பழநி - 0163. தகர நறுமலர்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

தகர நறுமலர் (பழநி)

பழநியப்பா! 
ஆசைப் பெருங்கடலில் அடியேன் அழுந்தித் துன்புறாமல், 
மெய்ப்பொருளை அடியேனுக்கு உபதேசிக்கக் 
கோழிக் கொடியுடன் மரகத மயிலில் வந்து அருள் புரி.


தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான


தகர நறுமலர் பொதுளிய குழலியர்
     கலக கெருவித விழிவலை படவிதி
          தலையி லெழுதியு மனைவயி னுறவிடு .....வதனாலே

தனயர் அனைதமர் மனைவியர் சினெகிதர்
     சுரபி விரவிய வகையென நினைவுறு
          தவன சலதியின் முழுகியெ யிடர்படு ......     துயர்தீர

அகர முதலுள பொருளினை யருளிட
     இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ
          அரக ரெனவல னிடமுற எழிலுன ......    திருபாதம்

அருள அருளுடன் மருளற இருளற
     கிரண அயில்கொடு குருகணி கொடியொடு
          அழகு பெறமர கதமயில் மிசைவர ......   இசைவாயே

சிகர குடையினி னிரைவர இசைதெரி
     சதுரன் விதுரனில் வருபவ னளையது
          திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன்

திகிரி வளைகதை வசிதநு வுடையவ
     னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே

பகர புகர்முக மதகரி யுழைதரு
     வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக
          பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே

பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய
     நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ்
          பழநி மலைவரு புரவல அமரர்கள் ......   பெருமாளே.


பதம் பிரித்தல்


தகர நறுமலர் பொதுளிய குழலியர்,
     கலக கெருவித விழிவலை பட, விதி
          தலையில் எழுதியும், னைவயின் உறவிடு ..... அதனாலே,

தனயர், அனை,தமர், மனைவியர், சினெகிதர்,
     சுரபி, விரவிய வகையென, நினைவுறு
          தவன சலதியின் முழுகியெ, இடர்படு ...... துயர்தீர,

அகர முதல் உள பொருளினை அருளிட,
     இரு கை குவிசெய்து உள்உருகிட உருகியெ,
          அரகர என வலன் இடம் உற, எழில் உனது ......இருபாதம்
  
அருள, அருளுடன் மருள் அற, இருள் அற,
     கிரண அயில்கொடு, குருகு அணி கொடியொடு,
          அழகு பெற, மரகத மயில் மிசைவர ...... இசைவாயே.

சிகர குடையினில் நிரைவர, இசைதெரி
     சதுரன், விதுரன் இல் வருபவன், ளையது
          திருடி அடிபடு சிறியவன் நெடியவன், ...... மதுசூதன்,

திகிரி வளை கதை வசி தநு உடையவன்,
     எழிலி வடிவினன், அரவுபொன் முடிமிசை
          திமித திமிதிமி என நடம் இடும் அரி ...... மருகோனே!

பகர புகர் முக மதகரி, உழைதரு
     வனிதை வெருவ, முன் வரஅருள் புரிகுக!
          பரம குருபர! இமகிரி தருமயில் ...... புதல்வோனே!

பலவின் முதுபழம் விழைவுசெய்து ஒழுகிய
     நறவு நிறைவயல், கமுகு அடர் பொழில்திகழ்,
          பழநி மலைவரு புரவல! அமரர்கள் ......   பெருமாளே.


பதவுரை


         சிகர குடையினில் நிரை வர இசை தெரி சதுரன் --- கோவர்த்தன மலையை எடுத்துக் குடையாகப் பிடித்தபோது (மழைக்காற்றாக) பசுக்கூட்டங்கள் அக்குடையின் கீழ் தானே வந்து சேருமாறு புல்லாங்குழலை ஊதிய சாமர்த்தியமுடையவரும்,

     விதுரன் இல் வருபவன் --- (சுயோதனன் பால் தூது சென்றபோது) மெய்யன்பு பூண்ட விதுரனுடைய மாளிகைக்கு உணவுகொள்ளச் சென்றவரும்,

     அளை அது திருடி அடிபடு சிறியவன் --- (கோபிகைகள் வீட்டில்) வெண்ணெயைத் திருடி அவர்கள்பால் அடிபட்ட இளம் பருவத்தையுடையவரும்,

     நெடியவன் --- (மாவலிபால் மூவடி கேட்டு உலகை ஓரடியால் அளக்க) நீண்ட வடிவத்தைக் கொண்டவரும்,

