திருத்தணிகை - 0293. பருத்தபல் சிரத்தினை





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பருத்தபல் சிரத்தினை (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
பிறவி அறுக்கும் உபாயத்தை என் மனம் தெளிய அருள்


தனத்தனத் தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
     தனத்தனத் தனத்தனத் ...... தனதான


பருத்தபற் சிரத்தினைக் குருத்திறற் கரத்தினைப்
     பரித்தவப் பதத்தினைப் ...... பரிவோடே

படைத்தபொய்க் குடத்தினைப் பழிப்பவத் திடத்தினைப்
     பசிக்குடற் கடத்தினைப் ...... பயமேவும்

பெருத்தபித் துருத்தனைக் கிருத்திமத் துருத்தியைப்
     பிணித்தமுக் குறத்தொடைப் ...... புலனாலும்

பிணித்தவிப் பிணிப்பையைப் பொறுத்தமிழ்ப் பிறப்பறக்
     குறிக்கருத் தெனக்களித் ...... தருள்வாயே

கருத்திலுற் றுரைத்தபத் தரைத்தொறுத் திருக்கரைக்
     கழித்தமெய்ப் பதத்தில்வைத் ...... திடுவீரா

கதித்தநற் றினைப்புனக் கதித்தநற் குறத்தியைக்
     கதித்தநற் றிருப்புயத் ...... தணைவோனே

செருத்தெறுத் தெதிர்த்தமுப் புரத்துரத் தரக்கரைச்
     சிரித்தெரித் தநித்தர்பொற் ...... குமரேசா

சிறப்புறப் பிரித்தறத் திறத்தமிழ்க் குயர்த்திசைச்
     சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பருத்த பல் சிரத்தினை, குருத் திறல் கரத்தினை,
     பரித்த அப் பதத்தினை, ...... பரிவோடே

படைத்த பொய்க் குடத்தினை, பழிப் பவத்து இடத்தினை,
     பசிக்கு உடல் கடத்தினை, ...... பயம் மேவும்

பெருத்த பித்து உருத்தனை, கிருத்திமத் துருத்தியை,
     பிணித்த முக் குறத்தொடு, ஐப் ...... புலனாலும்,

பிணித்த இப் பிணிப்பையைப் பொறுத்து, மிழ்ப் பிறப்பு அறக்
     குறிக் கருத்து எனக்கு அளித்து ...... அருள்வாயே.

கருத்தில் உற்று உரைத்த பத்தரைத் தொறுத் திருக்கரைக்
     கழித்த, மெய்ப்பதத்தில் வைத் ...... திடுவீரா!

கதித்த நல் தினைப்புனக் கதித்த நல் குறத்தியைக்
     கதித்த நல் திருப்புயத்து ...... அணைவோனே!

செருத் தெறுத்து எதிர்த்த முப்புரத்து உரத்து அரக்கரைச்
     சிரித்து எரித்த நித்தர்பொன் ...... குமரஈசா!

சிறப்பு உறப் பிரித்து அறத் திறத் தமிழ்க்கு உயர்த்திசைச்
     சிறப்பு உடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பதவுரை


       கருத்தில் உற்று --- தங்கள் கருத்தில் வைத்து,

     உரைத்த பத்தரை --- தேவரீரைப் புகழ்ந்த அடியார்களை,

     தொறு திருக்கரை கழித்த -- நிரம்ப வஞ்சகமுடையவர்களை ஒதுக்கித் தள்ளுகின்ற,

     மெய் பதத்தில் வைத்திடு வீரா --- அழியாத திருவடியில் சேர்த்துக்கொள்ளும் வீர மூர்த்தியே!

      கதித்த நல் தினை புன --- மிகுந்த நல்ல தினைப்புனத்தில்,

     கதித்த நல் குறத்தியை --- இருந்த நற்குணவதியாகிய வள்ளியம்மையை,

     கதித்த நல் திருபுயத்து அணைவோனே --- உயர்ந்த நல்ல திருப்புயத்தில் தழுவியவரே!

      செரு தெறித்து எதிர்த்த --- போரில், குவிந்து வந்து எதிர்த்த,

     முப் புரத்து --- மூன்று புரத்தில் வாழ்ந்த,

     உரத்து அரக்கரை --- வலிய அரக்கர்களை,

     சிரித்து எரித்த --- புன்னகை புரிந்து எரித்து நீறாக்கிய,

     நித்தர் --- என்றும் உள்ள சிவபெருமானுடைய,

     பொன் குமர ஈசா --- அழகிய திருக்குமாரராகிய தலைவரே!

