அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
பூசலிட்டு
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
மாதர் மயலில் துன்புறாமல்,
திருவடியை வழிபட்டு இன்புற
அருள்.
தானனத்
தத்த தத்த தானனத் தத்த தத்த
தானனத் தத்த தத்த ...... தனதான
பூசலிட்
டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த
போர்விடத் தைக்கெ டுத்து ......
வடிகூர்வாள்
போலமுட்
டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து
போகமிக் கப்ப ரிக்கும் ...... விழியார்மேல்
ஆசைவைத்
துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு
ளாகிமெத் தக்க ளைத்து ...... ளழியாமே
ஆரணத்
துக்க ணத்து னாண்மலர்ப் பொற்ப தத்தை
யான்வழுத் திச்சு கிக்க ...... அருள்வாயே
வாசமுற்
றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த
மாதர்கட் கட்சி றைக்கு ...... ளழியாமே
வாழ்வுறப்
புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு
மாமயிற் பொற்க ழுத்தில் ...... வரும்வீரா
வீசுமுத்
துத்தெ றிக்க வோலைபுக் குற்றி ருக்கும்
வீறுடைப் பொற்கு றத்தி ...... கணவோனே
வேலெடுத்
துக்க ரத்தி னீலவெற் பிற்ற ழைத்த
வேளெனச் சொற்க ருத்தர் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
பூசல்
இட்டு, சரத்தை நேர் கழித்து, பெருத்த
போர் விடத்தைக் கெடுத்து, ...... வடிகூர்வாள்
போல
முட்டி, குழைக்குள் ஓடி வெட்டித் தொளைத்து,
போக மிக்கப் பரிக்கும் ...... விழியார்மேல்,
ஆசை
வைத்துக் கலக்க மோகம் உற்று, துயர்க்குள்
ஆகி, மெத்தக் களைத்து, உள் ...... அழியாமே,
ஆரணத்துக் கண்
நத்து உன் நாள்மலர்ப் பொன் பதத்தை
யான் வழுத்திச் சுகிக்க ...... அருள்வாயே.
வாசம்
உற்றுத் தழைத்த தாள் இணைப் பத்தர்,
அத்த
மாதர்கள் கண் சிறைக்குள் ...... அழியாமே,
வாழ்வு
உறப் புக்கு, இரத்ன ரேகை ஒக்கச் சிறக்கும்
மாமயில் பொன் கழுத்தில் ...... வரும் வீரா!
வீசு
முத்துத் தெறிக்க ஓலை புக்கு உற்று இருக்கும்
வீறு உடைப் பொன் குறத்தி ...... கணவோனே!
வேல்
எடுத்துக் கரத்தில், நீல வெற்பில் தழைத்த
வேள் எனச் சொல் கருத்தர் ...... பெருமாளே.
பதவுரை
வாசம் உற்று தழைத்த --- நறுமணம் கொண்டு
விளங்குகின்ற,
தாள் இணை பத்தர் --- இரு திருவடிகளை
வணங்குகின்ற அன்பர்கள்,
அத்த மாதர்கள் --- பொருட் பெண்டிரது,
கண் சிறைக்குள் அழியாமே--- கண்ணாகிய
சிறைச்சாலையில் அடைபட்டு அழியாத வண்ணம்,
வாழ்வு உற --- வாழ்வை அடையும் பொருட்டு,
புக்கு --- புறப்பட்டு,
இரத்ன ரேகை ஒக்க சிறக்கும் --- இரத்தின
மணிகள் போன்ற வரிகளால் சிறப்புள்ள,
மாமயில் --- பெருமை தங்கிய மயிலின்,
பொன் கழுத்தில் வரும் வீரா --- அழகிய
கழுத்தின் மீது ஏறி வருகின்ற வீரரே!
வீசு முத்து தெறிக்க --- ஒளிவீசும்
முத்துக்கள் சிதற,
ஓலை புக்கு உற்று இருக்கும் --- ஓலையாலாய
பரண்மீது புகுந்து உறைகின்ற,
வீறு உடை பொன் குறத்தி கணவோனே --- பெருமை
மிகுந்த அழகிய வள்ளி நாயகியின் கணவரே!
