திரு வலஞ்சுழி





திரு வலஞ்சுழி

     சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
             
     கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலைக்கு அருகே இத்திருத்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாபநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

இறைவர்              : கபர்த்தீசுவரர்,  கற்பகநாதேசுவரர்வலஞ்சுழிநாதர்

இறைவியார்           : பெரிய நாயகி, பிருகந்நாயகி

தல மரம்                : வில்வம்

தீர்த்தம்                : காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்


தேவாரப் பாடல்கள்: 1. சம்பந்தர் - 1. விண்டெலாமல ரவ்விரை,
                                                               2. என்னபுண்ணியஞ் செய்தனை,
                                                               3. பள்ளமதாய படர்சடை.

                                      2. அப்பர்   -  1. ஓதமார் கடலின்,                                                                                              2. அலையார்புனற்கங்கை.

     காவிரி நதி வலமாக சுழித்துச் செல்லும் இடத்தில் அமைந்துள்ளதால் இத்தலம் திருவலஞ்சுழி என்று பெயர் பெற்றது.

     அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளிப்பட்டாள் . ஏரண்ட முனிவருக்கு இக்கோயிலில் சிலை இருக்கிறது. இன்றும் மஹாசிவராத்திரி நாளில் இரவில் நான்கு ஜாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு திருவலஞ்சுழி, திருநாகேச்சுரம், திருப்பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் தலங்களில் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.

         வெள்ளை விநாயகர்: திருவலஞ்சுழியில் உள்ள தல விநாயகர் வெள்ளை விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். தேவர்கள் திருப்பாற்கடலை கடையத் தொடங்கும் முன் விநாயக பூஜை செய்ய மறந்தார்கள். ஆகையல் தான் ஆலகால விஷம் பாற்கடலில் இருந்து வெளி வந்தது. அதனால் அவதிகளுக்கு உட்பட்ட தேவர்கள், தங்கள் தவறை உணர்ந்து, அந்த வேளையில் விநாயகரை ஆவாஹனம் செய்ய வேறு ஏதும் இல்லா நிலையில் பொங்கி வந்த கடல் நுரையை பிடித்து பிள்ளையாரை உருவாக்கி பூஜை செய்தனர். அதன் பின் விநாயகர் அருளால் எடுத்த காரியம் பூர்த்தி அடைந்து அமுதம் பெற்றார்கள். அந்த விநாயகர் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்யத் திருவலஞ்சுழியே ஏற்ற இடம் என இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட்ட இந்திரன் ஒரு கோயிலும் கட்டினான். அந்தக் கோயிலில் இன்றும் இந்திரன் பூஜித்த அந்த விநாயகர் மூர்த்தி அருள் பாலிக்கிறார். இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தி அன்று தேவேந்திரன் வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். தேவர்களால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் தான் திருவலஞ்சுழியில் உள்ள வெள்ளை விநாயகர். மற்ற ஆலயங்களில் நடப்பது போன்ற அபிஷேகம் இவருக்கு இங்கே இல்லை. சுமார் 10 அங்குல உயரமே உள்ள இந்த வெள்ளைப் பிள்ளையாருக்கு புனுகு மட்டும் சாத்துவார்கள். மேலும் பச்சைக் கற்பூரத்தைக் குறிப்பிட்ட பக்குவத்தில் அரைத்து, அதை இந்த விநாகயரின் திருமேனியைத் தொடாமல் அவர் மேல் மெள்ள தூவி விடுவார் அர்ச்சகர். அதனால் இந்த விநாகயர் தீண்டாத் திருமேனி ஆவார். விநாயகர் துதிக்கை வலப்பக்கம் சுழித்துள்ளதால் திருவலஞ்சுழி என இத்தலம் பெயர் பெற்றதென்றும் கூறுவர்.

         திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் திருவலஞ்சுழி, விநாயகருக்கு உரிய தலமாகும். இத்தலத்திலுள்ள கற்பகநாதேசுவரர் கோயில் ஒரு பெரிய கோயில். கிழக்கு நோக்கி உள்ள ஒரு இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. அம்பாள் பெரியநாயகியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. இத்தகைய அமைப்புள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள தனித்தனி சன்னதிகள் போக அஷ்டபுஜ மஹாகாளிக்கும், வெளிப் பிரகாரத்தில் பைரவருக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்பு வாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரமம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப் பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரலுக்கும் இவ்வாலயத்தில் தனி சந்நிதி உள்ளது.

         கடல் நுரையால் செய்யப்பட்டு இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இவரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்கப்பட்டது என்று புராணங்கள் கூறுகின்றன. சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் கொண்ட அழகான மண்டபமாக இது விளங்குகிறது. இச்சந்நிதியிலுள்ள கருங்கல் பலகணி நுணக்கமான சிற்ப வேலைப்பாடுடன் திகழ்கிறது. இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

         இதலத்தின் தீர்த்தங்களாக காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம் ஆகியவையும், தலமரமாக வில்வமரமும் உள்ளது. ஹேரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரமன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையும் திருவலஞ்சுழிக்கு உண்டு.

         இங்கு உள்பிராகாரத்திலுள்ள முருகப்பெருமான் ஆறு திருமுகங்களும், பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளா,. தேவியர் இருவரும் அருகில் நிற்கின்றனர். திருப்புகழில் இத்தல முருகர் மீது ஒரு பாடல் உள்ளது.

     வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில், "சேர்ந்த மலம் சுழிகின்ற மனத்தார்க்கு அரிது ஆம் வலஞ்சுழி வாழ் பொன் மலையே" என்று போற்றி உள்ளார்.

         காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருஞானசம்பந்தர் திருப்பதிக வரலாறு


பெரிய புராணப் பாடல் எண் : 377
பணியும் அப்பதிப் பசுபதீச் சரத்துஇனிது இருந்த
மணியை உள்புக்கு, வழிபடும் விருப்பினால் வணங்கி,
தணிவுஇல் காதலில் தண்தமிழ் மாலைகள் சாத்தி,
அணி விளங்கிய திருநலூர் மீண்டும் வந்து அணைந்தார்.

         பொழிப்புரை : பணியும் அப்பதியில், பசுபதீச்சரக் கோயிலில் இனிதாக வீற்றிருந்தருளும் மணியான இறைவரைக் கோயிலுள் புகுந்து வழிபடும் விருப்பத்தினால் வணங்கிக் குறைவில்லாத அன்புடன் குளிர்ந்த தமிழ் மாலைகள் பாடிச் சாத்தி, அழகுடைய திருநல்லூரின்கண் மீண்டும் வந்தடைந்தார்.


பெ. பு. பாடல் எண் : 378
மறை விளங்கும்அப் பதியினில் மணிகண்டர் பொன்தாள்
நிறையும் அன்பொடு வணங்கியே நிகழ்பவர், நிலவும்
பிறை அணிந்தவர் அருள்பெற, பிரசமென் மலர்வண்டு
அறை நறும்பொழில் திருவலஞ்சுழியில் வந்து அணைந்தார்.

         பொழிப்புரை : மறைகள் விளங்குதற்கு இடமான அப்பதியில் கரிய கழுத்தினையுடையவரான இறைவரின் பொன்னடிகளை நிறைவான அன்புடன் வணங்கியவாறே எழுந்தருளும் ஆளுடைய பிள்ளையார், பிறைசூடிய இறைவரின் நிலைபெற்ற திருவருளைப் பெற்று, உலகம் உய்வு பெற, தேன் பொருந்திய மலர்களில் வண்டுகள் ஒலிக்கின்ற மணம் வீசும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியின்கண் வந்து சேர்ந்தார்.


பெ. பு. பாடல் எண் : 379
மதி புனைந்தவர் வலஞ்சுழி மருவுமா தவத்து
முதிரும் அன்பர்கள் முத்தமிழ் விரகர்தம் முன்வந்து,
எதிர்கொள் போழ்தினில், இழிந்து,அவர் எதிர்செல, மதியைக்
கதிர்செய் வெண்முகில் குழாம்புடை சூழ்ந்துஎனக் கலந்தார்.

