அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
உடையவர்கள் ஏவர்
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
இல்லை என்போரைப் பாடாமல்,
இல்லை என்னாது அருளும் உன்னைப்
பாட அருள்.
தனனதன
தான தனனதன தான
தனனதன தான ...... தனதான
உடையவர்க
ளேவ ரெவர்களென நாடி
யுளமகிழ ஆசு ...... கவிபாடி
உமதுபுகழ்
மேரு கிரியளவு மான
தெனவுரமு மான ...... மொழிபேசி
நடைபழகி
மீள வறியவர்கள் நாளை
நடவுமென வாடி ...... முகம்வேறாய்
நலியுமுன
மேயு னருணவொளி வீசு
நளினஇரு பாத ...... மருள்வாயே
விடைகொளுவு
பாகர் விமலர்திரி சூலர்
விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே
விளவு
சிறு பூளை நகுதலையொ டாறு
விடவரவு சூடு ...... மதிபாரச்
சடையிறைவர்
காண உமைமகிழ ஞான
தளர் நடையி டாமுன் ...... வருவோனே
தவமலரு
நீல மலர்சுனைய நாதி
தணிமலையு லாவு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
உடையவர்கள்
ஏவர்? எவர்கள் என நாடி,
உளமகிழ ஆசு ...... கவிபாடி,
உமதுபுகழ்
மேரு கிரி அளவும் ஆனது
என உரமுமான ...... மொழிபேசி,
நடைபழகி
மீள, வறியவர்கள் நாளை
நடவும் என வாடி, ...... முகம்வேறாய்,
நலியும்
முனமே உன் அருண ஒளி வீசு
நளின இரு பாதம் ...... அருள்வாயே.
விடை கொளுவு
பாகர், விமலர், திரிசூலர்,
விகிர்தர், பரயோகர், ...... நிலவோடே
விளவு
சிறு பூளை நகுதலையொடு ஆறு
விட அரவு சூடும் ...... அதிபாரச்
சடை
இறைவர் காண, உமை மகிழ, ஞான
தளர் நடை இடா முன் ...... வருவோனே!
தவம்
மலரும் நீல மலர் சுனைய அநாதி
தணிமலை உலாவு ...... பெருமாளே.
பதவுரை
விடை கொளுவு பாகர் --- இடபவாகனத்தைச்
செலுத்துபவர்;
விமலர் --- மலம் இல்லாதவர்;
திரி சூலர் --- முத்தலைச் சூலத்தையுடையவர்;
விகிர்தர் --- உயர்ந்தவர்;
பரயோகர் --- மேலான யோகத்தினர்,
நிலவோடே -- சந்திரனோடு;
விளவு --- விளாமரத்தின் இளந்தளிர்;
சிறு பூளை --- சிறிய பூளைச் செடியின் மலர்,
நகு தலையொடு --- பல்லோடு கூடிய வெண்தலை,
ஆறு --- கங்கையாறு,
விட அரவு --- விடத்துடன் கூடிய பாம்பு,
சூடும் --- இவைகளைத் தரித்துள்ள,
அதிபார சடை இறைவர் காண --- அதிக பாரமுள்ள சடை
முடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும்,
உமை மகிழ --- உமாதேவியார் பார்த்து மகிழவும்,
ஞான தளர் நடைஇடா முன் வருவோனே --- ஞானத் தளர்
நடையிட்டு அவர்கள் முன் வருபவரே!
தவமலரும் --- மிகுதியாக மலர்கின்ற,
நீலமலர் சுனை --- நீலோற்பலச் சுனையுடையதும்,
அநாதி --- ஆதியில்லாததுமாகிய,
தணிமலை உலாவு --- திருத்தணிகை மலையின் மீது
உலாவுகின்ற,
பெருமாளே --- பெருமையில் மிகுந்தவரே!
