அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
தொக்கறாக் குடில் (திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
மோன
நிலையை அருள்.
தத்தனாத்
தனன தத்தனாத் தனன
தத்தனாத் தனன ...... தனதான
தொக்கறாக்
குடில சுத்தமேற் றசுக
துக்கமாற் கடமு ...... மலமாயை
துற்றகாற்
பதலை சொற்படாக் குதலை
துப்பிலாப் பலச ...... மயநூலைக்
கைக் கொளாக் கதறு கைக்கொளாக் கையவ
லப்புலாற் றசைகு ...... ருதியாலே
கட்டுகூட்
டருவ ருப்புவேட் டுழல
சட்டவாக் கழிவ ...... தொருநாளே
அக்கராப் பொடியின் மெய்க்கிடாக் குரவர்
அர்ச்சியாத் தொழுமு ...... நிவனாய
அப்பபோர்ப்
பனிரு வெற்பபூத் தணியல்
வெற்பபார்ப் பதிந ...... திகுமாரா
இக்கணோக்
குறில்நி ருத்தநோக் குறுத
வத்தினோர்க் குதவு ...... மிளையோனே
எத்திடார்க்
கரிய முத்தபாத் தமிழ்கொ
டெத்தினார்க் கெளிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
தொக்கு
அறாக் குடில் அசுத்த ஏற்ற, சுக
துக்கமால் கடம், ...... மும் மல மாயை
துற்ற
கால் பதலை, சொல் படாக் குதலை,
துப்பு இலாப் பல ...... சமய நூலைக்
கைக் கொளா, கதறுகை கொள் ஆக்கை, அவல
புலால் தசை, ...... குருதியாலே,
கட்டு
கூட்டு, அருவருப்பு வேட்டு உழல்
அசட்ட வாக்கு அழிவது ...... ஒருநாளே?
அக்கு, அரா, பொடி, இன் மெய்க்கு இடாக் குரவர்,
அர்ச்சியாத் தொழு ...... முநிவன்ஆய
அப்ப! போர்ப் பனிரு வெற்ப! பூத் தணியல்
வெற்ப! பார்ப்பதி ...... நதி குமாரா!
இக்கண்
நோக்கு உறில் நிருத்த நோக்கு உறு
தவத்தினோர்க்கு உதவும் ...... இளையோனே
எத்திடார்க்கு
அரிய முத்த! பாத் தமிழ்கொடு
எத்தினார்க்கு எளிய ...... பெருமாளே.
பதவுரை
அக்கு அரா பொடி --- உருத்திராட்சம், பாம்பு, திருநீறு ஆகிய இவைகளை,
இன் மெய்க்கு இடா குரவர் --- திருமேனியில்
தரித்துக் கொண்டிருக்கும் பெரியோனாகிய சிவமூர்த்தி.
அர்ச்சியா தொழு --- அர்ச்சனை செய்து தொழுது,
முநிவன் ஆய அப்ப --- மெய்ஞ்ஞான முனிவராக
விளங்கும் பரமபிதாவே!
போர் பன்னிரு வெற்ப --- போருக்குரிய
மலைபோன்ற பன்னிரு தோள்களையுடையவரே!
பூ தணியல் வெற்ப --- செங்கழுநீர்
மலர்கின்ற தணிகை மலையில் வாழ்பவரே!
பார்ப்பதி நதி குமார ---
பார்வதியம்மைக்கும் கங்காதேவிக்கும் புதல்வரே!
இ கண் நோக்கு உறில் --- இப்பூமியில்
நோக்கம் என்பது இருக்குமாயின்,
நிருத்த நோக்கு --- அது உமது திருநடனத்தை
நோக்கும் நோக்கு ஒன்றேயாகும்,
உறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே ---
அத்தகைய நோக்கினையுடைய தவசீலர்கட்கு உதவுகின்ற இளம்பூரணரே!
எத்திடார்க்கு அரிய --- வழிபடாதவர்க்கு
அரியவரே!
முத்த --- அநாதிமல முத்தரே!
பா தமிழ்கொடு எத்தினார்க்கு எளிய ---
தமிழ்ப் பாடலைக் கொண்டு ஏத்தித் துதி செய்யும் அடியார்கட்கு எளியவரே!