     மதுசூதன் --- மது என்கின்ற அரக்கனை வதைத்தவரும்,

     திகிரி --- சக்கரத்தையும்,

     வளை --- சங்கையும்,

     கதை --- கதாயுதத்தையும்,

     வசி --- வாளாயுதத்தையும்,

     தனு --- வில்லையும்,

     உடையவன் --- ஆகிய இந்த ஐம்படைகளை உடையவரும்,

     எழிலி வடிவினன் --- நீலமேகம் போன்ற திருமேனியை உடையவரும்,

     அரவு பொன் முடி மிசை --- காளிங்கன் என்னும் பாம்பினுடைய அழகிய பணாமகுடத்தின் மீது நின்று,

     திமித திமிதிமி என நடனமிடும் அரி --- திமித திமிதிமி என்ற ஒலியுடன் திருநடனம் புரிந்தவரும் பாவத்தை நீக்குபவருமாகிய நாராயண மூர்த்தியினது,

     மருகோனே --- மருகரே!

         உழை தரு வனிதை முன் --- மான் வயிற்றிற் பிறந்த வள்ளிநாயகியாரது திருமுன்,

     பகர புகர் முக மதகரி வர --- ஒளியுடையதும் கபில நிறத்துடன் கூடியதுமான முகத்தையுடைய மதங்களைப் பொழியும் யானையை வருமாறு செய்து,

     அருள்புரி குக --- திருவருள் செய்த குகமூர்த்தியே!

         பரம --- பெரிய பொருளே!

         குருபர --- ஞானப்பொருளை உபதேசிக்கவல்ல பெரிய குருமூர்த்தியே!

         இம கிரி தரு மயில் புதல்வோனே --- பருப்பத வேந்தனாகிய பனிமலை பெற்றெடுத்த பச்சை மயில் போன்ற சாயலையுடைய பார்வதி தேவியாருடைய திருக்குமாரரே!

         பலவின் முது பழம் --- பலாமரத்தின் முற்றிய பழங்களினின்றும்

     விழைவு செய்து ஒழுகிய நறவு நிறை வயல் --- கண்டோர் விரும்புமாறு ஒழுகிய தேன் நிரம்பப் பெற்ற வயல்களும்,

     கமுகு அடர் பொழில் திகழ் --- பாக்கு மரங்கள் நெருங்கிய சோலைகளும் சூழ்ந்து விளங்குகின்ற,

     பழநி மலை வரு புரவல --- பழநிமலையின் மேல் எழுந்தருளியுள்ள எப்பொருட்கும் இறைவரே!

         அமரர் பெருமாளே ---  தேவர்களுக்குத் தலைவராக விளங்கிய பெருமையுடையவரே!

         தகர நறுமலர் பொதுளிய குழலியர் --- தகர மரத்தின் வாசனை பொருந்திய மலர்களைச் சூடிக்கொண்டுள்ள கூந்தலையுடைய பொது மாதர்களது,

     கலக --- ஆடவர்கள் கலகத்தை விளைவித்துக் கொள்ளக் கூடியதும்,

     கெருவித விழி வலை பட --- செருக்குடையதுமாகிய கண்வலையிற் பட்டு உழலும் வண்ணம்

     விதி தலையில் எழுதி --- பிரமன் அடியேன் தலையில் விதித்தெழுதி,

     அனை வயின் உறவிடு அதனாலே --- தாயாருடைய வயிற்றில் கருவடையுமாறு விடுவதனால்,

     தனயர் --- குழந்தைகள்,

     அனை --- தாயார்,

     தமர் --- சுற்றத்தார்,

     மனைவியர் --- மனைவிமார்கள்,

     சிநேகிதர் --- நண்பர்கள்,

     சுரபி --- பசுக்கள்,

     விரவிய வகை என நினைந்து --- இவை முதலாகக் கலந்துள்ள பொருள்களின் வகைகளை நினைந்து நினைந்து (அவற்றின் மீது மிகவும் ஆசைகொண்டு,

     தவன சலதியில் முழுகிய இடர்படு துயர் தீர --- ஆசைக் கடலில் மூழ்கி மிகுந்த துன்பத்தை யனுபவிக்கும் துயர் தீருமாறு,

     அகர முதல் உள பொருளினை அருளிட --- அகரத்தை முதலெழுத்தாகவுடைய பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்தருள் புரியவும்,

     இருகை குவிசெய்து உள் உருகிட --- இரண்டு கரங்களையும் கூப்பி அடியேன் உருகவும்,

     உருகிய அரகர என வலன் இடமுற --- அவ்வாறு அடியேன் உருகி அரகர என்று துதிசெய்து வலம் இடமாக வந்து வழிபடவும்

