அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எலுப்பு நாடிகள்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
பிறவியில்
உழலாமல் அருள்.
தனத்த
தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன
தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான
எலுப்பு
நாடிக ளப்பொடி ரத்தமொ
டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ
...... சதிகாரர்
இறப்பர்
சூதக வர்ச்சுத ரப்பதி
யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு
...... சமுசாரம்
கெலிப்பர்
மால்வலை பட்டுறு துட்டர்கள்
அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர்
கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர்
...... கொலைகாரர்
கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள
வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ....ணுழல்வேனோ
ஒலிப்பல்
பேரிகை யுக்ரவ மர்க்கள
மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி
யுடைத்து வானவர் சித்தர்து தித்திட
...... விடும்வேலா
உலுத்த
ராவண னைச்சிர மிற்றிட
வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன்
உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ......
மருகோனே
வலிக்க
வேதனை குட்டிந டித்தொரு
செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை
மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ......
குருநாதா
வனத்தில்
வாழும யிற்குல மொத்திடு
குறத்தி யாரைம யக்கிய ணைத்துள
மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய
...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எலுப்பு
நாடிகள் அப்பொடு, இரத்தமொடு,
அழுக்கு மூளைகள், மச்சொடு கொள்புழு
இருக்கும் வீடு, அதில் எத்தனை தத்துவம்,
.....சதிகாரர்,
இறப்பர்,
சூது அகவர் சுதர், அப் பதி
உழப்பர், பூமி தரிப்பர், பிறப்புடன்
இருப்பர், வீடுகள் கட்டி, அலட்டுஉறு
...... சமுசாரம்
கெலிப்பர்,
மால்வலை பட்டுஉறு துட்டர்கள்,
அழிப்பர், மாதவம் முற்றும் நினைக்கிலர்,
கெடுப்பர் யாரையும், மித்திர குத்திரர்,
.....கொலைகாரர்,
கிருத்தர், கோளகர், பெற்று திரிக் களவு
அரிப்பர், சூடகர், எத்தனை வெப்பிணி
கெலிக்கும் வீடு, அதை நத்தி எடுத்து இவண்
.....உழல்வேனோ?
ஒலிப்
பல் பேரிகை உக்ர அமர்க்களம்
எதிர்த்த சூரரை வெட்டி, இருட்கிரி
உடைத்து, வானவர் சித்தர் துதித்திட
......விடும்வேலா!
உலுத்த
ராவணனைச் சிரம் இற்றிட
வதைத்து, மாபலியைச் சிறை வைத்தவன்,
உலக்கை ராவி நடுக்கடல் விட்டவன் ......
மருகோனே!
வலிக்க
வேதனை குட்டி, நடித்து ஒரு
செகத்தை ஈனவள் பச்சை நிறத்தியை
மணத்த தாதை, பரப்ரமருக்கு அருள் ......
குருநாதா!
வனத்தில்
வாழும் மயில் குலம் ஒத்திடு
குறத்தியாரை மயக்கி, அணைத்து, உள
மகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய
...... பெருமாளே.
பதவுரை
ஒலி பல் பேரிகை --- ஒலிக்கின்ற பலவகையான
பேரிகை வாத்தியங்களுடன்,
உக்ர அமர்க்களம் எதிர்த்து --- கடுமையான
போர்க்களத்தில் எதிர்த்து வந்த,
சூரரை வெட்டி --- சூராதியவுணர்களை
வெட்டியழித்து,
இருள் கிரி உடைத்து --- இருள்மயமாய் நின்று
மயக்கிய கிரவுஞ்ச மலையைப் பிளந்து,
வானவர் --- தேவர்களும்,
சித்தர் --- சித்தர்களும்,
துதித்திட --- துதிசெய்ய,
விடும் வேலா --- வேலாயுதத்தை விடுத்தவரே!
உலுத்த ராவணனை சிரம் இற்றிட வதைத்து ---ஆசையுடைய
இராவணனுடைய சிரங்கள் அற்று விழுமாறு செய்து அவனை வதைத்து,
மா பலியை சிறை வைத்தவன் --- மகாபலிச்
சக்கரவர்த்தியைச் சிறையில் வைத்தவரும்,
உலக்கை ராவி --- உலக்கையை ராவி,
நடுக்கடல் விட்டவன் --- நடுச் சமுத்திரத்தில்
எறிந்தவருமாகிய திருமாலின்,
மருகோனே --- மருகரே!
வலிக்க வேதனை குட்டி --- தலையில்
வலியுண்டாகுமாறு பிரமதேவனை குட்டியவரே!
நடித்து --- ஆன்மாக்கள் உய்யும்
பொருட்டு நடனஞ் செய்தவரும்,
ஒரு சகத்தை ஈனவள் --- ஒப்பற்ற உலகங்களை யீன்ற,
பச்சை நிறத்தியை மணத்த --- பச்சை நிறமுடைய
பார்வதியம்மையை மணந்தவரும் ஆகிய,
தாதை பரப் பிரமருக்கு அருள் --- தந்தையாகிய
பரப்பிரமப் பொருளாம் சிவபெருமானுக்கு உபதேசித்தருளிய,
குருநாதா --- குருநாதரே!
