்குரிய இலக்கின பலன் இது என்று கூறுவர்.


பெண்கள் மேடம், இடபம், கடகம், சிங்கம், விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய இராசிகளிற் பூப்படைதல் தீது : மற்றவை நலம்.


பன்றி பல குட்டிகளைப் பெற்றும் என பயன்?

 

          7. பன்றி பல ஈன்றும் என்ன?

                          ---


"நன்றிதரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்

     குலமுழுதும் நன்மை உண்டாம்;

அன்றி, அறிவில்லாத பிள்ளை ஒரு

     நூறுபெற்றும் ஆவது உண்டோ?

மன்றில்நடம் புரிவாரே! தண்டலையா

     ரே! சொன்னேன்! வருடந் தோறும்

பன்றிபல ஈன்றும் என்ன? குஞ்சரம் ஒன்று

     ஈன்றதனால் பயன் உண்டாமே."

இதன் பொருள் ---

மன்றில் நடம் புரிவாரே - திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்து இயற்றுகின்ற பெருமானே!, தண்டலையாரே - திருத்தண்டலை என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியவரே! பன்றி வருடந்தோறும் பல ஈன்றும் என்ன - பன்றியானது ஆண்டுதோறும் பல குட்டிகளை ஈன்றாலும் பயன் என்ன?, குஞ்சரம் ஒன்று ஈன்றதனால் பயன் உண்டாம் - யானை ஒரு கன்றை ஈன்றாலும் மிக்க பயன் உண்டாகும். (அதுபோல),  நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும் குலம் முழுதும் நன்மை உண்டாம் - நலம் தரும் ஒரு பிள்ளையைப் பெற்றாலும் அவன் பிறந்த குலம் முழுமைக்கும் நன்மை உண்டாகும். அன்றி - அல்லாமல், அறிவு இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றும் ஆவது உண்டோ - நல்லறிவு இல்லாத நூறு பிள்ளைகளைப் பெற்றாலும் ஏதாவது நன்மை உண்டோ? (இல்லை).

"நன்றி தரும் பிள்ளை ஒன்று, அறிவு இல்லாத பிள்ளை நூறு" இந்த வாசகம் சிந்தனைக்கு உரியது.

திருதராஷ்டிரனுக்கு நூறு பிள்ளைகள்தான் இருந்தார்கள். அவர்களில் விகர்ணன் தவிர, மற்றவர் யாருக்கும் நல்லறிவு இல்லை. நல்லறிவு உள்ளவரோடும் அவர்கள் பழகவில்லை. நல்லறிவு சொன்னவர்களையும் அவர்கள் பழிக்கத்தான் செய்தார்கள். முடிவில், அந்தக் குலமே அழிந்து போனது.

இரணியனுக்கு ஒரு நல்ல பிள்ளை வாய்த்தது. இராக்கதர் குலத்தில் பிறந்தவராக இருந்தாலும், பிரகலாதரை, "பிரகலாத ஆழ்வார்" என்று வழங்குவதும், வணங்குவதும் காண்கின்றோம். பிரகலாத ஆழ்வாரால், அரக்கனான இரணியனும் நற்கதியைப் பெற்றான். சொல்லப் போனால், திருமால் எடுத்த அவதாரங்களிலேயே, நரசிம்ம அவதாரம்தான் ஒரு சில நாழிகைகளிலேயே முடிவு பெற்றது. நல்லபிள்ளைக்கு நரசிம்மம் துணை நின்றது.

     நன்மக்கள் இல்லாத குடியானது, சந்ததி இல்லாமல் அழிவதே மேல் என்று கூறுகின்றது, வெற்றிவேற்கை (எ) நறுந்தொகை என்னும் நூல். 

"அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின், அக்குடி

எச்சம் அற்று ஏமாந்து இருக்கை நன்று".

இதன் பொருள் ---

(பழிப்புக்கு உரிய பாவச் செயல்களைச் செய்தல் கூடாது என்னும்) அச்சத்தை மனத்தில் வைத்துக் கொண்டு செயல்படுகின்ற நல்ல அறிவு இல்லாத, இழிந்த குணம் உடைய, ஒன்றுக்கும் உதவாத பிள்ளைகளைப் பெறுவதைக் காட்டிலும், அக் குடியில் உள்ளோர் சந்ததி இல்லாமல் ஏமாந்து வாழ்தல் நல்லது. கொச்சை - இழிவு. எச்சம் - பிள்ளைகள், வாரிசுகள். ஏமாந்து இருத்தல் - இன்பத்துடன் இருத்தல். (ஏமாப்பு - இன்பம்)

"அச்சம்" என்பது குறித்து, "அறம் பாவம் என்ற இரண்டு அச்சம்" என்றார் மணிவாசகப் பெருமான். அறச் செயல்களைப் புரியாமையால் உண்டாகும் அச்சம். பாவச் செயல்களைப் பயின்று வருவதால் உண்டாகும் அச்சம் என்று, அச்சம் இருவகைப்படும். இந்த இருவகை அச்சமும் மனத்தில் எப்போதும் இருந்துகொண்டு இருந்தால்தான், பாவச் செயல்களைச் செய்வதில் இருந்து விடுபடவேண்டும் என்றும், அறச்செயல்களைப் புரிந்து நற்கதி அடையவேண்டும் என்றும் தோன்றும்.

அறிவு எனப்படுவது, "தீயதன் தீமையும், நல்லதன் நன்மையும் உள்ளவாறு அறிந்து தெளிந்து ஒழுகுதல்" ஆகும். இதுவே உண்மையான அறிவு. மற்ற அறிவு எல்லாம் உலகியல் அறிவு. வயிறு வளர்ப்பதற்கும், உடலைப் பாதுகாத்தற்கும் பெறுகின்ற அறிவு உலகியல் அறிவு. அது உயிருக்கு ஆக்கமாக அமையாது.

நல்ல பிள்ளைகளைப் பெறுவதே, மக்கள் பெறவேண்டிய பேறுகளில் (பாக்கியங்களில்) சிறந்தது. எனவே, நன்மக்கள் பேறு எனப்பட்டது. ஒருவன் சிறந்து குடியில் பிறந்தவன் என்பதை அவனது உள்ளத்தில் உள்ள அன்பினால் அறியலாம் என்கின்றது "முதுமொழிக் காஞ்சி". 

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

மக்கட் பேற்றில் பெரும்பேறு இல்லை"

கடல் சூழ்ந்த உலகத்தில் மனிதர் எல்லாருக்கும், புத்திரரைப் பெறுவதைக் காட்டிலும் பெறத்தக்க பெரும் பாக்கியம் வேறில்லை.

"ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

பேர்இல் பிறந்தமை ஈரத்தின் அறிப".

கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் ஒருவன் பெருங்குடிப் பிறந்தமையை அவனுக்கு உயிர்களிடத்தில் உள்ள அன்பினால் அறியலாம். (பேர் இல் --- பெருங்குடி)

அறிய வேண்டுவனவற்றை அறியாத பிள்ளகளைப் பெறுவது துன்பத்தைத் தரும் என்கின்றது "இன்னா நாற்பது" என்னும் நூல்.... 

"அறிவறியா மக்கள் பெறல் இன்னா"

"மகாலட்சுமியே! செல்வம், உணவுப் பொருட்கள், மிருகங்கள், நல்ல பிள்ளைப் பாக்கியம், நூறாண்டுகள் ஆயுள் எல்லாம் எனக்குக் கிடைக்கட்டும். கடன், நோய், வறுமை, பசி, அகால மரணம், பயம், கவலை, மனத்தின் துன்பங்கள் எல்லாம் ஒழியட்டும்" என்றுதான் ஸ்ரீசூக்தம் கூறுகின்றது.

பிள்ளை என்னும் சொல் சிறப்பாகப் பயன்படுத்துப்படுவது ஒன்று. விநாயாகப் பெருமானை, "மூத்த பிள்ளையார்" என்றும், முருகப் பெருமானை, "இளைய பிள்ளையார்" என்றும் வழங்கப்படுவது சைவ மரபு. திருஞானசம்பந்தரை, "ஆளுடைய பிள்ளையார்" என்று சைவர் வழங்குவர். வள்ளல்பெருமானும் தம்மை "ஞானசபைத் தலைவனுக்கு நல்ல பிள்ளை நானே" என்று காட்டிக் கொண்டார்.

இறைவனை அடையக் காட்டி உள்ள நால்வகை மார்க்கங்கள், நெறிகள், அல்லது வழிகளில், "சற்புத்திர மார்க்கம்", "மகன்மை நெறி" என்பதும் ஒன்று. கடவுளர் மீது பாடப்பட்ட பிரபந்தங்களில் "பிள்ளைத் தமிழ்" ஒன்று. வைணவர்களிலும் "பிள்ளை" என்னும் திருநாமத்தோடு வழங்கும் பெயர்கள் உண்டு.

குழந்தைப் பேறு இல்லாதவர்கள், "சற்புத்திரன்" வேண்டியே இறைவனை நோக்கி வரம் கிடந்த புராண வரலாறுகளும் நிறைய உண்டு. "நல்ல பிள்ளை" வேண்டும் என்றுதான் வேண்டினார்கள். "பிள்ளை" என்றும், "மக்கள்" என்றும் பொதுவாகத்தான் சொல்லப்பட்டது. "ஆண்பிள்ளை" என்றோ, "ஆண்மக்கள்" என்றோ எங்கும் பிரித்துச் சொல்லப்படவில்லை.

அறிவு, பொதுவாக நன்மைக்கும் தீமைக்கும் வழியைக் காட்டும். எனவே, சான்றோர்கள் "நல்லறிவு" என்று ஒரு சொல்லைப் பாடல்களில் தந்தார்கள். அறிவு என்றால், பொதுவாக, நல்லறிவைத் தான் குறிக்கும்.

இக் காலத்தில் குழந்தைகள் எல்லோரும் அறிவில் சிறந்தவர்களாக விளங்குவதைக் காணலாம். அதனால் அவர்கள் உலகியல் அறிவில் சிறந்து விளங்குகின்றார்கள். புறப்பொருள் அறிவில் சிறந்து விளங்குவது தேவைதான். ஆனாலும், அகப்பொருள் அறிவிலும் சிறந்து விளங்கவேண்டும். அகப்பொருள் அறிவினால் விளங்குகின்ற  நல்லறிவு இல்லாததால், மக்களிடையே நற்பண்புகள் விளங்குவதில்லை. இதன் காரணமாக, "முதியோர் இல்லங்கள்" பல்கிப் பெருகி வருகின்றன. மக்கள் பெற்றுள்ள புறப்பொருள் அறிவானது, அவர்களை ஈன்றவர்க்கே நலம் புரிவதில்லை. இது அவர்களுக்கே திரும்பி வரக்கூடும் என்னும் நல்லறிவும் விளங்குவது இல்லை.

எனவே, நல்லறிவில்லாத, துட்டத்தனம் வாய்ந்த பிள்ளைகள் நூறு பேர் இருந்தாலும், வீட்டுக்கு மட்டுமல்லாது நாட்டுக்கும் நலம் 

கொக்கு எனவே நினைத்தனையோ?

 


6. கொக்கெனவே நினைத்தனையோ?


முக்கணர்தண் டலைநாட்டிற் கற்புடைமங்

     கையர்மகிமை மொழியப் போமோ!

ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி! வில்வே

     டனையெரித்தாள் ஒருத்தி! மூவர்

பக்கம்உற அமுதளித்தாள் ஒருத்திஎழு

     பரிதடுத்தாள் ஒருத்தி! பண்டு

‘கொக்கெனவே நினைத்தனையோ? கொங்கணவா!'

     என்றொருத்தி கூறி னாளே!


இதன் பொருள் ---


முக்கணர் தண்டலை நாட்டிற் கற்புடை மங்கையர்  மகிமை மொழியப் போமோ - முக்கண்ணர் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள  திருத்தண்டலை என்னுநம் திருத்தலத்தை உடைய  நாட்டிலே கற்புடைய மாதரின் பெருமை விளம்ப முடியுமோ?, ஒருத்தி ஒக்கும் எரி குளிர வைத்தாள் - ஒருத்தி  (தன்னைப்) போன்ற நெருப்பைக் குளிரச் செய்தாள், ஒருத்தி வில்வேடனை எரித்தாள் - ஒருத்தி வில்லையுடைய வேடனைச் சாம்பலாக்கினாள், ஒருத்தி மூவர் பக்கம் உற அமுது அளித்தாள் - ஒருத்தி  முத்தேவரையும் தன் பக்கத்தில் (குழந்தைகளாக) அமரச் செய்து பாலூட்டினாள், ஒருத்தி எழுபரி தடுத்தாள் - ஒருத்தி (கதிரவனுடைய) ஏழு குதிரைகளையும் தடுத்தாள், பண்டு ஒருத்தி, ‘கொங்கணவா! கொக்கு எனவே நினைத்தனையோ'  என்று  கூறினாள் - முற்காலத்தில் ஒருத்தி, ‘கொங்கணவா! (என்னையும் நீ யெரித்த) கொக்கு என்று நினைத்தாயோ?' என்று கூறினாள்.