     எழில் உனது இருபாதம் அருள ---- அழகிய தேவரீரது திருவடிகளை அடியேனுக்குத் தந்து அருள் புரியவும்,

     மருள் அற --- உலக பசுபாச சொந்தத்தால் உண்டாகும் மயக்கம் நீங்கவும்,

     இருள் அற --- ஆணவ இருள் நீங்கவும்,

     கிரண அயில் கொடு --- ஒளி மிகுந்த வேலை ஏந்திக் கொண்டு,

     குருகு அணை கொடியோடு --- அழகிய சேவற்கொடியோடும்,

     அழகுபெற --- மிகுந்த அழகுடன்,

     அருளுடன் --- திருவருளோடு,

     மரகத மயில் மிசை வர இசைவாயே --- மரகத நிறத்தையுடைய பச்சை மயில்மேல் வந்து அருள் செய்யத் திருவுளம் பற்றவேண்டும்.


பொழிப்புரை


         (மழையின் கொடுமையால் பசுக்கள் வெருவி நாற்புறமும் ஓடிய போது) கோவர்த்தன கிரியை எடுத்துக் குடையாகப் பிடித்து, அக்குடையின் கீழ் பசுக்கள் வந்து சேர வேணுகானம் செய்த சாமர்த்தியம் உடையவரும், தூது போனபோது தம்மிடத்துப் பேரன்பு உடைய விதுரர் திருமாளிகைக்கு விருந்தாகச் சென்றவரும், கோபிகைகள் வீடுகள் தோறும் வெண்ணெயைத் திருடி அவரால் அடிபட்டவரும், பாலகிருஷ்ணரும், படி மாவலிபால் மூவடி கேட்டு மூதண்ட கூட முகடு முட்ட சேவடி நீட்டி அளக்கப் பேருருக் கொண்டவரும், மது என்னும் அசுரனை அழித்தவரும்; சங்க, சக்ர, கதை, வில், வாள் என்னும் ஐம்பெரும் படைகளைத் தரித்தவரும், நீலமேகவண்ணரும், காளிங்கன் என்னும் பணியரசனுடைய அழகிய பணாமுடியின் மீது நின்று திமித திமிதிமி என்ற தாள ஒத்துடன் திருநடனம் இட்டு அருளியவரும், பாவத்தை நீக்குபவருமாகிய நாராயணமூர்த்தியின் மருகரே!

         மான் மகளாகிய வள்ளியம்மையார் அச்சப்பட, அவர் முன் ஒளியுடையதும் கபில நிறம் உடையதுமாகிய முகத்தோடு கூடிய மதயானையை வருமாறு செய்து அருள்புரிந்த குகப்பெருமானே!

         பெரிய பொருளே!

         குருபர!

         பனி மாமலைக்கு அரசு தந்த பார்வதி தேவியாரது திருக்குமாரரே!

         முதிர்ந்த பலாப்பழங்களின் சாறு காண்போர் விரும்புமாறு பெருகி நிரம்பிய வயல்களும் நெருங்கிய கமுகு சோலைகளுஞ் சூழ்ந்த பழநி மலைமீது எழுந்தருளியுள்ள தனிப்பெருந் தலைவரே!

         தேவர்கள் பெருமாளே!

         தகர விதையின் மணம் வீசும் மலர்களை முடித்துள்ள கூந்தலையுடைய விலைமகளிரது கலகத்தைச் செய்யும் செருக்குடன் கூடிய கண் வலையிற் பட்டுழலுமாறு அடியேனுடைய தலையில் பிரமன் எழுதி, தாய் வயிற்றில் விடுவதனால், அடியேன் மக்கள், தாய், சுற்றம், மனைவியர், நண்பர், பசு முதலிய பொருள்களின் மீது மிகவும் பற்றுடையவனாகிய அவற்றையே நினைத்து ஆசைக் கடலில் மூழ்கி இடர்படுகின்ற இன்னல் நீங்குமாறு, அகர எழுத்தை முதலாகவுடைய குடிலை மந்திரப் பொருளை உபதேசிக்கவும், அடியேன் இருகரங்களையும் குவித்து உள்ளம் அழலிடை மெழுகேபோல் உருகவும், அங்ஙனம் உருகி “அரகர” என்று துதித்து வலம் இடமாக வந்து வழிபடவும், தேவரீருடைய அழகிய சரண கமலத்தை அடியேனுக்குத் தந்தருளவும், உலக பசுபாச சொந்தத்தால் வருகின்ற மயக்கம் நீங்கவும், அஞ்ஞான இருள் நீங்கவும், ஞான ஒளியையுடைய வடிவேலைக் கரத்தில் ஏந்தி அழகிய சேவற்கொடியுடனும், மிகுந்த அழகுடனும் அருளுடனும், மரகதமயில் மிசை வந்து அருள் செய்ய இசையவேண்டும்.


