திருத்தணிகை - 0294. பழமை செப்பி




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

பழமை செப்பிய (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
மாதர் மயல் வயப்படாது, உன் பாதமலர் சேர அருள்.


தனன தத்தன தத்தன தத்தன
     தனன தத்தன தத்தன தத்தன
          தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான


பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
     முறைம சக்கிய ணைத்துந கக்குறி
          படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப்

பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
     விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
          பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர்

அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
     அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
          அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ......அடியேனை

அகில சத்தியு மெட்டுறு சித்தியு
     மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
          மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே

குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
     கரண மிட்டுந டித்தமி தப்படு
          குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன்

குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
     நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
          குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா

தழையு டுத்தகு றத்திப தத்துணை
     வருடி வட்டமு கத்தில தக்குறி
          தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே

தரள பொற்பணி கச்சுவி சித்திரு
     குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
          தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


பழமை செப்பி அழைத்து, தமித்து, டன்
     முறை மசக்கி, அணைத்து, நகக்குறி
          பட அழுத்தி, முகத்தை முகத்து உற, ...... உறவாடி,

பதறி எச்சிலை இட்டு, மருத்து இடு
     விரவு குத்திர வித்தை விளைப்பவர்,
          பல விதத்திலும் அற்பர் எனச் சொலும் ...... மடமாதர்

அழி தொழிற்கு விருப்பொடு நத்திய
     அசடனை, பழி உற்ற அவத்தனை,
          அடைவு கெட்ட புரட்டனை, முட்டனை, ......அடியேனை

அகில சத்தியும், எட்டு உறு சித்தியும்
     எளிது எனப் பெரு வெட்ட வெளிப்படும்
          அருண பொற்பதம் உற்றிட வைப்பதும் ......ஒருநாளே?

குழி விழிப் பெரு நெட்டு அலகைத் திரள்
     கரணம் இட்டு, நடித்து, மிதப்படு
          குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ...... ஒருசூரன்

குருதி கக்கி, அதிர்த்து வி, பொரு
     நிசிசரப் படை பொட்டு எழ, விக்ரம
          குலிச சத்தியை விட்டுஅருள் கெர்ச்சித ...... மயில்வீரா!

தழை உடுத்த குறத்தி பதத் துணை
     வருடி, வட்ட முகத் திலதக் குறி
          தடவி, வெற்றி கதித்த முலைக்குவடு ...... அதன்மீதே

தரள பொன் பணி கச்சு விசித்து, ரு
     குழை திருத்தி, அருத்தி மிகுத்திடு
          தணிமலைச் சிகரத்திடை உற்றுஅருள் ...... பெருமாளே.


பதவுரை


      குழி விழி --- குழிந்த கண்களையுடைய,

     பெரு நெட்டு அலகை திரள் --- நீண்ட பெரிய பேய்க் கூட்டங்கள்,

     கரணம் இட்டு நடித்து --- தலைகீழாகக் கரணம் இட்டுக் கூத்தாடி,

     அமிதப்படு --- அளவில்லாத,

     குலிலி இட்ட --- வீராவேச ஒலி செய்த,

     களத்தில் எதிர்த்திடும் --- போர்க்களத்தில் எதிர்த்து வந்த,

     ஒரு சூரன் --- ஒப்பற்ற சூரபன்மன்,

     குருதி கக்கி --- உதிரத்தைக் கக்கி,

     அதிர்த்து விழ --- அதிர்ச்சி அடைந்து விழும்படியும்,

     விக்ரம குலிச சக்தியை விட்டு அருள் --- ஆற்றல் பொருந்திய வச்சிராயுதத்தை விடுத்தருளிய,

     கெர்ச்சித மயில் வீரா --- பேரொலி செய்யும் மயில் வீரனே!
  
     தழை உடுத்த குறத்தி --- தழைகளைத் தைத்து உடையாக உடுத்துள்ள வள்ளிநாயகியின்,

பத துணை --- இரண்டு பாதங்களையும்,

வருடி -- கையால் பிடித்தும்,

வட்ட முக --- வட்டமான முகத்தில்,

திலத குறி தடவி --- பொட்டு அடையாளத்தை வைத்தும்,

வெற்றி கதித்த --- வெற்றியால் மிகுந்த,

முலைக்குவடு அதன் மீது --- தனங்களாகிய மலையின்மீது,

தரள பொன் பணி --- முத்து மணிகளாகிய அழகிய ஆபரணங்களும்,

கச்சு விசித்து --- இரவிக்கையையும் கட்டி,

இரு குழை திருத்தி --- இரண்டு குழைகளையும் திருத்தியும்,

அருத்தி மிகுத்திடு --- வள்ளிபிராட்டியின் மீது அன்பு மிகுந்துள்ளவரே!

