அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
இருப்பவல்
திருப்புகழ் (திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
மயக்கும் மாதரைப் போற்றாமல்,
திருப்புகழ் ஓதும் அடியாரைப்
போற்ற அருள்.
தனத்தன
தனத்தன தனத்தன தனத்தன
தனத்தன தனத்தன ...... தனதான
இருப்பவல்
திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை யறுத்திடு ...... மெனவோதும்
இசைத்தமிழ்
நடத்தமி ழெனத்துறை விருப்புட
னிலக்கண இலக்கிய ...... கவிநாலுந்
தரிப்பவ
ருரைப்பவர் நினைப்பவர் மிகச்சக
தலத்தினில் நவிற்றுத ...... லறியாதே
தனத்தினில்
முகத்தினில் மனத்தினி லுருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழலாமோ
கருப்புவில்
வளைத்தணி மலர்க்கணை தொடுத்தியல்
களிப்புட னொளித்தெய்த ...... மதவேளைக்
கருத்தினில்
நினைத்தவ னெருப்பெழ நுதற்படு
கனற்கணி லெரித்தவர் ...... கயிலாயப்
பொருப்பினி
லிருப்பவர் பருப்பத வுமைக்கொரு
புறத்தினை யளித்தவர் ...... தருசேயே
புயற்பொழில்
வயற்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
இருப்பு
அவல் திருப்புகழ் விருப்பொடு படிப்பவர்
இடுக்கினை அறுத்திடும் ...... என ஓதும்,
இசைத்தமிழ்
நடத்தமிழ் எனத் துறை விருப்புடன்,
இலக்கண இலக்கிய ...... கவிநாலும்
தரிப்பவர், உரைப்பவர், நினைப்பவர், மிகச் சக-
தலத்தினில் நவிற்றுதல் ...... அறியாதே,
தனத்தினில்
முகத்தினில் மனத்தினில் உருக்கிடு
சமர்த்திகள் மயக்கினில் ...... விழல் ஆமோ?
கருப்பு
வில் வளைத்து அணி மலர்க்கணை தொடுத்து இயல்
களிப்புடன் ஒளித்து எய்த ...... மதவேளைக்
கருத்தினில்
நினைத்து, அவன் நெருப்பு எழ நுதல் படு
கனல் கணில் எரித்தவர், ...... கயிலாயப்
பொருப்பினில்
இருப்பவர், பருப்பத உமைக்கு ஒரு
புறத்தினை அளித்தவர் ...... தருசேயே!
புயல் பொழில் வயல்பதி நயப்படு திருத்தணி
பொருப்பினில் விருப்புறு ...... பெருமாளே.
பதவுரை
கரும்பு வில் வளைத்து --- கரும்பு
வில்லை வளைத்து,
அணி மலர் கணை தொடுத்து --- அழகிய
மலர்க்கணைகளைத் தொடுத்து,
இயல் களிப்புடன் --- இயல்பாகவுள்ள
செருக்குடன்,
ஒளித்து எய்த --- ஒளித்திருந்து கணைகளைச்
செலுத்திய,
மதவேளை --- வலிமை மிகுந்த மன்மதனை,
கருத்தினில் நினைத்து --- திருவுள்ளத்தில்
நினைத்த மாத்திரத்தில்,
அவன் நெருப்பு எழ --- அவன் தீயில் வேகுமாறு,
நுதல் படு கனல் கணில் எரித்தவர் ---
நெற்றியில் உள்ள நெருப்புக் கண்ணால் எரித்தவரும்,
கயிலாய பொருப்பினில் இருப்பவர் --- திருக்கயிலாய
மலையில் எழுந்தருளியிருப்பவரும்,
பருப்பத உமைக்கு ஒரு புறத்தினை அளித்தவர் ---
இமயமலையில் வளர்ந்த உமாதேவியாருக்கு இடப் பாகத்தைத் தந்தவரும் ஆகிய சிவபெருமான்,
தருசேயே --- தந்த பாலகரே!
புயல் பொழில் --- மேகந்தவழும் சோலைகளும்,
வயல்பதி நயம் படும் --- வயல்களும் ஊர்களும்
சிறந்துள்ள,
திருத்தணி பொருப்பினில் விருப்பு உறு ---
திருத்தணிகை மலை மீது விருப்பங் கொள்ளும்,
பெருமாளே -- பெருமையில் மிகுந்தவரே!
இருப்பு அவல் --- இருப்பாக இருந்து
வழிக்கு உதவுகின்ற அவல் போன்ற,
திருப்புகழ் விருப்பொடு படிப்பவர் ---
திருப்புகழானது அன்போடு ஓதுகின்ற அடியார்களின்,
இடுக்கினை அறுத்திடும் என ஓதும் ---
துன்பங்களை அறுத்து ஒழிக்கும் என்று கூறுகின்ற,
இசைத் தமிழ் நடத் தமிழ் --- இசைத் தமிழ், நாடகத் தமிழ்,
துறை என --- அகப்பொருள் துறைகள் என்னும்
வகையில்,
இலக்கண இலக்கிய --- இலக்கணம் பொருந்தி
இலக்கியத்தின் பாற்படும்,
கவி நாலும் --- ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்ற நால்வகைக் கவிகளையும்,
விருப்புடன் தரிப்பவர் உரைப்பவர் நினைப்பவர் ---
அன்புடன், உள்ளத்தில்
தரிப்பவர்களும், பேசுபவர்களும், எண்ணுகின்றவர்களும் ஆகிய
அடியார்களை,
மிக சகதலத்தினில் நவிற்றுதல் அறியாதே ---
இவ்வுலகில் மிகவும் சொல்லி போற்றுகின்ற தன்மையை அடியேன் அறியாமல்,
தனத்தினில் --- தனங்களிலும்,
முகத்தினில் --- முகப் பொலிவாலும்,
மனத்தினில் உருக்கிடும் சமர்த்திகள் ---
மனதில் உருகச் செய்யும் சமர்த்திகளுடைய,
மயக்கினில் விழலாமோ --- மயக்கமாகிய
பள்ளத்தில் அடியேன் விழக்கடவேனோ?
பொழிப்புரை
கரும்பு வில்லை வளைத்து அழகிய மலர்க்
கணைகளைத் தொடுத்து இயல்பாகவுள்ள செருக்குடன் ஒளிந்திருந்து எய்த வலிய மன்மதனை
நெற்றியில் உள்ள நெருப்புக் கண்களால் நினைத்த மாத்திரத்தில் நெருப்பினால் வேகுமாறு
எரித்தவரும், கயிலாய மலையில்
வீற்றிருப்பவரும், இமாசலத்தில் வளர்ந்த
உமாதேவியாருக்கு இடப்பாகந் தந்தவருமாகிய சிவபெருமான் பெற்ற இளம் பாலகரே!
மேகந் தவழும் சோலைகளும், வயல்களும், ஊர்களும் இனிது செழித்துள்ள திருத்தணிகை
மலை மீது விருப்புடன் உறையும் பெருமிதம் உடையவரே!
இருப்பாக இருந்து உதவுகின்ற அவல் போன்ற
திருப்புகழானது அன்புடன் ஓதுகின்ற அடியார்களது துன்பங்களை நீக்குகின்றது என்ற உண்மையை
எடுத்துக் கூறுகின்ற இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ்களை இலக்கண இலக்கியத்துடன்
நான்கு கவிகளால் அன்புடன் உள்ளத்தில் தரிப்பவர்களும், வாக்கால் பாடுபவர்களும், மனத்தால் நினைப்பவர்களுமாகிய அன்பர்களை
இவ்வுலகில் பாராட்டிப் புகழ்வதை அறியாதபடி, தனத்தாலும் முகத்தாலும் மயக்கி உள்ளத்தை
உருக்குகின்ற ஆற்றல் படைத்த பொதுமாதர்களின் மயக்கமாகிய படுகுழியில் அடியேன்
விழலாமோ? (விழக்கூடாது)
விரிவுரை
இருப்பவல்
திருப்புகழ்
---
அயலூர்
செல்பவர்கள் இருப்பாக அவல் கொண்டு போவார்கள். அதனால் அதற்கு யாத்திரைத் தர்ப்பணம்
என்று பேர் அமைந்தது. பசி வந்தபோது அவலை நனைத்து, பாலும் சீனியும் கலந்து, அல்லது சிறிது உப்பும் எலுமிச்சம் பழ
ரசமும் கலந்தும் பல்வேறு வகையில் பக்குவம் செய்தும் உண்டு பசி ஆறலாம். வழிக்கு மிக
மிகப் பயனுடையதாக இருந்து உதவுவது அவல்.
இதுபோல்
திருப்புகழ் ஆவி பிரிந்து போகும் அத்தொலையாத தனி வழிக்குத் துணையாக இருந்து
உதவும். அதனால் இருப்பவல் திருப்புகழ் என்று அருளிச் செய்தார்.
இரும்பு
அவல் போன்ற கடினமானது திருப்புகழ் என்று கூறுவாரும் உளர்.
நெடுநாள்
கெடாமல் நின்று யாத்திரையில் உதவுவது அவல். அது போன்றது திருப்புகழ்.
விருப்பொடு
படிப்பவர் இடுக்கினை அறுத்திடும் ---
திருப்புகழை
அன்போடு ஓதுபவர்களின் துன்பங்களை,
அத்
திருப்புகழே அழித்து ஒழிக்கும். அத்துணை மகிமை வாய்ந்தது எம்பிரானுடைய
திருப்புகழ்.
