திருத்தணிகை - 0257. உடலின் ஊடு




அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

உடலின் ஊடு (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
அடியேன் உலகப் பற்றை விட்டு, உனது திருவடியைப் பற்ற அருள்.


தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான


உடலி னூடு போய்மீளு முயிரி னூடு மாயாத
     உணர்வி னூடு வானூடு ...... முதுதீயூ

டுலவை யூடு நீரூடு புவியி னூடு வாதாடு
     மொருவ ரோடு மேவாத ...... தனிஞானச்

சுடரி னூடு நால்வேத முடியி னூடு மூடாடு
     துரிய வாகு லாதீத ...... சிவரூபம்

தொலைவி லாத பேராசை துரிச றாத வோர்பேதை
     தொடுமு பாய மேதோசொ ...... லருள்வாயே

மடல றாத வாரீச அடவி சாடி மாறான
     வரிவ ரால்கு வால்சாய ...... அமராடி

மதகு தாவி மீதோடி யுழவ ரால டாதோடி
     மடையை மோதி யாறூடு ...... தடமாகக்

கடல்பு காம காமீனை முடுகி வாளை தான்மேவு
     கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக்

கடவுள் நீல மாறாத தணிகை காவ லாவீர
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


உடலின் ஊடு போய் மீளும் உயிரின் ஊடு மாயாத
     உணர்வின் ஊடு, வான் ஊடு, ...... முது தீ ஊடு,

உலவை ஊடு, நீர் ஊடு, புவியின் ஊடு, வாதாடும்
     ஒருவமோடும் மேவாத ...... தனிஞானச்

சுடரின் ஊடு, நால்வேத முடியின் ஊடும், டாடும்
     துரிய ஆகுல அதீத ...... சிவரூபம்,

தொலைவு இலாத பேராசை, துரிசு அறாத ஓர்பேதை
     தொடும் உபாயம் ஏதோ? சொல் ...... அருள்வாயே.

மடல் அறாத வாரீச அடவி சாடி, மாறான
     வரி வரால் குவால் சாய ...... அமராடி,

மதகு தாவி மீதுஓடி உழவரால் அடாது ஓடி
     மடையை மோதி ஆறுஊடு ...... தடமாக,

கடல் புகா மகா மீனை முடுகி வாளை தான்மேவு
     கமல வாவி மேல்வீழு ...... மலர்வாவிக்

கடவுள் நீலம் மாறாத, தணிகை காவலா! வீர!
     கருணை மேருவே! தேவர் ...... பெருமாளே.

  
பதவுரை


      மடல் அறாத --- இதழ்கள் நீங்காத,

     வாரீச அடவி சாடி --- தாமரைப் பூவின் காட்டை அழித்து,

     மாறான வரி வரால் குவால் சாய அமர் ஆடி --- தனக்குப் பகையாக அங்கிருந்த வரி படர்ந்த வரால் மீன் கூட்டங்கள் தோற்றுப் பின்வாங்கி ஓடும்படி போர்புரிந்து,

     மதகு தாவி மீது ஓடி --- தான் செல்லும் வழியில் இருந்த நீர்பாயும் மதகைத் தாவித் தாண்டி மேலே ஓடி,

     உழவரால் அடாது ஓடி --- வயலில் உழுபவர்கள் தன்னை வருத்தாதபடி விலகி ஓடி,

     மடையை மோதி --- வழியில் உள்ள நீர்மடைகளைத் தாக்கி,

     ஆறு ஊடு தடமாக --- ஆற்றின் வழியே வழியாகச் சென்று,

     கடல் புகா --- கடலில் புகுந்து,

     மகா மீனை முடுகி --- அங்குள்ள பெரிய மீனை விரைந்து ஓடும்படித் தாக்கி,

     வாலை --- வாளை மீன்,

     தான் மேவு கமல வாவி மேல் வீழும் --- தான் முன் இருந்த தாமரைக் குளத்தில் வந்து வீழும்,

     மலர் வாவி --- இத்தகைய அந்த மலர்ச்சுனையில்,

     கடவுள் நீலம் மாறாத --- தெய்வமணமுள்ள நீலோற்பல மலர் மலர்வது என்றும் தவறாத,

     தணிகை காவலா --- திருத்தணிகைக்கு அரசே!
  
     வீர --- வீர மூர்த்தியே!
  
கருணை மேருவே --- கருணையில் மேரு போன்றவரே!

தேவர் பெருமாளே --- தேவர்கள் போற்றும் பெருமையில் மிகுந்தவரே!

