அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
ஞானங்கொள் (பழநி)
பழநியப்பா!
தேவரீருடன்
இரண்டறக் கலந்து, மெய்ஞ்ஞானக் கலையின்
மீதூர்ந்து,
உலகெங்கும்
வியாபித்து நிற்க அருள் புரிவீர்.
தானந்த
தனன தான தானந்த தனன தான
தானந்த தனன தான ...... தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய ...... வரையேறி
நாவின்ப
ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி
ஊனங்க
ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்
ஓரந்த
மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்
தேனங்கொ
ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச
வடிவி மோகி யோகங்கொள் மவுன சோதி
சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா
கானங்கள்
வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு ...... முருகோனே
காமன்கை
மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
ஞானம் கொள் பொறிகள் கூடி, வான் இந்து கதிர் இலாத
நாடு அண்டி, நமசி வாய ...... வரை ஏறி,
நா
இன்ப ரசம் அதான ஆநந்த அருவி பாய,
நாதங்களொடு குலாவி ...... விளையாடி,
ஊனங்கள், உயிர்கள், மோகம், நான் என்பது அறிவு இலாமல்
ஓம்அங்கி உருவம் ஆகி, ...... இருவோரும்
ஓர்
அந்தம் மருவி, ஞான மாவிஞ்சை முதுகின்
ஏறி,
லோகங்கள் வலம் அது ஆட ...... அருள்தாராய்.
தேன், அம் கொள் இதழி, தாகி, தார் இந்து, சலில வேணி,
சீர் அங்கன், எனது தாதை, ...... ஒருமாது
சேர்பஞ்ச
வடிவி, மோகி, யோகங்கொள் மவுன சோதி,
சேர்பங்கின் அமல நாதன் ...... அருள்பாலா!
கானங்கள், வரைகள், தீவு, ஓதங்கள் பொடிய, நீல
காடு அந்த மயிலில் ஏறு ...... முருகோனே!
காமன்
கை மலர்கள் நாண, வேடம் பெண் அமளி
சேர்வை
காண், எங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
பதவுரை
தேன் அம் கொள் இதழி --- தேனை உடையதும்
அழகியதுமான கொன்றை மலரையும்,
தாகி (தாதகி) --- ஆத்தி மலரையும்,
தார் --- மாலையையும்,
இந்து --- சந்திரனையும்,
சலிலம் --- கங்கா தேவியையும் அணிந்துள்ள,
வேணி --- சடை முடியை உடையவரும்,
சீர் அங்கன் --- சிறந்த அருள்
திருமேனியுடையவரும்,
எனது தாதை --- அடியேனுடைய பிதாவும்,
ஒரு மாது --- ஒப்பற்ற பெண்ணரசும்,
சேர் பஞ்ச வடிவி --- ஐந்து சக்திகளின்
வடிவத்தைப் பொருந்தியவரும்,
மோகி --- சிவத்தின் காதலுடைய ஒருவர்,
யோகங் கொள் மவுன ஜோதி --- சிவயோக மேவிய மௌன
நிலையுடையவார் காணும் அருட்பெருஞ் சோதியுமாகிய உமாதேவியார்,
சேர் பங்கின் --- சேர்ந்திருக்கின்ற
இடப்புறத்தை உடையவரும்,
அமலன் --- மலரகிதரும்,
நாதன் --- எல்லா உலகங்களுக்குத் தனிப்பெருந்
தலைவருமாகிய சிவபெருமான்,
அருள்பாலா --- பெற்றருளிய திருக்குமாரரே!
கானகங்கள் --- காடுகளும்,
வரைகள் --- மலைகளும்,
தீவு --- தீவுகளும்,
ஓதங்கள் --- கடல்களும்,
பொடிய --- பொடியாகுமாறு,
நீல --- நீல நிறத்தையுடையதும்,
காடு அந்த --- வனத்தில் உலாவுவதும் அழகியதும்
ஆகிய,
மயிலில் ஏறும் --- மயில்மிசை ஏறியருளும்,
முருகோனே --- முருகக் கடவுளே!
