பழநி - 0158. சீ உதிரம் எங்கும்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

சீ உதிரம் எங்கும் (பழநி)

பழநியப்பா! 
இந்தப் பாழ் உடலை அடியேன் நம்பி வாடாமல்,  
திருவடியில் சேர்த்து அருள்.

தானதன தந்த தானதன தந்த
     தானதன தந்த தானதன தந்த
          தானதன தந்த தானதன தந்த தனதான


சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு
     மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை
          தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே

தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த
     மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு
          சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா

ஆயதுந மன்கை போகவுயி ரந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை
          யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால்

ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி
     தானுமிக வந்து மேவிடம யங்கு
          மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே

மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு
     பார்முழுது மண்ட கோளமுந டுங்க
          வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே

வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு
     நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த
          வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம்

வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து
     மேயல்புரி செங்கண் மால்மருக துங்க
          வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக

வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு
     கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க
          வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


சீ உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பு
     மாய மல பிண்டம், நோய் இடு குரம்பை,
          தீ, நரிகள், கங்கு, காகம் இவை தின்பது ......ஒழியாதே,

தீது உள குணங்களே பெருகு, தொந்த
     மாயையில் வளர்ந்த தோல், தசை, எலும்பு,
          சேர் இடு நரம்பு தான் இவை பொதிந்து, ...... நிலைகாணா

ஆயது, நமன் கை போக உயிர், ந்த
     நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை
          ஆகிய உடம்பு பேணி, நிலை என்று, ...... மடவார்பால்

ஆசையை விரும்பியே, விரக சிங்கி
     தானும் மிக வந்து மேவிட மயங்கும்
          ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு ....புரிவாயே.

மாயை வல கஞ்சனால் விட, வெகுண்டு
     பார்முழுதும் அண்ட கோளமும் நடுங்க
          வாய் பிளறி நின்று, மேக நிகர் தன்கை ...... அதனாலே

வாரிஉற அண்டி வீறொடு முழங்கு
     நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
          வாரண இரண்டு கோடு ஒடிய வென்ற ......நெடியோனாம்,

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து,
     மேயல் புரி செங்கண் மால் மருக! துங்க
          வேல! கிரவுஞ்ச மால்வரை இடிந்து ...... பொடியாக,

வேலைவிடு கந்த! காவிரி விளங்கு
     கார் கலிசை வந்த சேவகன் வணங்க
          வீரைநகர் வந்து வாழ், பழநி அண்டர் ...... பெருமாளே.


பதவுரை

      மாயை வல கஞ்சனால் விட --- மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு,

     வெகுண்டு --- கோபத்துடன் வந்து,

     பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க --- உலக முழுவதும் அண்ட உருண்டையும் நடுங்கும்படி,

     வாய் பிளிறி நின்று --- வாய்விட்டு சத்தமிட்டு நின்று,

     மேகம் நிகர் தன் கை அதனாலே --- மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால்,

     வாரி உற அண்டி --- வாரும் குறிப்புடன் நெருங்கி,

     வீறொடு முழங்கு --- கர்வத்துடன் முழக்கம் புரிந்து,

     நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்த்த --- நீரை உண்கின்ற கோபத்துடன் எதிர் வந்த,

     வாரணம் இரண்டு கோடு ஒடிய வென்ற --- குவலயாபீடம் என்ற மதயானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற,

     நெடியோனாம் --- நீண்ட வடிவுடையவரானவரும்,

     வேயின் இசை கொண்டு --- புல்லாங்குழலின் இசை கொண்டு,

     கோ நிரை புரந்து --- பசுக்கூட்டங்களைக் காத்து,

     மேயல் பரி செம் கண் --- மேயவிட்ட சிவந்த கண்களை உடையவரும் ஆகிய,

     மால் மருக --- திருமாலின் மருகரே!

      துங்க வேலா --- பரிசுத்தமான வேலாயுதரே!

      கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக --- பெரிய கிரவுஞ்ச மலையானது இடிந்து தூளாகும் படி,

     வேலை விடு கந்த --- வேலாயுதத்தை விடுத்த கந்தப் பெருமானே!