         பொழிப்புரை : பிறைச்சந்திரனைச் சூடிய இறைவர் திருவலஞ்சுழியில் வாழ்கின்ற பெருந்தவத்தின் முதிர்ச்சியுடைய அன்பர்கள் திரண்டு முத்தமிழ்ச் செல்வரான பிள்ளையாரின் முன்வந்து, மதியை ஒளி பொருந்திய வெண்மேகங்கள் சுற்றிச் சூழ்ந்தது போல, எதிர் கொண்டனர்.


பெ. பு. பாடல் எண் : 380
கலந்த அன்பர்கள் தொழுதுஎழ, கவுணியர் தலைவர்
அலர்ந்த செங்கம லக்கரம் குவித்துஉடன் அணைவார்,
வலஞ்சு ழிப்பெரு மான்மகிழ் கோயில்வந்து எய்தி,
பொலம்கொள் நீள்சுடர்க் கோபுரம் இறைஞ்சிஉள் புகுந்தார்.

         பொழிப்புரை : திரண்டு வந்த அன்பர்கள் கீழே வீழ்ந்து தொழுது எழுந்து நிற்க, கவுணியர் தலைவரான பிள்ளையார், அப்பொழுது அலர்ந்த செந்தாமரை மலர் போன்ற கைகளைக் கூப்பி அணைபவராய்த் திருவலஞ்சுழி இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் கோயிலைச் சேர்ந்து, பொன்மயமாக ஒளிவிட்டு விளங்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே புகுந்தனர்.


பெ. பு. பாடல் எண் : 381
மருவலார்புரம் முனிந்தவர் திருமுன்றில் வலங்கொண்டு,
உருகும் அன்புடன் உச்சிமேல் அஞ்சலி யினராய்,
திருவ லஞ்சுழி உடையவர் சேவடித் தலத்தில்
பெருகும்ஆதர வுடன்பணிந்து, எழுந்தனர், பெரியோர்.

         பொழிப்புரை : பகைவரின் முப்புரங்களையும் எரித்த இறைவரின் திருமுற்றத்தை வலம் வந்து, உளம் உருகும் அன்புடனே, தலையின் மேல் கைகுவித்து வணங்கித் திருவலஞ்சுழி இறைவரின் திருவடிகளில் பெருகும் அன்புடனே பெரியவரான சம்பந்தர் பணிந்து எழுந்தார்.


பெ. பு. பாடல் எண் : 382
ஞானபோனகர் நம்பர்முன் தொழுதுஎழு விருப்பால்,
ஆனகாதலில் அங்கணர் அவர்தமை வினவும்
ஊனம்இல்இசை யுடன்விளங் கியதிருப் பதிகம்,
பானலார்மணி கண்டரைப் பாடினார் பரவி.

         பொழிப்புரை : ஞானப்பாலையுண்ட பிள்ளையார் சிவபெருமானின் திருமுன்பு தொழுது எழும் விருப்பத்தினால் விளைந்த ஆசையினால் இறைவரை முன்னிலைப்படுத்தி, வினவுகின்ற கருத்தை உடைய குற்றம் அற்ற இசையுடனே விளங்கும் திருப்பதிகத்தைக் குவளை மலர் போன்ற கரிய கழுத்தினையுடைய இறைவரை வணங்கிப் போற்றினார்.

         இதுபொழுது அருளிய பதிகம் `விண்டெலாமலர்' (தி.2 ப.2) எனத் தொடங்கும் இந்தளப் பண்ணிலமைந்த பதிகமாகும். பிள்ளையார் இறைவரை நோக்கியும், அடியவரை நோக்கியும் வினவும் வினாவுரைப் பதிகங்கள் பல. அவ்வினாக்களுள் ஒன்றாய் வருவதும், வேறு வேறாய் வருவனவுமாக அமையும். இப்பதிகத்தில் இறைவரை நோக்கிப் பாடல் தொறும் பலிதேர்ந்து உழல்வது எற்றுக்கு? என ஒரே வினாவாய் அமைந்திருக்கும் பாங்கு அறியத்தக்கது.


பெ. பு. பாடல் எண் : 383
புலன்கொள் இன்தமிழ் போற்றினர், புறத்தினில் அணைந்தே,
இலங்கு நீர்ப்பொன்னி சூழ்திருப் பதியினில் இருந்து,
நலம்கொள் காதலின் நாதர்தாள் நாள்தொறும் பரவி,
வலஞ்சுழிப் பெருமான் தொண்டர்தம் உடன் மகிழ்ந்தார்.

         பொழிப்புரை : உளங்கொளற்குரிய அருளுரையாக நன்மக்கள் உள்ளத்தில் கொள்ளும் இனிய இசைத் தமிழ்ப் பதிகங்ளைச் சாத்தி வணங்கியவராய்க் கோயிலின் வெளியே போந்து, பெருகிவரும் நீரையுடைய காவிரி சூழ்ந்த அப்பதியில் தங்கியிருந்து, நன்மை பொருந்திய அன்பினால் இறைவரின் திருவடிகளை நாள்தோறும் வணங்கிப் பெருமானின் தொண்டர்களுடனே கூடி மகிழ்வுடனிருந்து வந்தார்.

         இப்பதியில் இருந்தருளிய பொழுது பாடியருளிய பதிகங்கள் இரண்டாம்.

1) `என்ன புண்ணியம் செய்தனை\' (தி.2 ப.106) - நட்டராகம்.
2) `பள்ளமதாய\' (தி.3 ப.106) - பழம்பஞ்சுரம்.

இவ்விரு பதிகங்களிலும் வரும் முதற் பாடல்கள், பிள்ளையார் தம் நெஞ்சிற்கும் நம்மனோர்க்குமாகக் கூறிய அருளுரைகளாக அமைந்துள்ளன. இரண்டாவது பதிகத்தில் 3 முதல் 6 முடிய உள்ள பாடல்களும் அவ்வாறே அமைந்துள்ளன. ஆதலின் `புலங்கொள் இன்தமிழ்' எனப் போற்றினர் ஆசிரியர்.


திருஞானசம்பந்தர் திருப்பதிகங்கள்


2.002 திருவலஞ்சுழி                      பண் - இந்தளம்
                                    திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
விண்டு எலாமல ரவ்விரை நாறுதண் தேன்விம்மி
வண்டு எலாம்நசை யால்இசை பாடும்வ லஞ்சுழித்
தொண்டு எலாம்பர வுஞ்சுடர் போல்ஒளி யீர்சொலீர்,
பண்டு எலாம்பலி தேர்ந்துஒலி பாடல்ப யின்றதே.

         பொழிப்புரை :மலர்கள் எல்லாம் விண்டு மணம் வீசவும், அம் மலர்களில் நிறைந்துள்ள தண்ணிய தேனை உண்ணும்விருப்பினால் வண்டுகள் இசைபாடவும், விளங்கும் சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழியில் தொண்டர்கள் பரவச் செஞ்சுடர் போன்ற ஒளியினை உடையவராய் எழுந்தருளிய இறைவரே! முன்னெல்லாம் நீர் ஒலியோடு பாடல்களைப் பாடிக்கொண்டு பலி ஏற்பதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 2
பாரல் வெண்குரு கும்,பகு வாயன நாரையும்
வாரல் வெண்திரை வாய்இரைதேரும்வ லஞ்சுழி
மூரல் வெண்முறு வல்நகு மொய்ஒளி யீர்சொலீர்,
ஊரல் வெண்தலை கொண்டுஉலகு ஒக்க உழன்றதே.

         பொழிப்புரை :நீண்ட கழுத்தினை உடைய வெள்ளிய கொக்குகளும், பிளந்த வாயை உடைய நாரைகளும், ஓடுகின்ற தண்ணீரின் வெண்மையான அலைகளில் இரை தேடுகின்ற திருவலஞ்சுழியில் புன்னகையோடு வெள்ளிய பற்கள் விளங்க, செறிந்த ஒளிப்பிழம்பி னராய் எழுந்தருளிய இறைவரே! முடியில் வெண்மையான தலை மாலை பொருந்தியவராய் உலகம் முழுதும் சென்று திரிந்து பலி ஏற்கக்காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 3
கிண்ண வண்ணமல ரும்கிளர் தாமரைத் தாதுஅளாய்
வண்ண நுண்மணல் மேல்அனம் வைகும்வ லஞ்சுழிச்
சுண்ண வெண்பொடிக் கொண்டுமெய் பூசவல் லீர்சொலீர்,
விண்ண வர்தொழ வெண்தலை யில்பலி கொண்டதே.