         உடலின்ஊடு போய்மீளும் உயிரின்ஊடும் --- உடல் உள்ளும்,  உடலில் சென்று மீளுகின்ற உயிரினூடும்,

     மாயாத உணர்வின்ஊடு --- அழியாத உணர்ச்சியுள்ளும்,

     வான் ஊடு --- ஆகாயத்துள்ளும்,

     முது தீ ஊடு --- முற்றிய தீயினுள்ளும்,

     உலவை ஊடு --- காற்றினுள்ளும்,

     நீர் ஊடு --- தண்ணீரிலுள்ளும்,

     புவியின் ஊடு --- மண்ணினுள்ளும்.

     வாது ஆடு ஒருவரோடும் மேவாத --- சமய வாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடைக்காத,

     தனிஞான சுடரின் ஊடும் --- ஒப்பற்ற ஞான ஒளியினுள்ளும்,

     நால்வேத முடியின் ஊடும் --- நான்கு வேதங்களின் உச்சியிலும்,

     ஊடாடும் --- ஊடாடுகின்றதும்,

     துரிய --- துரியமாய் நிற்பதும்,

     ஆகுல அதீத --- துன்பங்கள் கடந்த நிலையில் உள்ளதுமாகிய,

     சிவரூபம் --- சிவரூபத்தை,

     தொலைவு இலாத பேர் ஆசை --- முடிவில்லாத பேராசையும்,

     துரிசு அறாத --- குற்றமும் நீங்காத,

     ஓர் பேதை --- ஒரு மூடனாகிய அடியேன்,

     தொடும் உபாயம் ஏதோ --- அடைதற்கு உரிய வழி எதுவோ?

     சொல் அருள்வாயே --- அந்த உபதேசமொழியைச் சொல்லி அருள்புரிவீராக.

பொழிப்புரை

         வாளை மீனானது மதகு வழியாகத் தாவிக் குதித்துச் சென்று, இதழ்களுடன் கூடிய தாமரைக் காட்டையழித்தும், தனக்கு மாறுபட்ட வரிவரால் கூட்டங்கள் தோற்றுப் போகுமாறு போர் செய்தும், வயலில் உழுபவர்கள் தன்னை வருத்தாதபடி விலகி ஓடியும், வழியில் உள்ள நீர் மடைகளைத் தாக்கியும், ஆற்றின் வழியே சென்று, கடலில் புகுந்து அங்கே வாழும் பெரிய மகர மீனை ஓடும்படிச் செய்தும், தான் வாழும் தாமரைக் குளத்துக்குத் திரும்பி வந்தது; இத்தகைய தணிகை மலையின் மீதுள்ள மலர்ச் சுனையில் தெய்வமணம் மாராத நீலோற்பல மலர் தவறாது மலரும். இந்தப் பெருமையை உடைய தணிகை மலைக்கு அரசே!

         வீரமூர்த்தியே!

         கருணையில் மேரு போன்றவரே!

     தேவர் போற்றும் பெருமிதம் உடையவரே!

         உடலினுள்ளும், உடலில் சென்று மீளுகின்ற உயிரினுள்ளும், அழியாத உணர்வினுள்ளும் விண்ணினுள்ளும், முற்றிய தீயினுள்ளும், காற்றினுள்ளும், நீரினுள்ளும், மண்ணினுள்ளும், சமயவாதம் புரிகின்ற எவரிடத்திலும் காணக்கிடையாத ஒப்பற்ற ஞான ஒளியினுள்ளும்,, நான்கு வேதங்களின் முடிவிலும், ஊடாடுகின்றதும், துரியமாய் நிற்பதும், துன்பங் கடந்த நிலையில் உள்ளதுமான சிவரூபத்தை, பேராசையும் குற்றமும் நீங்காத மூடனாகிய அடியேன் அடைவதற்கு உரிய வழிஎதுவோ? அந்த உபதேச மொழியை உபதேசித்து அருளுவீராக.


விரிவுரை


இத் திருப்புகழில் அருணகிரிநாத சுவாமிகள் முருகனிடம் உபதேசம் புரியுமாறு வேண்டுகின்றார்.
  
உடலினூடு.......நால்வேத முடியினூடும் ஊடாடும் ---

சிவ ரூபமானது மண் முதலான ஐம்பெரும் பூதங்களினுள்ளும், உயிர் உணர்விலும், அறிவினுள்ளும் கலந்திருக்கின்றது.

