அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
சிறு பறையும் (பழநி)
பழநியப்பா!
அடியேன் உய்ய
ஞான உபதேசம் அருள்
தனதனன
தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன
தனதனன தனனதன தத்தத் தனத்ததன ......
தனதான
சிறுபறையு
முரசுதுடி சத்தக் கணப்பறையு
மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட்
டிழுக்கஇனி ...... யணுகாதே
சிலதமர்க
ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு
சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல்
திரைகடலில் முழுகெனவு ரைக்கப்
படிக்குடிலை…...ஒழியாதே
மறைமுறையி
னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி
உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம்
வழிபடவும் நினதடிமை யிச்சைப்
படுத்துவது .... மொருநாளே
வருதுரக
மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட
ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய
மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத
.....மருள்வாயே
நறையிதழி
யறுகுபல புட்பத் திரட்களொடு
சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி
னளினமுற அணிசடையர் மெச்சிப்
ப்ரியப்படவு ......மயிலேறி
நவநதிகள்
குமுகுமென வெற்புத் திரட்சுழல
அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும்
நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு
...... முருகோனே
குறவர்முனை
கெடமனது வெட்கப் படக்குடிலில்
மலையிலெழு தினையிதணில் வைத்துச்
சிறுக்கியிரு
குவிமுலையு மணியிடையு மெச்சிப்
புணர்ச்சிசெயு ......மணவாளா
குறுமுநிவ
னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய
குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு
......பெருமாளே.
பதம் பிரித்தல்
சிறுபறையும், முரசு, துடி, சத்தக் கணப்பறையும்,
மொகுமொகு என அதிர, உடன் நெட்டிப் பிடித்து, முடி
சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட்டு இழுக்க, இனி ...... அணுகாதே
சில தமர்கள்
உறவு கிளை கத்திப் பிதற்றி, எடு,
சுடலைதனில் இடு, கனலை இட்டுக் கொளுத்து, புனல்
திரைகடலில் முழுகு என உரைக்கப்படு இக்குடிலை…...ஒழியாதே,
மறைமுறையின்
இறுதிநிலை முத்திக்கு இசைத்தபடி,
உடல் உயிர்கள் கரண வெளி பட்டு, குணத் திரயம்
வழிபடவும், நினது அடிமை இச்சைப் படுத்துவதும் .... ஒருநாளே?
வருதுரக
மயில் மணிகள் சத்திக்க நிர்த்தமிட,
ஒருபதுடன் இருபுயமும் மட்டுத் தொடைக்கு இசைய,
மனம் மகிழ இனியமொழி செப்பி, சிவத்த பதம் ..... அருள்வாயே.
நறை
இதழி, அறுகு, பல புட்பத் திரள்களொடு,
சிறுபிறையும், அரவும், எழில் அப்பு, திருத் தலையில்
நளினம் உற அணி சடையர் மெச்சிப்
ப்ரியப்படவும் ...... மயிலேறி.
நவநதிகள்
குமுகுகு என, வெற்புத் திரள் சுழல,
அகிலமுதல் எழுபுவனம் மெத்தத் திடுக்கிடவும்,
நவமணிகள் உரகன் உடல் கக்கத் துரத்திவரு
...... முருகோனே!
குறவர்முனை
கெட, மனது வெட்கப் பட, குடிலில்
மலையில் எழு தினை இதணில் வைத்து, சிறுக்கி இரு
குவி முலையும் அணி இடையும் மெச்சிப் புணர்ச்சி செயும் ...... மணவாளா!
குறுமுநிவன்
இருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற,
அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கு இனிய
குருகுமர! பழநி வளர் வெற்புத் தனில் திகழும்
......பெருமாளே.
பதவுரை
நறை இதழி --- வாசனையுள்ள கொன்றை
மலரையும்,
அறுகு --- அறுகம்புல்லையும்,
பல புட்ப திரள்களொடு --- அநேக வகையான மலர்க்
குவியல்களையும்,
சிறு பிறையும் --- சிறிய பிறைச் சந்திரனையும்,
அரவும் --- பாம்பையும்,
எழில் அப்பு --- அழகிய கங்கா நதியையும்,
திருத் தலையில் --- சிறந்த சென்னி மீது,
நளினம் உற அணி சடையர் --- இனிது விளங்கத்
தரித்திருக்கின்ற சடைமுடியுடைய சிவபெருமான்,
மெச்சி ப்ரியப் படவும் --- மெச்சி அன்புகொள்ள,
மயில் ஏறி --- மயிலின் மீது ஆரோகணித்து,
நவ நதிகள் --- ஒன்பது நதிகளும்,
குமுகுமு என --- குமுகுமு என்று கலங்கவும்,
வெற்பு திரள் சுழல --- மலைக் கூட்டங்கள்
சுழற்சியடையவும்,
அகில முதல் எழுபுவனம் மெத்த திடுக்கிடவும் ---
பூலோகம் முதலிய ஏழு வுலகங்களும் மிகவுந் திடுக்கிடவும்,
உரகன் உடல் நவமணிகள் கக்க --- பாம்பினுடைய
உடலினின்று ஒன்பது மணிகள் வெளிப்படவும்,
துரத்தி வரும் --- அசுரர்களைத்
துரத்திக்கொண்டு வந்த,
முருகோனே --- முருகப் பெருமானே!
