அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உய்யஞானத்து நெறி
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
உமது திருவடியை வில்வத்தால்
அர்ச்சிக்க அருள்
தய்யனா
தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன ...... தனதான
உய்யஞா
னத்துநெறி கைவிடா தெப்பொழுது
முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி
உள்ளமோ
கத்திருளை விள்ளமோ கப்பொருளை
யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி
வையமே
ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய
வல்லமீ துற்பலச ...... யிலமேவும்
வள்ளியா
நிற்புதிய வெள்ளில் தோய் முத்தமுறி
கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ
பையரா
வைப்புனையு மையர்பா கத்தலைவி
துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா
பையமால்
பற்றிவளர் சையமேல் வைக்குமுது
நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே
செய்யுமால்
வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு
கையமால் வைத்ததிரு ...... மருகோனே
தெய்வயா
னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
உய்ய
ஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும்
உள்ள வேதத் துறை கொடு ...... உணர் ஓதி,
உள்ள மோகத்து இருளை விள்ள, மோகப்பொருளை
உள்ள மோகத்து அருளி, ...... உறவாகி
வையம்
ஏழுக்கும் நிலை செய்யு நீதிப் பழைய
வல்லம் மீது, உற்பல ...... சயிலமேவும்,
வள்ளியா!
நின் புதிய வெள்ளில் தோய் முத்த முறி
கிள்ளி வீ சுற்று மலர் ...... பணிவேனோ?
பை
அராவைப் புனையும் ஐயர் பாகத் தலைவி
துய்ய வேணிப் பகிரதி ...... குமாரா!
பைய
மால் பற்றி வளர் சைய மேல் வைக்கும் முது
நெய்யனே! சுற்றிய கு ...... றவர்கோவே!
செய்யுமால்
வெற்பு உருவ வெய்யவேல் சுற்றிவிடு
கைய! மால் வைத்த திரு ...... மருகோனே!
தெய்வ
யானைக்கு இளைய! வெள்ளை யானைத் தலைவ!
தெய்வ யானைக்கு இனிய ...... பெருமாளே.
பதவுரை
பை அராவை புனையும் --- படத்தையுடைய
பாம்பை அணிகலமாக அணிந்த,
ஐயர் பாகத் தலைவி --- தலைவராகிய
சிவபெருமானுடைய இடப் பாகத்தில் எழுந்தருளியுள்ள பிராட்டியாகிய உமாதேவியார்,
துய்ய வேணி பகிரதி --- பரிசுத்தமான சடையில்
இருக்கும் கங்கை இந்த இருவர்கட்கும்,
குமாரா --- புதல்வரே!
பைய மால் பற்றி வளர் --- மெல்ல அன்பு
பற்றி வளர்ந்த,
சைய மேல் வைக்கும் --- வள்ளிமலை மேல் வைத்த,
முது நெய்யனே --- முதிர்ந்த நேயனே!
சுற்றிய குறவர் கோவே --- சூழ்ந்து நின்ற
குறவர்கட்குத் தலைவரே!
மால் செய்யும் வெற்பு உருவ ---
மயக்கத்தைச் செய்யும் கிரவுஞ்சமலை உருவிச் செல்லும்படி,
வெய்யவேல் சுற்றிவிடு கைய --- வெப்பமான
வேலாயுதத்தை சுழற்றிவிட்ட கரத்தரே!
மால் வைத்த திரு மருகோனே --- அன்பு
வைத்த இலக்குமி தேவிக்கு மருகரே!
தெய்வ யானைக்கு இளைய ---
தெய்வத்தன்மையுடைய கணபதிக்குத் தம்பியே!
வெள்ளை யானை தலைவ --- ஐராவத யானைக்கு
அதிபரே!
தெய்வ யானைக்கு இனிய --- தெய்வயானை அம்மையாருக்கு
இனிமையானவரே!
பெருமாளே --- பெருமை மிகுந்தவரே!
உய்ய ஞானத்து நெறி எப்பொழுதும் கைவிடாது ---
பிறவித் துன்பத்தினின்றும் உய்யும் பொருட்டு ஞான வழியை அடியேன் எக்காலத்திலும்
கைவிடாது பற்றி,
உள்ள வேத துறை கொடு --- உள்ள வேத நூல்களைக்
கொண்டு,
உணர் ஓதி --- உணர்வுடன் ஓதி,
உள்ள மோகத்து இருளை விள்ள --- எனக்குள்ள
மயக்க இருள் நீங்க,
மோக பொருளை உள்ள மோகத்து அருளி --- விருப்பம்
வைக்க வேண்டிய ஞானப் பொருள்களைக் கருதும்படியான விருப்பத்தைத் தேவரீர் அடியேனுக்கு
அருள் செய்து,
உறவு ஆகி --- தேவரீரிடத்தில் நட்பு வைத்து,
வையம் ஏழுக்கும் நிலை செய்யும் நீதி ---
ஏழுலகங்களையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதியனே!