வாதாடுமொருவரொடு மேவாத தனி ஞானச்சுடர் ---

கல்வி பயில்வது மனம் அடங்குவதற்காகவே ஆகும். அங்ஙனம் அடக்கம் பெறாது, கல்வி பயின்று, “என் சமயம் பெரியது, என் சமயம் பெரியது” என்று வீணே தர்க்கம் புரிந்து வாணாளை வீணாளாக்கும் சமயவாதிகளின் அறிவில் ஞானஒளி வீசாது.

துரியம் ---

சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்ற மூன்றையும் கடந்தது துரியம். அத் துரிய நிலையில் உணரப்படுவது சிவ ரூபம்.

துரியநிலை யேகண்ட முத்தரித யாகமலம்
   அதனில் விளையாநின்ற அற்புத போத சுக
   சுயபடிகம்”                      --- (சுருதிமுடி) திருப்புகழ்


ஆகுலாதீத சிவரூபம் ---

ஆகுலம் - துன்பம்; அதீதம் - அப்பாற்பட்டது. சிவரூபமானது துன்பத்திற்கு அப்பாற்பட்டது. சிவனருள் பெற்றவர்க்கே துன்பம் கிடையாது. ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்கின்றார் அப்பர் பெருமான்

தொலைவிலாத பேராசை ---

பற்று, அவா, ஆசை, பேராசை என்று நான்கு வகை எழுச்சிகள் மனதில் எழும்.

1. உள்ள பொருளில் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும்.

2. இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று கொழுந்து விடுகின்ற நினைவு அவா எனப்படும்.

3. பிறர் பொருளை விரும்பி நிற்பது ஆசையாகும்.

4. எத்தனை வந்தாலும் திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல் சதா உலைந்து அலைந்து மேலிடுகின்ற விருப்பத்துக்குப் பேராசை என்று பெயர்.

பற்று ---

எந்தப் பொருளின் மீதும் பற்றின்றி நின்றவர்க்கே பிறப்பு அறும்.

பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.                --- திருக்குறள்.

அற்றது பற்றெனில் உற்றது வீடு’        --- திருவாய்மொழி

அவா ---

உள்ளது போதும் என்று அலையாமல், இன்னும் அது வேண்டும், இது வேண்டும் என்று விரும்புவோர் துன்பத்தை அடைவார்கள். இந்த அவாவே பெருந்துயரை விளைவிக்கும்; பிறப்பைக் கொடுக்கும்.

அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.                --- திருக்குறள்.

அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம், அஃது உண்டேல்
தவாஅது மேல்மேல் வரும்.              --- திருக்குறள்.

அவா என்ற ஒன்று ஒருவனுக்குக் கெடுமாயின் அவன் வீடுபேறு எய்திய போதுமட்டுமன்றி இம்மையிலும் இடையறாத இன்பத்தை அடைவான்.

இன்பம் இடையறாது ஈண்டும், அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.               --- திருக்குறள்

ஆசை ---

பிறர் பொருளின் மீது வைப்பது ஆசையாகும். இது பற்றினும், அவாவினும் கொடிது.

பிறருடைய மண்ணை விரும்புவது மண்ணாசை, மண் ஆசையால் மடிந்தவன் துரியோதனன். பிறருடைய மனைவியை
விரும்புவது பெண்ணாசை. பெண்ணாசையால் பெருங்கேடு அடைந்தவர்கள் இராவணன், இந்திரன், சந்திரன், கீசகன் முதலியோர்கள்.

பேராசை ---

உலகமெல்லாம் கட்டியாள வேண்டும். தொட்டன எல்லாம் தங்கமாக வேண்டும். கடல் மீது நம் ஆணை செல்லவேண்டும். விண்ணும் மண்ணும் நம்முடையதாக வேண்டும் என்று எண்ணி, ஒரு கட்டுக்கடங்காது, கங்கு கரையின்றி தலை விரித்து எழுந்து ஆடுகின்ற அசுர தாண்டவமே பேராசை.

கொடும் கோடை வெய்யிலில் ஒருவன் குடையும் செருப்பும் இன்றி நடந்து சென்று கொண்டிருந்தான் அவ்வழியில் ஒருவன் பாதரட்சை அணிந்து கொண்டு குடையும் பிடித்துக் கொண்டு குதிரைமீது சென்றான். அவனைப் பார்த்து நடந்து போனவன், “ஐயா! வணக்கம். குதிரைமேல் போகின்ற உனக்குப் பாதரட்சை எதற்காக? எனக்குத் தந்தால் புண்ணியம்” என்றான்.

கேட்டவன் வாய் மூடுவதற்கு முன் குதிரை மீது சென்றவன் பாதரட்சையைக் கழற்றிக் கொடுத்தான்.

