திருத்தணிகை - 0290. நிலையாத சமுத்திரமான





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

நிலையாத சமுத்திர (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
சமுசாரக் கடலில் தத்தளிக்கும் அடியேனுக்குத் துணை நீயே.  
 என்னைக் கரை ஏற்றி அருள். இது உனது கடமை.


தனதான தனத்தன தான
தனதான தனத்தன தான
     தனதான தனத்தன தான ...... தனதான


நிலையாத சமுத்திர மான
சமுசார துறைக்கணின் மூழ்கி
     நிசமான தெனப்பல பேசி ...... யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி
பெரியோர்க ளிடைக்கர வாகி
     நினைவால்நி னடித்தொழில் பேணி ...... துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி
பவநோயி னலைப்பல வேகி
     சலமான பயித்திய மாகி ...... தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி
யதுவேரை யறுத்துனை யோதி
     தலைமீதில் பிழைத்திட வேநி ...... னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக
குறமாது தனக்குவி நோத
     கவினாரு புயத்திலு லாவி ...... விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு
மடியேனை சுகப்பட வேவை
     கடனாகு மிதுக்கன மாகு ...... முருகோனே

பலகாலு முனைத்தோழு வோர்கள்
மறவாமல் திருப்புகழ் கூறி
     படிமீது துதித்துடன் வாழ ...... அருள்வேளே

பதியான திருத்தணி மேவு
சிவலோக மெனப்பரி வேறு
     பவரோக வயித்திய நாத ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


நிலையாத சமுத்திரம் ஆன
சமுசார துறைக்கணில் மூழ்கி,
     நிசம் ஆனது எனப்பல பேசி, ...... அதனூடே

நெடுநாளும் உழைப்பு உளது ஆகி,
பெரியோர்கள் இடைக் கரவு ஆகி,
     நினைவால் நின் அடித் தொழில் பேணி ...... துதியாமல்,

தலையான உடல்பிணி ஊறி,
பவநோயின் அலைப்பல ஏகி,
     சலமான பயித்தியம் ஆகி, ...... தடுமாறி,

தவியாமல் பிறப்பையும் நாடி,
அதுவேரை அறுத்து உனை ஓதி,
     தலம் மீதில் பிழைத்திடவே நின் ...... அருள்தாராய்.

கலியாண சுபுத்திரன் ஆக,
குறமாது தனக்கு விநோத
     கவின் ஆரு புயத்தில் உலாவி ...... விளையாடி,

களிகூரும் உனைத் துணை தேடும்
அடியேனை சுகப்படவே வை,
     கடன் ஆகும், துக் கனம் ஆகும், ...... முருகோனே!

பலகாலும் உனைத் தொழுவோர்கள்
மறவாமல் திருப்புகழ் கூறி,
     படிமீது துதித்து உடன் வாழ ...... அருள்வேளே!

பதியான திருத்தணி மேவு
சிவலோகம் எனப்பரிவு ஏறு
     பவரோக வயித்திய நாத! ...... பெருமாளே.


பதவுரை

       கலியாண சுபுத்திரன் ஆக --- மேன்மை தாங்கிய கல்யாண மாப்பிள்ளையாகவே என்றென்றும் விளங்கி,

     குறமாது தனக்கு --- வள்ளியம்மையாரிடத்தில்,

     விநோத --- பொழுது போக்குபவராக,

     கவின் ஆரு புயத்தில் உலாவி --- அழகு நிறைந்த அவருடைய திருப்புயத்தில் தழுவி உலாவி,

     விளையாடி --- விளையாடல்களைப் புரிந்து,

     களி கூரும் உனை --- மகிழ்ச்சியை அடையும் தேவரீரை,

     துணை தேடும் --- துணையென்று தேடுகின்ற,

     அடியேனை சுகப்பட (ஏ, அசை)வை --- அடியேனை இன்புறுமாறு வைத்தருள்வீர்;

     கடன் ஆகும் --- அடியேனை ஆட்கொள்வது தேவரீருக்கு கடனேயாகும்.;

     இது கனம் ஆகும் --- அவ்வாறு ஆட்கொள்வதால் உமக்குப் பெருமையும் உண்டாகும்,

     முருகோனே --- முருகக் கடவுளே!

       பலகாலும் --- பன்முறையும்,

     உனை தொழுவோர்கள் --- தேவரீரை வணங்கும் மெய்யடியார்களை,

     மறவாமல் திருப்புகழ் கூறி --- மறவாமற்படிக்கு திருப்புகழைப் பாடி,

     படி மீது --- இவ்வுலகின் கண்,

     துதித்து --- தோத்திரம் செய்வித்து,

     உடன் வாழ அருள்வேளே --- உம்முடன் எப்போதும் இருந்து வாழ அருள் புரிபவரே!