      எரி குளிரவைத்தவள் சீதை : அநுமான்  இராமன் ஆணைப்படி சீதையைத் தேடிச் சென்று இலங்கையிற் கண்டான். அவனை அரக்கர் பற்றிச் சென்று அவன் வாலிலே தீயிட்டனர். இதனை அறிந்த சீதை தீக்கடவுளை வேண்டி அநுமானைச் சுடாதிருக்குமாறு செய்தாள்.


      வில்வேடனை எரித்தவள் தமயந்தி : காட்டில் நளனைப் பிரிந்த தமயந்தி கலக்கமுடன் அலையும்போது ஒரு வேடன் அவளைக் கற்பழிக்க நெருங்கினான். தமயந்தி, ‘சீறா  விழித்தாள்! சிலை வேடன் அவ்வளவில் - நீறாய் விழுந்தான் நிலத்து!'


      மூவர் பக்கம் உற அமுது அளித்தவள் அனுசூயை : பிரமன் திருமால் சிவன் என்னும் முத்தேவரும் அனுசூயை கற்பைச்  சோதிக்க எண்ணித் துறவிகளாக  வடிவமெடுத்துச் சென்றனர். அனுசூயை அவர்களை அதிதிகளாக வரவேற்றாள். அவர்கள்  தங்களுக்கு ஆடையின்றி  வந்து உணவளிக்க  வேண்டும் என்றனர். அவள் உடனே அவர்களைச் சிறு குழந்தைகளாக்கித் தொட்டிலில் இட்டுத் தன் ஆடைகளைக் களைந்துவிட்டு வந்து பாலூட்டினாள். அவர்கள் அவளுடைய கற்பின் திறமைக்கு வியந்தனர்.


      எழுபரி தடுத்தவள் நளாயினி : நளன்  மகளான  இவள்  தன் கணவரைக் கூடையில் நள்ளிரவிலே அவர் விரும்பிய தாசி வீட்டிற்குச் சுமந்து செல்கையிற்  கழுவிலிருந்த  மாண்டவியரின் காலிற் கூடை தட்டியது. வலிபொறுக்க முடியாத மாண்டவியர் தன் கணவன் பணிவிடையில் உள்ள ஊக்கத்தாலே தன்னைக் கவனியாமற் சென்றாள் என்று சினந்து, ‘விடிந்தவுடன் நளாயினி தன் தாலியை இழப்பாள்' எனச் சாப்பித்தார். நளாயினி திடுக்கிட்டுப், ‘பொழுது விடியாமற் போகட்டும்' என்று சபித்தாள். அவ்வாறே விடியாமற் போனதால், தேவர்கள் தலையிட்டு நளாயினியின் கணவன் இறவா வண்ணம் மாண்டவியரைக் கூறச்செய்து பொழுது விடியுமாறு நளாயினியைக் கூறச்செய்தனர்.


      ‘கொக்கென்று நினைத்தனையோ?' என்றவள் வாசுகி : கொங்கணவன் (போகரின்  மாணாக்கன்  என்பர்) என்ற  ஒருவன் தவம் புரிந்துகொண்டிருந்தான். நண்பகலிலே  ஊருக்குட் சென்று உணவு வாங்கியுண்பது வழக்கம். ஒருநாள் அவ்வாறு செல்கையில், வழியில் ஒரு மரநிழலிலே தங்கினான். ஒரு கொக்கு மரத்திலிருந்து இவன்மேல் எச்சமிட, அவன் அதனை உறுத்துப் பார்த்தான். அக் கொக்கு உடனே எரிந்தது. தன் தவச்சிறப்பை வியந்து தற்பெருமை கொண்ட அவன் திருவள்ளுவர் வீட்டிலே உணவுக்குச் சென்றான். திருவள்ளுவர் மனைவி இவன் வாயிலில் வந்து நின்று கேட்டவுடனே வராமல் தன் கணவருக்கு உணவு படைத்தபின் உணவு கொண்டு வந்தாள். சினங்கொண்ட கொங்கணவன்  அவளை உறுத்துப் பார்த்தான். அவள்  நகைத்துக் ‘கொக்கென்று  நினைத்தனையோ கொங்கணவா' என்று கூறினாள். இது ஒரு பழமொழியாக நம் நாட்டில் வழங்குகிறது. ஒழுக்கமே யாவற்றினும்  உயர்ந்தது என்பது கருத்து.


69. பூப்பு வாரம்

 


                     69. பூப்பு வாரம்        

                               ---


அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்

     கானகற் புடைய ளாவாள்;

  அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி

     அளவில்பைங் குழவி பெறுவாள்;


திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு

     சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;

  சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;

     திருவுமுண் டாயி ருப்பாள்;


கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்

     காரிவா ரத்தி லாகில்;

  களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார

     காலபலன் என்று ரைசெய்வார்;


அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுர கிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே - அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; 


அருக்கனுக்கு அதிரோகி ஆவாள் - ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோய் உடையவள் ஆவள்,


நல்சோமனுக்கு ஆன கற்பு உடையவள் ஆவாள் - நல்ல திங்களில் மிகுதியான கற்புடையவள் ஆவாள்.


அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் - செவ்வாயில் மிகுந்த வருத்தம் உடையவள் ஆவாள்.


புந்தியில் அளவு இல் பைங்குழவி பெறுவாள் - புதனில் மிகுதியான  குழந்தைகளைப் பெறுவாள்.


திருத்தகு வியாழத்தில் மிக்க சம்பத்தினொடு சிறுவரைப் பெற்றெடுப்பாள் - சிறப்புற்ற வியாழனில் அளவற்ற செல்வத்துடன் மக்கட்பேறும் உடையவளாயிருப்பாள்.


சீருடைய பார்க்கவற்கு அதிபோகவதியும்ஆம்; திருவும் உண்டாயிருப்பாள் - புகழ்மிக்க வெள்ளியில் மிகவும் இன்பம் உடையவளும் செல்வம் உடையவளும் ஆவாள், 


காரிவாரத்தில் ஆகில் கருத்து அழிந்து எழில் குன்றி வறுமை கொண்டு அலைகுவாள் - சனிக்கிழமையில் ஆனால் மனங்கெட்டு, அழகு இழந்து, வறுமையுடன் திரிவாள், 


களபமுலை மாதர் புட்பவதி ஆம் வார காலபலன் என்று உரைசெய்வார் - கலவைச் சந்தனம் பூசிய கொங்கையையுடைய பெண்கள் பூப்படைகிற வாரகால பலன் (இவை) எனக் (கற்றவர்) கூறுவர்.


பெண்கள் ஞாயிறு, செவ்வாய், சனிக்கிழமைகளில் பூப்படைதல் தீமை; மற்றக் கிழமைகள் நலம்.


54. அறிய முடியுமோ?

 


                    54. அறிய முடியுமோ    

                              -----


மணமாலை அருமையைப் புனைபவர்க ளேஅறிவர்

     மட்டிக் குரங்கறியுமோ?

மக்களுடை அருமையைப் பெற்றவர்க ளேஅறிவர்

     மலடிதான் அறிவதுண்டோ?


கணவருடை அருமையைக் கற்பான மாதறிவள்

     கணிகையா னவள் அறிவளோ?

கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம்என் பதைவரும்

     களவான நாயறியுமோ?


குணமான கிளியருமை தனைவளர்த் தவரறிவர்

     கொடியபூ னையும்அறியுமோ?

குலவுபெரி யோரருமை நல்லோர்க ளேயறிவர்

     கொடுமூடர் தாம்அறிவரோ?


மணவாளன் நீயென்று குறவள்ளி பின்தொடர

     வனமூடு தழுவும்அழகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே!


இதன் பொருள் ---


மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனமூடு தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மை பின்பற்றி வரச்சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே!


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!


மணமாலை அருமையைப் புனைபவர்களே அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ - மணமுடைய மாலையின் சிறப்பை அதனை அணிகின்றவர்கள் அறிவார்களேயன்றி அறிவற்ற குரங்கு அறியுமோ?, 


மக்களுடைய அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான் அறிவது உண்டோ? - குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள் அறிவார்களேயல்லாமல் மலடி அறிவாளோ?


கணவருடைய அருமையைக் கற்பு ஆன மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ - கணவருடைய சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்; பொதுமகள் அறிவாளோ?


கருதும் ஒரு சந்தியின் பாண்டம் என்பதை வரும் களவுஆன நாய் அறியுமோ - நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத் திருடவரும் நாய் அறியுமோ? 


குணமான கிளி அருமைதனை வளர்த்தவர் அறிவர் கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை அதனை வளர்த்தவர்கள் அறிவார்கள்; கொடியதான பூனையும் அறியுமோ? 


குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர்; கொடுமூடர் தாம்  அறிவரோ? - பழகத்தக்க சான்றோர்களின் சிறப்பை நற்பண்பினரே அறிவார்கள்; கொடிய கயவர்கள் அறிவார்களோ?


     (விளக்கவுரை) ‘குரங்கின் கைப்பட்ட பூமாலை' ‘மக்கள் அருமை மலடி அறிவாளோ?' ‘கிளியை வளர்த்துப் பூனையிடம் கொடுத்ததுபோல' ‘பாம்பின்கால் பாம்பறியும்' என்னும் பழமொழிகள் இங்குக் கருதத் தக்கன. ஒருசந்தி - ஒருவேளை. (நோன்பு) ஒருவேளை புசிக்கும் நோன்பை ஒருசந்தி, ஒருவேளை என்பது வழக்கம். ஒரு சந்திப் பானை : என்பது நோன்புக்குச் சமைக்க எனத் தனியே  வைத்திருக்கும் ஒரு பாண்டம்.  நாய்க்கு எல்லாப் பானையும் ஒரே மாதிரியாகத்தான் மதிப்புப் பெறும். அவ்வாறே மூடர் யாவரையும்  ஒரு தன்மையராகவே கருதுவர். ‘நாய் அறியுமோ ஒருசந்திப் பானையை?' ‘பெற்றவள் அறிவாள் பிள்ளை அருமை' என்பன பழமொழிகள். 


திருச்செங்காடு

 




"நெருப்பான மேனியர் செங்காட்டில் ஆத்திநிழல் அருகே

இருப்பார் திருவுளம் எப்படியோ, இன்னம் என்னை அன்னைக்

கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய

திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே."

பொழிப்புரை --- நெருப்பைப் போலும் திருமேனியை உடைய சிவபெருமான் திருச்செங்காட்டில் ஆத்தி மரநிழலிலே எழுந்தருளி இருக்கின்றான். அவனுடைய திருவுள்ளப் பாங்கு எப்படி அமைந்துள்ளதோ தெரியவில்லை. இன்னமும் ஒரு தாயின் வயிற்றிலே என்னைக் கொண்டு சேர்ப்பாரோ? திருமாலும் காண்பதற்கு அரியதான தன்னுடைய திருவடி நிழலிலே சேர்ப்பாரோ?  சிவபெருமானுடைய அருட்செயல் இன்னது என்று தெரியாது.

விளக்கம் - சிவபெருமான் பவளம் போல் சிவந்த திருமேனியை உடையவன் என்பதால், "நெருப்பான மேனியர்" என்றார். அவர் எழுந்தருளி விளங்குகின்ற இடங்கள் எல்லாம் திருக்கோயில் ஆகும்.  அடியவர் உள்ளமும் பெருங்கோயில் தான் அவருக்கு. அந்தப் பக்குவத்தை அடையச் செய்வதற்காக, அவனைக் கும்பம், தம்பம், பிம்பம் என்னும் நிலைகளில் வைத்து, எழுந்தருளப் பண்ணி வழிபாடு ஆற்ற அருளாளர்களை அதிட்டித்து வழிகாட்டியவனும் அவனே தான். பல திருக்கோயில்களிலும் அவன் நமது வேண்டுதலாகிய ஆவாகனம் காரணமாக எழுந்தருளி இருக்கின்றான். அத் திருத்தலங்களில் திருச்செங்காட்டங்குடியும் ஒன்று. ஆத்தி தலமரம். ஆதலின், "செங்காட்டில் ஆத்தி நிழல் அருகே இருப்பார்" என்றார்.

தம்மிடத்தில் அன்பு செய்வாருடைய பக்குவத்திற்கு ஏற்பத் தாமும் அன்பு செய்வார் ஆதலால், "அவரது திருவுள்ளம் எப்படியோ" என்றார்.  உயிர்கள் உய்யும்பொருட்டு, மாயாகாரியமாகிய உடம்பிலே அவைகளைச் செலுத்துதல் முதலாகிய ஐந்தொழில்களையும் பெருமான் ஆற்றுகின்றான். அவன்தான் உயிரின் பக்குவத்தை அறிவான்.  எத்தனையோ பிறவிகளை எடுத்து எடுத்து இளைத்த ஆன்மாவை, மேலும் ஒரு பிறவி எடுக்க வேண்டி, இன்னும் ஒரு தாயின் கருப்பையிலே புகுத்துவது செய்வானோ அல்லது, பன்றியாக வடிவெடுத்துச் சென்றும் திருமாலால் காணமுடியாத தனது திருவடி நிழலில் வைத்து ஆட்கொள்ளுவானோ என்பது, நான் என்னும் முனைப்பு உடைய ஆன்ம அறிவுக்குப் புலப்படாது.  அந்த ஊசியின் காது இன்னும் அறவில்லை. அதனால், சிவன் செயல் எப்படி அமையமோ என்பார்,  "இன்னம் என்னை அன்னைக் கருப்பாசயக் குழியில் தள்ளுமோ, கண்ணன் காணஅரிய திருப்பாதமே தருமோ, தெரியாது சிவன் செயலே" என்றார்.


