திருக் குடமூக்கு





திருக் குடமூக்கு
(கும்பகோணம்)

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.

          இலக்கியத்தில் குடமூக்கு என்று குறிப்பிடப்பட்டாலும் மக்கள் வழக்கில் உள்ள கும்பகோணம் என்ற பெயரே பிரசித்தமானது.

     மயிலாடுதுறை - தஞ்சைக்கு இடையிலுள்ள பெரிய தலம். சென்னை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், சிதம்பரம் முதலிய பல இடங்களிலிருந்து நிரம்ப பேருந்து வசதிகள் உள்ளன. இத்தலம், சென்னை - திருச்சி மெயின் லைனில் உள்ள இருப்புப் பாதை நிலையம்.

இறைவர்               : கும்பேசுவரர், அமுதேசுவரர், குழகர்.

இறைவியார்           : மங்களாம்பிகை.

தல மரம்                : வன்னி.

தேவாரப் பாடல்கள்    : 1. சம்பந்தர் - அரவிரி கோடனீடல்
                                              2. அப்பர் - பூவணத்தவன் புண்ணியன்.

          பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது.

          குரு சிம்மராசியில் நிற்க, சந்திரன் கும்பராசியிலிருக்கும் (மாசிமக) பௌர்ணமி நாளில் தான் மகாமகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தம், அமுதகும்பம் வழிந்தோடித் தங்கியதால் "அமுதசரோருகம்" என்றும் அழைக்கப்படுகிறது.

          மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம் " என்னும் பெயரையும் பெற்றது.

          தலவரலாற்றின் படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம், 5. பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை), 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூணூல் சிதறிய இடம் - கௌதமீசம் என வழங்கப்படுகின்றன.

          "கோயில் பெருத்தது கும்பகோணம்" என்னும் முதுமொழிக்கேற்ப எண்ணற்ற கோயில்களைக் கொண்டது இத்தலம்.

          உலகப் புகழ் பெற்ற மகாமக உற்சவம் நடைபெறும் தலமும் மகாமகதீர்த்தம் உள்ளதும் இத்தலமே. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் இவ்வுற்சவத்தின்போது லட்சக்கணக்கான மக்கள் வந்து மகாமகக் குளத்தில் நீராடுவர். இக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் 16 சந்நிதிகளையுடையதாய், நடுவில் 9 கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது.

          இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன.

          கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில்; குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில்; குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது.

          மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி; ஏமரிஷி பூசித்த பதி.

மூர்க்க நாயனார் வரலாறு

         தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் உள்ளது திருவேற்காடு என்னும் திருத்தலம். அதில் சிவனடிமைத் திறத்தில் சிறந்து, வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியினை இடைவிடாமல் கடைப்பிடித்து வந்தார்.

         இவ்வாறு ஒழுகும் நாளில் அடியவர்கள் நாளும் நாளும் மிகவும் பெருகி வந்தமையாலே தமது உடமை முழுவதும் மாள விற்றும் அப்பணி செய்தனர். மேலும் செய்து வருவதற்கு அவ்வூரில் ஒருவழியும் இல்லாமையால் தாம் முன்பு கற்ற நல்ல சூதாட்டத்தினால் பொருளாக்க முயன்றனர். தம் ஊரில் தம்முடன் சூது பொருவார் இல்லாமையால் அங்கு நின்று வேற்றூர்க்குப் போவாராயினர்.

         பல பதிகளிலும் சென்று சிவனை உள்ளுருகிப் பணிந்து அங்கங்கும் சூதாடுதலினால் வந்த பொருளைக் கொண்டு தமது நியமமாகிய அடியார் பணியினைச் செய்து வந்தார். கும்பகோணத்தைச் சேர்ந்து அங்கு தாம்வல்ல சூதினால் வந்த பொருளைத் தாம் தீண்டாது, நாள்தோறும் அடியார்க்கு அமுதூட்டி இருந்தனர். சூதினில் வல்ல இவர், முதற்சூது தாம் தோற்றுப் பிற்சூது பலமுறையும் தம் வென்று பெரும்பொருள் ஆக்கினார். சூதினால் மறுத்தாரைச் சுரிகை உருவிக் குத்துதலினால் இவர் நற்சூதர் – மூர்க்கர் என்னும் பெயர்களைப் பெற்று உலகில் விளங்கினார்.

