அருணகிரிநாதர் அருளிய
திருப்புகழ்
அருக்கி மெத்தென
(திருத்தணிகை)
திருத்தணிகை வேலா!
கணத்தில் அழியும் இந்தப்
பிறவித் துயர் தீர அருள்
தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் தனத்தனத்
தனத்தனத் தனத்தனத் ...... தனதான
அருக்கிமெத்
தெனச்சிரித் துருக்கியிட் டுளக்கருத்
தழித்தறக் கறுத்தகட் ...... பயிலாலே
அழைத்தகப்
படுத்தியொட் டறப்பொருட் பறிப்பவர்க்
கடுத்தபத் தமுற்றுவித் ...... தகர்போலத்
தரிக்கும்வித்
தரிக்குமிக் கதத்துவப் ப்ரசித்தியெத்
தலத்துமற் றிலைப்பிறர்க் ...... கெனஞானம்
சமைத்துரைத்
திமைப்பினிற் சடக்கெனப் படுத்தெழச்
சறுக்குமிப் பிறப்புபெற் ...... றிடலாமோ
பொருக்கெழக்
கடற்பரப் பரக்கர்கொத் திறப்புறப்
பொருப்பினிற் பெருக்கவுற் ...... றிடுமாயம்
புடைத்திடித்
தடற்கரத் துறப்பிடித் தகற்பகப்
புரிக்கிரக் கம்வைத்தபொற் ...... கதிர்வேலா
திருத்தமுத்
தமிழ்க்கவிக் கொருத்தமைக் குறத்தியைத்
தினைப்புனக் கிரித்தலத் ...... திடைதோயுஞ்
சிவத்தகுக்
குடக்கொடிச் செருக்கவுற் பலச்சுனைச்
சிறப்புடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பதம் பிரித்தல்
அருக்கி
மெத்து எனச் சிரித்து, உருக்கி இட்டு, உளக் கருத்து
அழித்து அறக் கறுத்த கண் ...... பயிலாலே,
அழைத்து
அகப்படுத்தி ஒட்டு அறப் பொருள் பறிப்பவர்க்கு
அடுத்து, அபத்தம் உற்று, வித் ...... தகர் போலத்
தரிக்கும்
வித்தரிக்கும் மிக்க தத்துவப் ப்ரசித்தி, எத்
தலத்தும் மற்றும் இலைப் பிறர்க்கு
...... என ஞானம்
சமைத்து, உரைத்து, இமைப்பினில் சடக்கு எனப் படுத்து, எழச்
சறுக்கும் இப் பிறப்பு பெற்- ......
றிடல் ஆமோ?
பொருக்கு
எழக் கடல் பரப்பு அரக்கர் கொத்து இறப்பு உறப்
பொருப்பினில் பெருக்க உற் ...... றிடு மாயம்
புடைத்து, இடித்த அடல் கரத்து உறப் பிடித்த கற்பகப்
புரிக்கு இரக்கம் வைத்த பொன் ......
கதிர்வேலா!
திருத்த
முத்தமிழ்க் கவிக்கு ஒருத்த! மைக் குறத்தியைத்
தினைப் புனக் கிரித் தலத்து ...... இடை தோயும்
சிவத்த
குக்குடக் கொடிச் செருக்க, உற்பலச் சுனைச்
சிறப்பு உடைத் திருத்தணிப் ...... பெருமாளே.
பதவுரை
பொருக்கு எழ --- வற்றி உலர்ந்த காட்சி
எழும்படி,
கடல் பரப்பு --- பரந்த கடல் வற்றவும்,
அரக்கர் கொத்து இறப்பு உற --- அரக்கர்களுடைய
கூட்டம் இறந்து அழியவும்,
பொருப்பினில் --- கிரவுஞ்ச மலையில்,
பெருக்க உற்றிடும் மாயம் புடைத்து இடித்த ---
நிரம்பவும் இருந்த மாயச் செயல்களைத் தகர்த்து அழித்த
அடல் கரத்து பிடித்த --- வலிமை மிக்க
திருக்கரத்தில் தாங்கிய,
கற்பக புரிக்கு --- கற்பகத் தருவுள்ள அமராவதி
நகரிடம்,
இரக்கம் வைத்த --- கருணை வைத்த,
பொன் கதிர்வேலா --- அழகிய கதிர்வேலவரே!
திருத்த முத்தமிழ் கவிக்கு ஒருத்த ---
திருத்தமுள்ள முத்தமிழ்ப் பாடலுக்கு ஒப்பற்றவரே!
மை குறத்தியை --- மையணிந்த
வள்ளிபிராட்டியை,
தினைப்புனகிரி தலத்து இடை தோயும் ---
தினைப்புனம் உள்ள மலையிடத்தில் தோய்ந்தவரே!