வனத்தில் வாழும் மயில் குலம் ஒத்திடு ---
காட்டில் வாழும் மயிலினம் போன்ற,
குறத்தியாரை --- வள்ளி பிராட்டியாரை,
மயக்கி அணைத்து --- அன்பினால் மயக்குமாறு
செய்து தழுவி,
உளமகிழ்ச்சியோடு --- திருவுள்ளத்தில்
மகிழ்ச்சியுடன்,
திருத்தணி பற்றிய --- திருத்தணிகை அம்பதியில்
பற்று வைத்து எழுந்தருளிய,
பெருமாளே --- பெருமையின் மிக்கவரே!
எலும்பு நாடிகள் --- எலும்பு, நாடிகள்,
அப்பு இரத்தமொடு --- நீர், இரத்தம்,
அழுக்கு மூளைகள் --- அழுக்குள்ள மூளைகள்,
மச்சொடு கொள் புழு --- இழிவைக்கொண்ட புழு,
இருக்கும் வீடு --- இவைகள் இருக்கும் வீடு,
அதில் எத்தனை தத்துவம் --- அந்த வீட்டில்
எத்தனை தத்துவங்கள்,
சதிகாரர் --- மோசக்காரர்கள்,
இறப்பர் --- அநீதி செய்பவர்கள்,
சூது அகவர் சுதர் --- சூதான உள்ளத்தையுடைய
மக்கள்,
அ பதி உழப்பர் --- அந்த ஊரில் மழுப்புபவர்கள்,
பூமி தரிப்பர் --- மண்ணில் தோன்றுவர்,
பிறப்புடன் இருப்பர் --- பிறந்த பிறப்புடன்
இருப்பர்,
வீடுகள் கட்டி அலட்டுறும் சமுசாரம் கெடுப்பர்
--- வீடுகள் கட்டி அலைச்சலுறும் சமுசார வாழ்க்கையில் வெற்றி பெறுவர்,
மால் வலைப்பட்டு உறு துட்டார்கள் --- ஆசை
வலைப்பட்டுக் கிடக்கும் துஷ்டர்கள்,
அழிப்பர் --- அழிவு செய்பவர்,
மாதவம் உற்று நினைக்கிலர் --- பெரிய
தவநிலையைச் சிறிதேனும் நினைக்காதவர்கள்,
யாரையும் கெடுப்பர் --- எல்லோரையும்
கெடுப்பார்கள்,
மித்திர குத்திரர் --- நண்பர்கட்கு வஞ்சனை
செய்வார்கள்,
கொலைகாரர் --- கொலை புரிபவர்கள்,
பெற்று திரி களவு அரிப்பர் --- தீமையைப்
பெற்று திரிந்து களவுத் தொழிலில் தினவு கொண்டவர்கள்,
சூடகர் --- கோப உள்ளத்தினர்,
எத்தனை வெப்பிணி --- எத்தனை கொடிய நோய்கள்,
கெலிக்கும் வீடு அதை நத்தி --- இத்தகைய
துர்க்குணங்கள் குடியிருக்க அவைகளுடன் போராடி வெல்லும் வீடாகிய இந்தவுடம்பை
விரும்பி,
எடுத்து இவண் உழல்வேனோ --- உடம்பை எடுத்து
இவ்வுலகில் அடியேன் திரிவேனோ?
பொழிப்புரை
ஒலிக்கின்ற பல வகையான பேரிகைகளை
முழக்கிக் கொண்டு கடுமையான போர்க்களத்தில் எதிர்த்து வந்த சூராதி யவுணர்களை
வெட்டியழித்து இருள் மயமாய் நின்ற கிரவுஞ்ச மலையைப் பிளந்து தேவரும் சித்தரும்
துதிக்கச் செலுத்திய வேலாயுதரே!
ஆசையுடைய இராவணனுடைய தலைகள் அற்று விழ
வைத்தவரும், மகாபலியைச் சிறையில்
வைத்தவரும், இரும்பு உலக்கையைப்
பொடி செய்து கடலில் எறிந்தவருமாகிய திருமாலின் மருகரே!
வலிக்குமாறு பிரமதேவனைக் குட்டியவரே!
திருநடனம் புரிந்த, ஒப்பற்ற உலகை யீன்ற மரகதவல்லியாம்
உமாதேவியை மணந்த பிதாவாகிய, பரப்பிரமப்
பரசிவனுக்கு உபதேசித்தருளிய குருநாதரே!
காட்டில் வாழும் மயில் போன்ற வள்ளி
நாயகியை, மயக்கி யணைத்து
உள்ளம் மகிழ்ச்சியுடன் தணிகையம்பதியில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!