கரத்தில் வேல் எடுத்து ---
திருக்கரத்தில் வேலாயுதத்தை ஏந்தி,
நீல வெற்பில் தழைத்த --- நீலோற்பல மலர்
மலர்கின்ற திருத்தணி மலையின் மீது எழுந்தருளியுள்ள,
கருத்தர் வேள் என சொல் --- கருத்துள்ள
அடியார்கள் செவ்வேட் பெருமானே என்று புகழ்கின்ற,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
பூசல் இட்டு --- போர் புரிந்து,
சரத்தை நேர் கழித்து --- தனது கூர்மைக்கு
நேர் நிற்க முடியாது அம்பைத் தள்ளியும்,
பெருத்த போர் விடத்தை கெடுத்து --- போர்புரிய
வந்த பெரிய ஆலகால விடத்தை வென்று அழித்தும்,
வடிகூர் வாள் போல --- மிகக் கூர்மையுள்ள
வாளாயுதத்தைப் போல,
முட்டி குழைக்குள் ஒடி --- தாக்கிக் காதில்
உள்ள தோட்டுக்குள் ஓடிப் பாய்ந்ததும்,
வெட்டி தொளைத்து --- கண்டவர்களது உயிரை
வெட்டித் தொளை செய்தும்,
போக மிக்க பரிக்கும் --- போக இன்பத்தைத்
தன்னிடம் நிரம்பத் தாங்குகின்றதும் ஆன,
விழியார் மேல் --- கண்ணையுடைய பொது
மாதர்களின்மீது,
ஆசை வைத்து --- ஆசையை வைத்து,
கலக்க மோகம் உற்று --- உள்ளத்தைக் கலக்கும்
மோகத்தைக் கொண்டு,
துயர்க்கு உள் ஆகி --- அதனால் துன்பத்துக்கு
உள்ளாகி,
மெத்த களைத்து --- மிகவும் அதிர்ச்சியடைந்து,
உள் அழியாமே --- உள்ளம் அழியாதபடி,
ஆரணத்துக் கண் நத்து --- வேதத்தினிடம்
விரும்பிப் போற்றப்படுகின்ற,
உன் நாள் மலர் --- உமது புதிய மலர் போன்ற,
பொன் பதத்தை --- அழகிய திருவடியை,
யான் வழுத்தி சுகிக்க --- அடியேன் துதிசெய்து
சுகம் பெற,
அருள்வாயே --- திருவருள் புரிவீராக.
பொழிப்புரை
நறுமணம் மிகுந்த உமது இரு திருவடிகளை
வணங்கும் அன்பர்கள், பொருட் பெண்டிரது கண்ணாகிய
சிறையில் அகப்பட்டு அழியாவண்ணம்,
நல்வாழ்வு
பெறும் பொருட்டு, இரத்தின மணி போன்ற
வரிகள் கொண்டதும் சிறப்புடையதுமான அழகிய மயிலின் மீது ஏறி வருகின்ற வீர
மூர்த்தியே!
ஒளி மிகுந்த முத்துக்கள் சிதறியுள்ள இலை
வேய்ந்த பரண்மீது பெருமையுடன் இருக்கும் அழகிய வள்ளி பிராட்டியின் கணவரே!
திருக்கரத்தில் வேலாயுதத்தைத் தாங்கி
நீலமலையாகிய திருத்தணிகை மலைமீது எழுந்தருளியவரே!
அடியார்கள் ‘செல்வனே’ என்று துதிக்கின்ற
பெருமிதம் உடையவரே!
ஆடவருடன் போர் புரிந்தும், கூர்மையால் தனக்குத் தோல்வியுறச் செய்து
கணையைத் தள்ளியும், பெரிய போர் புரியவல்ல
ஆலகாலவிடத்தை அழித்தும், மிகுந்த கூர்மையுள்ள, வாளாயுதத்தைப் போல் பாய்ந்து
தோட்டுக்குள் ஓடிப்பாய்ந்தும், ஆடவர் உயிரை வெட்டித்
தொளைத்தும், இன்ப நுகர்ச்சியை
மிகுதியாகத் தாங்கியும் உள்ள கண்களையுடைய பொதுமாதர் மீது ஆசை வைத்து, கலக்கமாகிய மோகத்தையடைந்து, துன்பத்துக்குள் மிகவும் களைப்புற்று
உள்ளம் அழியாதபடி, வேதத்தில் துதித்து
விரும்புகின்ற உமது புதிய மலர் போன்ற அழகிய திருவடியை அடியேன் துதிசெய்து
சுகம்பெறத் திருவருள் புரிவீர்.
