குக்கலைப் பிடித்து




குக்கலைப் பிடித்து, நாவிக் கூண்டினில் அடைத்து வைத்து,
மிக்கதோர் மஞ்சள் பூசி மிகுமணம் செய்தாலும் தான்,
அக்குலம் வேறதாமோ? அதனிடம் புனுகு உண்டாமோ?
குக்கலே குக்கல் அல்லால், குலந்தனில் பெரியதாமோ?

     நாயைப் பிடித்து, புனுகு பூனை வசிக்கும் கூட்டில், வெளியில் விடாமல் அடைத்து வைத்து, மேன்மை பொருந்தியதும், ஒப்பற்றதுமான மஞ்சளை அரைத்துப் பூசி, நறுமணத்தை உண்டாக்கினாலும், அந்த நாயானது புனுகு பூனை ஆகாது. அதனிடம் இருந்து பூனையிடத்தில் உண்டாகும் புனுகு உண்டாகாது. என்ன செய்தாலும் நாய் நாய் தான். அது உயர்வு உடையதாக ஆகாது.

உயிர்களுக்கு, ஊழின் வயத்தால் பிறவி உண்டாகின்றது.  அந்தந்தப் பிறவிக்கு உள்ள குணமே மிகுந்து இருக்கும். நாய் நாய் தான். புனுகு பூனை புனுகு பூனை தான். ஒன்று வேறு ஒன்று ஆகாது.  இதனை,

நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்

என்னும் திருக்குறளால் தெளியலாம்.

No comments:

Post a Comment

24. எட்டி பழுத்து என்ன!

  "கட்டுமாங் கனிவாழைக் கனிபலவின்      கனிகள்உப காரம் ஆகும்; சிட்டரும்அவ் வணந்தேடும் பொருளையெல்லாம்      இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார் ...