         இவ்வாறு பணி செய்து அருளாலே குற்றங்கள் போய் அகல இவ்வுலகை விட்டதற்பின், இறைவரது சிவபுரம் அடைந்தார்.

          மகாமகத் தீர்த்தக் கரையில் சுற்றிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியாகேசம், கங்காதரேசம், பிரமேசம், முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் உள்ளன.

          இந்நகரிலுள்ள 14 தீர்த்தங்களில் தடாகங்கள் - 7, கிணறுகள் - 3, காவிரித்துறைகள் - 4 ஆகும்.

          மகாமகக் குளத் திருப்பணியும் அதைச்சுற்றிப் பதினாறு சிவாலய விமானங்களையும் அமைத்த மகான், அச்சுதப்ப நாயக்க மன்னனின் அமைச்சரான கோவிந்த தீக்ஷ¤தர் ஆவார். இவர் தன் துலாபாரத் தங்கத்தைக் கொண்டே இத்திருப்பணிகளையெல்லாம் செய்திருக்கிறார். கும்பேசுவர் கோயிலில் இவருடைய வடிவம் உள்ளது. இது மட்டுமல்லாது இம்மகான் தர்ம நூல்களில் சொல்லப்பட்ட எல்லா மகாதானங்களையும் செய்திருக்கிறார். அநேகமாக சோழர்களுக்குப்பின் ஆலயத் திருப்பணிகளை எல்லாம் திருத்தியமைத்தவர் இந்த மகான்.

          இத்தலத்தில் பல கோயில்கள் இருப்பினும் பிரதானமானது கும்பேசுவரர் கோயிலேயாம்.

          மண்டபத்தில் இடப்பால் திருஞானசம்பந்தரின் 'திருவெழுக்கூற்றிருக்கை' தேர்வடிவில் வண்ணச் சலவைக் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.

          அம்பாள் சந்நிதியை அடுத்து, அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக - கிராதகோலத்தில் இறைவன் காட்சி தருகின்றார்.

          கும்பேசுவரர் - சிவலிங்கத் திருமேனி; மணல் (பிருதிவி) லிங்கமாதலின் தங்கக் கவசம் சார்த்தப்பட்டுள்ளது. பாணத்தில் உச்சி கும்பத்தின் வாயைப் போலவுள்ளது.

          திருக்குடந்தைப் புராணம் - தலபுராணம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பாடியுள்ளார்.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "நிலம் சுழியாது ஓணத்தில் வந்தோன் உடன் துதித்து வாழ் கும்பகோணத்தில் தெய்வக் குலக்கொழுந்தே" என்று போற்றி உள்ளார்.


திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 403
பாடும் அரதைப்பெரும் பாழியே முதலாக,
சேடர் பயில் திருச்சேறை, திருநாலூர், குடவாயில்,
நாடியசீர் நறையூர்,தென் திருப்புத்தூர் நயந்து இறைஞ்சி
நீடு தமிழ்த் தொடை புனைந்து, அந் நெடு நகரில் இனிது அமர்ந்தார்.

         பொழிப்புரை : போற்றப் பெறுகின்ற `அரதைப் பெரும்பாழி' முதலாக அறிவுடையவர்கள் வாழ்கின்ற `திருச்சேறையும்', `திருநாலூரும்', `திருக்குடவாயிலும்', சிறப்புகள் பலவும் தாமே நாடி வருதற்குரிய `திருநறையூரும்', `தென்திருப்புத்தூரும்' ஆகிய இப்பதிகளை விருப்புடன் வழிபட்டு, நீண்ட தமிழ் மாலைகளைப் பாடி, அத்தென் திருப்புத்தூரில் இனிதே வீற்றிருந்தார் பிள்ளையார்.


பெ. பு. பாடல் எண் : 404
அங்கண்இனிது அமரும்நாள்
         அடல்வெள்ஏனத்து உருவாய்ச்
செங்கண்நெடு மால்பணியும்
         சிவபுரத்துச் சென்றுஅடைந்து,
கங்கைசடைக் கரந்தவர்தம்
         கழல்வணங்கிக் காதலினால்
பொங்கும்இசைத் திருப்பதிகம்
         முன்நின்று போற்றிசைத்தார்.