குறவர் முனை கெட --- குறவர்களுடைய போர்
அழியவும்,
மனது வெட்கபட --- மனமானது நாணப்படவும்,
குடிலில் --- குடிசையிலும்,
மலையில் எழு தினை இதணில் வைத்து ---
மலையின்கண் தினைப்புனத்துப் பரணிலும் வைத்து,
சிறுக்கி --- சிறு பெண்ணாகிய வள்ளியம்மை
யாருடைய,
இரு குவிமுலையும் --- இரண்டு குவிந்த முலைகளையும்,
அணி இடையும் மெச்சி --- அழகிய இடையையும்
பாராட்டி,
புணர்ச்சி செய்யும் --- கலந்து அருளிய
மணவாளா --- கணவரே!
குறு முனிவன் --- அகத்திய முனிவர்,
இரு பொழுதும் --- காலை மாலை என்ற இரு
வேளைகளிலும்,
அர்ச்சித்து முத்தி பெற --- மலர்களால்
அர்ச்சனை செய்து வீடு பேறு பெறுமாறு,
அறிவு நெறி தவநிலைகள் செப்பு --- ஞான
வழியையும் தவ நிலைகளைப் பற்றியும் உபதேசித்த,
தமிழுக்கு இனிய குரு --- தமிழுக்கு இனிமையான
குருமூர்த்தியே!
குமர - குமாரக் கடவுளே!
வளர் பழநி வெற்புதனில் திகழும் ---
அருள் வளர்கின்ற பழநிமலையின்மீது எழுந்தருளியுள்ள,
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
சிறு பறையும் --- சிறிய பறைகளும்,
முரசு --- முரசும்,
துடி --- உடுக்கையும்
சத்த கண பறையும் --- ஒலிக்கின்ற கூட்டமான பறைகளும்,
மொகு மொகு என அதிர --- மொகு மொகு என்று
பேரொலி செய்யுமாறு,
உடன் எட்டிப் பிடித்து --- உடனே (யமதூதர்கள்)
எட்டிப் பிடித்து,
முடி சிறு கயிறு நெடிது கொடு --- தலையை
சிறிது பாசக் கயிற்றால், நெடுமையாக,
கட்டிட்டு இழுக்க --- கட்டி இழுக்கவும்,
இனி அணுகாதே --- இனி அவர் பிழைக்க மாட்டார்
என்று கருதி
சில தமர்கள் --- சில உறவினர்கள்,
உறவு கிளை --- உறவு, மிகுந்த உடன் பிறந்தவர்கள் எல்லாரும்,
கத்தி பிதற்றி --- ஓ என்று அலறி அழுது,
எடு சுடலைதனில் இடு --- எடு என்றும்
சுடலைக்குக் கொண்டு போ என்றும்,
புனல் திரை கடலில் முழுகு என உரைக்கப்படி ---
நீர் நிறைந்த அலையுடன் கூடிய கடலில் முழுகுங்கள் என்றும் கூறும்படிக்குள்ள,
குடிலை ஒழியாதே --- இச்சரீரம் அந்த முறையில்
நீங்காத வண்ணம்,
மறை மறையின் இறுதி நிலை --- வேத நூல்களில்
முடிவாகச் சொல்லப்பட்ட நிலையாகிய,
முத்திக்கு இசைத்தபடி --- முத்தி
பெறுவதற்குக் கூறிய வழிப்படி,
உடல் உயிர்கள் கரண வெளிப்பட்டு --- உடலும்
உயிர்களும் அந்தக்கரணங்களும் பரவெளியில் சம்பந்தப்பட்டு,
குணத்திரயம் வழிபடவும் --- முக்குணங்களும்
வழிபட்டு ஒழுக;
நினது அடிமை --- உமது அடிமையாகிய எனக்கு,
இச்சை படுத்துவதும் ஒரு நாளே --- (தேவரீர்
மீது) இச்சை வருமாறு என்னை ஆண்டருளும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ?