தணிமலை சிகரத்திடை --- திருத்தணி மலையின் உச்சியின் மீது,

உற்று அருள் பெருமாளே --- எழுந்தருளியிருக்கும் பெருமையின் மிகுந்தவரே!

         பழமை செப்பி அழைத்து --- பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்து,

     இதம் இத்துடன் -- இன்பமும் இதனுடன்,

     முறை மசக்கி அணைத்து --- மாமா என முறை வைத்துக் கூப்பிட்டு மயக்கி தழுவி,

     நக குறிபட அழுத்தி --- நகத்தின் அடையாளம் பதியுமாறு அழுத்தி,

     முகத்தை முகத்து உறவாடி --- முகத்தை முகத்துடன் வைத்து உறவு செய்து,

     பதறி --- அவசரப்பட்டு,

     எச்சிலை இட்டு --- தம் வாயில் இருந்த பொருளைக் கொடுத்து,

     மருத்து இடு ---  மருந்தையிட்டு,

     விரவு குத்திர வித்தை விளைப்பவர் --- வஞ்சனை கலந்த வித்தையைச் செய்பவர்கள்,

     பல விதத்திலும் அற்பர் எனச் சொலும் மடமாதர் --- பலவகைகளினாலும் அற்பர் என்று சொல்லத்தக்க அறிவில்லாத மடமாதர்களுடன்,

     அழி தொழிதற்கு விருப்பொடு நத்திய அசடனை --- அழிவதற்கு ஏதுவாகிய தொழில்களில் விருப்பத்துடன் ஆசைப்படும் மூடனை,

     பழி உற்ற அவத்தனை --- பழிக்கு ஆளான வீணனை,

     அடைவு கெட்ட புரட்டனை --- புகலிடம் இல்லாத பொய்யனை,

     முட்டன் அடியேனை --- அறிவற்றவனாகிய அடியேனை,

     அகில சத்தியும் --- எல்லாவிதமான ஆற்றலும்,

     எட்டு உறு சித்தியும் --- அட்டமா சித்திகளும்,

     எளிது என பெருவெட்ட வெளிப்படும் --- எளிதாக பெரிய வெட்ட வெளியில் தோன்றும்,

     அருண பொன்பதம் --- சிவந்த அழகிய உமது பாதங்களை,

     உற்றிட வைப்பதும் --- எளியேன் சேரும்படி வைக்கும்,

     ஒரு நாளே --- ஒரு நாள் கிடைக்குமோ?

பொழிப்புரை

         குழிந்த கண்களையுடைய பெரிய நீண்ட பேய்க்கூட்டங்கள், கரணம் போட்டுக் கூத்தாடி அளவில்லாத வீராவேச ஒலி செய்த போர்க்களத்தில் எதிர்த்து வந்த ஒப்பற்ற சூரன் உதிரத்தைக் கக்கி, அதிர்ச்சியுடன் விழும்படியும், போர் செய்த அசுர சேனைகள் பொடிபட்டு அழியவும், ஆற்றல் மிகுந்த வச்சிராயுதத்தைச் செலுத்திய வீரரே!

     பேரொலி செய்யும் மயில் வீரரே!

     தழையுடையுடுத்த குறமகளின் பாதம் இரண்டையும் வருடியும், வட்டமான முகத்தில் திலகம் வைத்தும், வெற்றியுடன் தோன்றும் கொங்கையாகிய மலைகளின் மீது, அழகிய முத்துமாலையும் இரவிக்கையும் அணிந்து கொண்டும், இரண்டு குழைகளைத் திருத்தியும், அன்பு மிகுந்த திருத்தணிகை மலையின் உச்சியில் வீற்றிருக்கின்ற பெருமையின் மிகுந்தவரே!

         பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்தும், இன்பத்துடன் முறை வைத்துக் கூறி மயங்கச் செய்து தழுவியும், நகக் குறி வைத்து முகத்தோடு முகத்தை வைத்து உறவாடியும், அவசரமாகத் தமது எச்சிலாகிய தாம்பூலத்தைக் கொடுத்தும், மருந்து வைத்தும், வஞ்சனை கலந்த வித்தை செய்பவர்; பல வகையாலும் அற்பர் என்று சொல்லத்தக்க பொதுமாதர்களுடன் அழிவதற்குக் காரனமாம் தொழில் செய்ய விரும்புகின்றவனை, அறிவில்லாதவனை, பழியை மேற்கொண்ட வீணனை, புகலிடம் இல்லாத பொய்யனை, மூடனாகிய அடியேனை, எல்லா சக்தியையும் அஷ்டமா சித்தியையும், எளிதாகக் கிட்டும்படி பெரிய வெட்டவெளியில் தோன்றுகின்ற திருவடியைச் சேரும்படியாகச் செய்யும் நாள் அடியேனுக்குக் கிடைக்குமோ?

