திருப் பழையாறை வடதளி
சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
கும்பகோணம் - ஆவூர் பாதையில் முழையூர் சென்று
அவ்வழியாக இத்தலத்தை அடையலாம்.
இவ்வூரின் தெற்கிலும்
வடக்கிலும் முடிகொண்டான் ஆறும்,
திருமலைராயன்
ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன்
கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது;
அதன்
வடகரையில் உள்ள ஊர் பழையாறை வடதளி எனப்பட்டது.
இறைவர் :
தர்மபுரீசுவரர் (இவர் வடதளி - மாடக்கோயில் இறைவர்),
சோமேசர் (இவர் பழையாறை இறைவர்)
இறைவியார்
: விமலநாயகி (இவர் வடதளி - மாடக்கோயில்இறைவியார்),
சோமகலாம்பிகை (இவர் பழையாறை இறைவியார்)
தல
மரம் : நெல்லி.
தீர்த்தம் : சோம தீர்த்தம்.
தேவாரப்
பாடல்கள் : அப்பர் - தலையெ லாம்பறிக்
குஞ்சமண்.
சோழமன்னர்களின்
தலைநகர்களுள் ஒன்றாக விளங்கியத் தலம்.
பல்லவ மன்னவர்க்கு அடங்கிச் சோழர்கள்
சிற்றரசாக இருந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த இடம் பழையாறை. பிற்காலச் சோழர்
ஆட்சியில் இவ்வூர் இரண்டாவது தலைநகரமாயிற்று. சோழர் அரண்மனை இருந்த இடம்
"சோழமாளிகை" என்னும் தனி ஊராக உள்ளது.
தேவார காலத்தில் 1. முழையூர், 2. பட்டீச்சரம், 3. சத்திமுற்றம், 4. சோழமாளிகை ஆகிய நான்கு ஊர்களும்
சோழர்களின் நாற்படைகளாக விளங்கியுள்ளன.
இவ்வூர் கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் - பழையாறை நகர்
என்றும், 8-ஆம் நூற்றாண்டில் -
நந்திபுரம் என்றும், 9, 10-ஆம் நூற்றாண்டில் -
முடிகொண்ட சோழபுரம் என்றும்,
12-ஆம்
நூற்றாண்டில் இராசபுரம் என்றும் வழங்கப்பெற்றுள்ளது.
பழையாறை நான்கு சிறு
பிரிவுகளாகும் - 1. வடதளி:-
(தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு, அப்பர் பெருமான்
உண்ணாவிரதமிருந்த இடம். தற்போது அதிக வீடுகளில்லை.) 2. மேற்றளி, 3. கீழ்த்தளி (பழையாறை), 4. தென்தளி என்பன
அந்நான்காகும்.
திருஞானசம்பந்தப் பெருமான்
"அப்பரே" என்று திருவாய் மொழிந்த திருநாவுக்கரசரின் தேவாரப்பாடல்
பெற்றத் திருத்தலம்.
சமணர்களால்
மறைக்கப்பட்டு அப்பரால் உண்ணா நோன்பிருந்து வெளிப்படுத்தப்பட்ட பெருமான்
வீற்றிருக்கும் (வடதளி) தலம்.
மங்கையர்க்கரசியார்
அவதரித்த திருத்தலம்.
மங்கையர்க்கரசி
நாயனாரின் திருவுருவச் சிலை இத்திருக்கோயில் உள்பிரகாரத்தில் தெற்கு நோக்கி
உள்ளது.
மங்கையர்க்கரசியாரின்
அவதாரத் தலம் : பழையாறை
(கீழப் பழையாறை).
வழிபாடு : குரு வழிபாடு.
முத்தித் தலம் : மதுரை
குருபூசை நாள் : சித்திரை - ரோகிணி.
மங்கையர்க்கரசியார் - இவர் மணிமுடிச்
சோழனின் மகள் என்பர். இவன் பழையாறையைத் தலைநகராகக் கொண்டவன். இவனே அப்பர்
பொருட்டுச் சிவலிங்கத்தை வெளிப்படுத்தியவனாக இருக்க வேண்டும். திருப்பனந்தாளில்
சாய்ந்த சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றவனும் இவனேயாகும் (திரு. K.M. வேங்கடராமையா அவர்களின் ஆய்வுக்
குறிப்பு - பெரிய புராணம் - பட்டுசாமி ஓதுவார் பதிப்பு.)
அமர்நீதி நாயனார்
அவதரித்த திருப்பதி.
அமர்நீதியாரின்
அவதாரத் தலம் : பழையாறை (கீழப் பழையாறை).
வழிபாடு : சங்கம வழிபாடு.
முத்தித் தலம் : நல்லூர்.
குருபூசை நாள் : ஆனி - பூரம்.
