திருத்தணிகை - 0295. புருவம் நெறித்து





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

புருவம் நெறித்து (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
உனது திருவடியைத் துதிக்க அருள்

தனதன தத்தத் தனதன தத்தத்
     தனதன தத்தத் ...... தனதான


புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
     புளகித வட்டத் ...... தனமானார்

பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
     புரளும சட்டுப் ...... புலையேனைக்

கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
     கதிதனை விட்டிட் ...... டிடுதீயக்

கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
     கழல்கள்து திக்கக் ...... கருதாதோ

செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
     திரைகட லுட்கப் ...... பொரும்வேலா

தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
     கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா

பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
     பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே

ப்ரபலமுட் சுத்தத் தணிமலை யுற்றுப்
     ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


புருவம் நெறித்து, குறு வெயர்வு உற்று,
     புளகித வட்டத் ...... தன மானார்

பொரு விழியில் பட்டு, வரொடு கட்டிப்
     புரளும் அசட்டுப் ...... புலையேனை,

கரு விழி உற்று, குருமொழி அற்றுக்
     கதிதனை விட்டிட் ...... டிடு தீயக்

கயவனை, வெற்றிப் புகழ் திகழ் பத்மக்
     கழல்கள் துதிக்கக் ...... கருதாதோ?

செரு அசுரப் பொய்க் குலம் அது கெட்டு,
     திரைகடல் உட்கப் ...... பொரும் வேலா!

தினைவனம் உற்றுக் குறவர் மடப் பைக்
     கொடி தன வெற்பைப் ...... புணர்மார்பா!

பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
     பெரிகை முழக்க, ...... புவிமீதே

ப்ரபலம்உள் சுத்தத் தணிமலை உற்றுப்
     ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.

பதவுரை

      செரு அசுர --- போர் புரியும் அசுரர்களுடைய,

     பொய்க் குலம் அது கெட்டு --- பொய்மை மிகுந்த குலம் அழியவும்,

     திரைகடல் உட்க --- அலைகளுடன் கூடிய கடல் அஞ்சவும்,
    
     பொரும் வேலா --- போர் செய்த வேலாயுதரே!

      தினைவனம் உற்று --- தினைக்காட்டை அடைந்து,

     குறவர் மட பை கொடி --- மறவர் மகளாகிய மடக்கொடியும் பைங்கொடியுமாகிய வள்ளிநாயகியின்,

     தன வெற்பை புணர் மார்பா --- தனமாகிய மலையைத் தழுவிய திருமார்பினரே!

      பெருகிய நித்தம் --- தினந்தோறும் ஒலி பெருகுகின்ற,

     சிறுபறை கொட்டி --- சிறிய பறைகளைக் கொட்டி முழக்க,

     பெரிகை முழக்க --- பேரிகையை அடித்து முழக்க,

     புவி மீதே --- பூதலத்திலே,

     ப்ரபலம் உள் --- புகழ் உள்ள,

     சுத்த தணிமலை உற்று --- தூய திருத்தணிகை மலையில் எழுந்தருளியிருந்து,

     ப்ரிய மிகு --- அத்தலத்தில் மிகுந்த அன்புகொண்ட,

     சொக்க பெருமாளே --- அழகிய பெருமையில் மிகுந்தவரே!