      சிறப்பு உற --- சிறப்பு ஏற்படும்படி,

     பிரித்து --- தனிநின்று மேம்பட்டு,

     அற திற --- அறநெறியை இனிது கூறும்,

     தமிழ்க்கு உயர் திசை --- தமிழ்மொழியின் வடதிசையில் எல்லையில்,

     சிறப்பு உடை --- சிறப்பைப் பெற்றுத் திகழும்,

     திருத்தணி பெருமாளே --- திருத்தணித் தலத்தில் வாழும் பெருமையிற் சிறந்தவரே!

      பருத்த பல் சிரத்தினை --- பருமையுடைய பல்லுடன் கூடிய தலையையும்,

     குருதிறல் கரத்தினை --- நிறமும் வலிமையும் கொண்ட கைகளையும்,

     பரித்த அப் பதத்தினை --- உடம்பைத் தாங்குகின்ற அந்த கால்களையும்,

     பரிவோடே படைத்த --- அன்புடன் கொண்ட,

     பொய்க் குடத்தினை --- பொய்யான குடம் போன்ற உடலை,

     பழி பவத்து இடத்தினை --- பழிக்கும் பாவத்துக்கும் இடமாகிய உடலை,

     பசி குடல் கடத்தினை --- பசிக்கு இடமாகிய குடலுடன் கூடிய உடலை,

     பயம் மேவும் பெருத்த பித்து உரு தனை --- அச்சத்துடன் கூடிய பெரிய பித்த உருவத்தை,

     கருத்திம துருத்தியை --- தோலால் ஆகிய உலை ஊது கருவியை,

     பிணித்த முகு(ற்)றத் தொடு --- கட்டுப்பட்ட காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றத்துடன்,

     ஐ புலனாலும் --- சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புலன்களாலும்,

     பிணித்த இப் பிணிப்பையை --- கட்டுப்படுத்த இந்த நோய்ப் பையை,

     பொறுத்து அமிழ் பிறப்பு அற ---  தாங்குவதும் ஆழ்த்துவதுமான பிறப்பை ஒழிக்கும்,

     குறி கருத்து எனக்கு அளிது அருள்வாயே --- குறிப்பைக் கொண்ட கருத்தினை அடியேனுக்குத் தந்தருள்வீராக.

பொழிப்புரை 

         தங்கள் உள்ளத்தில் வைத்து புகழ்கின்ற அடியார்களை, நிரம்ப வஞ்சனை உடையவர்களை ஒதுக்கித் தள்ளுகின்ற, நிலை பெற்ற திருவடியில் சேர்த்துக்கொள்ளும் வீரமூர்த்தியே!

     தினைப் பயிர் மிகுந்த நல்ல புனத்தில் வாழ்ந்த நற்குணமிக்க வள்ளிநாயகியை உயர்ந்த நல்ல திருப்புயத்தில் தழுவிக் கொண்டவரே!

     போரில் குவிந்து வந்த எதிர்த்த முப்புரத்து வலிய அரக்கர்களை சிரித்து எரித்த அழிவில்லாத சிவமூர்த்தியின் அழகிய திருக்குமாரரே!

     தனி நின்று சிறப்புற்று அறநெறி கூறும் தமிழ் மொழியின் வடக்கு எல்லையில் சிறப்புடன் திகழும் திருத்தணி மலையின் மீது எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!

         பருத்த பல்லுடன் கூடிய தலையையும், நிறமும் வலிமையும் படைத்த சுரங்களையும், தாங்குகின்ற கால்களையும் அன்புடன் படைத்த பொய்மையான குடம் போன்ற உடலை, பழிக்கும் பாவத்துக்கும் இடமாகிய உடலை, பசிக்கு இருப்பிடமாகிய குடலுடன் கூடிய உடலை, அச்சத்துடன் கூடிய பெரிய பித்த உருவத்தை, தோலாலாய உலை ஊதுங் கருவியை, பொருத்தப் பட்ட காம, கோபம், மயக்கம் என்ற முக்குற்றங்களோடும், சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களோடும் கட்டுப்பட்ட இந்த நோய்ப் பையைத் தாங்குவதும் துன்பத்தில் ஆழ்வதுமான பிறப்பை ஒழிக்கும் நோக்கத்தைக் கொண்ட கருத்தினை அடியேனுக்குத் தந்தருளுவீராக.

விரிவுரை


இத் திருப்புகழில் நான்கு அடிகளில் இந்த உடம்பின் சிறுமையை எடுத்துக் கூறுகின்றார்.

பருத்த பற்சிரம் ---

பெரிய பற்களுடன் கூடிய தலை. இந்த உடம்புக்கு முக்கியமானது சிரம். அதனால் அதனை முதலிற் கூறினார்.

குறுத்திறற் கரம் ---

குரு-நிறம்; திறம்-வலிமை; நிறமும் வலிமையும் பொருந்திய கை.

பரித்தவப் பதத்தினை ---

பரித்தல்-தங்குதல். இந்த உடம்பைத் தாங்கி நிற்பது கால்.