அமர்நீதி நாயனார்
வரலாறு
சோழ நாட்டிலே, பழையாறை என்னும் பழம்பதியிலே, வணிகர் குலத்தின் தோன்றியவர்
அமர்நீதியார். அளவில்லாச் செல்வம் அவருக்கு உண்டு. அச் செல்வத்தை, அடியவர்களுக்குத் திருவமுது செய்வித்தல், அவர்களுக்குக் கோவணம், கீள், கந்தை, உதை அளித்தல் முதலிய
திருத்தொண்டுகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.
திருநல்லூர் என்னும் திருத்தலத்திலே
நடைபெறும் திருவிழாவைக் காணச் செல்வது வழக்கம்.
அவ்விடத்தில் அடியவர்களுக்கு அமுது செய்விக்குப் பொருட்டு நாயனார் திருமடம் ஒன்றினைச் சமைத்தார். நாயனார்
சுற்றத்தவர்களுடன் அத் திருமடத்தில் தங்கித் தம் தொண்டுகளை ஆற்றி வரலானார்.
நாயனாருக்கு அருள் சுரக்க வேண்டி, சிவபெருமான் ஒரு வேதியராய் பிரமசாரி
வடிவம் தாங்கி, இரண்டு கோவணமும், திருநீற்றுப் பையும், தருப்பையும் கட்டப்பட்ட ஒரு தண்டினை
ஏந்தித் திருமடம் நோக்கி வந்தார்.
அமர்நீதி நாயனார் அவரை முறைப்படி வணங்கினார். வேதியர் நாயனாரை நோக்கி, "உமது திருத்தொண்டைக்
கேள்வியுற்று உம்மைக் காண வந்தோம்" என்றார்.
அது கேட்ட நாயனார்,
"இங்கே
அந்தணர்கள் அமுது செய்ய அந்தணர்களால் சமைக்கப் பெற்ற அமுதும் உண்டு" என்று
வணங்கினார். பிரமசாரியார், "காவிரியில் நீராடி
வருவோம். ஒருவேளை மழை வரினும் வரும். இந்த உலர்ந்த கோவணத்தை வைத்திருந்து
கொடும்" என்று, தண்டில் உள்ள ஒரு
கோவணத்தை அவிழ்த்து, "இதன் பெருமையை
உமக்குச் சொல்ல வேண்டுவது இல்லை. இதனை
இகழாமல் வைத்துக் கொடும்" என்று அதனை நாயனாரிடம் அளித்துச் சென்றார். நாயனார், அக் கோவணத்தை ஒரு தனி இடத்தில் சேமித்து
வைத்தார்.
திருவருளால் அக் கோவணம் மறைந்தது. வேதியர் நீராடி மழையில் நனைந்து வந்தார். திருமடத்தில் திருவமுதும் சித்தமாய்
இருந்தது. வேதியராக வந்த சிவபெருமான், 'தொண்டர் அன்பு என்னும் தூய நீர் ஆடுதல்
வேண்டி', நாயனாரைப் பார்த்து, "ஈரத்தை மாற்றல்
வேண்டும். தண்டில் உள்ள கோவணமும் ஈரமாய் இருக்கிறது. ஆதலால், உம்மிடம் அளித்த கோவணத்தைக் கொண்டு
வாரும்" என்றார். நாயனார் கோவணத்தைக்
கொண்டுவரச் சென்றார். கோவணத்தைக்
கண்டாரில்லை. பாவம். தேடுகிறார். திகைக்கிறார்.
ஓடுகிறார். அலைகிறார். "துன்பம் வந்ததே" என்று அலமருகிறார். நிற்கமாட்டாதவராய் வேறொரு கோவணத்தைக் கொண்டு
வந்து, "அடிகள் அளித்த கோவணம்
கெட்டு விட்டது. தேடித் தேடிப் பார்த்தேன்.
அதை எங்கும் கண்டேனில்லை. வேறொரு கோவணம்
கொண்டு வந்தேன். இது
கிழிக்கப்பட்டது அல்ல. புதிதாக நெய்யப்பட்டது. இதனை ஏற்று, என் பிழையைப் பொறுத்தருளும்" என்று
வேண்டினார். "இன்று கொடுத்த கோவணம்.
அது எப்படிக் கெடும். அதனைக் கவர்ந்து வேறு கோவணம் கொடுக்கவா துணிந்தீர். அடியார்களுக்கு
நல்ல கோவணம் கொடுப்பதாகச் சொன்னது,
என்னுடைய
கோவணத்தைக் கவருவதற்கே போலும். உமது வாணிபம் நன்றாய் உள்ளது" என்று கூறினார்.
நாயனார் நடுநடுங்கி, ஐயரைப் பணிந்து, "இப் பிழையைத்
தெரிந்து செய்தேனில்லை. இக் கோவணம் அன்றி நல்ல பட்டாடைகளையும், மணிகளையும் கொடுக்கிறேன். ஏற்று அருளல் வேண்டும்" என்று
வேண்டினார். அடிகள் சினம் தணிந்து, "எமக்கு ஒன்றும்
வேண்டாம். எமது கோவணத்துக்கு ஒத்த எடை உள்ள கோவணம் ஒன்று கொடுத்தால் போதும்"
என்றார். நாயனார், "எதன் எடைக்கு ஒத்து
இருத்தல் வேண்டும்" என்றார். வேதியர், "இக் கோவண எடைக்கு" என்று தண்டில்
கட்டி உள்ள கோவணத்தை அவிழ்த்துக் காட்டினார்.