விரிவுரை

பழமை செப்பி அழைத்து ---

பொது மகளிர் தம்மை நன்கு அலங்கரித்துக் கொண்டு வீதியில் நின்று, அவ்வழி செல்லும் இளைஞர்களை “உங்கள் அப்பா காலம் முதல் எங்களுடன் உறவு உண்டு. ஆதலால் நம்ம வீட்டுக்கு வாருங்கள்” என்று அழைப்பார்கள்.

முறை மசக்கி அணைத்து ---

பொருட் பெண்டிர் ஆதலால் தந்தையும் மைந்தனும் உடனாக மயக்கம் செய்து தழுவிக் கொள்வர்.

எச்சிலை இட்டு ---  

“ஒருத்தர் வாய்ச்சுருள் ஒருவர் கை உதவுவர்”          --- (பழிப்பர்) திருப்புகழ்.

எட்டு உறு சித்தியும் ---

இறைவனைப் பணிவார்க்கு அட்டமா சித்தியும் எளிதில் உண்டாகும். "அட்டமா சித்திகள் அணை தரு காளத்தி" என்று திருஞானசம்பந்தப் பெருமானும் அருளிச் செய்தார். சித்தி, முத்திக்கு ஊறு தரும். ஆதலால் அதனைப் பெரியோர்கள் பொருள் செய்ய மாட்டார்கள்.

1.    அணிமா --- அணுவைப் போல் சிறிய உருவாகும் ஆற்றல்.

2.    மகிமா --- மேருகிரியிலும் பெரிய உருவாக நிற்கும் ஆற்றல்

3.    கரிமா --- மிகவும் கனமாக நிற்கும் ஆற்றல்.

4.    லகிமா --- பஞ்சிலும் நொய்தாக நிற்கும் ஆற்றல்.

5.   பிராத்தி --- விரும்பியதைப் பெறும் பேறு.

6.   பிராகாமியம் --- நினைத்த போகமெல்லாம் ஏக காலத்தில் பெறுவது.

7.    ஈசத்துவம் --- யார்க்குந் தேவனாதல்.

8.    வசித்துவம் --- எல்லாவற்றையும் தன் வசமாக்கும் ஆற்றல்.

   கருப்புகழாம் பரசமயக் கதை கேளாது, நுதினம் உன்
   திருப்புகழைக் கற்பார்க்குச் சித்தி எட்டும் எளிதாமே”    --- தணிகைக் கலம்பகம்.

இப்படி அடையப்படும் சித்தியானது, ஆன்மா முத்தி பெறத் தடையாக இருக்கும்.  ஆதலால் உண்மை அடியவர்கள் சித்தியை விரும்ப மாட்டார்கள்.

மந்திரம் புவனங்கள் தத்துவம் கலை வன்னங்கள் பதம் வேதம்
தந்திரம் பல சமயநூல் புறந்தழீ இச் சார்ந்த நூல் தரும் ஆதி
முந்து இரங்கிய சதூவிதம் சரியையே முதலிய சதுட்பாதம்,
இந்து இரங்கு நீர்முடி அவர் அடியவர் இச்சியா எண் சித்தி.
                                                    ---  திருவிளையாடல் புராணம்.

இந்திரச் செல்வமும் எட்டுச் சித்தியும்
வந்துழி வந்துழி மறுத்தனர்...             --- திருவிடைமருதூர் மும்மணிக் கோவை.

போகம் வேண்டி வேண்டிலேன் புரந்தர ஆதி இன்பமும்,
ஏக! நின் கழல்இணை அலாது இலேன் என் எம்பிரான்,
ஆகம் விண்டு, கம்பம் வந்து, குஞ்சி அஞ்சலிக்கணே
ஆக என்கை, கண்கள் தாரை ஆறதாக ஐயனே.                   ---  மணிவாசகம்.

கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு, குடிகெடினும்
நள்ளேன் நினது அடியாரொடு அல்லால், நரகம் புகினும்
எள்ளேன், திருவருளாலே இருக்கப் பெறின், இறைவா!
உள்ளேன் பிறதெய்வம் உன்னை அல்லாது எங்கள் உத்தமனே.  ---  மணிவாசகம்.

தழை உடுத்த ---

வேடர்கள் காட்டில் உள்ள தழைகளைத் தைத்து உடையாக உடுத்துக் கொள்வார்கள்.

மரகத மணிப்பணியின் அணிதழை உடுத்துஉலவு
வனசர் கொடிச்சி தனை யாசிக்கும் யாசகனும்”    --- வேடிச்சிகாவலன் வகுப்பு

திலகக் குறிதடவி ---

இந்த ஏழாவது அடியும் எட்டாவது அடியும் தலைவன் தலைவியினுடைய அணிகளைத் திருத்துதல் என்ற துறையில் வந்தது.

கருத்துரை

         திருத்தணிகைப் பெருமாளே! ஆசை வயப்படாது அடியேன் உனது பாதமலர் சேர அருள் புரிவாய்.


No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...