      புருவம் நெறித்து --- புருவத்தை நெறித்து,

     குறுவெயர் உற்று --- சிறிய வெயர்வை யுற்று,

     புளகித வட்ட தன மானார் --- பூரிக்கின்ற வட்டமான கொங்கைகளையுடைய பொது மாதர்களின்,

     பொரு விழியில் பட்டு --- பூசலிடும் கண் வலையில் அகப்பட்டு,

     அவரொடு கட்டிப் புரளும் --- அவர்களுடன் தழுவிப் புரளுகின்ற,

     அசட்டுப் புலையேனை --- அறிவில்லாத கீழ்மகனாகிய அடியேன்,

     கருவிழி உற்று --- கருவில் விழும் வழியையே பின்பற்றி,

     குருமொழி அற்று --- குருமொழியை கைவிட்டு,

     கதி தனை விட்டு இடு --- நல்கதி அடைதலை ஒழிந்தவன்,

     தீய கயவனை --- கொடிய மூடனுமாகிய அடியேன்,

     வெற்றி புகழ் திகழ் = வெற்றியும், புகழும் விளங்குகின்ற,

     பதம கழல்கள் துதிக்க --- தாமரை போன்ற திருவடிகளைத் துதிக்கும் பேறு பெற,

     கருதாதோ --- உமது திருவுள்ளஞ் சிந்திக்காதோ?

   
பொழிப்புரை


         போர் செய்கின்ற அசுரர்களுடைய பொய்மை மிகுந்த குலம் அழியவும், அலைகள் மிகுந்த கடல் அஞ்சவும் வேலாயுதத்தால் போர் புரிந்தவரே!

     தினைவனத்தில் சென்று, குறவர் குல மடமங்கையாகிய பைங்கொடி போன்ற வள்ளிபிராட்டியின்  தன மலையைத் தழுவுகின்ற திருமார்பை உடையவரே!

     தினமும் ஒலி பெருகுகின்ற சிறுபறைகளையும், பேரிகைகளையும் முழக்குகின்ற புகழும், பூமியில் தூய்மையும் உடைய திருத்தணிகை மலைமீது அன்புடன் எழுந்தருளியுள்ள அழகிய பெருமிதம் உடையவரே!

         புருவத்தை நெறித்து சிறுவியர்வைத்துளி விளங்கப் பூரித்துள்ள வட்டமான தனங்களையுடைய பொது மாதர்களின் பூசல் செய்யும் கண்களின் வலையில் வீழ்ந்து, அவர்களைத் தழுவிப் புரளுகின்ற கீழ் மகனும், புலையனும், கருவில் விழும் தீநெறியிற் செல்பவனும், குருமொழியைக் கைவிட்டவனும், நற்கதியை விட்டவனும், தீயவனும் மூடனுமாகிய அடியேன், வெற்றியும் புகழும் உடைய உமது பாத கமலங்களைத் துதிக்கும் பெரிய பேற்றினைப் பெறுமாறு உமது திருவுள்ளத்தில் சிறிது நினைக்கக் கூடாதோ?

     
விரிவுரை 

புருவம் நெறித்து ---

பொதுமகளிர் தமது முகத்தில் சினம், துயரம், அச்சம், ஆச்சர்யம் முதலிய பல குறிப்புகள் தோன்ற புருவத்தைக் கீழும் மேலுமாக நெறிப்பார்கள்.

குறுவெயர்வு உற்று ---

கலவியினால் முகத்தில் குறுவியர்வை யுண்டாகும்.

      வேர்வை மெத்த எழுந்து சலா சலா என”    --- (ஓலமிட்ட) திருப்புகழ்

பொரு விழியில் பட்டு ---

கண்களாகிய அம்பினால் ஆடவருடன் போர் புரிவர் அம்மகளிர். கண் வலையில் இளைஞர் வீழ்ந்து தவிப்பார்கள்.

கருவழி உற்று ---

நெருக்கமாக வண்டியிற் பயணம் புரியும்போது துன்புறுகின்றோம். காற்றில்லைஎன்றும், ஒளியில்லை என்றும் கவல்கின்றோம்.தாய் வயிற்றில் முந்நூறு நாட்கள் இருக்கின்றோம். வயிற்றில் மலப்பை, நீர்ப்பை, உணவுப்பை ஆகிய பல பைகளுடன் கருப்பை. அங்கு காற்றில்லை, ஒளியில்லை, மிகுந்த நெருக்கம். இதைவிடத் துன்பம் வேறு இருக்க முடியாது. ஆதலால் மீளவுந் தாயுதரத்தில் போகக் கூடாது என்று ஆன்றோர்கள் வருந்துகின்றார்கள்.