விரிவுரை

தகர ---

வாசனை பொருந்திய ஒரு மரம். அதன் விதையை அரைத்துக் கூந்தலில் தடவுவர்.

கலக கெருவித விழிவலை ---

கண் பார்வையால் ஒருவருக்கொருவர் விரோதித்து கலகமிடக் கூடியதும் செருக்குடையதுமாகிய விழியாகிய வலையை வீசி விலை மாதர் இளம் பருவத்தையுடைய ஆடவரைப் பிடிப்பர்.

தவன சலதி ---

ஆசைக்கடல்; இதில் வீழ்ந்தோர் கரைகாணாது துன்புறுவர். மனைவி, மைந்தர், நண்பர், மாடு, பொன் என்னும் பல அலைகளை உடையது இவ்வாசைப் பெருங்கடல், ஓயாத எண்ணங்களாகிய நுரைகளை உடையது; அறியாமையாகிய கருமை நிறத்துடன் கூடியது. நரகமாகிய பயங்கரத்தை உண்டாக்குவது.

அகர முதலுள பொருள் ---

அகர உகர மகர என்னும் மூன்றெழுத்துக்களுடன் கூடியது பிரணவமந்திரமாதலால் அகர முதலுள பொருள் என்றார்.

அகாரம் சிருஷ்டியையும் உகாரம் திதியையும் மகாரம் சங்காரத்தையும் செய்யுமாதலால் சிருஷ்டிதிதி சங்காரமாகிய முத்தொழில்களும் அப்பிரணவ மந்திரத்தாலேயே நிகழ்கின்றன.

அத்தனி மொழிக்கு முதல்வன் முருகவேளேயாம். அப்பெருமான் ஒருவனே அவ்வொரு மொழிக்குப் பொருள் கூறவல்லான். சிவபெருமானும் அம்மொழியின் பொருளை அக்குக மூர்த்தியின்பால் கேட்டனரன்றோ? ஆதலால் பிரணவோபதேச கர்த்தராகிய முருகப் பெருமானை உபதேசிக்குமாறு வேண்டுகிறார். அப்பெருமானைக் குருவாகக் கொண்டுணராதார் அம்மெய்பொருளை யுணரமாட்டார் என்பதனை அடியில் வரும் அநுபூதி அருள்வாக்காலறிக.

         முருகன் தனிவேல் முனிநம் குரு என்று
     அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ” --- கந்தர்அநுபூதி.


குருகணி கொடியோடு ---

பெருமான் வருகையை ஒலியால் முன்னரே உணர்த்தி மகிழச் செய்வதால் அச்சேவற் கொடியுடன் வரவேண்டும் என்றார்.

         சென்றே இடங்கள் கந்ததா எனும்பொ
         செஞ் சேவல் கொண்டு வரவேணும்”     --- (அன்பாக வந்து) திருப்புகழ்

சிகர குடையினில் நிரைவர இசைதெரி சதுரன் ---

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்த வரலாறு

ஒரு நாள் நந்தகோபர் உபநந்தர் முதலிய ஆயர் குலத் தலைவர்கள் ஆண்டுகள் தோறும் நடத்திக்கொண்டு வந்த மகேந்திர யாகத்தைச் செய்ய ஆலோசித்துத் தொடங்கினார்கள். அதனை அறிந்த கண்ணபிரான், அந்த யாக வரலாற்றை அறிந்திருந்தும் நந்தகோபரைப் பார்த்து, “எந்தையே! இந்த யாகம் யாரைக் குறித்துச் செய்கிறீர்கள்! இதனால் அடையப் போகும் பயன் யாது?” என்று வினவினார்.

