89. பொல்லாத சூது


“கைக்கெட்டா தொருபொருளும்! கண்டவர்க்கு

     நகை யாகும்! கனமே! யில்லை!

இக்கட்டாம் வருவதெல்லாம்! லாபமுண்டோ?

     கவறு கையில் எடுக்கலாமோ?

திக்கெட்டே றியகீர்த்தித் தண்டலையார்

     வளநாட்டிற் சீச்சீ யென்னச்

சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்

     சூது பொல்லாச் சூது தானே.”


இதன் பொருள் ---


    திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார் வளநாட்டில் - எட்டுத் திக்கினும் பரவிய புகழை உடைய திருத்தண்டலை இறைவரின் வளம்பொருந்திய நாட்டிலே, சீச்சீ என்னச் சொக்கட்டான் எடுத்தவர்க்கு - சீச்சீ என இகழும்படி சொக்கட்டானை எடுத்தவர்க்கு, ஒரு பொருளும் கைக்கு எட்டாது - எப் பொருளும் கிடைக்காது; கண்டவர்க்கு நகை ஆகும் - பார்த்தவர் இகழ்வர்; கனமே இல்லை - மதிப்பே இராது; வருவது எல்லாம் இக்கட்டாம் - வருவது முற்றும் துன்பமே ஆகும்; லாபம் உண்டோ - ஊதியமும் இல்லை; (ஆகையால்), கவறு கையில் எடுக்கலாமோ – சூதாடு கருவியைக் கையாலும் தொடலாமோ?, சொக்கட்டான் சூது பொல்லாச் சூதுதானே - சொக்கட்டான் எனும் சூதாட்டம், தீய சூதாட்டம் ஆகும்.

“இருமனப் பெண்டிரும், கள்ளும், கவறும் திரு நீக்கப்படார் தொடர்பு” எனத் திருவள்ளுவ நாயனார் அருளியது அறிக. பின்வரும் பிரமாணங்களையும் கொண்டு சூது தீது என்பதை அறிக.

      

“அடியும், ஆண்மையும், வலிமையும், சேனையும்,

     அழகும், வென்றியும், தம்தம்

குடியும், மானமும், செல்வமும், பெருமையும்,

     குலமும், இன்பமும், தேசும்,

படியும், மாமறை ஒழுக்கமும், புகழும், முன்

     பயின்ற கல்வியும் சேர

மடியுமால்; மதி உணர்ந்தவர் சூதின் மேல்

     வைப்பரோ? மனம் வையார்.”    – வில்லிபாரதம் 

இதன் பொருள் ---

      தலைமையும், பராக்கிரமமும், பலமும், சேனையும்-, அழகும் வெற்றியும், ஜயமும்,  அவரவரது  குடிப்பிறப்பின் மேன்மையும்,  மானமும், செல்வமும், பெருமையும், குலமும் இன்பமும்,  புகழும், ஒளியும், நற்குணமும், சிறந்த வேதங்களில் கூறிய விதிமுறைப்படி ஒழுகும் நல்லொழுக்கமும், முன்பு பயின்ற கல்வியும் ஆகிய இவையெல்லாம் சூதாடுவார்க்கு ஒருசேர அழியும். ஆதலால், அறிவினால் அறிய வேண்டுபவற்றை அறிந்தவர்கள், சூதின் மேல் மனத்தைச் செலுத்தமாட்டார்கள்.


“மீதெடுத்த வஞ்சராகி வெகுளி செய்தல், பிறர் பெருங்

கோதெடுத்து உரைத்த நண்பு கொண்டயிர்த்தல், கொடியவெம்

சூதெடுத்து விழைதலுற்ற சூள் பிழைத்தல் இன்னவே

தீதெடுத்த நூலின் முன்பு தீயஎன்று செப்பினார்.”    --வில்லிபாரதம்

இதன் பொருள் ---

    மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் - அதிகமாகப் பொருந்திய வஞ்சனையை உடையவர்களாய்க் கோபம் கொள்ளுதலும், பிறர் பெருங்கோது எடுத்து உரைத்தல் - பிறரது பெருங்குற்றங்களை எடுத்துத் தூற்றுதலும், நண்பு கொண்டு அயிர்த்தல் - (ஒருவரை முதலில்) நட்புக்கொண்டு பிறகு சந்தேகித்தலும், கொடிய வெம் சூது எடுத்து விழைதல் - மிகக்கொடிய சூதாடுதலை மேலாகக் கொண்டு விரும்புதலும், உற்ற சூள் பிழைத்தல் - சொன்ன உறுதிமொழி தவறுதலும், இன்ன - (ஆகிய) இச்செயல்களை, முன்பு - முற்காலத்திலேயே, தீது எடுத்த நூலில் - பாவங்களை யெடுத்துக் கூறுகின்ற தருமசாத்திரங்களில், தீய என்று செப்பினார் – தீமையானவை என்று சொன்னார்கள்.

சூதாட்டத்தைத் தீதென்று இகழ்ந்து சொல்லத் தொடங்கிய தருமபுத்திரன் அதற்கு இனமாக உள்ள மற்றைச் சில குற்றமான செயல்களையும் உடன் கூறினான்.


“சூது விரும்பேல்.” ---  ஆத்திசூடி.

“சூதும் வாதும் வேதனை செய்யும்.”  --- கொன்றைவேந்தன்.


“ஓதலும், ஓதி  உணர்தலும், சான்றோரால்

மேதை எனப்படும் மேன்மையும்,-சூது

பொரும் என்னும் சொல்லினால் புல்லப் படுமேல்

இருளாம் ஒருங்கே இவை. --- அறநெறிச்சாரம்.

இதன் பொருள் ---

    சூதாடுபவன் என்னும் பழிச் சொல்லால் ஒருவன் பற்றப்படுவானாயின், அறிவு நூல்களைக் கற்றலும், கற்றவற்றை ஆராய்தலும், அறிவுடையவன் என்று பலராலும் கூறப்படும் பெருமையும் ஆகிய இவை முழுதும் அவனை விட்டு மறையும்.


No comments:

பாடல் 2

                   திருச்சிற்றம்பலம் “கடுஅடுத்த நீர்கொடுவா, காடிதா என்று, நடுநடுத்து, நாஅடங்கா முன்னம் பொடியடுத்த பாழ்க்கோட்டம் சேராமுன் பன்...