அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தொடத் துளக்கிகள்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பொதுமாதரால் அழியும் அடியேனது
இருள் மயக்கம் தீர்த்து,
அருள்
ஒளியைத் தந்து அருள்.
தனத்த
தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன
தனத்த தத்தன தனதன தனதன ...... தனதான
தொடத்துளக்கிகள்
அபகட நினைவிகள்
குருட்டு மட்டைகள் குமரிகள் கமரிகள்
சுதைச்சி றுக்கிகள் குசலிக ளிசலிகள்
...... முழுமோசந்
துறுத்த
மட்டைகள் அசடிகள் கசடிகள்
முழுப்பு ரட்டிகள் நழுவிகள் மழுவிகள்
துமித்த மித்திரர் விலைமுலை யினவலை ..புகுதாமல்
அடைத்த
வர்க்கியல் சரசிகள் விரசிகள்
தரித்த வித்ரும நிறமென வரவுட
னழைத்து சக்கிர கிரிவளை படிகொடு
...... விளையாடி
அவத்தை
தத்துவ மழிபட இருளறை
விலக்கு வித்தொரு சுடரொளி பரவந
லருட்பு கட்டியு னடியிணை யருளுவ ...... தொருநாளே
படைத்த
னைத்தையும் வினையுற நடனொடு
துடைத்த பத்தினி மரகத சொருபியொர்
பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ......ளிளையோனே
பகைத்த
ரக்கர்கள் யமனுல குறஅமர்
தொடுத்த சக்கிர வளைகர மழகியர்
படிக்க டத்தையும் வயிறடை நெடியவர்
.....மருகோனே
திடுக்கி
டக்கட லசுரர்கள் முறிபட
கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில்
திருத்தி விட்டொரு நொடியினில்
வலம்வரு .....மயில்வீரா
தினைப்பு
னத்திரு தனகிரி குமரிநல்
குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ்
திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு ....பெருமாளே.
பதம் பிரித்தல்
தொடத்
துளக்கிகள், அபகட நினைவிகள்,
குருட்டு மட்டைகள், குமரிகள், கமரிகள்,
சுதைச் சிறுக்கிகள், குசலிகள், இசலிகள், ...... முழுமோசம்
துறுத்த
மட்டைகள், அசடிகள், கசடிகள்,
முழுப் புரட்டிகள், நழுவிகள், மழுவிகள்,
துமித்த மித்திரர், விலைமுலை இனவலை ......புகுதாமல்
அடைத்தவர்க்கு
இயல் சரசிகள், விரசிகள்,
தரித்த வித்ரும நிறம்என, வர உடன்
அழைத்து சக்கிர கிரிவளை படிகொடு
...... விளையாடி,
அவத்தை
தத்துவம் அழிபட இருள் அறை
விலக்குவித்து ஒரு சுடர்ஒளி பரவ, நல்
அருள் புகட்டி, உன் அடிஇணை அருளுவது
...... ஒருநாளே?
படைத்து
அனைத்தையும் வினை உற, நடனொடு
துடைத்த பத்தினி, மரகத சொருபி, ஓர்
பரத்தின் உச்சியில் நடம் நவில் உமை
அருள்..... இளையோனே!
பகைத்த
அரக்கர்கள் யமன் உலகு உற, அமர்
தொடுத்த சக்கிர வளைகரம் அழகியர்,
படிக் கடத்தையும் வயிறு அடை நெடியவர்
.....மருகோனே!
திடுக்கிடக்
கடல், அசுரர்கள் முறிபட,
கொளுத்து இசைக் கிரி பொடிபட, சுடர் அயில்
திருத்தி விட்டு, ஒரு நொடியினில் வலம்வரும் .....மயில்வீரா!
தினைப்புனத்து
இரு தனகிரி குமரி, நல்
குறத்தி முத்தொடு, சசி மகளொடு, புகழ்
திருத்தணிப்பதி மலைமிசை நிலைபெறு .....பெருமாளே.