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
தொக்கு அறாக்குடில் --- தோல் நீங்காத
குடிசை,
அசுத்தம் ஏற்ற --- அசுத்தத்தை ஏற்றதும்,
சுக துக்க மால் கடம் --- இன்பதுன்பங்களும்
மயக்கமும் நிறைந்த குடல்,
மு மல மாயை துற்ற --- மும் மலங்களும்
மாயையும் நெருங்க வைத்த,
கால் பதலை --- காற்று நிறைந்த பானை,
சொல் படா குதலை --- சொல்விளங்கப் பெறாத
மழலைச்சொல் போன்ற,
துப்பு இலா பல சமய நூலை கை கொளா ---
அறிவுக்குப் பொருந்தாத பல சமய நூல்களைக் கைக்கொண்டு,
கதறுகை கொள் --- கதறிப் பேசுவதை மேற்கொண்ட,
ஆக்கை -- உடம்பு,
அவல புலால் தசை குருதியாலே கட்டு கூட்டு ---
துன்பத்துக்கு இடமாம் மாமிசம், தசை உதிரம் இவற்றால்
கட்டப் பட்ட கூட்டு,
அருவருப்பு வேட்டு உழல் --- வெறுக்கத் தகுந்த
இந்த உடம்பை விரும்பித் திரிகின்ற,
அசட்ட --- கீழ் மகனாகிய அடியேனுக்கு,
வாக்கு அழிவது ஒருநாளே --- வாக்கு அற்ற மௌன நிலையைப்
பெறுவது ஒருநாள் உண்டாகுமோ?
பொழிப்புரை
உருத்திராக்கம், பாம்பு, திருநீறு இவைகளைத் திருமேனியில்
தரித்துக் கொண்டிருக்கின்ற பெரியவராம் சிவபெருமான். அருச்சித்துத் தொழுத ஞான
முனிவராம் பரமபிதாவே!
போருக்கு உரிய பன்னிரு புயமலைகளை உடையவரே!
குவளை மலர் மலர்கின்ற திருத்தணியில்
வாழ்பவரே!
பார்வதிக்கும் கங்காதேவிக்கும் மைந்தரே!
இப்பூதலத்தில் பார்வை என்பது ஒன்று
இருக்குமானால் அது உமது திருநடனப் பார்வை ஒன்றே. அத்தகைய தவசீலர்கட்கு உதவும்
இளம்பூரணரே!
உமது திருவடியைத் துதிக்காதவர்க்கு
அரியவரே!
அநாதிமல முத்தரே!
தமிழ்ப் பாடல்களைக் கொண்டு துதித்தவர்க்கு
எளியவரே!
தோல் நீங்காத குடிசை, அசுத்தத்தை ஏற்றதும் சுகம் துக்கம், ஆசை முதலியவைகட்கு இடமாய குடம்; மும்மலங்களும் மாயையும்
நெருங்கியுள்ளதும் காற்றடைத்ததுமாகிய பானை; சொல் விளங்கப்படாத மழலைச் சொல் போன்ற பல
சமய நூல்களைக் கைக்கொண்டு கதறுதலைக் கொண்ட துன்பத்துக்கு இடமாய தசை பொதிந்த சதை
உதிரம் இவைகளால் கட்டப் பட்ட கலப்பு; வெறுக்கத்தக்க
இந்த உடம்பை விரும்பித் திரிகின்ற அடியேனுக்குச் சிறந்த மோன நிலை கூடுகின்ற நாள்
ஒன்று உளதாகுமோ.
விரிவுரை
தொக்கறாக்
குடில்
---
தொக்கு-தோல், இந்த உடம்பு, எலும்பு சதை, உதிரம், மலம் சலம், கோழை, பித்தம் முதலிய பல அசுத்தப் பொருள்களால்
ஆனது. தோலினால் போர்த்தப்பட்டுள்ளது.
சுகதுக்க
மாற்கடம்
---
மூன்று
உலகங்கள் உண்டு. ஒன்று ஒளியுலகம்,
அது
சுவர்க்காதி புவனங்கள். ஒன்று இருள் உலகம், அது நரக உலகம், ஒன்று ஒளியும்
இருளும் கலந்தவுலகம், அது இந்த மண்ணுலகம்.