         பொழிப்புரை :கிண்ணம் போல் வாய் விரிந்து செவ்வண்ணம் பொருந்தியதாய் மலர்ந்து விளங்கும் தாமரை மலர்களின் தாதுகளை அளாவி அழகிய நுண்மணற் பரப்பின் மேல் அன்னங்கள் வைகும் திருவலஞ்சுழியில், உடலிற்பூசும் சுண்ணமாகத் திருநீற்றுப் பொடியை மேனிமேற் பூசுதலில் வல்லவராய் விளங்கும் இறைவரே! தேவர்கள் எல்லாம் உம்மை வந்து வணங்கும் தலைமைத்தன்மை உடையவராயிருந்தும் வெள்ளிய தலையோட்டில் பலிகொண்டு திரிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 4
கோடு எலாநிறை யக்குவ ளைம்மல ருங்குழி
மாடு எலாமலி நீர்மண நாறும்வ லஞ்சுழிச்
சேடு எலாம்உடை யீர்,சிறு மான்மறி யீர்,சொலீர்,
நாடு எலாம்அறி யத்தலை யில்நறவு ஏற்றதே.

         பொழிப்புரை :கரைகளெல்லாம் நிறையுமாறு குழிகளில் பூத்த குவளை மலர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருத்தலால் அங்குள்ள தண்ணீர், குவளை மலரின் மணத்தை வீசும் திருவலஞ்சுழியில் விளங்கும் பெருமைகள் எல்லாம் உடையவரே! சிறிய மான் கன்றைக் கையில் ஏந்தியவரே! நாடறியத் தலையோட்டில் பிச்சை ஏற்றல் ஏனோ? சொல் வீராக.


பாடல் எண் : 5
கொல்லை வென்றபுனத் தில்குரு மாமணி கொண்டுபோய்
வல்லை நுண்மணல் மேல்அனம் வைகும்வ லஞ்சுழி
முல்லை வெண்முறு வல்நகை யாள்ஒளி யீர்சொலீர்,
சில்லை வெண்தலை யில்பலி கொண்டுஉழல் செல்வமே.

         பொழிப்புரை :முல்லை நிலத்தைப் போன்ற காடுகளில் கிடைக்கும் நிறம் பொருந்திய மணிகளை எடுத்துச்சென்று விரைவில் அன்னங்கள் நுண்ணிய மணற் பரப்பின்மேல் தங்கி வாழும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிய, முல்லை அரும்பு போன்ற வெண்மையான முறுவலோடு புன்சிரிப்பையுடைய உமாதேவியை ஆளும் ஒளி வடிவுடையவரே! சிறுமையைத்தரும் வெண்டலையோட்டில் பலிகொண்டுழல்வதைச் செல்வமாகக் கருதுதல் ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 6
பூச நீர்பொழி யும்புனல் பொன்னியில் பன்மலர்
வாச நீர்குடை வார்இடர் தீர்க்கும்வ லஞ்சுழித்
தேச நீர்,திரு நீர்,சிறு மான்மறி யீர்சொலீர்,
ஏச வெண்தலை யில்பலி கொள்வது இலாமையே.

         பொழிப்புரை – நீர் பெருகி வரும் காவிரியில் பூசநன்னாளில் பல மலர்களோடு கூடி மணம் கமழ்ந்துவரும் நீரில் மூழ்குபவர்களின் இடர்களைத் தீர்த்தருளும் திருவலஞ்சுழித் தேசரே! அழகிய சிறிய மான்கன்றைக் கையில் ஏந்தியவரே! பலரும் இகழ வெண்டலையில் நீர் பலிகொள்வது செல்வம் இல்லாமையினாலோ? சொல்வீராக.


பாடல் எண் : 7
கந்த மாமலர்ச் சந்தொடு கார்அகி லுந்தழீஇ
வந்த நீர்குடை வார்இடர் தீர்க்கும்வ லஞ்சுழி
அந்தம் நீர்,முதல் நீர்,நடு ஆம்அடி கேள்சொலீர்,
பந்தம் நீர்கரு தாது,உல கில்பலி கொள்வதே.

         பொழிப்புரை :மணம் பொருந்திய சிறந்த மலர்களையும் சந்தன மரங்களையும், கரிய அகில் மரங்களையும் தாங்கிவந்த காவிரிநீரில் குளிப்பவர்களின் இடர்களைத் தீர்க்கும் திருவலஞ்சுழியில் எழுந்தருளி உலகிற்கு ஆதியும் நடுவும் அந்தமுமாகி விளங்கும் அடிகளே! உலகிற்பற்றை விளைப்பது என்று மக்களை போலக் கருதாமல் பலிகொள்வது ஏனோ! சொல்வீராக.


பாடல் எண் : 8
தேன்உற் றநறு மாமலர்ச் சோலையில் வண்டுஇனம்
வான்உற் றநசை யால்இசை பாடும்வ லஞ்சுழிக்
கான்உற் றகளிற் றின்உரி போர்க்கவல் லீர்சொலீர்
ஊன்உற் றதலை கொண்டுஉலகு ஒக்க உழன்றதே.

         பொழிப்புரை :தேன் பொருந்திய பெரிய மலர்ச்சோலையில் வண்டுகள் தேனுண்ணும் நசையால் உயரிய இசையைப் பாடும் திருவலஞ்சுழியில் எழுந்தருளிக் கொல்ல வந்த காட்டுயானையின் தோலை உரித்துப் போர்த்த வலிமையை உடைய இறைவரே! ஊன் பொருந்திய தலையோட்டைக் கையில் கொண்டு உலகெங்கும் உழன்றது ஏனோ? சொல்வீராக.


பாடல் எண் : 9
தீர்த்த நீர்வந்து இழிபுனல் பொன்னியிற் பன்மலர்
வார்த்த நீர்குடை வார்இடர் தீர்க்கும்வ லஞ்சுழி
ஆர்த்து வந்த அரக்கனை அன்றுஅடர்த் தீர்சொலீர்
சீர்த்த வெண்தலை யில்பலி கொள்வதும் சீர்மையே.

         பொழிப்புரை :புனிதமான நீர் வந்து செல்லும் காவிரி ஆற்றில் பன் மலர்களைத் தூவி அவ்வாற்று நீரில் மூழ்குவோரது இடர்களைப் போக்கியருள்பவராய்த் திருவலஞ்சுழியில் மேவி, தன் வலிமையைப் பெரிது எனக்கருதி ஆரவாரித்து வந்த இராவணனை அக்காலத்தில் அடர்த்தவரே! சீர்மை பொருந்திய வெள்ளிய தலையோட்டில் பலி ஏற்றுண்பது உம் பெருமைக்கு அழகோ? சொல்வீராக.


பாடல் எண் : 10
உரம் மனுஞ்சடை யீர்,விடை யீர்,உமது இன்னருள்
வரம் மனும்பெறல் ஆவதும் எந்தைவ லஞ்சுழிப்
பிரம னும்திரு மாலும் அளப்புஅரி யீர்சொலீர்,
சிரம் எனுங்கல னில்பலி வேண்டிய செல்வமே.

         பொழிப்புரை :பெருமை பொருந்திய சடையினை உடையவரே! விடையை ஊர்ந்து வருபவரே! நிலையான வரம் பெறுதற்குரிய இடமாய் உள்ள வலஞ்சுழியில் விளங்கும் எந்தையே! பிரமன் திருமால் ஆகியோரால் அளத்தற்கு அரியரானவரே, நீர் தலையோடாகிய உண் கலனில் பலியைச் செல்வமாக ஏற்றதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


பாடல் எண் : 11
வீடும் ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
வாடின் ஞானம்என் ஆவதும், எந்தைவ லஞ்சுழி
நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டுஇசை
பாடும் ஞானம்வல் லார்அடி சேர்வது ஞானமே.