நாயனார் விரைந்து ஒரு துலையை
நாட்டினார். வேதியர் தமது கோவணத்தை ஒரு
தட்டில் இட்டார். நாயனாரும் தாம் கொண்டு வந்த கோவணத்தை வேறு ஒரு தட்டில் இட்டார். நிறை ஒத்து வரவில்லை. நாயனார், வேதியரின் ஆணை பெற்று, தம்மிடத்திலே உள்ள கோவணங்களையும், பட்டாடைகளையும் ஒவ்வொன்றாகவும், பொதிப் பொதியாகவும் இட்டுப்
பார்த்தார். தட்டு நேர் நிற்கவில்லை. தம்மிடமுள்ள பொன், வெள்ளி முதலான பிற பொருள்களையெல்லாம்
கொண்டு வந்து தட்டில் சேர்த்தார். தட்டு
நேர் நிற்கவில்லை. அதைக் கண்ட நாயனார், "அடிகளே, என்னிடத்து உள்ள எல்லாவற்றையும் கொண்டு
வந்து வைத்து விட்டேன். இனி, நானும், என் மனைவியும், புதல்வனும் தான் எஞ்சி உள்ளோம். ருவுள்ளம் இருந்தால் நாங்களும் தட்டிலே
ஏறுகிறோம்" என்றார். வேதியரும் இசைந்தார்.
அமர்நீதியார் பெரிதும் மகிழ்ந்து, மனைவியுடனும், மைந்தனுடனும் துலையை வலம் வந்து, "இதுகாறும் நாங்கள்
நிகழ்த்தி வந்த திருத்தொண்டில் தவறு ஏதும் இல்லையென்றால், நாங்கள் ஏறினதும் இந்தத் துலை நேர்
நிற்பதாக" என்று சொல்லி, திருவைந்தெழுத்து
ஓதித் தட்டில் ஏறினார். தட்டுகள் நேர்
நின்றன. அதைக் கண்ட மண்ணவர் வாழ்த்தினர்.
விண்ணவர் மலர் மாரி சொரிந்தனர்.
வேதியராக வந்த சிவபெருமான் மழவிடைமேல்
அம்மையுடன் தோன்றினார். தட்டிலே நின்ற
நாயனாரும், அவர்தம் மனைவியாரும், புதல்வனும் ஆண்டவன் திருக்கோலத்தைக்
கண்டு போற்றினர். சிவபெருமான் மூவருக்கும்
தம்மைத் தொழுதுகொண்டு இருக்கும் வான்பதம் அருளினார். திருவருளால் துலையே விமானமாகி மேலே
சென்றது. நாயனார், தம் மனைவியுடனும், மைந்தருடனும் சிவலோகம் சேர்ந்தார்.
இங்குள்ள (சோம
தீர்த்தம்) தீர்த்தக் குளத்துநீர் சித்தபிரமை முதலியவைகளைப் போக்கவல்லது என்று
நம்பப்படுகிறது.
இராசராச சோழனால்
திருப்பணி செய்யப்பட்ட இக்கோயில் அவனுடைய இயற்பெயரால் அருண்மொழித் தேவேச்சரம்
என்றழைக்கப்படுகிறது.
குந்தவைப் பிராட்டி
இவ்வூரில்தான் இராசேந்திரனை வளர்த்தாள்.
இத்தலத்தைச்
சூழ்ந்துள்ள 1. நல்லூர், 2. வலஞ்சுழி, 3. சத்திமுற்றம், 4. பட்டீச்சரம், 5. ஆவூர் என்னும் ஐந்து தலங்களையும் ஒரே
நாளில் தக்கிணாயன புண்ணிய நாளில் - வழிபடுவது சிறப்புடையதென்று மக்கள் வழக்கில்
சொல்லப்படுகிறது.
வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக்
கலிவெண்பாவில், "துட்ட மயல்
தீங்கு விழையார் தமை வான் சென்று அமரச் செய்விக்க ஓங்கு பழையாறையில் என் உள்
உவப்பே" என்று போற்றி உள்ளார்.
திருஞானசம்பந்தர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 389
சண்பைவரும்
பிள்ளையார் சடாமகுடர் வலஞ்சுழியை
எண்பெருகத்
தொழுதுஏத்தி, பழையாறை எய்துதற்கு
நண்பு
உடைய அடியார்கள் உடன்போத,
நடந்துஅருளி,
விண்பொருநீள்
மதிள்ஆறை மேற்றளிசென்று எய்தினார்.
