திருத்தணிகை - 0292. பகல் இராவினும்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பகல் இராவினும் (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
ஞானிகளைப் பழித்து அழிதல் ஆகாது

தனன தானனம் தனன தானனம்
     தனன தானனம் ...... தனதான


பகலி ராவினுங் கருவி யாலனம்
     பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப்

பழைய வேதமும் புதிய நூல்களும்
     பலபு ராணமுஞ் ...... சிலவோதி

அகல நீளமென் றளவு கூறரும்
     பொருளி லேயமைந் ...... தடைவவோரை

அசடர் மூகரென் றவல மேமொழிந்
     தறிவி லேனழிந் ...... திடலாமோ

சகல லோகமும் புகல நாடொறுஞ்
     சறுகி லாதசெங் ...... கழுநீருந்

தளவு நீபமும் புனையு மார்பதென்
     தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா

சிகர பூதரந் தகர நான்முகன்
     சிறுகு வாசவன் ...... சிறைமீளத்

திமிர சாகரங் கதற மாமரஞ்
     சிதற வேல்விடும் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பகல் இராவினும் கருவியால் அனம்
     பருகி ஆவி கொண்டு ...... உடல்பேணிப்

பழைய வேதமும், புதிய நூல்களும்,
     பல புராணமும் ...... சில ஓதி,

அகல நீளம் என்று அளவு கூற உரும்
     பொருளிலே அமைந்து ...... அடைவோரை,

அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து,
     அறிவு இலேன் அழிந் ...... திடல் ஆமோ?

சகல லோகமும் புகல, நாள்தொறும்
     சறுகு இலாத செங் ...... கழுநீரும்,

தளவும் நீபமும் புனையும் மார்ப! தென்
     தணிகை மேவு செங் ...... கதிர்வேலா!

சிகர பூதரம் தகர, நான்முகன்,
     சிறுகு வாசவன் ...... சிறைமீள,

திமிர சாகரம் கதற, மாமரம்
     சிதற, வேல்விடும் ...... பெருமாளே. 
        
பதவுரை


      சகல லோகமும் புகல --- எல்லா உலகங்களும் புகழும்படி,

     நாள்தோறும் --- தினந்தோறும்,

     சறுகு இலாத --- தவறுதல் இன்றி,

     செங்கழுநீரும் --- செங்கழுநீர் மலரும்,

     தளவு நீபமும் --- முல்லை மலரும், கடப்ப மலரும்,

     புனையும் மார்ப --- அணிகின்ற திரு மார்பரே!

      தென் தணிகை மேவு செம்கதிர் வேலா --- அழகிய தணிகையில் வாழ்கின்ற செவ்விய ஒளியுடைய வேலாயுதரே!

      சிகர பூதரம் தகர --- சிகரங்களையுடைய கிரவுஞ்சமலை பொடியாகவும்,

     நான்முகன் --- பிரமதேவரும்,

     சிறுகு வாசவன் --- தன் உயர்நிலையினின்றும் தாழ்ந்துவிட்ட இந்திரனும்,

     சிறை மீளா --- சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெறுமாறும்,

     திமிர சாகரம் கதற --- இருண்ட கடல் கதறி ஒலி செய்யவும்,

     மாமரம் சிதற --- மரமான சூரன் பிளவுபடவும்,

     வேல் விடும் பெருமாளே = வேலாயுதத்தை விடுத்தருளிய பெருமையின் மிகுந்தவரே!

      பகல் இராவினும் --- பகலிலும் இரவிலும்,

     கருவியால் --- உடம்பு என்ற இக்கருவியினால்,

     அனம் பருகி --- அன்னத்தை உண்டு,

     ஆவி கொண்டு உடல் பேணி --- உயிரை ஓம்பி உடம்பை விரும்பி வளர்த்து,

     பழைய வேதமும் --- பழமையான வேத நூல்களையும்,

     புதிய நூல்களும் --- புதுமையாக எழுந்த நூல்களையும்,

     பல புராணமும் சில ஓதி --- பலவகையான புராணங்களையும் ஒருவாறு சிலவற்றை ஓதியுணர்ந்து,

     அகலம் நீளம் என்று கூற அரும் --- அகலம் நீளம் என்ற ஓர் அளவு சொல்லுதற்கு இயலாத,

     பொருளிலே அமைந்து அடைவோரை --- பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அடைய வல்லோரை,