வரு துரக மயில் --- நீர் ஏறிவரும்
குதிரையாகிய மயில்,
மணிகள் சத்திக்க நிர்த்தம் இட --- மணிகள்
ஒலிக்குமாறு நடனஞ் செய்ய,
ஒருபது உடன் இருபுயமும் --- பன்னிரு
புயங்களும்,
மட்டு தொடைக்கு இசைய --- தேன் ஒழுகும்
மாலைகட்குப் பொருந்தி விளங்க,
மனம் மகிழ --- அடியேனுடைய மனமானது மகிழுமாறு,
இனிய மொழி செப்பி --- இனிமையான உபதேச மொழி
யுரைத்தருளி
சிவத்த பதம் --- உமது சிவந்த திருவடிகளை,
அருள்வாயே --- அடியேனுக்கு அருள்புரிவீர்.
பொழிப்புரை
பரிமளம் மிகுந்த கொன்றை மலரும், அறுகம்புல்லும், பலவகையான மலர்க் குவியலும், சிறிய பிறை மதியும், பாம்பும், அழகிய நதியும் ஆகிய இவற்றைச் சிறந்த
சென்னியில் இனிமையாகத் தரித்துள்ள சடை முடியுடைய சிவபெருமான் பாராட்டி அன்பு கொள்ள
மயிலின் மீது அரோகணித்து, ஒன்பது நதிகளும்
குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள்
சுழற்சியடைவும், பூலோக முதல் ஏழு
உலகங்களும் மிகவும் திடுக்கிடவும்,
பாம்பு
தன் உடலிலிருந்து ஒன்பது மணிகளையும் கக்கவும், அசுரர்களைத் துரத்திக் கொண்டு வந்த
முருகப் பெருமானே!
குறவர் செய்த போர் அழியவும், அவர்கள் மனம் நாணவும், குடிசையிலும், மலையில் உள்ள தினைப்புனத்தின் பரணிலும்
சிறுமியாகிய வள்ளி நாயகியின் குவிந்த இரு தனங்களையும் அழகிய இடையையும் பாராட்டித்
தழுவிய நாயகரே!
அகத்திய முனிவர் காலை மாலைகளில் மலரால்
அர்ச்சனை செய்து வீடு பெறுமாறு,
ஞான
வழியுடன் கூடிய தவ நிலைகளை உபதேசித்த தமிழ்க்கு இனிய குருநாதரே!
குமாரக் கடவுளே!
அருள் வளர்கின்ற பழநி மலை மீது
எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே!
சிறிய பறைகளும், முரசும், உடுக்கையும் ஒலிக்கின்ற கூட்டமான பறைகளும்
மொகு மொகு என்று முழங்கவும், உடனே இயம தூதுவர்கள்
என் தலையை எட்டிப் பிடித்து சிறிய பாசக் கயிற்றால் நெடுகக் கட்டி இழுக்கும்போது, நெருங்கி வராமல் நின்று சில
உறவினர்களும், உடன் பிறந்தார்களும், கதறியழவும்; எடும், மயானத்தில் சுடும் என்றும், எடுத்துக் கொண்டு போய் நெருப்பில் இட்டுக்
கொளுத்தி நீர் நிறைந்த அலையுடன் கூடிய கடலில் முழுகும் என்றும் உரைக்குமாறு, இந்த உடம்பை ஒழிக்காமல், வேத நூலின் முடிவில் கூறும் முத்தி
நிலைக்கு ஏற்றவாறு, என் உடல், உயிர், கரணம் ஆகியவைகள் பர வெளியில் கலந்து, முக்குணங்கள் நல்வழிப்பட்டு, உமது அடிமையாக அன்பு வைத்து என்னை
ஆண்டருளும் நாள் என்று எனக்கு உண்டாகுமோ? பவனி
வருகின்ற குதிரை போன்ற மயில், மணிகள் ஒலி
செய்யுமாறு நடனம் புரிய பன்னிரு புயங்களில் தேன் துளிக்கும் மலர் மாலை பொருந்த
வந்து, என் மனம் மகிழுமாறு, இனிய உபதேசம் புரிந்து சிவந்த திருவடியை
தந்து அருள் புரிவீர்.
விரிவுரை
சிறுபரை
முரசு துடி சத்தக்கணப் பறையி......அதிர ---
உயிர்
போனவுடன் சிறுசிறு பறைகள், தாரை, கொம்பு, பெரிய பறைகள் முதலிவற்றைக் கொட்டி
மிகுதியாக முழக்குவர்: கணப்பறை-அதமக் கருவி. அந்தப் பிணப் பறையறையாதவாறு முருகன்
அடி சேர வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்.
...... .....சமனோலை
“அதுவருகும் அளவில்உயிர் அங்கிட்டு, இங்குப்
பறைதி மிலை திமிர்தமிகு தம்பட்டம்பல்
கரையஉற வினர்அலற உந்திச் சந்தித் தெருவூடே” --- (அமுதுததி) திருப்புகழ்
அணுகாதே
சில தமர்கள் உறவு கிளை கத்திப் பிதற்றி ---
நெருங்கி
அன்பாக இருந்த உறவினர்கள் முதலியோர் பிணம் என்று அருவருப்புடன் அகல இருந்து
ஓவென்று கதறியழுவார்கள்.
