அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
துப்பார் அப்பு
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பாடும் அன்பர்களின் வினையைக்
களைபவனே!
பிறரால் எட்டமுடியாத திருவருளை
எனக்கு அருள்.
தத்தா
தத்தா தத்தா தத்தா
தத்தா தனனத் ...... தனதான
துப்பா
ரப்பா டற்றீ மொய்க்கால்
சொற்பா வெளிமுக் ...... குணமோகம்
துற்றா
யப்பீ றற்றோ லிட்டே
சுற்றா மதனப் ...... பிணிதோயும்
இப்பா
வக்கா யத்தா சைப்பா
டெற்றே யுலகிற் ...... பிறவாதே
எத்தார்
வித்தா ரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்
தப்பா
மற்பா டிச்சே விப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே
தற்கா
ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ
தத்தாய் தணிகைத் ...... தனிவேலா
அப்பா
கைப்பா லைப்போல் சொற்கா
வற்பா வைதனத் ...... தணைவோனே
அத்தா
நித்தா முத்தா சித்தா
அப்பா குமரப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
துப்பார், அப்பு, ஆடல் தீ, மொய்க்கால்
சொல் பா வெளி, முக் ...... குணம், மோகம்
துற்று
ஆய, பீறல் தோல் இட்டே
சுற்ற, மதனப் ...... பிணிதோயும்,
இப்
பாவக் காயத்து ஆசைப்பாடு
எற்றே உலகில் ...... பிறவாதே,
எத்தார்
வித்தாரத்தே கிட்டா
எட்டா அருளைத் ...... தரவேணும்.
தப்பாமல்
பாடிச் சேவிப்பார்
தத்தாம் வினையைக் ...... களைவோனே!
தற்கு
ஆழிச்சூர் செற்றாய்! மெய்ப் போ-
தத்தாய்! தணிகைத் ...... தனிவேலா!
அப்
பாகைப் பாலைப்போல் சொல் கா-
வல் பாவை தனத்து ...... அணைவோனே!
அத்தா!
நித்தா! முத்தா! சித்தா!
அப்பா! குமரப் ...... பெருமாளே.
பதவுரை
தப்பாமல் பாடிச் சேவிப்பார் --- தவறாது
உம்மையே பாடித் தொழும் அடியார்கள்,
தத்தாம் வினையைக் களைவோனே --- அவர்களின்
வினையைப் போக்குபவரே!
தற்கு ஆழி --- தருக்கும் (நான் என்ற
எண்ணம்) ஆக்ஞா சக்கரமுங் கொண்ட,
சூர் சொற்றாய் --- சூரனை அழித்தவரே!
மெய் போதத்தாய் --- மெய்ஞ்ஞான
மூர்த்தியே!
தணிகை தனிவேலா --- திருத்தணிகையில்
எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற வேலவரே!
அப் பாகை --- அந்த சர்க்கரைப் பாகினைப்
போலும்,
பாலைபோல் --- பாலைப் போலவும்,
சொல் காவல் --- சொல்லையும் தினை காவலையும்
உடைய,
பாவை தனத்து அணைவோனே --- வள்ளியம்மையாரது
தனத்தில் தழுவுபவரே!
அத்தா --- உயர்ந்தவரே!
நித்தா --- என்றும் அழியாதவரே!
முத்தா --- இயல்பாகவே பாசங்களினின்றும்
நீங்கியவரே!
சித்தா --- சித்த மூர்த்தியே!
அப்பா --- பரம பிதாவே!
குமர --- குமாரக் கடவுளே!
பெருமாளே --- பெருமையிற் சிறந்தவரே!