 மாதா உடல் சலித்தாள், வல்வினையேன் கால்சலித்தேன்,
வேதாவும் கைசலித்து விட்டானே --- நாதா,
இருப்பையூர் வாழ்சிவனே, இன்னம் ஓர்அன்னை
கருப்பையூர் வாராமல் கா.                --- பட்டினத்தார்

நல்வினை தீவினை காரணமாகப் பிறப்பு எய்துகின்றது. ஆகவே தீவினை கனவிலும் செயக்கூடாது; நல்வினை பயன் கருதாமற் செய்யவேண்டும். அதனால் பிறப்பு எய்தாது;

       விதிகாணும் உடம்பை விடா வினையேன்
    கதிகாண, மலர்க்கழல் என்று அருள்வாய்”   --- கந்தர்அநுபூதி

குருமொழி அற்று ---

கருவழி வராத நன்னெறியைக் குருநாதர் காட்டியருளுவார். அத்தகைய குருமொழியாகிய திருமொழியை ஒருமொழியாகக் கொண்டு உய்ய வேண்டும். மூடர்கள் குருமொழி கேளாது, வேறு மொழி கேட்டு அவலமுற்றுக் கவலையடைகின்றார்கள்.
  
புகழ் திகழ் பத்மக் கழல்கள் துதிக்கக் கருதாதோ ---

இறைவனுடைய திருவடி புகழ் வாய்ந்தது. புகழ் பெற வேணுமாயின் அப்பரமபதியின் புகழ் நிறைந்த திருவடியைத் துதி செய்யவேண்டும்.

ஞானமயமான முருகவேளின் திருவடியைத் துதி செய்யாமல், செல்வத்திற்கு ஆசைபட்டு அறிவில்லாத உலோபிகளான தனவந்தர்களையும், காம வயமாகி மாதர்களையும் துதி செய்து, புலவர்கள் பாழ்படுகின்றார்கள்.

ஆகவே, “முருகா! அடியேன் உமது பதமலரைத் துதி செய்யுமாறு, உமது திருவுள்ளத்தில் சிந்தித்து அருள் புரிவாய்” என்று சுவாமிகள் விண்ணப்பம் புரிகின்றார்கள்.

செரு அசுரப் பொய்க்குலம் ---

சாதுக்களான தேவர்களுடன் சதா போர் புரிவதையே தொழிலாகக் கொண்டவர்கள் அசுரர்கள். சண்டை எங்கே? எங்கே? என்று தேடுவார்கள். சண்டையே தொழிலாகத் திரிவார்கள். பொய்யே நிறைந்தவர்கள். ஆதலால் அசுர குலத்தை முருகவேள் வேலினால் அழித்தருளினார்.

மடப்பைக் கொடி ---

மடம் என்பது பெண்களிடம் இருக்கவேண்டிய நற்குணங்களில் ஒன்று. மடம் - கொளுத்தியது விடாமை; இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று, தாய் தந்தையர் கணவன் மற்றப் பெரியோர்கள் அறிவுறுத்திய அறிவுரையை விடாது படித்து ஒழுகுதல்.

மடப்பைக் கொடி - மடப் பைங்கொடி.  "பைங்கொடி" என்னும் சொல், பாடலை நோக்கி, "பைக்கொடி" என வந்தது.

ப்ரபலமுள் சுத்தத் தணிமலை ---

தலங்கள் பலவற்றுள் மிகப் புகழ் வாய்ந்த திருத்தணிகை தூய்மையுடையது.

கருத்துரை


திருத்தணி வேலவா! உனது திருவடிகளைத் துதி செய்யும் தன்மையை அருள்செய்.

No comments:

Post a Comment

8. நல்லது பெற்றால் நாயகனுக்கு அளிப்பர்

              8. நல்லது நாயகனுக்கு                          --- "அல்லமரும் குழலாளை வரகுணபாண்      டியராசர் அன்பால் ஈந்தார்! கல்லைதனில் ...