ஒளியுலகத்தில்
வாழ்கின்ற உயிர்கட்கு இறைவன் தருகின்ற உடம்பு பூத சாரதநு. இருள் உலகத்தில்
வாழ்கின்ற உயிர்கட்கு இறைவன் தருகின்ற உடம்பு பூதமாதநு. இம் மண்ணுலகில் வாழ்கின்ற
உயிர்கட்கு இறைவன் தருகின்ற உடம்பு பூத பரிணாம தநு.
ஒளியுலகில் உள்ள பூதசார தநு இன்பத்தை மட்டும்
நுகர்வதற்கு உரியது.
இந்த உடம்பு தனியே துன்பத்தையும் நுகராது
தனியே இன்பத்தையும்
நுகராது.
இந்த உலகில் நமக்கு மிகுந்த பிரியமானது
அல்வா. அதைச் சிறிதுதான் உண்ணலாம். ஒரு பரங்கிப் பழம் அளவு உண்ண இயலுமா?
மனைவியுடன் சிறிது நேரம் தான் இன்புறலாம்.
தூங்கினால் சுகம். ஆனால் ஓயாது தூங்கிக் கொண்டிருக்க முடியுமா?
இப்படி எதனை எதனை இன்பமாக நாம் கருதி
நுகர்கின்றோமோ அந்த இன்பங்களை இந்த உடம்பால் தொடர்ந்து நுகர இயலாது. வெயிலும்
மழையும் போல் சுகதுக்கங்களை மாறிமாறி நுகர்வது இந்த உடம்பு.
மலமாயை
துற்ற கால் பதலை ---
பதலை-மண்பானை.
இது மிகவும் அருமையாகக் கிடைத்தது.
ஒரு
ஊரில் ஒரு பிள்ளையார் கோயில். அதன் அருகில் ஒரு சிறிய நந்தவனம். அங்கு ஒரு ஆண்டி
வந்து சேர்ந்தான். ஏதாவது தொண்டு செய்தால்தான் அங்கே வீடுகள் தோறும் அன்னம் கறி
முதலியவைகள் கிடைக்கும்.
அப்படியானால்
நந்தவனத்தில் செடிகளை வளர்த்து அம்மலர்களை எடுத்துத் தொடுத்து
பிள்ளையாரப்பனுக்குக் கொடுத்தால் இனிய தொண்டு ஆகும். அதற்கு ஒரு தோண்டி
வேண்டியதாயிற்று. அந்த ஊரின் கோடியில் ஒரு குயவனார் இருந்தார். சட்டி, பானை, மடக்கு முதலியன செய்து அவர் விற்பார்.
அந்த ஆண்டி அக் குயவனாரிடம் போய் ஒரு தோண்டியை வேண்டினான். ஆண்டி தோண்டி வேண்டி
நிற்க, குயவனார் நாளை வாரும்
என்றார். இனாமாகத் தருகின்றது. அதனால் தவணை போட்டார். நாளை நாளையென்று பல தவணை.
ஆண்டியும் பாவம், பொறுமையுடன் நாளும் நடந்து
நடந்து தொடர்ந்தான். முன்னூறு நாட்களுக்குப்பின் குயவனார் மனம் இரங்கி ஒரு
தோண்டியைத் தந்தார்.
அத்தோண்டியைப்
பெற்ற ஆண்டிக்குப் பெருமகிழ்ச்சி! உடனே தோண்டியை எடுத்துக் கொண்டு நேரே
ஆற்றுக்குச் சென்றான். தோண்டியில் தண்ணீரை முகர்ந்து தலைமீது வைத்தான்.
அங்கிருந்து நந்தவனத்தை நோக்கிப் புறப்பட்டான்.