ஐயா! குதிரையில் செல்வதனால் நீர் சீக்கிரம் வீட்டுக்குச் சென்று விடலாம். நான் நடந்து போகின்றவன். அதலால் தயவு செய்து தங்கள் குடையைத் தாருங்கள்’ என்றான்.

குதிரைமேல் போகின்றவன் சற்றும் சிந்தியாமல் இரக்கத்துடன் குடையைக் கொடுத்தான்.

நடப்பவன் மனம் மிக்க மகிழ்ச்சியடைந்து, “ஐயா! தங்கள் தரும குணம் பாராட்டுவதற்கு உரியது. நிரம்ப நன்றி. பெருங்கருணை புரிந்து குதிரையைக் கொடுங்கள்” என்றான்.

குதிரை மீது இருந்தவன் “அப்படியா!” என்று சொல்லி பளிச்சென்று இறங்கிக் குதிரையை அடிக்கும் சவுக்கினால் அவனைப் பளீர் பளீர் என்று அடித்தான் அடிபட்டவன் சிரித்தான்.

நான் அடிக்கிறேன்; நீ சிரிக்கிறாய்; என்ன காரணம்?” என்று கேட்டான்.

இவ்வாறு கேட்டு அடிபடவில்லையானால் என் ஆயுள் உள்ளவரை என் மனதில் ஒரே கொந்தளிப்பு இருந்திருக்கும். செருப்பைக் கேட்டவுடன் கொடுத்தார்! குடையைக் கேட்டவுடன் கொடுத்தார்! குதிரையைக் கேட்டிருந்தால் கொடுத்திருப்பார். கேளாமல் போய் விட்டோமே?” என்று எண்ணி எண்ணி வருந்துவேன். இப்போது கேட்டேன்; நீர் குதிரையைக் கொடுக்காமல் சவுக்கடி கொடுத்தீர். சவுக்கடி பட்டது பெரிதன்று, சந்தேகம் தீர்ந்தது பெரிது” என்று கூறி அவனை வணங்கிவிட்டுச் சென்றான். இதற்குத்தான் பேராசை யென்று பெயர்.

ஆசைக்குஓர் அளவு இல்லை, அகிலம் எல்லாம் கட்டி
         ஆளினும், கடல் மீதிலே
     ஆணை செலவே நினைவர்; அளகேசன் நிகராக
         அம்பொன் மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்;
         நெடுநாள் இருந்த பேரும்
     நிலையாகவே இனும் காயகற்பம் தேடி
         நெஞ்சு புண் ஆவர்; எல்லாம்
யோசிக்கும் வேளையில், பசிதீர உண்பதும்
          உறங்குவதும் ஆகமுடியும்;
     உள்ளதே போதும், நான் நான்எனக் குளறியே
          ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல், மனதுஅற்ற
          பரிசுத்த நிலையை அருள்வாய்,
     பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
          பரிபூரண ஆனந்தமே.          --- தாயுமானார்.

ஆசைச் சுழற் கடலில் ஆழாமல், ஐயா, நின்
நேசப் புணைத்தாள் நிறுத்தினால் ஆகாதோ.  --- தாயுமானார்.

ஆசைஎனும் பெருங் காற்றுஊடுஇலவம்
         பஞ்சுஎனவும் மனது அலையுங்காலம்
மோசம் வரும், இதனாலே கற்றதும்
         கேட்டதும் தூர்ந்து முத்திக்குஆன
நேசமும்நல் வாசமும்போய், புலனாய்இல்
         கொடுமை பற்றி நிற்பர்,அந்தோ!
தேசுபழுத்து அருள்பழுத்த பராபரமே!
         நிராசைஇன்றேல் தெய்வம் உண்டோ? --- தாயுமானார்.

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
 ஓரா வினையேன் உழலத் தகுமோ”  --- கந்தரநுபூதி
                                     
கடவுளுக்கும் நமக்கும் எவ்வளவு தூரம்? என்று ஒரு சீடன் ஆசிரியனைக் கேட்டான். ஆசிரியர் “ஆசையாகிய சங்கிலி எவ்வளவு நீளம் உளதோ அவ்வளவு தூரத்தில் கடவுள் இருக்கின்றார்” என்றார்.

சங்கிலி பல இரும்பு வளையங்களுடன் கூடி நீண்டுள்ளது. ஒவ்வொரு வளையமாக கழற்றி விட்டால் அதன் நீளம் குறையும். அதுபோல் பலப்பல பொருள்களின் மீது வைத்துள்ள ஆசைச் சங்கிலி மிகப் பெரிதாக நீண்டுள்ளது. ஒவ்வொரு பொருளின் மீதும் உள்ள ஆசையைச் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். முற்றிலும் ஆசை அற்றால் அப்பரம் பொருளை அடையலாம்.