      காவிரி விளங்கு கார் --- காவிரியாற்றின் தன்மையுள்ள நீர் சூழ்ந்த,

     கலிசை வந்த சேவகன் வணங்க --- கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற,

     பழநி அண்டர் பெருமாளே --- பழநிமேவும் தேவர்கள் போற்றும் பெருமையிற் சிறந்தவரே!

      சீ உதிரம் எங்கும் ஏய் --- சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி,

     புழு நிரம்பும் மாய மல பிண்டம் --- புழுக்கள் நிறைந்த நிலையில்லாத மலத்தின் பிண்டமும்,

     நோய் இடு குரம்பை --- நோய்கள் தங்குகின்ற கூடுமாகிய இந்த உடம்பை,

     தீ நரிகள் --- நெருப்பும் நரிகளும்,

     கங்கு --- கழுகுகளும்,

     காகம் இவை --- காக்கைகள் முதலியன,

     தின்பன் ஒழியாது --- தின்பது ஒழியாது,

     தீது உள குணங்களே பெருகு தொந்த --- தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசமானது,

     மாயையில் வளர்ந்த --- மாயையினால் வளர்ந்த,

     தோல் தசை எலும்பு --- தோல் தசை எலும்பு,

     சேரிடு நரம்புதான் இவை பொதித்து --- சேர்ந்து நரம்பு ஆகிய இவை மூடி,

     நிலை காணா --- நிலையாக இல்லாதது,

     ஆயது --- இப்படியானது இந்த உடம்பு,

     நமன் கை போக உயிர் --- உயிர் இயமன் கையில் போனவுடன்,

     அந்த நாழிகையில் --- அதே நேரத்தில்,

     விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு ---- மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இந்த சரீரத்தை,

     பேணி --- விரும்பிக் காப்பாற்றி,

     நிலை என்று --- நிலைத்ததென்று கருதி,

     மடவார்பால் ஆசையை விரும்பியே --- பெண்களிடம் ஆசை வைத்து விருப்புற்று,

     விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட --- காம நஞ்சு மிகுதியாக வந்து சேர்வதனால்,

     மயங்கும் --- மயக்கங்கொண்டு,

     ஆழ் துயர் விழுந்து மாளும் எனை --- ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற அடியேனை,

     அன்பு புரிவாயே --- அன்பு வைத்து ஆட்கொள்வீர்.


பொழிப்புரை


         மாயையில் வல்லவனாகிய கம்சனால் ஏவப்பட்டு, கோபித்து, உலக முழுவதும் உருண்டுள்ள அண்டமும் நடுங்குமாறு, வாய் விட்டுக் கதறி நின்று, மேகம்போல் கருத்த தும்பிக்கையால் வாரிக்கொள்ளும்படி நெருங்கி வந்து, கருவத்துடன் முழக்கம் செய்து, தண்ணீரைப் பருகுகின்ற கோபத்துடன் எதிர்வந்த குவலயாபீடம் என்ற யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நெடிய வடிவினரும், புல்லாங்குழல் வாசித்து பசுக்கூட்டங்களை மேய்த்துக் காத்தருளிய சிவந்த கண்களையுடையவருமாகிய நாராயண மூர்த்தியின் திருமருகரே!

         தூய வேலாயுதரே!

         மயக்கம் புரிந்த கிரவுஞ்ச மலையிடிந்து தூளாகும்படி வேற்படையை விடுத்த கந்தக் கடவுளே!

         காவிரி அனைய நீர் சூழ்ந்த கலிசையில் வாழ்ந்த கலிசைச் சேவகனார் வழிபட்ட வீரை என்ற திருத்தலத்திலும், பழநியிலும், எழுந்தருளியுள்ள தேவர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே!