         பொழிப்புரை :வீடும் அதற்கு ஏதுவாய ஞானமும் பெறவிரும்பு வீராயின், விரதங்களை மேற்கொண்டு உடல் வாடுவதனால் ஞானம் வந்துறுமோ? திருவலஞ்சுழியை அடைந்து ஞானசம்பந்தர் ஓதியருளிய செந்தமிழை இசையோடு பாடும் ஞானம் வாய்க்கப் பெற்றவர்களின் திருவடிகளை வழிபடுவதொன்றே ஞானத்தைத் தருவதாகும்.
                                             திருச்சிற்றம்பலம்

  
2.106   திருவலஞ்சுழி                     பண் - நட்டராகம்
                                             திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே,
         இருங்கடல் வையத்து
முன்ன நீபுரி நல்வினைப் பயன்இடை,
         முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி
         வாணனை வாயாரப்
பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும்
         வழிபடும் அதனாலே.

         பொழிப்புரை :முழுமையான மணிகளும் , முத்துக்களும் நிறைந்த நிலையான காவிரியாறு சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவனைப் போற்றியும் , அன்பு செய்தும் , பாடியும் வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருத் தலால் , கடல் சூழ்ந்த இவ்வுலகத்து நாம் செய்த நல்வினைப் பயன்களில் , நெஞ்சே ! நீ ! எத்தகைய புண்ணியத்தைச் செய்துள்ளாய் ?


பாடல் எண் : 2
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை,
         விரிகடல் வருநஞ்சம்
உண்டு இறைஞ்சுவா னவர்தமைத் தாங்கிய
         இறைவனை, யுலகத்தில்
வண்டு வாழ்குழன் மங்கையொர் பங்கனை,
         வலஞ்சுழி இடமாகக்
கொண்ட நாதன்மெய்த் தொழில்புரி தொண்டரோடு
         இனிதுஇருந் தமையாலே.

         பொழிப்புரை :கடலிடைத்தோன்றிய நஞ்சை உண்டு அமரர் களைக் காத்தருளிய இறைவனை , உமைகேள்வனை , இவ்வுலகில் வலஞ்சுழியை இடமாகக் கொண்டு விளங்கும் இறைவனை வணங்கி அவ்விறைவனின் உண்மைத் தொண்டு புரியும் தொண்டர்களோடு கூடி உறையும் பேறு பெற்றதால் நிச்சயம் நம் வினைகள் விண்டொழிந் தனவாகும் .


பாடல் எண் : 3
திருந்த லார்புரம் தீஎழச் செறுவன,
         விறலின்கண் அடியாரைப்
பரிந்து காப்பன, பத்தியில் வருவன,
         மத்தமாம் பிணிநோய்க்கு
மருந்தும் ஆவன, மந்திரம் ஆவன,
         வலஞ்சுழி இடமாக
இருந்த நாயகன் இமையவர் ஏத்திய
         இணைஅடித் தலந்தானே.

         பொழிப்புரை :திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு எழுந் தருளியுள்ளவனும், இமையவர் ஏத்தும் பெருமையாளனும் ஆகிய பெருமான் திருவடிகள் பகைவரான அசுரர்களின் முப்புரங்களைத் தீஎழச் செய்து அழித்தன. அடியவர்களை அன்புடன் காப்பன. பக்தி செய்வார்க்குக் காட்சி தருவன. உன்மத்தம் முதலான நோய்களுக்கு மருந்தும் மந்திரமும் ஆவன.


பாடல் எண் : 4
கறைகொள் கண்டத்தர், காய்கதிர் நிறத்தினர்,
         அறத்திற முனிவர்க்குஅன்று
இறைவர் ஆலிடை நீழலில் இருந்துஉகந்து
         இனிதுஅருள் பெருமானார்,
மறைகள் ஓதுவர், வருபுனல் வலஞ்சுழி
         இடம்மகிழ்ந்து அருங்கானத்து
அறைக ழல்சிலம்பு ஆர்க்கநின்று ஆடிய
         அற்புதம் அறியோமே.

         பொழிப்புரை :நீலகண்டரும் , செம்மேனியரும் அன்று ஆலின் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் உபதேசித்தவரும் வேதங்களை அருளிய வரும் ஆகிய இறைவர் திருவலஞ்சுழியை இடமாகக் கொண்டு சிலம்பு ஆர்க்க நின்று ஆடும் அற்புதத்தை யாம் இன்னதென அறியேம் .


பாடல் எண் : 5
மண்ணர், நீரர், விண் காற்றினர், ஆற்றலாம்
         எரிஉரு, ஒருபாகம்
பெண்ணர், ஆண்எனத் தெரிவரும் வடிவினர்,
         பெருங்கடல் பவளம்போல்
வண்ணர், ஆகிலும் வலஞ்சுழி பிரிகிலார்,
         பரிபவர் மனம்புக்க
எண்ணர், ஆகிலும் எனைப்பல இயம்புவர்
         இணைஅடி தொழுவாரே.

         பொழிப்புரை :சிவபிரான் மண், விண் முதலான ஐம்பூதங்களின் வடிவினராயிருப்பவர். பெண்ணும், ஆணும் கலந்த திருவுருவினர். கடற் பவளம்போலும் திருமேனியர். வலஞ்சுழியில் நீங்காது உறைபவர். தம்மை வழிபடும் அடியவர்களின் மனத்தில் புகுந்து எண்ணத்தில் நிறைபவர். அவர்தம் இணையடி தொழுபவர் இவ்வாறானபல பெருமைகளை இயம்புவர்.


பாடல் எண் : 6
ஒருவ ரால்உவ மிப்பதை அரியதோர்
         மேனியர், மடமாதர்
இருவர் ஆதரிப் பார்,பல பூதமும்
         பேய்களும் அடையாளம்,
அருவ ராததுஓர் வெண்தலை கைப்பிடித்து
         அகந்தொறும் பலிக்குஎன்று
வருவ ரேல்அவர் வலஞ்சுழி அடிகளே,
         வரிவளை கவர்ந்தாரே.

         பொழிப்புரை :அகப்பொருட்டுறை ; தலைவி கூற்று . ஒருவராலும் உவமிக்க ஒண்ணாததொரு திருமேனியர் . உமை , கங்கை இருவர் பால் அன்பு செய்பவர் . பூதங்களும் பேய்களும் பாடி ஆட வெண்டலையைக் கையில் ஏந்தி வீடுகள் தோறும் பலி ஏற்க வருபவர் . வலஞ்சுழியில் வாழும் அவரே என் வரிவளைகளைக்கவர்ந்தவர் .


பாடல் எண் : 7
குன்றி யூர்குட மூக்குஇடம் வலம்புரம்
         குலவிய நெய்த்தானம்
என்றுஇவ் வூர்களில் ஓமென்றும் இயம்புவர்,
         இமையவர் பணிகேட்பார்,
அன்றி ஊர்தமக்கு உள்ளன அறிகிலோம்,
         வலஞ்சுழி அரனார்பால்
சென்று அவூர்தனில் தலைப்பட லாம்என்று
         சேயிழை தளர்வாமே.

         பொழிப்புரை :அகப்பொருட்டுறை ; தோழி கூற்று . குன்றியூர் குடமூக்கு முதலிய தலங்களைத் தமது ஊர் எனச்சொல்லி வருபவர் . இமையவர் அவர்தம் ஏவலைக் கேட்கின்றனர் . மேற்குறித்த ஊர்களைத் தவிர அவர் வாழும் ஊர் யாதென அறிகிலோம் . பல ஊர்களுக்கும் உரிய அவரைத் திருவலஞ்சுழி சென்றால் சேரலாம் என்று கூறித் தலைவி தளர்கின்றாள் .

