அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுருளளக பார (பழநி)
பழநியப்பா!
உமது அடியார்
போல் அடியேன் வேதங்களை ஓதி,
மநுநெறியில்
நடந்து,
அறிவை அறிவால் அறிந்து
நிறைவாகி,
எங்கும் பரவெளியாகக்
கண்டு,
மெய்ஞ்ஞான இன்ப அமுதை
ஒழியாது பருக அருள்புரிவீர்.
தனதனன
தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக
பார கொங்கை மகளிர்வச மாயி சைந்து
சுரதக்ரியை யால்வி ளங்கு ...... மதனூலே
சுருதியென
வேநி னைந்து அறிவிலிக ளோடி ணங்கு
தொழிலுடைய யானு மிங்கு ...... னடியார்போல்
அருமறைக
ளேநி னைந்து மநுநெறியி லேந டந்து
அறிவையறி வால றிந்து ...... நிறைவாகி
அகிலபுவ
னாதி யெங்கும் வெளியுறமெய்ஞ் ஞான இன்ப
அமுதையொழி யாத ருந்த ...... அருள்வாயே
பருதிமகன்
வாசல் மந்த்ரி அநுமனொடு நேர்ப ணிந்து
பரிதகழை யாமுன் வந்து ...... பரிவாலே
பரவியவி
பீஷ ணன்பொன் மகுடமுடி சூட நின்ற
படைஞரொடி ராவ ணன்ற ...... னுறவோடே
எரிபுகுத
மாறி லண்டர் குடிபுகுத மாறு கொண்ட
ரகுபதியி ராம சந்த்ரன் ...... மருகோனே
இளையகுற
மாது பங்க பழநிமலை நாத கந்த
இமையவள்த னால்ம கிழ்ந்த ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருள்
அளக பார, கொங்கை மகளிர் வசமாய்
இசைந்து,
சுரத க்ரியையால் விளங்கு ...... மதன் நூலே
சுருதி
எனவே நினைந்து, அறிவிலிகளோடு இணங்கு
தொழில் உடைய யானும், இங்குஉன்...... அடியார்போல்
அருமறைகளே
நினைந்து, மநுநெறியிலே நடந்து,
அறிவை அறிவால் அறிந்து, ...... நிறைவு ஆகி,
அகில
புவன ஆதி எங்கும் வெளியுற, மெய்ஞ் ஞான இன்ப
அமுதை, ஒழியாது அருந்த ...... அருள்வாயே.
பருதி
மகன் வாசல் மந்த்ரி அநுமனொடு, நேர் பணிந்து,
பரி தக அழையா முன் வந்து, ...... பரிவாலே
பரவிய, விபீஷணன் பொன் மகுடமுடி சூட, நின்ற
படைஞரொடு இராவணன் தன் ...... உறவோடே
எரிபுகுத, மாறு இல் அண்டர் குடிபுகுத, மாறு கொண்ட
ரகுபதி இராம சந்த்ரன் ...... மருகோனே!
இளைய
குறமாது பங்க! பழநிமலை நாத! கந்த!
இமையவள் தனால் மகிழ்ந்த ...... பெருமாளே.
பதவுரை
பருதி மகன் --- சூரியனுடைய புதல்வனாகிய
சுக்ரீவனுடைய,
வாசல் மந்த்ரி --- அரண்மனை வாசலில் மந்த்ரி
தொழில் பூண்டிருந்த,
அநுமனோடு --- அநுமானுடைய உதவியால் அவருடன்,
பரி தக அழையா முன் வந்து --- (ஸ்ரீராமர்)
தன்னை அன்புடனும் தகவுடனும் அழைப்பதற்கு முன்னமேயே தானே பக்தியுடன் அடைந்து,
நேர் பணிந்து --- ஸ்ரீராமர் சந்நிதியில்
வணங்கி,
பரிவால் பரவிய விபீடணன் --- மிகுந்த அன்புடன்
துதி செய்த விபீஷணர்,
பொன் மகுடமுடி சூட --- பொன்னாற் செய்யப்பட்ட
மணிமகுடம் புனையவும்,
நின்ற படைஞரோடு --- எதிர்த்து நின்ற அதிர
சேனைகளுடன்,
இராவணன் தன் உறவோடே --- இராவணன் தனது
சுற்றத்தவர்களுடன்,
எரி புகுத --- நெருப்பிற்கு இரையாகி மடியவும்,
மாறு இல் அண்டர் --- தருமவிரோதம் இல்லாத
தேவர்கள்,
குடி புகுத --- இந்திரலோகத்தில் குடிபுகுந்து
வாழவும்,
மாறு கொண்ட --- இராவணாதிகளிடம் பகை கொண்ட,
ரகுபதி இராமச்சந்த்ரன் மருகோனே --- இரகு
குலத்திற்குத் தலைவராகத் திருவவதாரம் செய்த ஸ்ரீராமச்சந்தர மூர்த்தியினுடைய
மருகரே!
