பாடல் 2



                   திருச்சிற்றம்பலம்

“கடுஅடுத்த நீர்கொடுவா, காடிதா என்று,

நடுநடுத்து, நாஅடங்கா முன்னம் பொடியடுத்த

பாழ்க்கோட்டம் சேராமுன் பன்மாடத் தென்குடந்தைக்

கீழ்க்கோட்டம் செப்பிக் கிட.”

                    திருச்சிற்றம்பலம்

இதன் பொருள் ---

கடு அடுத்த நீர் கொடுவா – கடுக்காய் இட்டுச் சுருங்கக் காய்ச்சிய நீரைக் கொண்டு வா, காடி தா – பழஞ் சோற்றுத் தண்ணீரைக் கொண்டு வந்து தருவாயாக, என்று – என்று சூழ்ந்து உள்ளவர்கள் கூறவும்,  நடுநடுத்து நா அடங்கா முன் – நடுக்கத்துடன் பேச்சுக் குழறி அடங்கும் முன்பாக,  பொடி அடுத்த பாழ்க் கோட்டம் சேரா முன் – சாம்பல் நிறைந்த சுடுகாட்டினைச் சென்று அடையாத முன்னமே, பன்மாடத் தென் குடந்தைக் கீழ்க்கோட்டம் செப்பிக் கிட – பல மாடங்களை உடைய (கும்பகோணம் என வழங்கப்படும்) தென்குடந்தை என்னும் திருத்தலத்தில், “கீழ்க்கோட்டம்” என்னும் திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள திருநாகேச்சுரப் பெருமானது திருநாமத்தைச் சொல்லித் துதித்துக் கிடப்பாயாக.

கடு – கடுக்காய். இது பித்தத்தைப் போக்குவது என்று சொல்லுவர் மருத்துவ நூலார். கடு அடுத்த நீர் - கடுக்காயைப் பொடி ஆக்கி, கொட்டையை நீக்கி, நீரில் இட்டுச் சுருங்க்க் காய்ச்சிய நீர். காடி – பழங்கஞ்சி, சோற்று நீர். நாக்கு வறட்சியால் நடுக்கம் எய்தி, பேச்சு அடங்கும். இது உயிர் போகும் தறுவாயில் நிகழும் குறிகளுள் ஒன்று. “பவனமாய்ச் சோடையாய் நா எழாப் பஞ்சு தோய்ச்சு அட்ட உண்டு, சிவனதாள் சிந்தியாப் பேதைமார்” என்பது திருஞானசம்பந்தர் தேவாரம். பொடி -  சாம்பல். பாழ்க் கோட்டம் – சுடுகாடு.

தென்குடந்தை என்பது, தென்னாட்டில் உள்ள கும்பகோணம் எனப்படும் ஒரு சிறந்த திருத்தலம். அதி திருத்தலத்தில், கீழ்கோட்டம் என்னும் திருக்கோயிலில் திருநாகேச்சுர சுவாமியாகச் சிவபெருமான் எழுந்தருளி உள்ளார். தென் என்னும் சொல் திசையைக் குறிப்பதோடு, ஞானம் என்னும் பொருளையும் தரும். “கீழ்க்கோட்டம்” என்பது திருமுறையில் ஈடுபாடு உள்ளவர்க்கே விளங்கும். நாகேசுவர சுவாமி கோயில் என்று கேட்டால் எளிதில் வழி சொல்லுவார்கள். 


No comments:

பாடல் 2

                   திருச்சிற்றம்பலம் “கடுஅடுத்த நீர்கொடுவா, காடிதா என்று, நடுநடுத்து, நாஅடங்கா முன்னம் பொடியடுத்த பாழ்க்கோட்டம் சேராமுன் பன்...