பாடல் எண் : 8
குயிலின் நேர்மொழிக் கொடிஇடை வெருவுற,
         குலவரைப் பரப்பாய
கயிலை யைப்பிடித்து எடுத்தவன் கதிர்முடி
         தோள்இரு பதும்ஊன்றி,
மயிலின் நேர்அன சாயலோடு அமர்ந்தவன்
         வலஞ்சுழி எம்மானைப்
பயில வல்லவர் பரகதி காண்பவர்,
         அல்லவர் காணாரே.

         பொழிப்புரை :குயில் மொழியும் கொடியிடையும் மயிலின் சாயலும் உடைய உமை வெருவக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனின் இருபது தோள்களையும் ஊன்றி அடர்த்து அம்மையோடு உடனுறையும் வலஞ்சுழி எம்மானைப் பாடிப் பழக வல்லவர் பரகதி பெறுவர் . அல்லவர் காணார் .


பாடல் எண் : 9
அழல்அது ஓம்பிய அலர்மிசை அண்ணலும்
         அரவணைத் துயின்றானும்
கழலும் சென்னியும் காண்புஅரிது ஆயவர்,
         மாண்புஅமர் தடக்கையில்
மழலை வீணையர், மகிழ்திரு வலஞ்சுழி
         வலங்கொடு பாதத்தால்
சுழலும் மாந்தர்கள் தொல்வினை அதனொடு
         துன்பங்கள் களைவாரே.

         பொழிப்புரை :நான்முகனும் , திருமாலும் திருமுடியையும் , திரு வடிகளையும் காண இயலாதவாறு சோதிப்பிழம்பாய் நின்றவர் சிவபெருமான் . மழலைபோல இனிய இசைதரும் வீணையைக் கையில் ஏந்தியவர் . அவர் எழுந்தருளிய திருவலஞ்சுழியை அடை வார் தொல்வினை களும் துன்பங்களும் நீங்கப்பெறுவர் .


பாடல் எண் : 10
அறிவி லாதவன் சமணர்கள் சாக்கியர்
         தவம்புரிந்து அவம்செய்வார்,
நெறி அலாதன கூறுவர், மற்றுஅவை
         தேறன்மின், மாறாநீர்
மறி உலாந்திரைக் காவிரி வலஞ்சுழி
         மருவிய பெருமானைப்
பிறிவு இலாதவர் பெறுகதி பேசிடில்
         அளவுஅறுப்பு ஒண்ணாதே.

         பொழிப்புரை :அறிவில்லாத சமணரும் சாக்கியரும் தவம் புரிந்து கொண்டே அவம்பல செய்கின்றனர் . அவர் கூறும் நெறியலா உரைகளைக் கேளாதீர் . வலஞ்சுழி இறைவனைப் பிரியாத அடியவர் பெறும் கதிகளைப் பேசினால் வரும் பயன்கள் அளத்தற்கு அரியனவாகும் .


பாடல் எண் : 11
மாதொர் கூறனை, வலஞ்சுழி மருவிய
         மருந்தினை, வயற்காழி
நாதன், வேதியன், ஞானசம் பந்தன்,வாய்
         நவிற்றிய தமிழ்மாலை
ஆத ரித்து,இசை கற்று,வல் லார்சொலக்
         கேட்டுஉகந் தவர்தம்மை
வாதி யாவினை மறுமைக்கும் இம்மைக்கும்
         வருத்தம்வந்து அடையாவே.

         பொழிப்புரை :மாதொருகூறனை , திருவலஞ்சுழியில் விளங்கும் மருந்து போல்வானை , காழி ஞானசம்பந்தன் பாடி ஏத்திய இத் திருப்பதிகத்தை அன்போடு இசைகூட்டிப் பாடுவார் அதனைக் கேட்பார் ஆகிய அடியவர்களை வினைகள் சாரா . இம்மை , மறுமை எப்போதும் வருத்தம் வந்து அவர்களை அணுகா .

திருச்சிற்றம்பலம்


3. 106    திருவலஞ்சுழி               பண் - பழம்பஞ்சுரம்
                                    திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
பள்ளம் அதுஆய படர்சடைமேல்
         பயிலும் திரைக்கங்கை
வெள்ளம் அதுஆர விரும்பிநின்ற
         விகிர்தன், விடையேறும்
வள்ளல், வலஞ்சுழி வாணன்என்று
         மருவி நினைந்துஏத்தி
உள்ளம் உருக உணருமின்கள்,
         உறுநோய் அடையாவே.

         பொழிப்புரை : பள்ளம் போன்ற உட்குழிவுடைய படர்ந்த சடைமீது அலைகளையுடைய கங்கை நீர்ப் பெருக்கை விரும்பித் தாங்கி நின்ற வேறுபட்ட தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் இடபவாகனத்தில் ஏறும் வள்ளல் . திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . அப்பெருமானை நினைந்து போற்றி உள்ளம் உருக உணருமின்கள் . உறுநோய் உங்களை அணுகாது .


பாடல் எண் : 2
கார்அணி வெள்ளை மதியஞ்சூடிக்
         கமழ்புன் சடைதன்மேல்
தார்அணி கொன்றையும் தண்எருக்கும்
         தழைய நுழைவித்து
வார்அணி கொங்கைநல் லாள்தனோடும்
          வலஞ்சுழி மேவியவர்
ஊர்அணி பெய்பலி கொண்டுஉகந்த
         உவகை அறியோமே.

         பொழிப்புரை : சிவபெருமான் , கருமேகத்திற்கு அழகு செய்கின்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடி , இயற்கை மணம் கமழும் சிவந்த சடைமேல் அழகிய கொன்றைமாலையையும் , குளிர்ச்சி பொருந்திய எருக்கம் பூ மாலையையும் நிரம்ப அணிந்துள்ளவர் . கச்சணிந்த அழகிய கொங்கைகளை உடைய உமாதேவியோடு திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . ஊர்கள்தோறும் சென்று அவர் பிச்சையேற்று மகிழ்ந்த பெருமையைச் சிற்றறிவுடைய யாம் எங்ஙனம் அறிவோம் ? அறிய இயலவில்லை .


பாடல் எண் : 3
பொன்இய லுந்திரு மேனிதன்மேல்
         புரிநூல் பொலிவித்து
மின்இய லும்சடை தாழவேழ
         உரிபோர்த்து அரவுஆட
மன்னிய மாமறை யோர்கள்போற்றும்
         வலஞ்சுழி வாணர்தம்மேல்
உன்னிய சிந்தையின் நீங்ககில்லார்க்கு
         உயர்வுஆம், பிணிபோமே.

         பொழிப்புரை : சிவபெருமான் பொன்போன்ற அழகிய திருமேனி மீது முப்புரிநூல் அழகுற விளங்குமாறு அணிந்துள்ளவர் . மின்னலைப் போல ஒளிவீசும் சடைதாழ , யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . ஆடும் பாம்பை அணிந்தவர் . நிலைபெற்ற , பெருமையுடைய வேதங்களில் வல்ல அந்தணர்கள் போற்றும் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை இடையறாது சிந்தித்து வழிபடும் அடியவர்கட்கு எல்லா நலன்களும் உண்டாகும் . நோய் நீங்கும் .


பாடல் எண் : 4
விடைஒரு பால்ஒரு பால்விரும்பு
         மெல்லியல் புல்கியதோர்
சடைஒரு பாலொடு பாலிடங்கொள்
         தாழ்குழல் போற்றிசைப்ப
நடைஒரு பால்ஒரு பால்சிலம்பு
         நாளும் வலஞ்சுழிசேர்
அடைஒரு பால்அடை யாதசெய்யும்
         செய்கை அறியோமே.

         பொழிப்புரை : சிவபெருமானுக்கு இடபவாகனம் ஒரு பக்கம், விரும்பிச் சேர்ந்த மெல்லியல்புடைய கங்காதேவி ஒரு பக்கம் . விரிந்து பரந்த சடை ஒரு பக்கம் . தாழ்ந்த கூந்தலையுடைய உமாதேவி ஒரு பக்கம் . ஏறுபோல் பீடுநடை பயிலும் திருவடி ஒருபக்கம் . சிலம்பு அணிந்த திருவடி ஒருபக்கம் . திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை நாளும் வழிபடுக . முற்கூறியவை வேறெங்கும் சென்றடையாது சிவனையே அடையும் சிறப்பைச் சிற்றறிவுடைய நாம் அறியோம் .