இளைய குறமாது பங்க --- இளம்பருவமுடைய
வள்ளி நாயகியாரை ஒரு பாகத்தில் கொண்டவரே!
பழநி மலை நாத --- பழநி மலையில்
எழுந்தருளியுள்ள தலைவரே!
கந்த --- கந்தப்பெருமாளே!
இமையவள் தன்னால் மகிழ்ந்த --- இமவானது
திருக்குமாரியாராகிய உமையம்மையார் திருவுளம் மகிழ்கின்ற,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
சுருள் அளகபார --- சுருண்டுள்ள கூந்தல்
தொகுதியையும்,
கொங்கை --- தனபாரங்களையும் உடைய,
மகளிர் வசமாய் இசைந்து --- பொது மாதர்களுடைய
வசத்தில் சேர்ந்து,
சுரத க்ரியையால் விளங்கும் --- கலவியின்
தொழில்களை எல்லாம் விளக்கிச் சொல்வதால் விளங்குகின்ற,
மதனூலே சுருதியென (ஏ-அசை) நினைந்து --- மதன
சாத்திரத்தையே வேதம் என்று எண்ணி,
அறிவு இலிகளோடு இணங்கு தொழில் உடைய யானும் ---
சிறிது கூட அறிவே இல்லாத கீழ்மக்களோடு சேர்ந்து உறவாடுகின்றதையே தொழிலாகக் கொண்ட
அடியேனும்,
இங்கு உன் அடியார் போல் --- இந்த உலகில் தேவரீருடைய
அடியார்களைப் போல்,
அரு மறைகளே நினைந்து --- அருமையான வேதங்களையே
மெய்ந்நூலாக எண்ணி,
மநுநெறியிலே நடந்து --- மநு தரும
சாத்திரத்திற் கூறிய நீதிநெறியிலேயே ஒழுகி,
அறிவை அறிவால் அறிந்து --- அறிவை அறிவினால்
அறிந்து,
நிறைவாகி --- பூரண ஞானம்பெற்று,
அகில புவன ஆதி எங்கும் வெளியுற --- எல்லா
உலகங்களிலும் எங்கும் சுத்த ஞானவெளியாகவே கண்டு,
மெய்ஞான இன்ப அமுதை --- உண்மையறிவான
பேரின்பத் தெள்ளமுதை,
ஒழியாது அருந்த அருள்வாயே --- எக்காலமும் குறைபாடின்றி
பருகிக்கொண்டிருக்கத் திருவருள் செய்வீர்.
பொழிப்புரை
சூரிய குமாரனாகிய சுக்ரீவனுடைய அரண்மனை
வாசலில் மந்திரித் தொழில் பூண்டிருந்த அநுமார் தன்னைத் தக்கவனென்று கூறி உதவ, அவருடன் ஸ்ரீராமர் பரிவுடன் தன்னை அழையா
முன்னரே தானே வலிதில் வந்து, அவருடைய சந்நிதியில்
பணிந்து மிகுந்த மெய்யன்புடன் தோத்திரம் புரிந்த விபீஷணர் இலங்கைக்கு அரசராகப்
பொன்முடி புனைந்து இன்புறுமாறும்; எதிர்த்து நின்ற சேனைகளுடனும், பந்துக்களுடனும் இராவணன் அழிந்து தீக்கு
இரையாகுமாறும், அறநெறி பிறழாத
அமரர்கள் சுவர்க்கலோகத்தில் குடிபுகுந்து இன்புறுமாறும், இராவணாதிகளிடம் மாறுபாடு கொண்டவரும்
இரகு குலத்திற்குத் தலைவராக திருவவதாரம் புரிந்தவருமாகிய ஸ்ரீஇராமச்சந்திரப்
பெருமானுடைய மருகரே!
இளம் பருவமுடையவரும் குறவர் குடியில்
பிறந்தவருமாகிய வள்ளியம்மையாரை ஒரு பாகத்தில் கொண்டவரே!
பழநி மலையில் எழுந்தருளியுள்ள
எப்பொருட்கும் இறைவரே!