      சிவலோகம் என பரிவு எறும் --- (இப்பூவுலகில்) இதுவே சிவலோகம் என்று அன்பு உண்டாக்கத்தக்க,

     பதி ஆன திருத்தணி மேவு --- திருத்தலமாகிய திருத்தணியில் விரும்பி வாழ்கின்ற,

     பவரோக --- பிறவிப் பெரும்பிணியைப் போக்கவல்ல,

     வயித்தியநாத --- மருத்துவ தலைவரே!
  
      பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!

      நிலையாத சமுத்திரம் ஆன --- ஆழமும் அகலமும் இவ்வளவு என்று காணமாட்டாத மாபெருங் கடல்போன்ற,

     சமுசார துறைகணின் மூழ்கி --- சமுசாரமாகிய துறையில் முழுகி,

     நிசம் ஆனது என பலபேசி --- மெய் போன்ற பல பொய்களைப் பேசியும்,

     அதன் ஊடே --- அக்கடலின் நடுவே,

     நெடுநாளும் உழைப்பு உளது ஆகி --- நீண்ட நாளாக உழைப்பை உடையவனாகியும்,

     பெரியோர்கள் இடை கரவாகி --- பெரியோர்கள் கூட்டத்தில் திருட்டுத்தனமுடன் ஒளிவு உடையவனாகியும்,

     நினைவால் நின் அடி தொழில் பேணி --- நல்ல நினைவுடன் தேவரீருடைய திருவடித் தொண்டுகளை விரும்பி,

     துதியாமல் --- துதியாமலும்,

     தலை ஆன உடல் பிணி ஊறி --- முதன்மையான உடலில் நோய்கள் வந்து தங்கவும்,

     பல நோயின் அலை பல ஏகி --- பிறவி நோய் என்னும் அலைகள் பல இக்கடலில் வீசவும்,

     சலம் ஆன பயித்தியம் ஆகி --- துன்பமாகிய பித்து மிகவும்

     தடுமாறி --- அடியேன் தடுமாற்றத்தை அடைந்து,

     தவியாமல் --- தவிக்கா வண்ணம்,

     பிறப்பையும் நாடி --- பிறவியின் கொடுமையை எண்ணி,

     அது வேரை அறுத்து --- அப்பிறவிக் கொடியின் வேரை அறவே அறுத்து,

     உனை ஓதி --- தேவரீரை ஓதி,

     தல மீதில் --- இப்பூவுலகில்,

     பிழைத்திட --- அடியேன் உய்ந்திடுமாறு,

     நின் அருள் தாராய் --- தேவரீருடைய திருவருளைத் தருவீர்.


பொழிப்புரை

         முருகக் கடவுளே!

     என்றென்றும் சிறந்த திருமணப் புதல்வராக விளங்கி, வள்ளிநாயகியாருடைய அழகிய புயத்தைத் தழுவி அவருடன் உலாவி, பொழுது போக்கி விளையாடி மகிழும் தேவரீரையே சிறந்த துணையென்று நம்பித் தேடுகின்ற அடியேனை இன்புறுமாறு வைத்தருள்வீர்; இது உமக்குக் கடனேயாம்;

     எளிமையாகிய என்னைக் காப்பாற்றுதல் உமக்குப் பெருமையும் ஆகும். உமது புகழைப் பாடித் துதிக்கும் மெய்யடியார்களை எப்போதும் உமது உடனேயே துதித்து வாழ இன்புற வைத்தருளும் கருணாகரரே!

     இதுவே சிவலோகம் என்று பார்ப்பவர்கள் பரிவுறும் திருத்தலமாகிய திருத்தணிகையில் எழுந்தருளியுள்ள பவரோக வைத்தியநாதப் பெருந்தகையினரே!

         சமுசாரமாகிய நிலைபேறில்லாத பெரிய கடலில் முழுகி மெய் போன்ற பல பொய்களைப் பேசியும், அச்சமுசார சாகரத்திலேயே நெடுநாளாக உழைப்பவனாகியும், ஆன்றோர்களோடு கூடாது ஒளிப்பவனாகியும், நினைவுடன் உமது திருவடித் தொழும்புகளை விரும்பிச் செய்யாதவனாகியும், உடலில் முதன்மையான நோய்கள் வரவும் உயிரில் பிறவிநோய் என்ற அலைகள் வீசவும், அதனால் துன்பமாகிய பித்து மிகவும், தடுமாற்றத்தை யடைந்தும் அடியேன் தவியாமற்படிக்கு, பிறந்துழல்வதின் கொடுமையை எண்ணி அப்பிறவியின் வேரை அறவே களைந்தெறிந்து, உம்மை ஓதி உலகில் உய்யுமாறு திருவருள் புரிந்து ஆட்கொள்வீர்.