பொழிப்புரை : காழிப்பதியில்
தோன்றியருளிய பிள்ளையார், சடையை முடியணியாகக்
கொண்ட சிவபெருமானின் திருவலஞ்சுழி என்ற அப்பதியினை எண்ணம் பெருகப் போற்றி, பழையாறை என்ற பதியைச் சார்வதற்காக, நட்புக் கொண்டிருக்கும் அடியவர்களுடன்
போவதை விரும்பி, நடந்து சென்று, வான் அளாவிய நீண்டுயர்ந்த மதிலையுடைய
திருப்பழையாறைமேற்றளியை அடைந்தார்.
பெ.
பு. பாடல் எண் : 390
திருஆறை
மேல்தளியில் திகழ்ந்து இருந்த செந்தீயின்
உருவாளன்
அடிவணங்கி, உருகியஅன் பொடுபோற்றி,
மருஆரும்
குழல்மலையாள் வழிபாடு செய்யஅருள்
தருவார்தம்
திருச்சத்தி முற்றத்தின் புறம் சார்ந்தார்.
பொழிப்புரை : பழையாறைமேற்றளியில்
வீற்றிருந்தருளும் செந்தீ நிறத்தவரான இறைவரின் திருவடிகளை உருகிய அன்புடனே
வணங்கிப் போற்றி, மணம் பொருந்திய
கூந்தலையுடைய மலையரசன் மகள் வழிபட அருள் செய்த இறைவரின் `திருச்சத்தி முற்றம்' என்ற பதியின் புறத்தே அடைந்தருளினர்
பிள்ளையார்.
திருஞானசம்பந்தப்
பெருமான் பழையாறை மேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.
---------------------------------------------------------------------------------------------------------
திருநாவுக்கரசர்
திருப்பதிக வரலாறு
பெரிய
புராணப் பாடல் எண் : 192
எறிபுனல்பொன்
மணிசிதறும் திரைநீர்ப் பொன்னி
இடைமருதைச்
சென்றுஎய்தி, அன்பி னோடு
மறிவிரவு
கரத்தாரை வணங்கி, வைகி,
வண்தமிழ்ப்பா மாலைபல
மகிழச் சாத்தி,
பொறிஅரவம்
புனைந்தாரைத் திருநாகேச் சுரத்துப்
போற்றி,அருந் தமிழ்மாலை
புனைந்து போந்து,
செறிவிரைநன்
மலர்ச்சோலைப் பழையாறு எய்தி,
திருச்சத்தி
முற்றத்தைச் சென்று சேர்ந்தார்.
பொழிப்புரை : பின், அலை எறியும் நீரால் பொன்னையும்
மணிகளையும் கொழிக்கும் அலைகளையுடைய காவிரிக் கரையில் உள்ள திருவிடைமருதூரைச்
சென்றடைந்து, மான் கன்றைக் கையில்
உடைய இறைவரை அன்பு மிக வணங்கி, அங்கே தங்கி, இசையாலும், பொருண்மையாலும் வளமை மிக்க தமிழ்ப்பதிக
மாலை பலவற்றையும் மகிழ்ந்து பாடிப் போற்றி, புள்ளிகளையுடைய பாம்புகளை அணிந்த
இறைவரைத் திருநாகேச்சுரத்தில் வணங்கி, அரிய
தமிழ் மாலை பாடிச் சென்று, மணம் நிரம்பிய நல்ல
மலர்களையுடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த பழையாறை எனும் திருப்பதியை அடைந்து, பின் திருச்சத்திமுற்றத்தை அடைந்தார்.
இப்பாடலில்
திருச்சத்திமுற்றத்தை அடைதற்கு முன் குறிக்கப் பெற்ற திருப்பதிகள் மூன்றாம்.
இவற்றில் அருளிய திருப்பதிகங்கள்:
1. திருவிடைமருதூர்:
(அ). `காடுடை` (தி.4 ப.35)- திருநேரிசை.
(ஆ). `பாசம் ஒன்று இலராய்` (தி.5 ப.14) - திருக்குறுந்தொகை.
(இ). `பறையின் ஓசையும்` (தி.5 ப.15) - திருக்குறுந்தொகை.
(ஈ). `சூலப்படை உடையார்` (தி.6 ப.16)- திருத்தாண்டகம்.
(உ). `ஆறுசடைக்கணிவர்` (தி.6 ப.17) – திருத்தாண்டகம்.
2. திருநாகேச்சரம்:
(அ). `கச்சைசேர்` (தி.4 ப.66)- திருநேரிசை.
(ஆ). `நல்லர்`(தி.5 ப.52) - திருக்குறுந்தொகை.
(இ). `தாயவனை`(தி.6 ப.66) - திருத்தாண்டகம்.
3. திருப்பழையாறை: இத்திருப்பதிக்கு
நாவரசர் இருமுறை எழுந்தருளுகின்றார்.
(தி.12 திருநாவுக்கரசர் புராணம், 215) இதுபொழுது பதிகம்
அருளப் பெறவில்லை.
பெ.