உடையவர்கள் --- செல்வம் படைத்தவர்கள்,
ஏவர் எவர்கள் என நாடி --- எவர்கள் எவர்கள்
என்று தேடி,
உளமகிழ --- அவர்கள் மனம் மகிழும் பொருட்டு,
ஆசு கவி பாடி --- அவர்கள் மீது ஆசு கவிகளைப்
பாடியும்,
உமது புகழ் மேருகிரி அளவும் ஆனது என ---
உங்களுடைய புகழ் மேரு கிரியின் அளவு போல் உயர்ந்தது என்று கூறியும்,
உரமும் ஆன மொழி பேசி --- வலிமையான துதி
மொழிகளைப் பேசியும்,
நடை பழகி --- நடந்து நடந்து பழகியும்,
வறியவர்கள் மீள --- தரித்திரர்களாகவே
மீளும்படி,
நாளை நடவம் என --- அச்செல்வர்கள், “நாளைக்கு வா, நாளைக்கு வா” என்றே கூற,
வாடி முகம் வேறாய் --- அதனால் அகம் வாடி
முகம் களைமாறிச் சோர்ந்து,
நலியும் முனமே --- வருந்து முன்னதாகவே,
உன் அருண ஒளிவீசும் --- உமது சிவந்த ஒளி
வீசுகின்ற,
நளின இருபாதம் அருள்வாயே --- தாமரை போன்ற இரு
பாதங்களையும் அருள்புரிவீராக.
பொழிப்புரை
இடபவாகனத்தைச் செலுத்துபவரும், மலமில்லாதவரும், முத்தலைச் சூலத்தை யேந்தியவரும், உயர்ந்தவரும், பரமயோகியும், சந்திரன், விளவின் இலை, சிறிய பூளை மலர், பல்லுடன் கூடிய வெண்தலை, கங்கையாறு, நச்சுப்பாம்பு, இவைகளைத் தரித்துள்ள மிகுந்த பாரமான சடை
முடியுடையவருமாகிய சிவபெருமான் கண்டு களிக்குமாறும், உமையம்மையார் பார்த்து மகிழுமாறும்
அவர்களது திருமுன்னே, ஞானத்தளர் நடையிட்டு
வருகின்றவரே!
மிகுதியாக நீலோற்பலமலர் மலர்கின்றதும், தொடக்கம் இல்லாததுமான திருத்தணிகை
மலையின் மீது உலாவுகின்ற பெருமிதம் உடையவரே!
செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள்
என்று தேடிக்கொண்டு போய், அவர்கள் மனம்
மகிழும்படி, ஆசு கவிகள் பாடியும், உங்களது புகழ் மேருகிரிபோல் அளவில்லாதது
என்று வலிமையான துதிமொழிகளைக் கூறியும், ஓயாது
நடந்து நடந்து சென்றும், பழையபடியே
தரித்திரர்களாகவே வரும்படி “நாளை வா, நாளை
வா” என்று அத் தனவந்தர் கூற, அதனால் அகமும்
முகமும்வாடி வருந்துதற்கு முன்னரேயே, சிவந்தவொளி
வீசுகின்ற தாமரை போன்ற உமது திருவடிகளைத் தந்தருளுவீர்.
விரிவுரை
உடையவர்கள்
ஏவர் எவர்கள் என நாடி ---
தமிழ்
படித்த புலவர்களில் பலர் தமிழுக்குத் தலவனான இறைவனைப் பாடாமல், கேவலம் அழிகின்ற செல்வம் படைத்த
மனிதர்களைப் பாடித் திரிந்தார்கள். காமதேனுவின் பாலைக் கமரில் (நில வெடிப்பில்)
கொட்டுவதுபோல் அரிய தமிழை அற்பர்களிடம் கொட்டி அலைவது பாவம்; இந்த அவல நிலையைக் குறித்து அருணகிரி
சுவாமிகள் இத்திருப்புகழில் இரங்கிக் கூறியருளுகின்றார்கள். தேனை வண்டுகள் நாடித்
தேடிச் செல்வதுபோல், புலவர்கள்
பெருந்தனவந்தர்கள் எவர்கள் எவர்கள் என நாடித் தேடிச் செல்வார்கள்.
உளமகிழ ---
செல்வர்கள்
மனம் மகிழுமாறு அவர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பேசுவார்கள்.
ஆசுகவி
பாடி
---
கவிகள்
நான்கு; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தார கவி. விரைந்து பாடுகின்றது
ஆசுகவி எனப்படும்.