திருத் தில்லை - 14

 

"ஆற்றோடு தும்பை அணிந்துஆடும் அம்பலவாணர் தமைப்

போற்றாதவர்க்கு அடையாளம் உண்டே இந்தப் பூதலத்தில்,

சோற்றுஆவி அற்று, சுகமற்று, சுற்றத் துணியும் அற்றே,

ஏற்றாலும் பிச்சை கிடையாமல், ஏக்கற்று இருப்பர்களே."


கங்கை நதியோடு, தும்பை மலரையும் தரித்து ஆடுகின்ற அம்பலவாணப் பெருமானை வழிபடாதவர்களுக்கு இந்த உலகத்தில் அடையாளம் உள்ளது. அது என்னவென்றால், சோற்று வாசனை இல்லாமல், சுகம் ஏதும் இல்லாமல், உடுத்திக் கொள்ள ஆடை ஏதும் இல்லாமல், பிச்சை எடுத்தாலும் கிடைக்காமல் ஏங்கி இருப்பவர்கள்.


"இம்மையே தரும் சோறும் கூறையும்

ஏத்தலாம், இடர் கெடலும் ஆம்,

அம்மையை சிவலோகம் ஆள்வதற்கு

யாதும் ஐயுறவு இல்லையே"


என்னும் சுந்தரர் தேவாரத்தினை எண்ணுக.


53. ஈடு ஆகுமோ?

 


                       53. ஈடாகுமோ?

                                   ---


தாரகைகள் ஒருகோடி வானத் திருக்கினும்

     சந்திரற் கீடாகுமோ?

தாருவில் கொடிதொனிகள் பலகூடி னாலுமொரு

     தம்பட்ட ஓசையாமோ?


கோரமிகு பன்றியின் குட்டிபல கூடின்ஒரு

     குஞ்சரக் கன்றாகுமோ?

கொட்டிமலர் வாவியில் பலகூடி னாலுமொரு

     கோகனக மலராகுமோ?


பாரமிகு மாமலைகள் பலகூடி னாலுமொரு

     பைம் பொன்மக மேருவாமோ?

பலனிலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும்விற்

     பனன்ஒருவ னுக்குநிகரோ?


வாரணக் கொடியொரு கரத்திற்பிடித் தொன்றில்

     வடிவேல் அணிந்தமுருகா!

மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே.


இதன் பொருள் ---


வாரணக்கொடி ஒரு கரத்தில் பிடித்து, ஒன்றில் வடிவேல் பிடித்த முருகா - ஒரு திருக்கையிற் சேவற்கொடியையும், ஒரு திருக்கையில் வடிவேலையும் பிடித்த முருகப் பெருமானே! 


மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!


புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

 

தாரகைகள் ஒருகோடி வானத்து இருக்கினும் சந்திரர்க்கு ஈடாகுமோ - ஒரு கோடி விண்மீன்கள் வானத்திலே ஒளி வீசினும் திங்களுக்கு ஒப்பாகுமோ? 


தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ - மரத்தில் கட்டிய பல துகிற்கொடிகளின் ஒலிகள் பல கூடினாலும், ஒரு பறையின் ஒலிக்கு ஈடாகுமோ?


கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சரக்கன்று ஆகுமோ - அழகற்ற பன்றிக் குட்டிகள் பல சேர்ந்தாலும் ஒரு யானைக் கன்றுக்குச் சமம் ஆகுமோ?


வாவியில் பல கொட்டிமலர் கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ - பொய்கையிலே பல கொட்டிப் பூக்கள் மலர்ந்திருந்தாலும் ஒரு தாமரை மலர்போல் அழகு பெறுமோ?


பாரம் மிகு மாமலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மகமேரு ஆமோ - பெருமை மிகுந்த பெரிய மலைகள் பல சேர்ந்தாலும் ஒப்பற்ற பொன் மலையான மகாமேருவுக்குச் சமமாகுமோ? 


பலன் இலாப் பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ - பயன் அற்ற பிள்ளைகள் பலபேர் பிறந்திருந்தாலும் அறிவுடைய ஒரு மகனுக்கு ஒப்பாவரோ?


     அறிவில்லாப் பல பிள்ளைகளினும் அறிவுடைய ஒரு மகனே மேல் என்பது கருத்து.


68. விருந்துக்கு உரிய கிழமை

 


               68. விருந்துக்கு உரிய கிழமை

                                 ----- 


செங்கதிர்க் குறவுபோம், பகைவரும், விருந்தொருவர்

     செய்யொணா துண்ணொ ணாது;

  திங்களுக் குறவுண்டு; நன்மையாம்; பகைவரும்

     செவ்வாய் விருந்த ருந்தார்;


பொங்குபுதன் நன்மையுண் டுறவாம்; விருந்துணப்

     பொன்னவற் கதிக பகைஆம்;

  புகரவற் காகிலோ நெடுநாள் விரோதமாய்ப்

     போனவுற வுந்தி ரும்பும்;


மங்குல்நிகர் சனிவாரம் நல்லதாம்; இதனினும்

     மனமொத் திருந்த இடமே

  வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ

     வாய்த்தநாள் என்ற றியலாம்;


அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!

     அண்ணலே! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அம்கையில் விளங்கி வளர் துங்க மழுவாளனே - உள்ளங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுப்படையை உடையவனே!, அண்ணலே - பெரியோனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரிவளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!


செங்கதிர்க்கு விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை வரும் - ஞாயிற்றுக் கிழமையில் ஒருவர் விருந்து செய்யவும் உண்ணவும் ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும்;


திங்களுக்கு உறவு உண்டு; நன்மை ஆம் - திங்கட் கிழமையில் (விருந்து உண்டால்) உறவு வரும்; வேறு நன்மையும் உண்டாகும்;


செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும் - செவ்வாய்க் கிழமையில் விருந்து உண்ணமாட்டார், (உண்டால்) பகை உண்டாகும்;


பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் - நலம் மிகு புதன்கிழமையில் நலம் உண்டாகும், உறவும் உண்டாகும்; 


பொன்னவற்கு விருந்து உண அதிக பகை ஆம் - வியாழனில் விருந்து உண்டால் மிகு பகைவரும்;


புகரவற்கு ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் - வெள்ளிக் கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும் திரும்புவர்;


மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் - முகில் அனைய சனிக்கிழமை நலம் உண்டாகும்;


இதனினும் மனம் ஒத்து இருந்த இடம் வாலாயமாய்ப்போய் விருந்து உண விருந்து உதவ வாய்த்த நாள் என்று அறியலாம் - மேலும் இந்த நாளே உள்ளம் ஒத்து உள்ள இடத்தில் வழக்கமாகச் சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என உணரலாம்.


சனியின் நிறம் கருமை. ஆகையால், ‘மங்குல் நிகர் சனி' என்றார். அகம் + கை - அங்கை. உள்ளங்கை. விருந்து உண்ணவும் செய்யவும் ஞாயிறு, செவ்வாய், வியாழன் தகாதவை; மற்ற நாள்கள் நலமானவை என்பது கருத்து.


67 - மனை கோலுவதற்கு மாதம்

 

              67. மனை கோலுவதற்கு மாதம்

                                -----


சித்திரைத் திங்கள்தனில் மனைகோல மனைபுகச்

     செல்வம்உண் டதினும் நலமே

  சேரும்வை காசிக்கு; மேனாள் அரன்புரம்

     தீயிட்ட தானி யாகா;


வெற்றிகொள் இராகவன் தேவிசிறை சேர்கடகம்

     வீறல்ல; ஆவ ணிசுகம்;

  மேவிடுங் கன்னியிர ணியன் மாண்ட தாகாது;

     மேன்மையுண் டைப்ப சிக்கே;


உத்தமம் கார்த்திகைக் காகாது மார்கழியில்

     ஓங்குபா ரதம்வந் தநாள்;

  உயர்வுண்டு மகரத்தில்; மாசிமா தத்தில்விடம்

     உம்பர்கோன் உண்ட தாகாது;


அத்தநீ! மாரனை எரித்தபங் குனிதானும்

     ஆகுமோ! அருமை மதவேள்

  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

     அறப்பளீ சுரதே வனே!


இதன் பொருள் ---


அத்த - தலைவனே!, அருமை மதவேள் - அரிய மதவேள், அனுதினமும் மனதில் நினைதரு - எப்போதும் உள்ளத்தில் வழிபடுகின்ற, சதுரகிரி வளர் அறப்பளீசுர தேவனே - சதுரகிரியில் எழுந்தருளிய அறப்பளீசுர தேவனே!, சித்திரைத் திங்கள் தனில் மனைகோல மனைபுகச் செல்வம் உண்டு - சித்திரைத் திங்களில் வீடுகோலினாலும் வீடு குடி புகுந்தாலும் செல்வம் உண்டாகும், அதினும் வைகாசிக்கு நலமே சேரும் - சித்திரையிலும் வைகாசித் திங்களில் நன்மையே உண்டாகும், மேனாள் ஆனி அரன்புரம் தீ இட்டது; ஆகா - முற்காலத்தில் ஆனித் திங்களிலேதான் சிவபெருமான் முப்புரத்திற்கு நெருப்பிட்டது ஆகையால் ஆனி ஆகாது, வெற்றிகொள் இராகவன் தேவி சிறைசேர் கடகம் வீறு அல்ல - வெற்றியைக் கொண்ட இராமன் மனைவி சிறைசென்ற ஆடித்திங்கள் சிறப்புடையது அன்று, ஆவணி சுகம் மேவிடும் - ஆவணித் திங்கள் நலம் பொருந்தும், கன்னி இரணியன் மாண்டது; ஆகாது - புரட்டாசித் திங்கள் இரணியன் இறந்தது, ஆகையால், தகாதது, ஐப்பசிக்கு மேன்மை உண்டு - ஐப்பசித் திங்களில் உயர்வு ஆண்டு, கார்த்திகைக்கு உத்தமம் - கார்த்திகைத்திங்களில் நன்மை, ஓங்கு பாரதம் வந்த நாள் மார்கழியில் ஆகாது - பெரிய பாரதச் சண்டை வந்த காலமான மார்கழித் திங்களில் தகாது, மகரத்தில் உயர்வு உண்டு - தைத்திங்களில் மேன்மை உண்டாகும், உம்பர்கோன் விடம் உண்டது மாசி மாதத்தில் ஆகாது - வானவர் தலைவனான சிவபிரான் நஞ்சுண்டதாகிய மாசித்திங்களில் தகாது, நீ மாரனை எரித்த பங்குனி தானும் ஆகுமோ - நீ காமனை எரித்த பங்குனித்திங்களும் தகுமோ? (தகாது)


      (வி-ரை.) கதிரவன் ஆடித்திங்களில் கடகராசியில் செல்கிறான். ஆகையால் கடகம் ஆடி ஆயிற்று. இவ்வாறே கன்னி மகரம் ஆகியவற்றிற்கும் கொள்க.


52. நல்ல செயல்கள்

 



                    52. நல்ல செயல்கள்

                                 -----


"கடுகடுத் தாயிரம் செய்குவதில் இன்சொலாற்

     களிகொண் டழைத்தல்நன்று

கனவேள்வி ஆயிரம் செய்வதிற் பொய்யுரை

     கருத்தொடு சொலாமைநன்று


வெடுவெடுக் கின்றதோர் அவிவேகி உறவினில்

     வீணரொடு பகைமைநன்று

வெகுமதிக ளாயிரம் செய்வதின் அரைக்காசு

     வேளைகண் டுதவல்நன்று


சடுதியிற் பக்குவம் சொல்லும் கொடைக்கிங்கு

     சற்றும்இலை என்னல்நன்று

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற

     தாரித்தி ரியநன்றுகாண்


மடுவினில் கரிஓலம் என்னவந் தருள்செய்த

     மால்மருகன் ஆனமுதல்வா

மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு

     மலைமேவு குமரேசனே."


இதன் பொருள் ---


மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள் செய்த மால்மருகன் ஆன முதல்வா - ஒரு மடுவிலே (முதலையின் வாயில் அகப்பட்ட)  யானை ஓலம் என்று கதற,  வந்து (முதலையைக் கொன்று) காத்தருளிய திருமாலின் மருகனான தலைவனே!, 

மயில் ஏறி விளையாடு குகனே -  மயில் மீது எழுந்தருளி அருள் விளையாடல்கள் புரியும் குகப் பெருமானே!