         பொழிப்புரை : அவ்வரிசில்கரைப் புத்தூரில் பிள்ளையார் எழுந்தருளியிருந்த பொழுது, வன்மையுடைய வெண்மையான பன்றி வடிவைக் கொண்ட சிவந்த கண்களையுடைய திருமால் வணங்கும் சிவபுரத்திற்குச் சென்று, கங்கையைச் சடையில் அடக்கிய இறைவரின் திருவடிகளை வணங்கி, மிக்க விருப்பத்தால் இசை பெருகும் திருப்பதிகங்களைத் திருமுன்பு நின்று பாடினார்.


பெ. பு. பாடல் எண் : 405
போற்றிஇசைத்துப் புனிதர்அருள்
         பெற்றுப்போந்து, எவ்வுயிரும்
தோற்றுவித்த அயன்போற்றும்
         தோணிபுரத்து அந்தணனார்,
ஏற்றும்இசை ஏற்று உகந்த
         இறைவர்தமை ஏத்துதற்கு,
நால்திசையோர் பரவுதிருக்
         குடமூக்கு நண்ணினார்.

         பொழிப்புரை : போற்றி, இறைவரின் திருவருளைப் பெற்று, எவ்வுயிர்களையும் இறைவரின் ஆணையின் வண்ணம் பிறவியில் புகுத்தும் நான்முகன் வணங்கும் திருத்தோணி புரத்தில் தோன்றிய பிள்ளையார், ஆனேற்றின் மீது வருதலை விரும்பிய இறைவரைப் போற்றுதற்காக, நாற்றிசையில் உள்ளவரும் வணங்கும் திருக்குடமூக்கை அடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 406
தேமருவு மலர்ச்சோலைத்
         திருக்குடமூக் கினில், செல்வ
மாமறையோர், பூந்தராய்
         வள்ளலார் வந்துஅருளத்
தூமறையின் ஒலிபெருக,
         தூரியமங் கலம் முழங்க,
கோமுறைமை எதிர்கொண்டு
         தம்பதியில் கொடுபுக்கார்.

         பொழிப்புரை : தேன் பொருந்திய மலர்கள் நிறைந்த திருக்குடமூக்கினில் வாழ்கின்ற செல்வப் பெருமறையோர், காழிவள்ளலார் ஆகிய பிள்ளையாரை மறையொலி பெருகவும், மங்கல இயங்கள் ஒலிக்கவும், மன்னரை எதிர் கொள்ளும் முறையில் எதிர் கொண்டு, தம் பதியினிடத்து அழைத்துச் சென்றனர்.


பெ. பு. பாடல் எண் : 407
திருஞான சம்பந்தர் திருக்குடமூக் கினைச்சேர
வருவார்,தம் பெருமானை வண்தமிழின் திருப்பதிகம்
உருகாநின்று உளமகிழக் "குடமூக்கை உகந்துஇருந்த
பெருமான்எம் இறை"என்று பெருகுஇசையால் பரவினார்.

         பொழிப்புரை : திருக்குடமூக்கினைச் சேர வருபவரான திருஞானசம்பந்தர், தம் இறைவரை வளமையுடைய தமிழ்ப் பதிகத்தால் உள்ளம் உருகி மகிழத் திருக்குடமூக்கை உவந்து விரும்பி வீற்றிருந்த பெருமான் எம் இறைவர் என்று பெருகிய இசையால் பாடினார்.

         இதுபொழுது அருளிய பதிகம் `அரவிரி' (தி.3 ப.59) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணிலமைந்த பதிகமாகும். பாடல் தொறும் `குடமூக்கை உவந்திருந்த பெருமான் எம்மிறை' என நிறைவு பெறுதலின், அக்குறிப்பினை எடுத்து மொழியலானார் ஆசிரியர்.