எடு, சுடலை தனில் இடு,.....முழுகு, என உரைக்க ---
ஏழைகட்கு
ஒரு பிடி அன்னமும் தராமல் தினம் தினம் பாலும் தேனும் நெய்யும் அன்னமும் வயிற்றிலே அடைத்து
வளர்த்த இந்த உடம்பை, உயிர் போனவுடனே, சுற்றத்தார்கள் கூடி “பிணத்தை எடும்; நேரமாகின்றது; இடுகாட்டில் கொண்டுபோய் சுடும்”; என்று கூறுவார்கள். இது தான் இந்த
உடம்பின் முடிவு நிலை.
“அருங்கான் மருங்கே எடுங்கோள்,
சுடுங்கோள்,
அலங்காரம் நன்று இது, எனமூழ்கி
அகன்று,ஆசையும்
போய் விழும்பாழ் உடம்பால்
அலைந்தேனை அஞ்சல் எனவேணும். --- (பெருங்காரியம்)
திருப்புகழ்
உயிரற்ற
உடம்பைக் கொண்டு சுற்றத்தார்கள் நீரில் முழுகியவுடன் பாசத்தை விட்டு தத்தம் இடம்
ஏகி உண்டு உறங்குவார்கள்.
மறை
முறையின் இறுதிநிலை முத்திக்கு இசைந்தபடி ---
வேத-வேதாந்தங்களின்
முடிவாகிய சித்தாந்த சாத்திரங்களில் கூறிய முத்தி எனக்குச் சித்திக்க வேண்டும்
என்று இங்கே இறைவனிடம் விண்ணப்பிக்கின்றார்.
“உள்ள மலம் நீங்கி, ஓங்கி, சிவானந்த
வெள்ளம் திளைத்ததுவாய் மேவுதலே,-கள்ளவிழ்பூங்
கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்தில்
சித்தாந்த முத்திஎனத் தேறு.” --- சிவஞானபோதம்
உடல்
உயிர்கள் கரண வெளிப்பட்டு ---
உடம்பு
- உயிர், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், கரணங்கள் யாவும் பர வெளியில் கலந்து
நிற்கும் தன்மையைப் பெறவேண்டும் என்றார்.
குணத்திரயம்
வழிபடவும்
---
சத்துவம்
இராஜசம் தாமதம் என்ற முக்குணங்களும் தமது செயலடங்கி அருள்வழி பட்டு நிற்கும்.
நினது
அடிமை இச்சைப்படுத்துவதும் ஒருநாளே ---
“பெருமானே! உமது
அடிமையாகிய அடியேன் உமது திருவடியில் இச்சை வைத்து உய்யும் நாள் ஒன்று எனக்குக்
கிடைக்குமோ” என்று சுவாமிகள் அருள் தாகத்துடன் கூறுகின்றார். மிகவும் உருக்கமாக
உரைக்கின்றார்.
“கதி இலி தனை, அடி
நாயேனை ஆளுவது எந்த நாளோ” --- (அவகுண) திருப்புகழ்
நவநதிகள் ---
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, காவேரி, சோணை, துங்கபத்திரை.
அகிலமுதல்
எழுபுவனம்
---
பூலோகம், புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.
நவமணிகள்
---
வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
குறவர்
முனை கெட மனது வெட்கப்பட ---
முனை-போர்.
முருகர் வேட வடிவிற் சென்று வள்ளியம்மையாரைக் கொணர்ந்த போது வேடர்கள் முருகர்
என்று அறியாது போர் புரிந்தனர். பின்னர் பெருமான் என்று அறிந்து நாணி வணங்கினார்கள்.
குறுமுனிவன்
இருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற ---
முருகன்
அடியார்களில் அகத்தியர் முதன்மையானவர். முருகனிடம் பிரணவ மந்திரமும் செந்தமிழும்
உபதேசம் பெற்றவர். முனிகணத் தலைவர். சிவமூர்த்திக்கு நிகராகப் பொதிகையில்
வாழ்பவர். அவர் காலை மாலைகளில் நறுமலர்களைக் கொண்டு கந்தவேளை அர்ச்சித்து முத்தி
பெற்றனர். முத்தி நெறியில் முதன்மையானது மலரிட்டு வணங்குவது எனவுணர்க.
“போதொடு நீர்
சுமந்து ஏத்திப் புகுவார், அவர்பின் புகுவேன்” --- அப்பர் தேவாரம்
கருத்துரை
மயில்
வாகனரே! வள்ளி நாயகரே! பழநியப்பரே! அடியேனுக்கு உபதேசம் புரிந்து திருவடி
தந்தருளுவீர்.
No comments:
Post a Comment