அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
எத்தனை கலாதி
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
திருவடி
அருள்வாய்
தத்ததன
தான தத்தம் தத்ததன தான தத்தம்
தத்ததன தான தத்தம் ...... தனதான
எத்தனைக
லாதி சித்தங் கெத்தனைவி யாதி பித்தங்
கெத்தனைச ராச ரத்தின் ...... செடமான
எத்தனைவி
டாவெ ருட்டங் கெத்தனைவ லாண்மை பற்றங்
கெத்தனைகொ லூனை நித்தம் ...... பசியாறல்
பித்தனைய
னான கட்டுண் டிப்படிகெ டாமல் முத்தம்
பெற்றிடநி னாச னத்தின் ...... செயலான
பெற்றியுமொ
ராது நிற்குந் தத்தகுரு தார நிற்கும்
பெத்தமுமொ ராது நிற்குங் ...... கழல்தாராய்
தத்தனத
னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு
டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்துஞ் ...... சதபேரி
சித்தர்கள்நி
டாதர் வெற்பின் கொற்றவர்சு வாமி பத்தர்
திக்குகளொர் நாலி ரட்டின் ...... கிரிசூழச்
செக்கணரி
மாக னைக்குஞ் சித்தணிகை வாழ்சி வப்பின்
செக்கர்நிற மாயி ருக்கும் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
எத்தனை
கலாதி, சித்து அங்கு எத்தனை, வியாதி பித்துஅங்கு
எத்தனை, சர அசரத்தின் ...... செடமான
எத்தனை
விடா வெருட்டு, அங்கு எத்தனை வலாண்மை, பற்றுஅங்கு
எத்தனை கொல் ஊனை நித்தம் ...... பசியாறல்,
பித்து
அனையன் நான், கட்டுண்டு இப்படி கெடாமல், முத்தம்
பெற்றிட, நினா சனத்தின் ......
செயல் ஆன
பெற்றியும்
ஒராது நிற்கும் தத்த குரு தார நிற்கும்,
பெத்தமும் ஒராது நிற்கும் ...... கழல்தாராய்.
தத்தனத
னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனத னாத னத்தந் ...... தகுதீதோ
தக்குகுகு
டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந்
தத்தனத னான னுர்த்தும் ...... சதபேரி
சித்தர்கள், நிடாதர், வெற்பின் கொற்றவர், சுவாமி பத்தர்,
திக்குகள் ஒர் நால் இரட்டின் ...... கிரிசூழ,
செக்கண்
அரிமா கனைக்கும் சித்தணிகை வாழ் சிவப்பின்
செக்கர் நிறமாய் இருக்கும் ...... பெருமாளே.
பதவுரை
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனதனாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத
னான னுர்த்துஞ் சதபேரி --- தத்தன .......தனானனுர்த்து என்று ஒலிக்கின்ற நூற்றுக்
கணக்கான முரசு வாத்தியங்கள் ஒலியுடன்,
சித்தர்கள் --- சித்தர்களும்,
வெற்பின் நிடாதர் --- மலைகளில் வசிக்கும்
வேடர்களும்,
கொற்றவர் --- அரசர்களும்,
சுவாமி பத்தர் --- இறைவன் அடியார்களும்,
ஓர் நால் இரண்டின் திக்குகள் ---
எட்டுத்திசைகளிலிருந்தும் வந்து,
கிரிசூழ --- மலையை வலம்வர,
செக்கண் அரிமா கனைக்கும் --- சிவந்த
கண்களையுடைய சிங்கம் ஒலி செய்யும்,
சித் தணிகை வாழ் --- ஞானத் தணிகையம்பதியில்
வாழ்கின்ற,
சிவப்பின் செக்கர் நிறமாய் இருக்கும் ---
மிகச் சிவந்த நிறத்துடன் விளங்கும்,
பெருமாளே --- பெருமையின் மிகுந்தவரே!
எத்தனை கலாதி --- எத்தனை கலகச் சண்டைகள்;
சித்து அங்கு எத்தனை --- மாய வித்தைகள்
எத்தனை,
எத்தனை வியாதி --- எத்தனை நோய்கள்;
பித்து அங்கு எத்தனை --- பைத்தியச் செயல்கள்
எத்தனை?
சர அசரத்தின் செடம் ஆன --- இயங்குதிணை
நிலைத்திணைப் பொருள் கொண்ட இவ்வுலகில் எடுத்த உடல்கள் எத்தனை;
எத்தனை விடா வெருட்டு --- நீங்காத அச்சம்
தரும் செயல்கள் எத்தனை?