பழைய வல்ல மீது --- பழமையான
திருவல்லத்திலும்,
உற்பல சயில மேவும் --- நீலோற்பல கிரியிலும்
வீற்றிருக்கும்,
வள்ளியா --- கருணையனே!
நின் புதிய வெள்ளில்தோய் முத்த முறி
கிள்ளி வீசுற்று --- உம்மை புதிய வில்வ மரத்திலுள்ள மகிழ்ச்சி தரும் கொழுந்து
இலைகளைக் கிள்ளி வீசிப் பூசித்து,
மலர் பணிவேனோ --- மலரடிகளைப் பணியமாட்டேனோ?
பொழிப்புரை
படத்தை உடைய நாகாபரணத்தை அணிந்த
சிவபெருமானுடைய இடப்பாகத்தில் உள்ள உமாதேவியாருக்கும், தூய சடைமுடியில் உள்ள கங்காதேவிக்கு
குமாரரே!
மெல்ல விருப்பம் பற்றி வளர்ந்த வள்ளிமலை
மீது முதிர்ந்த நேயம் கொண்டவரே!
சூழ்ந்துள்ள குறவர்கட்குத் தலைவரே!
மயக்கத்தைச் செய்யும் கிரவுஞ்ச மலையை
உருவும்படி வெப்பமாகிய வேலைச் சுழற்றி விடுத்த கரத்தினரே!
அன்பு வைத்த இலக்குமி தேவிக்கு மருகரே!
தெய்வத் தன்மையுடைய விநாயகருக்கு
இளையவரே!
ஐராவத யானைக்கு அரசரே!
தெய்வயானையம்மைக்கு இனியவரே!
பெருமிதம் உடையவரே!
பிறவித் துன்பத்தினின்றும் அடியேன்
உய்யும்பொருட்டு ஞான நெறியை எந்நாளும் கைவிடாது பற்றி உள்ள வேத நூல்களை உணர்வுடன்
ஓதி, எனக்குள்ள மயக்க
இருள் நீங்க, விரும்பத்தக்க மெய்ப்
பொருளைக் கருதும் விருப்பத்தை அடியேனுக்கு அருள் புரிந்து, உம்மை உறவு கொண்டு, ஏழுலகங்களையும் நிலை நிறுத்திக்
காக்கும் நீதியனே! பழமையான திருவல்லத்திலும் நீலோற்பல கிரியான திருத்தணிகையிலும்
வாழும் கருணையனே! உம்மை புதிய வில்வ மரத்திலுள்ள மகிழ்ச்சிதரும் கொழுந்து இலைகளைக்
கிள்ளி வீசிப் பூசித்து உமது மலரடிகளைப் பணிய மாட்டேனோ!
விரிவுரை
உய்ய
ஞானத்து நெறி கைவிடாது எப்பொழுதும் ---
ஆன்மாவுக்கு
உள்ள எண்ணில்லாத துன்பங்களில் தலையாய துன்பம் பிறவி நோய். பிறவி நீங்கினாலன்றி
துயரங்கள் நீங்கா. எனவே ஆன்மாக்கள் பெரிதும் முயன்று பெறவேண்டியது பிறவாமையே.
“வேண்டுங்கால்
வேண்டும் பிறவாமை” -திருக்குறள்
அதினின்றும்
தப்புதற்கு ஞான மார்க்கத்தை எப்போதும் விடாது பற்றி ஒழுகுதல் வேண்டும்.
ஞானமார்க்கம்-உண்மை நெறி.
உள்ள
வேதத்துறை கொடுஉணர்வோதி ---
வேதம்-அறிவுநூல்.
வித் என்ற பகுதியடியாகப் பிறந்தது வேதம் என்ற சொல். வித்-ஞானம். ஞானத்தைத் தருவது
வேதம்.
அதனால்
திருஞானசம்பந்தர் “வேதநெறி தழைத்தோங்க” இறைவனை நோக்கி அழுதருளினார்.
சத்தியத்தைப்
பேச (சத்யம் வத) என்று வேதம் முழங்குகின்றது. வேதத்தைக் குரு முகமாக நியமத்துடன்
இருந்து ஓதுதல் வேண்டும். ‘ஒதுவதொழியேல்’ என்கின்றார் ஒளவையார்.
உள்ள
மோகத்து இருளை விள்ள ---
ஆன்மாவுக்கு
உள்ள மோகமாகிய இருள் நீங்க. விள்ள-நீங்க. ஞானமாகிய விளக்கொளி எய்தியவுடன் மோகமாகிய
இருள் நீங்குகிறது.
மோகப்
பொருளை உள்ள மோகத்தருளி ---
மோகம்-விருப்பம்.
விரும்பக்கூடிய பொருளாகிய பரம்பொருளை, நினைக்கும்
விருப்பத்தையருளி.
இடையறாது
இறையாகிய மெய்ப்பொருளைத் தியானிக்க வேண்டும்.