எலும்பு, நாடிகள், நீர், இரத்தம், அழுக்கு, மூளைகள், இழிந்த புழுக்கள், இவைகள் குடியிருக்கும் வீடு, அதில் எத்தனையோ தத்துவங்கள், மோசக்காரர்கள் அநீதி யுடையவர்கள், சூதான உள்ளத்து மக்கள், உடம்பான அந்தவூரில் மழுப்புவர், பூமியில் தோன்றுவர், பிறந்த பிறப்புடன் இருப்பர், வீடுகள் கட்டி அலைச்சலடையும்
சமுசாரத்தில் வெற்றி பெறுவார்கள்,
ஆசை
வலையிற்பட்டுக் கிடக்கும் பொல்லாதவர்கள், நன்மையை
அழிப்பார்கள், பெரிய தவநிலையைச்
சிறிதும் நினைக்காதவர்கள் யாவரையும் கெடுப்பார்கள், நண்பருக்குத் தீங்கு புரிவார்கள், கொலைஞர்கள், செருக்கு உடையவர்கள், கோள் சொல்லுபவர்கள், கொடுமையைப் பெற்று திரிந்து திருட்டுத்
தனத்துக்குத் திரிவார்கள், கோப உள்ளத்தினர், கொடியநோய்கள், இவைகள் உறைய அவைகளுடன் வெற்றிபெறும்
இந்த உடம்பாகிய வீட்டினை விரும்பி அதையே ஒழியாது எடுத்து இவ்வுலகில் அடியேன்
உழல்வது முறையோ?
விரிவுரை
எலும்பு.........இருக்கும்
வீடு
---
இந்த
உடம்பை வீடாக உருவகம் புரிந்து சுவாமிகள் இந்தத் திருப்புகழில் விளகம்
புரிகின்றார்.
எலும்பு, நாடி, நரம்புகள், நீர், உதிரம், மூளை, புழு முதலியன இந்த உடம்பில் உறைகின்றன.
எத்தனை
தத்துவம்
---
இந்தவுடம்பில்
ஆன்மதத்துவம் 24, வித்யாதத்துவம் 7, சிவதத்துவம் 5, ஆக 36 தத்துவங்கள் உறைகின்றன.
இவற்றின்
விரிவை சிவஞான போத முதலிய சாத்திரங்களால் அறிக.
சதிகாரர் ---
இந்தவுடம்பில்
வாழுந் துர்க்குணங்கள் இன்ன இன்ன என்று கூறுவாராயினார். சதி-வஞ்சனை; மோசக்காரர்கள் இதில் உறைகின்றார்கள்.
இறப்பர் ---
இறத்தல்-கடத்தல்.
நியாத்தைக் கடந்து அநீதியைச் செய்பவர்.
சூது
அகவர் சுதர்
---
சூதான
உள்ளத்துடன் கூடிய மக்களுக்கு வாய் வாழைப் பழமாகவும், மனங் கத்திரிக்கோலாகவும் இருகும்.
அப்
பதி உழப்பர்
---
அந்த
வீட்டில் வாழ்ந்துகொண்டு தமது பேச்சின் திறமையால் தீமையை நன்மைபோல் பேசி
மழுப்புகின்றவர்கள்.
பூமி
தரிப்பர்
---
தீவினை
செய்து செய்து மேலும் மேலும் இம்மண்ணுலகிலேயே பிறப்பவர்கள்.
பிறப்புடன்
இருப்பர்
---
எடுத்த
இப்பிறப்பினால் சிவகர்மம் புரிந்து பிறப்பை யொழிக்காமல் அவகன்மம் புரிந்து இந்த
வுடம்புடனேயே இருப்பார்கள்.
வீடுகட்டி
அலட்டுறு சமுசாரம் கெலிப்பர் ---
ஆசை
மேலீட்டினால் வீடுகள் பல புதுக்கி,
இச்சமுசார
வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.
மால்
வலைப் பட்டுறு துட்டர்கள் ---
மால்-ஆசையினால்
வரும் மயக்கம்; அந்த மயக்க வலையில்
பட்டு உழல்கின்ற பொல்லாதவர்.
அழிப்பர் ---
நீதி
நெறிகளை அழிவு செய்வார்கள்.
மாதவ
முற்று நினைக்கிலர் ---
பெரிய
தவநெறியை யடைந்து அதைச் சிறிதும் நினைக்காதவர்கள்.
கெடுப்பர்
யாரையும்
---
எல்லோருக்கும்
தீங்கு செய்து அவர்களைக் கெடுப்பார்கள்.
மித்திர
குத்திரர்
---
மித்திரத்
துரோகம் புரிபவர்; நம்பி நட்பு செய்த
நண்பருக்குச் செய்யும் கெடுதல் கடவுளால் மன்னிக்க முடியாத பாவம்.
கொலைகாரர்---
ஆடு
மாடு மீன் கோழி முதலிய சிற்றுயிர்களைக் கொன்று தின்று திரிகின்றவர்கள்.
கிருத்தர் ---
தான்
என்ற அகங்காரம் உடையவர்கள்.
கோளகர் ---
சதா
பிறரைப் பற்றிக் கோள் சொல்லிக் குடிகெடுப்போர்கள்.
எத்தனை
வெப்பிணி
---
இந்த
வுடம்பில் பலவகையான கொடிய நோய்கள் குடியிருக்கின்றன.