  ஆசா நிகளம் துகள் ஆயின பின்
 பேசா அநுபூதி பிறந்ததுவே”             --- கந்தரநுபூதி

துரிசறாத வோர் பேதை ---

துரிசு=குற்றம். ஆசையால் கோபமும், கோபத்தால் மயக்கமும் வரும். காமம், வெகுளி, மயக்கம் என்ற முக்குற்றங்களும் நீங்கினல்தான் பிறவி நீங்கும்.

காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றன்
   நாமம் கெடக்கெடும் நோய்”         --- திருக்குறள்.

பேதை=அறிவில்லாதவன், மேதையில்லாதவன் பேதை; பேதை வாதையடைவான்.

தொடுமுபாயம் ஏதோ சொலருள்வாயே ---

மேலே கூறிய சிவரூபத்தை யடைகின்ற வழி யாது? அதை உபதேசித்தருளும்.

மடல் அறாத வாரீச........................மலர்வாவி ---

இந மூன்று அடிகளில் திருத்தணியில் தாமரைக் குளத்தில் வாழும் வாளை மீனின் ஆற்றல் கூறப்படுகின்றது.

திருத்தணியில் குளத்தில் வாழுகின்ற வாளை மீன் மதகு வழியே சென்று, தாமரைக் காட்டை அழித்து, மதகுகளை உடைத்தும், வரால் மீன்களை விரட்டியும், கடலில் சென்று பெரிய மகர மீன்களைத் தோல்வியுறச் செய்தும், ஆற்றின் வழியே மீண்டு முன்பிருந்த குளத்தில் வந்து சேருமாம். இத்துணை வலிமை வாளை மீனுக்கு உண்டு என்று குறிப்பிடுகின்றார். வீரவாகு தேவர் தூது சென்று வழியில் அரக்கர்களைக்கொன்று கடல் நடுவில் உள்ள வீரமகேந்திரஞ் சென்று, போர் புரிந்து வெற்றியுடன் மீண்டதையும் இது குறிப்பினால் புலப்படுத்துகின்றது.

கடவுள் நீல மாறாத தணிகை ---

திருத்தணிகை மலைமீது தெற்கு ரதவீதியின் தென்புறத்திலிந்திர நீல சுனை இன்றும் இருக்கின்றது, அச்சுனையில் இந்திரன் தேவலோகத்து நீலோற்பலக் கொடியை வைத்து வளர்த்தான் அங்கு காலை, உச்சி, மாலை என்ற முப்போதும் தப்பாது மூன்று மலர்கள் மலரும். அதனை எடுத்து மூன்று வேலைகளிலும் இந்திரன் கந்தவேளை வழிபட்டான் செங்கழுநீர் மலரும் அதில் மலர்ந்தது. அதனால் அந்த மலை கல்லாரகிரி எனப் பெயர் பெற்றது.

கல் மலிந்த கழுநீர்க் குன்றம்’ என்று அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார் .நீலோற்பலம் மலர்வதால் இது நீலகிரி எனப் பெயர் பெற்றது.

நீலகிரி மருவு குருபதி”                  --- சீர்பாதவகுப்பு

அனவரத நீலமலர் முத்து எறி சுனைப் புனலில்
   அருவி குதிபாய் தரு செருத்தணி”       --- பூதவேதாள வகுப்பு

நீள்சுனை தினமும் உற்பலம் மலர் திருத்தணி”   --- ஞானவேழ வகுப்பு

இந்த்ர நீலச் சிலம்பினன்”                --- கந்தரந்தாதி

சேர்ப்பது மாலய நீலோற்பலகிரி”          --- கந்தரந்தாதி

காலைப் போதினில் ஒருமலர்; கதிர் முதிர் உச்சி
வேலைப் போதினில் ஒருமலர்; விண்ணெலாம் இருள்ழூழ்
மாலப் போதினில் ஒருமலர்; ஆகஇவ் வரைமேல்
நீலப் போதுமுன்று ஒழிவின்றி நிற்றலும் மலரும்.

கருணை மேருவே ---

முருகவேள் கருணையில் மேருமலை போல் உயர்ந்தவர். "மேருவரையின் மேம்பட்ட தவத்தன்" என்று சுந்தரரைச் சிவபெருமான் குறிப்பிடுகின்றார்.


கருத்துரை

தணிகை நாயகா! ஆசையற்று அடியேன் சிவரூபத்தைப் பெற உபதேசித்தருள்.







No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...