நந்தகோபர் “குழந்தாய்! தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் மேகரூபமாயிருந்து உயிர்களுக்கு பிழைப்பையும் சுகத்தையும் தருகின்ற தண்ணீரைப் பொழிகின்றான்; மூன்று உலகங்களுக்கும் தலைவனாகிய அந்த இந்திரனது ஆணையால் இந்த மேகங்கள் சகல ஜீவாதாரமாக உள்ள மழையை பெய்கின்றன; ஆதலால் மேகவாகனனாய் இருக்கும் இந்திரனைக் குறித்து ஆண்டுகள்தோறும் ஒரு நாளை ஏற்படுத்திக் கொண்டு, பரிசுத்தர்களாயிருந்து, சிறந்த பால் தயிர் அன்னம் முதலிய பொருட்களைக் கொண்டு இந்த இந்திர யாகத்தைச் செய்து இந்திரபகவானை ஆராதிக்கின்றோம். கமலக் கண்ணா! இவ்வாறு இந்திரனைப் பூசித்தவர்கள் இந்திரனுடைய அருளால் எல்லா நலன்களையும் பெற்று இன்புறுகின்றார்கள்; மேலும் அந்தப் பர்ஜன்யரூபியாகிய இந்திரன், அநேக நற்பலன்களை வழங்குகின்றான். இவ்வாறு ஆராதிக்காதவர்கள் நன்மையடைய மாட்டார்கள்” என்றார்.

மூன்றுலகங்களுக்கும் முதல்வன் என்று செருக்குற்ற இந்திரனுடைய அகங்காரத்தை நீக்கத் திருவுளங் கொண்ட கண்ணபிரான், பிதாவை நோக்கி “தந்தையே உயிர்கள் வினைகளுக்கீடாய்ப் பிறக்கின்றன; முற்பிறப்புக்களிற் செய்த வினைகளின் வண்ணம் புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன. வினைகளால்தான் சுகதுக்கங்கள் வருகின்றன. இதனை அன்றி இந்திராதி உலக பாலர்கள் பலன்களைக் கொடுக்க வல்லவராக மாட்டார்கள். இந்திரனால் ஒரு பலனும் கொடுக்க முடியாது. கர்மத்தை ஒழிக்கும் ஆற்றலும் இல்லை. உயிர்கள் தாங்கள் செய்த வினைக்குத் தக்கவாறு, பசு, பட்சி, புழு, விலங்கு, தேவர், மனிதர்களாகப் பிறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றன என்பதில் சிறிதும் ஐயமில்லை. சுகத்துக்கத்திற்குக் கர்மமே முக்கிய காரணம். நம்முடைய புண்ணியமே மேகமாக இருந்து மழை பெய்கிறது.

எந்தையே! நமக்கு ஊர்கள், தேசங்கள், வீடுகள் ஒன்றுமில்லை. காடு மலைகளில் வசித்துக் கொண்டு காட்டுப் பிராணிகள் போல் பிழைத்து  வருகின்றோம். ஆதலால் இந்த மலையையும் மலைக்கு அதி தேவதையையும், பசுக்களையும் பூசியுங்கள். இப்போது இந்திர பூசைக்காகச் சேகரித்த பொருள்களை கொண்டு இந்த மலையை ஆராதியுங்கள், பற்பல பணியாரங்கள், பாயசம், பால், நெய், பருப்பு, அப்பம் இவற்றை தயாரித்து அந்தணர் முதல் சண்டாளர் நாய்வரை எல்லாப் பிராணிகளையும் திருப்தி செய்து வையுங்கள். பசுக்களுக்குப் புல்லைக் கொடுங்கள். பிறகு நீங்கள் அனைவரும் புசித்து சந்தனாதி வாசனைகளை யணிந்து ஆடையாபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு இந்த மலையை வலம் வந்து வணங்குங்கள்” என்றார்.

இதனைக் கேட்ட கோபாலர்கள் அனைவரும் நன்று என்று அதற்கு இசைந்து, கோவர்த்தன மலைக்கு அருகில் இருந்து அம் மலையை வழிபட முயன்றார்கள். அப்போது பகவானாகிய கண்ணபிரான் தமது யோக மகிமையால் தாமே ஒரு பெரிய மலையாக நின்றார். அவ் ஆயர்களிலும் தாமொருவராக இருந்து, “ஆயர்களே! இதோ இந்த மலைக்கு அதிதேவதையே நம்மைக் காக்கும் பொருட்டு இங்கு எழுந்தருளியிருக்கிறார், இவரை நீங்கள் அன்புடன் ஆராதியுங்கள்?” என்றார். ஆயர்கள் அதனைக் கண்டு மிகுந்த ஆச்சரியமடைந்து பயபக்தி சிரத்தையுடன் அருக்கியபாத்திய ஆசமனீயம் தந்து, மனோபாவமாக அபிஷேகஞ் செய்து, சந்தன புஷ்ப மாலைகளைச் சாத்தி தூபதீபங்களைக் காட்டி, அர்ச்சித்து, பங்காபேரி, வேணு முரசு முதலிய வாத்தியங்களை முழக்கி - பால், நெய், பருப்பு, அன்னம், பழம், தாம்பூலம் முதலியவற்றை நிவேதித்து வழிப்பட்டார்கள். மலை வடிவாயுள்ள பகவான் அவற்றை புசித்து அருள்புரிந்தார். கண்ணபிரானும் ஆயர்களுடன் அம்மலையை வணங்கி, “நம்மவர்களே! இதோ மலைவடிவாயுள்ள தேவதை, நாம் நிவேதித்தவைகளை யுண்டு நமது பூசையை ஏற்றுக்கொண்டார்; இம்மலை நம்மைக் காத்தருள்புரியும்” என்று கூறினார். கோபாலர்கள் மகிழ்ந்து மலையை வலம் வந்து வணங்கித் துதித்து நின்றார்கள். பிறகு அம்மலை வடிவாக நின்ற பகவான் மறைந்தார். ஆயர்கள் கோவர்த்தனம் முதலிய மலைகட்கு தூபதீபங் காட்டி ஆராதித்து வணங்கி, பசுக்களை யலங்கரித்து தாங்களும்  உணவு கொண்டு, அலங்கரித்துக் கொண்டு மலையை வலம் வந்து மகிழ்ந்தார்கள்.