வீடதை
நத்தி எடுத்திவண் உழல்வேனோ? ---
இந்த
சரீரத்தை விரும்பி விடாது எடுத்து இவ்வுலகில் அடியேன் உழலலாமோ? அவ்வாறு உழல்வது கூடாது முருகா. ஆதலால்
இனி இந்த வுடம்பை எடுத்து உழலாத வண்ணம் அடியேனுக்கு அருள்புரிவாய்.
“விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்” --- கந்தரநுபூதி.
மாபலியைச்
சிறை வைத்தவன்
---
பிரகலாதருடைய
மகன் விரோசனன் விரோசனனுடைய மகன் மகாபலிச் சக்ரவர்த்தி. அவன் பேராலேயே மகாபலி பெரிய
ஆற்றல் படைத்தவன் என்பது விளங்குகின்றது அல்லவா? மாபலி மூன்று உலகங்களையும் வென்று, இந்திர வாழ்வையும் பெற்று, ஒப்பாரும் மிக்காருமின்றி வாழ்ந்தவன்.
அவனை அடக்கி இந்திரனுக்கு வாழ்வு தரும் பொருட்டு, திருமால் அதிதி வயிற்றில் வாமனனாகத்
தோன்றி, மாவலி புரியும்
யாகசாலையில் சென்று மூவடிமண் தானமாகக் கேட்டு, மண்ணும் விண்ணும் ஈரடியால் அளந்து, “மூன்றாவது அடிக்கு இடம் எங்கே?” என்றார். மாவலி “அடியேன் சிரம்”
என்றான்.
திருவிக்கிரம
மூர்த்தி மாவலியின் சிரத்தில் திருவடியை வைத்து அவனை அதல உலகத்தில் வைத்தருளினார்.
அவனுடைய வேண்டுகோளின்படி, வாசலில் காவல்
புரிபவராகவும் நின்றார்.
வாமன அவதார வரலாறு
பிரகலாதருடைய
புதல்வன் விரோசனன். விரோசனனுடைய புதல்வன்
மாவலி. சிறந்த வலிமை உடையவன் ஆதலின், மாவலி எனப்பட்டான். அவனுடைய அமைச்சன் சுக்கிரன். மாவலி தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இன்றி, வாள்வலியும், தோள்வலியும் மிக்கு மூவுலகங்களையும்
தன்வசப் படுத்தி ஆண்டனன். அதனால் சிறிது
செருக்குற்று, இந்திராதி
இமையவர்கட்கு இடுக்கண் புரிந்து,
அவர்களது
குன்றாத வளங்களையும் கைப்பற்றிக் கொண்டான்.
தேவர் கோமானும் பாற்கடலினை அணுகி, அங்கு
பாம்பணையில் பள்ளிகொண்டு இருக்கும் பரந்தாமனிடம் முறையிட்டனர். காசிபரும், அதிதி தேவியும் நெடிது காலம்
சற்புத்திரனை வேண்டித் தவம் புரிந்தனர்.
தேவர் குறை தீர்க்கவும்,
காசிபருக்கு
அருளவும் வேண்டி, திருமால் அதிதி
தேவியின் திருவயிற்றில் கருவாகி,
சிறிய
வடிவுடன் (குறளாகி) அவதரித்தனர்.
காலம்
நுனித்து உணர் காசிபன் என்னும்
வாலறிவற்கு
அதிதிக்கு ஒரு மகவாய்,
நீல
நிறத்து நெடுந்தகை வந்துஓர்
ஆல்அமர்
வித்தின் அரும்குறள் ஆனான்.
மாவலி
ஒரு சிறந்த வேள்வியைச் செய்யலானான். அவ்
வேள்விச் சாலைக்கு வந்த இரவலர் அனைவருக்கும் வேண்டியவற்றை வழங்குவேன் என்று அறக்
கொடி உயர்த்தினான். திரள் திரளாகப் பலப்பல
இரவலர் வந்து, பொன்னையும்
பொருளையும் பசுக்களையும் ஆனைகளையும் பரிசில்களாக வாங்கிக் கொண்டு சென்றனர். மாவலி வந்து கேட்டோர் அனைவருக்கும் வாரி வாரி
வழங்கினான்.
அத்
தருணத்தில், வாமனர் முச்சிப்புல்
முடிந்த முப்புரி நூலும், வேதம் நவின்ற நாவும்
ஆக, சிறிய வடிவுடன்
சென்றனர். வந்தவரை மாவலி எதிர்கொண்டு
அழைத்து வழிபட்டு, "என்ன வேண்டும்"
என்று வினவினான். வாமனர், "மாவலியே! உனது கொடைத்
திறத்தைப் பலர் புகழ்ந்து கூறக் கேட்டு, செவியும்
சிந்தையும் குளிர்வுற்றேன். மிக்க
மகிழ்ச்சி உறுகின்றேன். நின்னைப் போல்
வழங்குபவர் விண்ணிலும் மண்ணிலும் இல்லை.