பதவுரை
அனைத்தையும் படைத்து --- உலகங்கள்
எல்லாவற்றையும் தோற்றுவித்து,
வினையுற --- கன்மங்களை துய்ப்பித்து,
நடனொடு --- நடிக்கின்ற சிவத்துடன் கூடி,
துடைத்த பத்தினி --- மீளவும் ஒடுக்கிய
தேவியும்,
மரகத சொரூபி --- மரகதம் போன்ற பச்சை வடிவத்தை
உடையவரும்,
ஓர் பரத்தின் உச்சியின் நடம் நவில் உமை ---
ஒப்பற்ற பரவெளியில் ஆனந்த நிர்த்தனஞ் செய்யும் உமையம்மையாரும் ஆகிய
பார்வதிதேவியார்,
அருள் இளையோனே --- பெற்றருளிய இளங்குமாரரே!
பகைத்த அரக்கர்கள் --- பகை கொண்டு
எதிர்த்த இராட்சதர்கள்,
யமன் உலகு உற --- கூற்றுவனுடைய நரகலோகத்தை
யடையுமாறு;
அவர் தொடுத்த --- போரைத் தொடங்கிய,
சக்கிர வளைகரம் --- சக்ராயுதத்தையும் சங்கத்தையும்
ஏந்திய திருக்கரத்தை உடையவரும்,
அழகியர் --- அழகுடையவரும்,
படி கடத்தையும் வயிறு அடை நெடியவர் ---
பூமியையும் அதிலுள்ள காடுகளையும் வயிற்றில் அடக்கிக் கொண்டு நீண்ட திருமேனியை உடையவருமாகிய
திருமாலினுடைய,
மருகோனே --- திருமருகரே!
கடல் திடுக்கிட --- சமுத்திரம்
திடுக்கிட்டு அலறவும்,
அசுரர்கள் முறிபட --- சூராதி அவுணர்கள்
மாண்டொழியவும்,
இசைகிரி பொடிபட --- இசைந்துள்ள குலமலைகள்
தூள்படவும்,
கொளுத்து சுடர் அயில் --- அனற்படுத்திய
பேரொளி வீசும் வேலாயுதத்தை,
திருத்தி விட்டு --- நேர்மையுற விடுத்தருளி,
ஒரு நொடியினில் வலம் வரு --- உலகங்களை
யெல்லாம் ஒரு நொடிப் பொழுதுக்குள் வலம் வந்த,
மயில் வீரா --- மயில்வாகனத்தை உடைய வீரரே!
தினைப்புனத்து --- தினைப் புனத்தில்
வாழ்பவரும்,
இரு தனகிரி --- மலைபோன்ற இரு பயோதரங்களை இடையவரும்
குமரி --- இளம் பூரணியுமாகிய,
நல் குறத்தி முத்தொடு --- நல்ல முத்தனைய
வள்ளி அம்மையாருடனும்,
சசி மகளொடு --- இந்திராணியின் திருமகளாகிய
தெய்வகுஞ்சரி அம்மையாருடனும்,
புகழ் திருத்தணி பதி --- புகழ் பெற்ற
திருத்தணி என்னுந் திருத்தலத்திலே,
மலைமிசை நிலைபெறு பெருமாளே --- திருமலைமேல்
நிலைபெற்று வீற்றிருக்கும் பெருமையின் மிக்கவரே!