ஆயர்கள் வழக்கமாய்ச் செய்துவந்த பூசையை மாற்றியதைக் கண்ட இந்திரன் மிகவும் கோபித்து, ஊழிக்கால மேகங்களை அழைத்து “மேகங்களே! இளம் பிள்ளையும் தன்னையே பெரிதாக மதித்து இருக்கின்றவனுமாகிய இந்த கிருஷ்ணனுடைய வார்த்தையைக் கேட்டு மூவுலகங்கட்கும் முதல்வனாகிய என்னை இந்த ஆயர்கள் அவமதித்தார்கள்; புத்தி கெட்டு கேவலம் இந்த மலையை ஆராதித்தார்கள்; ஆதலால் நீங்கள் உடனே இந்த கிருஷ்ணனையும், ஆயர்களையும், பசுக்களையும் வெள்ளத்தில் அழித்து கடலிற் சேர்த்து அழியுமாறு பெருமழையை இடைவிடாது பொழியுங்கள்” என்று ஆணை தந்தான். இவ்வாறு கட்டளையிட்ட இந்திரன் தானும் ஐராவதத்தின் மேலூர்ந்து தேவர்கள் சூழ ஆயுதங்களை ஏந்திக் கொண்டு சண்ட வாயுக்களை மேகங்களுக்குச் சகாயமாக ஏவினான். மேகங்கள் ஊழிக்காலமென உலகங்கள் வருந்த இடியுடன் ஆகாயத்தில் வியாபித்து, மின்னல் கல் மழையை ஆயர்பாடியின் மீது பெய்தன. அப்பெரு மழையால் எங்கும் தண்ணீர் மயமாகியது; பசுக்கூட்டங்கள் பதறியோடின; கன்றுகள் பயந்து தாய்ப் பசுக்களைச் சரண் புகுந்தன. எருதுகளும் இரிந்தன; இடையர்கள் இந்தப் பெரிய ஆபத்தைக் கண்டு பிரமாண்டங் கிழிந்து போயிற்றோ, ஊழிக்காலம் வந்துவிட்டதோ என்று நடு நடுங்கி கண்ணபிரானிடம் ஓடிவந்து “கண்ணா மணிவண்ணா!” என்று முறையிட்டு சரணாகதி அடைந்தார்கள். கண்ணபிரான் “ஜனங்களே! கல்மழைக்கு அஞ்ச வேண்டாம்; குழந்தைகளுடனும் பசுக்களுடனும், பெண்மணிகளுடனும் வாருங்கள்; பகவான் காப்பாற்றுவார்” என்று சொல்லி பெரிய மலையாகிய கோவர்த்தனத்தைத் தூக்கி, ஒரு சிறு பிள்ளை மழைக்காலத்தில் உண்டாகும் காளானைப் பிடுங்கிக் குடையாகப் பிடிப்பதுபோல் ஒரு கரத்தால் பிடித்தார். வராகமூர்த்தியாகிப் பூமண்டலத்தை ஒரு கோட்டால் தாங்கிய பெருமானுக்கு இது பெரிய காரியமோ? ஒரு யானையின் தும்பிக்கையில் ஒரு தாமரைமொக்கு இருப்பதுபோல், பகவான் கரத்தில் அம்மலையானது விளங்கியது. கண்ணபிரான், “நம்மவர்களே! இம்மலையின் கீழ் யாதொரு குறைவுமின்றி நீங்கள் எல்லாரும் வந்து சுகித்திருங்கள்; இந்த மலை விழுந்துவிடுமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம்; பிரமாண்டங்கள் இடிந்து இம்மலைமேல் விழுந்தாலும் இது விழாது” என்று அருளிச் செய்தார். அதுகண்ட ஆயர்கள் அற்புதமடைந்து கோவினங்களுடனும் மனைவி மக்களுடனும் அம்மலையின் கீழ் சுகமாயிருந்து மழைத் துன்பமின்றி பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு அந்த ஊழிமேகங்கள் ஏழு நாள் இரவும் பகலும் பெரு மழையைப் பெய்தும் கோபாலர்கள் துன்பமின்றி இருக்கக் கண்ட இந்திரன் கண்ணபிரானுடைய மகிமையை உணர்ந்து பயந்து, மேகங்களை அனுப்பிவிட்டு பெருமானைச் சரணமடைந்தான். மழை நின்ற பிறகு ஆயர்களைத் தத்தம் இருக்கைக்குச் செல்லுமாறு செய்து அம்மலையைப் பழையபடியே வைத்தனர்.

    அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்
         ஆனா யருமா நிரையும் அலறி
    எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப,
         இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்தமலை
    தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புனம்
         மேய்கின்ற மான் இனம் காண்மின்என்று
    கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்
         கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.   ---பெரியாழ்வார்

விதுரன் இல் வருபவன் ---

பூபாரம் தீர்க்கப் புகுந்த புயல் வண்ணராகிய கண்ணபிரான், பாண்டவர்கள் தூதனாகச் சதுரங்க சேனைகள் சூழ அத்தினபுரத்திற்குச் சென்றார்.

அவருடைய வருகையை உணர்ந்து துரியோதனனைத் தவிர, ஏனைய திருதராட்டிர புதல்வர்களும், பீஷ்மர், துரோணர் முதலிய பெரியோர்களும், நன்கு அலங்கரித்துக் கொண்டு, பகவானை எதிர் கொண்டார்கள். நகரத்து ஜனங்கள் கமலக் கண்ணனைக் காண வேண்டுமென்று விரும்பி, வாகனங்களிலும் நடந்தும் வந்து எதிர்கொண்டார்கள். பகவான் தன்னை எதிர் கொண்ட பீஷ்மர் துரோணர் முதலியோர் சூழ நகர வீதியில் சென்றார். அவரை மகிழ்விப்பதற்காக நகரத்தை நன்கு அலங்கரித்து, வழிகளில் இரத்தினங்களை இழைத்து வைத்தனர். பெருமானைக் காணவேண்டி வீட்டில் எழுதிய சித்திரங்களைத் தவிர, மற்ற எல்லா ஜனங்களும், மார்க்கத்தில் குழுமி பூமியில் நின்று துதித்தார்கள். பகவான் கூட்டத்தின் மிகுதியால் மெல்லத் தேரை நடத்தி திருதராஷ்டிரனுடைய பொன்மாளிகையைச் சேர்ந்தார். பகவான் வருகையை உணர்ந்து திருதராஷ்டிரன் எழுந்து உபசரித்தான். கிருபர், பாகுலிகர், சோமதத்தர் முதலிய எல்லாரும் பகவானை வரவேற்று உபசரித்தனர். திருதராஷ்டிரன் அனுமதியின் மேல் பகவான் பொன் தவிசில் எழுந்தருளியிருந்தார்.