பு. பாடல் எண் : 215
நல்லூரில்
நம்பர்அருள் பெற்றுப்போய்,
பழையாறை
பல் ஊர் வெண்
தலைக்கரத்தார் பயிலும்இடம் பலபணிந்து,
சொல் ஊர் வண்
தமிழ்பாடி, வலஞ்சுழியைத்
தொழுது ஏத்தி,
அல் ஊர் வெண்
பிறை அணிந்தார் திருக்குடமூக்கு அணைந்து இறைஞ்சி.
பொழிப்புரை : திருநல்லூர்
இறைவரிடம் அருள்விடை பெற்றுக் கொண்டு, பழையாறை
முதலாக உள்ள பல ஊர்களுக்கும் சென்று, வெண்மையான
தலையோட்டைக் கையில் கொண்ட இறைவர் எழுந்தருளியிருக்கும் பல கோயில்களையும் வணங்கி, நல்ல சொற்கள் நிரம்பிய பாக்களைப் பாடி, அதன்பின் திருவலஞ்சுழியை அடைந்து தொழுது
ஏத்திச் சென்று, மாலையில் தோன்றும்
வெண்பிறையைச் சூடிய இறைவர் எழுந்தருளிய திருக்குடமூக்கினை அணைந்து பணிந்து.
பழையாறையில் இது
பொழுது பாடிய பதிகம் கிடைத்திலது.
1. திருவலஞ்சுழி (அ) `அலையார்` (தி.6 ப.72) - திருத்தாண்டகம்.
(ஆ) `ஓதமார்` (தி.5 ப.66) – திருக்குறுந்தொகை.
2. திருவலஞ்சுழியும்
திருக்கொட்டையூரும் - `கருமணிபோல்` (தி.6 ப.73) - திருத்தாண்டகம்.
3. திருக்குட மூக்கு - `பூவணத்தவன்` (தி.5 ப.22) - திருக் குறுந்தொகை.
4. குடந்தைக்
கீழ்க்கோட்டம்
- `சொல்மலிந்த`(தி.6 ப.75) - திருத்தாண்டகம்.
-----------------------------------------------------
அடுத்த தல யாத்திரையில், திருநாவுக்கரசு நாயனார் திருவீழிமிழலையைக்
கண்டு தொழுவதற்குத் திருமறைக்காட்டில் இருந்து புறப்பட்டுத் திருநாகைக் காரோணம்
முதலிய திருத்தலங்களை வணங்கி, திருவீழிமிழலை வந்து அடைந்தார். அங்கிருந்து திருஆவடுதுறைக்குச் சென்று, ஆளுடைய
பிள்ளையாருக்கு,
இறைவன்ஆயிரம்
பொன் கொடுத்ததைக் "கழுமல ஊரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும்
ஆவடுதுறையனாரே" என்று சிறப்பித்து, திருப் பழையாறை என்னும் திருத்தலத்திற்கு
எழுந்தருளினார்.
அத் திருத்தலத்தில் இருந்த சிவாலயத்தில்
இருந்த சிவலிங்கம் சமணர்களால் மூடப்பட்டு இருந்தது. அப்பர் பெருமான் ஆண்டவனைத்
தொழுதபொழுது,
அது
சமணர்கள் விமானம் எனக் கேட்டு மனம் நொந்து, ஓரிடத்தில் ஒதுங்கி, சிவபெருமான்
திருவடியைச் சிந்தித்து, "ஐயனே! சமணர்கள் வஞ்சம் ஒழிதல் வேண்டும்.
அவர்கள் திறம் அழிதல் வேண்டும்.
திருவுருவைக் கண்டு தொழாது யான் போகேன்" என்று கொண்டு அமுது செய்யாமல்
இருந்தார். அடியவருக்கு எளியவரான
அம்பலவாணப் பெருமான், மன்னன் கனவில் தோன்றி, நிலைமையை உணர்த்தி, தாம் எழுந்தருளி
உள்ள இடத்தின் அடையாளத்தைக் குறிப்பிட்டார். மன்னன் எழுந்து அமைச்சர்களையும் உடன் அழைத்துக்
கொண்டு சென்று,
திருநாவுக்கரசர்
திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, சமணர்கள் தூர் அறுத்தான். யானையினால் ஆயிரம் சமணர்கள்
மிதியுண்டார்கள். மன்னன் சிவலிங்கப் பெருமான் மறைப்பை நீக்கி, விமானம் அமைத்துத்
திருப்பணிகள் செய்தான். திருநாவுக்கரசர் கண்ணாரவும், மனதாரவும் இறைவனை வணங்கி, "தலை எலாம்"
என்னும் திருப்பதிகம் பாடினார். பின்னர் சுவாமிகள்
திருப்பழையாறையில் சிலநாள் தங்கித் திருத்தொண்டு செய்திருந்து, பின்னர் அங்கிருந்து
புறப்பட்டு திருவானைக்கா முதலான திருத்தலங்களை வழிபட்டு, மேல் சென்றார்.
இந்த
அருள் நிகழ்வை,
பெரிய
புராணத்தின் வாயிலாக, ஓதி வழிபட்டு மகிழ்வோம்....
பெ.