துப் பார் --- உணவைத் தரும் மண்,
அப்பு --- நீர்,
ஆடல் தீ --- அசைகின்ற நெருப்பு,
மொய்க்கால் --- நெருங்கி வீசுகின்ற காற்று,
சொல் பா வெளி --- சொல்லப்படுகின்ற பரந்துள்ள
ஆகாயம்,
மு குணம் --- மூன்று குணங்கள்,
மோகம் --- மூவாசைகள் ஆகிய இவைகள்,
துற்றாய --- நெருக்கமாக வைக்கப்பட்டுள்ள,
பீறல் தோல் இட்டே சுற்றா --- கிழிந்த தோல்
இட்டு சுற்றி மேயப்பட்டதும்,
மதன பிணி தோயும் --- காம நோய்
தோய்ந்துள்ளதுமான,
இப்பாவ காயத்து --- இந்த பாவம் நிறைந்த
உடம்பின்மீது,
ஆசைப்பாடு எற்றே --- ஆசைப்படுதலை மேற்கொண்டு,
உலகில் பிறவாதே --- உலகில் மீண்டும் மீண்டும்
அடியேன் பிறவாமல்,
எத்தார் --- ஏத்தாருடைய,
வித்தாரத்தே -- கல்வி சாமர்த்தியத்துக்கு,
கிட்டா எட்டா --- கிட்டாததும், எட்டாததுமான,
அருளைத் தரவேணும் = உமது திருவருளைத்
தந்தருளுவீர்.
பொழிப்புரை
தவறாமல் உம்மையே பாடித் தொழுபவர் யார்
யாரோ அவர்களுடைய வினைகளைக் களைபவரே!
செருக்கும் ஆக்ஞா சக்கரமும் பூண்ட சூரனை
அழித்தவரே!
மெய்ஞ்ஞான மூர்த்தியே!
திருத்தணிகை மலையில் வீற்றிருப்பவரே!
அந்த சர்க்கரைப் பாகையும் பாலையும் போன்ற
இனிய சொற்களையும், தினை காவலையும் கொண்ட
வள்ளிபிராட்டியின் தனங்களில் தழுவுபவரே!
உயர்ந்தவரே!
என்றும் உள்ளவரே!
அநாதி முத்தரே!
சித்தரே!
பரம பிதாவே!
குமாரக் கடவுளே!
பெருமிதம் உடையவரே!
உணவைத் தரும் மண், நீர், அசைகின்ற தீ, நெருங்கி வீசுகின்ற காற்று, புகழப்படுவதும் பரந்திருப்பதுமான வெளி
என்ற ஐம்பெரும் பூதங்களும், முக்குணங்களும், மூவாசைகளும் நெருக்கமாக
வைக்கப்பட்டுள்ளதும், கிழிந்த தோலிட்டு
சுற்றி மேயப்பட்டதும், காமநோய்
தோய்ந்துள்ளதுமான, இந்தப் பாவ உடலின்
மேல் ஆசைப்படுதலை மேற்கொண்டு உலகில் மேலும் மேலும் அடியே பிறவாமல், தேவரீரை ஏத்தாதவர்களின் கல்வி
ஆற்றலுக்குக் கிட்டாததும், பிறருக்கு
எட்டாததுமான திருவருளைத் தந்தருளுவீர்.
விரிவுரை
து
பார்
---
து-துப்பு-உணவுப்
பொருள். உணவுப் பொருள்களை நல்கும் பூமி.
அப்பு
--- நீர்
ஆடல்
தீ ---
அசைகின்ற
நெருப்பு.
சொற்பா
வெளி:-
சொல்-புகழ்கின்ற
பா-பரந்துள்ள. வெளி-ஆகாயம். இந்த உடம்பு ஐம்பூதங்களின் பரிணாமம்.
முக்குண
மோகம் துற்றாய:-
சத்துவம், இராஜசம், தாமசம் என்ற முக்குணங்களும், (மோகம்-ஆசை) மண், பெண், பொன் என்ற மூவாசைகளும் இந்த வுடம்பில்
நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளன.
பீறலு
தோல் இட்டே சுற்றா ---
பீறல்-கிழியல்.
ஒன்பது ஓட்டைகள் உள்ள தோலால் சுற்றி மூடிய உடம்பு.
மதனப்
பிணி தோயும்
---
காமநோய்
தோய்ந்தது இந்த உடம்பு.
இப்
பாவக் காயம்
---
உடம்பு
பாவத்தினால் வந்தது. வினையாலானது. திருட்டு மாட்டுக்குக் கட்டை போட்டனுப்பவதுபோல், வினை காரணமாக இக் கட்டை வந்துளது.