கந்தவேளே!
இமயவல்லியாகிய உமாதேவியார் திருவுளம்
மகிழ்கின்ற பெருமையில் சிறந்தவரே!
சுருண்டு உள்ள அளகபாரத்தையும், தனபாரங்களையும் உடைய விலைமகளிர் வசமாக
இணங்கி, கலவித் தொழிலை
விரித்துரைக்கும் காமநூலையே வேதமென்று எண்ணி, அறிவற்ற கசடர்களுடைய கூட்டுறவைக் கொண்ட
அடியேன், இந் நிலவுலகில்
தேவரீருடைய மெய்யடியார்களைப் போல்,
அறிவைத்
தருகின்ற அரிய வேதங்களையே பற்றுக் கோடாகக் கொண்டு மநுநெறியில் நடந்து, அறிவை அறிவினால் அறிந்து, பூரண ஞானம் பெற்று, எல்லா உலகங்களிலும் எங்கும் வெட்ட
வெளியாகவே கண்டு, மெய்ஞ்ஞானப்
பேரின்பத் திருவமுதை எக்காலமும் இடையறாது பருகி இன்புற்றிருக்கத் திருவருள்
புரிவீர்.
விரிவுரை
மதன்
நூலே சுருதி எனவே நினைத்து ---
மாயைக்கு
உறைவிடமாய் இருக்கின்ற காம நூலையே கதி தருகின்ற ஞானநூல் என்று எண்ணி, அதனைப் படித்து, அதன் கிளை நூல்களாகிய அறிவைக்
கெடுக்கின்ற சுவடிகளைப் பெரிதும் பாராட்டிக் கெடுவதை மறுக்கின்றார்.
அறிவிலிகளோடு
இணங்கு தொழில்
---
மனிதனை
உயர்த்துவதும் தாழ்த்துவதும் நட்பேயாகும். நல்லினம் சேர்ந்தோர் உயர்வர். தீ நட்புக்
கொண்டோர் கெடுவர். வானின்று வந்த தண்ணீர், தான் சார்ந்த நிலத்தின் வண்ணம் நிறம்
சுவை முதலியன அடைதல் போல (உவர் நிலத்திற் சார்ந்த நீர் உவர்ப்பாகவும், செந்நிலத்தைச் சார்ந்த நீர்
சிவப்பாகவும் ஆதல் காண்க) மனிதனுடைய அறிவு தான் சேர்ந்த நட்பினர்களுடைய
நற்குணங்களையும் தீக்குணங்களையு மடைகின்றது.
நிலத்து இயல்பால் நீர்திரிந்து அற்றுஆகும்,
மாந்தர்க்கு
இனத்து இயல்பு அதாகும் அறிவு --- திருக்குறள்
அறிவில்லார்
கேண்மை அறிவைத் தேய்த்து, அறத்தை மாய்த்து, அருநரகத்து உய்க்கும்.
அருமறைகளே
நினைந்து
---
மறை
வேதம். வித்-என்னும் தாதுவினின்று தோன்றிற்று. வித் என்பது அறிவு (ஞானம்) எனப்
பொருளாம். வேதம், ஜகலக்ஷணம், ஜீவபந்த லக்ஷணம், அவற்றினுற்பத்தி, இலயம், மோக்ஷலக்ஷணம், பரலக்ஷணம், யோகமுறை, ஞானமுறை முதலியவெல்லாம் அறிவிக்கும்
ஆற்றலுடைத்து. ஆதிநூல், ஆரணம், எழுதாக்கிளவி, அத்தியாயம், அந்தணர் வாக்கு, ஒத்து, சாகை, சுருதி, நிகமம், மறை, முதனூல் எனும் பல பெயர் கொண்டு
விளங்கும்.
பரமேசுரனது
திருவருளால் நாதப் பிரமமாகி, குடிலையில் இருந்து
அகார உகார மகாரங்களாகிய மூன்று பிரணவம் விந்துநாதங்களோடு தோன்ற அவற்றின்
கண்ணிலிருந்து அற்புதமும் பலமும் வேதமந்திர ரூபமும் பெருகற்கு ஏதுவான மூன்று பேத
பாதத்தால் காயத்ரி பிறந்து, அது சமஷ்டி வியஷ்டி என
இரண்டாகி அவை, சிவபிரானுடைய
கிழக்குமுக முதல் நான்கு முகங்களின் வாயிலாக இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்னும் நான்கு வேதங்களையும்
நல்கின. தற்புருஷ முகத்திற் றோன்றிய இருக்கு வேதம் 21 சாகையும், அகோரமுகத்திற் றோன்றிய யஜுர்வேதம் 101 சாகையும், சத்யோஜாத முகத்திற் றோன்றிய சாமவேதம் 1000 சாகையும் வாமதேவமுகத்திற் றோன்றிய
அதர்வண வேதம் 9 சாகையும் உடையன.
