அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சுருதி முடி மோனம்
(பழநி)
பழநியப்பா!
கருவழிப்பட்டு, முக்குண வசத்தனாகி,
வஞ்சனையால்
மூடப்பட்டு,
நின் திருவடியைக் கருதாது,
மல வாழ்வில்
மூழ்கியுள்ள அடியேனுக்கு அருள்.
தனதனன
தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன
தனதனன தானந்த தத்ததன தானதன ......
தனதான
சுருதிமுடி மோனஞ்சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவித மானபர
சுடரொளிய தாய்நின்ற நிட்களசொ
ரூபமுதல் ...... ஒருவாழ்வே
துரியநிலை
யேகண்ட முத்தரித யாகமல
மதனில்விளை யாநின்ற அற்புதசு போதசுக
சுயபடிக மாவின்ப பத்மபத மேஅடைய ......
உணராதே
கருவிலுரு
வேதங்கு சுக்கிலநி தானவளி
பொருமஅதி லேகொண்ட முக்குணவி பாகநிலை
கருதவரி யாவஞ்ச கக்கபட மூடியுடல்
...... வினைதானே
கலகமிட
வேபொங்கு குப்பைமல வாழ்வுநிஜ
மெனவுழலு மாயஞ்செ னித்தகுகை யேஉறுதி
கருதசுழ மாமிந்த மட்டைதனை யாளஉன ...... தருள்தாராய்
ஒருநியம
மேவிண்ட சட்சமய வேதஅடி
முடிநடுவு மாயண்ட முட்டைவெளி யாகியுயி
ருடலுணர்வ தாயெங்கு முற்பனம தாகஅம
...... ருளவோனே
உததரிச
மாமின்ப புத்தமிர்த போகசுக
முதவுமம லாநந்த சத்திகர மேவுணர
வுருபிரண வாமந்த்ர கர்த்தவிய மாகவரு
...... குருநாதா
பருதிகதி
ரேகொஞ்சு நற்சரண நூபுரம
தசையநிறை பேரண்ட மொக்கநட மாடுகன
பதகெருவி தாதுங்க வெற்றிமயி லேறுமொரு
...... திறலோனே
பணியுமடி
யார்சிந்தை மெய்ப்பொருள தாகநவில்
சரவணப வாவொன்று வற்கரமு மாகிவளர்
பழநிமலை மேனின்ற சுப்ரமணி யாவமரர்
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சுருதி
முடி மோனம் சொல் சிற்பரம ஞானசிவ
சமயவடி வாய்வந்த அத்துவிதம் ஆன பர!
சுடர்ஒளியதாய் நின்ற நிட்கள! சொரூப முதல்
...... ஒருவாழ்வே!
துரியநிலையே
கண்ட முத்தர் இதயா கமலம்
அதனில் விளையா நின்ற அற்புத, சுபோத, சுக,
சுயபடிக மா இன்ப பத்ம பதமே அடைய ......
உணராதே,
கருவில்
உருவே தங்கு, சுக்கில நிதான வளி
பொரும, அதிலே கொண்ட முக்குண விபாக நிலை
கருத அரியா வஞ்சகக் கபடம் மூடி உடல்
...... வினைதானே
கலகம்
இடவே பொங்கு குப்பை மல வாழ்வு,
நிஜம்
என உழலும் மாயம், செனித்த குகையே உறுதி
கருது அசுழமாம் இந்த மட்டை தனை ஆள, உனது
...... அருள்தாராய்.
ஒரு
நியமமே விண்ட சட் சமய வேத, அடி
முடிநடுவுமாய், அண்ட முட்டை வெளி ஆகி, உயிர்
உடல் உணர்வதாய் எங்கும் உற்பனம் அதாக அமர்
...... உளவோனே!
உத
தரிசமாம் இன்ப புத்தமிர்த போக சுகம்
உதவும் அமலாநந்த சத்தி கரமே உணர,
உரு பிரணவா மந்த்ர கர்த்தவியம் ஆக வரு
...... குருநாதா!