         சீழும் உதிரமும் எங்கும் பொருந்தி புழு நிரம்பிய, தோன்றி மறையும் மலபிண்டம், நோய் நிறைந்த கூடு, நெருப்பும் நரிகளும், கழுகுகளும் காக்கைகளும் தின்கின்ற, துர்க்குணங்கள் வளர்கின்ற பாசபந்த மாயையில் வளர்ந்த தோல் சதை எலும்பு, நரம்பு முதலிய சேர்ந்து மூடிய இந்த உடம்பு நிலையில்லாதது; எமன் கையில் உயிர்போன நேரத்தில் மிகவும் ஊசியழியும் துன்பம் நிறைந்த உடலை விரும்பி, இதை நிலைத்தது என்று கருதி,  மாதர்களின்மீது ஆசை வைத்து, காம நஞ்சு மிகுந்து மயங்கி, ஆழமான துயரத்தில் வீழ்ந்து மடிகின்ற அடியேனை அன்பு செய்து ஆண்டருள்வீர்.

விரிவுரை

 
சீ உதிர.........மாய மல பிண்டம் ---

இந்த உடம்பு சீழ், இரத்தம், புழு, மலம் இவை நிரம்பியது. அருவருப்பானது.

தோலெலும்பு சீ நரம்பு பீளைதுன்று கோழை பொங்கு
 சோரிபிண்ட மாயுருண்டு                வடிவான
 தூல பங்க காயம்”                          --- திருப்புகழ்

நோயிடு குரம்பை ---

குரம்பை-சிறுகுடில்

கள்ளப்புலக் குரம்பை”             ---  திருவாசகம்

குரம்பை மலசலம் வழுவளு நிணமொடு
எலும்பு அணிசரி தசையிரல் குடல்நெதி
குலைந்த செயிர் மயிர் குருதியொ டிவைபல கசுமாலம்”     ---  திருப்புகழ்

இந்தக் குடிலில் நிறைந்தவை பல நோய்கள் தான்.

பல நோயும் நிலுவை கொண்டது பாய்க்கிடை கண்டது”
                                                          ---  (முனையழிந்தது) திருப்புகழ்

தீ நரிகள் கங்கு காகமிவை தின்பது ஒழியாதே ---

செபதபம், கோயில் வழிபாடு முதலிய நற்கருமங்கள் ஒன்றையும் மேற்கொள்ளாது வேளைக்கு வேளை வயிறு புடைக்க உண்டு வளர்ந்த இப் புலால் உடம்பு, முடிவில் நெருப்புக்கும் நரிக்கும் கழுகுக்கும் காக்கைக்கும் இரையாகிக் கழிகின்றது.

எய்ச்சு இளைச்ச பேய்க்கும் எய்ச்சுஇளைச்ச நாய்க்கும்
    எய்ச்சுஇளைச்ச ஈக்கும்                இரையாகும்
இக்கடத்தை நீக்கி, அக்கடத்துள் ஆக்கி,
    இப்படிக்கு மோட்சம்               அருள்வாயே”    ---  (மச்சமெச்சு) திருப்புகழ்.

காட்டி லேயியல் நாட்டி லேபயில்
     வீட்டி லேஉல ...... கங்கள் ஏசக்
காக்கை நாய்நரி பேய்க்கு ழாம் உண
     யாக்கை மாய்வது ...... ஒழிந்திடாதோ.         --- (ஏட்டிலே) திருப்புகழ்.

பூக்கைக் கொண்டுஅரன் பொன்அடி போற்றிலார்
நாக்கைக் கொண்டுஅரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேஇரை தேடி அலமந்து
காக்கைக் கேஇரை ஆகிக் கழிவரே.                ---  அப்பர்

எரிஎனக்கு என்னும், புழுவோ எனக்குஎனும், இந்த மண்ணும்
சரிஎனக்கு என்னும், பருந்தோ எனக்குஎனும், தான் புசிக்க
நரிஎனக்கு என்னும், புல் நாய் எனக்குஎனும், இந் நாறுஉடலைப்
பிரியமுடன் வளர்த்தேன், இதனால் என்ன பேறுஎனக்கே. ---  பட்டினத்தார்.

நிலைகாணா ---

இந்த உடம்பு நிலையில்லாதது. வானில் எறிந்த கல் நிலத்தில் விழும் என்பதில் ஒரு சிறிது சந்தேகம் கிடையாதுதானே? அதுபோல் வினையால் எடுத்த இந்த உடம்பு வினைமுடிவில் விழுந்துவிடும்.

நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் ---

இந்த உடம்பு உயிருள்ளவரை நன்றாக இருக்கும். உயிர் இயமன் கையில் சென்ற மறுகணமே இது அழுகி நாறி, கெட்டு அழியும். எத்தனை காலம் என்ன என்ன வகையில் பேணி வளர்த்து அழகு செய்த இந்த உடம்பு உயிர்போன அந்த நேரமே விகாரப்பட்டு வெறுக்கப்படுகின்றது.

அந்தோ! என்ன மதியீனம்? இத்தகைய ஊன் உடலை வளர்ப்பதற்காக எத்தனை பொய்? எத்தனை சூது? எத்தனை வாது? எத்தனை களவு? எத்தனை வஞ்சனை? அளவு ஏது? பாவமூட்டையைக் கட்டிக் கொண்டு உயிர் புறப்படுகின்றது.

உலகிலே பெரிய அதிசயம் எது? தெரிகின்றதா?

தினம் தினம் மாய்ந்து போகின்ற மனிதர்களைப் பார்த்தும் எனக்கு மரணம் இல்லையென்று கருதி நெஞ்சம் அஞ்சாது பாவங்கள் பல புரிகின்ற பேதமைதான் பெரிய அதிசயம்.

விரக சிங்கி..................எனை அன்பு புரிவாயே ---

சிங்கி - குளிர்ந்து கொல்லும் பாஷாணம். மாதராசை இந்த நஞ்சுக்கு நிகரானது. “முருகா! இந்த உடம்பைப் பேணி மாதராசையால் மயங்கி அழியும் அடியேனை அன்பு செய்து ஆதரிக்கவேண்டும்” என்று இப்பாடலில் சுவாமிகள் வேண்டுகின்றார்.

மாயை வல கஞ்சனால் விட..................வாரணம் ---

ஆயர்பாடியில் கண்ணபிரான் வளர்ந்தபோது அவரைக் கொல்லும் பொருட்டு மாயங்கள் பல கம்சன் செய்தான், அவன் புரிந்த மாயச் செயல்களால் கண்ணபிரான் அழிந்தாரில்லை.

பின்னர் அவரை மதுரைக்கு அழைத்தான். அவர் வரும்போது தனது பட்டத்து யானையாகிய குவலயா பீடம் என்ற யானைக்கு மதம் ஏற்றி அவரைக் கொல்லுவதற்கு ஆயத்தம் புரிந்து வைத்தான்.

கண்ணபிரான் அம் மதயானையின் கொம்புகளை ஒடித்து, அந்த யானையை யும், கம்சனையும், கொன்று நீதிநெறியை நிலைநாட்டினார்.

சிந்தூரத் திலகநுதற் சிந்துரத்தின் மருப்பொசித்த
 செங்கண் மாலே”                       ---  வில்லிபாரதம்.


வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து ---

கண்ணபிரான் கானகத்தில் செய்த வேய்ங்குழல் கானத்தினால் பசுக்குழாத்தை இன்புறச் செய்து, கல்லும் மரமும் புல்லும் உருகுமாறு இன்னிசையால் ஏழுலகங்களையும் இன்புறுத்தினார்.

அதனால் அந்த வேளையில் உயிர்கள் பகையுணர்ச்சி அறவே நீங்கப்பெற்று உறவு செய்தன. மயிலும் பாம்பும், கீரியும் பாம்பும், புலியும் பசுவும், பூனையும் எலியும், பாம்பும் தவளையும், ஒன்றையொன்று தழுவி நட்புடன் இன்புற்றன.

காவிரி விளங்கு கார்கலிசை வந்த சேவகன் ---

கலிசைச் சேவகனார் என்பவர் அருணகிரிநாதருடைய இனிய நண்பர். இவர் காவேரிச் சேவகன் என்ற பேராலும் அழைக்கப் பெறுகின்றார். இவர் பெருமை அளவிடற்கரியது.

கருத்துரை

திருமால் மருகா! பழநிமேவு முருகா! இந்த உடம்பை நம்பி அடியேன் இடர் உறா வண்ணம் அன்பு வைத்து ஆட்கொள்வாய்.


No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...