பு. பாடல் எண் : 294
செய்ய
சடையார் பழையாறை
எய்த அதனில்
செல்பொழுதின்,
மையல்
அமணர் மறைத்தவட
தளியின் மன்னும்
சிவனாரைக்
கைகள்
கூப்பித் தொழுதுஅருளக்
கண்ட ஆற்றால், அமணர்கள்தம்
பொய்கொள்
விமானம் எனக்கேட்டுப்
பொறாத உள்ளம்
மிகப்புழுங்கி.
பொழிப்புரை : அங்ஙனம் செல்பவரான
நாவரசர், சிவந்த சடையையுடைய
சிவபெருமான் எழுந்தருளிய பழையாறை என்னும் பதியைச் சேரச் செல்லும் பொழுது, மயக்கமுடைய சமணர்கள் மறைத்த பழையாறை
வடதளிக் கோயிலில் வீற்றிருந்தருளும் சிவபெருமானை, நாவரசர் கைகூப்பித் தொழுத அளவில், திருவருட்குறிப்பால் திருவுள்ளத்துள்
உணர்ந்த உணர்வுமீதூர, அது சமணர்கள்
வஞ்சனையால் செய்த விமானம் என்று அங்குள்ளவரிடம் கேட்டுப், பொறுக்க இயலாத திருவுள்ளத்தில்
புழுக்கம் அடைந்து.
பெ.
பு. பாடல் எண் : 295
அந்த
விமானம் தனக்குஅருகா,
ஆங்குஓர் இடத்தின்
பாங்குஎய்தி,
கந்தம்
மலரும் கடிக்கொன்றை
முடியார் செய்ய
கழல்உன்னி,
"மந்த அமணர்
வஞ்சனையால்
மறைத்த வஞ்சம்
ஒழித்துஅருளிப்
பந்தங்
கொண்ட குண்டர்திறம்
பாற்றும்" என்று
பணிந்துஇருப்பார்.
பொழிப்புரை : அங்ஙனம் அறிந்த
அளவில், பொய்மை கொண்ட
விமானத்தின் அண்மையில், ஆங்கு ஓரிடத்தின்
அருகாகச் சேர்ந்து, நறுமணமுடைய இதழ்கள்
விரிந்த கொன்றை மாலையைச் சூடிய முடியையுடைய சிவபெருமானின் திருவடிவை நினைந்து, `அறிவற்ற சமணர்கள் வஞ்சனையால் மறைத்த
வஞ்சகத்தை ஒழித்து, உலகியல்
வழிக்கட்டுண்டு கிடக்கும் அச்சமணர்களின் திறத்தை அழிப்பீராக!` என வேண்டி வணங்கியிருப்பவர்,
பெ.
பு. பாடல் எண் : 296
"வண்ணம் கண்டு நான் உம்மை
வணங்கி அன்றிப்
போகேன்" என்று
எண்ணம்
முடிக்கும் வாகீசர்
இருந்தார் அமுது
செய்யாதே,
அண்ணலாரும்
அது உணர்ந்து, அங்கு
அரசு தம்மைப்
பணிவதற்கு,
திண்ணம்
ஆக மன்னனுக்குக்
கனவில் அருளிச்
செய்கின்றார்.
பொழிப்புரை : `நான் உம் திருமேனியினைக் கண்ணால்
கண்டால் அன்றி அப்பால் செல்ல மாட்டேன்` என்று
முறையிட்டு, உறுதி கொண்டு, தம் நினைவை எண்ணியபடி முடிக்கும்
நாவரசர் உணவு கொள்ளாமல் இருப்ப,
இறைவரும்
அதனைத் தம் திருவுள்ளத்துள் கொண்டு,
அத்திருப்பதியில்
நாவரசர் வணங்குவதற்காக, மன்னனுக்குக் கனவில்
தோன்றி உறுதிபெற அருள் செய்கின்றவராய்,
பெ.
பு. பாடல் எண் : 297
"அறிவில் அமணர் நமை
மறைப்ப
இருந்தோம்"
என்றுஅங்கு அடையாளக்
குறிகள்
அறியச் செய்துஅருளி,
"நம்மை அரசு
கும்பிடுவான்
நெறியில்
அமணர் தமைஅழித்து
நீக்கிப்
போக்கு"என்று அருள்புரியச்
செறிவில்
அறிவுஉற்று எழுந்துஅவனும்
செங்கை தலைமேல் குவித்து
இறைஞ்சி.
பொழிப்புரை : `அறிவற்ற சமணர்கள் நம் கோயிலை மறைக்க
நாம் அதனுள்ளே இருந்தோம்` என்றருளி, அவ்விடத்தைக் காணக் கூடிய அடையாளக்
குறிகளையும் அருள் செய்து, `நம்மை நாவரசு
வணங்குவதற்காக, நன்னெறியில் ஒழுகாத
சமணர்களை அழித்து, அங்கிருந்து அகலச்
செய்வாயாக` என்று அருள்
செய்தார். துயில் நீங்கி எழுந்த அரசனும் அதனை உளங்கொண்ட அளவில் தன் செங்கையைத்
தலைமீது கூப்பி வணங்கிப்பின்.