ஆசைப்பா
டெற்றே
---
ஆசைப்பாடு-
எற்றே-ஏற்றே என்ற சொல் எற்றே எனக் குறுகி நின்றது.
எத்தார் ---
ஏத்தார்
என்ற சொல் எத்தார் என வந்தது. முருகப் பெருமானது திருப்புகழை அன்புடன் பரவித் துதி
செய்யாதவர்கள்.
வித்தாரத்தே
கிட்டா
---
ஆரவாரமான
கல்வி ஞானத்தில் இறைவன் திருவருள் கிட்டாது.
எட்டா
அருளைத் தரவேணும் ---
அன்பு
இல்லாதவர்க்கு அத் திருவருள் எட்டாது. அன்பர்க்கு எட்டும்.
நட்டானை, நட்ட எனை நயந்து கொண்டே,
நம் மகன் நீ அஞ்சல் என நவின்று, என் சென்னி
தொட்டானை, எட்டு இரண்டும் சொல்லினானை,
துன்பம் எலாம் தொலைத்தானை, சோர்ந்து தூங்க
ஒட்டானை, மெய் அறிவே உருவாய் என்னுள்
உற்றானை, உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை, என் அளவில் எட்டினானை,
எம்மானைக் கண்டுகளித்து இருக்கின்றேனே. --- திருஅருட்பா.
தப்பாமற்
பாடிச் சேவிப்பார் தத்தாம் வினையைக் களைவோனே ---
என்றுந்
தவறாது முருகனைப் பாடிப்பாடி வழிபடுகின்ற அடியார்களது வினைகளை முருகன் களைவான்.
தற்காழிச்சூர் ---
தற்கு
ஆழி சூர். தருக்கு தற்கு என வந்தது. தருக்கு-நான் எனும் அகந்தை.
ஆழி-ஆக்ஞாசக்கரம்.
1008 அண்டங்களிலும் ஆக்ஞா
சக்கரத்தைச் செலுத்திய ஆண்டவன் சூரபன்மன்
மெய்ப்
போதகத்தாய்
---
சிவஞானமே
வடிவானவர் முருகவேள். ஞான பண்டிதன்;
ஞானாகரன், ஞானதாதா.
அப்பாகைப்
பாலைப் போல் சொல் ---
அந்த
பாகைப்போல், பாலைப்போல் இனிய
மொழிகளை யுடையவர் வள்ளிபிராட்டியர்.
“பாகுகனி மொழி மாது
குறமகள்
பாதம் வருடிய மணவாளா” --- (பாதிமதி) திருப்புகழ்.
“தேன்என்று பாகு என்று உவமிக்க ஒணா மொழித்
தெய்வ வள்ளிக்
கோன் அன்று உபதேசித்தது ஒன்று உண்டு, கூறவற்றோ
வான் அன்று, கால் அன்று, தீ அன்று, நீர் அன்று, மண்ணும் அன்று,
தான் அன்று, நான் அன்று, அசரீரி அன்று, சரீரி அன்றே” ---கந்தரலங்காரம்.
காவற்
பாவை
---
தினைப்புனங்
காத்தவள் வள்ளி. தினைப்பயிர் என்பது ஞானப் பயிர்.
“தினைவனங்கிளி காத்த
சவுந்தரி
அருகு
சென்றடி போற்றி மணஞ்செய்து
செகமறிந்திட வாழ்க்கை புரிந்திடும் இளையோனே”
---( முனையழிந்தது)
திருப்புகழ்.
அத்தா ---
அத்தன்-குரு.
மூத்தோன்
நித்தா ---
என்றும்
உள்ளவர்.
முத்தா ---
அநாதியே
பாசங்களினின்றும் நீங்கியவர்.
சித்தா ---
சித்துக்களையுடையவன்
சித்தன்
கருத்துரை
குமாரக்
கடவுளே! எவர்க்கும் எட்டாத நின் திருவருளைத் தாரும்.
No comments:
Post a Comment