சிவத்த குக்குட கொடி செருக்க --- சிவந்த
கோழிக் கொடி களிப்புற,
உற்பல சுனை சிறப்பு உடை --- நீலோற்பலம்
மலரும் சுனையால் சிறப்புள்ள,
திருத்தணி பெருமாளே --- திருத்தணிகை
மலைமீது எழுந்தருளியுள்ள --- பெருமையில் மிக்கவரே!
அருக்கி மெத்தென --- சுருக்கமாகவும், மென்மையாகவும்,
சிரித்து உருக்கியிட்டு --- புன்னகை புரிந்து
உள்ளத்தை உருக்கி,
உள கருத்தை அழித்து --- உள்ளக் கருத்தை
அழித்து,
அற கறுத்த கண் பயிலாலே --- மிக்க
கருமையாயுள்ள கண்களின் குறிப்புகளால்,
அழைத்து --- தம்பால் கூப்பிட்டு,
அகப்படுத்தி --- தமது வலைக்குள் சிக்கவைத்து,
ஒட்டு அற பொருள் பறிப்பவர்க்கு ---
பசையில்லாமல் எல்லாப் பொருள்களையும் பறிக்கின்ற விலைமாதர்பால்,
அடுத்து அபத்தம் உற்று --- அடைந்து பொய்யான
இன்பத்தை நுகர்ந்து,
வித்தகர் போல --- அறிவாளரைப் போல்,
தரிக்கும் --- நடித்தும்,
வித்தரிக்கும் --- விரிவாகப் பேசியும்,
மிக்க தத்துவ ப்ரசித்தி --- மேலான
தத்துவங்களை எடுத்து ஓதும் கீர்த்தி,
எத்தலத்தும் மற்று இலை பிறர்க்கு என --- எந்த
இடத்திலும் வேறு யாருக்கும் இல்லையென்னுமாறு,
ஞானம் சமைத்து உரைத்து --- ஞானவுரைகளைப்
புதிதாக உண்டாக்கிப் பேசி,
இமைப்பினில் சடக்கென படுத்து எழ --- ஓர்
இமைப்போதில் வேகமாகப் படுத்து எழுதல்போல்,
சறுக்கும் இப்பிறப்பு பெற்றிடலாமோ --- நழுவி
ஒழியும் இம்மானுடப் பிறப்பினைப் பெற்றிடுதல் நலமாகுமோ?
பொழிப்புரை
பரந்த கடல் வற்றவும், கூட்டமான அரக்கர் ஒழியவும், கிரவுஞ்ச மலையில் நிரம்பவும் இருந்த
மாயம் உடைந்து ஒழியவும் தாக்கிய வேலவரே!
வலிமை மிக்க திருக்கரத்தில் ஏந்திய
வேலவரே! கற்பக நகர்மீது கருணை புரிந்த அழகிய கதிர் வேலவரே!
திருத்தம் உற்ற முத்தமிழ்ப் பாடல் பெற்ற
சமானம் இல்லாதவரே!
மை எழுதிய குறமாதினைத் தினைப்புனம்
மேவிய மலைச்சாரலில் தழுவியவரே!
சிவந்த சேவற்கொடி மகிழ, நீலோற்பல மலர் மலர்கின்ற சுனையால்
சிறப்புள்ள திருத்தணி மலையில் வாழும் பெருமிதம் உடையவரே!
சுருக்கமாகவும் மென்மையாகவும் சிரித்து
உள்ளத்தை உருக்கி, உள்ளத்தின் கருத்தை
அழித்து, மிகவுங்கருத்த கண்
ஜாடையால் அழைத்து, சிக்க வைத்து, எல்லாப் பொருள்களையும் கவர்கின்ற பொது
மாதர்பாலடுத்து பொய் உறவை அடைந்து,
அறிவாளியைப்
போல் நடித்தும் விரிவாகப் பேசியும்,
மேலான
உண்மைகளை எடுத்துரைக்கும் கீர்த்தி எந்த இடத்திலும் வேறு யாருக்கும் இல்லை என்று
சொல்லும்படி, ஞானவுரைகளை உண்டாக்கி
உரைத்து, ஒரு கணத்தில் படுத்து
எழுதல் போல் நழுவி ஒழியும் இம்மனிதப் பிறப்பைப் பெற்றிடல் நன்றாகுமோ?
விரிவுரை
அருக்கி
மெத்தெனச் சிரித்து உருக்கி ---
அருகுதல்-குறைத்தல்.
வாய்விட்டு அதிகமாகச் சிரிக்காமல்,
மெல்ல
மென்மையாகப் புன்னகை புரிந்து ஆடவர் உள்ளத்தைப் பொது மகளிர் உருக்கிவிடுவார்கள்.