விரிவுரை
பூசலிட்டு
---
தம்மை
விரும்புகின்றவரிடம் விலைமகளிரது கண்களே போர் செய்து அறிவை யழித்துவிடும்.
சரத்தை
நேர்கழித்து ---
அம்பு
கூர்மையானது; அதன் கூர்மையைவிட கண்
கூர்மையாக இருப்பதனால், அம்பினை இகழ்ந்து அதை
விலக்கியது என்று கூறுகின்றார்.
பெருத்த
போர் விடத்தை கெடுத்து ---
“பெரிய போரினால்
விளையும் தீமையைப் பார்க்கினும் பெருந்தீமை புரிகின்றது நஞ்சு. அதனையுண்டாரே
மாய்வார். இந்தக் கண் கண்டாரையும் மாய்க்கும் வன்மையுடையது. அதனால் நஞ்சைத் தன்
வலிமையால் கெடுத்தது” என்கின்றார்.
வடிகூர்வாள்
போல முட்டி ---
வடி-கூர்மை, வடி கூர்வாள்-மிகுந்த கூர்மையுடைய
வாலைப் போல் எதிர்த்தவரைத் தாக்கவல்லது அக்கண்.
குழைக்குள்
ஓடி வெட்டித் தொளைத்து ---
காதுவரை
நீண்ட கண்; குழைகளில் தன்
ஒளியைப் பாய்ச்சி, எதிர்ப்பட்டவர்
எவராயினும் அவர்கள் உள்ளத்தையும் உயிரையும் வெட்டித் தொளைக்கும் ஆற்றலுடையது
அந்தக் கண்.
“விழையும் மனிதரையும் முனிவரையும் அவர்
உயிர் துணிய
வெட்டிப் பிளந்து, உளம் பிட்டுப் பறிந்திடும்
செங்கண் வேலும்” --- திருப்புகழ்
போகமிக்கப்
பரிக்கும் விழி ---
பரித்தல்-தாங்குதல்.
போக இன்பத்தைத் தன்னிடத்தே வைத்து அதிகமாக அந்தக் கண் தாங்குகின்றது.
ஆசை
வைத்துக் கலக்க மோகமுற்றுத் துயர்க்குளாகி மெத்தக் களைத்து உள் அழியாமே ---
மாதர்
மீது ஆசை வைத்து, அதனால் கலக்கமுற்று, மோகத் தீயால் வாடித் துன்பக் கடலுக்குள்
வீழ்ந்து மாந்தர் களைப்புறுகின்றார்கள்.
வாலியும்
இராவணனும் மாதராசையால் மாய்ந்தார்கள். இந்திரனும் சந்திரனும் மாதராசையால் உடல்
நலம் அழிந்தார்கள். கீசகனும் கிர்மீரனும் பெண்ணாசையால் மடிந்தார்கள்.
ஆரணத்துக்
கணத்துள் நாண்மலர்ப்பதம் ---
முருகன்
திருவடியைத் துதித்தால் சகல் சுகங்களும் உண்டாகும்.
அத்தமாதர்
---
அத்தம்-பொன்
அத்தமாதர்-பொருட் பெண்டிர்.
முருகவேள், தனது அடியார்களை மாதர் மயலில் சிக்காது
தடுத்து, நல்வாழ்வு பெற்று
உய்யுமாறு மயிலில் ஏறி எழுந்தருளி வருவார்.
நீலவெற்பு
---
நீலோற்பலம்
தினமும் சுனையில் மலர்வதால் திருத்தணி மலைக்கு நீலகிரியென்று பேர் உண்டாயிற்று.
“நீலகிரி மருவு குருபதி” என்கின்றார் சீர்பாத வகுப்பில்.
கருத்துரை
திருத்தணி
வேலவரே! மாதராசையால் வருந்தாது உனது பாதமலரைத் துதித்துச் சுகமுற அருள்வாய்.
No comments:
Post a Comment