“ருக்” என்பது மந்திரமெனவும், “யஜுர்” என்பது
கட்டளையெனவும், “சாமம்” என்பது
துதியெனவும், 'அதர்வணம்' எங்குங் கலப்பு (மேல் மூன்று
வேதங்களிலும் கலந்திருக்கு முண்மை) எனவும் பொருள்படும். இவ்வேதம் கருமகாண்டம், ஞான காண்டம் என இரு திறப்படும்.
மநுநெறியிலே
நடந்து
---
மநுநெறி
என்பது மநுதரும சாத்திரம் என்க. “அது ஒரு குலத்துக்கு ஒரு நீதியாக இற்றைக் காலத்துக்கு
ஏற்காத வண்ணம் இருக்கிறதே. ஆதலால், அது சொல்லத்
தக்கதன்று தள்ளத் தக்கதாம்” என்று ஆசங்கிப்போரும் உளர். மநுதரும சாத்திரத்தை மநு என்பவர்
செய்தாரில்லை. ஒரு சட்ட நூலை செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் தகுதி
சக்கரவர்த்திக்கே பொருந்தும். சிறந்த மநுதரும நூலை முதன்முதலாகத் தேவர் சொர்க்க
சக்கரவர்த்தியாகிய கந்தப்பெருமானே செய்தருளினார். அதனை மநு வெளியாக்கினார். ஆதலால்
மநு நூலெனப் பெயர் பெற்றது. பிறகு பல இடைச் செருகல்களுடன் அது திரிவு பெற்றது.
“இந்திரை கேள்வர் பிதாமகன் கதிர்
இந்து சடாதரன் வாசவன் தொழு
தின்புறவே மநுநூல் விளம்பிய கந்தவேளே” --- (சந்திர) திருப்புகழ்
அறிவை
அறிவால் அறிந்து நிறைவாகி ---
அறிவை
அறிவால் அறிந்து நிறைவாகும் தன்மையை அநுபவத்தால் அறிந்து இன்புறுவது அன்றி, எழுத்தாலும் சொல்லாலும் விளக்கும் எளிமை
உடையது அன்று. சிவபெருமான் குகப்பெருமானை வழிபட்டு “குடிலை மந்திரத்தின் பொருள்
யாது” என வினாவ புத்திரகுருவாகிய சத்திவேலாயுதர் “அறிவை அறிவது பொருள்” என்று
விளக்கியருளிய பெருமிதம் உடைத்து என்றால், எம்மனோரால் எண்ணுதற்கும் தகுதியில்லை.
“அரவுபுனைதரு புனிதரும் வழிபட
மழலை மொழிகொடு தெளிதர ஒளிதிகழ்
அறிவை அறிவது பொருளென அருளிய பெருமாளே”
--- (குமரகுருபர) திருப்புகழ்
இவ்
அருமைத் திருப்புகழின் ஆழ்ந்த கருத்தை உன்னி உன்னி உணர்வு தலைப்பட்ட தாயுமான
அடிகள்,
அறிவை அறிவதுவே ஆகும் பொருள்என்று
அறுதிசொன்ன உண்மையினை ஒருநாள் எந்நாளோ”
என்று
திருவாய் மலர்ந்தருளியதை எண்ணுவோர்க்கு இதன் அருமை புலனாகும்.
பாச
அறிவும் பசு அறிவும் போய்ப் பதி அறிவு பெற்று, அவ் அறிவால் அறிவே
வடிவாகவுள்ள இறையை அறிந்து, அறிவு வடிவைப்
பெற்று, அறிவு மயமாகி நிறைவு
பெறுவர் ஆன்றோர். இறைவனுக்கு “அறிவே வடிவு; அறிவே வடிவாய் அமர்ந்து இருப்பாரே”
என்று திருமூலர் திருவாக்கு நோக்கத்தக்கது. “அறிவும் அறியாமையும் கடந்த அறிவு
திருமேனியென்று உணர்ந்து உன் அருண சரணாரவிந்தம் என்று பெறுவேனோ” என்று நம்
அருணையடிகளின் அருள் மொழியை ஈண்டு சிந்திப்பார்க்கு சித்தம் தித்திக்கும்.
“அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில் பிறவொன்று அற நின்ற பிரான்” என்ற
அநுபூதியின் அருமையை என்னென்று இயம்புவது? அது தன்னந்தனியே இருந்து எண்ணும் தோறும்
இன்பக் கடலில் முழுக வைக்கும் அனுபவத் திருவாக்கன்றோ? அழுக்கை அழுக்கால் நீக்குவது போலும், முள்ளை முள்ளால் எடுப்பது போலும் அறிவை அறிவால்
அறிதல் வேண்டும். “அறிவை அறிவதுவே இன்பம்” என்றார். வேறோரிடத்தில், “அறிவை அறிபவர் அறியும் இன்பந் தனை”
(அகரமுத திருப்புகழ்)
அகில
புவனாதி எங்கும் வெளியுற ---
உலகமெல்லாம்
மறைந்து வெறு வெளியாய்க் காணும் மனவாக்கு இறந்த தனிநிலை.
“ஒளியில் விளைந்த உயர்ஞான
பூதரத்து உச்சியின்மேல்
அளியில்
விளைந்த்து ஓர்ஆனந்தத் தேனை, அநாதியிலே
வெளியில்
விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தெளிய
விளம்பியவா, முகம்ஆறுஉடைத் தேசிகனே” ---
கந்தர்அலங்காரம்.
பரமாகிச்
சூக்குமமாய்த் தூலம் ஆகிப்
பரமார்த்த நிலையாகிப் பதத்தின் மேலாம்
சிரமாகித்
திருவருளாம் வெளியாய் ஆன்ம
சிற்சத்தி யாய்ப்பரையின் செம்மை யாகித்
திரமாகித்
தற்போத நிவிர்த்தி யாகிச்
சிவமாகிச் சிவாநுபவச் செல்வ மாகி
அரமாகி
ஆனந்த போத மாகி
ஆனந்தா தீதமதாய் அமர்ந்த தேவே. ---
திருவருட்பா.
அருள்அருவி
வழிந்துவழிந்து ஒழுக ஓங்கும்
ஆனந்தத் தனிமலையே, அமல வேதப்
பொருள்அளவு
நிறைந்து,அவற்றின் மேலும் ஓங்கி,
பொலிகின்ற பரம்பொருளே, புரண மாகி
இருள்அறுசிற்
பிரகாச மயமாம், சுத்த
ஏகாந்தப் பெருவெளிக்குள் இருந்த வாழ்வே
தெருள்அளவும்
உளமுழுதும் கலந்து கொண்டு
தித்திக்கும் செழுந்தேனே தேவ தேவே. --- திருவருட்பா.
மெய்உணர்ந்த
வாதவூர் மலையைச் சுத்த
வெளியாக்கிக் கலந்துகொண்ட வெளியே, முற்றும்
பொய்உணர்ந்த
எமைப்போல்வார் தமக்கும் இன்பம்
புரிந்தருளும் கருணைவெள்ளப் பொற்பே, அன்பர்
கைஉறைந்து
வளர்நெல்லிக் கனியே, உள்ளம்
கரைந்துகரைந் துருகஅவர் கருத்தி னூடே
உய்யுநெறி
ஒளிகாட்டி வெளியும் உள்ளும்
ஓங்குகின்ற சுயஞ்சுடரே உண்மைத் தேவே.--- திருவருட்பா.
எழுத்து
அறிந்து தமைஉணர்ந்த யோகர் உள்ளத்து
இயல்அறிவாம் தருவினில், அன்பு எனுமோர் உச்சி
பழுத்து,அளிந்து,மவுன
நறும் சுவைமேல் பொங்கி,
பதம் பொருந்த அநுபவிக்கும் பழமே, மாயைக்
கழுத்து
அரிந்து கரும மலத் தலையை வீசும்
கடுந்தொழிலோர் தமக்கே நல் கருணை காட்டி
விழுத்துணையாய்
அமர்ந்தருளும் பொருளே, மோன
வெளியில்நிறை ஆனந்த விளைவாம் தேவே. --- திருவருட்பா.
உருத்திரர்
நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர்
யோகியர் சித்தர் முனிவர் மற்றை
வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக்
கருத்து
அழிந்து, தனித்தனியே சென்று வேதங்
களை வினவ, மற்று அவையும் காணேம் என்று
வருத்தம்
உற்று, ஆங்கு அவரோடு புலம்ப நின்ற
வஞ்சவெளியே இன்ப மயமாம் தேவே. ---
திருவருட்பா.