         3. 059    திருக்குடமூக்கு                   பண் - பஞ்சமம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அரவிரி கோடல்நீடல் அணி காவிரி ஆற்றுஅயலே
மரவிரி போதுமௌவல் மண மல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்குஇடமா
இரவிரி திங்கள்சூடி இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை :பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால் , அழகிய காவிரியாற்றின் பக்கம் , மராமரங்கள் விரிந்த மலர்களும் , முல்லையும் , மணம் வீசும் மல்லிகையும் , தேனோடு முறுக்கு உடையும் மலர்களைஉடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான் , இரவில் ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான் . அப்பெருமானே எம் இறைவன் .


பாடல் எண் : 2
ஓத்துஅர வங்களோடும் ஒலி காவிரி ஆர்த்துஅயலே
பூத்துஅர வங்களோடும் புகை கொண்டுஅடி போற்றிநல்ல
கூத்துஅர வங்கள்ஓவாக் குழ கன்குட மூக்குஇடமா
ஏத்துஅர வங்கள்செய்ய இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு , காவிரியாறு பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க , பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில் மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி , தூபதீபம் காட்டி இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க , திருநடனம் புரியும் அழகனாகிய சிவபெருமான் , திருக்குட மூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றான் . எல்லோரும் போற்றி வணங்கும் புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 3
மயில்பெடை புல்கிஆல, மணல் மேன்மட அன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங் காவிரிப்பைம்  பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாடல் உடை யான்குட மூக்குஇடமா
இயலொடு வானம்ஏத்த இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : ஆண்மயில் பெண்மயிலைத் தழுவி ஆட , காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன் பெண் அன்னத்தோடு நடைபயில , வண்டுகள் பண்ணிசைக்க , நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 4
மிக்குஅரை தாழவேங்கை உரி ஆர்த்து,உமை யாள்வெருவ
அக்குஅரவு ஆமைஏன மருப் போடுஅவை பூண்டு,அழகார்
கொக்கரை யோடுபாடல் உடை யான்குட மூக்குஇடமா
எக்கரை யாரும்ஏத்த இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : சிவபெருமான் புலியின் தோலை உரித்து நன்கு தாழ இடுப்பில் கட்டியவர். உமாதேவி அஞ்சுமாறு எலும்பு, பாம்பு, ஆமையோடு, பன்றியின் கொம்பு ஆகியவற்றை அழகிய ஆபரணமாகப் பூண்டு, கொக்கரை என்னும் வாத்தியம் இசைக்கப் பாடும் சிவபெருமான் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் எத்தன்மையோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 5
வடிவுடை வாள்தடங்கண் உமை அஞ்ச,ஓர் வாரணத்தைப்
பொடிஅணி மேனிமூட உரி கொண்டவன், புன்சடையான்,
கொடிநெடு மாடம்ஓங்கும் குழ கன்குட மூக்குஇடமா
இடிபடு வானம்ஏத்த இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்து , திருவெண்ணீறணிந்த திருமேனிமீது போர்த்தவனும் , சடைமுடியுடையவனும் , அழகனும் ஆன சிவபெருமான் , கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 6
கழைவளர் கவ்வைமுத்தம் கமழ் காவிரி ஆற்றுஅயலே
தழைவளர் மாவின்நல்ல பல வின்கனி கள்தங்கும்
குழைவளர் சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்குஇடமா
இழைவளர் மங்கையோடும் இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக் கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின் பக்கத்திலே , தழைகள் மிகுந்த மாங்கனிகளும் , பலாவின் கனிகளும் கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் , அழகான சிவபெருமான் , நல்ல ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 7
மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தான்எழில் வையம்உய்ய,
சிலைமலி வெங்கணையால் சிதைத் தான்புர மூன்றினையும்,
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்குஇடமா
இலைமலி சூலம்ஏந்தி இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : மலைமகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான் எழில்மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து , மூன்று புரங்களையும் சிதைத்தவன் . கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 8
நெடுமுடி பத்துஉடைய நிகழ் வாள்அரக் கன்உடலைப்
படும்இடர் கண்டுஅயரப் பரு மால்வரைக் கீழ்அடர்த்தான்,
கொடுமடல் தங்குதெங்கு பழம் வீழ்குட மூக்குஇடமா
இடுமணல் எக்கர்சூழ இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை :நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்