பருதி
கதிரே கொஞ்சும் நல்சரண நூபுரம் அது
அசைய, நிறை பேர்அண்டம் ஒக்க நடம் ஆடு கன
பத கெருவிதா! துங்க வெற்றிமயில் ஏறும்
ஒரு ...... திறலோனே!
பணியும்
அடியார் சிந்தை மெய்ப்பொருள் அதாக நவில்
சரவணபவா! ஒன்று வல் கரமும் ஆகிவளர்
பழநிமலை மேல் நின்ற சுப்ரமணியா! அமரர்
...... பெருமாளே.
பதவுரை
சுருதி முடி --- வேதங்களின் முடிவில்
விளங்கும்,
மோனம் சொல் --- மௌன நிலையை (தன்னையடுத்துக்
கேட்டோர்க்கு) உபதேசித்தருளும்,
சித் பரம --- முற்றறிவுடைய பெரிய பொருளே!
ஞான --- அறிவுடன் கூடிய,
சிவசமய வடிவாய் வந்த --- சைவ சமயத்திருமேனி
தாங்கி எழுந்தருளி வந்த,
அத்துவிதம் ஆன பர --- எல்லாவற்றிலும்
கலந்திருக்கின்ற பரம்பொருளே!
சுடர் ஒளியது ஆய் நின்ற நிட்கள ---
ஒளிக்குள் ஒளியாய் நிற்கின்ற உருவமில்லாதவரே!
சொரூப --- அருள் வடிவமுடையவரே!
முதல் --- முதற் பொருளே!
ஒரு வாழ்வே --- ஒப்பற்ற சிவானந்தப்
பெருவாழ்வே!
ஒரு நியமமே விண்ட --- ஒரு விதியையே
கூறுகின்ற,
சட் சமய வேத --- ஆறு சமயங்களைத் தன்னகத்தே
கொண்ட வேதத்தின்,
அடிமுடி நடுவுமாய் --- முதலும் முடிவும்
நடுவுமாகி,
அண்ட முட்டை வெளி ஆகி --- உருண்டை
வடிவாகவுள்ள அண்டங்களாவும் அதற்கப்பாலுள்ள பெருவெளியாகவுமாகி,
உயிர் உடல் உணர்வு அது ஆய் --- ஆன்மாக்களினது
உயிர்க்குயிராகவும் உடலாகவும் அறிவாகவுமாகி,
எங்கும் உற்பனம் அது ஆக அமர் உளவோனே ---
யாண்டும் நீக்கமற நிறைந்து தோன்றுபவருமாகியுள்ள நித்தியப் பொருளே!
உத தரிசமாம் இன்ப --- தண்ணீர்
ஊற்றெடுப்பதுபோல மாறாத இன்பத்தை நல்கும்.
புது அமிர்த போகசுகம் உதவும் --- புதிய
அமிர்தத்தையொத்த சிவபோகப் பேரின்ப நலத்தை வழங்குகின்ற,
அமல ஆனந்த --- மலமில்லாத இன்ப வடிவான
எம்பெருமானே!
சத்தி கர --- வேற்படையை கரத்தில்
ஏந்தியிருப்பவரே!
மேவு உணர் அவுருபிரணவா மந்த்ரம் ---
பொருந்திய அறிவுருவமாகிய அந்தப் பிரணவ மந்திரத்திற்கு,
கர்த்தவியம் ஆக வரு குருநாதா --- முதன்மைப்
பொருளாக எழுந்தருளி வருகின்ற குருநாதரே!