உளக்
கருத்து அழித்து ---
அவ்வாறு
ஆடவரது மனத்தை உருக்கியதுடன் நில்லாமல், அவர்களது
எண்ணங்களை அழித்து விடுவார்கள்.
கறுத்தகண்
பயிலாலே
அழைத்து ---
கரிய
கண்காட்டி அழைத்துத் தம் மாய வலையில் சிக்க வைப்பார்கள்.
அடுத்தபத்த
முற்று
---
அடுத்து
அபத்தம் உற்று. பொது மாதரையடுத்து,
அங்கு
அவர் செய்யும் பொய்யன்பை மெய்யன்பு எனக் கருதி நம்பி அவலமாவார்கள்.
வித்தகர்போலே
.. . . . .சமைத்து உரைத்து ---
வித்தகம்-ஞானம்.
பெரிய ஞானியைப்போல் நடித்தும், விரிவாகப் பேசியும், பேசுவதில் தனக்கு நிகரானவர் எங்கு யாரும்
இல்லை என்னும்படி ஞானவுரைகளைப் புதிது புதிதாக உண்டாக்கிப் பேசுவார். அத்தனையும்
வாசா ஞானமே ஆகும். அநுபவத்தில் ஒன்றும் இருக்காது.
இத்தகைய
வாய் வேதாந்தம் பற்றித் தாயுமானார் கூறுகின்றார்.
வாசா
கயிங்கரியம் அன்றி ஒரு சாதனம்
மனோவாயு நிற்கும் வண்ணம்
வாலாயம்
ஆகவும் பழகிஅறியேன்; துறவு
மார்க்கத்தின் இச்சைபோல
நேசஅனு
சாரியாய் விவகரிப்பேன்; அந்த
நினைவையும் மறந்த போது
நித்திரை
கொள்வேன்; தேகம் நீங்கும்என எண்ணிலோ
நெஞ்சம் துடித்துஅயருவேன்;
பேசாத
ஆனந்த நிட்டைக்கும் அறிவிலாப்
பேதைக்கும் வெகு தூரமே;
பேய்க்குசம்
அறிந்துஇந்த நாய்க்கும்ஒரு வழிபெரிய
பேரின்ப நிட்டை அருள்வாய்,
பாசஅட
விக்குளே செல்லாத வர்க்குஅருள்
பழுத்து ஒழுகு தேவதருவே!
பார்க்கும்இடம்
எங்கும்ஒரு நீக்கம்அற நிறைகின்ற
பரிபூரண ஆநந்தமே.
சறுக்கும்
இப்பிறப்பு பெற்றிடலாமோ ---
ஒரு
கணத்தில் நழுவி விழும் இயல்புடையது இப்பிறப்பு. ஆதலால் மீண்டும் மீண்டும்
இப்பிறப்பையே எடுத்து உழல்வது நலமன்று. ஆதலால் பிறவாத வெற்றியைத் தந்தருளும் என்று
அருணகிரியார் இப்பாடலில் வேலவனை வேண்டுகின்றார்.
பொருக்கெழ.
. . .. . கதிர்வேலா ---
கடலையும்
அரக்கரையும், கிரவுஞ்சமலையும்
அழித்த வேலையுடையவர் முருகவேள்.
கடல்-பிறவி.
அசுரர்-வினைத் தொகுதி. கிரவுஞ்சம்-மாயை. இவற்றை ஞானமாகிய வேல் அழிக்கும்.
திருத்த
முத்தமிழ்க் கவிக்கு ஒருத்த ---
செவ்விய
முத்தமிழ்க் கவிகளால் பாடப்பெற்ற நிகர் இல்லாத ஞானமூர்த்தி முருகவேள்.
உற்பலச்சுனைச்
சிறப்புடைய திருத்தணி ---
திருத்தணியில்
தினம் மூன்று நீலோற்பல மலர்கள் மலர்கின்ற அழகிய சுனை ஒன்று இன்றும் உளது. அதனால்
அம்மலை "கல்லாரகிரி" என்று பேர் பெற்றது.
செங்கல்வம்-என்றால்
தெலுங்கில் நீலோற்பல மலர். அதனால் அம் மலைமீதுள்ள சுவாமியை செங்கல்வராயன் என்பர்.
திருக்குலவும் ஒரு நீல மலர்ச்சுனையில் அழகான
திருத்தணிகை மலை மேவு பெருமாளே” --- (வரிக்கலை) திருப்புகழ்.
கருத்துரை
தணிகேசா!
பிறவித் துயர் நீங்கத் திருவருள் செய்.
No comments:
Post a Comment