புல்வயல் நீடு மலை மேவு குமர ஈசனே - திருப் புல்வயல் என்னும் திருத்தலத்தில் மலை மீது எழுந்தருளி உள்ள குமாரக் கடவுளே!

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களிகொண்டு அழைத்தல் நன்று - முகம் கடுத்துப் பல உதவிகள் செய்வதைக் காட்டினும் இனியமொழியாலே மனமகிழ்வுடன் வரவேற்பது நல்லது; 

கனவேள்வி ஆயிரம் செய்வதில் பொய்உரை கருத்தொடு சொலாமை நன்று - ஆயிரம் பெரிய வேள்விகள் செய்வதினும் பொய்ம்மொழியைக் கருத்துடன் கூறாமை நல்லது.

வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் விவேகியோடு பகைமை நன்று - வெடுவெடு என்று நடந்துகொள்கிற முட்டாளின் நட்பினைக் காட்டிலும், அறிவாளியொடு பகை கொள்ளுதல் நல்லது; 

வெகுமதிகள் ஆயிரம் செய்வதின், அரைக்காசு வேளைகண்டு உதவல் நன்று - ஆயிரம் பரிசுகள் கொடுப்பதிலும், காலம் அறிந்து உதவிசெய்தல் நல்லது; 

சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு, இங்கு சற்றும் இலை என்னல் நன்று - விரைந்து நயமாகப் "போய் வா" என்று கூறுகின்ற கொடைத்தன்மைக்கு, "இப்போது இங்குச் சிறிதும் இல்லை" என்பது நல்லது; 

சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று - செல்வத்துடன் நோயால் வருந்துவதைவிட நோயில்லாத வறுமையே நல்லது.


                                    முதலை வாயினின்று யானையைக் காத்த கதை:

     இந்திரத்துய்மன் என்ற அரசன் ஒரு முனிவர் சாபத்தினாலே யானையாகிக் காட்டில் அலைந்துகொண்டிருந்தான். ஒருநாள் ஒரு மடுவிலே நீர் பருகும்போது அந்த யானையின் காலை முதலை பிடித்துக்கொண்டது. அது, ‘ஆதிமூலமே! வந்து காத்தருள்க!' என ஓலமிட்டது. உடனே திருமால் அங்குத் தோன்றி முதலையைத் தம் சக்கரத்தாலே பிளந்து யானையை விடுவித்தார். யானைதன் சாபமும் நீங்கியது.

     இன்சொல், பொய்ம்மை, அறிவிலியோடு கூடாமை வேண்டும்; இயன்ற வரையில் காலத்திலே உதவுதல் வேண்டும்; இரப்போரை ஏமாற்றுதல் கூடாது; "நோயற்ற வாழ்வே குறைவு அற்ற செல்வம்"  என்பது இப்பாடலின் கருத்து.   


பின்வரும் பாடல்களின் கருத்தையும் இங்கு வைத்து எண்ணுதல் நலம்.

"நல்லவர்கள் வாயால் நவிலும் மொழி பொய்யாமல்,

இல்லை எனாது உள்ள மட்டும் ஈவார்கள்; --- நல்லகுணம்

அல்லவர்கள் "போ வா" என்று ஆசை சொல்லி நாள் கழித்தே

இல்லை என்பார் இப் பாரிலே."


  மேலோர் தாழ்ந்தோர் இயல்பு பற்றி, சீகாழி அருணாசலக் கவிராயர் பாடிய இப் பாடலின் பொருள்---


  இவ்வுலகில் நல்லவர்கள் தமது வாயால் சொன்ன சொல் தவறாது, இல்லை என்று வந்தோர்க்கு, இல்லை என்று சொல்லாமல், தம்மிடத்தில் பொருள் இருக்கும் வரையில் கொடுத்து உதவுவார்கள். நல்லவர் அல்லாத புல்லர்கள், தம்மிடத்தில் வந்தவர்களை, "இன்று போய் நாளை வாருங்கள்" என்று ஆசை மொழிகளைச் சொல்லி, வீணே நாள்களைக் கழித்து, இறுதியில் இல்லை என்று சொல்லி விடுவார்கள்.


இந்தப் பாடலின் கருவாக அமைந்தது, சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தப் பெருமான் பாடி அருளிய தேவாரப் பாடல் ஆகும். இல்லை என்று, செல்வந்தரிடம் சென்று இரப்பவரை ஆற்றுப்படுத்தும் முகமாகப் பாடிய பின்வரும் அருமையான பாடல்.


"நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல, நாளையும்

"உச்சிவம்" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,

பிச்சர், நச்சு அரவு அரைப் பெரியசோதி, பேணுவார்

இச்சை செய்யும் எம்பிரான் எழில்கொள் காழி சேர்மினே!"  


இதன் பொருள் ---


  பொருளை விரும்பிப் பிறர், தமது மனை வாயிலை வந்து  அடையக் கண்டும், அச் செல்வர், (தன்னிடத்து உள்ள பொருளை விரும்பிக் கொடுத்து உதவாமல்) "நாளை நண்பகல் போதில் வருக" எனக் கூறும் உரையைக் கேட்டு, உள்ளம் வருந்துவதன் முன்னம், நம் மேல் ஈடுபாடு உடையவரும்,  விடம் பொருந்திய பாம்பை அரையில் கட்டிய பெரிய ஒளி வடிவினரும், வழிபடுவாரிடம் அன்பு செய்யும் எம்பிரானாரும் ஆகிய சிவபிரானது அழகிய சீகாழிப் பதியை அடைவீர்களாக.


  திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த சீகாழிக்குப் போந்து, அங்கே திருக்கோயில் கொண்டுள்ள முருகப் பெருமானைப் பாடிய அருணகிரிநாதரும், இக் கருத்தையே வைத்துத் திருப்புகழ் பாடியுள்ளார் என்பது அறிந்து இன்புறத்தக்கது. 


"செக்கர் வானப் பிறைக்கு, இக்கு மாரற்கு அலத்

     தெற்கில் ஊதைக்கு, அனல் ...... தணியாத

சித்ர வீணைக்கு, அலர்ப் பெற்ற தாயர்க்கு, அவச்

     சித்தம் வாடி, கனக் ...... கவிபாடி,


கைக் கபோலக் கிரி, பொன் கொள் ராசி, கொடைக்

     கற்ப தாரு, செகத் ...... த்ரயபாநு,

கற்றபேர் வைப்பு என,  செத்தை யோகத்தினர்க்

     கைக்குள் நான் வெட்கி நிற்- ...... பது பாராய்".


என்பது அத் திருப்புகழ்ப் பாடலின் முற்பகுதி.


இதன் பொருள் ---


  செவ்வானத்தில் தோன்றும் நிலவுக்கும், கரும்பு வில்லை உடைய மதவேளுக்கும், தென் திசையில் இருந்து வீசும் துன்பத்தைத் தரும் ஊதைக் காற்றுக்கும், தணியாத நெருப்பைப் போன்ற சித்திர வீணையின் இன்னிசைக்கும், வசை மொழிகளைப் பேசும் தாய்மார்க்கும் வீணாக மன வாட்டத்தினை அடைந்து, விலைமாதர்க்குக் கொடுப்பதற்காக, பொருள் உள்ளவர்களைத் தேடி, அவர்கள் மீது பெருமை மிக்கப்

பாடல்களைப் பாடி, அப் பெருமை மிக்க பாடல்களில் அவர்களைத் துதிக்கையையும் தாடையையும் உடைய மலை போன்ற ஐராவதம் என்றும், பொன் பொருந்தும் நல்வினைப் பயன் உள்ளவர் என்றும், கற்பக மரம் போன்று கேட்டதைத் தரும் கொடையில் மிக்கவர் என்றும்,  மூவுலகங்களிலும் விளங்கும் கதிரவன் என்றும், கற்ற புலவர்களுக்கு சேமநிதியாக விளங்குபவர் என்றும், பொருள் உள்ளோரைப் பொய்யாகப் புகழ்ந்து பாடித் துதித்து, குப்பையாகிய செல்வம் பொருந்தி உள்ளவர்களின் கைக்குள் பட்டு நான் வெட்கித்து நிற்கின்ற நிலையைப் பார்த்து அருளுவீராக.


  வறுமையில் வாடும் ஒருவன் தனது இருப்பிடத்தைத் தேடி வந்து, உயர்ந்த பொருள்களோடு கூடிய பாடல்களைப் பாடினாலும், உலோப சிகாமணிகளாகிய செல்வந்தர், தாராளமாகப் பொருளைத் தராமல், "இன்று போய், நாளை வா" என்று அலைய வைத்து, மிகச் சிறிய அளவில் பொருள் தருவர். தராமலும் விடுவர். அங்ஙனம் கிடைக்கின்ற பொருளைச் சிறிது சிறிதாகச் சேர்த்துத் திரட்டிக் கொணர்ந்து, அதனை அறவழியில் செலவிடாமலும், தானும் அனுபவிக்காமலும், பொதுமகளிர்க்கு வழங்கிப் புன்கண் உறுவர்.


திருத்தணிகைத் திருப்புகழிலும் இக் கருத்தையே வைத்து, அருணகிரிநாதர் பாடி உள்ள திருப்புகழ்.....


"உடையவர்கள் ஏவர்? எவர்கள் என நாடி,

     உளமகிழ ஆசு ...... கவிபாடி,

உமதுபுகழ் மேரு கிரி அளவும் ஆனது

     என உரமுமான ...... மொழிபேசி,


நடைபழகி மீள, வறியவர்கள் நாளை

     நடவும் என வாடி, ...... முகம்வேறாய்,

நலியும் முனமே உன் அருண ஒளி வீசு


  நளின இரு பாதம் ...... அருள்வாயே.


இதன் பொருள் ---


  திருத்தணிகை முருகா! செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடிக்கொண்டு போய், அவர்கள் மனம் மகிழும்படி, ஆசு கவிகள் பாடியும், உமது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும், ஓயாது நடந்து நடந்து சென்றும், பழையபடியே தரித்திரர்களாகவே வரும்படி “நாளை வா, நாளை வா” என்று அத் தனவந்தர் கூற, அதனால் அகமும் முகமும் வாடி வருந்துதற்கு முன்பாகவே, சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர்.


ஒரு காசும் கொடுக்க மனமில்லாத பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளி; கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கையை உடையவர்; அள்ளி வழங்குகின்ற வள்ளல்; பரம தாதா; தங்களின் புகழ் மேருமலை போல் உயர்ந்தது; மேருமலை வரை பரவியுள்ளது” என்று புகழ்ந்து கூறுவார்கள். ஆனால், ஒரு காசும் ஈய மனம் வராமல், "நாளை வாருங்கள்" என்று சொன்னதுமே, நாளைக்கு வந்தால் கொடுப்பார் என்னும் ஆசையோடு, இப்படியே சென்று சென்று வந்து, அகம் வாடி, முகம் வெளுத்து வருத்தமுற்றுத் தடுமாற்றம் அடைவார்கள். 


நன்மை செய்தவர் நலம் பெறுவர்

 


                 4. நன்மை செய்தவர்  நலம் பெறுவர்

                                      -----


தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்

     நெறியாரே தயவு செய்வார்!

வன்மவினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்

     பிறரையொன்றும் வருத்தல் வேண்டாம்;

கன்மநெறி வரல்வேண்டாம் : வேண்டுவது

     பலர்க்கும்உப காரம் ஆகும் :

நன்மைசெய்தார் நலம்பெறுவர்! தீமைசெய்தார்

     தீமைபெற்று நலிவர் தாமே.


இதன் பொருள் ---


நன்மை செய்தார் நலம் பெறுவர் - (பிறருக்கு) நலம் புரிந்தவர் (தாமும்) நலம் அடைவர், தீமை செய்தார் தீமை பெற்று நலிவர் - (பிறருக்குத்) தீமை செய்தவர் (தாமும்) தீமை அடைந்து வருந்துவர், (ஆகையால்) வன்ம வினை செயல் வேண்டாம் - (உள்ளத்திலே) வஞ்சம் வைத்திருந்து (பிறருக்குத்) தீங்கு செய்தல் கூடாது,  பொய் வேண்டாம் - பொய் பேசுதல் கூடாது, பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம் - மற்றோரைத்  துன்புறுத்தல் கூடாது, கன்மநெறி வரல் வேண்டாம் - தீவினை ஈட்டும் வழியிலே நடத்தல் கூடாது, பலர்க்கும் வேண்டுவது உபகாரம் ஆகும் - யாவருக்கும் (செய்ய) வேண்டுவது நன்றியே ஆகும். (ஆகையால்) தன்மமது செயல் வேண்டும் - அறத்தையே புரிதல் வேண்டும், (அவ்வாறு செய்தால்) தண்டலை நீள் நெறியாரே தடவு செய்வார் - தண்டலை நீள் நெறியில் எழுந்தருளிய இறைவரே அருள் புரிவார்.


      (வி-ரை) ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான்; வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்பது பழமொழி. ‘தண்டலை நீள்நெறி' என்பது தண்டலை என்னும் திருத்தலத்தில் உள்ள திருக்கோயிலின் பெரய் ஆகும். ‘வேண்டா' என்பது ‘வேண்டாம்' என மருவியது.