பருதி கதிரே கொஞ்சு --- சூரியப்
பிரகாசத்தை இனிது வெளிப்படுத்துகின்ற,
நல் சரண நூபுரம் அது அசைய --- நன்மையைத்
தரும் தேவரீரது திருவடிகளின் தண்டைகள் அசைந்து இனிய ஒலி செய்ய,
நிறை பேர் அண்டம் ஒக்க --- நிறைந்த பெரிய அண்டங்களெல்லாம்
ஒருங்கு அசைய,
நடமாடும் --- நடனம் புரிகின்றதும்,
கன பத கெருவிதா --- பெருமை பொருந்திய
அடிகளையுடைமையால் செருக்குள்ளதும்,
துங்க --- பரிசுத்தமும்,
வெற்றி --- வெற்றி உடையதுமாகிய,
மயில் ஏறும் ஒரு திறலோனே --- மயில்வாகனத்தின்
மீது எழுந்தருளி வருகின்ற பெருவலிமையுடையவரே!
பணியும் அடியார் சிந்தை --- தேவரீரது
திருவடிகளைத் தொழுகின்ற அடியார்களது உள்ளமானதுவே
மெய்ப் பொருள் அது ஆக நவில் --- உண்மைப்
பொருளென்று உச்சரிக்கின்ற,
சரவணபவா --- சரவணபவ என்னும்
ஆறெழுத்துக்குரியவரே!
ஒன்று வல்கரமும் ஆகி வளர் --- அஞ்ஞான
இருளை நீக்கும் வலியுடைய ஒளி பொருந்தியுள்ள,
பழநிமலை மேல் நின்ற --- பழநி மலை என்னும்
திருப்பருப்பதமேல் எழுந்தருளியுள்ள,
சுப்ரமணியா --- சுப்ரமண்யப் பரம்பொருளே!
அமரர் பெருமாளே --- தேவர்கள்
யாவருக்கும் பெருமையின் மிக்கவரே!
துரிய நிலை கண்ட முத்தர் --- துரிய
நிலையில் அசைவற்றிருந்து உண்மைப் பொருளைக் கண்ட ஜீவன் முத்தர்களுடைய,
இதய அ கமலம் அதனில் --- அந்த இதயத்
தாமரையாகிய தகராகாய புண்டரீக வெளியில்,
விளையா நின்ற --- விளைகின்றதும்,
அற்புத --- ஆச்சரியத்தை விளைவிப்பதும்
சுபோத --- மேலான ஞானத்தைத் தருவதும்,
சுக --- சுகத்தை தருவதும்,
சுயபடிகமாம் இன்ப --- சுயமான படிகம் போன்ற
தூய இன்பத்தை உண்டாக்குவதும்,
பத்ம --- தாமரைக்கு நிகரானதுமாகிய,
பதமே அடைய உணராதே --- தேவரீரது திருவடிகளை
அடைந்துய்யும் திருநெறியை அடியேன் உணராமற் படிக்கு,
கருவில் உருவே தங்கு சுக்கிலம் ---
கருப்பாசயத்தில் உருவாகத் தங்கிய சுக்கிலமானது,
நிதான வளி பொரும --- உயிர்ச் சார்புடைய பிராண
வாயுவாய் பூரிக்க,
அதிலே கொண்ட --- அவ்வுருவிலே பொருந்திய,
முக்குண விபாக நிலை --- சத்துவ இராஜச
தாமசமென்னும் மூன்று குணங்களின் வேறுபாடான நிலையை,
கருத அறியா --- நினைப்பதற்கு முடியாத,
வஞ்சக கபடம் மூடி --- வஞ்சனையுடன் கூடிய கபட
குணத்தால் மூடப்பெற்று,
உடல் வினைதானே கலகம் இடவே --- உடலினால் வந்த
தீவினைகளானவை கலகங்களைச் செய்ய,
பொங்கு குப்பை மலவாழ்வு --- மிகுந்த
குப்பைக்குச் சமமான மும்மல சம்பந்தத்தால் வந்த அநித்திய வாழ்வையே,
நிஜம் என உழலும் --- நிலைத்தது என்று உழன்று
கொண்டிருப்பவனும்,
மாயம் செனித்த குகையே உறுதி கருதும் --- மாயா
குணங்கட்குப் பிறப்பிடமான இவ்வுடலையே அழிவற்றதெனக் கருதுகின்றவனும்,
அசுழம் ஆம் --- நாய்க்குச் சமமானவனுமாகிய
இந்த மட்டைதனை ஆள --- மட்டியாகிய இவ்வடியேனை
ஆட்கொள்ள,
உனது அருள் தாராய் --- தேவரீரது திருவருளைத்
தந்து அருள் புரிவீர்.