காமன் கை மலர்கள் நாண --- மன்மதனுடைய
கரத்திலுள்ள மலர்க்கணைகள் தம்முடைய வலியிழந்து நாணியழிய,
வேடம் பெண் --- வேட்டுவ குலத்தில் வந்த
வள்ளிநாயகியுடன்,
அமளி சேர்வை காண் --- படுக்கையில்
சேர்ந்திருக்கும்,
எங்கள் பழநி மேவும் ---- எமது பழநி மலையில்
வீற்றிருந்தருளும்,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
ஞானங்கொள் பொறிகள் கூடி ---
ஞானப்பொறிகள் யாவும் ஒருமுகப்பட்டு,
வான் இந்து கதிர் இலாத --- ஆகாயத்தில் உலாவும்
சந்திரன் சூரியன் முதலியவர் இன்றியே ஒளி செய்யும்,
நாடு அண்டி --- உலகத்தில் சேர்ந்து,
நமசிவாய வரையேறி --- பஞ்சாக்ஷரமாகிய
மலையின்மீது ஏறி,
நா இன்பரசம் அது ஆன --- புறக்கருவியாகிய
நாவுக்குப் பேரின்பமான இனிமையான தன்மையைத் தரும்,
ஆனந்த அருவி பாய --- பேரானந்தப் பேரருவி
பாய்ந்து நலம்தர,
நாதங்களொடு குலாவி --- (அந்தச் சிவலோக
சமாதியில் உண்டாகும்) பிரம நாதங்களைக்
கேட்டு அதனுடன் கலந்து,
விளையாடி --- விளையாடல் புரிந்து,
ஊனங்கள் --- ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய,
உயிர்கள் மோக --- உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும்,
நான் என்பது அறிவு இல்லாமல் --- நான் என்ற
தன்மையும் அற்று (ஜீவ போதமற்ற நிலையில் நின்று),
ஓம் அங்கி உருவம் ஆகி --- பிரணவ ஜோதி வடிவாகி,
இருவோரும் ஓர் அந்தம் மருவி ---
ஜீவான்மாவாகிய அடியேனும் பரமான்மாவாகிய தேவரீரும் ஒரு வடிவமாகி அத்து விதமாகிக்
கலந்து,
ஞான மாவிஞ்சை முதுகின் ஏறி --- மெய்ஞ்ஞானக்
கலையாகிய புரவியின் முதுகின் மீது ஊர்ந்து,
லோகங்கள் --- உலகமுழுவதும்,
வலமது ஆட --- வலமாக பவனி வரும் பெருவாழ்வை,
அருள்தாராய் --- அருள் புரியவேண்டும்.
பொழிப்புரை
தேன் துளிக்கும் அழகிய கொன்றை மலரையும், ஆத்திமலர் மாலையையும், பிறை மதியையும், கங்கா நதியையும் அணிந்துள்ள சடைமுடியை உடையவரும், சிறந்த அருள் திருமேனியை உடையவரும், அடியேனுடைய தந்தையாரும்; ஒப்பற்ற பெண்மணியும், ஐம்பெருஞ் சக்திகளாக இருப்பவரும், சிவயோகியர்கள் மௌன நிலையில் காணத் தகுந்த
அருட்சோதியரும் ஆகிய உமையம்மையை ஒரு பங்கில் உடையவரும், மல ரகிதரும், தனிப்பெருந் தலைவருமாகிய சிவ பெருமான்
திருவருளால் பெற்றருளிய திருப்புதல்வரே!
காடுகளும் மலைகளும் தீவுகளும் கடல்களும்
தூள் பட்டொழிய மிக வேகத்துடன் பறக்கும், நீல
நிறத்துடன் கூடிய கானமயில் மீது ஏறி வந்தருள்கின்ற முருகப் பெருமானே!
மன்மதனுடைய கரத்திலுள்ள மலர்க்கணைகள்
மயக்கும் ஆற்றலின்றி நாணி அழிய,
வேட்டுவர்
குலத்திற் பிறந்த வள்ளியம்மையாருடைய படுக்கையின் மீது பொருந்தியுள்ள, எங்களுடைய பழநி மலையில் எழுந்தருளியுள்ள
பெருமையின் மிக்கவரே!
ஞானேந்திரியங்கள் ஒருவழிப் பட்டு நின்று, ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சந்திர சூரியர்
இன்றியே ஒளிசெய்யும் நாட்டினை அடைந்து, நமசிவாயம்
என்ற ஐந்தெழுத்தாகிய மலையின்மீது ஏறி, புறக்கருவியாகிய
நாவிற்கும் நல்லின்பத்தை நல்கும் அமிர்தரசத்தோடு கூடிய பேரானந்தப் பேரருவிபாய, பிரமநாதங்களுடன் குலாவி விளையாடல்
புரிந்து, உடம்புடன் கூடிய
உயிர்களை மயக்கும் மாயையையும், நான் என்ற ஜீவ
போதத்தையும் இழந்து பிரணவ ஜோதி மயமாகி, ஜீவனாகிய
அடியேனும், சிவமாகிய தேவரீரும்
வேற்றுமையின்றி அத்துவிதமாகக் கலந்து மெய்ஞ்ஞான சாத்திரமாகிய குதிரை மீதேறி
உலகங்களை எல்லாம் வலம் வர அருள் புரிவீர்.