பெ.
பு. பாடல் எண் : 298
கண்ட
வியப்பு மந்திரிகட்கு
இயம்பிக் கூடக்
கடிதுஎய்தி,
அண்டர்
பெருமான் அருள்செய்த
அடையா ளத்தின்
வழிகண்டு,
குண்டர்
செய்த வஞ்சனையைக்
குறித்து வேந்தன்
குலவுபெரும்
தொண்டர்
தம்மை அடிவணங்கித்
தொக்க அமணர்
தூர்அறுத்தான்.
பொழிப்புரை : தான் கனவில் கண்ட
வியப்பான காட்சியை அமைச்சர்களுக்குச் சொல்லி, அவர்களுடன் தானும் விரைவாய்
அவ்விடத்திற்குச் சென்றவன், கனவில் பெருமான்
அருளிய அடையாளங்களின் வழியே சென்று,
அங்குச்
சிவவடிவத்தைப் பார்த்தான்; சமணராகிய கீழானவர்கள்
செய்த வஞ்சனையை வெளிப்படச் செய்த நாவரசரின் திருவடிகளை வணங்கி, அங்கிருந்த சமணர்களான தூருகளை
அழித்தான்.
பெய
பு. பாடல் எண் : 299
ஆனை
இனத்தில் துகைப்புண்ட
அமண் ஆயிரமும்
மாய்ந்ததன்பின்
மேன்மை
அரசன் ஈசர்க்கு
விமானம் ஆக்கி
விளக்கியபின்
ஆன
வழிபாட்டு அர்ச்சனைக்கு
நிபந்தம் எல்லாம்
அமைத்துஇறைஞ்ச
ஞான
அரசும் புக்குஇறைஞ்சி
நாதர் முன்பு
போற்றுவார்.
பொழிப்புரை : யானையினால்
அழிக்கப்பட்ட சிறிய புதர்போல் மன்னனின் பணியாளர்களினால் அழிக்கப்பட்ட அச்சமணர்
பள்ளியில் தங்கிய ஆயிரம் சமணர்களும் அழிந்த பின்பு, மன்னன் சிவபெருமானுக்கு உரிய
விமானத்தையும் ஆக்கி உரியவாறு விளங்கச் செய்து, சிவாகமத்தில் விதித்த முறைப்படி
வழிபடுதற்கான பூசனைக்கு வேண்டிய பொருள்களையெல்லாம் அறக்கட்டளைகளாக வகுத்து
அமைத்துப் பின் நாவரசரை வணங்கினான். ஞானவள்ளலான நாவரசரும் அக்கோயிலுக்குள் சென்று
இறைவரின் திருமுன்பு நின்று போற்றுவாராய்,
பெ.
பு. பாடல் எண் : 300
"தலையின் மயிரைப்
பறித்துஉண்ணும்
சாதி அமணர்
மறைத்தாலும்
நிலைஇ
லாதார் நிலைமையினால்
மறைக்க ஒண்ணு
மோ"என்னும்
விலையில்
வாய்மைக் குறுந்தொகைகள்
விளம்பிப்
புறம்போந்து அங்குஅமர்ந்தே
இலைகொள்
சூலப் படையார்சேர்
இடங்கள் பிறவும்
தொழஅணைவார்.
பொழிப்புரை : `தம் தலை மயிரைப் பறித்தலும், நின்று உண்ணும் இயல்பும் கொண்ட
கூட்டத்தவரான சமணர்கள் மறைத்தாலும்,
மெய்ம்மையுணராத
அவர்கள் தம் சிற்றறிவினால் மறைத்து வைத்திட முடியுமோ!` என்னும் கருத்துக் கொண்ட விலை
மதிப்பதற்கரிய வாய்மையுடைய திருக்குறுந்தொகையைப் பாடியருளினார். பின்பு அங்குத்
தங்கியிருந்த நாவரசரும் மூவிலை வடிவான சூலப்படை ஏந்திய சிவபெருமான்
எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் வணங்கச் செல்லலானார்.
குறிப்புரை : இது பொழுது பாடிய
திருப்பதிகம்: திருக்குறுந்தொகை.
தலையெ
லாம்பறிக் குஞ்சமண் கையருள்
நிலையி
னான்மறைத் தால்மறைக் கொண்ணுமே
அலையி
னார்பொழி லாறை வடதளி
நிலையி
னானடி யேநினைந் துய்ம்மினே. -தி5 ப.58 பா.1
என
வரும் இப்பதிக முதற் பாடலை இப்பாடல் முகந்து நிற்கின்றது.
5. 058 திருப்பழையாறை வடதளி
திருச்சிற்றம்பலம்
பாடல்
எண் : 1
தலைஎ
லாம்பறிக் கும்சமண் கையருள்
நிலையி
னால்மறைத் தால்,மறைக்க ஒண்ணுமே,
அலையின்
ஆர்பொழில் ஆறை வடதளி
நிலையி
னான்அடி யேநினைந்து உய்ம்மினே.