அப்போது
அந்த ஆண்டிக்கு இளமையில் தன் ஊரில் நடந்த ஒரு பிடாரி விழாவில் தான் கரக ஆட்டம்
ஆடியது நினைவுக்கு வந்தது. பத்து மாதம் வேண்டிப் பெற்ற அத்தோண்டியைத் தலைமீது
வைத்து வரும் ஆண்டி கரக ஆட்டம் ஆடுபவனைப் போல் தத்தீம் தகதீம் தகஜணு தளாம்கு என்ற
ஜதியிட்டு ஆடினான். பாவம், உடனே தோண்டி கீழே
விழுந்து உடைந்து விட்டது. முந்நூறு நாட்கள் நடந்து நடந்து கால் தேய்ந்து
தொடர்ந்து சென்று வேண்டிப் பெற்ற தோண்டி. அது ஒரு விநாடியில் உடைந்து ஒழிந்தது.
அந்த
ஆண்டி-ஆன்மா. நந்தவனம்-இந்த உலகம். குயவனார்-பிரமதேவர். தோண்டி-இந்தவுடம்பு.
இதனைச் சிந்தித்த ஒரு சித்தர் பாடுகின்றார்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
நால்ஆறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி-அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுஉடைத் தாண்டி
இன்னொரு
சித்தர் பாடினார்.
“காயமே இது பொய்யடா -- வெறும்
காற்று அடைத்த பையடா”
இந்த
உடம்புக்குள் பிராணவாயு தங்கியுள்ளது. அது எந்த விநாடி இந்த உடம்பை விட்டு
நீங்குமோ தெரியாது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும், மாயாகாரியமான பொருள்களும் உடையது இந்த உடம்பு.
சொற்படாக்
குதலை துப்பிலாப் பலசமய நூலைக் கைக்கொளாக் கதறு கைக் கொளாக்கை ---
குழந்தைகள்
பேசும் சொற்களில் சொல்லின் முழுவுருவம் இராது. மாமி என்ற சொல்லை மம்மி என்றும், சாப்பாடு என்ற சொல்லை சாச்சியென்றும்
குழறிக் குழறி்க் கூறும்.
அதுபோல்
கருத்து நிரம்பப் பெறாத சமயங்கள் பல ஒன்றுடன் ஒன்று ஒவ்வாது பிணங்கும்.
“பேயன்ன புறச்சமயப்பிணக்கு வழியனைத்தும்
பிழையே”
என்கின்றார்
மாதவச் சிவஞான யோகிகள்.
மேலேயுள்ள
அடியை,
“சொல்படா குதலை துப்பு
இலா பல சமய நூலை கைகொளா கதறுகை கொள்
ஆக்கை”
என்று
பதச்சேதம் புரிக.
கரும்பு
இருக்க இரும்பை மெல்வது போலும்,
நெருப்பு
இருக்க மின்மினியைத் தேடி அலைவது போலும், வழி
இருக்கக் குழியில் விழுவது போலும்,
வேதாகம
நெறியாம் சைவசித்தாந்த நெறியிருக்க, அதனை விடுத்து, பல சமய நெறிகளின் குழறுபடைக் கொள்கைகளைக்
கைக்கொண்டு உழல்கின்ற உடம்பை யஉடையவன்.
அவலப்புலால்
தசைக் குருதியாலே கட்டு கூட்ட ---
வீணாக
வெறுஞ் சதை வைத்து உதிரம் முதலியவற்றால் கட்டப்பட்ட கட்டடம் போன்றது இந்த சரீரம்.
கால் கொடுத்து,
இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து,
தோல் படுத்து,
உதிரநீரால், சுவர்எடுத்து, இரண்டு வாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழு சாலேகம் பண்ணி,
மால் கொடுத்து,
ஆவி வைத்தார், மாமறைக் காடனாரே. --- அப்பர்.
என்பினால்
கழி நிரைத்து, இறைச்சி மண் சுவர் எறிந்து, இது நம் இல்லம்,
புன்புலால்
நாறு தோல் போர்த்து, பொல்லாமையால் முகடு கொண்டு,
முன்பு
எலாம் ஒன்பது வாய்தல் ஆர் குரம்பையில் மூழ்கிடாதே,
அன்பன்
ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.
--- திருஞானசம்பந்தர்.
வாக்கு
அழிவது ஒருநாளே ---
வாக்கிறந்த
பெருநிலை. இது மௌன நிலை, பேசா அநுபூதி
யெனப்படும். இதைப்பெறுகின்ற நாள் ஒன்று எனக்குக் கிடைக்குமோ? என்று சுவாமிகள் வேண்டுகிறார்.
அறிவு
வடிவாக நிளங்கும் இறைவனை மோனம் என்ற கோயிலில் கண்டு வழிபடவேண்டும். ஞானத்தில் எல்லையாகத் திகழ்வது மோனம் என
உணர்க. "மோனம் என்பது ஞானவரம்பு" என்று
உபதேசிக்கின்றார் ஔவையார்.
மன
சம்பந்தம் அற்ற இடத்திற்கு மௌனம் என்று பேர்.
வாய் பேசாததற்கு மௌனம் என்று கூறுவது ஒரு அளவுக்குப் பொருந்தும். அது
"வாய்மௌனம்" எனப்படும்.
கைகால்
அசைக்காமல் வாய்பேசாமல் இருப்பதற்கு "காஷ்டமௌனம்" என்று பேர்.
மனமே
அற்ற நிலைக்குத் தான் "பூரண மௌனம்" என்று பேர்.
அங்கே
தான் பூரண இன்ப ஊற்று உண்டாகும்.
அந்த
இன்ப வெள்ளத்தில் திளைத்தவர் இந்திர போக இன்பத்தை வேப்பங்காயாக எண்ணுவர்.
இந்த
மௌனத்தை அருளுமாறு ஒரு திருப்புகழில் அருணகிரியார் ஆறுமுகக் கடவுளை
வேண்டுகின்றார்.
அருவம்
இடைஎன வருபவர், துவர்இதழ்
அமுது பருகியும் உருகியும், ம்ருகமத
அளகம் அலையவும், அணிதுகில் அகலவும் ...... அதிபார
அசல
முலைபுள கிதம்எழ, அமளியில்
அமளி படஅந வரதமும் அவசமொடு
அணையும் அழகிய கலவியும் அலம்அலம்,..... உலகோரைத்
தருவை
நிகரிடு புலமையும் அலம்அலம்,
உருவும் இளமையும் அலம்அலம், விபரித
சமய கலைகளும் அலம்அலம், அலமரும்...... வினைவாழ்வும்
சலில
லிபியன சனனமும் அலம்அலம்,
இனிஉன் அடியரொடு ஒருவழி பட.இரு
தமர பரிபுர சரணமும் மவுனமும் ......
அருள்வாயே..
--- திருப்புகழ்.
அந்த
மோனமாகிய கோயிலின் அகல நீளத்தை எவராலும் எதனாலும் ஆராய்ந்து அறிய முடியாது. அதை ஞானகுரு உணர்த்த உணர்வினாலேயே
உணரமுடியும். அதனைப் பெற்ற தாயுமானப்
பெருந்தகையார் கூறுகின்ற அமுத வசனங்களை இங்கு உன்னுக...
ஆனந்த மோனகுரு ஆம்எனவே, என்அறிவில்
மோனம் தனக்குஇசைய முற்றியதால், - தேன்உந்து
சொல்எல்லாம் மோனம், தொழில்ஆதி யும்மோனம்,
எல்லாம்நல் மோனவடி வே.
எல்லாமே மோனநிறைவு எய்துதலால், எவ்விடத்தும்
நல்லார்கள் மோனநிலை நாடினார், - பொல்லாத
நான்எனஇங்கு ஒன்றை நடுவே முளைக்கவிட்டு,இங்கு
ஏன்அலைந்தேன் மோனகுரு வே.
மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்,
ஞானம் அருளும்அது, நானும்அது, - வான்ஆதி
நின்ற நிலையும்அது, நெஞ்சப் பிறப்பும்அது
என்றுஅறிந்தேன் ஆனந்த மே.
அறிந்தஅறிவு எல்லாம் அறிவுஅன்றி இல்லை,
மறிந்தமனம் அற்ற மவுனம் - செறிந்திடவே
நாட்டினான், ஆனந்த நாட்டில் குடிவாழ்க்கை
கூட்டினான் மோன குரு.
குருஆகித் தண்அருளைக் கூறுமுன்னே, மோனா!