“நாலுகவி த்யாகா” --- கந்தர் அநுபூதி.
“ஆசுகவி முதலமொழிவன
நிபுண மதுப முகரித மவுன
முகுள பரிமள நிகில கவிமாலை” --- சீர்பாதவகுப்பு
உமது
புகழ் மேருகிரி அளவும் ஆனது என உரமுமான மொழிபேசி ---
ஒரு
காசுங் கொடுக்க மனமில்லாத-அடுத்த வீட்டுக்குந் தெரியாத-பரம உலோபியைப் பார்த்து, “நீர் பெரிய கொடையாளி; கொடுத்துக் கொடுத்துச் சிவந்த
கையையுடையவர்; அள்ளி வழங்குகின்ற
வள்ளல்; பரம தாதா; தங்களின் புகழ் மேருகிரி போல் உயர்ந்தது; மேருகிரி வரை பரவியுள்ளது” என்று
புகழ்ந்து கூறுவார்கள்.
அதனால்
புலவன், அகம் வாடி, முகம் வெளுத்து வருத்தமுற்றுத்
தடுமாற்றம் அடைவான்.
நச்சி
நீர் பிறன் கடை நடந்து செல்ல, நாளையும்
உச்சி
வம் எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்,
பிச்சர்
நச்சரவு அரைப் பெரிய சோதி, பேணுவார்
இச்சைசெய்யும்
எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே. --- திருஞானசம்பந்தர்.
உன்
அருண ஒளி வீசு நளின இருபாத மருள்வாயே ----
முருகப்பெருமானுடைய
திருவடிகள் ஞானமேயாகும். ஞானத்தின் ஒளி செம்மையானது. ஞானப் பிரகாசம் என்பார்கள்.
“வள்ளல் தொழு ஞானக்
கழலோனே” --- (துள்ளுமதவேள்)
திருப்புகழ்.
என்று
வரும் திருப்புகழ் அடியாலுங் காண்க.
தாமரை
மலரில் தேன் துளிப்பதுபோல், முருகப் பெருமானுடைய
திருவடிகளில் கருணை துளிர்க்கின்றது.
“கருணை கூர்ப்பன்
கழல்கள் ஆர்ப்பன கால்மேல் வீழேன்”
--- (கவடு கோத்தெழு) திருப்புகழ்.
விடைகொளுவு
பாகர்
---
உலகமெல்லாம்
அழிந்தபோது அறம் ஒன்று மட்டும் அழியாது விடை வடிவாகச் சென்று சிவபெருமானை
அடைந்தது. இறைவன் அதன்மீது ஆரோகணித்தருளினார். அகில உலகங்களையும் தாங்கும்
சிவபெருமானை அறந் தாங்குகின்றது.
தரிப்பது
(தாங்குவது), தர்மன் (அறம்); பாகன்-செலுத்துபவன். தேர்ப்பாகன் என்ற
சொல்லாட்சியாலும் உணர்க. விடையைச் செலுத்துபவன் விடைப்பாகன்
“மெய்யா விமலா
விடைப்பாகா” --- சிவபுராணம்
(திருவாசகம்)
விமலர் ---
செம்புக்குந்
தங்கத்துக்கும் என்ன வேற்றுமை? களிம்பு ஒன்றுதான்
களிம்பு உள்ளது செம்பு; இல்லாதது தங்கம்.
அதுபோல்
சிவனுக்கும் சீவனுக்கும் உள்ள வேற்றுமை யாது? மலம் ஒன்றுதான் மலம் உள்ளவன் சீவன். மலம்
இல்லாதவன் சிவன். அநாதிமல பெத்தன்-ஆன்மா, அநாதிமல
முத்தன்-இறைவன். எனவே, ஆன்மா-சமலன்.
இறைவன்-விமலன்.
திரிசூலர் ---
‘சிவபெருமான்
திருக்கரத்தில் திருசூலம் விளங்கும். அது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மூன்று சக்திகளைக்
குறிக்கும்.
விகிர்தர் ---
விகிர்தர்-உயர்ந்தவர்.