பாடல் எண் : 5
கைஅம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறிஏந்தி
மெய்அம ரும்பொடிப் பூசிவீசும் குழைஆர் தருதோடும்
பைஅம ரும்அரவு ஆடஆடும் படர்சடை யார்க்குஇடமாம்
மைஅம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே.

         பொழிப்புரை : இறைவன் கையில் மழு , பாம்பு , வீணை , கலை மான்கன்று என்பனவற்றை ஏந்தியுள்ளவர் . திருமேனியில் திரு வெண்ணீற்றைப் பூசியுள்ளவர் . ஒளியை வீசிஅசைகின்ற குழையும் தோடும் காதில் அணிந்துள்ளவர் . படமாடும் பாம்பை அணிந்து நடனமாடுபவர் . படர்ந்த சடையையுடைய அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நாற்புறமும் வேலிபோன்று , இருளடர்ந்த சோலைகள் சூழ்ந்த திருவலஞ்சுழி என்னும் மாநகரமாகும் .

 
பாடல் எண் : 6
தண்டொடு சூலம் தழையஏந்தித் தையல் ஒருபாகம்
கண்டுஇடு பெய்பலி பேணிநாணார் கரியின் உரிதோலர்
வண்டுஇடு மொய்பொழில் சூழ்ந்தமாட வலஞ்சுழி மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத் தொடர்வோமே.

         பொழிப்புரை : சிவபெருமான் தண்டு , சூலம் இவற்றை ஒளிமிக ஏந்தியுள்ளவர் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர் . இடப்படுகின்ற பிச்சையை விரும்பி ஏற்பதில் வெட்கப்படாதவர் . யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . வண்டுகள் மொய்க்கின்ற சோலைகள் சூழ்ந்த மாடங்களையுடைய திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர் . அப்பெருமான் திருத்தொண்டர்களோடு கூடி நெருங்கி நின்று அருள்வதை உணர்ந்து , நாமும் அவருடைய தொடர்பைத் தொடர்வோமாக !


பாடல் எண் : 7
கல்இய லும்மலை அங்கைநீங்க வளைத்து, வளையாதார்
சொல்இய லும்மதில் மூன்றுஞ்செற்ற சுடரான், இடர்நீங்க
மல்இய லுந்திரள் தோள்எம்ஆதி வலஞ்சுழி மாநகரே
புல்கிய வேந்தனைப் புல்கிஏத்தி இருப்பவர் புண்ணியரே.

         பொழிப்புரை : சிவபெருமான் கல்லின் தன்மை பொருந்திய மேருமலையை அதன் கடினத்தன்மை நீங்க வளைத்து , செருக்குற்ற திரிபுர அசுரர்களின் , பழிச்சொல்லுக்கு இடமாகிய மும்மதில்களையும் அழித்தவர் . ஒளிவடிவானவர் . அடியவர்களின் இடர் நீங்க , மற்போர் பயின்ற திரண்ட தோளையுடைய எம் முதல்வராய்த் திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . மன்னுயிர்களை ஆளும் அரசரான அச்சிவபெருமானைச் சார்ந்து போற்றி வழிபடுபவர்கள் புண்ணியர்கள் ஆவர் .


பாடல் எண் : 8
வெஞ்சின வாள்அரக்கன் வரையை
         விறலால் எடுத்தான்தோள்
அஞ்சுமொர் ஆறுஇரு நான்கும்ஒன்றும்
         அடர்த்தார், அழகாய
நஞ்சுஇருள் கண்டத்து நாதர்என்று
         நணுகும் இடம்போலும்
மஞ்சுஉல வும்பொழில் வண்டுகெண்டும்
         வலஞ்சுழி மாநகரே.

         பொழிப்புரை : கடுஞ்சினமுடைய கொடிய அசுரனான இராவணன் தன் வலிமையால் கயிலை மலையைப் பெயர்க்க , அவன் இருபது தோள்களையும் அடர்த்தவர் சிவபெருமான் . அவர் நஞ்சுண்டு இருண்ட அழகிய கண்டத்தையுடைய தலைவர். அவர் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகளிலுள்ள மலர்களை வண்டுகள் காலால் கிண்டும் திரு வலஞ்சுழி என்னும் திருத்தலமாகும் .


பாடல் எண் : 9
ஏடுஇயல் நான்முகன் சீர்நெடுமால்
         எனநின் றவர்காணார்
கூடிய கூர்எரி யாய்நிமிர்ந்த
         குழகர் உலகுஏத்த
வாடிய வெண்தலை கையில்ஏந்தி
         வலஞ்சுழி மேயஎம்மான்
பாடிய நான்மறை யாளர்செய்யும்
         சரிதை பலபலவே.

         பொழிப்புரை : இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் காணமுடியாத வண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் உலகோர் போற்றி வணங்குமாறு , வற்றிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . எம் தலைவரான அவரை நான்கு வேதங்களையும் நன்கு கற்றுவல்லவர்கள் பாடிப் போற்றும் தன்மையில் அவர் புரியும் திருவளையாடல்கள் பலபல வாகும் .


பாடல் எண் : 10
குண்டரும் புத்தரும் கூறைஇன்றிக்
         குழுவார் உரைநீத்துத்
தொண்டரும் தன்தொழில் பேணநின்ற
         கழலான் அழல்ஆடி,
வண்டுஅம ரும்பொழில் மல்குபொன்னி
         வலஞ்சுழி வாணன்எம்மான்,
பண்டுஒரு வேள்வி முனிந்துசெற்ற
         பரிசே பகர்வோமே.

         பொழிப்புரை : தீவினைக்கஞ்சாத சமணர்கள் , ஆடையின்றிக் கூட்டமாயிருப்பவர்கள் . அவர்களும் புத்தர்களும் இறைவனை உணராது கூறும் மொழிகளைத் தள்ளிவிடுங்கள் . தொண்டர்கள் சரியைத் தொழிலில் விரும்பி வழிபட்டு நிற்க . கழலணிந்த திருவடிகளையுடைய சிவபெருமான் அழல் ஏந்தி ஆடுபவன் . வண்டுகள் விரும்புகின்ற சோலைகளையுடையதும் , காவிரியாறு வலஞ்சுழித்துப் பாய்கின்றதுமான திருவலஞ்சுழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் முன்னொரு காலத்தில் அவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் கோபித்து அழித்த தன்மையைப் பகர்வோமாக .( நீவிர் அவனை நினைந்து வழிபட்டு உய்மின் என்பது குறிப்பு ).


பாடல் எண் : 11
வாழிஎம் மான்எனக்கு எந்தைமேய
         வலஞ்சுழி மாநகர்மேல்,
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
         கருத்தின் தமிழ்மாலை,
ஆழிஇவ் வையகத்து ஏத்தவல்லார்
         அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒருபெரும் இன்பம்ஓர்க்கும்
         உருவும் உயர்வாமே.

         பொழிப்புரை : எம் தலைவனும் , தந்தையுமான , சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவலஞ்சுழி என்னும் மாநகரை வாழ்த்தி , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறந்த பயனைத்தரும் கருத்துக்கள் அடங்கிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஏத்த வல்லவர்களும் , அவர்களுடைய சுற்றத்தார்களும் கடல் சூழ்ந்த இவ்வையகத்திலேயே பேரின்பம் துய்ப்பர் . ஊழிக்காலத்திலும் நனி விளங்கும் உயர்ந்த புகழடைவர் .
                                             திருச்சிற்றம்பலம்

----------------------------------------------------------------------------------------------------------



திருநாவுக்கரசர் திருப்பதிக வரலாறு

பெரிய புராணப் பாடல் எண் : 215
நல்லூரில் நம்பர்அருள் பெற்றுப்போய், பழையாறை,
பல்ஊர்வெண் தலைக்கரத்தார் பயிலும்இடம் பலபணிந்து,
சொல்ஊர்வண் தமிழ்பாடி வலஞ்சுழியைத் தொழுதுஏத்தி,
அல்ஊர்வெண் பிறைஅணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.