பொழிப்புரை
வேதங்களின் முடிவில் விளங்கப்படுகின்ற
மோன நிலையை (பக்குவப் பட்டோர்க்கு) உபதேசித்தருளும் முற்றறிவு உடைய பெரிய பொருளே!
ஞான மார்க்கத்துடன் கூடிய சைவ சமயத்
திருமேனி தாங்கி வந்து எல்லாவற்றிலும் கலந்திருக்கின்ற பரம்பொருளே!
ஒளிக்கு ஒளியாய் நின்ற அருவ மூர்த்தியே!
உருவமூர்த்தியே!
முதற்பொருளே!
ஒப்பில்லாதவரே!
ஒரு நியமத்தையே உரைக்கும் ஆறு
சமயங்களைக் கொண்ட வேதங்களின் முதலிலும் நடுவிலும் முடிவிலும் விளங்குபவராக
அண்ட கோளங்களுமாகி, ஆன்மாக்களின் உயிர்
உடல் உணர்வு முழுவதும் ஆகி, எங்கும் நிறைந்து
தோன்றுபவருமாகிய நித்தியப் பெருமாளே!
தண்ணீர் ஊற்றுபோல் இடைவிடாது இன்பத்தை
நல்கும் புதிய அமிர்தத்தை யொத்த சிவபோகப் பேரின்பப் பெருவாழ்வை வழங்கும்
அமலானந்தரே!
வேலாயுதரே!
பொருந்திய அறிவுருவமாகிய பிரணவ
மந்திரத்திற்குத் தலைவராக வருகின்ற குருபரரே!
கோடி சூரியப் பிரகாசமுடைய தேவரீரது நல்ல
திருவடிக் கமலத்தில் அணிந்துள்ள தண்டைகள் ஒலிக்க, சகலாண்டங்களும் அசைய நடனம் புரிகின்ற
பெருமையுடைய சேவடிகளை யுடைமையால் செருக்குள்ளதும் தூய்மையும் வெற்றியுமுடையதாகிய
மயில்மிசை வரும் ஆற்றலுடையவரே!
தேவரீரது திருவடிகளைப் பணிகின்ற
மெய்யடியாரது திருவுள்ளத்தில் இதுவே மெய்ப்பொருள் என்று சதா உச்சரிக்கும் “சரவணபவ”
என்னும் சடக்கரப்பொருளே!
அஞ்ஞான இருளை நீக்கும் வலிமையுடைய ஞான
வொளி வீசும் பழநிமலைமேல் எழுந்தருளியுள்ள தேவர்கள் யாவரிலும் பெருமை மிக்கவரே!
துரிய நிலை கண்ட ஜீவன் முத்தர்களுடைய
இதய புண்டரீக தகர வெளியில் விளைகின்றதும், அற்புதத்தை யுண்டாக்குவதும், மேலான ஞானத்தைத் தருவதும், சுகத்தையும் தூய படிகம் போன்ற சிவானந்த
இன்பத்தையும் வழங்குவதுமாகிய தேவரீரது திருவடித் தாமரைகளை யடையும் திருநெறியையும்
அடியேன் உணராமல், கருப்பாசயத்தில்
உருவாகத் தங்கிய சுக்கில பிராணவாயுவால் பொருமுதலடைய, அவ்வுருவிலே பொருந்திய முக்குணங்களின் வேறுபாடான
நிலையை நினைத்தற்கொண்ணாத வஞ்சக கபடமாகிய குணத்தால் மூடப்பெற்று, உடலினால் வந்த தீவினைகள் கலகம் விளைக்க, மிக்க குப்பை மலவாழ்வையே நித்தியமெனக்
கொண்டுழன்று, மாயச்செயல்கள்
நிறைந்த இப்பாவ உடலையே அழிவற்றது எனக் கருதுகின்ற நாய்க்கு நிகரான மூடனாகிய
அடியேனை ஆட்கொள்ள உமது திருவருளைத் தந்து அருளுவீராக.
விரிவுரை
சுருதி ---
வேதம்; எழுதிப் படிக்காமல் ஆசிரியரிடம்
கேட்டுக் கேட்டு வருவதால் இப்பெயர்
பெற்றது. “சிற்பரம ஞான” என்ற தொடரில் சிற்பரம என்ற பதங்களை விளியாக்காது, ஞானத்திற்கு அடைகளாகவும் வைத்துப்
பொருள் கொள்ளலாம். “பரசுடரொளியதாய்” என்ற தொடரில் “பர” என்பதை விளியாகக் கொள்ளாமல்
சுடருக்கு அடையாகவும் பொருள் கொள்ளலாம்.
“நிட்கள சொரூபமுதல்
ஒருவாழ்வு” என்ற சொற்றொடருக்கு நிட்கள வடிவாகவுள்ள ஆதிமுதற் காரணமான ஒப்பற்ற
வாழ்வே என்று பொருள் கூறினும் அமையும்.
சுருதி
முடி என்ற தொடக்கமுதல் சொரூபமுதல் ஈறாகவுள்ள அனைத்தையும் ஒரு வாழ்வே என்பதனுக்கே
கூட்டிப் பொருள் கூறினும் பொருந்தும்.
மோனம்
---
மன
சம்பந்தமற்றது மௌனம். மோனநிலை, இது “உரையவிழ
உணர்வவிழ உளமவிழ உயிரவிழ உளபடியை உணரும்” உண்மை நிலை; ஞானத்திற்கு வரம்பாகத் திகழ்வது
மோனமேயாம்.
“மோன மென்பது
ஞானவரம்பு” --- ஒளவையார்
“தமர பரிபுர சரணமும்
மவுனமும் அருள்வாயே” --- (அருவமிடை) திருப்புகழ்
துரிய
நிலை ---
“துரிய மேல் அற்புதப்
பரமஞா னத்தனிச்
சுடர்வியா பித்த நல் பதியூடு” --- (சரியையாளர்க்கு) திருப்புகழ்
முக்குணம்
---
1. சத்துவம்; நற்குணங்களில் மனம் பற்றுதல்
2. இராஜசம்: ஆசை மிகுந்திருத்தல்; மிகுந்த பொருளுக்கு ஆசை வைத்தல்; எதிர்ப்பட்டதைப் பற்றி நிற்றல்.
3. தாமசம்:
எதிர்ப்பட்ட காரியத்தைச் செய்யாதிருத்தல்; சோம்பல்; மயக்கம்.
குப்பை
மல வாழ்வு
---
உலகவாழ்வு
பயனற்றது; குப்பை எப்படி
ஒதுக்கப் படுத்துவதாய் உள்ளதோ அதுபோல, உலக
வாழ்வும் அறிஞரால் ஒதுக்கப்படுவதாம்.
அசுழம் ---
நாய்:
உண்டதைக் கக்கி மீண்டும் அதையே உண்ணும் இயல்புடையது நாய். அதுபோல் நாமும்
அநுபவித்ததையே திரும்பத் திரும்ப அநுபவித்து வெறுப்படையாது விருப்பம் மேலும்
உண்டாகி அலைந்து திரிகின்றோம்.
ஒரு
நியமமே விண்ட சட்சமயம் ---
ஆறு
சமயங்களும் ஒரு முடிவையே கூறுகின்றன.
ஒன்றுஅது
பேரூர், வழிஆறு அதற்குஉள,
என்றது
போல இருமுச் சமயமும்,
நன்றுஇது
தீதுஇது என்றுஉரை யாளர்கள்
குன்று
குரைத்துஎழு நாயை ஒத்தார்களே. --- திருமந்திரம்.
ஊர்
ஒன்றுதான். அதனைச் சென்று அடையும் வழிகள் ஆறு.
சமயங்கள்
சொல்வகையாலும், செயல்வகையாலும் வேறுபட்டு இருந்தாலும், கருத்து வகையால் ஒன்றே
என்னும் உண்மையை அறியாதவர்கள், இது நல்லது. இது தீயது என்று சமய உண்மையை அறியாமல்
உளறுகின்றார்கள். மலையைப் பார்த்து நாய் குரைப்பதைப் போல.
முதல்ஒன்றாம்,
ஆனை முதுகுடன் வாலும்
திதம்உறு
கொம்பு செவிதுதிக் கைகால்
மதியுடன்
அந்தகர் வகைவகை பார்த்தே
அதுகூறலு
ஒக்கும் ஆறு சமயமே." ---
திருமந்திரம்.
யானையாகிய
முதல் ஒன்றே. ஆயினும் அதன் வடிவுண்மையை அறியாத குருடர்கள், அதன் உறுப்புக்களைத்
தாம் அறிந்தவாறே கூறிக் கலகமிடுதலைப் போல, மெய்ப்பொருள் ஒன்றே ஆயினும், அதன்
இயல்புகளை வேறு வேறாக் கருதி சமயவாதிகள் வாதம் புரிந்து வருகின்றனர்.
எவ்வுலகில்
எவ்எவருக்கும் அருட்பெருஞ்ஜோ தியரே
இறைவன்
என்பது அறியாதே, இம் மதவாதிகள்
கவ்வை
பெறு குருடர் கரி கண்ட கதைபோலே
கதைக்கின்றார், சாகாத கல்வி நிலை அறியார்,
நவ்வி
விழியாய், இவரோ சில புகன்றார் என்றாய்,
ஞான
நடம் கண்டேன், மெய்த் தேன் அமுதம் உண்டேன்,
செவ்வய்
பெறு சமரச சன்மார்க்க சங்கம் தனிலே
சேர்ந்தேன்
அத் தீமொழியும் தேமொழி ஆயினவே! ---
திருவருட்பா.
சமய
வாதிகள் தத்தம் மதங்களே
அமைவதாக
அரற்றி மலைந்தனர். --- திருவாசகம்.
புண்ணியம்ஆம்
பாவம்போல் போனநாள் செய்தஅவை
மண்ணில்
பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதுஒழிய
வேறுஇல்லை; எச்சமயத்தோர் சொல்லும்
தீதுஒழிய
நன்மை செயல். ---
ஔவையார்.
வேத
அடி முடி நடுவுமாய் ---
வேதத்தின்
முதலிலும் நடுவிலும் முடிவிலும் முருகக் கடவுளே பரம்பொருளென முரசறைகின்றனது.
“ஓலமறைகள் அறைகின்ற
ஒன்றது --- திருப்புகழ்
“மறைபலவுமோதி தொழமுது
பழநிமேவு பெருமாளே” --- (ஒருவரை) திருப்புகழ்
“மறை ஆயிரங்களும்
குமரகுருவென” --- (ஒருவரை) திருப்புகழ்
“மறைகளுங் கடந்ததோர்
தலைவன்” --- கந்தபுராணம்
உயிர்
உடல் உணர்வதாய் ---
ஆன்மாக்களின்
இதய குகை தோறும் அமர்ந்து உள்ளும் புறம்பும் ஊனும் உடலும் உயிரும் உணர்வுமாய்
குகப்பெருமான் - பாலில் நெய்போல் நீக்கமற நிறைந்திருக்கின்றார்.
“ஊனும் உயிரும் முழுதும்
கலந்தது” --- (ஒலமறைக) திருப்புகழ்
எங்கும்
உற்பனமதாக
---
குமாரக்
கடவுள் அங்கிங்கெனாதபடி எங்கும் பரிபூரணமாக நிறைந்த அகண்ட பரம்பொருளாவர்.
“எங்கணும் பணி வதனங்கள், எங்கணும் விழிகள்
எங்கணும் திருக் கேள்விகள், எங்கணும் கரங்கள்
எங்கணும் திருக்கழல் அடி, எங்கணும் வடிவம்
எங்கணும் செறிந்து அருள் செயும் அறுமுகத்து இறைக்கே”
-- - கந்தபுராணம்
“அமலாநந்த சத்திகர”
என்ற தொடரில் “அமலாநந்த” என்பதை விளிக்காது சக்தி என்பதற்கு அடையாகவுங் கொண்டு
பொருள் கூறலாம்.
பேரண்டம்
ஒக்க நடமாடு
---
மயில்
சகலலோகங்களும் ஒருங்கு அசைய நடமிடும் தகைமையை மயில் விருத்தத்திலும்
வியந்துள்ளதைக் கண்டு மகிழ்க.
“அண்ட கோளகை வெடிபட
இடிபட
எண்டி சாமுக மடமட நடமிடும்
அந்த மோகர மயிலினில்” --- (பஞ்சபாதக) திருப்புகழ்
சரவணபவ ---
இச்
சடக்கர மந்திரமே மந்திர நாயகமாக விளங்குகின்றது. இம்மந்திரத்தை முறைப்படி குரு
மூலமாகத் தெரிந்து, காதலாகிக் கசிந்து
கண்ணீர் மல்கி ஓதி செபம் புரிவார்,
இம்மையில்
எல்லா நலன்களும் பெற்று ஈற்றில் குகப் பிரமத்துடன் இரண்டறக் கலந்து ஈறிலா இன்பம் எய்துவர்.
நின்றாலும்
கிடந்தாலும் நடந்தாலும் நில்லாது சென்றாலும் துயின்றாலும் அயின்றாலும் தினந்தோறும்
இம்மகா மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும். தன்னை மறந்திருக்கும்போது, தொழிலில் ஈடுபட்டிருக்கும் போதும், நோய் முதலியவற்றால் அவசமுற்றிருக்கும் போதும்
நாவானது இம்மந்திரத்தைச் செப்பும். அத்துணைப் பெரும் பழக்கத்தை உண்டாக்கக்
கணந்தோறும் முயலவேண்டும்.
இத்தகைய
நிலையை அடைந்த பெருந்தவராஜராகிய பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், தமது அனுபவ நிலையை உரைக்கும் திறத்தை
நோக்கி, அத்திறம் நமக்கு என்று உண்டாகுமோ என்று ஏங்கி, வேண்டுவோர் வேண்டியவாறு ஈயும்
வேல்கரத்து அண்ணலிடம் விரைந்து விரைந்து அன்பு செய்து உய்வோமாக.
“நண்ணுவார் உறவே, எண்ணுவார்
இறையே,
நான்மறை முடிவில் சொல்பொருளே,
மண்ணும்
வானகமும் பண்ணும் ஆள் வினைஞா,
மட்டிலா நடன எம்பரனே,
உண்ணுவான்
அமுதே, கன்னல் ஆர் இழுதே,
உயர்நிலைச் சீரலை வாயா,
தண்ணம்ஆர்
சரணா உனை மறக்கினும்,நா
சாற்றிடும் சரவண பவவே”
கருத்துரை
வேதவேதாந்தங்களின்
முடிவாக-ஞானப்பரஞ்சுடராக-ரூபாரூபமாக உள்ள பரம்பொருளே! மயில் வாகனரே! வேலாயுதரே!
பிரணவ மந்திரத்தின் தலைவரே! சடக்கரப் பொருளாகி, பழநிமலையில் நின்ற பெருமாளே!
கருவழிப்பட்டு, முக்குண வசத்தனாகி, வஞ்சனையால் மூடப்பட்டு, நின் திருவடியைக் கருதாது, மல வாழ்வில் மூழ்கியுள்ள அடியேனுக்கு
அருள் தருவீர்.
No comments:
Post a Comment