பாடல் எண் : 9
ஆர்எரி ஆழியானும் மல ரானும் அளப்பரிய
நீர்இரி புன்சடைமேல் நிரம் பாமதி சூடி,நல்ல
கூர்எரி ஆகிநீண்ட குழ கன்,குட மூக்குஇடமா
ஈர்உரி கோவணத்தோடு இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை : அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய திருமாலும் , பிரமனும்அளக்கமுடியாதவனாய் , கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடைமேல் தாங்கி , இளம்பிறைச் சந்திரனைச் சூடி , நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்றஅழகனானசிவபெருமான் , திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும் கோவணஆடையும்அணிந்து வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுள் ஆவான் .


பாடல் எண் : 10
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டுஅமணர்,
நாடிய தேவர்எல்லாம் நயந்து ஏத்திய நல்நலத்தான்,
கூடிய குன்றம்எல்லாம் உடை யான்குட மூக்குஇடமா
ஏடுஅலர் கொன்றைசூடி இருந் தான்அவன் எம்இறையே.

         பொழிப்புரை :மஞ்சட் காவியுடையணிந்த , இறைவனை உணராத பேதையராகிய புத்தர்களும் , இறுமாப்புடைய சமணர்களும், கூறுவன பயனற்றவை . தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட , அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான் , மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான் . திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றைமாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .


பாடல் எண் : 11
வெண்கொடி மாடம்ஓங்கு விறல் வெங்குரு நல்நகரான்,
நண்பொடு நின்றசீரான்,  தமிழ்ஞானசம் பந்தன், நல்ல
தண்குட மூக்குஅமர்ந்தான் அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேல்உலகம் வியப்புஎய்துவர், வீடுஎளிதே.

         பொழிப்புரை : வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும் வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும் புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர் . அவர்கட்கு முக்திப்பேறு எளிதாகக் கைகூடும் .

                                             திருச்சிற்றம்பலம்

-------------------------------------------------------------------


திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 215
நல்லூரில் நம்பர்அருள் பெற்றுப்போய், பழையாறை,
பல்ஊர்வெண் தலைக்கரத்தார் பயிலும்இடம் பலபணிந்து,
சொல்ஊர்வண் தமிழ்பாடி வலஞ்சுழியைத் தொழுதுஏத்தி,
அல்ஊர்வெண் பிறைஅணிந்தார் திருக்குடமூக்கு  அணைந்து இறைஞ்சி.

         பொழிப்புரை : திருநல்லூர் இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.

         குறிப்புரை : பழையாறையில் இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

1.    திருவலஞ்சுழி
(அ) `அலையார்` (தி.6 ப.72) - திருத்தாண்டகம்.
(ஆ) `ஓதமார்` (தி.5 ப.66) – திருக்குறுந்தொகை.

2.    திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் - `கருமணிபோல்` (தி.6 ப.73) - திருத்தாண்டகம்.

3.    திருக்குட மூக்கு - `பூவணத்தவன்` (தி.5 ப.22) - திருக்                   குறுந்தொகை.

4.    குடந்தைக் கீழ்க்கோட்டம் - `சொல்மலிந்த`(தி.6 ப.75) -                                   திருத்தாண்டகம்.   


5. 022   திருக்குடமூக்கு     திருக்குறுந்தொகை
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணிஅங்கு
ஆவ ணத்துஉடை யான்அடி யார்களைத்
தீவ ணத்திரு நீறுமெய் பூசியோர்
கோவ ணத்துஉடை யான்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : குடமூக்கிலே உள்ள பெருமான் , பூவின் வண்ணத்தை உடையவன் , புண்ணியமே வடிவானவன் , அடியார்கள் ஆகும் வண்ணம் நண்ணி யருள்புரிந்து அடிமைச் சீட்டெழுதி ஆட்கொள்பவன் , தீயின் நிறத்தை உடைய செம்மேனியில் திருநீறு பூசியவன், கோவண ஆடை உடையவன் .


பாடல் எண் : 2
பூத்து ஆடிக்கழி யாதே, நீர் பூமியீர்,
தீத்தா டித்திறம் சிந்தையுள் வைம்மினோ,
வேர்த்து ஆடுங்காளி தன்விசை தீர்கஎன்று
கூத்தா டிய்யுறை யுங்குட மூக்கிலே.