விரிவுரை


நிலயாத சமுத்திரமான சமுசாரம் ---

சமுசாரத்தை நிலையாத சமுத்திரம் என்று சுவாமிகள் கூறியது எத்துணை அழகாகவும் அநுபவமாகவும் இருக்கின்ற தென்பதை அன்பர்கள் உய்த்துணர்க.

(1) கடலில் ஓயாமல் அலைகள் வீசிக்கொண்டே யிருக்கின்றன; சமுசாரத்தில் இன்ப துன்பங்களாகிய அலைகள் வந்துகொண்டே யிருக்கின்றன.

(2)      கடலில் கப்பல்கள் மிதந்து கொண்டே இருக்கின்றன. சமுசாரத்திலும் ஆசைகளாகிய மரக்கலங்கள் மிதக்கின்றன.

(3)      கடலில் திமிங்கிலங்கள் முதலைகள் வாழ்கின்றன. சமுசாரத்திலும் நம்மை எதிர்க்கின்ற பகைவர்கள் வாழ்கின்றனர்.

(4)      கடலில் பலவகைப்பட்ட மீன்கள் உலாவி வயிறு வளர்க்கின்றன. சமுசாரத்திலும், மனைவி மக்கள் முதலியோர் உலாவி வயிறு வளர்க்கின்றனர்.

(5)      கடலுக்குள் மலைகள் இருக்கின்றன. சமுசாரத்திலும் அகங்காரமாகிய மலை பெரிதாக வளர்ந்திருக்கின்றது.

(6)      கடல் ஆழமும் கரையும் காணமாட்டாமல் பயங்கரமாக இருக்கின்றது. சமுசாரமும் எவ்வளவு சம்பாதித்துப் போட்டாலும் போட்ட இடங்காணாது முடிவு இன்றி பயங்கரத்தை விளைவிக்கின்றது.

சமுசாரத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் இவ்வநுபவ மொழி நன்கு புலனாகும். அந்தோ! இச் சாரமில்லாத சமுசாரம் எத்துணை அச்சத்தைத் தருகின்றது? அம்மம்மா! இதனின்றும் தப்பிக் கரை சேர்வது அருமையினும் அருமையே.

நிசமானது எனப்பல பேசி ---

சமுசாரத்தில் அமிழ்ந்து கிடப்பவர் கேவலம் வயிற்றை வளர்க்கும் பொருட்டும், மனைவி மக்களைக் காப்பாற்றும் பொருட்டும் மெய்போன்ற பொய்களைப் பற்பல விதமாகவும், சாமர்த்தியமாகவும் பேசியுழல்வர்.

உதாரணம்:-

(1)       ஒரு நாளைக்கு 50 ரூபாய் சம்பாதிக்கும் வழி இப்புத்தகத்தில் உள்ளது. இதன் விலை ரூபாய் 100.

(நாளொன்றுக்கு ஐம்பது ரூபாய் சம்பாதிக்கும் வழியைத் தெரிந்தவன் புத்தகத்தை இருபக்கமும் கம்பியால் பொதிந்து விற்றுக்கொண்டு அலைய வேண்டாமே?)

(2)       இந்த மருந்து 250 வியாதிகளைக் கண்டிக்கும். இம்மருந்தை உண்டு 3 மணி நேரத்தில் குணமில்லை என்றால் ரூ. 1000 இனாம்.

(3)       நோயில்லாத பொழுது டாக்டர் சர்டிபிகேட் தந்து லீவு எடுத்தல்;  

இவை போல் எத்தனையோ ஆயிரம் மெய் போன்ற பொய்கள்.

நெடுநாளும் உழைப்பு உளதாகி ---

என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவோ” என்றபடி இறைவன் என்று உளனோ அன்று உயிர்களும் உண்டு; அன்று தொட்டு உழன்று வருகின்றோம்.

பெரியோர்கள் இடைக் கரவாகி ---

அறிவான் ஆன்ற ஆன்றோர்களிடம் கூடிப் பழகினால் ஆவி ஈடேறுவதற்குரிய உண்மை நெறிகளை உபதேசிப்பர்; இடித்துக் கூறி உய்விப்பர். ஆதலால் அறிஞரிடம் சொல்லாதும், தற்செயலாக அவரைக் காண நேர்கினும் ஒளிந்தும் ஒதுங்கியும் செல்வது.