உரு,.நீடுஉயிர், பொருளும் ஒக்கத் - தருதிஎன
வாங்கினையே, வேறும்உண்மை வைத்திடவும் கேட்டிடவும்
ஈங்குஒருவர் உண்டோ இனி.
இனிய கருப்புவட்டை என் நாவில் இட்டால்
நனிஇரதம் மாறாது, நானும் - தனிஇருக்கப்
பெற்றிலேன், மோனம் பிறந்தஅன்றே மோனம்அல்லால்
கற்றிலேன் ஏதும் கதி.
ஏதுக்கும் சும்மா இருநீ எனஉரைத்த
சூதுக்கோ, தோன்றாத் துணையாகிப் - போதித்து
நின்றதற்கோ, என்ஐயா! நீக்கிப் பிரியாமல்
கொன்றதற்கோ பேசாக் குறி.
குறியும் குணமும்அறக் கூடாத கூட்டத்து
அறிவுஅறிவாய் நின்றுவிட, ஆங்கே - பிறிவுஅறவும்
சும்மா இருத்திச் சுகங்கொடுத்த மோன! நின்பால்
கைம்மாறு நான்ஒழிதல் காண்.
நான்தான் எனும்மயக்கம் நண்ணுங்கால், என்ஆணை
வான்தான் எனநிறைய மாட்டாய்நீ, - ஊன்றாமல்
வைத்தமவு னத்தாலே மாயை மனமிறந்து
துய்த்துவிடும் ஞான சுகம்.
ஞானநெறிக்கு ஏற்றகுரு, நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமம் தழைத்தகுரு, - மானமொடு
தாய்எனவும் வந்துஎன்னைத் தந்தகுரு, என்சிந்தை
கோயில்என வாழும் குரு.
சித்தும் சடமும் சிவத்தைவிட இல்லைஎன்ற
நித்தன் பரமகுரு நேசத்தால், - சுத்தநிலை
பெற்றோமே, நெஞ்சே! பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.
அக்கராப்
பொடியின் மெய்க்கிடாக் குரவர் ---
அக்கு-உருத்திராக்கம்.
உருத்திராக்கம், பாம்பு, திருநீறு
இவைகளைத் திருமேனியில் தரித்துக் கொண்டுள்ள பெரியவர் சிவபெருமான்.
அர்ச்சியாத்
தொழு முநிவனாய அப்ப ---
சிவபெருமான்
பிரணவ உபதேசம் பெறும் பொருட்டு,
திருத்தணிகையில்
முருகனை அர்ச்சித்து வணங்கி சீட பாவத்தை உலகிற்குக் காட்டியருளினார்.
முருகனை
முனிவன் என்கின்றார். அநுபூதியிலும் “முருகன் தனிவேல் முனி” என்கின்றார்.
பூத்
தணியல்
---
தினம்
தினம் செங்கழுநீர் மலர்கின்றதனால் அம்மலை கல்லாரகிரி எனப்படும்.பூ-அழகு, அழகிய மலையெனினும் அமையும்.
இக்கணோக்
குறில் நிருத்த நேர்குறு தவத்தினோர்க்கு உதவும் இளையோனே ---
இக்
கண்ணால் இந்த உலகில் ஒன்றைப் பார்க்க வேண்டுமானால் அப்பார்வை முருகனுடைய நடன கோலம்
அன்றி மற்றொன்ளைப் பார்க்கக் கூடாது என்ற உறுதி பூண்ட தவ சீலர்கட்கு உதவுகின்ற
இளம்பூரணன்.
எத்திடார்க்
கரிய
---
ஏத்து என்னும் சொல், எதுகை நோக்கி, எத்து என வந்தது. ஏத்துதல் - வழிபடுதல். முருகன்
தன்னை அடுக்காதார்க்கு அரியன்.
பாத் தமிழ்
கொடு எத்தினார்க்கு எளிய ---
சிறந்த
தமிழ்ப் பாவால் துதிசெய்வார்க்கு இறைவன் எளியவன். தேவாரம் பாடிய சுந்தரருக்கு
இறைவன் எளியனாய் இரவில் தூது சென்றதே சான்று.
கருத்துரை
தணிகேசா! மௌன நிலையருள்வாய்.
No comments:
Post a Comment