விரிவுரை
ஞானங்கொள்
பொறிகள் கூடி
---
விரிந்து
கிடக்கின்ற பொறிகளை எல்லாம் ஒரு முகமாக்கி நிற்றல். பொறி புலன்கள் விரிந்திருப்பதால்
துக்கமே பெறுகின்றோம். புலன்கள் பலவழிப்படச் செய்யும் பூசையை இறைவனும்
ஏற்றுக்கொள்வான்.
கைஒன்று
செய்ய, விழிஒன்று நாட, கருத்து ஒன்று எண்ண,
பொய்ஒன்று
வஞ்சக நாஒன்று பேச, புலால் கமழும்
மெய்ஒன்று
சார, செவிஒன்று கேட்க, விரும்பும்யான்
செய்கின்ற
பூசை எவ்வாறு கொள்வாய், வினை தீர்த்தவனே. --- பட்டினத்தடிகள்
வானிந்து
கதிரிலாத நாடு
:-
சூரிய
சந்திரர்கள் இல்லாமலேயே ஒளி செய்யும் சிவ ஜோதியுடன் கூடிய ஞான உலகம்; ஆங்கு பல கோடி வெண் மதிகளின்
நிலாக்கற்றை வீசி அதிமோகரத் தன்மையுடன் சிவயோகிகள் உலாவுவார்கள்.
நா
இன்ப ரசமதான ஆநந்த அருவி பாய ---
பொறி
புலனொன்றி சித்திரதீபம் போல் பேசா அநுபூதியில் தன் வசமிழந்து நிற்பார்களுக்கு
அமிர்தரசமான ஆனந்த வெள்ளம் பொங்கித் ததும்பிக் கரை புரண்டோடுகின்றது. அவ்வமிர்த ரச
பானஞ்செய்து கொண்டு உடற் பயிற்சியும் உயிர்ப்பசியுமற்று “உரையவிழ உணர்வவிழ உளமவிழ
உயிரவிழ உளபடியை உணரும்” அநுபூதியில் நிலைத்து நிற்பர்.
நாதங்களொடு
குலாவி
---
சிவயோகிகள்
பிராணவாயுவை மறித்து, முதுகுத் தண்டின் இடையே
உள்ள கழுமுனை வழியாக ஆறாதாரங்களையும் படிகளாக் கொண்டு, துவாதசாந்தப் பெரு வெளியாகிய
சஹஸ்ராரத்தில் செலுத்தி நிற்பர். அங்கு கேட்டறியாத இனிய கீதங்கள் உண்டாகும்.
அவ்வொலியைக் கேட்டோர் அந் நாதமயமாகி அநுபவித்து அறியாத ஆநந்தமுடன் இன்புறுவர்.
“சூலம் பெற வோடிய
வாயுவை
மூலந்திகழ் தூண்வழியேயள விடவோடிப்
பாலங்கிள
ராறுசி காரமொ
டாருஞ்சுட ராடுப ராபர
பாதம்பெற ஞானச தாசிவ மதின்மேவிப்
பாடுந்தொனி
நாதமு நூபுர
மாடுங்கழ லோசையி லேபரி
வாகும்படி யேயடி யேனையும் அருள்வாயே” --- (மூலங்கிள) திருப்புகழ்
நான்
என்பது அறிவிலாமல் ---
ஆன்ம
அறிவுகெட்டு சிவபோதம் தலைப்பட்டு நிற்கும் நிலை.
“உடலம் வேறு, யான்வேறு, கரணம் வேறு வேறாக
உதறி,வாச காதீத அடியூடே
உருகி,ஆரிய ஆசர பரமயோகி ஆமாறு, உன்
உபய பாத ராசீகம் அருள்வாயே” ---
(அடைபடாது)
திருப்புகழ்
இருவோரும்
ஓர் அந்தம் மருவி ---
சீவனும்
சிவனும் இரண்டறக் கலந்து நிற்கும் அத்துவித முக்தி. இருவினையொப்பு மலபரிபாகம்
உண்டாக, சக்தி பதிந்த
காலத்தில் சீவன் தன் நிலைகெட்டு சிவத்துடன் ஒன்றி, இன்பந் துய்க்கும்.
“இருவினைமு மலமுமற இறவியொடு பிறவியற
ஏகபோகமாய் நீயுநானுமாய்
இறுகும் வகை பரமசுக மதனையரு ளிடைமருதில்
ஏகநாயகா லோகநாயகா இமையவர் பெருமாளே” --- (அறுகுநுனி) திருப்புகழ்
சேர்
பஞ்ச வடிவி
---
இறைவனுக்கு
சத்தியே திருமேனியாம். இறைவன் மண்,
புனல், அனல், கால், வான் என்னும் ஐம்பெரும் பொருள்களிலும்
இரண்டறக் கலந்து நிற்றலால், அவற்றிற்குரிய ஐவகை நிறங்களும்
இறைவற்கு உள.