அடித்தொழில் பேணி ---

அடிமைகளாகிய உயிர்கள் ஆண்டானுடைய அடித்தொண்டு புரிந்தாலன்றி உய்வது எங்ஙனம்?

ஆமாறுஉன் திருவடிக்கே அகம் குழையேன், அன்புஉருகேன்,
பூமாலை புனைந்து ஏத்தேன், புகழ்ந்து உரையேன், புத்தேளிர்
கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்தாடேன்,
சாமாறே விரைகின்றேன், சதுராலே சார்வானே.       --- மணிவாசகம்.

தலையான உடல் பிணி ஊறி ---

மேற் கூறியவாறு இறைவனை நினைந்து திருத்தொண்டுகள் செய்து புண்ணியத்தை ஈட்டாது, கயவருடன் கூடி வறிதே காலத்தைக் கழித்து கூடாவொழுக்கங்களை மேற்கொண்டதன் பயனாக உடம்பில் முதற்றரமான குட்டம், க்ஷயம் முதலிய நோய்கள் வந்து குடிபுகுகின்றன.

பிறவிநோய் உயிர்ப்பிணி என்று பிரித்துணரும் பொருட்டு இவைகளை உடற்பிணி என்ற அருமை நுனித்து நோக்குந் தொறும் சிந்தை உருகுகின்றது.

பவநோயின் அலைப் பலவேகி ---

முதல் வரியில் நிலையாத சமுத்திரம் என்று எடுத்துக்
கொண்டதற்கிணங்க, இங்கு ஓயாது பிறந்து இறந்து வருவதைப் பல அலையென்றனர்.

      புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
   பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
   கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
   வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச்
   செல்லாஅ நின்றஇத் தாவர் சங்கமத்துள்
   எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்"   --- மணிவாசகம்.                                                                                                                                                                    
அருள்பழுத்து அளிந்த கருணை வான்கனி,
ஆரா இன்பத் தீராக் காதல்
அடியவர்க்கு அமிர்த வாரி, நெடுநிலை
மாடக் கோபுரத்து ஆடகக் குடுமி
மழைவயிறு கிழிக்கும் கழுமல வாண!நின்

வழுவாக் காட்சி முதிரா இளமுலைப்
பாவையுடன் இருந்த பரம யோகி!
யான்ஒன்று உணர்த்துவன், எந்தை! மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி

எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்து
யாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாயர் ஆகியும், தந்தையர் ஆகியும்
வந்து இலாதவர் இல்லை, யான் அவர்
தந்தையர் ஆகியும், தாயர் ஆகியும்
வந்து இராததும் இல்லை, முந்து
பிறவா நிலனும் இல்லை, அவ்வயின்
இறவா நிலனும் இல்லை, பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லை,
யான் அவை

தம்மைத் தின்னாது ஒழிந்ததும் இல்லை,
அனைத்தே காலமும் சென்றது, யான்இதன்மேல்இனி
இளைக்குமாறு இலனே, நாயேன்,
நந்தாச் சோதி!நின் அஞ்செழுத்து நவிலும்

தந்திரம் பயின்றதும் இலனே, தந்திரம்
பயின்றவர்ப் பயின்றதும் இலனே, ஆயினும்
இயன்றஓர் பொழுதின் இட்டது மலரா,
சொன்னது மந்திரம் ஆக, என்னையும்
இடர்ப்பிறப்பு இறப்புஎனும் இரண்டின்
கடல் படா வகை காத்தல்நின் கடனே. ---பதினோராம் திருமுறை.


பிறப்பையும் நாடி அதுவேரை அறுத்து ---

இவ்வாறு எண்ணில்லாத பல யுகங்களாக, எண்ணில்லாத பிறவிகளை எடுத்து மாறி மாறி உருவெடுத்து வரும் இப்பிறவியின் துன்பத்தை நன்கு எண்ணிப் பார்த்து, இப்பிறவியின் வேரை அறுத்தெறிய வேண்டும். இதற்கும் இறைவனையே வேண்டி நிற்றல் வேண்டும்.