         பொழிப்புரை : திருநல்லூர் இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும் வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.

         பழையாறையில் இது பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.

1.    திருவலஞ்சுழி
(அ) `அலையார்` (தி.6 ப.72) - திருத்தாண்டகம்.
(ஆ) `ஓதமார்` (தி.5 ப.66) – திருக்குறுந்தொகை.

2.    திருவலஞ்சுழியும் திருக்கொட்டையூரும் - `கருமணிபோல்` (தி.6 ப.73) - திருத்தாண்டகம்.

3.    திருக்குட மூக்கு - `பூவணத்தவன்` (தி.5 ப.22) - திருக்                   குறுந்தொகை.

4.    குடந்தைக் கீழ்க்கோட்டம் - `சொல்மலிந்த`(தி.6 ப.75) -                                   திருத்தாண்டகம்.

திருநாவுக்கரசர் திருப்பதிகங்கள்

5. 066    திருவலஞ்சுழி           திருக்குறுந்தொகை
                                       திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
ஓதம் ஆர்கட லின்விடம் உண்டவன்,
பூத நாயகன், பொற்கயி லைக்குஇறை,
மாதொர் பாகன், வலஞ்சுழி யீசனைப்
பாதம் ஏத்தப் பறையும்நம் பாவமே.

         பொழிப்புரை : அலைகளை உடைய பாற்கடலினின்றெழுந்த ஆலகாலவிடத்தை உண்டவனும் , பூதங்களுக்கு நாயகனும் , பொன் வடிவாகிய திருக்கயிலைக்கு இறைவனும் , உமையொரு பங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவனின் திருவடியை ஏத்தித்தொழுதால் நம் பாவங்கள் கெடும் .


பாடல் எண் : 2
கயிலை நாதன், கறுத்தவர் முப்புரம்
எயில்கள் தீஎழ வெல்வல வித்தகன்,
மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனைப்
பயில்கி லார்சிலர் பாவித் தொழும்பரே.

         பொழிப்புரை : திருக்கயிலைத் தலைவனும் , சினந்த பகைவருடைய முப்புரங்களும் எயில்களுடன் தீயெழுமாறு வெல்ல வல்ல திறம் உடையவனும் ஆகிய மயில்கள் ஆரவாரிக்கும் திருவலஞ்சுழி இறைவனைப் பயின்று தொழார் சில பாவிகளாகிய தொண்டர்கள் .

 
பாடல் எண் : 3
இளைய காலம்எம் மானை அடைகிலாத்
துளையி லாச்செவித் தொண்டர்காள், நும்உடல்
வளையும் காலம் வலஞ்சுழி ஈசனைக்
களைக ணாகக் கருதிநீர் உய்ம்மினே.

         பொழிப்புரை : இளமைப் பருவத்தேயே எம் பெருமானை அடைந்து வழிபடாத துளையற்ற செவிகளை உடைய தொண்டர்களே ! நும் உடல் வளைந்து முதுமைக்காலம் வந்தவிடத்து திருவலஞ்சுழி இறைவனையே உமக்குத் துன்பம் களையும் துணையாகக் கருதி உய்வீராக .


பாடல் எண் : 4
நறைகொள் பூம்புனல் கொண்டுஎழு மாணிக்காய்க்
குறைவி லாக்கொடும் கூற்றுஉதைத் திட்டவன்,
மறைகொள் நாவன், வலஞ்சுழி மேவிய
இறைவ னைஇனி என்றுகொல் காண்பதே.

         பொழிப்புரை : தேனைக் கொண்ட பூக்கள் நிரம்பிய நீர்கொண்டு திருமுழுக்காட்ட எழுந்த மார்க்கண்டேயனுக்காக வேறொன்றும் குறைவில்லாத கொடிய கூற்றுவனை உதைத்திட்டவனும் , வேதங்களை ஓதுதலைக்கொண்ட நாவினனும் ஆகிய திருவலஞ்சுழியிற் பொருந்திய இறைவனை இனிக்காண்பது என்றுகொல் ?

 
பாடல் எண் : 5
விண்ட வர்புரம் மூன்றும் எரிகொளத்
திண்தி றல்சிலை யால்எரி செய்தவன்,
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்குஅடி மைத்திறத்து ஆவனே.

         பொழிப்புரை : பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ள மிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய , வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன் .


பாடல் எண் : 6
படங்கொள் பாம்பொடு பால்மதி யம்சடை
அடங்க வாழவல் லான்,உம்பர் தம்பிரான்,
மடந்தை பாகன், வலஞ்சுழி யான்அடி
அடைந்த வர்க்குஅடி மைத்திறத்து ஆவனே.

         பொழிப்புரை : படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும் , தேவர் தலைவனும் , மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன் .


பாடல் எண் : 7
நாக்கொண் டுபர வும்அடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்,
மாக்கொள் சோலை வலஞ்சுழி ஈசன்தன்
ஏக்கொள புரம் மூன்றுஎரி ஆனவே.

         பொழிப்புரை : நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்த சடையையுடைய புண்ணியனாகிய நீண்ட சோலை சூழ்ந்த திருவலஞ்சுழி இறைவன் தன் ஓர் அம்பு கொள்ளவும் முப்புரங்களும் எரிக்கப்பட்டன .


பாடல் எண் : 8
தேடு வார்பிர மன்திரு மால்,அவர்
ஆடு பாதம் அவரும் அறிகிலார்
மாட வீதி வலஞ்சுழி ஈசனைத்
தேடு வான்உறு கின்றதுஎன் சிந்தையே.

         பொழிப்புரை : பிரமனும் , திருமாலும் தேடுவாராகி இறைவனின் ஆடும் திருவடியை அறியும் ஆற்றல் இலராகவும் , மாடங்கள் நெடிதுயர்ந்த வீதிகளை உடைய திருவலஞ்சுழி ஈசனை என் சிந்தை தேடுவதற்காக உறுகின்றது !


பாடல் எண் : 9
கண்ப னிக்கும்,கை கூப்பும்,கண் மூன்றுஉடை
நண்ப னுக்குஎனை நான்கொடுப் பேன்எனும்,
வண்பொன் னித்தென் வலஞ்சுழி மேவிய
பண்பன் இப்பொனைச் செய்த பரிசுஇதே.

         பொழிப்புரை : கண்ணீர் ததும்புகின்றாள் ; கைகூப்பித் தொழுகின்றாள் ; முக்கண்ணுடைய நண்பனுக்கு என்னை நான் கொடுப்பேன் என்று சொல்கின்றாள் ; வளவிய பொன்னித் தென்கரையில் உள்ள வலஞ்சுழி மேவிய பண்பனாகிய பெருமான் இந்தப் பொன்னனைய தலைவிக்குச் செய்த தன்மை இதுவாகும் .


பாடல் எண் : 10
இலங்கை வேந்தன் இருபது தோள்இற
நலங்கொள் பாதத்து ஒருவிரல் ஊன்றினான்,
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வார்அடி என்தலை மேலவே.

         பொழிப்புரை : இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய , மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன .
                                             திருச்சிற்றம்பலம்


6. 072    திருவலஞ்சுழி            திருத்தாண்டகம்
                                       திருச்சிற்றம்பலம்

பாடல் எண் : 1
அலைஆர் புனல்கங்கை நங்கை காண
         அம்பலத்தில் அருநட்டம் ஆடி, வேடம்
தொலையாத வென்றிஆர் நின்றி யூரும்
         நெடுங்களமும் மேவி, விடையை மேல்கொண்டு
இலைஆர் படைகையில் ஏந்தி எங்கும்
         இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த
மலைஆர் திரள்அருவிப் பொன்னி சூழ்ந்த
         வலஞ்சுழியே புக்குஇடமா மருவி னாரே.