தொட துளக்கிகள் --- தொட்ட மாத்திரத்தில்
அசைவு செய்து குலுக்குபவரும்,
அபகட நினைவிகள் --- முறைமையில்லாத எண்ணத்தை உடையவர்களும்,
குருட்டு மட்டைகள் --- காமத்தால் கண்கெட்ட
அறிவில்லாதவர்களும்,
குமரிகள் --- இளம் பெண்களும்,
கமரிகள் --- விலக்கத்தக்கவர்களும்,
சுதை சிறுக்கிகள் --- கேட்டைத் தரும்
சிறுக்கிகளும்,
குசலிகள் --- தந்திரத்தைச் செய்பவரும்,
இசலிகள் --- பிணங்குபவரும்,
முழு மோசம் துறுத்த மட்டைகள் --- பூரணமான மோச
குணங்களைத் திணித்து வைத்துள்ள மட்டிகளும்,
அசடிகள் --- கீழ்மையானவரும்,
கசடிகள் --- அடிமண்டி போன்றவரும்,
முழுப் புரட்டிகள் --- முழுப் புரட்டுகளைச்
செய்பவரும்,
நழுவிகள் --- நழுவுபவரும்,
மழுவிகள் --- தங்கள் சூது வெளியுறா வண்ணம்
மழுப்புபவரும்,
துமித்த மித்திரர் --- பொருளை அறுக்கின்ற
நட்பை உடையவரும்,
விலை முலையின வலை புகுதாமல் அடைத்தவர்க்கு ---
விலைகூறும் தனங்களினது வலையில் புகாமல் அடைந்தவர்களும்,
இயல் சரசிகள் --- தன்மையை சரச வார்த்தைகளால் புகுத்துபவரும்,
விரசிகள் --- கலப்பவரும் ஆகிய விலமகளிர்,
தரித்த வித்ரும நிறம் என வர --- பொருந்திய
பவள நிறத்துடன் அருகில் வர,
உடன் அழைத்து --- அவர்களை அழைத்து உடனாக
வைத்து,
சக்கிர கிரிவளை படி கொடு விளையாடி ---
சக்ரவாள கிரியாற் சூழப்பெற்ற பூவுலகில் அவர்களுடன் விளையாடி,
அவத்தை --- துன்பத்தில்,
தத்துவம் அழிபட --- உண்மைகள் அழிவுறுவதால்,
இருள் அறை --- ஆணவ மனத்தை,
விலக்குவித்து --- தேவரீருடைய திருவருட்
சக்தியால் நீக்குவித்து,
ஒரு சுடர் ஒளி பரவ --- நிகரற்ற ஞானவொளி
வீசவும்,
நல் அருள் புகட்டி --- குருவருளைப் பதித்து,
உன் அடி இணை அருளுவது --- தேவரீருடைய இரு
திருவடிக் கமலங்களையும் தந்தருள்வது,
ஒரு நாளே --- ஒரு நாள் உண்டோ?
பொழிப்புரை
உயிர்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து
கன்மங்களைத் துய்ப்பித்து, ஆடுகின்ற அரனாருடன்
அவைகளை மீளவும் ஒடுக்குகின்ற திருத்தேவியாரும், மரகதம் போன்ற திருவுருவுடையவரும், ஒப்பற்ற பரவெளியில் திருநடனம்
புரிகின்றவருமாகிய உமையம்மையார் பெற்றருளிய இளம் புதல்வரே!
பகைத்து எதிர்த்த அவுணர்கள் இயமனுடைய
நரகலோகஞ் சேர போர் புரிந்தவரும்,
சங்க
சக்ரபாணியும், அழகரும், உலகையும் உலகிலுள்ள பொருள்களையும்
திருவயிற்றில் அடக்கியவரும், நீண்ட
திருவுருவுடையவரும் ஆகிய நாராயண மூர்த்தியின் மருகரே!
கடல்கள் திடுக்கிடவும் சூராதி யவுணர்கள்
மாய்ந்தொழியவும் குலாசலங்கள் தூள்பட்டழியவும் தீயுமிழ்ந்த ஒளிவீசும் வேலாயுதத்தைத்
திருத்தி விடுத்தருளி, ஒரு நொடிப்
பொழுதுக்குள் உலகங்களை எல்லாம் வலம் வந்த மயில்வாகனத்தை உடையவருமாகிய வீரரே!
தினைப்புனத்தில் இருந்தவரும், இரு தனபாரங்களை உடையவரும், இளம் வயதுடையவரும், நலமிகுந்த குறமாதும்
ஆகிய வள்ளி அம்மையாருடனும் புகழ் பெற திருத்தணி என்னும் திருமலை மீது நிலைபெற்று
வாழ்கின்ற பெருமிதம்உடையவரே!