திருத் தில்லை - 13

 

"தவியாது இரு, நெஞ்சமே! தில்லை மேவிய சங்கரனை,

புவிஆர்ந்து இருக்கின்ற ஞானாகரனை, புராந்தகனை,

அவியா விளக்கை, பொன்னம்பலத்து ஆடியை, ஐந்தெழுத்தால்

செபியாமல் நீ செபித்தால், பிறவா முத்தி சித்திக்குமே."


பொழிப்புரை---- நெஞ்சமே! மனம்  இளையாமல் இருப்பாயாக.  திருத்தில்லையிலே எழுந்தருளி இருக்கின்ற அம்பலவாணப் பெருமானை, உலக முழுதும் நிறைந்து இருக்கின்ற பரம்பொருளை, ஞானத்துக்கு இருப்பிடம் ஆனவனை, முப்புரங்களை நீறாக்கியவனை, அழியாத தீபம் போல்பவனை, திருவைந்தெழுத்து மந்திரத்தைக் கொண்டு நீ செபிக்காமல் செபித்தாயானால் பிறவாமல் இருக்கைக்குக் காரணமாகிய முத்தி உனக்குக் கைகூடும்.


விளக்கம் ---  மனமானது இன்பத்தையே எப்போதும் வேண்டி, துன்பத்திலிருந்து விடுபட நினைத்துத் தவித்துக் கொண்டே இருக்கும்.  அதனால் துன்பம் வந்தபோது இளைத்துப் போகும். எனவே, "தவியாது இரு" என்றார். உயிர்கள் உய்யும் பொருட்டு ஐந்தொழில் ஆற்றுகின்ற நடனத்தைப் புரிபவன் தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்றான் என்பதால், "தில்லை மேவிய சங்கரனை" என்றார்.  அவன் உலகப் பொருள்கள் அனைத்துமாக உள்ளவன்; ஞான சொரூபியாகிய அவன் எல்லாப் பொருள்களிலும் நிறைந்து விளங்குகின்றான் என்பதால், "புவி ஆர்ந்து இருக்கின்ற ஞானாகரனை: என்றார். தேவர்களைக் காத்தருள்பவன் என்பதால் "புராந்தகனை" என்றார். புறத்திலே ஏற்றுகின்ற விளக்கானது புறத்திலே உள்ள இருளைப் போக்கி ஒளி தருவது போல், அகத்திலே உள்ள ஆணவ இருளைப் போக்கி, அருள் ஒளியை நிரப்புபவன் என்பதால், "அவியா விளக்கை" என்றார். புறத்திலே ஏற்றிய விளக்கு அவியும். அக விளக்கு அவியாது. "நல் அக விளக்கு அது நமச்சிவாயவே" என்றார் அப்பர் பெருமான். புறத்திலே தில்லையிலும், அகத்திலே புருவ மத்தியிலும் விளங்குபவனைப் "பொன்னம்பலத்து ஆடியை" என்றார். கருவி கரணங்களைக் கடந்து நின்று திருவைந்தெழுத்து மந்திரத்தை செபிக்கன்ற நிலை வாய்க்க வேண்டும் என்பதால், செபியாமல் செபித்தால் என்றார். "நினைப்பு அற நினைந்தேன்" என்பார் மணிவாசகப் பெருமான்.  நிட்டை கூடும் நிலை வாய்க்குமானால், முத்தி எளிது.


திருத் தில்லை - 12


"பிறவாது இருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டால்

இறவாது இருக்க மருந்து உண்டு காண்! இது எப்படியோ?

அறம்ஆர் புகழ்த்தில்லை அம்பலவாணர் அடிக்கமலம்

மறவாது இரு மனமே, அதுகாண் நல் மருந்து உனக்கே."


பொழிப்புரை --- நெஞ்சமே! இந்த உலகத்தில் பிறவாது இருக்கும்படி வரம் பெறுவதே தக்கது. ஒருக்கால் பிறந்து விட்டால் இறவாமல் இருக்கவும் மருந்து உள்ளது. அது எப்படி என்றால், அறம் நிறைந்திருக்கின்ற தில்லையிலே திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளி இன்பநடம் புரியும் அம்பலவாணனப் பெருமானின் திருவடித் தாமரையை மறவாது இருப்பதுதான், இறவாமல் இருப்பதற்கான நல்ல மருந்து ஆகும்.


விளக்கம் ---  


இப்பிறவி என்னும்ஓர் இருட்கடலில் மூழ்கி, நான்

        என்னும்ஒரு மகரவாய்ப்பட்டு,

      இருவினை எனும்திரையின் எற்றுண்டு, புற்புதம்

        எனக்கொங்கை வரிசைகாட்டும்

    துப்புஇதழ் மடந்தையர் மயல்சண்ட மாருதச்

        சுழல்வந்து வந்துஅடிப்ப,

      சோராத ஆசையாம் கான்ஆறு வான்நதி

        சுரந்ததுஎன மேலும்ஆர்ப்ப,

    கைப்பரிசு காரர்போல் அறிவான வங்கமும்

        கைவிட்டு மதிமயங்கி,

      கள்ளவங் கக்காலர் வருவர்என்று அஞ்சியே

        கண்அருவி காட்டும்எளியேன்,

    செப்பரிய முத்தியாம் கரைசேரவும் கருணை

        செய்வையோ, சத்தாகிஎன்

      சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

        தேசோ மயானந்தமே.


    

    காக மோடுகழுகு அலகை நாய்நரிகள்

        சுற்று சோறுஇடு துருத்தியை,

      கால் இரண்டுநவ வாசல் பெற்றுவளர்

        காமவேள் நடன சாலையை,

    போகஆசைமுறி இட்ட பெட்டியை,மும்

        மலமி குந்துஒழுகு கேணியை,

      மொய்த்து வெங்கிருமி தத்து கும்பியை,

        முடங்க லார்கிடை சரக்கினை,

 மாக இந்த்ரதனு மின்னை ஒத்துஇலக

       வேதம் ஓதியகு லாலனார்

        வனைய, வெய்யதடி காரன் ஆன யமன்

      வந்து அடிக்கும்ஒரு மட்கலத்

    தேக மானபொய்யை, மெய் எனக்கருதி

      ஐய, வையமிசை வாடவோ,

        தெரிவ தற்குஅரிய பிரம மே,அமல

      சிற்சு கோதய விலாசமே.


என்னும் தாயுமானார் பாடல்களையும்,



மணம்என மகிழ்வர் முன்னே,

மக்கள்தாய் தந்தை சுற்றம்

பிணம்எனச் சுடுவர் பேர்த்தே,

பிறவியை வேண்டேன் நாயேன்,

பணைஇடைச் சோலைதோறும்

பைம்பொழில் விளாகத்து எங்கள்

அணைவினைக் கொடுக்கும் ஆரூர்

அப்பனே அஞ்சி னேனே.


என்னும் சுந்தரர் தேவாரப் பாடலையும் நோக்குமிடத்துப் பிறவியால் வருவது துன்பமே என்றும், அதனால், அதனைப் பிறவிப் பிணி என்றும், அந்த நோயைப் போக்கிக் கொள்வதற்கு ஒரு மருந்து அவசியம் என்பதும் தெளிவாகும். பிறவாமல் இருக்க வரம் பெறல் வேண்டும் என்றது இதனால்.


இனி பிறவாதிருக்க வேண்டுமென்றால், இறவாது இருக்க வேண்டும். "தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை" என்றார் சுந்தரர் பெருமான். மரணமிலாப் பெருவாழ்வை அடைவதற்கான வழியைப் பார்ப்போம்....


கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்

சரணங்களே சென்று சார்தலுமே தான், எனக்கு

மரணம் பிறப்பு என்று இவைஇரண்டின் மயக்கு அறுத்த

கருணைக் கடலுக்கே சென்று ஊதாய் கோத்தும்பீ


எனவும்,


முன்னை வினைஇரண்டும் வேர்அறுத்து முன்நின்றான்,

பின்னைப் பிறப்பு அறுக்கும் பேராளன் - தென்னன்

பெருந்துறையின் மேய பெருங் கருணையாளன்

வரும்துயரம் தீர்க்கும் மருந்து.


என வரும் திருவாசகப் பாடல்கள் இறப்பைத் தவிர்ப்பது பெருமானுடைய திருவடியைச் சார்வதே என்றும், அத் திருவடியே பிறவித் துயரத்தைப் போக்கும் மருந்து என்பதும் தெளிவாகும். அத் திருவடியை மறவாமல் இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் திருவாசகப் பாடலால் அறியலாம்...


"மறந்தேயும் தன்கழல் நான் மறவா வண்ணம் நல்கிய அத்

திறம் பாடல் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ".


அப்பர் பெருமானும், "மருந்தாய்ப் பிணி தீர்க்க வல்ல அடி" என்றார்.


இட்டபடியே எல்லாம் ஆகும்

 

"அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்,      

பாதாளம் அதில் சென்றாலும்,

பட்டம்என வான் ஊடு பறந்தாலும்,

     என்ன? அதில் பயன் உண்டாமோ?

பிட்டுவர மண்சுமந்த தண்டலையா

     ரே! முன்னாள் பெரியோர் கையில்

இட்டபடி யே ஒழிய வேறு ஆசைப்

     படின்வருவது இல்லை தானே."

இதன் பொருள் ---

பிட்டு வர மண்சுமந்த தண்டலையாரே - பிட்டை விரும்பி மண்ணைச் சுமந்த திருத் தண்டலை இறைவரே!,  முன்நாள்  பெரியோர் கையில் இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்படின் வருவது இல்லை - முற்காலத்தில் பெரியோர்களின் கையிலே  கொடுத்தவாறே தவிர மற்றொரு வகையாக ஆசைப்பட்டால் ஒன்றும் வராது. (ஆகையால்), அட்டதிசை எங்கணும் போய் அலைந்தாலும் - எட்டுத் திக்கிலும் எங்கும் சென்று திரிந்து உழைத்தாலும். பாதாளம் அதில் சென்றாலும் - பாதாள உலத்திலே சென்று தேடினாலும், வான் ஊடு பட்டம் எனப் பறந்தாலும் - வானத்திலே காற்றாடி போலப் பறந்து  திரிந்தாலும், என்ன அதில் பயன்தான் உண்டோ - என்ன கிடைக்கும்? அவ்வாறு அலைவதனால் பயன் ஏதும் உண்டாகாது.

      ‘ஐங்காதம் போனாலும் தன்பாவம் தன்னோடு'  என்பது பழமொழி. இந்தப் பழமொழியினை வைத்து ஒரு பாடலும் மேலே வரும். சொக்கநாதப் பெருமான் மணிவாசகர் பொருட்டாகப். பிட்டுக்கு மண் சுமந்தது மதுரையில். வந்தியம்மை என்னும் ஒரு பிட்டு வாணிச்சிக்காக, சோமசுந்தரக் கடவுள் கூலியாள் போல் வந்து உதிரும் பிட்டைக் கூலியாக விரும்பிப் பெற்று மண் சுமந்தார் என்று திருவிளையாடல் புராணம் கூறும்.

தக்க பெரியோர் கையில் கொடுத்து உதவியது சிறு பொருளானாலும், அது மலைபோல, நிலம் போலப் பெருகும் என்பது நாலடியார் கூறும் கருத்து. உதவி என்பது, காரணம் இல்லாமல் செய்வதும், ஆபத்து நேர்ந்த காலத்தில் செய்வதும், பயனை எதிர்பாராது செய்வதும், பிறர் செய்த உதவிக்கு ஏற்றவண்ணம், பிரதி உதவி (கைம்மாறு) செய்யாது, அவர் மனம் மகிழும் வண்ணம், தமது தகுதிக்கு ஏற்றவாறு மறு உதவி செய்வதும் ஆகும். காரணம் கருதியும், பொருள் கருதியும், காலம் கருதியும் செய்யும் உதவியானது, ஒரு பயனை நோக்கியதாக இருத்தலால், அது சிறந்தது ஆகாது.

நல்லோர்க்குச் செய்த உதவியானது எப்போதும் நிலைத்து நின்று, நல்ல பயனையே தரும் என்பதற்குப் பின்வரும் பாடல்களைக் காணலாம்.

"உறக்கும் துணையது ஓர் ஆலம்வித்து, ஈண்டி

இறப்ப நிழல் பயந்தாஅங்கு, - அறப்பயனும்

தான்சிறிது ஆயினும், தக்கார்கைப் பட்டக்கால்

வான்சிறிதாப் போர்த்து விடும்."           --- நாலடியார்.

இதன் பொருள் ---

     உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - (செயல் ஏதும் இல்லாமல் ஒடுங்கி இருக்கின்ற) மிகச் சிறிய அளவினதான ஓர் ஆலம் விதையானது, ஈண்டி - (மண்ணில் விழுந்து முளைத்துத்) தழைத்துப் (பெரிய மரமாகி), இறப்ப நிழல் பயந்தாங்கு - (பல நூறு பேர் வந்து தங்கி, இளைப்பாற) மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப் பயனும் தான் சிறிதாயினும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தருகின்ற பொருளும், அளவில் சிறியதே ஆனாலும், தக்கார் கைப் பட்டக்கால் - தகுதியுடைய பெரியோர் கையில் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்து விடும் - வானமும் சிறிது என்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும்.