         பொழிப்புரை :அலைபொருந்திய நீரையுடைய கங்கையை உமையம்மை காணுமாறு அம்பலத்தில் பிறர் ஆடுதற்கரிய திருக்கூத்தை ஆடி. அக்கூத்து வேடம் ஒரு காலும் விட்டு நீங்காத வெற்றியையுடைய சிவபெருமான் நின்றியூரையும், நெடுங்களத்தையும் விரும்பிப் பொருந்தி, இடபவாகனத்தை ஏறி இலைவடிவு கொண்ட முனைகளையுடைய படைக்கலங்களைக் கையிலேந்தி, எல்லா இடங்களிலும் நிறைந்து, இமையவரும், அருகிலிருந்து, உமையும் வணங்கித் துதிக்க மலையின் கண் நிறைந்து திரண்ட அருவியால் ஆகிய காவிரியாறு சூழ்ந்த வலஞ்சுழியைத் தாம் புகுந்துறையும் இடமாக விரும்பி மேற்கொண்டார் .
                                             திருச்சிற்றம்பலம்


6. 073திருவலஞ்சுழி - திருக்கொட்டையூர்க் கோடீச்சரம்
                           திருச்சிற்றம்பலம்
பாடல் எண் : 1
கருமணிபோல் கண்டத்து அழகன் கண்டாய்,
         கல்லால் நிழல்கீழ் இருந்தான் கண்டாய்,
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்,
         பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய்,
வருமணிநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாதேவன் கண்டாய், வரதன் கண்டாய்,
குருமணி போல் அழகுஅமரும் கொட்டையூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :நிறம் வாய்ந்த மணிபோன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும், தலைவனுமாகிய சிவ பெருமான் நீலமணி போற்றிகழும் கரிய கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும், பருத்த மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்றுபோல் காட்சியளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான்.


பாடல் எண் : 2
கலைக்கன்று தங்கு கரத்தான் கண்டாய்,
         கலைபயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்,
அலைக்கங்கை செஞ்சடைமேல் ஏற்றான் கண்டாய்,
         அண்ட கபாலத்துஅப் பாலான் கண்டாய்,
மலைப்பண்டம் கொண்டு வருநீர்ப் பொன்னி
         வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்,
குலைத்தெங்கம் சோலைசூழ் கொட்டையூரில்
         கோடீச்ச ரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான் மான்கன்றை ஏந்திய கரத்தனும், கலைகளைப் பயில்வோருக்கு ஞானக் கண்ணாய் விளங்குபவனும், அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும், அண்டச் சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும், மலைபடுபொருள்களை அடித்துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான்.


பாடல் எண் : 3
செந்தா மரைப்போது அணிந்தான் கண்டாய்,
         சிவன்கண்டாய், தேவர் பெருமான் கண்டாய்,
பந்துஆடு மெல்விரலாள் பாகன் கண்டாய்,
         பாலோடு நெய்தயிர்தேன் ஆடி கண்டாய்,
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
         வலஞ்சுழியின் மன்னு மணாளன் கண்டாய்,
கொந்துஆர் பொழில்புடைசூழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துறையுங் கோமான் தானே.

         பொழிப்புரை :பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழ விளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும் , சிவன் என்னும் நாமம் தனக்கே உரியவனும் , தேவர்க்குத் தலைவனும் , பந்தாடும் மெல்லியவிரல்களையுடைய பார்வதியைத் தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும் , பால் , தயிர் , நெய் , தேன் இவற்றில் ஆடப் பெறுபவனும் , மந்தார மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான் .


பாடல் எண் : 4
பொடிஆடு மேனிப் புனிதன் கண்டாய்,
         புள்பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்,
இடிஆர் கடுமுழக்கு ஏறுஊர்ந்தான் கண்டாய்,
         எண்திசைக்கும் விளக்குஆகி நின்றான் கண்டாய்,
மடல்ஆர் திரைபுரளும் காவிரி வாய்
         வலஞ்சுழியின் மேவிய மைந்தன் கண்டாய்.
கொடிஆடு நெடுமாடக் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடைய புனிதனும் , கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும் , இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும் , எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும் , பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான் .


பாடல் எண் : 5
அக்குஅரவம் அரைக்குஅசைத்த அம்மான் கண்டாய்,
         அருமறைகள் ஆறுஅங்கம் ஆனான் கண்டாய்,
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய்,
         சதாசிவன்காண், சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்,
மைக்கொள்மயில் தழைகொண்டு வருநீர்ப் பொன்னி
         வலஞ்சுழியான் கண்டாய், மழுவன் கண்டாய்,
கொக்குஅமரும் வயல்புடைசூழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , சங்கு மணியையும் , பாம்பையும் இடையில் கட்டியவனாய் , உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய் , தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய், சதாசிவனாய், சலந்தரன் உடலைப் பிளந்தவனாய், நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான் .


பாடல் எண் : 6
சண்டனைநல் அண்டர்தொழச் செய்தான் கண்டாய்,
         சதாசிவன் கண்டாய், சங் கரன்தான் கண்டாய்,
தொண்டர்பலர் தொழுதுஎத்தும் கழலான் கண்டாய்,
         சுடர்ஒளியாய்த் தொடர்வுஅரிதாய் நின்றான் கண்டாய்,
மண்டுபுனல் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய்,
கொண்டல்தவழ் கொடிமாடக் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை : கொடிகள் கட்டப்பட்டு, மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும், சதாசிவனும், சங்கரனும், தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும், பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும், மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான்.


பாடல் எண் : 7
அணவஅரியான் கண்டாய், அமலன் கண்டாய்,
         அவிநாசி கண்டாய், அண் டத்தான் கண்டாய்,
பணம்அணிமா நாகம் உடையான் கண்டாய்,
         பண்டரங்கன் கண்டாய், பகவன் கண்டாய்,
மணல்வருநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்,
குணமுடைநல் அடியார்வாழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டை யூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் , எட்டுதற்கரியவனாய் , குற்றமற்றவனாய் , அழிவில்லாதவனாய் , மேலுலகத்து உள்ளவனாய் , படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய் , பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய் , ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய் , மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய் , திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான் .


பாடல் எண் : 8
விரைகமழும் மலர்க்கொன்றைத் தாரான் கண்டாய்,
         வேதங்கள் தொழநின்ற நாதன் கண்டாய்,
அரைஅதனில் புள்ளிஅதள் உடையான் கண்டாய்,
         அழல்ஆடி கண்டாய், அழகன் கண்டாய்,
வருதிரைநீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         வஞ்சமனத் தவர்க்குஅரிய மைந்தன் கண்டாய்,
குரவுஅமரும் பொழில்புடைசூழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவ பெருமான் . மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும் , வேதங்களால் போற்றப்படும் தலைவனும் , புள்ளிகளை உடைய புலித் தோலை இடையில் உடையாக உடுத்தியவனும் , அழலாடுபவனும் , அழகனும் , தொடர்ந்து வரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகிய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும் , வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான் .


பாடல் எண் : 9
தளங்கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்,
         தசரதன்தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்,
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்,
         எட்டுஎட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்,
வளங்கிளர்நீர்ப் பொன்னிவலஞ் சுழியான் கண்டாய்,
         மாமுனிகள் தொழுதுஎழு பொற்கழலான் கண்டாய்,
குளங்குளிர்செங் குவளைகிளர் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :குளிர்ந்த குளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய், தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய், இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும் தன் பழைய சடையில் வைத்தவனாய், கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய், வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான்.


பாடல் எண் : 10
விண்டார் புரமூன்று எரித்தான் கண்டாய்,
         விலங்கலில்வல் அரக்கன்உடல் அடர்த்தான் கண்டாய்,
தண்தா மரையானும் மாலும் தேடத்
         தழல்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்,
வண்டுஆர்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்,
         மாதேவன் கண்டாய், மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரில்
         கோடீச் சரத்துஉறையும் கோமான் தானே.

         பொழிப்புரை :ஓதிய நான்மறை ஆறங்க , வழிஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், பகைவர் புரமூன்றையும் எரித்தவனும், வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும், குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும், வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள் மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும், தேவர்க்குத் தேவனும் ஆவான்.

                                             திருச்சிற்றம்பலம்



No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...