'அகிலபுவனாதி எங்கும்
வெளியுற மெய்ஞ்ஞான
இன்ப அமுதை ஒழியாதுஅருந்த அருள்வாயே'
என்ற
அடியை அன்பர்கள் உணவு கொள்வதற்கு முன் இலையில் படைத்த அன்னத்தை, மண்டலாகாரமாக நீர் விட்டு வணங்கி
(மேற்கண்ட திருப்புகழடியை)ச் சொல்லி குகார்ப்பணம் செய்து உண்பாரேல், அன்னம் உடம்பில் சென்று தூய
ரத்தத்தையும் தூய மனத்தையும் தூய எண்ணத்தையும் உண்டாக்கும்.
பருதி...........விபீஷணன்
மகுட முடிசூட
---
சீதையைச்
சிறை விடுமாறு நன்மதி கூறிய விபீஷணரை இராவணன் சீறிப் பழிக்க, விபீஷணர் தம்மை சேர்ந்த நான்கு
அரக்கர்களுடன் எழுந்து, இராமரைத் தஞ்சம் அடைதல்
பொருட்டு வானர சேனைகள் இருக்குமிடம் வந்து, தன் வரலாற்றையும் இராமபிரானைச் சரணம்
புக வந்ததையும் வானரர்களிடம் கூற,
சுக்ரீவன்
கேட்டு, அதனை ராகவன்பால்
விண்ணப்பம் செய்தான். ஸ்ரீராமர் விபீஷணரைப் பற்றி ஆலோசிக்க, அங்கதன் சுக்ரீவன் முதலியோர் “பகைவன் பாலிருந்து
வந்தவனைச் சேர்ப்பது கூடாது” என்று சொல்ல, அநுமார், “விபீஷணர் சிறந்த குணவந்தர்; நன்மனம் உடையவர்; நட்புக்குத் தகுதியானவர்; ஆதலால் அவரை ஐயமின்றி ஏற்றுக்கொள்வது
நன்மை” என்று கூறினார். இராமர் அநுமதி கொடுக்க, விபீஷணர் தாசரதியின் தாள் மலர்மேல்
வீழ்ந்து “அடியேன் இராவணனுடைய தம்பி; அவனால்
அவமானப்பட்டு எல்லா உயிர்களுக்கும் அடைக்கலமாக விளங்கும் தங்களையே சரணமாக
அடைந்தேன்” என்று
முறையிட்டனர்.
ஸ்ரீராமர் விபீஷணரை எடுத்து அணைத்து அபயந் தந்து,
“குகனொடும் ஐவர் ஆனேம், முன்பு மின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனேம், எம்முறை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய, நின்னோடும் எழுவர் ஆனேம்,
புகலரும் கானம் தந்து புதல்வரால் பொலிந்தான் உந்தை”
என்று
கூறி ஏற்றுக்கொண்டு இலங்கைக்கு இறைவனாகப் பட்டாபிஷேகம் செய்து, “சிரஞ்சீவியாக இருக்கக் கடவது” என்று
இன்னுரை கூறி அருள் செய்தனர்.
“பாவியி ராவண னார்தலை
சிந்தச்
சீரிய வீடணர் வாழ்வுற மன்றல்
பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கு இனியோனே” --- (தோலொடு) திருப்புகழ்
இமையவள்
தனால் மகிழ்ந்த ---
உமாதேவியாருக்கு
அன்பின் மிக்க குழந்தை முருகப்பிரான்.
“கருணை பொழி கிருபை
முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகவென வருக டம்பத் திருமார்பா” --- (அரிவையர்கள்) திருப்புகழ்
“கச்சித்தாய் உச்சியை
மோந்து கண்ணோடு அணைக்குந்
திருத்தாளா” --- திருப்போரூர்ச் சந்நிதிமுறை
கருத்துரை
மால்மருக!
பார்வதிபால! வள்ளிமணாள! பழனாபுரியாண்டவ! மாதர் வசப்பட்டு மதனாகமங்களைப் படித்து, அறிவிலிகளோடினங்கி அழியாமல், தேவரீரது அடியார் போல் வேதங்களை ஓதி, மநுநெறியில் நடந்து, அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி, எங்கும் பரவெளியாகக் கண்டு, மெய்ஞ்ஞான இன்ப அமுதை ஒழியாது பருக
அருள்புரிவீர்.
No comments:
Post a Comment