     அசடர் மூகர் என்று --- மூடர் என்றும் ஊமையர் என்றும்,

     அவலமே மொழிந்து --- வீண் வார்த்தைகளைப் பேசி,

     அறிவிலேன் --- அறிவிலியாகிய அடியேன்,

     அழிந்திடலாமோ --- அழிந்து போகலாமோ?

பொழிப்புரை 

         எல்லா உலகங்களும் புகழும்படி நாள்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற திருமார்பினரே!

     அழகிய திருத்தணிகையில் எழுந்தருளியுள்ள செவ்விய ஒளி வீசும் வேலாயுதரே!

     சிகரங்களுடன் கூடிய கிரவுஞ்ச மலை பொடிபடவும், பிரமதேவனும் நிலைகுலைந்த இந்திரனும் சிறையிலிருந்து மீட்சியடையவும் இருண்ட கடல் கதறவும், அதில் மாமரமாக முளைத்த சூரன் பிளவுபடவும் வேலை விடுத்தருளிய பெருமிதம் உடையவரே!

         பகலிலும் இரவிலும் உடம்பாகிய கருவியால் அன்னம் உண்டு உயிர்கொண்டு உடலை வளர்த்து, பழைய வேதங்களையும், புதிய நூல்களையும் பல புராணங்களையும் ஓதியுணர்ந்து, அகலம் நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அடைகின்ற ஆன்றோரை, மூடர் என்றும் ஊமையர் என்றும் இகழுரை கூறி அறிவில்லாத அடியேன் அழியலாமோ?


விரிவுரை

பகல் இராவினும் கருவியால் அனம் பருகி ஆவி கொண்டு உடல்பேணி ---

இரவும் பகலும் உடம்பாகிய கருவியால் சிறிது உணவுண்டு இந்த உயிரைப் பேணும் பொருட்டுப் பெரியோர்கள் உடம்பை வளர்ப்பார்கள். உடம்பினுக்கு உள்ளே உறையும் உத்தமனைக் காண்பதற்காக உடம்பை வளர்ப்பார்கள்.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்,
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்,
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே.    --- திருமந்திரம்

பழைய வேதமும் ---

வேதம் அநாதி. சுயம்பு. இறைவனுடைய திருவாக்கு.

புதிய நூல்களும் ---

ஆன்றோர்கள் உண்டாக்கிய புதிய நூல்கள்.
  
பல புராணமும் சில ஓதி ---

புராண வகைகள் பல. அவற்றுள் சிலவற்றை ஓதியுணர்ந்து அடங்கி நிற்பார்கள் மகான்கள்.

அகல நீளம் என்று அளவு கூற அரும் பொருளிலே அமைந்து அடைவோரை ---

பரம்பொருளின் அகலம், நீளம் இவற்றை யாரால் அளந்து அறிய முடியும்.

      அகலநீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய
   அரிய மோனமே கோயில் என மேவி”    --- திருப்புகழ்

அப்பரம் பொருளில் சித்தத்தை வைத்து நித்தம் சமாதி நிலையில் கூடியிருப்பவர்கள் பெரியோர்கள்.
  
அசடர் மூகர் என்று அவலமே மொழிந்து ---

சமாதி நிலையில் உள்ள மகான்களை மூடர் என்றும் ஊமையர் என்றும் உலகவர் இகழ்வார்கள்.

சறுகிலாத செங்கழுநீரும் ---

சறுகிலாத-தவறுதல் இன்றி. திருத்தணிகையில் நாள்தோறும் தவறாது செங்கழுநீர் மலரும்.

தளவு-முல்லை மலர். நீபம்-கடப்ப மலர்.
  
கருத்துரை

தணிகேசா! ஞானிகளைப் பழித்தல் கூடாது.


No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...