"கடித்தாமரைக் கண்ணன்விழிக் கமலம் தர,

அடித்தாமரைச் சுடர்ப்பரிதி அளித்தருளினை, அதனால்

புதுமலர்ப் பொழில் தில்லை வாண!

உதவியின் வரைத்தோ அடிகள் கைம்மாறே."

என்கின்றார் "சிதம்பர செய்யுட் கோவை" என்னும் நூலில் குமரகுருபர அடிகள்.

இதன் பொருள் ---

     தாமரைக் கண்ணன் ஆகிய திருமால் தனது கண்ணை இடந்து, சிவபெருமான் திருவடியில் இட்டுப் பூசையை நிறைவு செய்தான். அதற்கு,  சிவபெருமான் சூரியன் போலப் போரொளி விளங்கும் (சலந்தராசுரனை வதம் செய்த) சக்கரப்படையை அவன் கையில் தந்தான். எனவே, மேலோர்க்குச் செய்த உதவி மேலான பயனை விளைக்கும். சிவபெருமான் அருளிய உதவி, திருமால் புரிந்த பூசைக்கும் மேலானது. எனவே, சிவபெருமான் திருமால் புரிந்த பூசனைக்குக் கைம்மாறாகப் புரிந்த உதவியானது மிக உயர்ந்தது. மேலான பரம்பொருளைப் பூசித்ததால், மேலான பலனைத் திருமால் பெற்றார்.

"மானம் நேர்ந்து, அறம் நோக்கி, மனுநெறி

போன தண்குடை வேந்தன் புகழ் என,

ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்

தானம் என்ன, தழைத்தது நீத்தமே."   ---  கம்பராமாயணம்.

இதன் பதவுரை ---

     மானம் நேர்ந்து - மான உணர்வு பொருந்தி; அறம் நோக்கி - தருமநெறி கருதி;  மனுநெறி போன - மனுநீதிப்படி நடக்கும், தண் குடை வேந்தன் புகழ் என - குளிர்ந்த வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் இருக்கும் மன்னன் புகழ் போலவும்;  ஞானம் முன்னிய - ஞான வழியை நாடுகின்ற;  நான்மறையாளர் கைத் தானம் என்ன - நான்கு மறைகளிலும் வல்ல வேதியர்களுக்கு வழங்கும் தானம் போலவும்; நீத்தம் தழைத்தது - சரயு ஆற்றில் வெள்ளம் பெருகிற்று.

     மானம் பேணி அறநெறி நோக்கி உயிர்க் குலத்திற்கு நல்லருட் காவல் வழங்கும் மன்னவனின் புகழ் ஓங்கும். தக்கார்க்கு வழங்கிய கொடையின் பயன் ஓங்கும். அதுபோல, சரயு நதியின் வெள்ளப் பெருக்கு ஓயாது.

ஓலக்க மண்டபத்துடன் அரியாசனத்தின் மேல் நிழற்றும் குடை நிழலுக்காக ஏற்பட்டதன்று.  துன்புறும் உயிர்க் குலத்தின் துயர் துடைக்கும் அருளுக்கு ஓர் அடையாளம்.

     மாவலிச் சக்கரவர்த்தி,  "உனது காலடிகளால் மூன்று அடி மண்ணை அளந்து கொள்க" என்று கூறிக்கொண்டு வாமனன்  கையிலிருந்த குண்டிகை நீரை வாங்கித் தாரை வார்த்தான். மாவலி தாரை வார்த்த நீரரானது, தனது கையில் பட்டதும், பெற்றவர்களும் இகழும்படியான மிகச் சிறிய வடிவத்தை உடைய வாமனமூர்த்தி, வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். அவன் உயர்ந்த்து எப்படி இருந்தது என்றால், உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல இருந்தது. "உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்ற திருக்குறள் கருத்துத் தோன்ற, உயர்ந்தவருக்கு உதவிய உதவி சிறந்து விளங்குவது போல, வாமனமூர்த்தி வானுற ஓங்கி வளர்ந்து நின்றான் என்றார் கம்பநாட்டாழ்வார்.

"கயம்தரு நறும்புனல் கையில் தீண்டலும்

பயந்தவர்களும் இகழ் குறளன் பார்த்து, எதிர்

வியந்தவர் வெருக்கொள விசும்பின் ஓங்கினான்,

உயர்ந்தவக்கு உதவிய உதவி ஒப்பவே."  ---  கம்பராமாயணம்.

இதன் பொருள் ---

     கயம் தரு நறும் புனல் - குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்; கையில் தீண்டலும் - தனது கைகளில் தீண்டபப்பட்ட உடனே; பயந்தவர்களும் இகழ் குறளன் - பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமனமூர்த்தி; எதிர் பார்த்து வியந்தவர் வெருக்கொள - எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்- அஞ்சும்படியாக; உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப - அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து விளங்குவதுபோல;  விசும்பின் ஓங்கினான் - வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.     

     இதையே "சிவஞானசித்தியார்" என்னும் மெய்கண்ட சாத்திர நூல் கூறுவதையும் காணலாம்...

"சிவஞானச் செயல்உடையோர் கையில் தானம்

திலம்அளவே செய்திடினும், நிலம் மலைபோல் திகழ்ந்து,

பவமாயக் கடலின் அழுந் தாதவகை எடுத்து,

பரபோகந் துய்ப்பித்து, பாசத்தை அறுக்கத்

தவம்ஆரும் பிறப்புஒன்றில் சாரப் பண்ணி,

சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே,

நவம்ஆகும் தத்துவஞா னத்தை நல்கி,

நாதன்அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தானே."  ---  சிவஞானசித்தியார்.

இதன் பதவுரை ---

     சிவஞானச் செயல் உடையோர் கையில் தானம் திலம் அளவே செய்திடினும் - (விதிவழி இன்றிப் பத்தி வழியில் நின்கின்ற) சிவஞானிகள் கையில் தானம் செய்து அளித்த பொருள் சிறிதே ஆயினும், நிலம் மலைபோல் திகழ்ந்து - நிலமும் மலையும் போல விரிவாகி ஓங்கி விளங்கும். (அத் தானம் செய்த அந்த பத்தருக்கு), பரபோகம் துய்ப்பித்து - மேலாகிய (சிவசாலோகம் முதலிய பதங்களில் பொருந்தி உள்ள) இன்பங்களை அனுபவிக்கச் செய்து, பவமாயக் கடலில் அழுந்தாத வகை எடுத்து - சனனம் மரணம் என்னும் கடலியல் அமிழ்ந்தாத வண்ணம் எடுத்து, பாசத்தை அறுக்க - பாசத்தினை நீக்க, தவம் ஆரும் பிறப்பு ஒன்றில் சாரப் பண்ணி - தவம் செய்தற்கு உரிய (உயர்ந்த குலத்தில்) ஒரு பிறவியை அடையச் செய்து, சரியை கிரியா யோகம் தன்னினும் சாராமே - சரியை கிரியை யோகங்கள் (ஏனோர்க்குப் போலக் கால நீட்டிப்பும் அருமையும் இன்றி) எளிதில் கைகூடி முற்றுப் பெறச் செய்து, நவம் ஆகும் தத்துவ ஞானத்தை நல்கியே நாதன் அடிக் கமலங்கள் நணுகுவிக்கும் தான் - (முடிவில்) புதுமையாகிய உண்மை ஞானநெறியைத் தலைப்படுத்தி முதல்வனது செங்கமல மலர்போலும் திருவடியாகிய வீட்டினை எய்துவிக்கும்.

     சிவஞானம் மிகுந்த அடியார்கள் கையில் கொடுத்த தானமானது, அதன் அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், அதன் பயனானது, இந்த நிலம் போலப் பரந்து விளங்கும். மலை போல மாண்பு பெற்று விளங்கும்.

     இதனையே, நமது கருமூலம் ஆறுக்க வந்த திருமூல நாயனாரும் வலியுறுத்துவார்.

"திலம் அத்தனையே சிவஞானிக்கு ஈந்தால்,

பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்;

நிலம் அத்தனைப் பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்,

பலமும் அற்றே, பரபோகமும் குன்றுமே." ---  திருமந்திரம்.

இதன் பொருள் ---

     கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னே ஆயினும், அதனைச் சிவஞானம் கைவரப் பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெரும் சித்திகளையும், பதமுத்தி, அபரமுத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று, யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலம் அத்தனைப் பொன்னைக் கொடுத்தாலும், அது யாதும் பயன் தராது. அல்லாமல், ஞானம் குறைதற்கும் ஏதுவாகி விடும்.

குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி, உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக் கொடுத்தல் கொடையாகும்.

எனவே, தக்கார்க்கு உதவி செய்தல் வேண்டும். அது சிறிதளவாக இருந்தாலும் பெரும்பயனைத் தரும் என்பதை அறிதல் வேண்டும். இந்த நற்செயலை விடுத்து, பேராசை கொண்டு அலைவதால் பயனில்லை என்பது இப் பாடலின் கருத்து.


திருத் தில்லை - 11

 



"வித்தாரம் பேசினும், சோங்கு ஏறினும், கம்பமீது இருந்து

தத்தா என்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும், தம்முன் தம்பி

ஒத்தாசை பேசினும் ஆவதுஉண்டோ, தில்லையுள் நிறைந்த

கத்தாவின் சொற்படி அல்லாது வேறுஇல்லை கன்மங்களே."


பொழிப்புரை ---  வாக்கு வித்தாரமாகப் பேசினாலும், கப்பல் ஏறிப் போனாலும், கம்பத்தின் மேல் இருந்து தத்தா என்று சொல்லிப் பவுரிக் கூத்து ஆடினாலும், தமையன் தம்பி உதவியாகப் பேசினாலும், ஏதாயினும் ஒரு காரியம் ஆவது உண்டோ? (இல்லை) தில்லயம்பதியில் எழுந்தருளி உள்ள கர்த்தனின் சொல்படியே அல்லாமல் உலகத்தில் நிகழும் தொழில்கள் வேறு இல்லை.


விளக்கம் ---  பிறர் மயங்கும்படி அணிமா முதலிய அட்டமா சித்திகளை உடையவர் என்று விரிவாகப் போசினாலும், யாதொரு பயனும் இல்லை என்பதால், "வித்தாரம் பேசினும்" என்றார்.  


ஆகூழ் என்று சொல்லப்படும் நல்வினைப் பயன் இல்லாதபோது, அவர் மரக்கலம் ஏறிச் சென்று பொருள் தேட முயன்றாலும் சிறிதும் கைகூடாது என்பார், "சோங்கு ஏறினும்" என்றார்.


மூங்கில் கழியின் மீது இருந்து கழைக் கூத்து ஆடினாலும் அடைவது ஒரு பயனும் இல்லை என்பதால், "கம்ப மீது இருந்து தத்தா என்று ஓதிப் பவுரி கொண்டு ஆடினும்" என்றார்.


தனக்குத் துணையாக அண்ணன் தம்பிமார் பேசினாலும் கூட யாதொரு காரியமும் ஆகாது என்பார், "தம்முன் தம்பி ஒத்தாசை பேசினும் ஆவது உண்டோ" என்றார்.


உலகத்தில் நிகழும் செயல்கள் அனைத்தும் தில்லயம்பதியில் ஆனந்த்த் திருநடம் புரியும் சிவபெருமானின் அருளாணைப் படியே நிகழும் என்பதால், "தில்லையுள் நிறைந்த கத்தாவின் சொற்படியன்றி அல்லாது வேறு இல்லை கன்மங்களே" என்றார்.


இது ஒத்த கருத்துடைய பாடல்கள் பலவற்றை முன்னும் பார்த்து இருக்கின்றோம். 


திருத் தில்லை - 10

 


"உடுப்பானும், பால்அனம் உண்பானும், உய்வித்து ஒருவர்தம்மைக்

கெடுப்பானும், ஏதுஎன்று கேள்வி செய்வானும், கெதியடங்கக்

கொடுப்பானும், தேகி என்று ஏற்பானும், ஏற்கக் கொடாமல் நின்று

தடுப்பானும், நீ அல்லையோ, தில்லைஆனந்தத் தாண்டவனே."

பொழிப்புரை ---  ஆடை முதலியவற்றைத் தரிப்பவனும், அதன் பின்னே பால் சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரப் புசிப்பவனும், ஒருவரை வாழ்வித்து, ஒருவரைக் கெடுப்பவனும், யாது என்று கேட்பவனும், வறுமை ஒழியக் கொடுப்பவனும், கொடு என்று இரப்பவனும், அவ்வாறு ஏற்பாருக்குக் கொடுக்க ஒட்டாமல் உறுதியாய் நின்று தடுப்பவனும், எல்லாம் நீயே அன்றோ. தில்லை அம்பலத்திலே ஆனந்தத் தாண்டவம் இடுகின்ற பெருமானே!