         பொழிப்புரை : உலகில் உள்ளவர்களே ! நீர் பிறந்து வாளா திரிந்து இறந்து போகாமல் , எல்லா உலகங்களையும் எரித்து சர்வசங்கார காலத்தில் ஆடும் இறைவனின் திறத்தைச் சிந்தையுள் இருத்துவீராக ! வேர்வை தோன்றுமாறு விரைந்து ஆடிய காளியின் ஆடலை வெல்லுமாறு கூத்து ஆடிய பெருமான் குடமூக்கில் உறைபவன் ஆவான் .



பாடல் எண் : 3
நங்கை யாள்உமை யாள்உறை நாதனார்,
அங்கை யாளொடு அறுபதந் தாழ்சடைக்
கங்கை யாள்அவள் கன்னி எனப்படும்
கொங்கை யாள்உறை யும்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : உமை நங்கையாளை ஒரு பாகத்திற்கொண்ட தலைவர் . அங்கையாளொடு வண்டு தாழ்சடையினளாகிய கங்கையாளும் , உறையும் குடமூக்கில் காவிரியுமாகிய தீர்த்தச் சிறப்புக்கள் உள்ளன .


பாடல் எண் : 4
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்,
ஏதா னும்இனிது ஆகும் இயமுனை
சேதா ஏறுஉடை யான்அமர்ந்த இடம்
கோதா விரிஉறை யும்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும் ; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடை யானாகிய சிவபிரான் உறையும் இடம் .


பாடல் எண் : 5
நக்க ரையனை, நாள்தொறும் நல்நெஞ்சே,
வக்க ரைஉறை வானை வணங்குநீ,
அக்கு அரையோடு அரவுஅரை ஆர்த்தவன்
கொக்க ரைஉடை யான், குட மூக்கிலே.

         பொழிப்புரை : நல்ல நெஞ்சே ! நீ , திக்குகளையே ஆடையாக உடைய தலைவனும் வக்கரையென்னும் திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை வணங்குவாயாக! அக்கு மாலையினையும் , அரவினையும் அரையில் கட்டியவனும் , கொக்கரையென்னும் பாடலையும் கூத்தையும் உடையவனுமாகிய பெருமான் குடமூக்கிலே உள்ளான் .


பாடல் எண் : 6
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்,
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்,
மறவனாய்ப் பார்த்தன் மேல்கணை தொட்ட,எம்
குறவ னார்உறை யும்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே ! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம் குறவேடம் கொண்ட பெருமானும் , குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக .


பாடல் எண் : 7
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ,
பண்டை வல்வினை பற்றுஅற வேண்டுவீர்,
விண்ட வர்புரம் மூன்றுஒரு மாத்திரைக்
கொண்ட வன்உறை யும்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே ! பகைவராகி யெதிர்ந்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில் , தொண்டராகித் தொழுது பணிவீர்களாக !


பாடல் எண் : 8
காமி யம்செய்து காலம் கழியாதே,
ஓமியம் செய்துஅங்கு உள்ளத்து உணர்மினோ,
சாமி யோடு சரச்சு வதியவள்
கோமி யும்உறை யும்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து, தன் கணவனாகிய பிரமனோடு சரசுவதியும் கோமி (கோதாவரி) யும், உறையும் குடமூக்கிற் பெருமானை , உள்ளத்தே உணர்வீர்களாக !


பாடல் எண் : 9
சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்,
பரம னைப்பல நாளும் பயிற்றுமின்,
பிரமன் மாலொடு மற்றுஒழிந் தார்க்குஎலாம்
குரவ னார்உறை யும்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : பிரமன் , திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில் , பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக .


பாடல் எண் : 10
அன்று தான்அரக் கன்கயி லாயத்தைச்
சென்று தான்எடுக்க, உமை அஞ்சலும்,
நன்று தான்நக்கு நல்விரல் ஊன்றிப்பின்
கொன்று கீதம்கேட் டான்,குட மூக்கிலே.

         பொழிப்புரை : அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்றுதான் எடுக்க , உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான் .
                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...