பொய்க்குடம் ---

பொய் என்பதற்கு இரண்டு பொருட்கள் உண்டு; 1 இல்லாதது நடவாதது பொய்; 2. நிலைபேறு இல்லாதது பொய்.

பொய்யுலகம், பொய்யுடம்பு என்ற இடங்களில் உலகமும் உடம்பும் இல்லாதன அல்ல; இருந்து மறைந்து ஒழிவன; ஆதலால் இந்த உடம்பை பொய்க்குடம் என்றார். குடம் மண்ணால் ஆனது. உடம்பும் மண்ணால் ஆனது.

       வாய்த்த குயவனார் பண்ணு பாண்டம் - இது
      வறகோட்டுக்கு ஆகாது என்று ஆடுபாம்பே”

       நந்தவனத்தில் ஓர் ஆண்டி-அவன்
      நால்ஆறு மாதமாய்க் குயவனை வேண்டி
      கொண்டு வந்தான்ஒரு தோண்டி-அதைக்
      கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி”

என்று சித்தர்கள் பாடுகின்றார்கள்.

குடம் உடையும் தன்மையது. அதுபோல் உடம்பும் ஒரு நாள் அழியும் தன்மையது. குடத்திலும் இழிந்தது உடம்பு. குடம் உடைந்தால் அந்த ஓடு வறுக்க உதவும். உடம்பு அதற்கும் உதவாது.

பழி பவத்து இடத்தினை ---

பழிபவத்து இடத்தினை; பழிக்கும் பாவத்துக்கும் உறைவிடமானது இந்த உடம்பு. பழி இப்பிறப்பிலும் பாவம் மறு பிறப்பிலும் வரக்கூடியவை

பசி குடற் கடம் ---

பசிக்கு இருப்பிடமாவது குடல். “குடல் பசிக்கு அழுகின்றது. கொண்டை பூவுக்கு அழுகின்றது” என்பது பழமொழி.

எல்லா நோய்களும் சிலரைச் சில காலத்தில் பற்றி விலகி யொழியுந் தன்மையன. பசி நோய் மட்டும் எல்லா உயிர்களையும் எக்காலத்தும் வாட்டுந் தன்மையது. அதனால்தான் பசிக்குதவும் அறஞ் சிறந்தது என்று ஆன்றோர் கூறுவர்.

பயம் மேவும் பருத்த பித்து உருத்தனை ---

பயம்-அச்சம்; பருத்த பித்த உரு. அச்சத்தை தரக் கூடிய பெரிய பித்தம் நிறைந்த வடிவம்.

கிருத்திமத் துருத்தியை ---

தோலால் செய்த துருத்தி. பிராணவாயுவால் சதா இயங்குவது இந்த உடம்பு.

முக் குறத்தொடு ஐப் புலனாலும் ---

"குற்றம்" என்னும் சொல், பாடலை நோக்கி, "குறம்" என்று வந்தது.  "ஐம்புலனாலும்" என்ற சொற்றொடர், பாடலை நோக்கி, "ஐப்புலனாலும்" என வந்தது.

முக் குற்றத்தொடு ஐ புலன்.

 காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்றும் உயிர்க்குள்ள குற்றங்கள்.

       காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
       நாமம், கெடக் கெடும் நோய்;                      --- திருக்குறள்.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தும் புலன்கள்.

பிறப்பு அறக் குறிக்கருத்து எனக்கு அளித்து அருள்வாயே ---

பிறவித் துன்பம் தவிர்க்குங் குறியைக் கொண்ட கருத்தை அடியேனுக்குத் தந்து அருள் புரிய வேணும்.

பிறவியாகிய துயர் பிறப்பற்ற பெருமானாகிய முருகக் கடவுளால்தான் நீங்கும்.

கருத்தில் உரைத்த பத்தரை. .பதத்தில் வைத்திடும் வீரா ---

கருத்தில் வைத்து முருகனைப் புகழ்ந்து துதி செய்கின்ற அடியார்களை, அப்பரமபதி தனது திருவடியில் சேர்த்து பேரின்பத்தை வழங்கியருளுவான்.

வஞ்சகர்களை அப்பாதம் ஒதுக்கித் தள்ளிவிடும்.

சிறப்புறப்பிரித் தறத் திறத் தமிழ்க்கு உயர்த்திசை ---

தமிழ் தனியே நின்று இயங்குந் தன்மையது. அறநெறிகளைக் கூறும் சிறப்புடையது. இத்தகு சிறந்த தமிழ் வழங்கும் நாட்டின் வடக்கு எல்லையாகத் திகழ்வது திருத்தணி.

கருத்துரை

திருத்தணி நாயகா! பிறப்பற அருள் புரிவாய்.

No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...