என் கால்களில் அளந்து கொள்ள மூவடி மண் வேண்டும்" என்று இரந்தனர்.
அருகிலிருந்த
வெள்ளிபகவான், "மாவலியே! மாயவன்
மாயம் செய்ய குறள் வடிவுடன் வந்துளான்.
அண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவனே இவ் மாமனன். ஆதலினால், இவன் ஏற்பதைத் தருவது நன்றன்று"
என்று தடுத்தனன்.
மாவலி, "சுக்கிரபகவானே!
உலகமெல்லாம் உண்ட திருமாலுடைய கரம் தாழ்ந்து, என் கரம் உயர்ந்து தருவதினும் உயர்ந்தது
ஒன்று உண்டோ கொள்ளுதல் தீது. கொடுப்பது நன்று.
இறந்தவர்கள் எல்லாம் இறந்தவர்கல் ஆகார்.
ஒழியாது கையேந்தி இரந்து திரிபவரே இறந்தவராம். இறந்தவராயினும் ஏற்றவருக்கு இட்டவரே இருந்தவர்
ஆகும்”.
மாய்ந்தவர்
மாய்ந்தவர் அல்லர்கண் மாயாது
ஏந்திய
கைகொடு இரந்தவர் எந்தாய்,
வீய்ந்தவர்
என்பவர் வீய்ந்தவரேனும்
ஈய்ந்தவர்
அல்லது இருந்தவர் யாரே.
எடுத்துஒருவருக்கு
ஒருவர் ஈவதனின் முன்னே
தடுப்பது
நினக்கு அழகிதோ, தகைவுஇல் வெள்ளி,
கொடுப்பது
விலக்கு கொடியோய், உனது சுற்றம்
உடுப்பதுவும்
உண்பதுவும் இன்றி விடுகின்றாய்.
"கொடுப்பதைத் தடுப்பவனது
சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இன்றி தவிப்பர். ஆதலின், யான் ஈந்துவப்பேன்" என்று மாவலி
வாமனரது கரத்தில் நீர் வார்த்து,
"மூவடி
மண் தந்தேன்" என்றான்.
உடனே
வாமனமூர்த்தி தக்கார்க்கு ஈந்த தானத்தின் பயன் உயர்வதுபோல், அண்ட கோளகையை முடி தீண்ட திரிவிக்ரம
வடிவம் கொண்டார். மண்ணுலகையெல்லாம்
ஓரடியாகவும், விண்ணுலகையெல்லாம்
ஓரடியாகவும் அளந்தார். "மூன்றாவது
அடிக்கு அடியேன் சென்னியே இடம்" என்று பணிந்தனன் மாவலி. வேதத்தில் விளையாடும் அப் பெருமானுடைய திருவடி
மாவலியின் சென்னியில் வைத்து பாதலத்தில் வாழவைத்தது. அடுத்த மந்வந்தரத்தில் இந்திரன் ஆகும பதமும்
மாவலி பெற்றனன்.
உலக்கை
ராவி நடுக்கடல் இட்டவன் ---
இரும்பு உலக்கையும், யாதவ குலமும்
கண்ணபிரான்
பாண்டவர்க்குத் துணையாக நின்று துரியோதனாதி குருகுலத்தையழித்தார். காந்தாரி
கண்ணனைப் பார்த்து “கண்ணா! நீ என் குலத்தையழித்தனை. அது போல் உனது யதுகுலமும் 36வது ஆண்டில் ஒருங்கே அழியக் கடவது”
என்றார். இந்தச் சாபத்தைக் கேட்ட கண்ணபிரான் புன்னகை புரிந்து, “அதுதான் என் கருத்தும்; அவ்வண்ணமே அழிவதாக” என்றார். ஏன்? பூபாரந் தீர்க்க வந்தவர். கொடுமையும்
கோபமும் செருக்கும் படைத்தவர்களைப் பூமி தாங்க அஞ்சும். பாரத யுத்தம் முடிந்து சில
ஆண்டுகட்குப் பின், துவாரகையில் வாழ்ந்த
யாதவர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் முதலியவர்கள் நிரம்ப மதம்
பிடித்து வாழ்ந்தார்கள். அப்போது எங்கும் துர்நிமித்தங்கள் உண்டாயின. புழுதிக்
காற்று வீசியது. எரி கொள்ளிகள் விண்ணிலிருந்து வீழ்ந்தன.
துவாரகபுரிக்கு
விச்வாமித்திரர், கண்ணுவர், நாரதர் என்ற முனிவர்கள் வந்தார்கள்.
மதம் பிடித்த யாதவர்கள் கண்ணன் மகனாகிய சாம்பனை பெண்வடிவு புனைந்து வயிற்றில் துணி
வைத்துக் கட்டி அம் மகா முனிபுங்கவர்களின் முன் சென்று “முனிவர்களே! இவள் பப்ருவின்
மனைவி, கர்ப்பமாக
இருக்கின்றாள்; இவள் வயிற்றில் ஆண்
குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை
பிறக்குமா?” என்று கேட்டார்கள்.