அங்கு எத்தனை வல் ஆண்மை --- அங்கே வலிமையுடைய
ஆண்மைச் செயல்கள் எத்தனை?
பற்று அங்கு எத்தனை --- அங்கே ஆசைகள் எத்தனை; (கொல்=அசை)
ஊனை நித்தம் பசி ஆறல் --- புலால் உண்டு
பசியாறுஞ் செயல்கள் எத்தனை,
பித்து அனையன் நான் --- பித்தம் பிடித்தவன்
போன்று அடியேன்,
அகட்டு உண்டு --- வயிற்றில் உண்டு,
இப்படி கெடாமல் --- இவ்வண்ணம் கெடாமல்,
முத்தம் பெற்றிட --- பிறவியினின்று
விடுதலையைப் பெற்றிட,
நினா சனத்தின் செயல் ஆன பெற்றியும் --- உமது
பக்த ஜனத்தின் செயல்களான பெற்றியையும்,
ஓராது நிற்கும் --- யாரும் உணர்தற்கு அரிதாய்
நிற்பதும்,
தத்த குரு தார நிற்கும் --- பரவிப்
பிரகாசிக்கின்ற ஒளி மயமான பிரணவப் பொருளாய் நிற்பதும்,
பெத்தமும் ஓராது நிற்கும் --- பாச பந்தத்தால்
அரிதற்கரியதாய் நிற்பதும், ஆகிய உமது,
கழல் தாராய் --- திருவடியைத் தந்தருளுவீராக.
பொழிப்புரை
தத்தனத னாத னத்தந் தத்தனத னாத னத்தந்
தத்தனதனாத னத்தந் தகுதீதோ தக்குகுகு டூடு டுட்டுண் டிக்குகுகு டீகு தத்தந் தத்தனத
னான னுர்த்து என்று ஒலிக்கின்ற நூற்றுக்கணக்கான வாத்தியங்களுடன், சித்தர்களும், மலைவாழ் வேடர்களும், மன்னர்களும், இறைவனடியார்களும் எட்டுத்
திசைகளிலிருந்தும் வந்து மலையை வலம் வந்து பணிய விளங்குவதும், சிவந்த கண்களுடன் கூடிய சிங்கம் ஒலி
செய்வதும் ஆகிய ஞானத் தணிகைமலை மீது மிகச் சிவந்த வடிவுடன் வாழும்
பெருமிதம்
உடையவரே!
எத்தனை கலகச் சண்டைகள்; எத்தனை மாய வித்தைகள்; எத்தனை நோய்கள்; எத்தனை பைத்தியச் செயல்கள்; அசையும் உயிர்கள்; அசையாத வுயிர்கள் வாழும் இவ்வுலகில்
எடுத்த உடல்கள் எத்தனை; எத்தனை நீங்காத
அச்சம் தரும் செயல்கள்; எத்தனை பேராற்றலான
செயல்கள்; எத்தனை ஆசைகள்; புலால் உண்டு பசியாறும் செயல்கள் எத்தனை; இவைகட்கு ஆளான அடியேன், பித்தம் பிடித்தவன் போன்ற நான்
வயிற்றில் உண்டு இவ்வாறு கெடாமல் பிறவியினின்றும் விடுதலை யடைந்து உய்யுமாறு உமது
அடியார் கூட்டத்தின் செயல்களான தன்மையையும் யாரும் உணர்தற்கு அரிதாக நிற்பதும், பரவி ஒளிர்கின்ற ஒளிமயமான பிரணவப்
பொருளாய் நிற்பதும், பாச பந்தத்தால் அறிதற்கரிதாய்
நிற்பதுமான உமது திருவடியைத் தந்தருளுவீராக.
விரிவுரை
எத்தனை
கலாதி
---
மனித
வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை இப்பாடலில் கூறுகின்றார்.
கலாதி-கலகம்.
மொழிச் சண்டைகள், நிறச்சண்டைகள், மதச் சண்டைகள், சாதிச் சண்டைகள், சமயச் சண்டைகள், முதலிய அநேக சண்டைகள். சண்டையிட்டு
மண்டையுடைபட்டு வருந்துவார்கள்.
சாதியிலே
மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே
அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே
சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே
அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே. ---
திருவருட்பா.