மண்ணின்
நிறம் பொன்மை.
புனலின்
நிறம் வெண்மை.
அனலின்
நிறம் செம்மை.
காலின்
நிறம் கருமை.
வானின்
நிறம் புகைமை.
இவ்வைவகை
நிறங்களை இறைவன் தாங்கி யிருக்கின்றான்.
“நிறங்கள்ஒர் ஐந்துஉடையாய்,
விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய்” --- திருவாசகம்
மண்புனல்
அனல்கால் வான்பால் வடிவுநாற் கோணமாகும்,
தண்பிறை
மூன்று கோணம் தகுமாறு கோணம், வட்டம்,
வண்பொன்மை
வெண்மை செம்மை கறுப்பொடு, தூம வன்னம்
எண்தரும்
எழுத்துத் தானும் வரயல வவ்வு மாமே. ---சிவஞானசித்தியார்.
ஆதலால்
இறைவனுக்கு “ஓம் பஞ்சவர்ணாய நம”. என்ற மந்திரமுளது. திரு உறந்தையில் உள்ள
பெருமானுக்கு பஞ்சவர்ணேஸ்வரன் என்ற திருநாமம் உள்ளது. அவ்விறைவனுடன் பொன்னும்
மணியும்போல் கலந்து நிற்கும் உமாதேவி யாருக்கும் அந்நிறங்கள் ஐந்தும் உள என்பார்.
இனி
ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியா சக்தி ஞானசக்தி என்று ஐந்து
சக்திகளாகி நிற்கின்றார் என்பதும் ஒன்று.
கானங்கள்.......பொடிய
- மயில்
---
மயிலின்
வேகத்தால் மலைகளும், வனங்களும் ஏழு
தீவுகளும் ஏழு கடல்களும் தூள்பட்டுக் கலங்குகின்றன.
சூசை
நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர்குழம்பக்
கசையிடு
வாசி விசை கொண்ட வாகனப்பீலியின் கொத்து
அசைபடு
கால்பட்டு அசைந்தது மேரு, அடிஇடஎண்
திசைவரை
தூள்பட்ட, அத்தூளின் வாரி திடர்பட்டதே. --- கந்தர் அலங்காரம்.
காமன்
கை மலர்கள் நாண ---
ஞானபண்டிதனாகிய
பழநிமலைப் பரமன் வள்ளி நாயகியுடன் அமளி மேல் வீற்றிருந்தபோது, மன்மதன் எம்பெருமான் மீது
மலர்க்கணைகளைப் பொழிய அக் கணைகள் பெருமானை மயக்கும் ஆற்றலின்றி நாணி வீழ்ந்தன
என்பதாம். மாரன் கணையால் குமாரன் மயங்குவது யாங்ஙனம்? காமனை எரித்த கண்ணுதற் கடவுளுக்கும் ஞான
குருவாயிருந்து, ஒரு மொழியை உபதேசித்த
மெய்ஞ்ஞானக் குருநாதன்மீது கணை தொடுத்து மயக்க வந்த மாரனது மதியீனத்தை யாருடன்
சொல்லி நகையாடுவோம்? நன்று; நன்று; மாரன் தொழில்! “ஞானந்தானுருவாகிய
நாயகனியல்பை யானு நீயுமா யிசைந்து மென்றாலஃதெளிதோ” என்ற சிங்கமுகனுக்கு இருந்த
மதியும் மாரனிடம் இல்லாமற் போனதற்கு வருந்தாதிருக்க முடியவில்லை. ஞான சக்தியைக்
கரத்தில் தாங்கிய ஞான குரு-”மகமாயை களைந்திட வல்லபிரான்”- ஞான குறமாதணையும்
ஞானதாதாவோ மாரன்கணைக்கு மயங்குவன்?
பாவம்!
மாரன் நாணி அவன் கணையும் நாண வறிதே திரும்பினான்.
“மதனன்விடு புஷ்பசர
படலம் உடல் அத்தனையும்
மடல் எழுதி நிற்கும் அதிமோகத் தபோதனனும்” --- வேடிச்சி காவலன்வகுப்பு.
கருத்துரை
சிவபுதல்வரே!
மயில்வாகனரே! பழநிமலைப் பரம! ஞானப்பொறிகள் கூடி, கதிரும், மதியுமில்லாத நாடு அடைந்து, சிவாநந்த வெள்ளம் பருக, சீவ போதங் கெட்டு பிரணவ ஒளியுடன், தேவரீருடன் இரண்டறக் கலந்து, மெய்ஞ்ஞானக் கலையின் மீதூர்ந்து, உலகெங்கும் வியாபித்து நிற்க அருள்
புரிவீர்.
No comments:
Post a Comment