விளக்கம் ---  உயிர்கள் செய்யும் தொழிலனைத்தும் சிவனருள் விதித்தபடியே நடக்கும். எல்லாம் அவரவருக்கு ஊட்டப்படும் வினையின் பயனே.


திருத் தில்லை - 9

 


"தெய்வச் சிதம்பர தேவா உன் சித்தம் திரும்பிவிட்டால்

பொய்வைத்த சொப்பன மாமன்னர் வாழ்வும் புவியும் எங்கே,

மெய்வைத்த செல்வம் எங்கே,  மண்டலீகர் தம் மேடைஎங்கே,

கைவைத்த நாடக சாலை எங்கே, இது கண்மயக்கே."


பொழிப்புரை --- தெய்வீகமான அருள்வெளியில் நடிக்கின்ற தேவனே! உமது திருவுள்ளம் பதிந்து விட்டால், அரசரது வாழ்வும், பொய்த் தன்மை உள்ள கனவை ஒத்த பூமியும் என்ன ஆகும். மெய்த் தன்மை அமைத்ததாகக் கொள்ளப்படும் செல்வம் என்னாகும். அலங்காரம் செய்த நாடக சாலை என்னாகும். இது யாவும் கண் மயக்கமே. எல்லாம் சூனியமே.


விளக்கம் - சிவபெருமானுடைய திருவருளானது அடியவரிடம் பதிந்து விட்டால், உலக இன்பங்கள் யாவும் பொய் எனவே தெளிவாகத் தோன்றும்.


பொது --- 1099. அனகனென அதிகனென

 


அருணகிரிநாதர் அருளிய

திருப்புகழ்

அனகனென அதிகனென (பொது)


முருகா!

தேவரீரையே புகழ்ந்து பாடி, வாக்கும் மனமும் அற்ற 

பெருநிலையைப் பெறவேண்டும்.


தனனதன தனனதன தனனதன தனனதன

     தனனதன தனனதன ...... தனதான


அனகனென அதிகனென அமலனென அசலனென

     அபயனென அதுலனென ...... அநபாயன்


அடல்மதன னெனவிசைய னெனமுருக னெனநெருடி

     யவர்பெயரு மிடைசெருகி ...... யிசைபாடி


வனசமணி பணிலமழை சுரபிசுரர் தருநிகர்கை

     மகிபஎன தினையளவு ...... ளவுமீயா


மனிதர்கடை தொறுமுழலு மிடியொழிய மொழியொழிய

     மனமொழிய வொருபொருளை ...... அருள்வாயே


இனனிலவு தலைமலைய அடியினுகி ரிலைகளென

     இருசதுர திசையிலுர ...... கமும்வீழ


இரணியச யிலம்ரசித சயிலமர கதசயில

     மெனவிமலை யமுனை யென ...... நிழல்வீசிக்


ககனமழை யுகைகடவு ளுடலமென முதியவிழி

     கதுவியெழில் பொதியமிசை ...... படர்கோலக்


கலபகக மயில்கடவு நிருதர்கஜ ரததுரக

     கடகமுட னமர்பொருத ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


அனகன் என, அதிகன் என, அமலன் என, அசலன் என,

     அபயன் என, அதுலன் என, ...... அநபாயன்,


அடல்மதனன் என, விசையன் என, முருகன் என, நெருடி

     அவர் பெயரும் இடைசெருகி, ...... இசைபாடி,


வனசமணி, பணில மழை, சுரபி, சுரர் தரு நிகர்கை,

     மகிப என, தினை அளவு ...... உளவும் ஈயா,


மனிதர்கடை தொறும் உழலும், மிடி ஒழிய, மொழி ஒழிய,

     மனம்ஒழிய, ஒருபொருளை ...... அருள்வாயே.


இனன் நிலவு தலைமலைய, அடியின் உகிர் இலைகளென

     இருசதுர திசையில் உர ...... கமும்வீழ,


இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம்

     என, விமலை, யமுனை என ...... நிழல்வீசி,


ககனமழை உகை கடவுள் உடலம் என, முதியவிழி

     கதுவி, எழில் பொதியமிசை ...... படர்கோலக்


கலப கக மயில் கடவு நிருதர் கஜ ரத துரக

     கடகமுடன் அமர் பொருத ...... பெருமாளே.


பதவுரை


அனகன் என அதிகன் என ---  பாவம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும், 


அமலன் என அசலன் என --- மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும், 


அபயன் என அதுலன் என --- அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகரில்லாதவன் என்றும், 


அநபாயன், அடல்மதனன் என --- அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும், 


விசையன் என முருகன் என --- வீரத்தில் அர்ச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும், 


நெருடி, அவர்பெயரும் இடைசெருகி இசைபாடி --- இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி, 


வனசம், மணி, பணிலம், மழை ---  பதுமநிதி, சிந்தாமணி என்று கூறப்படும் இரத்தினம், சங்கநிதி, மேகம், 


சுரபி, சுரர் தரு …. காமதேனு, கற்பகமரம் - (இவைகளுக்கு கொடையில்) 


நிகர்கை மகிப என --- ஒப்பான கைகளை உடைய அரசனே என்று போற்றவும், 


தினை அளவு உளவும் ஈயா --- தினையளவு கூடத் தன்னிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காத,


மனிதர்கடை தொறும் உழலும் மிடி ஒழிய --- மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை ஒழியவும், 


மொழி ஒழிய, மனம் ஒழிய --- வாக்கு அடங்கவும், மனம் அடங்கவும்,


ஒரு பொருளை அருள்வாயே --- ஒப்பற்ற உபதேசப் பொருளை அடியேனுக்கு அருள் புரிவீராக.


இனன் நிலவு தலை மலைய --- சூரியகனின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க, 


அடியின் உகிர் இலைகள் என --- காலின் நகங்கள் நொச்சி இலைகளைப் போல் இருக்க, 


இருசதுர திசையில் உரகமும் வீழ --- எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சிக் கீழே விழ, 


இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம் என --- பொன்மலை ஆகிய மேருமலையைப் போலவும்,  வெள்ளிமலை என்னும் திருக்கயிலாய மலையைப் போலவும், மரகதமலை என்னும் திரு ஈங்கோய் மலையைப் போலவும் வலிய உடலைக் கொண்டதாய், 


விமலை யமுனை என நிழல் வீசி --- தூயவள் ஆகிய உமாதேவியாரின் திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையைப் போல நீலநிற ஒளியை வீசி, 


ககன மழை உகை கடவுள் உடலம் என --- வான்மேகத்தை வாகனமாக உடைய இந்திரனின் உடம்பு என்று சொல்லும்படியாக,


முதிய விழி கதுவி --- உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய்,


எழில் பொதிய --- அழகு நிறைந்து, 


மிசை படர் கோலக் கலபகக மயில் கடவு --- மேலே படர்ந்த தோகையினை உடைய பறவையாகிய மயிலினை நடத்திச் சென்று, 


நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே ---  அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 


பொழிப்புரை

பாவம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும்,  மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும்,  அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகர் இல்லாதவன் என்றும்,  அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும்,  வீரத்தில் அருச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும் இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி,  பதுமநிதி, சிந்தாமணி என்று கூறப்படும் இரத்தினம், சங்கநிதி, மேகம்,  காமதேனு, கற்பகமரம் ஆகிய இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே என்று போற்றவும், தினையளவு கூடத் தன்னிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காத, மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை ஒழியவும்,  வாக்கு அடங்கவும், மனம் அடங்கவும் ஒப்பற்ற உபதேசப் பொருளை அடியேனுக்கு அருள் புரிவீராக.

சூரியனின் ஒளியைத் தலைப்பாகம் நிகர்க்க,  காலின் நகங்கள் நொச்சி இலைகளைப் போல் இருக்க,  எட்டுத் திசைகளிலும் உள்ள நாகங்களும் அஞ்சிக் கீழே விழ, பொன்மலை ஆகிய மேருமலையைப் போலவும்,  வெள்ளிமலை என்னும் திருக்கயிலாய மலையைப் போலவும், மரகதமலை என்னும் திரு ஈங்கோய் மலையைப் போலவும் வலிய உடலைக் கொண்டதாய்,  தூயவள் ஆகிய உமாதேவியாரின் திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையைப் போல நீலநிற ஒளியை வீசி,  வான்மேகத்தை வாகனமாக உடைய இந்திரனின் உடம்பு என்று சொல்லும்படியாக, உடல் முழுதும் முற்றின கண்களைக் கொண்டதாய், அழகு நிறைந்து,  மேலே படர்ந்த தோகையினை உடைய பறவையாகிய மயிலினை நடத்திச் சென்று, அசுரர்களின் யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை ஆகியவைகளுடன் போர் புரிந்த பெருமையில் மிக்கவரே! 

விரிவுரை

வறுமை நிலையில் உள்ளவர்கள், தமது வறுமையைப் போக்கிக் கொள்ள, தனம் உடையவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று, அருமையினும் அருமையான இனிய தமிழை, ஈசனுக்கு அர்ப்பணியாமல் வாழ்கின்றவர்களும், பரமலோபிகளும், மகாமூடர்களுமாகியப் பாவிகளைப் பாடிப் பரதவிக்கின்றார்கள். இந்த அவல நிலையைக் கண்டு அருணகிரிநாதர் இத் திருப்புகழில் வருந்துகின்றார். "யார் வேண்டினாலும் கேட்ட பொருள் ஈயும் தியாகாங்க சீலம் உஐயவன் முருகப் பெருமான். கேட்டதெல்லாம் தரும் பரம கருணாநிதியாகிய முருகனைப் பாடினால் இகம் பரம் இரண்டு நலன்களையும் வழங்குவான்.  அப்பரமனை வாழ்த்தக் கூடவேண்டாம். தமிழால் வைதாலும் வாழவைப்பானே?


முற்பிறவியில் செய்த நல்வினையின் பயனாக இறையருளால் வாய்த்த நல்ல செல்வத்தை, இல்லாதவர்க்கு மனம் உவந்து ஈந்து, புண்ணியத்தைத் தேடிக் கொள்ளமால் வாழும் மூடர்களிடம் சென்று அவர்களைப் பாவம் அற்றவன் என்றும், யாவரிலும் மேம்பட்டவன் என்றும்,  மாசற்றவன் என்றும், எதற்கும் அசையாதவன் என்றும்,  அச்சம் அற்றவன் என்றும், தனக்கு நிகர் இல்லாதவன் என்றும்,  அபாயங்கள் இல்லாதவன் என்றும், வலிமை வாய்ந்த மன்மதன் என்றும்,  வீரத்தில் அருச்சுனன் என்றும், அழகில் முருகனை ஒத்தவன் என்றும் இணைத்து, பாடப்பட்டவரின் பெயர்கள் இடையில் வருமாறு பாட்டிலே நுழைத்து, அந்தப் பாடலை இசையுடன் பாடி,  பதுமநிதி, சிந்தாமணி என்று கூறப்படும் இரத்தினம், சங்கநிதி, மேகம்,  காமதேனு, கற்பகமரம் ஆகிய இவைகளுக்கு கொடையில் ஒப்பான கைகளை உடைய அரசனே என்று போற்றவும், தினையளவு கூடத் தன்னிடத்தில் உள்ள பொருளைக் கொடுக்காத, மனிதர்களின் வீட்டு வாசல்தோறும் சென்று புகழ்ந்து திரிகின்ற வறுமைநிலை ஒழிய வேண்டுமானால், செந்தமிழ்த் தெய்வமாகிய முருகப்பெருமானை இலக்கண இலக்கிய கற்பனை நயங்களோடு ஒன்றும் அழகாகப் பாடவேண்டாம். “பித்தன் பெற்ற பிள்ளை; நீலிமகன்; தகப்பன் சாமி; பெருவயிற்றான் தம்பி; பேய் முலையுண்ட கள்வன் மருமகன்; குறத்தி கணவன்” என்று ஏசினாலும் இன்னருள் புரிவான். அத்துணைக் கருணைத் தெய்வம்.


அத்தன்நீ, எமதுஅருமை அன்னைநீ, தெய்வம்நீ,

    ஆபத்து அகற்றி அன்பாய்

ஆதரிக்கும் கருணை வள்ளல்நீ, மாரன்நீ,

    ஆண்மைஉள விசயன்நீ, என்று

எத்தனை விதஞ்சொலி உலோபரைத் தண்தமிழ்

    இயற்றினும் இரக்கஞ் செயார்,

இலக்கண இலக்கியக் கற்பனைக் கல்வியால்

    இறைஞ்சிஎனை ஏத்த வேண்டாம்,

பித்தனொடு நீலியும் பெறுதகப்பன் சாமி!

    பெருவயிற்றான் தம்பி,அப்

பேய்ச்சிமுலை உண்டகள் வன்மருகன், வேடுவப்

    பெண்மணவன், என்றுஏசினும்,

சித்தமகிழ் அருள் செய்யும் என்றே முழக்கல்போல்

    சிறுபறை முழக்கி அருளே!