பிறகு, அத்தையாகிய பிரதையைப் பார்த்துவிட்டு, துரியோதனனுடைய பெரிய அரண்மனைக்குச் சென்றார். கொடுமுடிபோல் உயர்ந்த மேல்மாடியில் ஏறினார். அங்கு ஆயிரம் அரசர்கள் சூழ இருந்து துரியோதனனைக் கண்டார். துரியோதனன், துர்ச்சாசனன், சகுனி முதலியோருடன் வரவேற்றான். கண்ணன் அவர்களுடன் தகுதிக்குத் தக்கவாறு பேசினார். பகவானுக்காகச் சிறந்த உணவுகளைத் தயாரித்து விருந்துக்கு அழைத்தான். வாசுதேவர், “துரியோதனா! நான் பாண்டவர் தூதனாக வந்திருக்கிறேன்; தூதர்கள் காரியம் முடியா முன் புசிப்பதில்லை. நீ பாண்டவர்களைப் பகைக்கின்றாய். பாண்டவர்கள் என்னுடைய பிராணன்கள். அவர்களைப் பகைத்தவர்கள் என்னைப் பகைத்தவர்களே; அவர்களை நேசிக்கிறவன் என்னை நேசிப்பவனே. எவன் ஆசையையும் கோபத்தையும் கொண்டு குணவானை விரோதிக்கிறானோ அவனுடைய அன்னம் உண்ணத்தக்க தன்று. மனத்தையும் கோபத்தையும் ஜெயிக்காமல், எந்த அதமன் நற்குணமுள்ள ஞாதிகளை (தாயாதிகளை)ப் பகைக்கிறானோ, அவன் வெகுகாலம் செல்வத்துடன் நிலைத்திருக்க மாட்டான். அவனுடைய அன்னமும் புசிக்கத் தக்கதன்று. விதுரருடைய அன்னம் ஒன்றே புசிக்கத் தக்கது” என்று கூறிவிட்டு, தம்மிடத்து மெய்யன்பு பூண்ட விதுரர் வாழும் திருமாளிகைக்கு எழுந்தருளினார்; துரோண பீஷ்மாதி பெரியோர்கள் வீட்டிற்குச் சென்றாரில்லை.

விதுரர் பகவானை எதிர்கொண்டு மணித் தவிசு நல்கி, வாயார வாழ்த்தி உபசரித்தார். தவம்புரியும் முனிபுங்கவர்க்கும் எளிதிற் கிடைக்காத பெருமான் தன்வீட்டில் வலிய வந்ததை எண்ணி உடல் புளகித்து, கண்ணீர் சொரிந்து, கைகுவித்துத் துதிப்பாராயினார்.

இருந்து உவந்தருள் இறைவனை இறைஞ்சினான், இறைஞ்சிப்
பெருந் துவந்தனைப் பிறப்பையும் இறப்பையும் பிரித்தான்,
மருந்து வந்தனை அமரருக்கு அருளிய மாயோன்,
விருந்து வந்தனன் என்றுஉளம் உருகிய விதுரன்.

கோடு கொண்டகைக் குரிசிலை, அலர்ந்த கோகனதக்
காடு கண்தடுஎனக் கண்டு,தன் கண்இணை களியாத்
தோடு கொண்டதார் விதுரன்இப் பிறப்பையும் தொலைத்தான்
வீடு கண்டவர்க்கு இயம்பவும் வேண்டுமோ வேண்டா.

உள்ளினான், உணர்ந்து உள்ளமும் உருகினான், எழுந்து
துள்ளினான், விழுந்து இணைஅடி சூடினான், துயரைத்
தள்ளினான், மலர்த் தடக்கையால் தத்துவ அமுதை
அள்ளினான் எனக் கண்களால் அருந்தினான் அளியோன்.

முன்னமே துயின்று அருளிய முது பயோததியோ,
பன்னகாதிப் பாயலோ, பச்சை ஆலிலையோ,
சொன்ன நால்வகை சுருதியோ, கருதி நீ எய்தற்கு
என்ன மாதவம் செய்தது இச் சிறுகுடில் என்றான்.

"மும்மையாகிய புவனங்கள் முழுதையும் அருந்தும்
எம்மைஆளுடைய நாயகன் விருந்தினுக்கு இசைந்தான்
அம்ம!" என்றனன் ஆறுநூ றாயிரம் மடையர்
தம்மை நோக்கினன், அவர்களும் விரைவுடன் சமைத்தார்.

இங்ஙனம் விதுரர் பேரானந்தக் கடலில் மூழ்கி புத்தேளிர் புத்தமுதினுஞ் சுவையுடைத்தாய் நால்வகை உண்டிகளையும் அறுசுவைகளாகச் செய்வித்து, கண்ணபிரானுக்கு விருந்து செய்வித்து, ஒருவரும் பெறாத பெரும்பேற்றைப் பெற்று உய்ந்தார்.

கருத்துரை


         திருமால் மருகரே! பரம! குருபர! இமயவல்லியின் புதல்வரே! பழநி மலைமேல் நின்ற பெருமாளே! அடியேன் ஆசைப் பெருங்கடலில் அழுந்தி அவமே துன்புறாமல் மெய்ப்பொருளை உபதேசிக்க கோழிக் கொடியுடன் மரகத மயிலில் வந்து அருள் புரியவேண்டும்.


No comments:

Post a Comment

பொது --- 1101. குதறுமுனை அறிவுகொடு

  அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குதறும்முனை அறிவுகொடு (பொது) முருகா!  திருவடி ஞானத்தை அடியேனுக்கு அருள்வீராக. தனதனன தனதனன தனதனன தனதனன   ...