முனிவர்கள் முகம் சிவந்தது; அவர்களது அகங்காரத்தை
நினைத்து அவர்கள் சீற்றங் கொண்டார்கள். “இந்த சாம்பன் வயிற்றில் இரும்பு உலக்கை
பிறக்கும்; அந்த உலக்கையால்
பலராமன் கிருஷ்ணன் தவிர மற்ற அத்தனை பேரும் அழிவீர்கள்; பலராமர் கடலில் புகுவார்; ஜரன் என்ற செம்படவன் பூமியில்
சயனித்துக் கொண்டிருக்கின்ற கிருஷ்ணரைப் பிளக்கப் போகின்றான்” என்று கூறிவிட்டு
சென்றார்கள்.
சிறந்த
அறிவும் முடிவையறிந்த உணர்வும் படைத்த வாசுதேவர் இதனைக் கேள்விப்பட்டு, “அது அப்படியே ஆகட்டும்” என்றார்.
மறுநாள்
சாம்பன் அந்தக் குலத்தை யழிக்கவந்த அந்தகனுடைய தூதனைப் போன்ற ஒரு கரிய பெரிய
இரும்பு உலக்கையைப் பெற்றான். யாதவர்கள் அதை அரங்கொண்டு ராவிப் பொடிப் பொடியாகச்
செய்து கடலில் கொட்டினார்கள். பலராமர், கிருஷ்ணர், பப்ரு என்ற புண்ணிய சீலர்கள் “இன்று
முதல் யாரும் மதுபானஞ் செய்யக் கூடாது. அப்படிக் குடித்தால் அவர்களைக் கழுவில்
ஏற்றப்படும்” என்று பறைசாற்றச் செய்தார்கள்.
பின்னும்
சில ஆண்டுகள் கழிந்தன. தலைமயிரில்லாத ஒரு முண்டன் கருநிறமும் பொன்னிறமும் கொண்ட
வுருவுடன் யாதவர்களின் வீடுகளில் சென்று சென்று மறைந்தான். அவனைப் பலர்
வில்லம்பால் அடித்தார்கள். எல்லாவுயிர்களையும் கொல்லுபவனாகிய அவனை அடிக்க
முடியவில்லை. பயங்கரமான பெருங்காற்று அடித்தது. எலிகளும் உடைந்த மண் பாண்டங்களும்
எங்குங் காணப்பட்டன. பறவைகள் ஓயாது அச்சம் தரும்படி ஒலித்தன. ஆடுகள் நரிகள் போல்
ஊளையிட்டன. நாய் வயிற்றில் பூனையும், கீரியிடத்தில்
எலியும் பிறந்தன.
இப்படிப்
பலப்பல தீய சகுனங்கள் நேர்ந்தன. இவற்றைக் கண்ட கண்ணபிரான் ‘முப்பத்தாறாவது ஆண்டு
வந்து விட்டது; காந்தாரியின் சாபம்
விளையும் காலம் இது’ என உணர்ந்தார். தீர்த்த யாத்திரை செய்யும்படி யாதவர்கட்குக்
கட்டளையிட்டார். யாதவர்கள யாவரும் பிரபாசபட்டினத்தை அடைந்தார்கள். உத்தவரை மட்டும்
அவ்விடம் விட்டுச் சென்றார்கள்.
நிரம்ப
மதுவைக் குடித்த அந்த யாதவர்கள் ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசினார்கள். அதனால் பெருங்
கோபமுற்று ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினார்கள். கடற் கரையில் முளைத்துள்ள
இரும்புக் கோரைகளைப் பிடுங்கினார்கள். அவைகள் இரும்புக் கோடாரிகளாக ஆயின. அவற்றால்
ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். கிருஷ்ணருடைய பிள்ளைகள், பேரன்கள், மற்ற யாதவர்கள் கண்ணனுடைய முன்னிலையிலேயே
மாண்டார்கள். மிச்சமின்றி அத்தனை பேர்களும் அழிந்தார்கள்.
கண்ணபிரான்
துவாரகை சென்று பெரிய பிதாவை வணங்கி “அர்ச்சுனன் வந்து உங்களைக் காப்பாற்றுவான்”
என்று கூறிக் கானகம் போனார். தாரகன் என்ற தேர்ப்பாகன் தேரின் மீது ஏறி
அத்தினாபுரம் போனான்.
காட்டில்
ஏகாந்தமான இடத்தில் இருந்த பலராமரைப் பார்த்தார். யோக சமாதியில் அமர்ந்திருந்த
பலராமருடைய முகத்திலிருந்து ஒரு வெள்ளைப் பாம்பு வெளிப்பட்டது. அந்தப் பாம்பு
ஆயிரம் தலைகளுடன் வளர்ந்து கடலுக்குள் சென்றது.