சித்தங்
கெத்தனை
---
சித்து
அங்கு எத்தனை; சித்து-சித்துபோல்
செய்யும் மாய வித்தைகள்; பிறர் வியக்குமாறு
ஒருபுறம் உள்ள பொருளை மற்றொரு புறம் வருமாறு செய்து காட்டுகின்ற செயல்கள்.
வியாதி
பித்தங் கெத்தனை ---
வியாதிகள்
எண்ணில்லாதன.
பித்து
அங்கு எத்தனை? பித்தம் பிடித்த
செயல்கள் எண்ணல்லாதன. பித்தம் பிடித்தவன் வேண்டாத பொருள்களான கண்ணாடித் துண்டுகள், பீங்கான் உடைசல்கள், வெற்றுக் காகிதங்கள் இவைகளை உயர்ந்த
பொருள்கள் போல் வைத்துப் போற்றுவான். அதுபோல் துன்பத்தைத் தரும் செயல்களை இன்பச்
செயல்களாக எண்ணி உழலுவர்.
எத்தனை
சராசரத்தின் செடமான ---
இயங்கும்
திணை, இயங்காத திணை என்ற
சராசரத்திலுள்ள உடல்கள் எத்தனையோ எடுத்தன.
எத்தனை
விடா வெருட்டு
---
நீங்காத
அச்சத்தைத் தரும் செயல்கள் எண்ணற்றன. பிறர் கண்டு நடுங்கக்கூடிய கொடுமைகள்.
அங்கு
எத்தனை வலாண்மை ---
அவ்விடத்தில்
வலிய ஆற்றல்கள் பல.
எத்தனை
கொல் ஊனை நித்தம் பசியாறல் ---
பலப்பல
உயிர்களைக் கொன்று தின்று பசியாறுகின்ற தீமைகள் பல.
பித்தனையனான் ---
பித்து
அனையன் நான்-பித்தம் பிடித்தவனைப் போன்ற அடியேன்.
அகட்டுண்டு ---
அகடு-வயிறு; வயிற்றில் உண்டு. உண்பதுவே தொழிலாக
வாழ்வது.
இப்படி
கெடாமல் முத்தம் பெற்றிட ---
இவ்வாறு
அடியேன் வீணே அழியாத வண்ணம், விடுதலையைப் பெறுமாறு
அருள் புரிக.
நினாசனத்தின்
செயலானது பெற்றியும் ---
நின
சனம்-நினது அடியார் கூட்டம் திருத்தொண்டர்களின் அன்பு நெறிச் செயல்களைத்
தந்தருள்க.
பெத்தமு
மொராது நிற்கும் கழல் தாராய் ---
பெத்தம்-கட்டுப்பாடு; பாசபந்தத்தால் அரிதற்கரியதாய்
நிற்பதுமான உமது பாதத்தைத் தந்தருள்க.
தத்தன.......சதபேரி ---
திருத்தணிகைக்கு
வரும் அடியார்கள் நூற்றுக்கணக்கான ஒலி பேதங்களுடன் கூடிய வாத்தியங்களை வாசித்துக்
கொண்டு வருகின்றார்கள்.
சித்தர்கள் ---
அட்டமா
சித்தியில் வல்லவர்கள்.
நிடாதர்
வெற்பின்
---
மலையில்
வாழுகின்ற வேடர்கள்.
கொற்றவர் ---
உலகை
ஆளுகின்ற மன்னர்கள்.
சுவாமி
பத்தர்
---
இறைவனை
மெய்யன்புடன் வனங்கும் அடியார்கள்.
திக்குகளொர்
நாலிரட்டின் கிரிசூழ ---
எட்டுத்
திசைகளிலிருந்து வந்து மலையை வலம் வருவார்கள்.
செக்கண்
அரிமா கனைக்கும் ---
செக்கண்
அரிமா-சிவந்த கண்ணுள்ள சிங்கம். சிவந்த கண்களைக் கொண்ட சிங்கங்கள் குகையிலிருந்து
கர்ச்சிக்கும்படியான மலை திருத்தணிகை.
சிவப்பின்
செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே ---
முருகன்
செம்மேனி எம்மான்.
“செய்யன் சிவந்த
ஆடையான்” --- திருமுருகாற்றுப்படை
“கையோ அயிலோ கழலோ
முழுதும்
செய்யோய் மயிலேறிய சேவகனே” --- கந்தர் அநுபூதி
கருத்துரை
திருத்தணிகேசா!
உமது கழல் தந்து காதருள்வாய்.
No comments:
Post a Comment