திருத்தணிகை - 0256. இருமல் உரோகம்





அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்

இருமலு ரோக (திருத்தணிகை)

திருத்தணிகை வேலா!
நோய்கள் பிறவிகள் தோறும் என்னை நலியாத படி,
உனது திருவடியைத் தந்து அருள்.

தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான


இருமலு ரோக முயலகன் வாத
     மெரிகுண நாசி ...... விடமேநீ

ரிழிவுவி டாத தலைவலி சோகை
     யெழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
     பெருவலி வேறு ...... முளநோய்கள்

பிறவிகள் தோறு மெனைநலி யாத
     படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி யசுரர்ப தாதி
     மடியஅ நேக ...... இசைபாடி

வருமொரு கால வயிரவ ராட
     வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
     தருதிரு மாதின் ...... மணவாளா
  
சலமிடை பூவி னடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.


பதம் பிரித்தல்


இருமல், உரோகம், முயலகன், வாதம்,
     எரிகுண, நாசி ...... விடமே, நீர்

இழிவு, விடாத தலைவலி, சோகை,
     எழுகள மாலை, ...... இவையோடே,

பெருவயிறு, ளை, எரிகுலை, சூலை,
     பெருவலி, வேறும் ...... உளநோய்கள்,

பிறவிகள் தோறும் எனை நலியாத-
     படி, உன தாள்கள் ...... அருள்வாயே.

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி
     மடிய, அநேக ...... இசைபாடி

வரும், ரு கால வயிரவர் ஆட,
     வடிசுடர் வேலை ...... விடுவோனே

தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி
     தரு திரு மாதின் ...... மணவாளா!

சலம் இடை பூவின் நடுவினில் வீறு
     தணிமலை மேவு ...... பெருமாளே.

பதவுரை


         வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய --- போருக்கு வந்த ஒரு கோடி அசுர சேனைகள் மாளும்படியும்,

     அநேக இசைபாடி வரும் --- பலப்பல வகையான இசைப்பாடல்களைப் பாடி வந்து,

     ஒரு கால வயிரவர் ஆட ---  ஒப்பற்ற காலபைரவர் நடம் ஆடவும்,

     வடிசுடர் வேலை விடுவோனே --- கூர்மையும் ஒளியும் உடைய வேலாயுதத்தை விடுத்தவரே!

தரு நிழல் மீதில் உறை --- கற்பகமரத்தின் நிழலில் வாழ்கின்ற,

முகில் ஊர்தி தரு --- மேக வாகனனாம் இந்திரன் தந்த,

திரு மாதின் மணவாளா --- தெய்வயானையம்மையின் கணவரே!

சலம் இடை பூவின் நடுவினில் வீறு --- கடலுக்கு நடுவில் விளங்கும் பூதலத்தில் நடுவிடத்தில் பெருமை பெற்று விளங்கும்,

தணி மலை மேவு பெருமாளே --- திருத்தணிமலை மீது எழுந்தருளியுள்ள பெருமை மிகுந்தவரே!

         இருமல் --- இருமல் நோயும்,

     ரோக முயலகன் --- முயலகன் என்ற நோயும்,

     வாதம் --- வாத நோய்களும்,

     எரிகுண --- வெப்பு நோயும்,

     நாசி விடமே --- மூக்கும் பீனசமும்,

     நீரிழிவு --- நீரிழிவு என்ற நோயும்,

     விடாத தலைவலி --- நீங்காத தலைவலியும்,

     சோகை --- சோகை நோயும்,

     எழு களமாலை --- கழுத்தைச் சுற்றி எழுகின்ற கண்ட மாலையும்,

     இவையோடே --- இவைகளுடன்,

     பெரு வயிறு --- பெருவயிறு என்னும் மகோதரமும்,

     ஈளை --- சுவாச காசமும்,

     எரிகுலை --- குலை எரிச்சலும்,

     சூலை --- சூலை நோயும்,

     பெருவலி --- பெரிய நோயும்,

     வேறும் உள நோய்கள் --- இவை அன்றி மற்றும் உள்ள நோய்களும்,

     பிறவிகள் தோறும் --- ஒவ்வொரு பிறவியிலும்,

     எனை நலியாதபடி --- அடியேனைப் பற்றி துன்புறுத்தா வண்ணம்,

     உன தாள்கள் அருள்வாயே --- தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர்.


பொழிப்புரை


போருக்கு வந்த ஒரு கோடி அசுரர் மாளவும், பலப்பல இசைகளைப் பாடி வருகின்ற ஒப்பற்ற காலபைரவர் நடனம் புரியவும் கூரிய ஒளி மிகுந்த வேலாயுதத்தை விடுத்தருளியவரே!

கற்பக மரத்தின் நிழலில் வசிக்கின்ற மேக வாகனமாகிய தேவேந்திரன் தந்த தெய்வயானையம்மையாரின் கணவரே!

கடலின் நடுவில் விளங்கும் பூதலத்தில் இடையில் பெருமை பெற்றுத் திகழும் திருத்தணியம்பதியில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே!

         இருமல், முயலகன், வாதநோய், வெப்புநோய், மூக்குப்பீசனம், நீரிழிவு, தீராத தலைவலி, சோகை, புதிது புதிதாக எழுகின்ற கண்டமாலை இவைகளுடன் பெருவயிறு, ஈளை, குலையெரிச்சல், சூலை, பெருநோய். மற்றுமுள்ள நோய்கள் பிறவிதோறும் அடியேனை வந்து பற்றி துன்புறுத்தா வண்ணம் தேவரீருடைய திருவடிகளைத் தந்தருளுவீர்.


விரிவுரை


இத்திருப்புகழ் பரம குருநாதராகிய அருணகிரிப் பெருமான் உலகில் உள்ள மக்களின் மீதுள்ள அளவற்ற கருணையால் பாடியருளியது.

         இத்திருப்புகழை, அன்பர்கள் நாள்தோறும், ஒருமைப் பட்ட உள்ளத்துடன் உருகிய சிந்தையுடன் ஓதினால், நோய்கள் விலகப் பெறுவார்கள். அன்றியும் நோய் தீண்டப் பெறார்கள். நோயின்றி வாழ்ந்தும் வளம் பெறுதற் பொருட்டு அடிகளார் இத்திருப்புகழை இனிது பாடிக் கொடுத்தருளினார்.
  
இருமல் ---

மனிதனை உயிருடன் வைத்து வதைக்கின்ற நோய் இருமல். இதில் ஆஸ்துமா, க்ஷயம், புகை இருமல், பாடி இருமல், தூறு இருமல் என்று பலவகை உண்டு.

முயலகன் ---

முயலகன் என்பது ஒரு நோய். கை கால் இழுத்துக் கொண்டு துடிக்கச் செய்யும். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற திருத்தலத்தை அடைந்தபோது, அவ்வூர்த் தலைவர் கொல்லி மழவன் என்பவர், தம் குழந்தைக்கு வந்த முயலகன் என்ற நோய் தீரும் படி கோயிலிலே குழந்தையை வைத்து வருந்தினார்.

அப்போது ஆலய வழிபாட்டிற்கு வந்த திருஞானசம்பந்தர் திருப்பதிகம் பாடியருளினார். அதனால் கொல்லிமழவன் புதல்வியின் முயலகன் என்ற நோய் நீங்கியது. அன்றியும் அக்கோயில் நடேசப் பெருமான் திருவடியின் கீழ் இருந்த முயலகனும் மறைந்தனன்.
  
வாதம் ---

அண்டவாதம், பட்சவாதம், பாரிசவாதம் முதலிய வாத நோய்கள் இறைவனைப் பிடிவாதமாக வணங்காத பாவிகட்கு வரும்.

எரிகுணம் ---

வெப்புநோய்; கைகால் கண் காது முதலிய இடங்களில் ஒரே எரிச்சலுடன் வரும்.

நாசி விடம் ---

நாசியில் வரும் பீனசம் முதலிய நோய்கள்.

நீரிழிவு ---

நீரில் சர்க்கரை வரும் பொல்லாத நோய். இது பலரைப் பிடித்து வாட்டி வருத்தும்.

விடாத தலைவலி --- 

தீராத தலைவலி.

எழு களமாலை --- 

கழுத்தைச் சுற்றி புற்று போல் எழுகின்ற கண்டமாலை.

பெரு வயிறு ---

பானை போல் வயிறு பெருத்து வேதனை செய்யும். மகா + உதரம் ===. மகோதரம்.

ஈளை ---

சுவாசகாசம்; கோழை, சளி இவைகள் மிகுந்து வருத்தும்.

எரிகுலை --- 

குலைஎரிச்சல்.

சூலை ---  

ஆலகால விடம் உள் புகுந்தது போல் குடலைப் புரட்டிப் புரட்டித் துன்புறுத்தும்.

பெருவலி ---

பெருநோய்-தொழுநோய் என்கின்ற கொடிய நோய். இது தான் எல்லா நோய்கட்கும் அரசன் அதனால் இதைக் கண்டால் மற்ற நோய்கள் யாவும் தொழும். அதனால் தொழு நோய் எனப்பட்டது.

பிறவிகள் தோறும் எனை நலியாதபடி ---

முருகா! அடியேனைப் பிறவிகள் தோறும் நோய்கள் பற்றி வருந்தா வண்ணம் அருள்புரிவாய்.

முருகன் பவரோக வைத்தியநாதன்; அவருடைய சீடர்களாகிய அகத்தியர் போகர் முதலியோர்களும் மருத்துவர்கள். முருகனை மனமொழி மெய்களால் வழிபடும் அடியார்கட்குப் பிணியே வராது. நோயற்ற இனிய வாழ்வில் வாழ்வார்கள்.

முருகா எனவுனை ஓதும் தவத்தினர், மூதுஉலகில்
அருகாத செல்வம் அடைவர், வியாதி அடைந்து நையார்,
ஒருகாலமும் துன்பம் எய்தார், பரகதி உற்றிடுவார்,
பொருகாலன் நாடுபுகார், சமராபுரிப் புண்ணியனே"   --- திருப்போரூர்ச்சந்நிதிமுறை

வரும் ஒரு கோடி அசுரர் பதாதி மடிய ---

மிகுந்த வேகத்துடனும் சீற்றத்துடனும் ஆயுதங்களை யேந்திக் கண்டு வந்த கோடிக்கணக்கான அசுரர்கள் மடியுமாறு வேலை முருகவேள் விடுத்தருளினார்.

அநேக இசைபாடி வருமொரு கால வயிரவர் ஆட ---

காலபைரவர் அப்போது மகிழ்ச்சியுடன் பலப்பல விதமாக இசைப் பண்களைப் பாடித் துதி செய்தார்.

தரு நிழல் மீதில் உறை முகில் ஊர்தி தரு திருமாது ---

கற்பகத் தருவின் நிழலில் வாழ்பவன் இந்திரங் அவனுக்கு மேகம் வாகனமாக விளங்குகின்றது. திருமாலின் புதல்வியாகிய அமுதவல்லி தானே ஒரு குழவியாக, இந்திரனால் வளர்க்கப்பட்டாள். வெள்ளை யானையின் மூலம் இந்திரன் இனிது வளர்த்து முருகவேளுக்குப் பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொடுத்தனன்.

சலமிடைபூவின் நடுவினில் வீறு தணிமலை ---

கடலின் நடுவேயுள்ள இம்மண்ணுலகின் இடையில் மிகப் பெருமையுடன் திகழ்வது திருத்தணிமலை. தனக்குத்தானே ஒப்பான மகிமையுடைய தெய்வீகமான திருமலை.
   
கருத்துரை

திருத்தணி மேவும் திருவேல் முருகா! அடியேனை நோய்கள் அணுகா வகை திருவடி தந்தருள்.


No comments:

Post a Comment

பொது - 1100 - குடரும் மலசலமும் மிடை

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் குடருமல சலமுமிடை (பொது) தனனதன தனனதன தனனதன தனனதன      தனனதன தனனதன ...... தனதான குடருமல சலமுமிடை யிடைதடியு ம...