திருத்தணிகை - 0291. நினைத்தது எத்தனையில்




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நினைத்தது எத்தனை (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
அழியாத ஞானத்தை அருள்

தனத்த தத்தனத் ...... தனதான
     தனத்த தத்தனத் ...... தனதான


நினைத்த தெத்தனையிற் ...... றவறாமல்
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமற்

கனத்த தத்துவமுற் ...... றழியாமற்
     கதித்த நித்தியசித் ...... தருள்வாயே

மனித்தர் பத்தர்தமக் ...... கெளியோனே
     மதித்த முத்தமிழிற் ...... பெரியோனே

செனித்த புத்திரரிற் ...... சிறியோனே
     திருத்த ணிப்பதியிற் ...... பெருமாளே.

பதம் பிரித்தல்

நினைத்தது எத்தனையில் ...... தவறாமல்,
     நிலைத்த புத்திதனைப் ...... பிரியாமல்,

கனத்த தத்துவம் உற்று ...... அழியாமல்,
     கதித்த நித்திய சித்து ...... அருள்வாயே.

மனித்தர் பத்தர் தமக்கு ...... எளியோனே!
     மதித்த முத்தமிழில் ...... பெரியோனே!

செனித்த புத்திரரில் ...... சிறியோனே!
     திருத்தணிப் பதியில் ...... பெருமாளே.

பதவுரை 

         மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே --- மனிதர்களுக்குள் பத்தர்கட்கு எளியவரே!

         மதித்த முத்தமிழில் பெரியோனே --- மதிக்கப்படுகின்ற இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழில் பெரியவரே!
        
         செனித்த புத்திரரில் சிறியோனே --- சிவமூர்த்தியிடம் தோன்றிய குமாரர்களுள் இளையவரே!

         திருத்தணி பதியில் பெருமாளே --- திருத்தணியம்பதியில் வாழ்கின்ற பெருமையில் மிகுந்தவரே!

         நினைத்து எத்தனையில் தவறாமல் --- நினைத்து எந்த அளவும் தவறாமல் இருக்கவும்,

     நிலைத்த புத்தி தனை பிரியாமல் --- நிலையான ஞானத்தை விட்டு அடியேன் விலகாமல் இருக்கவும்,

     கனத்த தத்துவம் உற்று அழியாமல் -- பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாற்சென்று அழியாமல் இருக்கவும்,

     கதித்த நித்திய சித்து --- வெளிப்படுகின்ற அழியாத சித்தியை,

     அருள்வாயே --- அடியேனுக்கு அருள் புரிவீராக.

பொழிப்புரை 

         மனிதர்களுள் அன்புடையார்க்கு எளியவரே!

மதிக்கப்படும் முத்தமிழில் பெரியவரே!

தோன்றிய சிவகுமாரரில் இளையவரே!

திருத்தணிப் பதியில் வாழ்கின்ற பெருமிதம் உடையவரே!

         நினைத்த கருமங்கள் யாவும் தவறாமல் கை கூடவும், நிலைத்த அறிவினின்றும் பிரியாமல் இருக்கவும் பெருமை வாய்ந்த தத்துவங்களைக் கடந்து அப்பாலான நிலையைப் பெற்று அழியாதிருக்கவும், வெளிப்பட்ட அழியாத சித்தியை அடியேனுக்குத் தந்தருளுவீராக.

விரிவுரை 

நினைத்த தெத்தனையில் தவறாமல் ---

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர், எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்’ என்று திருவள்ளுவர் கூறியாங்கு உத்தமர்கள் உறுதியாக எண்ணிய யாவும் நிறைவேறும்.

நிலைத்த புத்திதனைப் பிரியாமல் ---

அறிவு நிலைத்திருக்க வேண்டும். அவ் அறிவினை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும்.

கனத்த தத்துவமுற்று அழியாமல் ---

தத்துவங்கள் 36. ஆன்ம தத்துவம் 24. வித்யா தத்துவம் 7. சிவ தத்துவம் 5. ஆக 36.

 ஆறு ஆறையும் நீத்து, தன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெரும் ஆறு உளதோ”       --- கந்தர்அநுபூதி

முப்பத்தாறு தத்துவங்களைக் கடந்தால் இறைவனைக் காணலாம்.

கண்ணப்ப நாயனார் காளத்தி மலையின் படிகளில் ஏறும் காட்சி தத்துவங்களைக் கடந்து செல்லுவது போல் இருக்கின்றதாம்.

நாணனும் அன்பும் முன்பு நளிர் வரை ஏற, தாமும்
பேணுதத் துவங்கள் என்னும் பெருகு சோபனம் ஏறி,
ஆணையாம் சிவத்தைச் சார அணைபவர் போல, ஐயர்
நீள் நிலை மலையில் ஏறி நேர்படச் செல்லும் போதில்.     --- பெரியபுராணம்.

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்,
     தத்துவ அதீத மேல் நிலையில்
சித்து இயல் முழுதும் தெரிந்தனம், அவைமேல்
     சிவநிலை தெரிந்திடச் சென்றேம்,
ஒத்தஅந் நிலைக்கண் யாமும் எம் உணர்வும்
     ஒருங்கு உறக் கரைந்து போயினம் என்று,
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று ஓங்கும்
     அருட்பெருஞ் சோதிஎன் அரசே.          --- திருவருட்பா.


கதித்த நித்திய சித்து அருள்வாயே ---

நித்திய சித்து-என்றும் அழியாத சித்து. அதனை அருணை முனிவர் பெற்றார். அதனைப் பெற்றேன் என்று பிரிதோரிடத்தில் பாடுகின்றார்.

      அவமே பிறந்த எனை, இறவாமல் அன்பர் புகும்
   அமுதாலயம் பதவி   அருள்வோனே”          --- (சிவஞான) திருப்புகழ்.

மனித்தர் பத்தர் தமக்கு எளியோனே ---

மனிதர்களுள் அன்பு செய்யும் அடியார்க்கு முருகன் எளியவன்.

மால் அயனுக்கு அரியானே, 
மாதவரைப்  பிரியானே'                             --- (காலனிட) திருப்புகழ்

அபிநவ துங்ககங்கா நதிக்கு மைந்த அடியவர்க்கு எளியோனே.”
                                                                         ---  (தமரகுரங்களும்) திருப்புகழ்.

மதித்த முத்தமிழ் ---

இயல், இசை, நாடகம்.
இறைவன் சத்து, சித்து, ஆனந்தம்.

செனித்த புத்திரரிற் சிறியோனே ---

சிவ குமாரர்கள் விநாயகர், வீரபத்திரர், வைரவர், வேலவர். ஆக நால்வரில் இளையவர் குமாரக் கடவுள்.

கருத்துரை

திருத்தணிக் குமரா! நித்திய சித்தை அருள் புரிவீர்.

No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...