வையம்
ஏழுக்கு நிலை செய்யு நீதி ---
ஏழுலகங்கட்கும்
நிலை பெற வைக்கும் நீதியாக நிற்பவர் முருகவேள்.
ஏழுலகம் ---
பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சனலோகம், தபோலோகம், சத்யலோகம், (மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, பிரமந்திரம்) இந்த ஏழுலகங்களும்
நிலைநிற்க நீதியை எம்பிரான் செலுத்துகின்றான்.
பழைய
வல்லம்
---
திருவல்லம்
என்பது ஒரு பழமையான சிவத்தலம். இது தொண்டை நாட்டில் உள்ள 32 தலங்களில் ஒன்று. தேவாரம், திருப்புகழ்ப் பாடல்கள் பெற்றது.
சேக்கிழார் பெரியபுராணத்தில் பாராட்டி இருக்கின்றார். நீவா நதிக்கரையில் விளங்கும்
அருமையான திருத்தலம். வில்வவனநாதர் தநுர்மத்யாம்பாளுடன் எழுந்தருளியுள்ளார்.
காட்பாடி
புகைவண்டி நிலையத்திலிருந்து கிழக்கே எட்டு மைல். திருவல்லம் என்று தனியே இரயில்
நிலையம் உண்டு.
பழமையான
திருத்தலம். பலர் இங்கு தெரிசித்து வினைகள் தீர்ந்து நலம் பெறுகின்றார்கள். இங்கிருந்து
வள்ளிமலை 8 கல் தொலைவு.
உற்பல
சயிலம்
---
உற்பலம்-நீலோற்பலம்.
நீலோற்பலம் நித்தம் மலரும் பெருமையுடையது திருத்தணிகை மலை.
வள்ளியா ---
கருணை
உடையவனே.
நிற்புதிய
வெள்ளில் தோய் முத்தமுறி கிள்ளி வீசுற்று மலர் பணிவேனோ ---
புதிய
வில்வமரத்தில் உள்ள மகிழ்ச்சியைத் தருகின்ற இளம் இலைகளை எடுத்து எம்பிரானுடைய
இனியடிகளில் அர்ச்சித்து அஞ்சலி செய்தல் வேண்டும்.
பை
அராவைப் புனையும் ஐயர் பாகத் தலைவி ---
பை-பாம்பின்
படம். படம் எடுத்து ஆடும் பாம்புகளை ஆபரணமாக அணிந்தவர் சிவபெருமான்
தாருகவனத்து
முனிவர்கள் அபிசார வேள்வி செய்து சிவபெருமானைக் கொல்லும் பொருட்டுக் கொடிய அரவுகளை
ஏவினார்கள். கருணை வடிவாய இறைவன் கொல்ல வந்த பாம்புகளைத் தாம் கொல்லாது அணிகலமாக
அணிந்து அவைகட்கு அருள் புரிந்தார்.
“வீம்புடைய வன்முனிவர்
வேள்விசெய்து விட்டகொடும்
பாம்புஅனைத்தும் தோல்மேல் பரித்தனையே" --- திருஅருட்பா
இத்தகைய
கருணைக் கடலாகிய இறைவனுடைய இடப்பாகத்தில் அமர்ந்த அம்பிகைக்கும் கங்கைக்கும்
முருகர் புதல்வர்.
பையமால்
பற்றி வளர் சையைமேல் வைக்கு
முதுநெய்யனே ---
வள்ளியம்மையார்
பிறந்து வளர்ந்த வள்ளிமலை மீது முருகப் பெருமான் மிகுந்த அன்பு கொண்டார்.
பைய-மெல்ல.
மால்பற்றி வளர் சையம்-அன்பு கொண்டு வளர்கின்ற மலை நெய்யன்-நேயன்.
செய்யுமால்
வெற்பு உருவ வெய்யவேல் சுற்றிவிடு கைய ---
மால்-மயக்கம்.
தன்பால் வந்தார்க்கு மயக்கத்தைச் செய்கின்ற மலை கிரவுஞ்சம். அதில் வீரவாகு
முதலியோர் மயங்கித் துன்புற்றார்கள். ஐயன் வேல் அதனைப் பிளந்து அழித்தது.
தெய்வ
யானைக்கு இளைய ---
தெய்வத்தன்மையுடைய
கணபதிக்குத் தம்பி.
வெள்ளையானைத்
தலைவ
---
இந்திரன்
தெய்வயானையம்மையை முருகப் பெருமானுக்குக் கல்யாணம் புரிந்து தந்தபோது வெள்ளை
யானையைச் சீதனமாகத் தந்தான்.
தெய்வயானைக்கு
இனிய
---
தெய்வயானையம்மைக்கு
எப்போதும் இனியராயிருக்கின்றவர்.
கருத்துரை
திருத்தணி
முருகா! உமது பதமலரை வில்வத்தால் வழி பட அருள் புரிவாய்.
No comments:
Post a Comment