எனவோதும்.........அறியாதே ---
திருப்புகழின்
பெருமையைக் கூறுகின்றவர்கள்-முத்தமிழில் வல்லவர்கள் - ஆசு கவி, மதுரகவி, சித்ரகவி, வித்தாரகவி என்ற நான்குவகைக் கவிகளில்
வல்லவர்கள். முருகனுடைய நாமத்தைத் தரித்தும் நினைத்தும் உரைத்தும் வருகின்ற அந்த
அடியார்களை அணுகும் தன்மையறியாமல் கெடுகின்றேன் என்கின்றார் அடிகளார்.
தனத்தினால்
முகத்தினில் மனத்தில் உருக்கிடும் ---
விலைமகளிர்
தமது தனங்களாலும் அழகிய முகவசீகரத்தாலும் இளைஞர்களுடைய உள்ளத்தை உருக்குவார்கள்.
சமர்த்திகள்
மயக்கினில் விழலாமோ ---
ஆடவரை
வசஞ்செய்ய வல்ல அம்மகளிருடைய மயக்கமாகிய படுகுழியில் விழுந்து கெடுவது கூடாது.
கருப்புவில்.........எரித்தவர் ---
மன்மதன்
சிவபெருமானுடைய மோனநிலையைக் கலைக்கும் பொருட்டு கயிலையில் சென்று தனது வில்லை
வளைத்து ஒளிந்திருந்து மலர்க்கனைகளைச் சொரிந்தான்.
நெருப்புக்
கண்ணால் அக்காமனை ஒரு கணத்தினில் சிவபெருமான் எரித்து நீறாக்கினார்.
ஆசையை
அறிவால் அடக்க வேணும். அறிவுக் கண் நெற்றிக்கண். அதிலிருந்து வந்த நெருப்பு
ஞானவொளி. அதனால் ஆசையை உண்டாக்கும் அதிதேவதையை அழித்துவிட்டார்.
கயிலாயப்
பொருப்பினில் இருப்பவர் ---
வெள்ளி
மலையில் வீற்றிருப்பவர் சிவபெருமான் அது தூய வெமையானது. தூய்மையில்தான் இறைவன்
இருப்பான்.
உமைக்கு
ஒரு புறத்தினை அளித்தவர் ---
பார்வதிக்கு
இடப்பாகந் தந்தவர், அர்த்தநாரீச்சுவரர்.
புயற்பொழில்
வயற்பதி...........விருப்புறு பெருமாளே ---
வளமையான
பொழில், மேகந்தவழ்கின்ற
உயர்ந்த வளமுடைய திருத்தணியில் விருப்போடு எம்பிரான் எழுந்தருளியிருக்கின்றார்.
கருத்துரை
திருத்தணி
முருகா! மாதர் மயக்கில் விழாது,
திருப்புகழடியாரை
போற்ற அருள் புரிவாய்.
-------------
தணிகைமணி
திரு வ.சு. செங்கல்வராய பிள்ளை அவர்களின் குறிப்பு.....
இருப்பவல்
திருப்புகழ் என ஒரு திருப்புகழ் தொடங்குகின்றது.
எங்கள் குலத்தவரும், ஒரு வைத்திய
சிகாமணியின் புதல்வரும், எனது நண்பருமான
திருவாளர் மலைமருந்து பிள்ளை அவர்கள் எனக்குக் காட்டிய வைத்திய அகராதி என்னும்
நூலில் இருப்பவல் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.
இருப்பவல்
- ஒரு கொடி. இது பாம்புபோல் தரையோடு படர்ந்து, கிழங்கு பெரியதாகவும், பூக்கள் சிறியதாகவும், மஞ்சளாகவும் இருக்கும். இது ஒரு காய கற்ப மூலிகை. கஷாயம் இட்டுக்
கண்டமாலை, மேகம், உடம்புக் கோளாறு முதலியவைகளுக்குக்
கொடுக்கலாம். இதன் இலையை எவ்வளவு நேரம்
மென்றாலும் பல்லிற்கு அசையாது. இதனால்
அயம் பற்பமாகும். இதற்குப் பல
பெயர்களுண்டு.
அவையாவன
--- புத்தர்கைச் சம்மட்டி, காயசித்தி, உப்பு நீக்கி, காரீய செந்தூரி, கானல் கள்ளி முதலியன.
A kind of creeper –
Indian cudweed – Gnaphalium indicum. The
creeper resembles snake and the root which is big has very little taste or
smell. The flowers are very small and yellow. The root is an alternative and is prescribed
in decoction in case of scrofuls, syphilis, cachexia and other constitutional
disorders. The leaf cannot be easily
chewed.
இதனால், காயகற்ப மூலிகையான இருப்பவல் போலத்
திருப்புகழ் அதனைப் படிப்பவருக்கு நன்மை பயக்கும் என்பது பெறப்படுகின்றது.
1961 – ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம், பிலவ ஆண்டு, மார்கழித் திங்கள், திருமுருக கிருபானந்த வாரியார்
சுவாமிகள் வெளியீடாகிய, "திருப்புகழமிர்தம்"
என்னும் நூலில், 272 – ஆம் பக்கத்தில்
இந்தக் குறிப்பு உள்ளது.
No comments:
Post a Comment