செம்பொன் நகருக்கு இனிய கம்பைநகருக்கு இறைவ,

    சிறுபறை முழக்கி அருளே!       ---  கம்பை முருகன் பிள்ளைத் தமிழ்


தமிழினிடம் பெருங்காதல் கொண்ட முருகன் தமிழ்நாட்டு வள்ளியிடம் காதல் கொண்டான். அதனாலே, அந்தத் தமிழால் வைதாலும் அவன் அருள் செய்வான் என்னும் கருத்தில், "மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழல் வைதாரையும் அங்கு வாழவைப்போன்" என்கிறார் அருணகிரிநாதர்.


இரட்டைப் புலவர்கள் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஒரு பணமுடிப்பை பிள்ளையார் பின்புறத்தில் வைத்து நீராடச் சென்றார்கள். விநாயகர் புலவர்களிடம் விளையாடக் கருதி அப் பணமுடிப்பை மறைத்தருளினார்.  இரட்டையர்கள் வந்து பார்த்தார்கள். பணமுடிப்பு இல்லை. வறிய புலவர்கட்கு உள்ளம் எப்படியிருக்கும்? உடனே பெருமானைப் பார்த்துப் பாடுகின்றார்கள்.


"தம்பியோ பெண்திருடி, தாயாருடன் பிறந்த

வம்பனோ நெய்திருடி மாயனாம்,-அம்புவியில்

மூத்த பிள்ளையாரே முடிச்சு அவிழ்த்துக் கொண்டீரோ?

கோத்திரத்தில் உள்ள குணம்."


"பிள்ளையாரே, நீர் பேசாமல் உள்ளீர்.  உம்மைத் தவிர வேறு யார் இங்கே வந்தார்கள்?  நீர்தான் எமது முடிச்சை அவிழ்த்துக் கொண்டு விட்டீர். உம்முடைய தம்பி யார் என்று எனக்குத் தெரியும். தமிழ்நாட்டுப் பெண் வள்ளியைத் திருடிக் கொண்டு போனவன் அவன். உம் தாயாருடன் பிறந்த மாமன் ஒரு வம்பன், மாமாயன்; அவன் நெய் திருடி. நீரோ  இப்போது என் முடிச்சைத் திருடி விட்டீர். ஐயா கோத்திரத்திற்கு உள்ள குணம் உம்மைவிட்டு எப்படிப் போகும்?' என்று பாடினார்கள். ஏசுவதைப் போலப் பாட்டு இருந்தாலும் இது ஏச்சு அல்ல. ஏசுவது  போல இறைவன் புகழை முத்தமிழால் சொல்கிறார்கள் புலவர்கள். அந்தத் தமிழைக் கேட்பதில் இறைவனுக்கு விருப்பம் உண்டு. 


சுந்தர் மூர்த்தி நாயனார் பாடுகின்றார்.


"நலம்இலாதானை நல்லனே என்றும்,

         நரைத்த மாந்தரை இளையனே,

குலமிலாதானைக் குலவனே என்று

         கூறினும் கொடுப்பார்இலை,

புலம்எலாம்வெறி கமழும் பூம்புக

         லூரைப் பாடுமின் புலவீர்காள்,

அலமராது அமருலகம் ஆள்வதற்கு

         யாதும் ஐயுறவு இல்லையே."


வனசம், மணி, பணிலம், மழை ---  

வனசம் = தாரமை. இங்கே பதுமநிதியைக் குறிக்கும்.

மணி என்பது சிந்தாமணியைக் குறிக்கும்.

மணிலம் = சங்கு. இங்கே சங்கநிதியைக் குறிக்கும்.

கைம்மாறு கருதாமல் எல்லாரொக்கும் பொழிவது மழை.


இனன் நிலவு தலை மலைய --- 

இனன் = சூரியன்.  மலைய = ஒப்ப என்னும் வாய்ப்பாடு.


அடியின் உகிர் இலைகள் என --- 

உகிர் = நகம். மயிலின் காலில் உள்ள நகங்கள் நொச்சி இலைகளைப் போன்று நீண்டு உள்ளன.


இருசதுர திசையில் உரகமும் வீழ --- 

இரு - இரண்டு. சதுரம் - நான்கு. இருசதுரம் - எட்டு.

உரகம் - நாகம்.


இரணிய சயிலம், ரசித சயிலம், மரகத சயிலம் என --- 

இரணியம் - பொன். ரசதம், ரசிதம் - வெள்ளி. மரகதம் - பச்சை.

முருகப் பெருமான் ஆரோகணித்து வரும் மயிலின் உடலானது, 

பொன்மலை என்னும் மேருமலையைப் போலவும்,  வெள்ளிமலை என்னும் திருக்கயிலாய மலையைப் போலவும், மரகதமலை என்னும் திரு ஈங்கோய் மலையைப் போலவும் வலிமை கொண்டதாய் உள்ளது. 


விமலை யமுனை என நிழல் வீசி --- 

விமலை - மலமற்றவள், தூயவள். யமுனை - கருநிறம், நீலநிறம்.

தூயவள் ஆகிய உமாதேவியாரின் திருக்கரங்களிலிருந்து உற்பத்தியாகும் நதியாகிய யமுனையைப் போல நீலநிறம் கொண்டதாக மயிலின் உடல் உள்ளது.


ககன மழை உகை கடவுள் உடலம் என முதிய விழி கதுவி --- 

ககனம் - வானம்.

மழை - இங்கே மேகத்தைக் குறித்து வந்தது.

உகை, உகைத்தல் - செலுத்துதல்.

இந்திரனுக்கு மேகநாதன், மேகவாகனன் என்று பெயர் உண்டு. கௌதம முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் உடம்பெல்லாம் கண்ணாய் ஆனான். அதுபோல, மயிலின் தோகையில் கண்கள் உள்ளன.


மிசை படர் கோலக் கலபகக மயில் கடவு --- 


கோலக் கலபம் - அழகிய தோகை. ககம் - பறவை. அழகிய தோகையினை உடைய மயில்.


நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே ---  


நிருதர் - அரக்கர்கள். கஜம் - யானை. இரதம் - தேர், துரகம் - குதிரை.

கடகம் - படை.


கருத்துரை

முருகா! தேவரீரையே புகழ்ந்து பாடி, வாக்கும் மனமும் அற்ற பெருநிலையைப் பெறவேண்டும்.



திருத் தில்லை - 8

 


"அடியவர்க்கு எளியவர் அம்பலவாணர் அடி பணிந்தால்,

மடியாமல் செல்வ வரம் பெறலாம், வையம் ஏழ் அளந்த

நெடியோனும் வேதனும் காணாத நித்த, நிமலன்அருள்

குடிகாணும் நாங்கள், அவர்காணும் எங்கள் குலதெய்வமே."


பொழிப்புரை ---  தனது அடியவர்க்கு எளியராய் இருப்பவர் அம்பலவாணர். அவர் திருவடிகளை வணங்கினால், இம்மை நலத்தோடு, இறவாத முத்தி நலத்தையும் பெறுகின்ற வரத்தைப் பெறலாம். உலகம் அளந்த திருமாலும், பிரமனும் கண்டு அறியாத நித்தியப் பொருளாக உள்ளவனும், இயல்பாகவே மலங்கள் அற்றவனும் ஆகிய சிவபெருமானுக்கே நாங்கள் அருட்குடிகள் ஆவோம். அவரே எங்களுக்குத் தெய்வமும் ஆவார்.


விளக்கம் ---  அடியவர்க்கு எளியவர் அம்பலவாணர் என்பது,


"கார்ஆனை ஈர்உரிவைப் போர்வை யானைக்

காமருபூங் கச்சியே கம்பன் தன்னை

ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை

அமரர்களுக்கு அறிவரிய அளவு இலானைப்

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்

பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்

பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே."


என்னும் அப்பர் திருத்தாண்டகத்தாலும்,


"தேவ தேவன்மெய்ச் சேவகன்

தென்பெ ருந்துறை நாயகன்

மூவ ராலும் அறியொ ணாமுத

லாய ஆனந்த மூர்த்தியான்

யாவ ராயினும் அன்ப ரன்றி

அறியொ ணாமலர்ச் சோதியான்

தூய மாமலர்ச் சேவ டிக்கண்நம்

சென்னி மன்னிச் சுடருமே."


என்னும் மணிவாசகத்தாலும், இன்ன பிற அருட்பாடல்களாலும் தெளிவாகும்.


பெருமான் திருவடியை வணங்கினால், இம்மை நலங்களோடு, வீட்டின்பத்தையும் பெறலாம் என்பது,


"பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்புஎன்று இவையிரண்டும்

உறவினொடும் ஒழியச்சென்று, உலகுஉடைய ஒருமுதலைச்

செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம் பலம்மன்னி

மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே."


என்னும் மணிவாசகத்தாலும்,


"இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்

அம்மையேல் பிறவித் துயர் தீர்த்திடும்

எம்மை ஆளும் இடைமருதன் கழல்

செம்மையே தொழுவார் வினை சிந்துமே."


என வரும் அப்பர் திருக்குறுந்தொகையாலும், இன்ன பிற பாடல்களாலும் அறியலாம்.


தாமரையாகிய திருவடியைத் தேட வேண்டியது அன்னம்.  சடையாகிய காட்டைத் தேட வேண்டியது பன்றி. அவ்வாறு இல்லாமல், மாறுபட்டு பிரமனும் திருமாலும், அன்னமும் பன்றியுமாக உருவெடுத்துப் பன்றி தாமரையாகிய திருவடியையும், அன்னம் சடையாகிய காட்டையும் தேடிச் சென்று காணமுடியாமல் அலந்தனர்.  ஆனால், அவனுக்கு அன்பு செய்திடும் அன்பர்களுக்கு எளிவந்து காட்சி கொடுப்பதோடு, எல்லா நலங்களையும் அருளுவான் சிவபெருமான்.


திருத் தில்லை - 7

 


"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றொடுஒன்றை

மூட்டுவிப்பானும், முயங்குவிப்பானும், முயன்றவினை

காட்டுவிப்பானும், இருவினைப் பாசக் கயிற்றின்வழி

ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டே தில்லைஅம்பலத்தே".


பொழிப்புரை --- உண்ணச் செய்பவனும், உறங்கச் செய்பவனும்,  ஒரு பொருளோடு ஒரு பொருளை இந்த உலகத்தில் மூட்டி விடுவோனும், சேரச் செய்பவனும், நல்வினை தீவினை என்னும் பாசமாகிய கயிற்றின் வழியே அசையச் செய்பவனும் ஆகிய ஒருவன் தில்லை அம்பலத்திலே விளங்குகின்றான்.


விளக்கம் ---  இறைவன் உயிர்களுக்கு உடம்பு, கருவி கரணங்கள், உலகம், உலகப் பொருள்கள் ஆகியவற்றைப் படைத்த பின்னர், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களை இயற்றுகின்றான் என்பதை உணர்த்த, "ஊட்டுவிப்பானும், உறங்குவிப்பானும்" என்றார். இறைவன் ஒர் உயிரை இன்னொரு உயிரோடு கூட்டுவதும், பிரிப்பதும் செய்வான் என்பதால், "ஒன்றோடு ஒன்று மூட்டுவிப்பானும்" என்றார். ஆணோடு பெண்ணைச் சேர்ப்பவனும் அவனே யாதலால், "முயங்குவிப்பானும்" என்றார்.  உயிர்களுக்கு இருவினைப் பயனை உண்பிப்பவனும் அவனே என்பதால்,  "முயன்ற வினை காட்டுவிப்பானும்" என்றார். உயிர்களை நல்வினை தீவினை என்னும் இருவினைகளாகிய கயிற்றினால் பிறவியில் சேர்த்து ஆட்டுவிப்பவன் என்பதால், "இருவினைப் பாசக் கயிற்றின் வழி ஆட்டுவிப்பானும்" என்றார்.


இதனை,


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்

கோனாகி யான்எனதுஎன்று அவரவரைக் கூத்தாட்டு

வான்ஆகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.


என்னும் மணிவாசகத்தால் உணர்க.


திருத் தில்லை - 6

"ஓடும் எடுத்து, அதள் ஆடையும் சுற்றி, உலாவி, மெள்ள

வீடுகள் தோறும் பலிவாங்கியே, விதி அற்றவர் போல்

ஆடும்அருள் கொண்டு, இங்கு அம்பலத்தே நிற்கும் ஆண்டி தன்னைத்

தேடும் கணக்கு என்ன காண், சிவகாம சவுந்தரியே."


இதன் பொருள் ---


பிச்சைப் பாத்திரமாகிய பிரமனின் மண்டை ஓட்டை எடுத்துக் கொண்டு,  அரையிலே புலித்தோலையும் உடுத்துக் கொண்டு, மான் தோலைத் தோளிலே போட்டுக் கொண்டு, யானைத் தோலைப் போர்த்திக் கொண்டு, மெல்லத் திரிந்து, வீடுகள் தோறும் பிச்சையை ஏற்று, விதி அற்றவன் போலும், பித்தனைப் போலும் அம்பலத்திலே ஆடுகின்ற ஆண்டியாகிய பெருமானை, நீ தேடும் காரணம் என்ன, அம்மா சிவாகம சவுந்தரியே.


8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...