பொழிப்புரை : தலைமயிரெல்லாவற்றையும்
பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ
? அலைநீரின்
மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே
நினைந்து உய்வீர்களாக .
பாடல்
எண் : 2
மூக்கி
னால்முரன்று ஓதியக் குண்டிகை
தூக்கி
னார்குலம் தூர் அறுத்தே தனக்கு
ஆக்கி
னான் அணி ஆறை வடதளி
நோக்கி
னார்க்கு இல்லை யால்அரு நோய்களே.
பொழிப்புரை : மூக்கினால்
ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி ,
அக்குண்டிகை
தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை
ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை .
பாடல்
எண் : 3
குண்ட
ரைக்குணம் இல்லரைக் கூறையில்
மிண்ட
ரைத்துரந்த விமலன் தனை
அண்ட
ரைப்பழை யாறை வடதளிக்
கண்ட
ரைத்தொழுது உய்ந்தன கைகளே.
பொழிப்புரை : குண்டர்களும் , நற்குணமில்லாதவர்களும் , உடை யணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத்
துரத்திய விமலனும் , தேவதேவனும் ஆகிய
பழையாறைவடதளியில் உள்ள திருநீலகண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன .
பாடல்
எண் : 4
முடைய
ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக்
கடைய
ரைக்கடிந் தார், கனல் வெண்மழுப்
படைய
ரை, பழை யாறை வடதளி
உடைய
ரைக்குளிர்ந்து உள்கும்என் உள்ளமே.
பொழிப்புரை : முடைநாற்றம்
உடையோரும் , தலையை மழித்த
மொட்டையர்களும் , கீழானவர்களுமாகிய
சமணர்களை நீக்கியவரும் , கனலையும் வெண்மழுப்
படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து
நினைகின்றது .
பாடல்
எண் : 5
ஒள்அ
ரிக்கணார் முன்அமண் நின்றுணும்
கள்ள
ரைக் கடிந்த கருப்பு ஊறலை.
அள்ளல்
அம்புனல் ஆறை வடதளி
வள்ள
லைப்புக ழத்துயர் வாடுமே.
பொழிப்புரை : ஒளியும் அரியும் உடைய
கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக்
கடிந்தவரும் , கரும்பின் ஊறும் சாறு
பாய்ந்தோடிச் சேறாகிய நீர்வளம் உடைய பழையாறைவடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய
பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும் .
பாடல்
எண் : 6
நீதி
யைக்கெட நின்றுஅம ணேஉணும்
சாதி
யைக்கெடு மாசெய்த சங்கரன்
ஆதி
யைப்பழை யாறை வடதளிச்
சோதி
யைத்தொழு வார்துயர் தீருமே.
பொழிப்புரை : முறைமை கெட நின்று
ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும் , ஆதியும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள
சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும் .
பாடல்
எண் : 7
திரள்
திரைக் கவளம் திணிக் குஞ்சமண்
பிரட்ட
ரைப் பிரித்த பெருமான்தனை
அருள்
திறத்து அணி ஆறை வடதளித்
தெருட்ட
ரைத்தொழத் தீவினை தீருமே.
பொழிப்புரை : திரட்டிய இரையாகிய
சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த
பெருமானை . அருள் திறத்தை உடைய அழகுபொருந்திய பழையாறை வடதளியில் தெளிவிக்கும்
பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும் .
பாடல்
எண் : 8
ஓதி
னத்து எழுத்து அஞ்சு உணராச்சமண்
வேதினைப்
படுத்தானை, வெங் கூற்றுஉதை
பாதனை, பழை யாறை வடதளி
நாத
னைத்தொழ நம்வினை நாசமே.
பொழிப்புரை : அடியார் இனத்தே
ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும் , வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும்
ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம் .
பாடல்
எண் : 9
வாய்
இருந்தமி ழேபடித்து ஆள்உறா,
ஆயி
ரம்சம ணும் அழிவு ஆக்கினான்,
பாய் இரும்புனல் ஆறை வடதளி
மேய
வன்என வல்வினை வீடுமே.
பொழிப்புரை : மெய்ம்மையும்
பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின்
கட்படுத்தவனும் , பாய்கின்ற
பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லு
மளவிலேயே வல்வினைகள் கெடும் .
பாடல்
எண் : 10
செருத்த
னைச்செயும் சேண்அரக் கன்உடல்
எருத்து
இற விரலால் இறை ஊன்றிய
அருத்த
னைப்பழை யாறை வடதளித்
திருத்த
னைத்தொழு வார்வினை தேயுமே.
பொழிப்புரை : போரினைச் செய்யும்
சேண் புகழ் உடைய இராவணனின் உடலும் ,
பிடரியும்
இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள்வடிவானவனாகிய பழையாறைவடதளியின்
அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும் .
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment