அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சீறல் அசடன் (பழநி)
பழநியப்பா!
அடியாருடன்
கூட்டி ஆண்டு அருள்
தான
தனதனன தான தனதனன
தான தனதனன ...... தனதான
சீற
லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி ...... பவயோயே
தேடு
பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்
கூறு மோழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு ...... னடிபேணாக்
கூள
னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் ...... புரிவாயே
மாறு
படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி ...... புனைவோனே
மாக
முகடதிர வீசு சிறைமயிலை
வாசி யெனவுடைய ...... முருகோனே
வீறு
கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை ...... யுடையோனே
வீரை
யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
சீறல்
அசடன், வினை காரன், முறைமை இலி,
தீமை புரி கபடி, ...... பவநோயே
தேடு
பரிசி, கன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதும் இலி, ...... எவரோடும்
கூறு மொழி அது பொய் ஆன கொடுமை உள
கோளன், அறிவிலி, ...... உன்அடிபேணாக்
கூளன், எனினும் எனை நீ உன் அடியரொடு
கூடும் வகைமை அருள் ...... புரிவாயே.
மாறு
படும் அவுணர் மாள அமர்பொருது
வாகை உள மவுலி ...... புனைவோனே!
மாக
முகடு அதிர வீசு சிறைமயிலை
வாசி என உடைய ...... முருகோனே!
வீறு
கலிசை வரு சேவகனது இதயம்
மேவும் ஒரு பெருமை ...... உடையோனே!
வீரை
உறை குமர! தீர தர! பழநி
வேல! இமையவர்கள் ...... பெருமாளே.
பதவுரை
மாறுபடும் அவுணர் மாள --- நீதி
நெறியினின்றும் மாறுபட்ட அசுரர்கள் மாண்டு போகும்படி,
அமர் பொருது --- போர் செய்து,
வாகை உள மவுலி புனைவோனே --- வெற்றியுடன்
கூடிய மகுடத்தைத் தரித்தவரே!
மாக முகடு அதிர --- அண்டத்தின் உச்சி
அதிர்ச்சி அடையும்படி,
வீசு சிறை --- இறக்கைகளை வீசிப்பறக்கும்,
மயிலை வாசி என உடைய --- மயிலைக்
குதிரையாகவுடைய,
முருகோனே --- முருகக் கடவுளே!
வீறு கலிசை வரு --- பெருமை மிகுந்த
கலிசை என்ற ஊரில் வாழ்ந்த,
சேவகனது இதய மேவும் --- சேவக (வீர)னாகிய
மன்னவருடைய உள்ளக்கோயிலில் வீற்றிருக்கும்,
ஒரு பெருமை உடையோனே --- ஒப்பற்ற பெருமை
உடையவரே!
வீரை உறை குமர --- வீரை என்ற
திருத்தலத்தில் வாழ்கின்ற குமாரசுவாமியே!
தீர --- தைரியமுடையவரே!
பழநி வேல --- பழநியில் எழுந்தருளியுள்ள
வேலாயுதரே!
இமையவர்கள் பெருமாளே --- தேவர்கள்
வணங்கும் பெருமையிற் சிறந்தவரே!
சீறல் அசடன் --- சீறுகின்ற சினம் உடைய
கீழ்மகன்,
வினை காரன் --- தீவினைகளை புரிகின்றவன்,
முறைமை இலி --- ஒழுக்கம் இல்லாதவன்,
தீமை புரி கபடி --- பாவங்களைச் செய்கின்ற
வஞ்சகன்,
பவ நோயே தேடு பரிசி --- பிறவி நோயையே
தேடுகின்ற தன்மையுடையவன்,
கனம் நீதி நெறி முறைமை சீர்மை சிறிதும் இலி ---
பெருமை நீதி நெறி நேர்மை சிறப்பு என்ற இந்த நற்குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதவன்,
எவரோடும் --- எல்லாரிடத்திலும்,
கூறுமொழியது பொய்யான கொடுமை உள கோளன் ---
பேசுகின்ற பேச்சில் பொய்யென்ற கொடுமையைக் கொண்ட தீயவன்,
அறிவு இலி --- அறிவு இல்லாதவன்,
உன் அடி பேணா கூளன் --- தேவரீருடைய திருவடியை
விரும்பாத குப்பை போன்றவன்,
எனினும் எனை --- இத்தகைய பாவியாக இருந்த
போதிலும் அடியேனை,
நீ உன் அடியாரோடு கூடும் வகைமை அருள்
புரிவாயே --- நீர் உமது அடியார் திருக் கூட்டத்துடன் கூட்டி வைக்கும்படியான
வழியைத் தந்து அருள்புரிவீராக.
பொழிப்புரை
தரும நெறியினின்றும் மாறுபட்ட அசுரர்கள்
மாண்டு ஒழியுமாறு போர் புரிந்து வெற்றியை உடைய மகுடத்தைத் தரித்தவரே!
அண்டத்தின் உச்சி அதிர்ச்சி அடையுமாறு
சிறகை வீசிப் பறக்கின்ற மயிலைக் குதிரை வாகனம் போல் கொண்ட முருகக்கடவுளே!
பெருமை நிறைந்த கலிசை என்ற ஊரில்
வீற்றிருக்கும் சேவகராகிய மன்னவருடைய உள்ளக் கோயிலில் உறைகின்ற ஒப்பற்ற
பெருமையுடையவரே!
வீரை என்ற தலத்தில் வாழ்கின்ற
குமாரசுவாமியே!
தைரியம் உடையவரே!
பழநியம்பதியில் எழுந்தருளியுள்ள
வேலாயுதரே!
தேவர்கள் போற்றுகின்ற பெருமிதம்
உடையவரே!
சீறி விழுகின்ற சினத்தை யுடைய கீழ்மகன், தீவினைகளைச் செய்கின்றவன்; ஒழுக்கம் இல்லாதவன்; பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன்; பிறவிநோயையே தேடுகின்ற தன்மை யுடையவன்; பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு
சிறிதும் இல்லாதவன்; எல்லாருடனும்
பொய்யையே பேசுகின்ற தீயவன்; அறிவில்லாதவன்; தேவரீருடைய திருவடிகளை விரும்பாத குப்பை
போன்றவன், இப்படிப்பட்டவனாக
இருப்பினும் அடியேனுக்கு உமது அடியாருடைய திருக் கூட்டத்தில் சேரும் வழியைத் தந்து
அருள்புரிவீராக.
விரிவுரை
சீறல்
அசடன்
---
சீறல்-கோபத்தினால்
பிறர் மீது கோபித்து விழுதல்.
மனிதனுக்குப்
பெரும்பகை சினத்தை அன்றி வேறு இல்லை; கோபம்
வந்தவுடன் மனதில் சாந்தி விலகும். அமைதி குலையும். மகிழ்ச்சி மடியும். நெருப்பு
சேர்ந்தாரை மட்டும் சுடும். சினம்,
சேராமல்
இனமாக நின்று நலம் செய்கின்றவர்களையும் சுட்டு நீக்கும். நலம் கூறுவோர் மீது
ஒருவன் சீறி விழுவானாயின், இந்த அசடனோடு என்ன
உறவு என்று தக்கார் அகன்று விடுவார்கள். ஆதலால், கடைத்தேற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், பெரிதும் முயன்று மனத்தில் எரிமலை போல்
கொதித்து எழும் சினத்தை முளையுடன் களைய வேண்டும்.
சினம்
என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப்
புணையைச் சுடும் --- திருக்குறள்
இத்திருக்குறளுக்குப்
பரிமேலழகர் எழுதும் நுணுக்கமான உரையைப் படித்து இன்புறுங்கள்.
ஆயிரம்
ஆண்டு உண்ணாதும் உறங்காதும் கானில் நின்று மாதவம் புரிந்த ஒருவர், ஒருவேளை சீறிக் கோபிப்பாராயின், அவருடைய தவம் அத்தனையும் அப்பொழுதே
அழியும். அதனால் ஒன்றுக்கும் அஞ்சாத தவமுனிவர்கள் ஆசையையும் கோபத்தையும் கண்டு
பெரிதும் அஞ்சுவார்கள்.
“தவஞ் செய்வோர்கள்
வெருவரைச் சென்று அடை காமவெகுளி” .....கம்பர்
“கோபம் பாபத்துக்கு
அஞ்சாது” என்ற பழமொழியையும் உன்னுக.
கோபமே
பாவங்களுக்கு எல்லாம் தாய்தந்தை!
கோபமே குடிகெ டுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!
கோபமே துயர்கொ டுக்கும்!
கோபமே
பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவு அறுக்கும்!
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே
ஈனமாம், கோபமே எவரையும்
கூடாமல் ஒருவ னாக்கும்!
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்!
ஆபத்து
எலாந்தவிர்த்து என்னைஆட் கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! --- அறப்பளீசுர சதகம்.
வினைகாரன் ---
மனிதன்
நோய் இன்றி வாழவேண்டும் என்று விரும்புகின்றான். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
என்பார்கள். நோயினால் சதா வேதனைப்படுகின்றவன் உயிர் வாழ்க்கையை வெறுக்கின்றான்.
மற்றவரும் "அந்தோ! இந்த ஆன்மா இப்படி நோய்நொடியால் வெயிலில் கிடந்த
புழுவைப்போல் வேதனைப் படுவதைக் காட்டிலும் உயிர் சாந்தியடைந்தாலும் நலம்"
என்பார்கள். ஆகவே நோயின்றி வாழவேண்டும்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
என்ற
திருவள்ளுவரின் வாக்கின்படி, நோய்க்கு மூலகாரணத்தை
அறிந்து அந்த மூலத்தைக் களைவதுவே அறிவுடைமையாகும்.
நோய்க்கு
மூலகாரணம் எது? நன்றாகச்
சிந்தியுங்கள். நோய்க்கு மூலகாரணம் இந்த உடம்பு. உடம்பைப்பற்றித் தான் நோய்
விளைகின்றன. நெருப்பு விறகைப் பற்றித்தானே எரிகின்றது. நெருப்பை அகற்ற என்ன வழி? விறகை அகற்ற வேண்டும். எனவே நோயை நீக்க
வேண்டுமாயின், உடம்பையே அகற்றி
விடவேண்டும். நோய்களுக்கெல்லாம் உறைவிடமான இந்த உடம்பு நமக்கு வராதவண்ணம்
புரியவேண்டும்.
இனி
இந்த உடம்புக்கு மூலகாரணம் எது என்று ஆராய்தல் வேண்டும். உடம்புக்கு மூலகாரணம்
வினை. வினையினாலேயே ஒழியாமல் உடம்பு வந்து கொண்டிருக்கிறது. விளக்கு எரிவதற்கு
மூலகாரணம் நெய். அதுபோல் வினையால் உடம்பு வருகின்றது.
வினைப்போகமே
ஒரு தேகம்கண்டாய், வினைதான் ஒழிந்தால்
தினைப்போது
அளவும் நில்லாது கண்டாய், சிவன்பாதம் நினை,
நினைப்போரை
மேவு, நினையாரை நீங்கி, நெறியில் நின்றால்,
உனைப்போல்
ஒருவர் உண்டோ மனமே, எனக்கு உற்றவரே. --- பட்டினத்தார்
நல்வினை, தீவினை இரண்டுமே உடம்பைத் தருகின்றன.
நல்வினை பொன்விலங்கு; தீவினை
இரும்புவிலங்கு; பொன்னால் ஆனதாயினும்
விலங்கு துன்பத்தைத் தானே தரும்?
ஆகவே
வினையை விட்டாலன்றி உடம்பு நீங்காது.
விதிகாணும்
உடம்பை விடா வினையேன்,
கதிகாண,
மலர்க்கழல் என்று அருள்வாய்?
மதிவாள்நுதல்
வள்ளியை அல்லது, பின்
துதியா
விரதா சுர பூபதியே! --- கந்தர்
அநுபூதி
என்ற
அநுபூதியுள் ஒரு வரி அத்தனை கருத்துக்களையும் நமக்கு இனிது உபதேசிக்கின்றது., சுருங்கிய சொற்கள், விரிந்த உண்மைப் பொருள்கள். எனவே நாம்
நல்வினைகளைப் பயன் கருதாமலும் (நிஷ்காம்யமாகவும்), தீவினைகளை அறவே செய்யாமலும் இருக்க
வேண்டும்.
வினை
நீங்க உடம்பு நீங்கும்; உடம்பு ஒழிய நோய்
ஒழியும்.
முறைமை
இலி ---
முறைமை-ஒழுங்கு.
மனித வாழ்வு புனித வாழ்வாக அமைய வேண்டும். அது ஓர் ஒழுங்குமுறையில் அமைய வேண்டும்.
(1) உண்ணுகின்ற உணவில் ஓர் ஒழுங்கு வேண்டும்.
நமக்குப் பொருந்திய உணவுகளையே உண்ணவேண்டும். பொருந்தாத உணவுகளை அறவே அகற்ற
வேண்டும்.
பொருந்தாத
உணவை அதனை உண்ணுகின்றவர்களே “அந்நிய பதார்த்தம்” என்கின்றார்கள்.
மாதப்பிறப்பு, கார்த்திகை, அமாவாசை, புரட்டாசி மாதம், சிவராத்திரி, ஏகாதசி, திருவாதிரை, தைப்பூசம், பிதிர்களுடைய நாள் முதலிய தினங்களில்
மேலே கூறிய பொருந்தாத உணவை யாரும் உண்பதில்லை. அதனாலேயே அது புனிதம் இல்லாதது
என்று விளங்குகின்றதல்லவா?
இது
அருவருப்பானதும் கூட; நமது உடலில் வந்த
புண் எத்துனை அருவருப்பாக உளது. மாண்டு போன உடம்பின் ஊன்களையும் காணக் கண்கள்
கூசுகின்றன.
ஆகவே
அந்தப் பொருந்தாத உணவு மனிதனுடைய அமைதிக் குணத்தை யகற்றி வெறிகுணங்களை
விளைவிக்கின்றது.
ஆதலால்
அதனை அகற்றி உணவில் ஒழுங்கு பெற வேண்டும்.
(2) ஆடு மாடு முதலிய விலங்குகள் கண்ட கண்ட இடங்களில்
எல்லாம் மலம் கழிக்கும்.
மனிதன்
மலங்கழிக்கும் இடத்தை ஒருபுறம் அமைத்து ஒழுங்காக மலசலம் கழிக்கின்றான்.
அதுபோல்
உடம்பில் எழும் இன்ப வேட்கையை இல்லறக் கிழத்தியாகிய மனைவியின் இடமே தணிக்க வேண்டும்.
அன்றிப் பலப்பல மாதர்களை நாடி அலைவது கண்ட கண்ட இடங்களில் மலங்கழிப்பது போலாகும்.
ஆகவே
வேட்கையைத் தணிப்பதில் ஓர் ஒழுங்கு வேண்டும்.
(3) ஆடுமாடுகள் தமக்கு ஒதுக்கிய பொது இடத்தில்தானே
புல் மேய்கின்றன. பிறருக்கு உரிய நெல் வயல்களில் சென்று மேயக் கூடாதல்லவா? அதுபோல் பொருள் ஈட்டுவதிலும் நேர்மையைக்
கடைபிடித்து நியாயமான முறையில் நடக்க வேண்டும். நெறியில்லாத நெறியில் பொருள்
ஈட்டுவது பெரும் பிழை.
எனவே, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும், வாய், கண், மெய், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளால், விதிப்படி நுகர்வதே ஒழுங்கு.
யானையை
அங்குசத்தால் அடக்குவதுபோல, (கொல்வதன்று-அடக்குவது)
நல் உணர்வினால் மெய், வாய், நாசி, கண், செவி என்ற ஐம்பெரும் யானைகளை, அவைகட்கு உரிய ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஓசை என்ற ஐம்புலன்கள் மீது
செல்லாதவண்ணம் அடக்கவேண்டும். அங்ஙனம் அடக்கினவன் முத்தி வீட்டுக்கு முதலாக
விளங்குவான்.
“உரன் என்னும்
தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக்குஓர் வித்து” ---
திருக்குறள்.
ஆகவே
இவ்வண்ணம் நமது கருவி கரணங்களை ஒழுங்கு படுத்திக் கொண்டு வாழ்வது ஒழுக்க முறைமை.
தீமை
புரி கபடி
---
மேற்கூறியபடி
பொறிபுலன்களை ஒழுங்கு படுத்தாமல்,
அவற்றின்
போக்கில் விடுத்து, பாவங்களைச் செய்து
வஞ்சனையாக நடப்பான்.
வண்டு
ஓட்டுகின்றவன், வண்டியில் பூட்டிய
குதிரையை அடக்கி தன் இச்சைப்படி லெுத்தாமல், குதிரை போகும் போக்கில் விட்டு
ஓட்டுவானாயின், அவன் குறித்த
இடத்துக்குப் போக மாட்டானன்றோ? அதுபோல் உடம்பாகிய
வண்டியில் பூட்டிய கண் முதலிய பொறிகளை அதன் போக்கில் விட்டவன், முத்தி வீட்டினை அடைய மாட்டான் என உணர்க.
பவ
நோயே தேடு பரிசி ---
பவம்-பிறப்பு.
பரிசு-தன்மை.
பிறவி
ஒரு பெரிய நோய். பவரோகம் என்று வட மொழியில் கூறுவர். பிறவிப் பெரும்பிணி எண்ணில்லாத
காலமாக இந்த உயிரைப் பிடித்து வருகின்றது. அதனைத் தீர்ப்பவன் பிறப் பிறப் பில்லாத
முருகன். அதனால் முருகன் வைத்தியநாதன் எனப்படுகிறான்.
“பவரோக வைத்தியநாதப்
பெருமாளே” --- (நிலையாத) திருப்புகழ்
பிறவி
நோய் உற்றார், அதனைத் தீர்க்கும்
மருத்துவனாகிய முருகனைத் தேடாது,
பிறவியை
ஒழியாது தரும் ஆசாபாசங்களைத் தேடித் திரிகின்றனர்.
“ஊசல் படும் பரிசு
என்று ஒழியேன்” --- கந்தர் அநூபூதி
கனநீதி
நெறி முறைமை சீர்மை சிறிதும் இலி ---
கனம்-பெருமை.
மனிதனுக்கு அமைய வேண்டிய குணங்கள் பல; அவற்றுள்
இந்த ஐந்தும் சிறந்தவை. பெருமை,
நீதி, நெறி, முறை, சிறப்பு.
வாக்கிலும்
நடையிலும் பெருமை தோன்ற வேண்டும்.
நீதி-ஒவ்வொருவரும்
இப்படி இப்படி நடக்க வேண்டும் என்று வரையறுப்பது.
நெறி-அவ்வாறு
வரையறுத்த வழியில் பிறழாது நடப்பது.
மநு, சுக்ரர் முதலியவர்கள் வடமொழியில் நீதி
நூல்கள் செய்திருக்கின்றார்கள். அவை மநுநீதி, சுக்ரநீதி எனப்படும். தமிழிலேயும் அநேக
நீதி நூல்கள் உண்டு. சுருக்கமாகக் குமரகுருபரர் "நீதி நெறி விளக்கம்"
என்ற அரிய நூலை வழங்கினார். நீதிவெண்பா, நீதிசாரம், உலக நீதி முதலிய நூல்கள் தமிழ்
மக்களுக்கு வற்றாத ஊற்றாக நீதிகளைச் சுரந்து கொண்டிருக்கின்றன, அவற்றைக் கற்று அதன்படி ஒழுகவேண்டும்.
இத்தகு நீதி நெறிகளை அழித்த படியால் தாரகன் முதலியோரை முருகப் பெருமான் அழித்தார்.
“நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் குடியேற
நீடு அருளினால் விடுத்த பாலகுமார” --- (கேதகைய) திருப்புகழ்
இந்த
நன்னெறி நின்றார் உலகில் பூத உடம்பு கொண்டும் பின்னர் புகழுடம்பு கொண்டும் நெடிது
காலம் வாழ்வார்கள்.
பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் ---
திருக்குறள்.
முறைமையைப்
பற்றி முறைமை என்ற தலைப்பில் முன்னே கூறப்பட்டது. ஆகவே அறத்தின் முறையில் நிற்க
வேண்டும். முறையுற நடப்பார் குறையற வாழ்வார்.
சீர்மை-சிறப்பு.
இவற்றால் மக்கட்கு சிறப்பு வந்து சேரும். நீதி நெறி முறை முதலிய நற்குண
நல்லொழுக்கம் உடையார் எங்கு சென்றாலும் உள்ளூரிலும் அயலூரிலும் மக்கள் அவர்கட்கு
எல்லாவகைச் சிறப்புக்களும் செய்து போற்றுவார்கள். அவர்கள் மறைந்த பின்னரும், மறைந்த நாளில் ஆண்டுதோறும் (அவர்களுடன்
தொடர்பில்லாதவர்களும்) சிறப்பு விழா அமைத்துக் கொண்டாடு வார்கள். ஆகையால்
மேற்கூறிய நற்குணங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் நிறைந்திருக்க வேண்டும்; அங்ஙனம் நிறையவில்லையாயினும் சிறிதாவது
அமைய வேண்டும் என்று குறிப்பிடும் பொருட்டு, “சிறிதுமிலி” என்றார்.
எவரோடும்
கூறும் மொழியது பொய்யான கொடுமையுள கோளன் ---
பொய்
பெரிய பாவம். பொய் புகல்வோன்பால் கடவுள் தன்மை அணுத்துணையும் தங்காது.
“பொய்வளரும்
நெஞ்சினர்கள் காணாத காட்சியே”
என்கிறார்
தாயுமானவர்.
சூர்ப்பனகையைக்
குறிக்க வந்த கம்பர், விடத்தினும் கொடியவள், வெய்ய நெருப்பினும் கொடியவள் என்றெல்லாம்
கூறினாரில்லை. “பொய்தங்கு நெஞ்சில் கொடியாள்” என்கின்றார்.
உய்வுபெறக்
கருதுவோர் பொய்யை அறவே அகற்ற வேண்டும்.
பொய்யாமை
பொய்யாமை ஆற்றின், அறம்பிற
செய்யாமை
செய்யாமை நன்று. --- திருக்குறள்.
"பொய்யாமை
பொய்யாமை என இருமுறை கூறுவதற்குக் காரணம் முதலில் வந்தது இடையறாமையும், இரண்டாவது வந்தது பொய்யாமை துணிவினையும்
குறிக்கும்" என்று பரிமேலழகர் குறிப்பிடுகின்றார்.
எல்லா
விளக்கும் விளக்குஅல்ல, சான்றோர்க்குப்
பொய்யா
விளக்கே விளக்கு --- திருக்குறள்.
சூரியன்
சந்திரன் நெருப்பு முதலிய விளக்குகள் புற இருளை மட்டுமே அகற்றவல்லன. அறியாமையான அக
இருளை அகற்ற மாட்டா. பொய்யாமை யாகிய விளக்கு மன இருளான அறியாமையைப் போக்கவல்லது.
'உள்ளத்தால் பொய்யாது
ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள்
எல்லாம் உளன்'
என்ற
திருக்குறளுக்கு இலக்கான காந்தியடிகள் பொய்யாது ஒழுகிப் பொன்றாப் புகழைப் பெற்றது
உலகறிந்த உண்மை.
கோளன்-நற்குடிப்
பிறவாதவன்.
“நீதி கெடும் பொய்க்
கோளளை” என்கிறார் (தோலோடுமூடிய) திருச்செந்தூர்த் திருப்புகழிலும்.
பிறர்
குறைகளை ஒழியாது பிறரிடம் கூறித் திரிபவனை ழுகோள் சொல்லுபவன் கோளன்ழு என்றும்
சொல்வர்.
அடிபேணாக்
கூளன்
---
கூளம்-குப்பை:
குப்பை ஒன்றுக்கும் உதவாத தென்று கழிக்கப்பட்டது.
இறைவனுடைய
திருவடியை விரும்பாதவரும் ஒன்றுக்கும் பயனில்லாதவர் களாய் குப்பை போல் ஒதுக்கப்
பெறுவார்கள்.
பிறவியின்
பயன் பெருமானை அடைதல்.
கல்வியின்
பயன் கடவுளைப் பேணுதல்.
இறைவனுடைய
நல்ல தாளைத் தொழாதவர் ழுகற்றதனால் ஆயபயன் யாது? என்று வினவுகின்றார் திருவள்ளுவர்.
“அடிபேணிக் கற்றிடும்
அடியவர் புத்தியில் உறைபவ”
என்ற
திருப்புகழையும் ஈண்டு சிந்தியுங்கள்.
“சிவனை அடுக்காத
நூல்களில் நெருப்பு வை” என்று பஸ்மஜாபால உபநிடதம் கூறுகின்றது.
“திக்வித்யா
அசிவாச்ரயா”
“சிவனை அர்ச்சிக்காத
உடம்பில் தீ வை” என்று மேலும் அவ்வுபநிடதம் அறைகின்றது.
“திக் அநீசார்சனம்
ஜன்ம”
எனினும்
எனை நீ உன் அடியரொடு கூடும் வகைமை
அருள்
புரிவாயே
---
இத்தனை
குணக்கேடனாக இருப்பினும் முருகா! எளியேனை இகழ்ந்து ஒதுக்கிவிடாமல், தாய் சேய் மீது கருணை வைப்பதுபோல், கோடி அவகுணங் களையும் அகற்ற வல்லதாகிய
அடியவர் குழுவில் சேர்த்துவிடு.
குருட்டு
மாட்டை மந்தையாகப் போகும் மாட்டு மந்தையில் சேர்த்து விட்டால், அக் குருட்டு மாடு
அருகில் வரும் மாடுகளை உராய்ந்து கொண்டே ஊரைச் சேர்ந்து விடும்.
முத்தி
வீட்டுக்குச் சிறியேன் தகுதி அற்றவனாயினும், அடியார் திருக்கூட்டம் எனக்குத்
தகுதியை உண்டாக்கி முத்தி வீட்டைச் சேர்க்கும். அடியவருடன் கூடுவதே முத்தி அடைய
எளியவழி.
திருவாசகத்தில்
மணிவாசகப் பெருமான், இறைவன் தன்னை அடியவர்கள் திருக்கூட்டத்தில் சேர்த்தது அதிசயம் என்று
வியந்து பாடுகின்றார்.
வைப்பு
மாடு என்றும் மாணிக்கத்து ஒளி என்றும்
மனத்திடை உருகாதே
செப்பு
நேர்முலை மடவரலியர் தங்கள்
திறத்து இடை நைவேனை
ஒப்பு
இலாதன உவமனில் இறந்தன
ஒண் மலர்த் திருப்பாதத்து
அப்பன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
நீதியாவன
யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடும் கூடேன்
ஏதமே
பிறந்து இறந்து உழல்வேன் தனை
என் அடியான் என்று
பாதி
மாதொடும் கூடிய பரம்பரன்
நிரந்தரம் ஆய் நின்ற
ஆதி
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
முன்னை
என்னுடை வல்வினை போயிட
முக்கண் அது உடை எந்தை
தன்னை
யாவரும் அறிவதற்கு அரியவன்
எளியவன் அடியார்க்குப்
பொன்னை
வென்றது ஓர் புரிசடை முடிதனில்
இளமதி அது வைத்த
அன்னை
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயங் கண்டாமே.
பித்தன்
என்று எனை உலகவர் பகர்வதோர்
காரணம் இது கேளீர்
ஒத்துச்
சென்று தன் திருவருள் கூடிடும்
உபாயம்
அது அறியாமே
செத்துப்
போய் அரு நரகிடை வீழ்வதற்கு
ஒருப்படு கின்றேனை
அத்தன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
பரவுவார்
அவர் பாடு சென்று அணைகிலேன்
பன்மலர் பறித்து ஏத்தேன்
குரவு
வார் குழலார் திறத்தே நின்று
குடி கெடுகின்றேனை
இரவு
நின்று எர் ஆடிய எம் இறை
எரிசடை மிளிர்கின்ற
அரவன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
எண்ணிலேன்
திருநாம அஞ்செழுத்தும் என்
ஏழைமை அதனாலே,
நண்ணிலேன்
கலை ஞானிகள் தம்மொடு
நல்வினை நயவாதே,
மண்ணிலே
பிறந்து இறந்து மண் ஆவதற்கு
ஒருப்படு கின்றேனை
அண்ணல்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
பொத்தை
ஊன்சுவர் புழுப் பொதிந்து உளுத்துஅசும்பு
ஒழுகிய பொய்க்கூரை
இத்தை
மெய் எனக் கருதி நின்று இடர்க் கடல்
சுழித்தலைப் படுவேனை
முத்து
மாமணி மாணிக்க வயிரத்த
பவளத்தின் முழுச்சோதி
அத்தன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
நீக்கி
முன் எனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையில் புகப்பெய்து
நோக்கி
நுண்ணிய நொடியன சொற்செய்து,
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி
முன்செய்த பொய் அறத் துகள்அறுத்து
எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
உற்ற
ஆக்கையின் உறுபொருள் நறுமலர்
எழுதரு நாற்றம் போல்
பற்றல்
ஆவது ஓர் நிலையிலாப் பரம்பொருள்
அப்பொருள் பாராதே,
பெற்றவா
பெற்ற பயன்அது நுகர்த்திடும்
பித்தர்சொல் தெளியாமே
அந்தன்
ஆண்டு, தன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே.
இருள்
திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச்
சிறுகுடில் இது, இத்தைப்
பொருள்
எனக் களித்து அருநரகத்து இடை
விழப் புகுகின்றேனை,
தெருளும்
மும்மதில் நொடிவரை இடிதரச்
சினப் பதத்தொடு செந் தீ
அருளும்
மெய்ந்நெறி, பொய்ந்நெறி நீக்கிய
அதிசயங் கண்டாமே.
“துரும்பனேன்
என்னினும் கைவிடுதல் நீதியோ
தொண்டரொடு
கூட்டு கண்டாய்” ---
தாயுமானார்.
“அடியார்வாழ் சபையின்
ஏற்றியின் ஞானபோதமும்
அருளி
ஆட்கொள்ளும்” --- (நிருதரார்க்கொரு) திருப்புகழ்
சூரில்
கிரியில் கதிர்வேல் எறிந்தவன் தொண்டர்குழாம்
சாரில், கதி அன்றி வேறு இலைகாண், தண்டு தாவடி போய்த்
தேரில்
கரியில் பரியில் திரிபவர் செல்வம் எல்லாம்
நீரில்
பொறி என்று அறியாத பாவி நெடுநெஞ்சமே.
என்று
கந்தரலங்காரம் 49 - ஆவது பாட்டில்
நெஞ்சுக்கு மிக உருக்கமாக உபதேசிக்கின்றார்.
மிக
உயர்ந்த பாடல். உள்ளத்தை உருக்கும் பாடல்.
இப்படி
அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் “ஆண்டவனே! அடியேனை அடியாருடன் கூட்டிவைக்க
வேண்டும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
வேண்டுவார்
வேண்டியதை வெறாது உதவும் வேற்பரமன் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றி வைத்தார்.
அங்ஙனம் நிறைவேற்றி விட்டார் என்பதை நாம் எப்படி அறிய முடியும்? நிறைவேறப் பெற்ற அருணகிரிநாதரே
கந்தரலங்காரத்தில் விளக்கமாக நன்றி பாராட்டும் முறையில் கூறுகின்றார்.
இடுதலைச்
சற்றும் கருதேனை, போதம் இலேனை, அன்பால் கெடுதல் இலாத்
தொண்டரில் கூட்டியவா! கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச்
சாத்தித்த வேலோன். பிறவி அற, இச் சிறை
விடுதலைப்பட்டது, விட்டது பாச வினை விலங்கே.
வீறு
கலிசை வரு சேவகனது இதய மேவும் ஒரு பெருமை உடையோனே ---
அருணகிரிநாதர்
மிகச் சிறந்த பரமஞானி. அவர் மனிதர்களைப் புகழ்ந்து பாடாதவர். பாடுகின்றவர்களையுங்
கண்டிக்கின்றவர். இத்திருவாளர் தமது காலத்தில் இருந்த மூவரைப்
பாராட்டியிருக்கின்றார்.
1. கலிசைச் சேவகனார் 2. பிரபுடதேவராசன், 3. சோமநாதன்.
“அரிவை ஒரு பாகம்ஆன
அருண கிரிநாதர் பூஜை
அடைவு தவறாது பேணும் அறிவாளன்
அமணர்குல காலனாகும் அரியதவ ராஜராஜன்
அவனி புகழ் சோமநாதன்” --- (ஒருவழிபடாது) திருப்புகழ்
என்று
சோமநாதனை மிகச் சிறப்பாகப் பாராட்டியிருக்கின்றார்.
இவர்
மன்னராகவும், திருவருணை மேவும்
சிவமூர்த்தியை வழிப்பட்டவராகவும்,
மாறுபட்ட
சமணர்களை அழித்தவராகவும், பெரிய தவசீலராகவும், உலகம் புகழப் பெற்ற உத்தமராகவும்
இருந்திருக்க வேண்டும். ஆனால் இவர் வரலாறு நன்கு விளங்கவில்லை.
இதுபோல்
கலிசைச் சேவகனாரும் ஒரு சிற்றரசர். அருணகிரி நாதருடைய நண்பர். வீரை என்ற ஊரில்
பழநியாண்டவரை எழுந்தருளப் புரிந்தவர். இடையறாத முருகபக்தி பூண்டவர்., அதனால் அவருடைய உள்ளமாகிய கோயிலிலே
மூவருக்கும் எட்டாத முருகவேள் எழுந்தருளியிருக்கின்றார். இவருடைய இனிய வரலாறும்
விளங்கவில்லை.
கருத்துரை
அசுரகுல
காலரே! பழநியப்பரே! அடியாருடன் கூட்டி ஆண்டருள்வீர்!
No comments:
Post a Comment