தொட்டவுடன் அசைந்து குலுக்குபவரும், முறையற்ற எண்ணத்தினரும், காமத்தால் கண்கெட்ட அறிவிலிகளும், இள வயதுள்ளவரும், நில வெடிப்பினை ஒத்தவரும், கேட்டைச் செய்கின்ற சிறுக்கிகளும், தந்திரவாதிகளும், பிணங்கிகளும், முழு மோச குணங்கள், திணித்த மட்டிகளும், கீழ்மையாளரும், அடிவண்டல் போன்றவரும், முழுப்புரட்டுகளைச் செய்பவரும், நழுவுபவரும், பொருளை யறுக்கின்ற நட்பையுடையவரும், விலை கூறு தனங்களின் வலையிற் புகாவாறு
புலன்களைத் தடுத்தவர்களையுந் தமது வசப்படுத்தும் சரச வார்த்தைகளை உடையவரும், கலப்புடையவரும் ஆகிய விலைமாதர்கள் பவள
நிறத்துடன் அருகில் வர அவர்களை அழைத்து, சக்கரவாள
கிரியாற் சூழப்பட்ட மண்ணுலகில் அவர்களுடன் விளையாடி அவத்தையில் உண்மைகள்
அழிபடுவதால், ஆணவ மலத்தை
அருட்சக்தியால் விலக்குவித்து, ஒப்பற்ற ஞானவொளி வீச
அருள் பதிவித்து உமது திருவடித் தாமரைகள் இரண்டையும் அடியேனுக்குத் தந்தருளும்
நாள் ஒன்று உளதாகுமோ?
விரிவுரை
தொடத்துளக்கிகள்
---
இப்பாடலில்
உள்ள நிந்தனைகள் பொதுமகளிரைக் குறித்தன. குலமகளிரைக் குறித்தது அன்று.
அடைத்தவர்க்கியல்..........விளையாடி
---
வலை
புகுதாமல் புலன்களை அடைத்தவர்க்கும் மயல் விளைப்பவர் என்பதில் அப்பொது மகளிரின்
ஆற்றலும் வெளிப்படுகின்றது. இவ்வாறே சுவாமிகள் பல இடங்களில் கூறுமாறு காண்க.
“தவர் சோரப் புரித்திடும் பாவ சொரூபிகள்”
--- (குறித்தநெஞ்)
திருப்புகழ்.
“துறவினர் சோரச் சோர நகைத்துப் பொருள் கவர்
மாதர்”
--- (அரிசனவாடை) திருப்புகழ்.
“முநிவோரும் மாலாகி வாட நகைத்து உருக்கிகள்”
--- (மாயாசொரூப)
திருப்புகழ்.
படைத்தனைத்தையும்
---
சக்தியே
யாவையும் படைத்தும் காத்தும் துடைத்தும் ஆன்மாக்கட்கு கன்மத்தைத் துய்ப்பித்து
பக்குவம் வருவித்து உரிய காலத்தில் சிவத்தோடு அத்துவித முறுவித்து அருளுகின்றனள்.
உமை
---
உமா
என்ற சொல் ஐகார ஈறு பெற்று உமை என்றாயிற்று. உ, ம, அ, இம்மூன்று அட்சரங்கள் கூடி உமா
என்றாயிற்று. உகரம் காத்தற்றொழிலையும், மகரம்
அழித்தற்றொழிலையும், அகரம் படைத்தற்றொழிலையும்
செய்கின்றது. அருளே சக்தி யாதலின் காத்தற்றொழிலைக் குறிக்கும் உகரத்தை முதலாகக்
கொண்டு உமா என்று வந்தது. அகர மகரத்தின் கூட்டுறவே ஓகாரமாகும்.
கருத்துரை
உமை
மைந்தரே! மால்மருகரே! மயில் வீரரே! தணிகைத் தனிமுதலே! மாதர் மயக்குற்று அழியும் அடியேனை
மலநீக்கம் செய்து மலர்த்தாள் தந்து காத்தருள்வீர்.
No comments:
Post a Comment