வெறுப்பனவே செய்யும்என் சிறுமையை,நின் பெருமையினால்
பொறுப்பவனே! அராப் பூண்பவனே! பொங்கு கங்கைசடைச்
செறுப்பவனே! நின் திருவருளால் என் பிறவியை வேர்
அறுப்பவனே! உடையாய் அடியேன் உன் அடைக்கலமே.      ---  மணிவாசகம்.                                                                                                                                              ---

கலியாண சுபுத்திரனாக..........உனைத் துணைதேடும் ---

மனைவியை மணந்து சமுசாரத்தில் உழன்று துன்புறுவேனாகிய அடியேன், வள்ளி மாதுடன் மகிழும் உம்மையே துணை தேடுகின்றேன்” என்ற நயம் எத்துணை அழகாகவும் ஆழமாகவும், சிந்திக்குந்தோறும் சித்தத்தில் தித்திக்கின்றது என்பதையும் அன்பர்கள் உற்று நோக்குக.

கடனாகும் ---

அடிமைகளைக் காத்தல் ஆண்டானுக்குக் கடன் தானே.

 திருக்கரக் கோயிலான் தன்கடன் அடியேனையுந் தாங்குதல்” என்பார் அப்பர் பெருமான்.

கனம் ஆகும் ---

மாலையனாதி வானவரைக் காப்பாற்றியதைவிட எளியோரைக் காப்பாற்றுவதுதான் புகழ்.

       வறியார்க் கொன்றீவதே ஈகை”

முருகா! நான் ஒரு சம்சாரி. தேவரீரும் இரு மனைவியரை மணந்துள்ள ஒரு பெரிய சம்சாரி; பெற்றவட்கே பிள்ளையருமை தெரியும். அதுபோல் சமுசாரிக்கே சமுசாரியின் துன்பம் நன்கு புலனாகும். ஆதலால் சமுசார சாகரத்தில் மூழ்கித் துன்புறும் எளியேனை ஆட்கொள்வது உமக்குக் கடனும் பெருமையும் ஆகும். பொன்னுலகில் உள்ள இந்திராதி இமையவரை ஆட்கொண்டது அத்துணைப் பெருமையாகாது. ஏன்? தனவந்தனுக்கு உணவு தருவது புண்ணியமாகுமா? ஏழைக்கு அல்லவா உணவும் உடையும் தரவேண்டும். அதுதானே பெருமை. ஆதலால் என்னைக் காப்பாற்றினால்தான் உமக்கு உண்மையும் நிலைபேறும் உடைய புகழ் கிடைக்கும்” என்று உரிமையுடன் முறையிட்டுச் சுவாமிகள் வழக்கிடும் பண்பு எம் போல்வார்க்கு எத்துணை மகிழ்சியை விளைவிக்கின்றது.

பலகாலும்............வாழ அருள்வேளே ---

எப்போதும் இளம் பூரணனாகிய முருகனையே துதிக்கும் அடியார்களை அப்பரமபதி தமது அருகில் வைத்து திருப்புகழ் பாடி மறவாமல் துதிக்குமாறு அருள் புரிவார்.

வேள்-விரும்பப்படுபவர்.


சிவலோகம் எனப்பரிவேறும் ---

திருத்தணிகை தொண்டை நாட்டுத் திருப்பதி. அது மிகவும் உயர்ந்த சுப்ரமண்ய க்ஷேத்திரம். ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர் ஓதும் பெருமையுடையது.

பவரோக வயித்தியநாதப் பெருமாளே ---

என்ற திருவாக்கின்படி, பிறவாப் பெருந்தகையாகிய முருகவேள் பிறவிப் பெரும்பிணிக்கு வயித்தியநாதராக விளங்குகின்றார். முருகர் பரம்பரை வைத்தியர்; அவருடைய பிதாவும் வைத்தீச்வரர்; மருந்தீசர், வைத்தீசர் மகன் வைத்தியன் என்பதில் என்ன தடையுளது? இந்த வைத்தியநாதன் திருத்தணி மலைமேல் இருக்கின்றான். “குழந்தைகளே! வாருங்கள்; பிறவி நோய்க்கு வருந்த வேண்டாம். என்னிடம் வாருங்கள். பிறவாப் பெற்றியைப் பெறலாம். என்னிடம் அந்நோய்க்கு நல்ல மருந்துள்ளது. இன்றே வாருங்கள், இப்பொழுதே வாருங்கள்” என்று அறைகூவி அழைக்கின்றான்.

       வருகவென அறைகூவி யாளுவதும்”      - சீர்பாதவகுப்பு

கருத்துரை

வள்ளி மணவாளரே! திருப்புகழைப் பாடுவித்து அடியவரை ஆட்கொள்பவரே! தணிகைமலை மேவு பவரோக வைத்திய நாதரே! நிலையாத சமுசாரமாகிய கடலினின்றும் அடியேனைக் கரையேற்றி ஆட்கொள்வீர்.








No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...