எல்லாத் தேவர்கட்கும் சிறந்தவர் சிவமூர்த்தி ஒருவரேயாவர். தேவதேவர், மகாதேவர்.
பரயோகர் ---
சிவபெருமான்
சிறந்த யோகீச்சுரர்; “பரமனே பரமயோகீ” என்று
அப்பர் பெருமானும், “மறைபாடும் பரமயோகீ”
என்று திருஞானசம்பந்தரும் கூறுகின்றார்கள்.
“பற்று இலார்க்கே வீடு அருள்
பரமயோகீ” --- திருவிளையாடற்புராணம்.
சிறுபூளை ---
பூளைப்பூ
சிவபெருமானுக்கு உகந்தது.
மூளும்
வெஞ்சினத்து அருந்தவன் முனிந்து,
எரி விழிப்பப்
பூளை
சூடிதன் நகையினில் எயில் பொடிந்தனபோல,
ஆளு
மைந்தர் ஆறயுதருஞ் சாம்பராய் அவிர்ந்தார்
கோவிகண்ட
நல் வேந்தனுக்கு உரைத்தனரு வேகர். --- கம்பராமாயணம்.
பூளை எருக்கு மதி நாக
பூணர் அளிக்கும் சிறியோனே. --- (நாளுமிகுத்த) திருப்புகழ்.
நகுதலை ---
சிவபெருமான்
அநேக பிரம சிரங்களை மாலையாக அணிந்திருக்கின்றார்.
அத்
தலைகள் பல்லுடன் கூடியவை. அவை அகங்காரத்தால் கெட்டோம் என்று சிரிப்பது போல்
இருக்கும். “நான் சிருட்டிக் கர்த்தா” என்று எண்ணித் தருக்குற்றான் பிரமன். அவன்
தலையை நகத்தால் கிள்ளியருளினார் சிவனார். எத்தனையோ பிரமகற்பங்கள். கற்பங்கள் தோறும்
வந்த பிரமாக்களின் சிரங்களை மாலையாகக் கோர்த்து அணிந்திருக்கின்றார். அதைக்
கண்டவர் அகங்காரங் கொள்ளாதிருக்கும் பொருட்டு என்க.
அதிபாரச்
சடை இறைவர்
---
இறைவனுடைய
சடைமுடி அப்பெருமானுடைய துறவையும்,
இறைமைத்
தன்மையையுங் குறிக்கின்றது.
ஞானத்
தளர் நடையிடா முன் வருவோனே ---
என்றும்
இளையோனாகிய முருகவேள், அம்மையும் அப்பனுங்
கண்டு களிக்க, அவர்கள் திருமுன்
தளர்நடையிட்டு உலாவுகின்றார்.
அவ்வண்ணம்
தளர்நடையிடுவதால், ஏழு உலகங்களும்
அசைகின்றன; ஆதிசேடனுடைய ஆயிரம்
பணாமகுடங்களும் நெறுநெறு என்று நொறுங்குகின்றன. மகா மேருகிரி இடிந்து விழுகின்றது.
இமையவர்கள் தங்கள் பொன்னகரில் குடி புகுகின்றார்கள். அசுரர்கள் வயிற்றில் எரி
புகுகின்றது.
“இமையவர்கள் நகரில் இறை
குடிபுகுத, நிருதர்வயிறு
எரிபுகுத, உரகர்பதி அபிஷேகம் ஆயிரமும்
எழுபிலமு நெறு நெறென முடிய, வட குவடு இடிய,
இளையதளர்
நடைபழகி விளையாடல் கூருவதும்” --- சீர்பாதவகுப்பு.
தவமலரும் ---
தவ-மிகுதி.
திருத்தணி மலையில் நீலோற்பலச் சுனையில் மிகுதியாக நீலோற்பல மலர்கள் மலர்கின்றன. அதனால்
அம்மலை நீலகிரி எனப் பேர் பெற்றது.
"நீலகிரி மருவு குருபதி" --- சீபாதவகுப்பு.
கருத்துரை
திருத்தணி
ஆண்டவனே! உமது திருவடி தந்தருள்செய்.
No comments:
Post a Comment