துருவாசர்
“உள்ளங்கால் வழி ஆன்மா பிரியும்” என்று கூறிய சொல்லை நினைத்தார். குராமரத்தின்
கீழ் இரண்யநதிக் கரையில் படுத்து யோகம் புரிந்தார். அந்த உலக்கையை ராவிக் கடலில்
கொட்டியபோது மிகுந்த ஒரு ஈச்சங் கொட்டையளவுள்ள கூரிய துண்டைக் கடலில்
எறிந்தார்கள். அதை ஒரு மீன் விழுங்கிற்று; அம்மீனைப்
பிடித்தவர்கள் அவ்விரும்புத் துண்டைக் காட்டில் எறிந்தார்கள். அக்கூரிய இரும்பை
ஜரன் என்ற வேடன் எடுத்துத் தன் அம்பின் முனையில் அமைத்துக் கொண்டான். அவன்
தொலைவில் தெரிந்த கண்ணனுடைய சிவந்த திருவடியை செங்கழுகு என்று எண்ணி அந்தப்
பாணத்தை விடுத்தான். பிறகு அவன் அருகில் வந்து, கண்ணபிரானை வணங்கித் துதித்தான்.
அவனுக்கு அருள் செய்துவிட்டு, மண்ணும் விண்ணும்
ஒளியினால் விளங்க தேவர்கள் துதி செய்ய கண்ணபிரான் வைகுந்தம் சேர்ந்தார்.
வலிக்கக்
வேதனைக் குட்டி ---
பிரணவ
மந்திரத்துக்குப் பொருள் தெரியாத பிரமதேவனுடைய நான்கு தலைகளில் முருகவேள்
குட்டியபோது அவருடைய குடுமி விபூதிபோல் துகள்பட்டு உதிர்ந்தது.
அயனைச் சிறை புரிந்த
வரலாறு
குமாரக்கடவுள் திருவிளையாடல் பல
புரிந்து வெள்ளி மலையின் கண் வீற்றிருந்தருளினர். ஒரு நாள் பிரமதேவர் இந்திராதி
தேவர்களுடனும், கின்னரர், கிம்புருடர், சித்தர், வித்யாதரர் முதலிய கணர்களொடுஞ்
சிவபெருமானைச் சேவிக்கும் பொருட்டு திருக்கைலாய மலையை நண்ணினர். பிரமனை யொழிந்த
எல்லாக் கணர்களும் யான் எனது என்னும் செருக்கின்றி சிவபெருமானை வணங்கி வழிபட்டுத்
திரும்பினார்கள். ஆங்கு கோபுர வாயிலின் வடபால் இலக்கத்து ஒன்பான் வீரர்களும்
புடைசூழ நவரத்தின சிங்காசனத்தில் குமர நாயகன் நூறு கோடி சூரியர்கள் திரண்டாலென்ன
எழுந்தருளி வந்து அடிமலர் தொழுது தோத்திரம் புரிந்து சென்றனர்.
பிரமதேவர்
குமரக் கடவுளைக் கண்டு வணங்காது,
“இவன்
ஓர் இளைஞன் தானே” என்று நினைத்து இறுமாந்து சென்றனர். இதனைக் கண்ட முருகப்
பெருமான் சிவன் வேறு தான் வேறன்று,
மணியும்
ஒளியும்போல், சிவனும் தானும் ஒன்றே
என்பதையும், முருகனாகிய தன்னை ஒழித்து
சிவபெருமானை வழிபடுவோர்க்குத் திருவருள் உண்டாகாது என்பதையும் உலகினர்க்கு
உணர்த்தவும், பிரமனுடைய செருக்கை
நீக்கித் திருவருள் புரியவும் திருவுளங் கொண்டார்.
தருக்குடன்
செல்லுஞ் சதுர்முகனை யழைத்தனர். பிரமன் கந்தவேளை அணுகி அகங்காரத்துடன் சிறிது
கைகுவித்து வணங்கிடாத பாவனையாக வணங்கினன். கந்தப்பெருமான் “நீ யாவன்” என்றனர்.
பிரமதேவர் அச்சங்கொண்டு “படைத்தல் தொழிலுடைய பிரமன்” என்றனன். முருகப்பெருமான், அங்ஙனமாயின் உனக்கு வேதம் வருமோ?” என்று வினவினர். பிரமன்
“உணர்ந்திருக்கிறேன்” என்றனன். “நன்று! வேதவுணர்ச்சி உனக்கு இருக்குமாயின் முதல்
வேதமாகிய இருக்கு வேத்தைக் கூறு,”
என்று
குகமூர்த்தி கூறினர். சதுர்முகன் இருக்கு வேதத்தை "ஓம்" என்ற குடிலை
மந்திரத்தைக் கூறி ஆரம்பித்தனன். உடனே இளம் பூரணணாகிய எம்பெருமான் நகைத்து
திருக்கரம் அமைத்து, “பிரமனே நிற்றி!
நிற்றி! முதலாவதாகக் கூறிய `ஓம்’ என்ற பிரணவ
மந்திரத்தின் பொருளை விளக்குதி என்றனர்.
தாமரைத்தலை
இருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாமறைத் தலை
எடுத்தனன் பகர்தலும், வரம்பில்
காமர்பெற்றுஉடைக்
குமரவேள், "நிற்றி, முன் கழறும்
ஓம்
எனப்படு மொழிப்பொருள் இயம்புக",என்று உரைத்தான். ---கந்தபுராணம்.
ஆறு
திருமுகங்களில் ஒரு முகம் பிரணவ மந்திரமாய் அமைந்துள்ள அறுமுகத்து அமலன்
வினவுதலும், பிரமன் அக்குடிலை
மந்திரத்திற்குப் பொருள் தெரியாது விழித்தனன். கண்கள் சுழன்றன; சிருட்டிகர்த்தா நாம் என்று எண்ணிய
ஆணவம் அகன்றது; வெட்கத்தால்
தலைகுனிந்தனன். நாம் சிவபெருமானிடத்து வேதங்களை உணர்ந்து கொண்ட காலையில், இதன் பொருளை உணராமற் போனோமே? என்று ஏங்கினன்; சிவபெருமானுக்குப் பீடமாகியும், ஏனைய தேவர்களுக்குப் பிறப்பிடமாகியும், காசியில் இறந்தார்களுக்கு சிவபெருமான்
கூறுவதாகியுமுள்ள தாரகமாகிய பிரணவ மந்திரத்தின் பொருளை யுணராது மருண்டு நின்றனன்.
குமரக்கடவுள், “ஏ சதுர்முகா! யாதும் பகராது நிற்பதென்? விரைவில் விளம்புதி” என்றனர். பிரமன்
“ஐயனே! இவ்வொரு மொழியின் பொருளை உணரேன்” என்றனன்.
அது
கேட்ட குருமூர்த்தி சினந்து, "இம்முதலெழுத்திற்குப்
பொருள் தெரியாத நீ சிருட்டித் தொழில் எவ்வாறு புரிய வல்லாய்? இப்படித்தான் சிருட்டியும்
புரிகின்றனையோ? பேதாய்!” என்று
நான்கு தலைகளும் குலுங்கும்படிக் குட்டினார்.
“சிட்டி செய்வதுஇத்
தன்மை யதோ?எனச் செவ்வேள்
குட்டினான் அயன் நான்குமா முடிகளுங்
குலுங்க” ---கந்தபுராணம்.
பிரமதேவனது
அகங்காரம் முழுதும் தொலைந்து
புனிதனாகும்படி குமாரமூர்த்தி தமது திருவடியால் ஓர் உதை கொடுத்தனர். பிரமன்
பூமியில் வீழ்ந்து அவசமாயினன். உடனே பகவான் தனது பரிசனங்களைக் கொண்டு பிரமனைக்
கந்தகிரியில் சிறையிடுவித்தனர்.
“வேதநான்முக மறையோ
னொடும் விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீரமோதின மறவா” ---
(காணொணா) திருப்புகழ்.
“அயனைக் குட்டிய
பெருமாளே” -- (பரவை) திருப்புகழ்.
“ஆர ணன்றனை வாதாடி ஓருரை
ஓது கின்றென வாராது எனாஅவன்
ஆண வங்கெட வேகாவலாம்அதில் இடும்வேலா --- (வாரணந்) திருப்புகழ்.
“.......................................படைப்போன்
அகந்தை
உரைப்ப,மறை ஆதி எழுத்துஎன்று
உகந்த பிரணவத்தின்உண்மை -- புகன்றிலையால்
சிட்டித்
தொழில்அதனைச் செய்வதுஎங்ஙன் என்றுமுனம்
குட்டிச் சிறைஇருத்தும் கோமானே” --- கந்தர் கலிவெண்பா.
“நாலுமுகன் ஆதி "அரி ஓம்" என
அதாரம் உறை-
யாத
பிரமாவை விழ மோதி, "பொருள் ஓதுக" என
நாலு
சிரமோடு சிகை தூளிபட தாளமிடும் இளையோனே” --- (வாலவயதாகி) திருப்புகழ்.
ஒரு
சகத்தை ஈனவள்
---
அகில
வுலகங்களையும் பெற்ற அன்னை பார்வதி;
அத்தனை
யுலகங்களையும் ஈன்றும் கன்னியாகவே விளங்குகின்றாள்.
“அகிலாண்ட கோடி ஈன்ற
அன்னையே பின்னையும் கன்னி என மறைபேசும்
ஆனந்த ரூப மயிலே” --- தாயுமானார்.
உளமகிழ்ச்சியோடு
திருத்தணி பற்றிய பெருமாளே ---
முருகவேள்
குறிஞ்சி நிலமாகிய மலைகளில் வசிப்பவர். பல்வேறு மலைகளில் வசிப்பினும், திருத்தணிகை மலையில் அதிக மகிழ்ச்சியாக
வசிக்கின்றார். இதை முருகவேளே வள்ளி நாயகியிடம் கூறுகின்றார்.
“சுந்தரக் கிரி தொல் புவிதனில் பல,
எனினும்,
இந்த வெற்பினில் ஆற்றவும்
மகிழ்ச்சி உண்டு எனக்கே” --- கந்தபுராணம்.
கருத்துரை
திருத்தணிகேசா, உடம்பெடுத்து அலையாவண்ணம் அருள்
புரிவாய்.
No comments:
Post a Comment